Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:51:11 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Next Article
ஆக்கம் எண் (ID #) 1
#KOTWART011
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 10, 2011
நான் எதிர்பார்க்கும் நகர்மன்றம்
இந்த பக்கம் 3896 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முன்னுரை:

நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயயரால்!

வங்கக்கடலோரம் வாகுடன் இலங்குகின்ற வரலாற்றுச்சிறப்புமிக்க வனப்புமிகு பதியாகும் காயல்பட்டணம்.பண்டைய பாண்டியரின் துறைமுக நகரமான இதற்கு வகுதை, காஹிர் மற்றும் பெளத்திரமாணிக்கப்பட்டணம் என்ற பல்வேறு பெயர்கள் உண்டு. பாமரர்கள், படித்தவர்கள்,பணம் படைத்தவர்கள்,நடுத்தர மக்கள்,வறியவர்கள்,அறிஞர்கள்,ஆன்றோர்கள், ஆலிம் பெருமக்கள்,ஹாபிழ்கள்,வணிகர்கள்,என்று சமூகத்தின் பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய இந்த ஊர், ஆயிரக்கணக்கான இறைநேசர்களை தன் மடியில் ஏந்துகின்ற புண்ணிய பூமியாகும். சீரழிக்கும் திரைக்கொட்டகை,மதிமயக்கும் மதுபானவிடுதி மற்றும் காவல் நிலையம் இல்லாத எமது ஊருக்காக சேவைசெய்திட தேர்ந்தேடுக்கபடவிருக்கும் நகர்மன்றம் எப்படியானதாக இருக்க வேண்டும் என்ற எனது உள்ளக்கிடக்கையே இந்தக்கட்டுரையின் முக்கிய அம்சமாகும்.

நகர்மன்றம் - ஒரு வரலாற்றுப்பார்வை:

ஆறாயிரம் ஆண்டுகால வரலாற்றைத் தன்னகத்தே தாங்கிய காயலம்பதியின் முதல் பஞ்சாயத்து போர்டு கி.பி.1886 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட சுங்கத்துறை அதிகாரி இதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, 1895 ஆம் ஆண்டு இதன் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட மரியாதைக்குரிய திரு.பொன்னையா நாடார் அவர்கள் 18 ஆண்டு காலம் திறம்பட இப்பணியைச் செய்தார்கள். அதன் பின்னர் 1914 ஆம் ஆண்டு தலைவர் பொறுப்புக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மர்ஹூம். முஹம்மது தம்பி அவர்கள், இந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட முதலாவது மண்ணின் மைந்தராவார். இவர் 1953 ஆம் ஆண்டு முதல் 1965 ஆண்டு வரையில்,பிற்காலத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கல்விப் புரவலர், மர்ஹூம்.எம்.கே.டி.முஹம்மது அபூபக்கர் ஹாஜியார் அவர்களது தந்தையார் ஆவார்கள்.

நவம்பர் 1929 ல், தோல்சாப் முஹம்மத் உவைசனா லெப்பை அவர்கள் தலைவராக இருந்தபோது, காயல்பட்டணம் பிரிக்கப்பட்டு, ஆறுமுகநேரி பஞ்சாயத்து போர்டு உருவாகியது. இப்படி பல்வேறு நன்மக்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தப்பதவிக்கு 1996 ஆம் ஆண்டு ஜனாபா.நாச்சி தம்பி அவர்கள், இவரைத்தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு ஜனாபா வஹீதா அவர்கள் ஆகிய இரு பெண்மணிகள் அணி சேர்த்தனர். தொடர்ந்து இன்றைய தலைவரான ஹாஜி.வாவு செய்யத் அப்துல் ரஹ்மான் அவர்களது தலைமையில்,நகர்மன்ற வரலாறு இறையருளால் தொய்வின்றித் தொடர்கிறது.

இந்த வரலாற்றுப்பார்வையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய செய்தி, 1955 ஆம் ஆண்டு நடைபெற்ற மன்ற தேர்தலில், மிகப்பெரும் சண்டையும் , சர்ச்சைகளும் ஏற்பட்டு, ஒரு ஜூம்ஆ பள்ளி இரண்டாக ஆகியதுதான். காலம்தான் எல்லாக்காயத்திற்கும் சிறந்த மருந்து என்பதற்கொப்ப காலப்போக்கில் கிழக்கென்றும், மேற்கென்றும் வேற்றுமை பாராத இளைய தலைமுறை, பெரியவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு புதிய ஒற்றுமையான காயலை உருவாக்கியது நமது சமகால வரலாறு.

இன்றைய நகர்மன்றம்:

சுமார் ஐம்பத்தி ஐயாயிரம் மக்கள் வாழக்கூடிய காயல்பட்டணத்தில், பெரும்பான்மை முஸ்லிம்களும், ஏனைய சிறுபான்மை ஹிந்து,கிருத்துவர்களும் சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து வருவது, நகரின் சிறப்புகளில் ஒன்றாகும். தற்போதைய நகர்மன்றத்தின் 18 வார்டுகளில் 12 முஸ்லிம்களும்,ஆறு முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இறைபக்தி,நேர்மை,பொது வாழ்விற்கான தூய்மையுடன் பணியாற்றும் தலைவர் அவர்கள் தனது தயாள குணத்தின் காரணமாக, நகர் நலனுக்காக அள்ளித்தந்தவைகள் ஏராளம்!ஏராளம்!! தனது சொந்தப்பணத்தில் இருந்து ரூ.ஐம்பது இலட்சத்தை நகரின் குடிநீர் திட்டத்திற்காக இந்த ஆண்டு வாரி வழங்கியது, இந்தப்பெருமகனாரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்த்தது என்றால் மிகையாகாது. இத்தனை நல்ல குணங்களை உள்ளடக்கிய தலைவருக்கு உறுப்பினராக வாய்த்தவர்களுள் பெரும்பான்மையானோர் பணம் தின்னும் கழுகுகளாக மாறியதால்,ஒரு சிறந்த நிர்வாகத்தை இவரால் வழங்க முடியவில்லை.

கழிவு நீர்த்தொட்டி முதல், கபரஸ்தான் பெட்டி வரை, எதெற்கெடுத்தாலும் காசு,காசு என்று நாக்கூசாமல் பேரம் பேசும் இவர்களது கரங்கள்,மக்கள் பணம் பதினான்கு இலட்சத்தை சூறையாட முயன்றதுவரை விரிந்தது. இவர்களது சரியான ஒத்துழைப்பு இன்மையாலும், தலைவர் அவர்களது பலவீனமான நிர்வாக சக்தியாலும், நமது கடற்கரை ஓரம், சட்டவிதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டு வருகின்ற சுனாமிக்குடியிருப்பு என்னும் பெயரில், திட்டமிட்டு நிறைவேற்றப்படும் அந்நிய ஆக்கிரமிப்பை தடுக்க முடிய வில்லை. இதன் பெரும்பான்மையான காரியங்கள், நகராட்சிக்குத் தெரியாமலேயே நடந்து விட்டதை எண்ணி எண்ணி கொதிப்படைந்த மக்களின் போராட்ட உணர்வுகளை, போலி வாக்குறுதிகளால் அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து அவமதித்த பல பெரியவர்களை நோக்கி இந்தக் கட்டுரை பயணிக்க, இந்த தலைப்பு சரியானது அல்ல என்று கருதுகிறேன்.

ஆகமொத்தத்தில் தற்போதைய நகர்மன்றம் , ஒரு சிறந்த மனிதரின் தலைமையில் இயங்கும் எந்த சிறப்பும் இல்லாத நிர்வாகம் என்பதை பதிவு செய்ய எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

இனிவரும் பகுதிகளில் சரியான,முறையான நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? அதில் ஒவ்வொரு காயலனும் ஆற்ற வேண்டிய பங்கு என்ன? என்பதைக் குறித்து அலச விரும்புகிறேன்.

தகுதியுள்ள தலைமை:

பிறக்குமுன்பே தந்தையை இழந்து, பிறந்ததுமே தாயையும் இழந்து, மரணிக்கும் வரையில் எழுதவோ,வாசிக்கவோ அறியாத மாமனிதர் நபி (ஸல் ) அவர்கள், தனது இறைபக்தி,ஒழுக்கம், நேர்மை,நீதி தவறாமை,இன்னும் எண்ணற்ற மகத்தான குணங்களால், ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்குப் பின்னும் 240 கோடி முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான தலைவராக நிலைகொண்டு இருக்கின்றார்கள் சொன்னதைச் செய்யும் துணிவும்,செய்ததை மட்டும் சொல்லும் நேர்மையும், சமநீதிக்கொள்கையும்,நிர்வாகத் திறனும், நாயகம் (ஸல் ) அவர்களை ஓர் ஆன்மீக தலைவராக மட்டுமின்றி, சிறந்த அரசியல் தலைவராகவும் பரிணமிக்கச் செய்தது. அப்பேர்ப்பட்ட மாமனிதரின் குணத்தில்,ஒரே ஒரு துளியேனும் தன்னுள் கொண்ட, அல்லாஹ்விற்கு அஞ்சுகிற, நம்பிக்கைத் துரோகம் செய்யாத, துணிந்து செயலாற்றுகின்ற, மார்க்கக் கல்வியும், உலகக்கல்வியும் ஓரளவுக்கு கற்றுணர்ந்த இளைஞர் ஒருவரை, நகரின் அனைத்து ஜமாத்துகளும் ஆதரிக்கக்கூடிய பொதுவான ஒரு நபரை, அடையாளம் காணும் முயற்சியை இன்றே துவங்கவேண்டும்.

அப்படி ஒருநபரை அடையாளம் காணும் முயற்சி, கருத்து வேற்றுமையால் தோல்வி அடைந்தால், ஜனநாயக ரீதியில் அவர்கள் தேர்தல் களம் காண வேண்டும்.அந்தக் களத்தில், பணம், குடும்பம், தெரு, கொள்கைவேறுபாடு உட்பட அனைத்து சுயநல காரணிகளும், சந்தர்ப்பவாதங்களும், அரசியல் கட்சிகளும் நடுநிலைவாதிகளால் தோற்கடிக்கப்பட்டு, நியாயமாக வெற்றிபெறும் நபர் இறையருளால் சிறந்த தலைவராக விளங்குவார் என்று நம்பிக்கை வைப்போம்.

உறுப்பினர்கள் தகுதி :

நகரமன்றத்தின் கடந்த நூறாண்டுகால வரலாற்றை நோக்கும்போது,தலைவர்கள் அனைவருமே கண்ணியமாகவும், நேர்மையாகவும், விதிமுறை மீறாதவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். ஒரு சிலருக்கு வேண்டுமானால் பெரிய நிர்வாகத்திறன் இல்லாமல் இருந்திருக்கலாம்.ஆனால் மன்ற உறுப்பினர்களாக இருந்த பெரும்பான்மையோரின் வரலாறு வேறுதிசையை நோக்கி பயணம் செய்கிறது. பொதுமக்களை சுரண்டுபவர்களாக, ஆண்கள் இல்லா வீட்டின் அப்பாவிப்பெண்களிடம் பணம்பறிக்கின்ற வசூல் ராஜாக்களாக, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாக, முதலாளிமார்களின் கொத்தடிமைகளாக பல்வேறு அரசியல்கட்சிகளின் அடிவருடிகளாக என்று இவர்களது ஜெகதால கதாபாத்திரங்கள் தொடர்கிறது.

குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மட்டுமே தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்மையாக பணியாற்றி இருக்கின்றார்கள். ஆதலால் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதைவிட யாரை தேர்ந்தெடுக்கக்கூடாது என்பதில் அதிக கவனம் வேண்டும்.

அரசியல் கட்சியின் சின்னங்களில் போட்டியிடும் அரசியல்வாதிகள், குற்றப்பின்னணி கொண்ட வன்முறையாளர்கள்,பணத்திற்காகப் பல்லிளிப்பவர்கள், மோசடிப் பேர்வழிகள், ஜமாத்துக்குக்கட்டுப்படாத அடங்காப்பிடாரிகள், தனி மனித ஒழுக்கமற்றவர்கள்,மார்க்க சட்டத்தை மதித்து ஏற்காதவர்கள் என தரம்பிரித்து எந்த சமரசத்திற்கும் இடமளிக்காமல் இவர்களை தனியாக வடிகட்டவேண்டும். அல்லவை தொலைந்திடின் நல்லவை மிஞ்சும் என்பதுதானே உண்மை!

உறுப்பினர்கள் தேர்வு:

ஓர் உறுப்பினரை தேர்ந்தெடுக்கும்போது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது அவரது கடந்த காலத்தை !செயல்திறன்மிக்க, நல்ல இளைஞர்களுள் தானாக முன்வந்து சமூகப்பணியாற்ற விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், இவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும். அரசு வழங்கும், பஞ்சப்படி மிகவும் குறைவு என்பதால், இவர்கள் நேர்மையுடன் தொடர்ந்து செயல்பட குறிப்பிட்ட ஒரு தொகை மாதாமாதம் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அந்தத் தொகை கண்டிப்பான முறையில் தனிநபரால் வழங்கப்படக்கூடாது. வெளிநாட்டு நலமன்றங்கள் உட்பட ஏதாவது சமூக அமைப்பால் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் பட்சத்தில், உறுப்பினர்கள் அவரவர் பகுதியில் ஏற்படும் தவறுகளுக்கு பொறுப்பேற்கும் நிர்பந்தம் ஏற்படும். மேலும், அதே உறுப்பினரை அந்தந்த பகுதியில் உள்ள காயிதேமில்லத்,ஐஐஎம் போன்ற ஏதாவது ஒரு சமூக அமைப்பில் உறுப்பினராக்கி, அந்த அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பணியாற்றத் துவங்கினால் மிகப்பெரும் சமூக மாற்றம் ஏற்படும் என்பதில் இன்ஷாஅல்லாஹ் எவ்வித ஐயமும் இல்லை.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினராக விரும்பினால், அந்தந்த ஜமாத்துகள் ,சமூக அமைப்புகளுடன் இணைந்து ,கொள்கை பாகுபாடின்றி நடுநிலையுடன் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஓர் உண்மையான சமூக மாற்றம் வேண்டுமெனில், நல்லதொரு நகர்மன்றம் வேண்டுமெனில் அந்தந்தப்பகுதி ஜமாத்துகளும், சமூக அமைப்புகளும் மிகமிக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது அவசியம். தேவையில்லாத கொள்கைகளைப்பேசி, வேண்டாதவர்கள் எல்லாம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆவதற்கு ஜமாத்களும்,சமூக அமைப்புகளும் காரணாமாக ஆகிவிடாது என்று நம்புவோமாக!

பெண் உறுப்பினர்கள் :

நான் அறிந்ததுவரையில், நமது பெண் உறுப்பினர்களுள் பெரும்பான்மையோர் அவர்ளது தந்தை, கணவர்,சகோதரர் போன்ற குடும்பத்து ஆண்களாலேயே இயக்கப்படுகிறார்கள். ஆதலால், இவர்களது குடும்பப்பின்னணியும், பொதுவாழ்வின் புயல்வீச்சை சந்திக்கும் துணிவும், இவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது முக்கிய காரணியாகக் காணப்பட வேண்டும்.

சகோதர சமய உறுப்பினர்கள் :

சமய நல்லிணக்கம் என்பது நமதூரின் தனிச்சிறப்புகளில் ஒன்று. நமது முன்னோர் நமக்கு காட்டித் தந்த, இந்த மகத்தான ஒற்றுமை இன்றைய தலைமுறைவரை தொய்வின்றி தொடர்ந்துவருவது, தமிழகத்திற்கே ஒரு முன்னுதாரணமாகும். அதற்கு எவ்வித பங்கமும் ஏற்படாமல் இருக்க , சமய நல்லிணக்கம் பேணுகின்ற நல்லவர்கள், சகோதர சமயத்தினின்றும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்காக நமது பெரியவர்கள், மற்ற சமய பெரியவர்களை அன்புடன் அணுகி, நல்லவர்கள் வெற்றி பெற வழிகாண வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் வழங்கப்பட வேண்டும்.

துணைத் தலைவர் :

தலைவர் ஒரு பகுதியைச் சார்ந்தவராக இருந்தால், துணைத்தலைவர் மற்றொரு பகுதியைச் சார்ந்தவராக இருப்பது, நகரின் எல்லா பகுதிகளுக்கும் பிரதிநித்துவம் கிடைத்திட வழிகாட்டும் என்ற முந்தைய நடைமுறை நியாயமானது. ஆனால், இதை ஒன்றை மாத்திரம் அளவுகோலாக ஏற்றுக்கொண்டால்,கடந்த காலத்தில் ஏற்பட்ட விபரீதங்கள் மீண்டும் ஏற்படலாம். இரண்டரை ஆண்டுகாலம் ஒரு இளைஞன் துணைத்தலைவர் பதவிக்கு பெருமை சேர்க்க மற்றொருவர் அந்தப் பதவியையே இழிவுபடுத்திய நிகழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியபாடம், காயல் ஒன்றுதான். அதில் கிழக்கு,மேற்கு,மத்திய என்றெல்லாம் எதுவும் இல்லை. உம்மா வீட்டை மேற்கிலும், மனைவி வீட்டை கிழக்கிலும் வைத்துக்கொண்டு, கிழக்கென்றும் மேற்கென்றும் வீண்ஜம்பம் எதற்கு ? கல்வியும்,மார்க்கமும் அறிந்த,ஒழுக்கத்தைப்பேணும் இளைஞரொருவர் இந்தப் பதவிக்கு வரவேண்டும். அவர் நகரின் எந்தப்பகுதியில் இருந்து வந்தாலும் வாழ்த்துவோம்.

மனதில் படுபவை :

நல்லவர்,மார்க்கம் கற்றவர்,ஒழுக்கம் பேணுபவர்,இளைஞர் இப்படி ஏதேதோ எழுதுகின்றீரே? அப்படி யாராவது ஒருசிலரை உம்மால் அடையாளம் காட்ட முடியுமா என்று என்னிடமே திருப்பிக் கேட்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை கேட்டுவிட்டால்? அதற்கும் பதில் இருக்கிறது. சமூக ஊழியர் ஜனாப்.கலாமி காக்கா, சமூகபார்வையாளர் மற்றும் ஆர்வலர்.ஜனாப். என்.எஸ்.இ.மஹ்மூது மாமா (இருவரும் மனதால் இளைஞர்கள்), பா.மு.ஜலாலி காக்கா, துளிர் ஷேக்னா காக்கா, வக்கீல் அஹமத் காக்கா, போன்றவர்கள் தலைவர் பதவிக்கும், ஐஐஎம் வாஹித் காக்கா, தம்பி.கே.ஜே.சாஹுல் ஹமீத், ஏ.தர்வேஷ் முஹம்மத் காக்கா, ஹாபிழ்.எஸ்.கே.ஸாலிஹ் போன்றோர் துணைத்தலைவராகவும் வரலாமே?

மேலும் வெளிநாடுகளில் வாழும், தகுதியும் திறனும் படைத்த காயலர்களை, கட்டுரையின் விரிவஞ்சி பதிவு செய்யாமல் விட்டுவிடுகிறேன்.

நான் அறியாத இவர்களினும் சிறந்த நன்மக்கள் ஏராளம் நமதூரில் இருக்கலாம்.நான் சுட்டிக்காட்டிய பெயர்கள் அனைத்தும், இவர்களைப்போன்றவர்கள் வரலாமே என்ற எண்ணத்தை வெளிப்படுத்த மாத்திரமே! முந்தைய பகுதியில் நான் குறிப்பிட்டதைப்போல பொதுவான ஒரு நபரை அடையாளம் காணும்பணி, இன்றே, இப்போதே,இந்த நிமிடமே துவங்கப்பட வேண்டும். அப்பாடா! மனதில் பட்டவைகளை , மக்கள் மன்றத்தில் பதிவு செய்துவிட்டேன்.இதயத்தின் பாரம் இலேசாவதை உணர்கிறேன்.

நிறைவுரை :

பெற்றோரே,பெரியோரே! சகோதர சகோதரியரே! தோழர்களே , தம்பிகளே! களமாற்றும் இளைஞர்களே! வழிநடத்தும் மூத்தவர்களே! சமீபத்தில் நான் கேட்டு இரசித்த ஒரு கவிதையை மாத்திரம் உங்களுடன் பகிர்ந்து,இந்தக்கட்டுரையை நிறைவு செய்யலாம் என எண்ணுகிறேன். ஐந்தில் வளையாதது ஏது தெரியுமா? ஒன்று மட்டும்தான்.

2 3 4 என்று அனைத்தும் வளைந்துவிட்டது. அதனால் ஐந்தில் வளையாதது 1 மட்டும்தான்.

நாமும் ஒன்றாவோம்! ஒற்றுமையாய் வளையாமல் நிமிர்ந்து நிற்போம்!

வானின்றிழியும் மழை எவ்விதப் பேதமும் இன்றி எல்லோருக்கும் பொதுவானதோ அதுபோல, கொள்கை, பகுதி என்ற பேதமின்றி ஒன்றுபட்ட உயர்வான காயலை உண்டாக்குவோம்! இன்ஷா அல்லாஹ்!

நம் கனவு நனவாகும் ! அந்த நல்ல நாளை விரைவில் கொண்டாடுவோம்! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Next Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...கனவுகளை நினைவாக்குவோம்
posted by: Salai Sheikh Saleem (Dubai) on 12 August 2011
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20850

தம்பி கவிமகனார் காணும் கனவுகள் எல்லாம் அடிப்படியில் செயலாற்றத்தில் இருக்கவேண்டிய ஒரு செயல் திட்டம் தான். தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலைகளில் இளைய சமுதாயத்தினரின் வரவு கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் சுட்டிக்காட்டிய எல்லா இளைஜர்கலுமே தகுதியானவர்களே. நாம் காணும் கனவுகளை எப்படி நிஜமாக்குவது? நாமோ பிழைப்பை தேடி நாடு கடந்து நாடு வந்து செய்யும் தொழிலை முதன்மையாக கருத்தில் கொண்டு இருக்கிறோமே - நம்மால் எப்படி முடியும் என்றும் விட்டு விட முடியுமா? அப்படி விட்டு விட்டால் நகர் மன்றம் கொள்ளையர்களின் கூடரமாகிவிடுமே.

இந்த சூழல் இனிமேலும் நமது நகர் மன்றத்திலும் வந்துவிடக்கூடாது, நாம் யார் யாரை நமதூர் நகர் மன்றத்திற்கு விரும்புகிறோமோ அவர்கள் தான் கண்டிப்பாக வர வேண்டும். இந்த முடிவுகளை நாம் தான் எடுக்க வேண்டுமே தவிர, வேறே ஒரு சிலர் தங்களின் பண ஆதிக்கத்தை நிலை நாட்ட நம் யாவரையும் பகடைக்காயாக வைத்து அவர்களின் பதவி மோகத்தையும் பண தாகத்தையும் போக்கி கொள்ள இது ஒன்றும் அரசியல் இல்லை, இது நமக்கு நாமே செய்யும் சமுதாய சேவை.

எனவே இதற்காக சமுதாய தன்னார்வலர்கள் ஒரு சிலர் ஓன்று கூடி ஒவ்வொரு வார்டிலும் யார் யாரை நிறுத்துவது அல்லது போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை நாம் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று நம் மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இதற்க்கு ஊர் ஜமாத்துக்களையும், தன்னார்வ தொண்டு இயக்கங்களையும் நாம் அணுகவேண்டும். இதை நாம் செய்யவிட்டால் யார் செய்யப்போகிறார்கள்?

எனவே இதையே நான் கவிமகனிற்கு ஒரு அழைப்பாய் விடுக்கிறேன். நான் ரெடி நீங்கள் ரெடியா? இந்த இயக்கத்தில் ஈடுபட யார் யாரெல்லாம் தயாரோ அவர்களுக்கும் இந்த பதிவின் மூலம் அழைப்பு விடுக்கிறேன். பதில் தாருங்கள் ஒன்றிணைவோம் கயவர்களை அடையாளம் காண்வோம், ஊழலற்ற ஒரு உதாரண நகர் மன்றத்தை அமைப்போம். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. கனவு அல்ல நிஜம் (சரித்திரம் படைக்கும் காயல் நகர்மன்றம் 2011)
posted by: salih (Bangkok) on 14 August 2011
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 20851

அனைத்துக்கட்டுரைகளும் மிகவும் அருமையாகவும் அற்புதமாகவும் இருந்தது.அனைவருக்கும் எனது ஸலாத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தோழர் கவிமகன் காதர் அவர்களின் கட்டுரை காயல்பட்டணம்.காமில் முதலாவதாகவும் என்னுடயை பார்வைக்கு முதலிடமாகவும் அமைந்திருக்கிறது.அதற்காக மற்றவர்களை குறைத்து மதிப்பிடவில்லை.

கடந்த கால நம் காயல் நகர்மன்ற வரலாற்றை மனக்கண் முன் கண்ணாடி போல் படம்பிடித்துக்காட்டியுள்ளார். அதனால்தான் என்னவோ முன்னமே அவர்கள் வீட்டிற்கு கண்ணாடி ஆலிம் வீடு என்று பெயை வந்ததோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நம் மக்கள், நம் சமுதாயம், நம் ஊர், நம் நகர்மன்றம் மற்றும் அனைத்து மக்களும் பயன்பெறவேண்டும் ,ஒற்றுமையுடன் வாழவேண்டுமென்று அவருடைய மனது ஊரைப்பற்றியே ஒவ்வொரு நொடியும் சிந்தித்து தம் வேலைப்பளுவிற்கு மத்தியிலும் ஊர் நலனில் அக்கறை கொண்டு கனவு காணாமல் நிஜமாகவே நகர்மன்றத்தில் பலவருடங்கள் அனுபவப்பற்றவரைப்போன்று, முதிர்ந்த அனுபவசாலியாக வைரவரிகளாக பதித்து இருக்கிறார், இந்த சிந்தனை ஒவ்வொரு காயல் குடிமகனுக்கும் வரவேண்டும்.

ஆகமொத்தத்தில் தற்போதைய நகர்மன்றம் , ஒரு சிறந்த மனிதரின் தலைமையில் இயங்கும் எந்த சிறப்பும் இல்லாத நிர்வாகம் என்பதை பதிவு செய்ய எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என்பதுதான் உண்மையிலும் உண்மை.

மனதில் படுபவை :

நல்லவர்,மார்க்கம் கற்றவர்,ஒழுக்கம் பேணுபவர்,இளைஞர் இப்படி ஏதேதோ எழுதுகின்றீரே? அப்படி யாராவது ஒருசிலரை உம்மால் அடையாளம் காட்ட முடியுமா என்று என்னிடமே திருப்பிக் கேட்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை கேட்டுவிட்டால்? அதற்கும் பதில் இருக்கிறது. பெயர்களை அடையாளம் காட்டாமல் தவிர்த்திருந்தால் கட்டுரைக்கு மேலும் வலுசேர்த்திருக்கும்.

ஒவ்வொரு காயல் குடிமகனும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை.காயல்பட்டணம்.காம் பார்க்காத நமக்கு தெரிந்த நம் காயல் நண்பர்களுக்கு இந்த கட்டுரையை இமெயில் செய்யுமாறு வேண்டிகிறேன்.

வருகின்ற நகர்மன்ற தேர்தலில் கவிமகன் எதிர்பார்க்கும் கொள்கை, பகுதி என்ற பேதமின்றி ஒன்றுபட்ட உயர்வான காயலை உருவாக்குவோம்! இன்ஷா அல்லாஹ்!

தோழர் காதரின் சமுதாய எழுத்துப்பணி தொடர மனமார வாழ்த்தி துஆ செய்யும் என்றும் அன்புடன் மு.ஹ. செய்யது முஹம்மது சாலிஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: Cnash (Makkah ) on 14 August 2011
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20854

அஸ்ஸலாமுஅலைக்கும்!!

நண்பர் கவிமகன் அவர்களில் கட்டுரையை இப்பொழுதுதான் படிச்சேன்.. மிகவும் அருமை, சீரிய பார்வை, ஆழ்த்த கருத்து...100 கும் மேற்பட்ட வருட ஓட்டத்தை அழகிய முறையில் ரசிக்கும் வகையில் எடுத்து சொல்லி....இன்றைய நகர் மன்றத்தின் ஆற்றலையும் அதே நேரத்தில் அவலங்களையும் நேர்த்தியாக பதித்து இருகிறீர்கள்... பாராட்டுக்கள்!! நண்பர் ஸாலிஹ் சொன்ன அதே குறைதான் எனக்கும் தோன்றுகிறது ....குறிப்பிட்ட சில நபர்களை பெயர் கூறி அடையாளம் காட்டமல் இருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும்!!

அழகிய முறையால் ஒரு வழி காட்டுதல் கட்டுரையை தந்து இருக்கிறீர்கள்!! அதை கொண்டு வழி நடக்க வேண்டியது...பொறுப்பில் வருபவர்க்கும் பொறுப்பாளர்களை தேர்ந்து எடுக்க இருக்கும் நமக்கும் உள்ள கடமை!! இன்ஷா அல்லாஹ் நீங்கள் எதிர்பார்க்கும் அதே நகர்மன்றம் தான் நங்கள் எதிர்பார்க்கும் மன்றமும்...அதுவே உண்மையான மக்கள் நல மன்றமும்!! அல்லாஹ் நம் யாவருக்கும் அருள் புரிவான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: sulaiman lebbai (riyadh - s.arabia) on 14 August 2011
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20855

நண்பர் கவிமகன் அவர்களின் "நான் எதிர்பார்க்கும் நகர்மன்றம்" கட்டுரை மிக மிக அருமை. இந்த மாதிரியான ஒரு நகர் மன்றம் நமக்கு அமைந்தால், நமது ஊருக்கு பல நன்மைகள் நச்சயம் நடக்கும் என்பது உறுதியானது. நாம் நமக்குள் உள்ள வேற்றுமைகளை முதலில் மறந்து விட்டு நம் ஊருக்கு நல்லது நடக்க வேண்டுமானால் நாம் அனைவர்களும் ஒற்றுமை உடன் ஒரே அணியில் இணைய வேண்டும்.வல்ல நாயன் இந்த புனித ரமலானின் பொருட்டால் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட அருள்புரிவானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. அருமையான கட்டுரையுடன் கூடிய நல்லவர்களை சுட்டிகாட்டிய கவிஞ்செர்
posted by: MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) on 15 August 2011
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20857

அஸ்ஸலாமு அழைக்கும்.

தங்களின் முழு கட்டுரையும் மிக அருமை.தங்கள் சுட்டிக்காட்டிய அனைவர்களுமே மிக மிக தகுதியானவர்கள். மேலும் காயல் இஸ்லாமிய ஐக்கிய பேரவை, IQRA, சேர்ந்து அந்தந்த வார்டுகளுக்கு உட்பட்ட ஜமாத்துகள்,பொதுநல மன்றங்கள் இணைந்து மேற்பார்வையில் அணைத்து கட்டுரைகளிலும் கூறப்பட்டுள்ள நல்ல கருத்துகளின் அடிப்படையில் ஒரு நல்லவரை போட்டியன்றி தேர்ந்து எடுத்து ஒருவேளை போட்டி இருந்தால் போட்டியாளர்களை நகர்மன்ற தேர்தலுக்குமுன் அந்தந்த வார்டுகளுக்கு உட்பட்ட ஜமாதுகளுக்குள் ஜனநாயக முறையில் தேர்தல் வைத்து ஒருவரை ஏக மனதாக தேர்ந்து எடுத்து போட்டியன்றி நகர்மன்றதிற்கு அனுப்பவேண்டும்.

இதுபோன்றே தேர்ந்து எடுக்கப்பட்ட அணைத்து வார்டுகளின் ஜமாத்தின் நகர்மன்ற பிரதிநிதிகள் சேர்ந்து தலைவர், உதவித்தலைவர்கலை தேர்வு செய்து இந்திய வரலாற்றில் காயல் நகராட்சி அரசின் தேர்தலை சந்திக்காமல் அனைவருமே போட்டியன்றி ஒருமனதாக ஜமாஅத், பொது அமைப்புகள் மற்றும் மாற்றுமத சகோதர்களின் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நகராட்சி மன்றமே உறவாகியது என்ற வியப்புடன் கூடிய ஒற்றுமை கலந்த சாதனை அரங்கேற்றுவமாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) on 15 August 2011
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20858

Thanks for his well article.Really astonished he has given very good suggestion for us.He mentioned the character of members that is very significent.Literate, religious minded and also welfare association related peoples are eligible for the selection of municipality members.Actually if we adopt his suggestions we will select peoples unopposed.Once again I appreciated for his authenticated well analysis report.

Best regards

Salai Syed Mohamed Fasi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: vsm ali (kangxi, Jiangmen , China) on 15 August 2011
IP: 121.*.*.* China | Comment Reference Number: 20859

உங்களது அனைவரது கட்டுரைகளும் படிப்பதற்கு நன்றாக உள்ளது . அனைவருமே , அவர் வந்தால் நன்றாக இருக்கும், இவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள் . எவர் வந்தாலும் , மக்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே , சிறந்த நகராட்சியாக செயல்பட முடியும் . இப்போது இருக்கும் நகராட்சியின் சட்டங்களை , மக்கள் மதித்தாலே போதும் , நகராட்சி நன்றாக செயல்பட முடியும் . அல்லது நகராட்சி கடுமையான சட்டங்களை இயற்றி , பார பட்சமின்றி செயல் படுத்தினாலும் , நன்றாக செயல்பட வாய்ப்பு உண்டு .

அடுத்து , ஒரு கட்டுரையாளர் DCW பற்றி கடுமையாக சாடி இருக்கிறார் . புற்று நோய்க்கு அது ஒன்றுதான் காரணமாம். தற்போதைய பத்திரிகை செய்தியில் , நம் நாட்டின் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெண்மணிக்கு புற்று நோய் , வெளிநாட்டில் சிகிச்சை என்று . அந்த அம்மையார் நம் DCW வை ஒரு முறை கூட எட்டிப்பார்த்தது இல்லை , பின், அவருக்கு எப்படி புற்று நோய் வந்தது ? நம்முடைய உணவுப்பழக்கமும் கூட புற்று நோய்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் . DCW வை பற்றி இவ்வளவு பேசுகிறோமே , சமீபத்தில் நடந்த இஸ்லாமிய இலக்கிய மாநாட்டு மலரில் , DCW இல் பணத்தை வாங்கிக்கொண்டு , அவர்களுடைய விளம்பரத்தையும் போட்டு இருக்கிறார்கள். இது என்ன logic என்று தெருயவில்லை .

அடுத்து ஆட்டோ காரர்களின் கட்டண முறை பற்றி ஒரு கட்டுரையில் வருகிறது . கட்டணம் அதிகம்தான் . ஆனால் அதற்க்கு காரணம் ஆட்டோகாரர் மட்டும் அல்ல , அந்த ஆட்டோவின் உண்மையான முதலாளியும்தான். நகரில் பெரும்பான்மையான ஆட்டோகாரர்கள் , ஆட்டோவை வாடகைக்கு எடுத்துதான் ஓட்டுகின்றனர். ஆட்டோ ஓடினாலும் , ஓடாவிட்டாலும் அவர்களின் முதலாளிக்கு தினமும் கப்பம் கட்டி விட வேண்டும் . முதலாளிமார்களும் , ஆட்டோ ஓடாவிட்டாலும் கூட , அவர்களுடைய வருவாயை மிகவும் கறாராக கறந்து விடுகின்றனர் . பின், ஆட்டோகாரர் என்ன செய்வார் ? பயணிகளிடம்தான் வசூலிக்க வேண்டிய கட்டாயம்.

அடுத்து , தண்ணீர் உறிஞ்சுதல் , லஞ்சம் , பற்றியெல்லாம் கட்டுரையில் வருகிறது . இதற்கு , ஒன்று மக்கள் தாங்களாக , அல்லாஹுக்கு பயந்து , திருந்த வேண்டும் , அல்லது நகராட்சி , தவறு செய்பவர்களை முகதாட்சண்யம் பாராமல் , கண்டிக்கவும், தண்டிக்கவும் வேண்டும்.

பார பட்சமின்றி , நேர்மையாக நடக்கும் உறுப்பினர்களையும் , தலைவரையும் தேர்ந்தேடுப்போமோக , அல்லது இருக்கும் உறுப்பினர்கள் , தலைவரை நீடிக்க செய்து , நாம் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போமாக .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: Cholukku (chennai) on 17 August 2011
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20867

தம்பி கவிமகன் முன்னாள் இந்நாள் தலைவர்களை parti எல்லாம் சொல்லி இருந்தார் ஆனால் பாவலர் அப்பாவை pattiஒரு விசயமும் சொல்ல வில்லையே?அந்த மனிதரை சொல்ல மனசு வரவில்லையா?நான் அறிந்த உலகில் நல்லவன் என்பவன் இல்லை வாய்புகள் இல்லாத வரை தான் நல்லவன். வாய்புகள் வந்துவிட்டால் நல்லவனும் கேட்டவன் தான். தம்பி ஸாலிஹ் எடிட் பண்ணாமல் இந்த commants இ போடும் இது யார் மனதையும் புண் படுத்து வதற்காக இல்லைநல்லவர்kal எல்லாம் வபாத் ஆகி விட்டார்கள்.அவர் அவர் நெஞ்சில் கை வைத்து நாம் நல்லவனா?எண்டு கேட்டால் மனசாட்சி பதில் சொல்லும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. அன்பு நெஞ்சங்களே! .
posted by: kavimagan (dubai) on 17 August 2011
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20869

அன்பு சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும்! எனது இந்தக் கட்டுரையை, நான் எழுதியவாறே பிரசுரித்த நமது வலைதள நிர்வாகிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி! பாராட்டியும்,தவறுகளை சுட்டிக்காட்டியும்,வலைத்தளத்திலும் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் செய்தும் என்னை ஊக்குவிக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி!

சகோதரர் சொளுக்கு அவர்கள் உடைய பதிவில் மதிப்புமிகு பாவலர் அவர்களுடைய பெயரை சொல்வதற்கு மனமில்லையா? என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.நகர்மன்ற வரலாற்றை சுருக்கமாக சொல்லவேண்டும் என்ற காரணத்தால், பாவலர் அப்பா அவர்கள் பெயரை மாத்திரமல்ல,இன்னும் நல்ல பல தலைவர்கள் பெயரையும் குறிப்பிடவில்லை. அதனால்தான், பொதுவாக நூறாண்டு கால நகர்மன்ற வரலாற்றில் தலைவர்கள் அனைவரும் கண்ணியமாகவும்,பொறுப்புணர்வோடும் தத்தம் கடமைகளை சிறப்பாக செய்தனர் என்று சுருக்கமாக எழுதி இருந்தேன். நகரின் ஒற்றுமையை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு எழுதிய எனது கட்டுரைக்கு,தயவுசெய்து உள்ளர்த்தம் கற்பித்து அதுவே ஒற்றுமைக்கு பங்கமாகிவிட நண்பர்கள் யாரும் காரணமாகி விடவேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.

எல்லோரும்,எல்லாக் காலங்களிலும் நல்லவர்களும் அல்ல,கெட்டவர்களும் அல்ல.அதுபோல எல்லோரும் ,எல்லோருக்கும் நல்லவராகவும் இருந்து விட முடியாது. இது எனக்கு மாத்திரமல்ல! எல்லோருக்கும் உடன்பாடான கருத்துதான். எனது இந்தக் கட்டுரை யாருடைய மனதையும் புண்படுத்த அல்லது சிலரை உயர்த்தி பிறரை தாழ்த்துவதற்காக எழுதப்பட்டதும் அல்ல.அப்படி யாருடைய மனதையாவது எனது எழுத்துக்கள் காயப்படுத்தி இருந்தால், அதற்காக வருந்துகிறேன். மன்னிக்க வேண்டுகிறேன்.

எனது மற்றும் நமது ஒரே ஆசை நல்ல மனதுடைய,,திறமையும் கொண்ட நேர்மையானவர்கள் நகர்மன்றம் சென்றால், சிறப்பான திட்டங்கள் அனைத்தும் தானாகவே நிறைவேறும் என்பதுதான். பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்டுரைகளும் சிறப்பாகவும்,சிந்திக்க வேண்டியதாகவும் இருக்கிறது. அனைத்து கட்டுரையாளர்களுக்கும் இதயம் நிறைந்த பாராட்டுக்கள்!

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்! பாவலர் அவர்கள் பெயரை குறிப்பிடாதது மனது இல்லாத காரணத்தால் அல்ல! இந்தக் கட்டுரையை எழுதும்போது எனக்குத் தோன்றாத காரணத்தால் மட்டுமே! தயவுசெய்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. உன் ஆசை விரைவில்! அது வெகு தூரம் இல்லை !!
posted by: K.V.A.T.HABIB MOHAMED (QATAR) on 20 August 2011
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 20873

கவி மகன் காதர் ....என்ன அருமையான சிந்தனை ....எத்தனை நாள் நீ எடுதிருப்பாய் இதை கோர்வை செய்வதற்கு ! எழுத்தில் பிழை ...சொல்வதில் குளறு படி ...நிறைவு செய்ய திணறும் பாங்கு....இன்றைக்கு இப்படி தானே அநேகர்களின் எழுத்துக்களும் இருக்கு ? ! அந்த வழியில் இருந்து முற்றிலுமாக மறு பட்டு வித்தியாசமான சிந்தனையுடன் ....சீரிய நோக்குடன் ....சிறப்புடன் எழுதப்பட்ட உன் ஒவொரு வரியிலும் உயிரோட்டமே இருக்கு .....

இன்ஷா அல்லாஹ்...நிச்சயம் உன் உணர்வுகள் உயிரோட்டம் பெறும்....நல்லவர்கள் தான் இனி நம்மவர்களால் நகர்மன்றம் செல்ல நல்லதோர் தீர்ப்பு தருவார்கள் ....கனவுகள் நனவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை ......நாம் என்று ஒன்று படுவோமோ அன்றே சமுதாயத்தை குழப்பி சுயநலம் பெறும் கயவர்களுக்கு இனி ஒரு போதும் வேலை இல்லை என்றாகி விடும்....

சீரிய பொது நல சிந்தனை சிறப்பிகள் நம்மிடையே நிறைய பேர் உண்டு...அவர்களை இனம் கண்டு ....அடையாளம் காட்டி .....நகராட்சி நாற்காலிக்கு அனுப்பி வைக்க இப்போதே கவி மகன் காதர் கூறுவதை போன்று (ஒரு உதாரண த்துக்கு குறிப்பிட்ட பெயர்கள் , நபர்கள் ஒரு சொல்லுக்காகவே என்றாலும் ) அலட்சியமாக அதை அப்படியே விட்டு விடாது அடுத்த நடவடிக்கை எடுத்து இந்த கருத்துக்கு வலு சேர்க்க நாம் அனைவரும் ஒன்று கூடுவோம் என்று இந்த தருணத்தில் என் மனதை திறக்கிறேன் இங்கே .......

வாருங்கள் ஒன்று படுவோம் .....

உயரிய தூய்மையான நகராட்சி யை ...கவிமகன் காதர் கண்ட கனவை நினைவாக்குவோம் ....ஒன்று படுவோம் ! வெற்றி பெறுவோம் !!

வானின்றிழியும் மழை எவ்விதப் பேதமும் இன்றி எல்லோருக்கும் பொதுவானதோ அதுபோல, கொள்கை, பகுதி என்ற பேதமின்றி ஒன்றுபட்ட உயர்வான காயலை உண்டாக்குவோம்! இன்ஷா அல்லாஹ்!

நம் கனவு நனவாகும் ! அந்த நல்ல நாளை விரைவில் கொண்டாடுவோம்! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

(வேதனையான விஷயம் என்னன்னா ....எது எதுக்கோ பதிவை இங்க கொடுக்ரவங்க இந்த கட்டுரைக்கு ஆயிரக்கணக்கா அல்லவா தங்கள் கருத்தை பதிவு செய்து இருக்கணும்? இருந்தாலும் பத்து பதிவா இருந்தாலும்...அத்தனையும் முத்து முத்தா பதிந்து இருக்கீங்களே .....அதுவே போதும்...! )

என்றும் பொது நலனில் ஆர்வம் காணும் ,

K.V.A.T. ஹபீப்
தோஹா
கத்தார் kvat.habib@gmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. Re:நான் எதிர்பார்க்கும் நகர்...
posted by: Zubair Rahman (Bengaluru) on 21 August 2011
IP: 202.*.*.* India | Comment Reference Number: 20879

சகோதரர் கவிமகன் காதர், அவர்களே தங்களின் பதிப்பில் அனைத்துமே சிறந்த அம்சங்களை தான் பதிந்துள்ளீர்கள். ஏன்? தாங்கள் கூட உறுப்பினர் ஆகலாமே?

தற்போதைய நம்முடைய நகர்மன்ற தலைவர் ஹாஜி. வாவு . செய்யது அப்துர்ரஹ்மான் அவர்களின், ஊரின் நன்மைக்காக தன் சொந்த பங்களிப்பு என்பது ஊரின் நலன் மேல் அக்கறை கொண்ட அனைவரும் அறிந்த ஒன்றே.

அதே சமயத்தில் வலுவில்லாத அவரின் தலைமை என்கிற கருத்து ஏற்புடையதல்ல. கூட இருக்கிறவன் எதிரி என்று தெரிந்தால் நாம் உஷாரவோம், நண்பர்களே எதிரி (பிணம் (பணம்) திண்ணி கழுகுகள்) என்றால் யாரிடம் சொல்வது.

இன்ஷா அல்லாஹ் வரும் நகர்மன்ற அமைப்பில் சிறந்த உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து வலுவான தலைமையையும் தேர்ந்தெடுக்க வல்லோன் ரஹ்மான் வழி காட்டுவானகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
12. நம்புவோம் இதுவும் நடக்கும் என்று...
posted by: M. Sajith (DUBAI) on 07 September 2011
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20890

கவிமகன் அவர்களே..

நல்ல கவிதை படித்தது போல் இருந்தது உமது கட்டுரை.

எல்லா கவிதைகளையும் போல இதுவும் கற்பனையாகவே இருந்து விடுமோ என்ற பயமும் கூடவே "மெகா" போன்ற முயற்ச்சியும் நடப்பதால் கொஞ்சம் நம்பிக்கையும் வரத்தான் செய்கிறது.

பாவலர் அப்பாவை குறிப்பிடாதது, இந்த பேரனுக்கும் சிறு வருத்தம்தான்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved