Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:28:53 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 32
#KOTWART0132
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 25, 2013
சவூதியில் சிரச்சேதம் செய்யப்பட்ட ரிசானாவின் கதை தெரியுமா?
இந்த பக்கம் 8345 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (34) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 10)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“குற்றம் செய்யாத எனக்கு ஏன் உம்மா இந்த கோரத் தண்டனை? செய்யாத குற்றத்துக்கு நான் ஏன் உம்மா தண்டனையை பொறுப்பேற்க வேண்டும்? எப்ப உம்மா வருவேன்? என்னை எடுங்கம்மா…”. இதுதான் அவள் கடைசியாக - ஆம் அவள் வாழ்வின் கடைசி வார்த்தைகளாக தனது தாயார் பரீனா உடன் 12.12.2012 அன்று பேசினாள். அவளது மூச்சு இந்தப் பேச்சிற்குப் பின் சரியாக 29 நாட்களின் பின் 09.01.2013 அன்று அடங்கிவிட்டது. இலங்கையில் பிறந்த அவளது உடலும் சவூதி மண்ணில் அடக்கப்பட்டுவிட்டது.

யார் இந்த ரிசானா நபீக்? அவள் செய்த குற்றம் என்ன? ஏன் இந்த சிரச்சேதம் அவளுக்கு?

இறைவன் சிலரை மாடியிலேயே பிறக்க வைக்கிறான் – மாடியிலேயே வாழ வைக்கிறான். வேறு சிலரை மண்ணிலேயே பிறக்க வைக்கிறான். காலமெல்லாம் அந்த மண்ணிலேயே புரளவும் வைக்கிறான். இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவள் இவள். வறுமையிலும் வறுமை என்று சொல்லத்தக்க குடும்பம் அது. அங்குதான் அவள் 1988ஆம் வருடம் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி பிறந்தாள். பெப்ரவரி 04ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம். எல்லோரும் ஆடிப்பாடி மகிழும் தினம். அத்தினத்தில் பிறந்த அவள் இன்று முழு இலங்கையையும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்டாள்.

அவளது மரணச் செய்தியை அறிந்த இலங்கை நாடாளுமன்றம் உடனடியாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செய்தது. முன்பின் தெரியாத ஒரு பெண்ணிற்காக நாடாளுமன்றம் தந்த மரியாதை வரலாற்றில் பதிவு செய்யத்தக்கது. ஜனவரி 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையில் உள்ள சகல மஸ்ஜித்களிலும் அவளுக்காக பிரார்த்தனை - துஆ இறைஞ்சப்பட்டது. இவ்வளவு மரியாதையும் இந்தப் பெண்ணிற்கு எதற்காக?

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் கிராம வட்டத்தில் உள்ள ஷாபி நகர் என்ற கிராமத்தில் உள்ள முகம்மது நபீக் – பரீனா தம்பதிதான் இவளது பெற்றோர். வீடு ஓலையால் வேயப்பட்டது. மழைக்கு ஒழுகும்… காற்றுக்கு அசைந்தாடும். தந்தை விறகு வெட்டும் தொழில் செய்து, அரை வயிறு கால் வயிறு என தனது குடும்பத்திற்கு கஞ்சி அளப்பவர். இவர் நோய்வாய்ப்படவே, விறகு வெட்டும் வேலையை விட்டு விட்டு, காட்டிற்குச் சென்று விறகு பொறுக்கி காலம் போக்கினார். வறுமை மேலும் வாட்டியது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் தரகர்கள் தந்தையை அணுகி, “ரிசானாவை வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்கு அனுப்பினால், தங்களுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும்… குடும்ப கஷ்டமும் குறையும்...” என அரிக்க ஆரம்பித்தனர். தந்தை தாயாரிடம் பேசினார். அவளோ, “அப்பப்பா… நான் அவளை விட மாட்டேன்… உண்டாலும், உடுத்தாலும், உறங்கினாலும் ஒன்றாகவே இருப்போம்… அவளைப் பிரிய முடியாது” என்று அடித்துச் சொல்லிவிட்டாள். தரகர்கள் தங்கள் முயற்சியை விடவில்லை. தந்தையோ தவித்தார். தாயோ தடுத்தார்.

ரிசானா மூதூர் இமாம் ஷாபி வித்தியாலயத்தில் 8ஆம் வகுப்பு வரை கற்றாள். மென்மையான உள்ளம் கொண்டவள். சக மாணவியருடன் அன்பாகவே பழகுவாள். பணிவும், பரிவும் கொண்ட அவள் யாருக்கும் உதவும் நோக்கு கொண்டவள். படிப்பில் சுமார். பாசமாய் பறந்து திரிந்த அவள் சிரச்சேதம் செய்யப்படும் அளவிற்கு எந்தக் குற்றத்தையும் செய்திருக்க மாட்டாள் என்று அவளின் அயலவர்கள் கண்ணீர் மல்க புலம்பினர்.

இது நிற்க, தரகர் - தகப்பன் - தாய் ஆகிய மூவருக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை ரிசானா ஓரளவு புரிந்தே இருந்தாள். இறுதியாக அவள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டாள். “உம்மா!” “என்ன?”. “புரோக்கர் என்ன சொன்னார்?” “எந்த புரோக்கர்?” ”ஏன் ஒளிக்கிறீங்க உம்மா? அதுதான் அந்த சவூதி புரோக்கர்!”. “உனக்கெதுக்கு அதெல்லாம்?”. “இல்லை உம்மா... அவர் நல்லதுதான் சொல்றார்!”

“உம்…”. “நான் சவூதி போறேன் உம்மா…”. “சரி வராது!”

இப்படி தொடர்ந்த பேச்சு, கடைசியில் தாயாரை சம்மதிக்க வைத்தது. சவூதி செல்ல ரிசானா விரும்பிய காரணம் வேறு. தாயார் சம்மதத்திற்குரிய காரணம் வேறு. குடும்ப வறுமையைப் போக்கலாம் என்பது ரிசானாவின் எதிர்பார்ப்பு. ரிசானாவையும் ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்க வேண்டும். மூத்தவள் அவள். 17 வயது ஆகிவிட்டது. இன்னும் இரண்டு தமக்கைகளும் உள்ளனர். இவர்களுக்கும் வழி செய்ய வேண்டும் என்பது தாயாரின் எதிர்பார்ப்பு. ஆகவே அவள் சம்மதித்தாள். ஆனால் ரிசானாவிற்காக சவூதியில் காலன் காத்திருக்கிறான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

18 வயதிற்குக் கீழ்ப்பட்ட பெண்களை பணிக்கு அனுப்ப முடியாது என்ற சட்டத்தை ஏமாற்ற, ரிசானாவின் பிறப்பு 1988 பிப்ரவரி 04ஆம் திகதி என்பது 1982 பிப்ரவரி 04ஆம் திகதி என்று மாற்றப்பட்டு, அனைத்து பயண ஆவணங்களும் பெறப்பட்டன. இவைதான் தனது மரணச் சீட்டு என்பதை அந்த பேதைப் பெண் அப்போது அறியவில்லை.

2005ஆம் ஆண்டு ஏப்ரல் 01ஆம் திகதி கொழும்பிலிருந்து ரியாத் செல்லும் சவூதி எயார் 781 விமானத்தில் அவள் பயனமானாள் பல கனவுகளுடன். வானத்தில் பறந்த விமானத்தை மட்டுமே பார்த்துப் பழகிய ரிசானா… தனது மாவட்டத்தைத் தவிர வெளியே சென்றிராத ரிசானா… கொழும்பு நகரம் எப்படி இருக்கும் என்று காதால் மட்டுமே கேட்டறிந்த ரிசானா… தமிழ் தவிர வேறு எம்மொழியிலும் பேசியிராத ரிசானா… எவ்வளவு மன உறுதியுடன் தனது குடும்ப வறுமையைப் போக்க விமானத்தில் பறந்தாள் – ஆம், அவள் பறந்தே போனாள் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

கொடிது கொடிது வறுமை கொடிது. அதிலும் கொடிது இளமையில் வறுமை! ஔவைப் பாட்டி இப்படித்தான் சொன்னாள். சவூதியில் இங்கும் அங்குமாக சில வீடுகளில் மாற்றியடிக்கப்பட்டு, பின்பு மே மாதம் 04ஆம் திகதி நிரந்தரப் பணிக்காக ஒரு வீட்டில் அமர்த்தப்பட்டாள். எஜமானர் பெயர் நயிஃப் ஜிஸியான் கலாஃப். அல் ஒதாபி என்பது. அவர் சவூதி அரேபியாவின் நிதி அமைச்சில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றினார். ரியாத் நகரிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தாவாதிமி (Dhawadhimi) என்ற ஊரில்தான் அவ்வீடு இருந்தது.

அவளது வேலையானது வீட்டை சுத்தப்படுத்தல், உடுப்பு கழுவுதல், சமையலறையில் உதவுதல் போன்றவை. அல் ஒதாபியின் மனைவியை அவள் ‘மேடம்’ என்று அழைத்தாள். இப்பணிகளோடு குழந்தையைப் பார்க்கவும் அவள் பணிக்கப்பட்டபோது, அவள் தயங்கினாள். குழந்தை வளர்ப்பில் அவளுக்கு பரிச்சயமோ, பயிற்சியோ இல்லை. தன் தாய்க்கு உதவியாக தன் சகோதரிகளை அவள் கவனித்தது உண்டுதான்.

ஆனால் அது வேறு, இது வேறு. இருப்பினும், எப்படியும் குடும்ப வறுமையை ஒழிப்பது என்ற வைராக்கியத்தில் பறந்து வந்த அவள், தனது கனவுகள் நனவாக வேண்டும் என்பதற்காக அதனையும் ஏற்றாள்.

மே மாதம் 22ஆம் திகதி - அதாவது அவள் அந்த வீட்டிற்கு வந்த 18ஆவது நாள் காலை நேரத்தில், நான்கு மாத மழலை மகன் கயெத் பின் நயிஃப் ஒதபியை ரிசானாவின் பொறுப்பில் விட்டுவிட்டு தம்பதிகள் வெளியே சென்றனர். மற்ற குழந்தைகளும் வீட்டிலேயே இருந்தனர். தனது அலுவல்களை முடித்துக்கொண்ட ரிசானா, பகல் 12.30 மணியளவில் அம்மழலைக்கு பாட்டிலில் பால் புகட்ட ஆரம்பித்தாள்.

குடித்துக் கொண்டிருந்த குழந்தை திடீரென சில வித்தியாசமான சமிக்ஞைகளைக் காட்டியது. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. மூக்கு - வாய் வழியே பால் வழிந்தது... கண்கள் மூடின... குழந்தை தூங்குவதாக முதலில் நினைத்த அவள், பின்பு குழந்தையைத் தட்டி எழுப்பினாள். ஆனால் குழந்தையோ கண் திறக்கவேயில்லை. பதறிப்போன ரிசானாவிற்கு கை கால்கள் உதறின. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

குழந்தையின் நெற்றி, கழுத்து, கன்னங்கள், நெஞ்சு என்று பல இடங்களில் தேய்த்தாள் – தட்டினாள்... குழந்தையை வலம் இடம் என்று ஆட்டினாள்... ம்…ஹூம்... குழந்தை கண் விழிக்கவேயில்லை. அழத் துவங்கிவிட்டாள் ரிசானா. சத்தம் கேட்டு வந்த மற்ற குழந்தைகள் ரிசானா குழந்தையை அப்படியும், இப்படியும் குலுக்குவதைக் கண்டனர். அவர்கள் மனதில், ரிசானா குழந்தைக்கு ஏதோ தீங்கு செய்கிறாள் என்றே பட்டது.

மணி 01.30 வாக்கில் பெற்றோர் வீடு திரும்பினர். அவர்கள் வந்ததும், வராததுமாக குழந்தைகள் தாயிடம் ஓடிச் சென்று, ரிசானா தங்கள் சகோதரனை என்னவோ செய்தாள் என்று முறையிட, மேடம் அவசரமாக குழந்தையிடம் போகவும், அது பேச்சு மூச்சு இன்றி கிடந்ததைக் கண்ட தாய்க்கு சினம் உச்சிக்கு ஏறியது. வீல் என்று கத்திய அவள், ரிசானாவின் முடியைப் பிடித்து இழுத்து, கண்டவாறு அடி, உதை, குத்து என்று விட்டாள். அதிர்ச்சியடைந்த ஒதபியும் ரிசானாவைப் பந்தாடினார்.

சினம் தீர்ந்த அவர்கள் பொலிசுக்கு தகவல் சொல்லி, விரைந்து வந்த வந்த போலீஸ் தங்கள் பங்கிற்கு ரிசானாவைத் துவைத்து எடுத்து கையில் விலங்கிட்டு அழைத்துச் சென்றனர். இப்போது ரிசானா நினைத்தாள்... “என் உம்மா என்னை ஒருபோதும் ஒரு அடிக்கு மேல் அடித்ததில்லை...? பள்ளியிலும் நான் அடி வாங்குவதில்லை... இங்கு மாட்டை அடிப்பது போல என்னை அடித்து விட்டார்களே...” விம்மியவாறு போலீஸ் காரில் சென்றாள்.

ரிசானாவிற்கு இப்போது விளங்கியது. தான் எதையோ நினைத்து வந்தது இப்போது எப்படியோ மாறிக்கொண்டிருக்கிறது என்று. ஆயுளில் காவல் நிலையம் எப்படி இருக்கும் என்று கூட அவள் கண்டதில்லை.இப்போது எல்லாம் ஒரே கலவரமாக இருந்தது.

“யா அல்லாஹ்! ஏழை நான் எந்தத் தவறும் செய்யவில்லை... எனக்கு ஏன் இப்படி அடி உதை?” என்றுதான் அவளால் குமுற முடிந்தது. எதை எதையோ கேட்டார்கள். எதுவும் புரியவில்லை. கையெழுத்து போடும்படி அடித்தனர். போட்டாள். எதற்கு என்று கூட தெரியாது. ஓர் அறையில் இருந்த ரோஜாக் கூட்டத்தோடு அவளும் அடைக்கப்பட்டாள்.

ஓரிரு தினங்கள் கழித்து அவளை அழைத்தனர். ஓர் இந்தியர் அங்கு காவல் அதிகாரிகளோடு இருந்தார். மலையாளியான அவர் அங்கு உண்மையில் ஆடு மேய்ப்பவர். அவருக்குத் தெரிந்த தமிழில் அவர் எதுவோ கேட்டார். இவள் விளங்கியும், விளங்காமலும் எது எதுவோ பதில் சொன்னாள். அவை அங்கு பதிவு செய்யப்பட்டன.

“நான் தவறு செய்துவிட்டேன் என்று சொல். இல்லாவிடில் உன்னை வெளியே விட மாட்டார்கள்” என்று அந்தப் புண்ணியவான் கூறி அவளை கையெழுத்து போடச் சொன்னார். அறபி மொழியில் எழுத்தப்பட்ட அந்தக் குற்றப் பத்திரிக்கையில் எதுவும் புரியாத நிலையில் அவள் தமிழில் கையெழுத்திட்டாள்.

நிற்க, குழந்தையின் தாயின் குற்றச்சாட்டானது, காலையில் தான் வெளியே போகும்போது தனக்கும், ரிசானாவிற்கும் ஏற்பட்ட வாய்த் தகறாரின் காரணமாக ரிசானா குழந்தையை கழுத்தை நெறித்துக் கொன்று விட்டாள் என்பதே. காவல்துறை அதே வழியிலேயே குற்றப் பத்திரிக்கையை தயாரித்து, ரிசானாவிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்கி, வழக்கையும் தாக்கல் செய்தது.

"அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டிய ஒரு தேவை எனக்குக்கிடையாது, நான் பாலூட்டும்போது குழந்தை மூச்சுத்திணறி அதன் காரணமாக இறந்ததே தவிர, நான் பராமரித்துப் பாதுகாத்து வந்த அந்த நான்கு மாதச்சிசுவை கொல்ல வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது" என்று ஓலமிட்ட ரிசானாவின் குரலைக் கேட்க ஒருவருக்கும் மனம் வரவில்லை.

இரண்டொரு தவணைகளுக்குப் பிறகு, 2007ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் திகதி நீதிபதி அப்துல்லாஹ் அல்-றொசைமி தலைமையில், மூவரடங்கிய குழு ரிசானாவை கொலைகாரி என முத்திரையிட்டு சிரச்சேதத்திற்கு ஆணையிட்டது. ரிசானா தரப்பினர் விரும்பினால் மேல் முறையீடு செய்யலாம் என்றும் அது அறிவித்தது. அதுவரை அவளுக்கு சரியான சட்ட ஆலோசனை தரப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து அது செய்தியாக வெளி உலகத்திற்குத் தெரிய வந்ததும் உலகம் விழித்தது. பல திசைகளில் இருந்தும் எதிர்ப்பு வந்தது. பல தொண்டு நிறுவனங்கள் இவளுக்காக வாதாட வழக்கறிஞர்களை அமர்த்தி செலவழிக்கவும் முன்வந்தன. ஹாங்காங்கில் உள்ள மனித உரிமை இயக்கம், தன் செலவில் பொறுப்பெடுத்து வழக்காடத் துவங்கியது. சில இலங்க உள்ளூர் பிரமுகர்களும் பொருளுதவி வழங்கினர். செலவு சில லட்சம் ரியால்களைத் தொட்டது.

இந்த இடத்தில் நாம் ஒன்றை ஆராய வேண்டும். மேடம் தனக்கும், ரிசானாவிற்கும் காலையில் வாக்குவாதம் நடந்தது என்று குறிப்பிட்டாள். ரிசானா சவூதிக்கு வந்து 5 வாரங்கள் மட்டுமே ஆகியிருந்தது. வாதாடும் அளவிற்கு அவளுக்கு அறபி மொழி ஆற்றல் வந்துவிட்டதா? இல்லை துணிவுதான் உண்டா? குடிசையில் பிறந்து வளர்ந்து மாடமாளிகையைப் பார்த்து வாய் பிளந்து மயங்கி நிற்கும் பெண் அவள்.

எந்த நீதிமன்றத்திலும் எடுபடாத வாதம் இது. அடுத்து கழுத்தை நெறித்துக் கொன்றாள் என்றால், பிரேத பரிசோதனை செய்யப்பட்டதா? மருத்துவ அறிக்கை உண்டா? இல்லை. பின் எப்படி இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் ஓர் உயிரைப் பலி வாங்க முடியும்?

மேலும், சர்வதேச சட்டத்தின்படி, 18 வயதிற்கு உட்பட்டவர்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அதன் அடிப்படையில் அவளைக் கொல்ல முடியாது என்பது உலகின் வாதம். ஆனால், அந்த நாட்டில் எதுவும் எடுபடவில்லை - எடுபடாது. அவர்களைப் பொருத்த வரையில், மருமகள் உடைத்தால் அது பொன் குடம்தான்.

மேலும், ரிசானாவின் பணி உறுதிப் பத்திரத்தில், வீட்டுப் பணிப்பெண் என்றுதான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறதே தவிர, குழந்தையைப் பராமரிக்கும் Nanny என்று குறிப்பிடப்படவில்லை. சமையல்காரனைத் தோட்டக்காரனாகப் பாவித்து, செடி கொடிகள் கருகிப் போய்விட்டன என்று கூறி போலீசில் தள்ள முடியாது.

பொதுவாக அறபு நாட்டில் பணிக்கு வருபவர்களை அடிமைகளாகப் பாவிக்கும் பழக்கமே அதிகம். அதற்கும் மேலாக, இவர்கள் அடிமையை கவுரவரப்படுத்திய திருநபியின் போதனையைப் போற்றுபவர்கள் தாங்கள் என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும் குறைச்சல் இல்லை.

பணிக்கு வந்து 18 நாட்கள் மட்டுமே ஆகிவிட்ட, வேலை செய்து எந்த முன்னனுபவமும் இல்லாத பெண்ணிடம் தன் மழலையை விட்டுச் செல்வது எவ்வளவு பொறுப்பற்ற தனம் என்பதை உலகம் விளங்கியும், அறபுலகம் மட்டும் விளங்கவில்லை. காரணம் ஆணவம். இதே வழக்கு மேல் நாட்டில் நடந்திருந்தால், பெற்றோரின் கவனயீனமே இந்த மரணத்திற்குக் காரணம் என்று கூறி, பெற்றோரே தண்டிக்கப்படுவர் - இல்லை கண்டிக்கப்படுவர்.

இக்கட்டுரையை வாசிப்பவர்களில் பெரும்பாலோர் வளைகுடாவில் பணியாற்றுபவர்கள்தான். அவர்களிடமிருந்து இந்த வழக்கு பற்றிய எண்ணங்களை அறிய விரும்புகிறேன். உள்ளே இருக்கும் உங்களுக்கு வெளியில் இருக்கும் எங்களை விட விபரம் அதிகம் தெரியும். சில ஆக்கப்பூர்வமான கருத்துக்களின் சாரம் மனித உரிமை இயக்கத்தின் ஆவணத்தில் பதியப்படலாம்.

ரிசானாவின் கதை எனக்குப் புதிதல்ல. இந்த ஏழு வருட காலத்தில், ஆங்கிலத்தில் சில கட்டுரைகளை இலங்கை தினசரிகளிலும், வெளிநாட்டு இணையதளங்களிலும் நான் எழுதியுள்ளேன். இங்கு இஸ்லாமிய ஷரியா சட்டத்தை விமர்சிப்பது எனது நோக்கமல்ல. ஆனால், ஷரியா சட்டம் என்பது தீர விசாரிக்காது தரப்படுவதில்லை. இஸ்லாமிய கலீஃபாக்களின் ஆட்சி எல்லோராலும் பாராட்டப்படுவதற்குக் காரணம், அவர்கள் ஒருபோதும் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று செயலாற்றியதால்தான்.

வழக்கமாக, சவூதியில் மரண தண்டனை தீர்ப்பு அறிவித்தால், மூன்று மாதங்களில் அது நிறைவேற்றப்பட்டு விடும். ஆனால், ரிசானாவின் விடயத்தில் அது 5 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டது. காரணம், உலகத் தலைவர்கள் பலர் ரிசானாவிற்காக வாதாடினார்கள். இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ், ஐ.நா.வின் செயலாளர், இலங்கையின் ஜனாதிபதி போன்ற பலர் கருணை மனுவை சமர்ப்பித்தனர்.

ஆனால் சவூதி அரசோ - நீதிமன்றமோ இறங்குவது போல் பாவனை காட்டி ஏமாற்றிவிட்டது. அவர்கள் கூற்று, ரிசானா குற்றத்தை ஒப்புக்கொண்டாள்; மேல்முறையீடு காலதாமதமாகிவிட்டது என்பது. எந்த நிலையில் ரிசானா குற்றத்தை ஒப்புக்கொண்டாள்? அவளுக்கு சட்ட அறிவு உண்டா? மொழி அறிவுதான் உண்டா? ஆடு மேய்க்கும் ஓர் இடையன் உயிர்ப்பலி கேட்கும் வழக்கில் மொழிபெயர்ப்பாளனாக முடியுமா? அவருக்கு அந்த அங்கீகாரம் உண்டா? ஒருமுறை வந்த மலையாளி மீண்டும் வரவேயில்லையே, ஏன்? இப்படி பல ஓட்டைகள் இவ்வழக்கில் உள்ளன. அதனால்தான் உலகம் ரிசானாவிற்காகப் பேசியது.

மேலும், சவூதி முறைப்படி, குழந்தையின் வீட்டாருக்கு இழப்பீட்டுப் பணம் கொடுக்க பலர் முன்வந்தும் அவர்கள் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. இறைவன் அவர்களுக்கு இறந்த மழலைக்குப் பின்பும் குழந்தையைக் கொடுத்தும் அவர்கள் மனம் மசியவில்லை. கழுத்தை நெறித்துக் கொன்றதற்கான எந்த மருத்துவ அத்தாட்சியும் இல்லை என்பதும் அத்தாய் அறிந்ததுதானே? பின்பு ஏன் இந்தப் பிடிவாதம்? அவர்கள் எஜமானர்கள். இவர்கள் வேலைக்காரர்கள் என்பதாலா?

எத்தனை நுற்றாண்டுகள் இவர்கள் இப்படி Falcon Jetஇல் பறந்தார்கள்? எல்லாம் அரை நூற்றாண்டுக்கு முன்பு வந்த எண்ணெய் தந்த வாழ்வுதான். எண்ணெய் விலை ஏற்றம் உலகின் கழுத்தை நெரிக்கிறது. இவர்கள் கழுத்து வீங்குகிறது. ஹஜ் பயணத்தை வைத்துதான் இவர்கள் பொருளாதாரம் 1300 வருடங்களுக்கு மேல் ஓடியது என்பது உலகமறிந்தது. ஹஜ்ஜுக்கு முந்திய மாதங்களில் முத்தவல்லிகள் தமிழகம், இலங்கை வந்து நினைவூட்டி ஒப்பந்தம் செய்வர். இன்றோ காலம் மாறிவிட்டது.

1949இல் சவூதியில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது இந்தியா, இலங்கையில் பணம் வசூலித்து அனுப்பினர். இலங்கையில் அதற்கான குழுவின் பொருளாளராக மர்ஹூம் ஹாஜி பி.எஸ்.அப்துல் காதர் அவர்கள் இருந்தார்கள். தென்னிந்தியா - காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி பல்லாக் லெப்பையின் தந்தை அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசானா கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டாள். கொன்றது ஷரியா அல்ல நாடோடி அறபியரின் பழிவாங்கும் குணம் என்றே பல இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். காரணம், உலகமெல்லாம் ஒரு விதமான இஸ்லாமிய வெறுப்பை இவளது மரணம் தூண்டிவிட்டது. அதன் வெளிப்பாடுதான் சவூதியின் வெளி விவகார அமைச்சு என்றுமில்லாதவாறு, “எங்கள் விஷயத்தில் பிறர் தலையிட வேண்டாம்” என்று அறிவித்தது.

இதுவும் ஆணவம்தான். காரணம், சர்வதேச சட்ட அமைப்பின்படி எந்த அரசும் தனக்குக் கீழ் அதிகாரிகள் - நீதிமன்றம் தரும் மரண தண்டனை நியாயமானதுதான் என மனித உரிமை அமைப்பு ஏற்கும்படி இருக்க வேண்டும் என்பது மரபு. சமீபத்தில் இலங்கை சிறையில் கைதிகள் இராணுவத்தினரிடம் மோதி கொல்லப்பட்டதற்கு சர்வதேசம் கண்டனம் தெரிவித்ததோடு, விளக்கமும் கேட்டது. புழல் சிறையில் பிரச்சினை வந்தால் உலகம் கேட்கும்.

நியாயம் வெற்றி பெறும் - தான் விடுதலையாகி, இலங்கைக்கே திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையோடு இறுதி வரை ரிசானா இருந்தாள். அவள் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அவளைச்சந்தித்த மௌலவி ஏ.ஜே.எம். மக்தூம் என்பவர், ரிசானாவின் பெற்றோருக்கு அவளைச்சந்தித்தது பற்றி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், "சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்காக அனுப்பப்பட்டு, கொலைக் குற்றம் சாற்றப்பட்டு, 9-1-2013 அன்று 11 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட உங்கள் மகள் ரிசானாவை, அவளுக்கு அந்தத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஓரிரு மணி நேரத் திற்கு முன்பு சந்தித்தேன். அவளைச்சந்தித்த போது, அவளிடம் உனக்கு இறுதி ஆசைகள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன்.

அந்த நேரத்தில் கூட அவளுக்கு தண்டனை பற்றி தெரியவில்லை. ஊருக்கு நான் எப்போது செல்வது என்று என்னிடம் கேட்டாள். அப்போது தான் அவள் ஊருக்குச்சென்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருப்பதை நான் தெரிந்து கொண்டேன். மரண தண்டனை விதிக்கப்படு கின்ற அந்த நேரத்தில் கூட தன் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக்குற்றத்தை அவள் அறவே மறுத்தாள்.

இன்றைய தினம் உங்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்போகிறார்கள் என்று தடுமாற்றத்துடன் நான் கூறினேன். அவள் பதிலே கூறவில்லை. மௌனமாக இருந்தாள். உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டேன். அப்போதும் 'என்னை மன்னித்து விட்டுவிடச்சொல்லுங்கள்'என்று கெஞ்சியது என் உள்ளத்தை உருக்கி விட்டது" என்றெல்லாம் எழுதியிருக்கிறார்.

இது நிற்க, மீண்டும் ரிசானாவின் வீட்டிற்குப் போவோம். “ரிசானா கடும் பயந்த சுபாவம் கொண்டவள்... ஸ்கூலில் யாரும் அடிச்சா கூட அவள் திருப்பி அடிக்க மாட்டா... கை நீட்ட மாட்டா... ஊட்ட வந்துதான் சொல்லுவா... அவ ஒரு அமைதியான புள்ள... அல்லாஹ்தான் அவளைத் தந்தான்... இப்ப அவனே அவளை எடுத்துட்டான்...” இது தந்தை முகம்மது நபீக்கின் புலம்பல் - அழுகை - வேதனை - சோதனை.

ரிசானாவின் தாய்க்கு அவளது மரணச் செய்தி முதன்முதலாக சொல்லப்பட்டபோது துள்ளியெழுந்த அவள் கூறிய வார்த்தைகள், “மகன், என்ட மகள மௌத்தாக்கி விட்டாங்களா...?” என்பதுதான். “ஜெயில்ல போய் நான் அவள சந்திச்சேன்... அவள பிரிஞ்சி வரும்போது, “ஏன் உம்மா என்னை விட்டுட்டுப் போறீங்க...? எப்ப உம்மா என்னை கூட்டிக்கிட்டுப் போவீங்க...?” என்று கேட்டாள்.

கடைசியா டிசம்பர் 12ஆம் தேதி அவ என்னோட பேசினா... “உம்மா எப்ப உம்மா உங்க கையால ஆக்கின சோறை நம்ம குடில்ல இருந்து சாப்பிடுறது? நீங்க, வாப்பா, தம்பி, தங்கச்சிமார் எல்லோரோடயும் ஒன்டா இருந்து சோறு திங்கனும் போல இருக்கும்மா...” என்டு சொன்னா... அந்த ஆசை நிறைவேறாமலேயே என் புள்ள போயிட்டாளே...”

“என்ட புள்ள இன்னும் உயிரோடு இருக்கு என்டு நான் நம்புறேன்... அல்லாஹ் என்ட புள்ளய தருவான்... இந்த மாசம் என்ட புள்ள எனக்கு கோல் எடுக்கும்... அந்த கோல் வராட்டிதான் நான் என்ட புள்ள மௌத்தா போயிட்டுண்டு நம்புவன்... அது வரைக்கும் நம்ப மாட்டேன்...

சவூதிக்காரன் ஏன் எனக்கிட்ட சொல்லாம என்ட புள்ளையை கொண்டான்...? ரிசானாக்கு மரண தண்டனைன்னு போன்ல மெசேஜ் வந்துச்சி... அதையும் நான் நம்பல்லை... ஏன் அவன் அப்படி செஞ்சான் என்டு கேக்குறன்... சவூதிக்காரன் பதில் சொல்லட்டும் என்டுதான் காத்துக்கிட்டு இருக்கிறன்... அதுக்கப்புறம் நான் அவனுக்கு பதில் சொல்லுவன் பாருங்க!

முழு நாடுமே என்ட புள்ளைக்காக துஆ செய்திச்சி... எல்லோருக்கும் நன்றி சொல்றேன்... ஏழரை வருஷமா அவ (மேடம்) என்ட புள்ளய மன்னிக்கல்ல... என்ட புள்ள குற்றம் செஞ்சாத்தானே அவ மன்னிக்கனும்...? அவதான் குற்றமே செய்யலையே...? அவ எந்தக் காரணம் கொண்டும் இந்தக் குற்றத்தை செய்ய மாட்டா என்டு நான் சத்தியம் பண்ணுவேன்... அவள் என்ட புள்ளய மன்னிக்காட்டியும் நான் அவளை (மேடம்) மன்னிக்கன்...” (என்ன பெருந்தன்மை!)

“ஏழரை வருசமா கல்லை விழுங்கிட்டு கக்க முடியாதளவு என்ட புள்ளைக்காக ஏங்கியிருக்கேன்... ராத்தா எப்பம்மா வருவா என்டு என்ட புள்ளையல் கேக்குதுகள்... அதுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்...? என்ட புள்ள ரிசானாக்கு வந்த நிலை யாருக்கும் வந்துடக் கூடா... குப்பை கொட்டினாலும் பரவாயில்ல...இந்த நாட்டுக்குள்ளேயே ஏதாவது செஞ்சு கொடுங்க ஜனாதிபதி…”

குழம்பிய மனநிலையில் பேசும் ரிசானாவின் தாயிடம், “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா...?” என்று கேட்டால், “உம்... ரிசானா வேண்டும்". கொடுக்க முடியுமா உங்களால் வாசகர்களே…?

“குற்றம் செய்யாத எனக்கு ஏன் உம்மா இந்த கோரத் தண்டனை?”

குரல் வளை அறுக்கப்பட்டாலும் இந்தக் குரல் காலமெல்லாம் உலகெங்கும் ஒலிக்கும்! ஒலித்துக்கொண்டே இருக்கும்!!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கண்களில் கண்ணீர் வருகிறதுRe:...
posted by: Noohu (Chennai) on 25 January 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25213

அந்த தாய் கூறிய வார்த்தைகளை படிக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது. அல்லாஹ் ரிசானாவின் பாவங்களை மன்னித்து அந்த பெண்ணிற்கு ஷஹீதுடைய பதவியை வழங்கி மேலான சுவனபதியை வழங்குவானாக. ஆமீன். கண்ணீருடன் நூஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. சட்டம், தீர்ப்பு, தண்டனைகள்...! தரப் பரிசோதனை தேவைதானா...?
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) on 25 January 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25214

சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகாலம் சவூதி அரேபியாவில் பணியாற்றி அங்குள்ள பலதரப்பட்ட மனிதர்களோடு பழகியவன் நான். அரசாங்கத்தில் (வஸீர்) அமைச்சர் பொறுப்புக்கு கீழே உள்ளவர் வீட்டில் இரண்டரை வருடம் பணியாற்றி நன்மதிப்பை பெற்றவன் நான். பணியாட்கள் அல்லது பணிப் பெண்கள் விஷயத்தில் சவூதி மட்டுமல்ல பரவலாக எல்லா நாடுகளிலும் கொடுமைகள், கொத்தடிமைத்தனம், கொலைகள் என நடந்து வருவதை யாராலும் மறுக்க இயலாது. இதே சவூதி அரேபியாவில் பணிப்பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட்டும், மனித நேய அடிப்படையில் பல உதவிகளைப் பெற்றும் வீட்டுப் பொறுப்புக்களை நிர்வகித்து வரும் எத்தனையோ இலங்கை பணிப்பெண்களை நான் பார்த்திருக்கின்றேன்.

பாதிக்கப்பட்டவன் நிலையில் இருந்து பார்த்தால் தான் பாதிப்புக்கான இழப்பீடும், மதிப்பீடும் தெரியும். கட்டுரையாளர் இலங்கையில் வசிப்பவர் எனவே அந்த நாட்டுப் பெண்ணுக்காக பரிந்துரை செய்யப்பட்டு வரும் ஊடகச் செய்திகள் மற்றும் நாளேடுகள் ஆகியவற்றால் மனம் கசிந்து சம்பவத்தை விவரிக்கும்போதே ஒருவகை பரிவோடும், கனிவோடும் விவரித்திருக்கின்றார்.

கொடுமைகள் எங்கும் நடக்கும் ஆனால் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் எனும் குர்ஆன் சட்டத்தைக் கற்றறிந்து கடுகளவும் அடி சருகாமல் மிகுந்த கவனத்தோடு கையாண்டு வரும் கண்ணியமிக்க உலமாக்களை காழிகளாக (நீதிபதியாக) பொறுப்பில் அமர்த்தி மன்னரின் மகனானாலும் மறை கூறும் சட்டம் யாவருக்கும் பொதுவானதே என பல்லாண்டு காலமாகப் பேணி வரும் சவூதி அரசாங்கத்தையும், அதன் வருமானத்தையும் கட்டுரையாளர் விமசித்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை!

பிள்ளைக்கு பால் புகட்டும் போது அப்பெண் அருகிலேயே இருந்திருக்க வேண்டும். அது அவளது பொறுப்பு. ஆனால் அப்பெண்மணியோ பால் புட்டியைக் குழந்தையின் கையில் கொடுத்து விட்டு வேறு வேலைக்குச் சென்று விட்டாள். வந்து பார்த்த பின்னர்தான் நிப்பிள் மூக்கில் ஏறி பால் மூச்சுடன் கலந்து மழலையின் மரணத்திற்கு காரணமாயிற்று. இதைத்தான் உலமாக்கள் மற்றும் நீதிபதிகள் உறுதி செய்து வேலைக்காரியின் கவனக் குறைவால்தான் உயிரிழ்ப்பு ஏற்பட்டது... எனவே, அவள் தன் கடமையிலிருந்து தவறிவிட்டாள்... என தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

கட்டுரையாளர் கூறுவது போல ஏதோ ஒரு ஆடு மேய்ப்பவரின் மொழிபெயர்ப்பை மட்டும் அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழக்கப்பட்டது என்பது தவறு. சவூதி அரேபியாவில் மார்க்கப் பணியாற்றி வரும் இலங்கையைச் சார்ந்த எத்தனையோ ஆலிம்கள், மொழிபெயர்ப்பாளர்கள் இன்று வரை பொறுப்பில் இருந்து வருவது கட்டுரையாளருக்கு தெரியாதது வருத்தத்திற்குரியரியதே!

மரண தண்டனை என்பது அவ்வளவு சுலபமாக வலுவான ஆதாரம் மற்றும் சாட்சிகள் விசாரணைகள் என்றில்லாமல் நிறைவேற்றப் படுவதில்லை. மற்ற நாடுகள் பல விதமாக (கொடூரமாக) மரண தண்டனையை நிறைவேற்றும்போது சவூதி அரேபியாவில் இன்றளவும் மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டு வருவதை ஊதி பெரிதாக்கி ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.

இக்கட்டுரை அந்த பணிப்பெண்ணின் கவனக்குறைவால் குழந்தையை இழந்த தம்பதியினரை குற்றம் சாட்டியும், இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் முழுக்க முழுக்க இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் வழங்கப்பட்ட நீதியைக் குறை கூறுவதைப் போன்றும் அமைந்திருப்பதால் ஏற்புக்குரியதல்ல என்பது எனது பணிவான கருத்து.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ஆனால் அந்த மார்க்கத்தை அனர்த்தமாக்கும் அரபகம்
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 25 January 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25215

ரிசானாவின் சோக கதையை ஒரு குறும்படமாக எடுத்து ஷரியத் சட்டத்தை சரிய செய்த சவுதி அரேபியாவின் அத்து மீறல்களை அம்பலப்படுத்த வேண்டும். இவர்கள் செய்த அடாவடித் தனத்தால் இஸ்லாமிய ஷரியத் சட்டத்துக்கும் அல்லாஹ்வின் சட்டத்துக்கும் இழுக்கு தேடி தந்து விட்டார்கள்.

நான் இந்த விஷயம் BBC யில் ஒலி பரப்பபட்டபோது நேயர் நேரத்தில் எனது விமர்சனத்தை அளித்திருந்ததை ஆசிரியர் அவர்கள் செவியுற்றிருக்கலாம். ஷரியத் சட்டத்தை குறை சொல்வதில் அர்த்தமில்லை. அநியாயமாக ரிசானாவை கொலை செய்தவர்களின் குறை தான் இது

ஜெயராஜ் என்பவர் எழுதிய கட்டுரையும் சமீபத்தில் இலங்கை அட்டர்னி ஜெனரல் ஒருவர் கொடுத்த அற்புதமான அலசல் கட்டுரையையும் நான் படித்ததால் உங்கள் கட்டுரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் ரிசானாவின் தாய் மகளுக்குள் நடந்த சம்பாஷனை உள்ளத்தை i உருக்கியது.

சவுதி அரேபியாவில் பணியாற்றியவன் நான். இகாமா இல்லை என்று சிறையில் 6 நாட்கள் அடைக்கப்பட்டவன். அந்த 6 நாட்களில் நான் அனுபவித்த கொடுமைகளை சொல்லி முடியாது. ஆனால் 5 வேளை தொழுவதற்கு அங்கு வசதி உண்டு, ஜும்மா தொழுவதற்கும் ஏற்பாடு உண்டு.

இதயத்தை இழந்து விட்டு இஸ்லாத்தை கையில் ஏந்தி கொண்டு என்ன செய்ய முடியும். நபிகள் நாயகம் மிக இரத்தின சுருக்கமாக ஒன்றை சொல்வார்கள். அறிந்து கொள்ளுங்கள்.உடலில் ஒரு சதை துண்டு உண்டு அது சரியானால் உடல் முழுவதும் சீராக இருக்கும் அது கெட்டு விட்டால் உடல் முழுவதும் கெட்டு விடும். அது தான் இதயம் என்றார்கள். இது இதயம் உள்ளவர்களுக்கு சொல்லப்பட்டது. இதயத்தை கல்லறைக்கு அனுப்பிவிட்டு இன்னொரு இதயத்தை மண்ணறைக்கு அனுப்பி விட்டு நம் எல்லோருடைய இதயங்களையும் ஒரு நிமிடம் இயங்க முடியாமல் ஆக்கி விட்ட வர்களுக்கு என்ன சொல்ல முடியும். நியாய தீர்ப்பு நாள் வரும் வரை பேசப்படும் இந்த சோகமான செய்திக்கு அந்த இறுதி தீர்புநாளின் அதிபதிதான் தீர்ப்பு கொடுப்பான். அது நிச்சயம் இந்த உலகத்திலேயே நிதர்சனமாக காட்டப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அநியாயமாக கொலை செய்யப்பட பெண்ணுக்கு அல்லாஹ் ஷஹீதுடைய பதவியை கொடுத்து மேலான சுவர்க்க பதியை கொடுத்து அருள்வானாக.ஆமீன். இந்த நேரத்தில் ஜனாதிபதி அவர்கள் பத்து லட்சம் ரூபாய் அந்த குடும்பத்துக்கு கொடுத்தும் அவர்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை அளித்து உதவி உள்ள செய்தியும் மனதுக்கு நிம்மதி தருகிறது. இஸ்லாமிய அமைப்புகளும் கொடை வள்ளல்களும் அந்த குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும். உயிருக்கு விலை பேச முடியாது என்றாலும் விழி நீர் துடைப்பதற்கு ஒரு கைக்குட்டயாவது கொடுக்கவேண்டாமா. ஆசிரியர் அவர்கள் எனது சார்பாக அந்த குடும்பத்துக்கு இலங்கை ரூபாய் 10,000 கிடைக்க செய்யுங்கள். ஒரு அணில் மண் சுமந்து உதவி செய்ய முயற்சித்த கதைதான். அல்லாஹ் அந்த குடும்பத்துக்கு நல்ல பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்...

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: Riluvan (Michigan) on 25 January 2013
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 25216

கவனக்குறைவு வேறு திட்டமிட்டு கொலை செய்வது வேறு.. இந்தப்பெண் வேண்டும் என்றே குழந்தையை கொன்றிருந்தால் மரணத்தண்டனையை பற்றி யோசிக்கலாம்.. ஆனால் unglazed செய்தியில் new gale கவனக்குறைவு என்றே சொல்லி இருக்கிறீர்கள்.. கவனக்குறைவுக்கு மரணத்தண்டனையா? அபத்தமாக இல்லை?

கவனக்குறைவு யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். நீங்கள் சவூதியில் நீதிகள் சரியாக வழங்கப்படுகிறது என்று சொல்லுவதே அபத்தமாக இருக்கிறது. இவர்கள் வீரம் எல்லாம் கீழை நாடுகளில் இருந்து வருபவர்களிடம் மட்டுமே. அறுபது வயது சவூதிகள் பனிரண்டு வயது சிறுமிகளை பணத்தை faiths திருமணம் என்ற பெயரில் விலைக்கு vaangugiraan.. இவர்களை கண்டிக்கவில்லை.. கொத்தடிமைத்தனத்தை ஆதரிக்கும் சமுதாயத்தை என்ன சொல்வது.. நாம்தான் சவ்வோதிகளை தலையில் தூக்கிவைத்து ஆடுகிறோம்.. இவர்களிடம் குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட இருப்பதில்லை..

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. குற்றவியல் தண்டனைகள் சில விளக்கங்கள்!
posted by: M.N.L.முஹம்மது ரபீக் (காயல்பட்டினம்) on 25 January 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25219

தற்போது ரிசானாவின் தண்டனையை காரணமாக வைத்து இணையத்திலும் பத்திரிக்கை உலகிலும் பலரும் இஸ்லாமிய சட்டங்கள் பிற்போக்கு தனமானவை என்ற வாதத்தை வலிந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். ரிசானாவின் மேல் இவர்களுக்குத்தான் பாசமும் அன்பும் உள்ளது போலவும் முஸ்லிம்கள் மரக்கட்டைகளைப் போன்று உணர்ச்சியற்று போய் விட்டார்கள் என்றும் எழுதாத பதிவர்கள் இல்லை.

இவர்களுக்கெல்லாம் (மாற்று கருத்துடைய காவி சிந்தனையாளர்கள்) ரிசானாவின் மீது உள்ள பாசத்தை விட இஸ்லாமிய சட்டங்களை எள்ளி நகையாட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள். விமர்சனங்களை வைப்பதை நாம் குறை காணவில்லை. அது எப்படிப்பட்ட விமரிசனமாக இருக்க வேண்டும்? தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவரும் முரண்பட போவதில்லை. அது இஸ்லாமிய சட்டமாக இருந்தாலும், உலக சட்டங்களாக இருந்தாலும் தண்டனை முறைகளில் மாற்றங்கள் இருக்கலாமே யொழிய குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

இங்கு ரிசானா விஷயத்தில் தண்டனையை நிறைவேற்ற எடுத்துக் கொண்ட வழி முறைகள், மருத்துவ அறிக்கைகள், வழக்காடு மன்றத்தின் செயல்பாடுகள் இவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நாம் வாதத்தில் வைக்கலாம். அது நியாயமானதே. ஆனால் கொலைக்கு கொலை, கண்ணுக்கு கண் என்ற இந்த சட்டமே காட்டு மிராண்டி தனமானது என்ற வாதத்தை வைப்பவர்களுக்கு சில விளக்கங்களை சொல்கிறேன்.

சவுதி அரேபியாவைப் பொருத்த வரை தொழில்கள் அனைத்தும் வெளி நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. கடை வேண்டுமானால் சவுதிகளின் பெயர்களில் இருக்கலாம். மாதம் 300 ரியாலோ 500 ரியாலோ சவுதிகளுக்கு கொடுத்து விட்டு முழு தொழில்களையும் கவனிப்பது இந்திய, பாகிஸ்தானிய, பங்களாதேசத்துக் காரர்கள் தான். குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்கள்தான் சவுதிகளின் நேரடி பார்வையில் இருக்கும்.

தற்போது நான் அலுவலக வேலையில் இருக்கிறேன். 10 வருடங்களுக்கு முன்பாக ஒரு ஃபர்னிசர் ஷோ ரூமில் சேல்ஸ் மேனாக இருந்தேன். தினமும் நடக்கும் அனைத்து வியாபார பணமும் என்னிடமே இருக்கும். ஒரு நாளுக்கு 20000 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் சில நேரம் 50000 ஆயிரம் ரியால்(7 லட்சம் ரூபாய்) கூட எனது பேண்ட் பாக்கெட்டில் இருக்கும். தொழுகை நேரங்களில் கடை பூட்டப்படும் ஆகையால் பணத்தை கடையில் வைக்க வேண்டாம் என்று எனது ஓனர் சொல்லியிருப்பதால் பணம் என்னிடமே இருக்கும். பல வருடங்கள் வேலை செய்தும் ஒரு முறை கூட எனக்கு திருடர்களிடமிருந்து எந்த பிரச்னையும் வந்ததில்லை. மறுநாள் இந்த பணத்தை பேங்கில் செலுத்தி விடுவேன். இந்த அளவு பாதுகாப்போடு நான் வேலை செய்ததற்கான காரணமே சவுதி நாட்டின் சட்டங்கள் தான்.

எனக்கு மட்டும் அல்ல இந்த பிரச்னை. சவுதியில் முழுவதும் கடைகளில் நிற்பவர்கள் அதிகம் நம்மவர்களே! கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற சட்டம் இருப்பதால் தான் வெளிநாட்டவர்களால் இந்த அளவு நிம்மதியாக தொழில் செய்ய முடிகிறது. இந்த சட்டத்தை நீக்கினால் அதனால் பாதிக்கப்படுவதும் இந்திய பாகிஸ்தானிய மக்களே. ஏனெனில் ஆப்ரிக்கர்களின் கை வரிசை நிறைந்த நாடு இது. கொஞ்சம் சட்டத்தை தளர்த்தினால் கடைகளில் புகுந்து துப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்கும் சம்பவம் வெகு இலகுவாக நடக்கும். இந்த அளவு சட்டம் இருக்கும் போதே அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நடந்து வருகிறது. எனவே நமது நாட்டைப் போலவே எல்லா நாட்டு சூழ்நிலைகளும் இருந்து விடும் என்று எண்ணக் கூடாது.

மைனர் பெண்ணுக்கு தண்டனை அளிக்கலாமா? என்றும் கூறுகின்றனர். இஸ்லாம் 18 வயதை நிர்ணயிக்கவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் குழந்தை பெறும் பக்குவத்தை அடைந்து விட்டாலே அவர் மேஜராகி விடுகிறார். மும்பை பெண் கற்பழிப்பில் ஈடுபட்ட ஒருவன் 18 வயதுக்கு குறைவானவனே! அவனையும் தூக்கில் இட வேண்டும் என்று பலர் இன்றும் கூறி வருவதைப் பார்ககிறோம். ஆனால் ரிசானா விஷயத்தில் மாறுபட்ட கொள்கையை வைப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ரிசானாவை மன்னரே மன்னித்து அவரது அதிகாரத்தை பிரயோகித்து வெளியாக்கியிருக்கலாமே என்று பலர் கூறுகின்றனர். இதற்கு உதாரணமாக மன்னர் குடும்பத்திலேயே நடந்த ஒரு நிகழ்வை பார்ப்போம். (இக் கருத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. (முன் பதிவின் தொடர்ச்சி )
posted by: M.N.L.முஹம்மது ரபீக் (காயல்பட்டினம்) on 25 January 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25220

2002 காலப்பகுதியில் சவுதி அரேபியா ரியாத் பிரதேசத்தில் இளவரசர் நாயிப் பின் சவூத் (15 வயது ) தனது சமவயதுடைய ஒரு நண்பரைக் கொலை செய்தபோது இளவரசருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை வருடங்கள் அரச குடும்பம் கொலை செய்யப்பட்டவரின் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதிவரை அவர்கள் மன்னிக்க முன்வராதபோது இளவரசர் நாயிபுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக உரிய இடத்திற்கு அழைத்துச்சென்று, தண்டனை நிறைவேற்றுவதற்காக தயாரான வேளை கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் அமீர் நாயிப் அல்குர்ஆனை முழுக்க மனனம் செய்வதாக வாக்களித்தால் தாம் அவரை மன்னிப்பதாகக் கூறினர். அதன்படி கடைசி நிமிடத்தில் அவரது தண்டனை நிறுத்தப்பட்டது.

ஒரு சவுதி குடும்பம் விபச்சாரம் செய்தபோது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை. மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்டமாட்டார்கள். இது போன்று பல நிகழ்வுகள் சவுதியில் இடம்பெற்றுள்ளன.

இவை சவுதியின் நீதித்துறையின் சுதந்திரமான நிலையையே எடுத்துக்காட்டுகின்றன.

மன்னரின் குடும்பத்தினருக்கே இந்த நிலை என்றால் நம்மைப் போன்ற வெளி நாட்டு பிரஜைகளின் நிலையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. சட்டத்தை திருத்தினால் என்ன என்ற ஒரு வாதமும் வைக்கப்படுகிறது. இந்த குர்ஆனின் சட்டமானது இறைவனால் அருளப்பட்டதாக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். இதை திருத்துவதற்கு மனிதர்கள் எவருக்கும் உரிமை கிடையாது. உலக முடிவு நாள் வரை இந்த சட்டங்கள் யார் எதிர்த்தாலும் மாற்றப்படாமலேயே இருந்து வரும். ஒரு உயிர் போனாலும் அதனால் பல உயிர்கள் பாதுகாக்கப்டுகிறது என்பதாலேயே இந்த சட்டத்தை மனித குலத்துக்கு அளித்ததாக இறைவன் குர்ஆனிலே கூறுகிறான். எனவே சட்டத்தை அமுல்படுததுவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை சரிகாணுவோம். இறைவனின் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய இடம் தர மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.

மக்ஸூமி குலத்தைச் சேர்ந்த ஃபாத்திமா என்ற பெயருடைய ஒரு பெண் திருடியபோது தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக நபித் தோழர் உசாமா அவர்கள் நபி அவர்களிடம் பரிந்து பேசினார்கள். அப்போது நபி அவர்கள், "உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்களின் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். உயர்ந்தவர்களை விட்டு விடுவார்கள். எனவே தான் அவர்கள் அழிந்துபோயினர். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! என் புதல்வி ஃபாத்திமாவே இந்தக் குற்றத்தைச் செய்திருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்'' என்றார்கள்.

அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6787

நன்றி:
சுவனப் பிரியன்
http://suvanappiriyan.blogspot.in/


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:...
posted by: mukarrama mohideen (chennai) on 25 January 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25221

கட்டுரையை படிக்க படிக்க கட்டுபடுத்த முடியாத கண்ணீருடன் இதை எழுதுகிறேன். கொடிய விரோதியையும் தம் கருணை உள்ளத்தால் இயல்பாய் மன்னித்தருளிய மாநபி பிறந்த மண்ணிலா இக்கொடுமை! தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ்வின் முன்னிலையில் எந்த மன்னாதி மன்னனும் தப்ப முடியாது.

வல்ல அல்லாஹ் அந்த பெண்ணின் பாவங்களை பொறுத்தருளி சுவனபதியில் சேர்த்தருள்வானாக! ஆமீன். அந்த பெண்ணை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்க்கு பொறுமையை கொடுத்து நல்ல வழியையும் காணபிப்பானாக! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:... வேதனை
posted by: Arul (Chennai) on 25 January 2013
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 25222

தங்களின் கட்டுரையை படித்தேன், அது  இதயத்தை  பிழிந்தது ..  என் மனசாட்சி உறுத்துகிறது ..  ஆழமான   வேதனை என்னை ஆட்கொண்டுள்ளது அருள்செழியன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:...
posted by: Mohamed Ali (Madinah Al Munawwara) on 25 January 2013
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25223

ரசனாவிர்க்கு மன்னிப்பு கோர கேட்டு சவுதி அரசாங்கமே (ஒரு ஆமிர்) 3.5 மில்லியன் ரியால் (35 லட்சம்) தருவதாக பாதிக்கபட்ட பெற்றோரிடம் கூறியும் அதை மறுத்துவிட்டதாக ஒரு இலங்கை நபர் தெரிவித்தார். (அல்லாஹு அஹ்லம்).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. கொலையா?கவனக்குறைவா?இயல்பாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதா?
posted by: NIZAR (KAYALPATNAM ) on 26 January 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25225

தனது கட்டுரைகளில் செய்திகளை ஒரு கோர்வையாக,அனைத்தையும் உள்ளடக்கிய பாணியில் தருவது போல் சாஜஹான் காக்காவின் இந்த கட்டுரையும் அமைந்து இருக்கிறது.இவருடைய கட்டுரைக்கு மறுப்பு தெர்வித்து இருக்கும் சகோதரர் ரபீக் அவர்கள் இலங்கையில் இவர் வசிப்பதனால் அந்த பாசத்தில் பாதிக்கப்பட்ட ரிசானாவுக்கு சாதகமான அமைப்பில் கட்டுரை உள்ளது என்று கருத்து பதிவு செய்து உள்ளார்.அதையே திருப்பி நீங்கள் இருபது வருடங்களுக்கு மேலாக சவுதியில் இருப்பதனால் அந்த நாட்டுக்கு சாதகமாக கருத்து சொல்கிறீர்களா?எனவே வசிக்கும் இடம் மேட்டர் இல்லை,நடந்த தலைவெட்டு நியாமானதா?முறையான சட்ட விதிமுறைகள் பின்பற்ற பட்டதா?பாதிக்கபட்டவர் குற்றவாளியில்லை என நிருபிப்பதற்கு சட்டவிதிகளுக்கு உட்பட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதா?மொழிபெயர்ப்பு சரியாக நடைபெற்றதா?போன்ற விசயங்கள்தான் உலகளவில் அலசி ஆராயபடுகின்றன.இதைபோன்ற நிலைமையில் ஒரு அமெரிக்கரோ அல்லது இங்கிலாந்து நாட்டவருக்கு ஏற்பட்டால் என்ன நடக்கும்?என்பதல்லாம் தான் உலக அளவில் பேச்சாக உள்ளது.

கொலைக்கு கொலைதான் என்ற இஸ்லாமிய சட்டத்தை குறைகூறவில்லை?அதை இன்றைக்கு இந்தியா போன்ற நாடுகளில் கூட நிறைவேற்ற வேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மேலும் இந்த ரிசானாவிட்கு கொடுக்கப்பட்ட தண்டனை கவனக்குறைவால் அந்த குழைந்தை இறந்ததற்காக கொடுக்கப்பட்டதாக விளக்கி உள்ளீர்கள்,கவனக்குறைவால் ஏற்படும் பலிக்கு பலிதான் இசுலாமிய சட்டமா?என்று அமரிக்காவில் இருந்து கருத்து பதிவு செய்திருக்கும் ரிளுவான் கருத்து சிந்திக்க கூடியதாக உள்ளது. வாகனத்தை ஒட்டி செல்பர்களின் கவனகுரையால் எத்தனையோ உயிர்கள் பலியாகுகிறது அதற்காக ஓட்டுனருக்கு மரணதண்டனையா?உண்மையிலே இதற்கு எனக்கு விளக்கம் தெரியவில்லை சகோதரர் ரபீக் விளக்கம் தெரிந்தால் சொல்லவும்.சவுதிகள் இதயத்தை தொலைத்துவிட்டு இசுலாத்தை கையில் ஏந்துபவர்கள் என்ற மக்கி நூகு மாமா அவர்களின் வார்த்தை அவர்களுக்கு சவுதியில் ஏற்பட்ட பாதிப்பை வெளிக்காட்டுகிறது.

அந்த குழந்தையின் தாய் மன்னித்து இருந்தால் உலகத்தின் அனைவரின் உள்ளதையும் ஆனந்த படுத்தி இருப்பாள்,சவூதிமன்னர் ,ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் பரிந்துரை,இறுதி வரை எதிபார்த்த உலக அமைப்புகளின் அணைத்து வேண்டுதலையும்,தண்டிப்பதை விட மன்னிப்பதே மேல் என்று இஸ்லாத்தின் வழிகாட்டுதலை சொல்லியும் நிராகரித்த குழந்தையின் தாயின் உள்ளத்தில் ஏன்?அப்படி ஒரு பிடிவாதம் இருந்தது என்பது இறைவனுக்கே வெளிச்சம்.எனவே இதை பற்றி அதிகம் விவாதிப்பதை விட அந்த ரிசானாவின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய இறைவனிடம் இறைஞ்சுவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. ALLAH KNOWS THE BEST
posted by: ABU AASIYA MARYAM (HONG KONG) on 26 January 2013
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 25226

யாஅல்லாஹ் இந்தத் தீர்ப்பு சரியானதாக இருந்தால் இந்தத் தண்டனையை அவரது குற்றத்திற்கான பரிகாரமாக மாற்றி ஜன்னதுல் பிர்தவ்ஸில் அந்தப் பெண்மனிக்கு வாழ்வளிப்பாயாக. இந்தத் தீர்ப்பு வேண்டுமென்றே அநியாயமாக வழங்கப்பட்டிருந்தால் அவர்களைத் தண்டிப்பதோடு இன்று இஸ்லாமிய ஷரீஆ பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்த உயிர் நீத்த ஷஹாதத் எனும் கூலியை என் சகோரிக்கு வழங்க உன்னை என் உளமுறுக மன்றாடிக் கேட்கிறேன்.

தான் அநியாயமாகக் கொல்லப்பட்டிருந்தால் நிச்சயம் ரிசானாவின் கழுத்தில் வால் வைக்கப்பட்ட நேரம் உன் கருணை இந்த உலகத்தோரின் கருணையை விட மிக நெருக்கமாக இருந்திருக்கும். நான் அநியாயமாகக் கொல்லப்படுகிறேன் என என் சகோதரியின் உருக்கமான உணர்வை எம்மை விட அறிந்தவன். யாஅல்லாஹ் நீதியை நிரூபித்துவிடு. நான் உற்பட அறிந்தோ அறியாமலோ ரிசானாவிற்காக அழுத உள்ளங்களின் பாவங்களை மன்னித்துவிடு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
12. கண்ணீர்.....
posted by: M Fauz (A lAin. UAE) on 26 January 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25227

விமர்சிக்க முடியவில்லை கண்ணீர்தான் வருகிறது.

யால்லாஹ் அந்த பிள்ளைக்கு நல பதவியை கொடுப்பாயாக. அமீன்.

பவுஸ். அல் ஐன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
13. Judiciary in Saudi
posted by: M.M. Seyed Ibrahim (Chennai) on 26 January 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25228

Assalamu Alaikum

I pray that Allaah forgive the sins of Sr. Risaana & elevate her status. I am restricting my comments only to the Judiciary of Saudi. I wanted to mention two points

1) Education & Training of the Judges
2) Independence of the Judiciary

Br. M.N.L Rafeeq has already mentioned example for how independent they are. Let me just say that they are fully independent.

Most of us don't have ideas about the educational systems in Islamic Universities (esp. the Saudi ones). I am doing Bachelors in Islamic Studies (Usool al-Deen). After eight semesters, we have to submit a Thesis (Yes, a research paper even at Bachelor's degree level)

The Master's degree in Islamic Universities is NOT a two-year degree.It is more. And the Master's thesis (say, 40,000 words) is comparable to Ph.D in Indian Universities. One of my non-Saudi teachers had to work (intern) with the Saudi Judges as part of his thesis on Jurisprudence matters related to commercial papers.

In Summary, i just want to say that the judges in Saudi courts are well-educated and are independent.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
14. Re:...
posted by: M. S. Shah Jahan (Colomno) on 26 January 2013
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 25232

Attention; Br M.M. Seyed Ibrahim

The subject in this case and the point in my article is not whether the judges are independent or in-dependent, but whether Rizana's case was properly investigated - handled or not, where as the general opinion is, it is not and the judgement is  biased to favor the localite.

I do not touch the Shariya act here. Even Shariya judgements are not given on flimsy reasons or evidence but it should go to the extend of beyond doubt. In this case from the beginning every thing is shady.

The madam stated she had an argument with Rizana in the morning that induced her to kill the baby. Do you believe that? Is Rizana fluent in Arabic or madam good in Tamil? Madam left the house at 9.30 and the baby reportedly died at 12.30. Would a revengeful person wait 5 hours to commit a murder? There are so many flaws in this case that were against the accuser but, our contention is all were over looked.

Minister Rauff Hakeem in Sri Lanka's parliament on Friday (25) said" Rizana was recruited to do house work not as a baby sitter. So by giving the baby to her to feed, madam committed a mistake". Further like bro Rafeek says, we did not hear from any media that Rizana let the baby to drink the bottle of milk on his own.

Besides, how many white men/women who were sentenced to death were executed? Almost all escaped from the sword due to their countries' intervention. Saudi government yields to them as a reciprocative act to save the miscreant princess who indulge in unlawful acts in host countries especially with women or under the influence of alcohol. Dirty linen of Saudi men are many miles long. Better I do not wash any more.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
15. ரிசானா மரண தண்டனை விஷயம்
posted by: J.S.A. BUKHARI (Dubai) on 26 January 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25234

ஷாஜஹான் காக்காவின் கட்டுரை முழுக்க முழுக்க ஒரு பட்சமாகவே இருக்கிறது என்று மட்டும்தான் நான் சொல்ல முடியும். சந்தேகம் எழுவது இயற்கைதான். அதற்காக நாம் நினைப்பதுதான் சரி என்ற முடிவுக்கு வருவதுதான் சரியல்ல. அல்லாஹுதான் உண்மையை அறிவான்.

இதற்கு மேலும் இரண்டு தரப்பினரையும் குறை சொல்வது என்பது நமக்கு பாவமாக கூட முடியலாம். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இறைவனும் அதற்கு துணை புரிவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
16. சவூதியில் சிரச்சேதம் செய்யப்பட்ட ரிசானாவின் கதை தெரியுமா?
posted by: Mohammed Ibn Abdullah Shahib (Ar Riyadh) on 26 January 2013
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25236

அஸ்ஸலாமு அலைக்கும் Please watch Kuthba bayan held in ஸ்ரீலங்கா கேட்டு தெளிவு பெறவும். உண்மைகள் அனைத்தும் அல்லாஹ்விடம் வெளிச்சமாக உள்ளது with-out no doubts...

Link ... click here


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
17. அங்கு சட்டம் ஒருபோதும் இருட்டறையல்ல...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக் (காயல்பட்டினம்) on 26 January 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25238

ரிசானா எனும் பெண் தவறு செய்தாளா? அல்லது சவுதி நீதித்துறை தவறான தீர்ப்பை வழங்கியதா? என்பது பற்றி நாம் விவாதிப்பது அபத்தம். ஊடகங்கள் பல நிகழ்வுகளை பலவாறு விவரிப்பது வாடிக்கையாகிப் போயிற்று.

கருத்து எழுதிய ஒரு சகோதரரின் கூற்றுப்படி சுமார் மூன்றரை மில்லியன் சவூதி ரியால் இழப்பீடாக தருவதாக முன் வந்தும் அதுவும் ஒரு அமீர் முன் வந்தும் இங்கிலாந்து இளவரசர், இலங்கையின் ஜனாதிபதி, இன்னும் பல உலக தலைவர்கள் கருணை மனுக்கள் அளித்தும் செவிசாய்க்காத ஏற்றுக்கொள்ளாத அந்த தாய் தந்தையர் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்க வேண்டும். மன்னிப்பதும் மறுப்பதும் அவர் தன் உரிமை. ஒரு வேளை அவர்கள் மன்னித்திருந்தால் இன்று ரினாசா விடுதலை செய்யப்பட்டிருப்பாள்.

பாதிக்கப்பட்டவர்தான் கருணை மனுவை ஏற்க முடியும். மன்னிப்பு அளிக்க முடியும். இதுதான் அங்குள்ள சட்டம். அது இல்லாமல் எந்த வித பாதிப்புக்குள்ளாகத ஜனாதிபதியோ? தலைமை பொறுப்பிலுள்ளவர்களோ கருணை மனுவை ஏற்று மன்னிப்பது என்பது எந்த விதத்தில் நியாயம்?

சவூதியைப் பொறுத்த வரை சாலை விபத்தில் பலியானவருக்கு பலிக்குப் பலி என்று சிரச்சேதம் செய்வதில்லை. குற்றத்தின் ஆழம் மற்றும் அதன் பின்னணியை ஆராய்ந்தே தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதுவே உண்மை!

இக்காமா இல்லாமல் வெளியே செல்வது சட்டப்படி குற்றம். இதைக் கடை பிடிக்காமல் மாட்டிக் கொண்டு அப்பாடா.. ஒப்பாடா எனக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. சிறை என்றால் அங்கு மாமியார் வீடு இல்லை என்பதை புரிந்து கொள்வோருக்கு பிரச்சனைகள் ஏதும் வருவதில்லை! வந்ததுமில்லை!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
18. Re:...
posted by: Salai.Mohamed Mohideen (USA) on 27 January 2013
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 25241

(மரணித்து விட்ட ரிசானாவை ) கொடுக்க முடியுமா உங்களால் வாசகர்களே…? என்று கட்டுரையாளர் கேட்பதிலிருந்தே அவர் எந்தளவுக்கு மனம் கசிந்து இதனை வடித்திருக்கிறார் என்பதனை உணர முடிகின்றது. வல்ல ரஹ்மான் சகோதரி ரிசானாவின் பிழைகளை பொருத்து என்றும் நிலையான சுவனபதியை மறுமையில் வழங்கிடுவானாக !

ஏற்கனவே இது சம்பந்தமாக பல ஆக்கங்களை படித்ததில், பெரும்பாலானவைகள் நாணயத்தின் ஒரு பக்கத்தை விலாவரியாக தந்தாலும் மறுபக்கத்தை சந்தேகங்களின் அடிப்படையில் சவூதியின் நீதித்துறை ஒருதலைபட்சமாக தீர்ப்பை வழங்கி விட்டதென்று உறுதியாக பதிவு செய்தனர்.

கடுமையான சிறைத்தண்டனைகள், அந்நாட்டின் ஆட்சியாளர்கள் - மக்கள் (குணநலன்கள்) மீதுள்ள அபிப்பிராயங்கள் நம் சுய விருப்பு வெறுப்புகள், அந்நாட்டின் கடந்த கால பொருளாதார (எண்ணெய் வளமற்ற) சூழ்நிலைகளை இவ்விடயத்துடன் பிண்ணி பிணைவது ஒரு நடுநிலையான நிலைபாட்டுக்கு அளவுகோல்கள் அல்ல.

சகோதரி தவறிழைத்திருக்க மாட்டாள் என்று உறுதியாக நம்பும் அதே வேளையில் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் (சவூதியின்) நீதித்துறை தவறிழைத்து விட்டதென்று எண்ண முடியவில்லை. ஒட்டுமொத்த உலகமே இவ்விடயத்தை உன்னிப்பாக கவனிக்கின்றனர் என்பதனை சவூதி ஆட்சியாளர்களும் மிக நன்கறிவர்.

சகோதரியின் மரணத்திற்க்கு பின்னர், சவுதியின் நீதித்துறையை (தீர்ப்பை) நோக்கி இன்று கேட்கும் அனைத்து கேள்விகளையும் மரண தீர்ப்பை மாற்றி எழுதுவதற்க்கு எந்தளவுக்கு உண்மையாக வலிமையாக ஓங்கி ஒலிக்கப்பட்டதென்று தெரியவில்லை. எது எப்படியோ எல்லாம் இறைவனின் நாட்டபடியே நடந்து முடிந்துவிட்டது.

ஒரு சிலரின் கருத்துக்கள் ஆக்கங்கள் (பிற ஊடகங்களில்) அல்லாஹ்வின் சட்டத்தை (ஷரியாவை) நேரடியாக அல்லது மறைமுகமாக & ஒரு நாட்டின் நீதித்துறையை விமர்சிப்பதற்க்கு (நம்மவர்கள் உட்பட பலருக்கு) வழிவகுத்துவிட்டன. இதுபோன்ற சம்பவங்கள் மூலம் நல்லதொரு படிப்பினைகளை இறைவன் தருவதோடு ஒட்டுமொத்த சமுதாயத்தினரின் நிலைபாட்டை மன உறுதியை இறைவன் சோதிக்கின்றான் என்பதனை உணர முடிகின்றது.

9/11 தாக்குதல் துயர சம்பவத்திற்க்கு பின்னர், அமெரிக்காவில் குறிப்பிட்ட சதவிகித (முஸ்லிம்) மக்கள் தங்களின் முந்தைய நிலைபாட்டை மாற்றிக்கொண்டனர். அதாவது பள்ளிக்கு தொழ வருவதையும், இஸ்லாமியன் என்ற அடையாளத்தையும் (பெயரில் / உடையில்)...

அவ்வளவு ஏன், தான் ஒரு முஸ்லிம் என்று பக்கத்துக்கு வீட்டுகாரருக்கு தெரிந்து விடக்கூடாதென்று என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இன்னும் ஒரு சிலரோ தானும் மாறி தனது அமானிதங்களையும் (மக்களையும்) ஒரு தவறான நிலைபாட்டிற்கே இழுத்து சென்றுவிட்டனர்.

இதுபோன்ற சோதனையான தருணங்களில் பொறுமையும் நிதானமும்தான் ஒட்டு மொத்த நம் சமுதாயத்தினருக்கு மிக முக்கியம். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
19. Re: சவூதியில் சிரச்சேதம் செய்யப்பட்ட ரிசானாவின் கதை தெரியுமா?
posted by: Mohammed Ibn Abdullah Shahib (Ar Riyadh, KSA) on 27 January 2013
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25243

Dear Brothers/Sisters, Assalamu Alaikum (WRWB )

Please read/listen and forward to as many as you can so that the world knows the correct position regarding this important current topic. There are many countries and organizations waiting to cash in on this situation and to bring disrepute to our religion and the divine commands. It is our duty as Muslims to inform the world on the actual situation on this issue.

The Saudi Arabian Government's official statement published in the Arab News and two Khutbah's on 11-01-2013 attempts to give the actual reasons leading to the execution.

Kingdom laments wrong information on maid's execution
http://www.arabnews.com/kingdom-laments-wrong-information-maids-execution

Jum'aa Bayan by Ash-Shaikh Mazeer (Abbasi)
Execution of Sister Rizana Nafeek in the Light of Islam http://www.youtube.com/watch?v=2GwEU0W1ceg


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
20. Re:...
posted by: Cnash (Makkah) on 28 January 2013
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25257

அஸ்ஸலாமு அலைக்கும்!

மேற்கத்திய கலாசார காவலர்களும் தமிழக பாசிச பிரியர்களும் விகடன் நக்கீரன் மனுஷ்புத்திரங்கள் மூலம் கையில் எடுத்து இஸ்லாமிய எதிரிகளுக்கு தீனி போட்டதை இன்று நம் கட்டுரையாளர் இந்த இணையதளம் மூலம் அசை போட்டு இருக்கிறார். அவருடைய கட்டுரையை பற்றி பேசும் முன் மரணித்த அந்த சகோதரிக்கு அல்லாஹ் கொடுத்திருக்கும் பாக்கியத்தை எண்ணி பெருமை படுவோம் அவருக்காக துஆ செய்வோம்.

இன்றல்ல என்றோ ஒரு நாள் 600 கோடியில் ஒருவராக மரணிக்க இருந்த இந்த சகோதரி ரிசானா, இன்று பல கோடி நன்மக்களின் பிராத்தனையோடு இறைவனை அடைத்திருக்கிறார், அவர் குற்றம் செய்தாரா இல்லையா என்று ஆராயும் தகுதியும் அறிவும் நமக்கு இல்லாவிட்டாலும், இறைவனின் சட்டப்படி அவர் குற்றம் செய்து இருந்தால் இவ்வுலகிலே அவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு துய நிலையில் இறைவனை சந்திக்க இருக்கிறார்!! அப்படி குற்றம் செய்யாமல் அநியாயமாக கொலை குற்றம் சாட்டபட்டிறிந்து இவ்வுலகில் தண்டனை பெற்று இருந்தால் மறு உலகில் இவருக்கு செய்யப்பட்ட அநீதிகாக அந்த குழந்தையின் பெற்றோர்கள் முதல் தண்டனை வழங்கியவர் வரை மறுமையில் கொண்டு வந்து நிறுத்தபடுவர் !!

அங்கு வழங்க இருக்கும் நஷ்டஈடு மகத்தானது... அவர்களின் நன்மைகள் பறிக்கப்பட்டு இவ்வுலகின் அநீதி செய்யப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட்டு மகத்தான நன்மையை பெற்றவராக வர இருக்கிறார்.... நீதி வழங்குவதில் அல்லாஹ் மிக ஞானம் உடையவன்.. மறுமை பேறுகளையும் இந்த நம்பிக்கையும் கொண்டு வாழும் நாம்தான் முஸ்லீம்கள்.. மற்ற மனுஷ்புத்திரங்களின் இருந்தும் நக்கீரங்களிலும் இருந்தும் வேறுபட்டவர்கள்.

இந்த கட்டுரையில் சவுதி அரசை விமர்சிக்கிறோம் என்ற பேரில் அல்லாஹ்வின் சட்டதினோடு விபரீதமாக விளையாடி இருப்பதை ஏனோ இங்கு சிலரும் ஆதரித்து இருக்கிறார்கள் ! இரக்கம் / அனுதாபம் என்ற பெயரில்!! இந்த கட்டுரையின் வரைவுக்கெல்லாம் ஆதாரம் எங்கிருந்து எடுத்தார் என்று தெரியவில்லை! நிச்சயமாக இலங்கை ஊடகங்களும் இஸ்லாமிய எதிர்கொள்கையுடையோரில் மீடியாக்கள் தவிர வேறொன்றும் இருக்க முடியாது!! இவர் எடுத்து காட்டி இருக்கும் நேரில் பார்த்து அந்த பெண்ணுடன் உரையாடிய சாட்சி ஒரே மௌலவி மக்தூம் அவர்கள் மட்டுமே (சவுதியில் மார்க்க பணியாற்றும் தாஈ). இவர் அளித்த செய்தியை கூட நம் கட்டுரையாளர் வேண்டுமென்றே தனக்கு சாதகமான ஒரு பகுதியை எடுத்து விட்டு மற்றதை மறைத்து விட்டார்.

மௌலவி மக்தூம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார் !! முதல் மொழி பெயர்ப்பு ஒரு கர்நாடகத்தை சார்ந்த (அரசாங்கத்தால் நியமிக்க பட்ட) தமிழ் தெரிந்த ஒருவரால் பெற பட்டு அதில் அவர் குற்றத்தை ஒப்பு கொண்டார் என்றும்.. பின்னர் மொழி பெயர்ப்பில் சந்தேக கேள்விகள் அந்த பெண்ணின் புறத்தில் எழுப்பபட்டதால், தமிழகத்தை சார்ந்த மொழிபெயர்ப்பாளர் கொண்டு மீண்டும் வாக்கு மூலம் வாங்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இரண்டாவதாக வாங்கபட்ட வாக்குமூலத்தின் அவர் குற்றத்தை மறுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இப்படி பல சந்தேகங்கள் தோன்றியதால் மீண்டும் ஒரு முறை வெளிநாட்டிற்கு பிரேத சோதனை அனுப்பட்டு அங்கேயும் குரல்வலை நெரிக்கப்பட்டு இறந்ததாக நிருபிக்கபட்டு ரிப்போர்ட் வந்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார்... இதை எல்லாம் கட்டுரை எழுதியவர் ஏன் மறந்தாரோ...

மாறாக ஆடு மேய்ப்பவனை வைத்து மொழி பெயர்ப்பு செய்ய பட்டது என்றும் தவறான தகவலை ஏதோ அவர் படித்த பத்திரிக்கை செய்தியை வைத்து எங்கே சொல்லி இருக்கிறார். ஒரு ஷரியத்தை பேணுகின்ற அரசு, குற்றவியல் சட்டங்களில் ஷரியத்தை அமுல்படுத்துகின்ற ஒரு அரசு இப்படி ஆடு மெய்ப்பவனையும் மாடு மெய்ப்பவனையும் வைத்து தீர்ப்பு வழங்கி இருப்பதாக சொல்லி இருப்பது எவ்வளவு அபத்தம்?

சாதாரணமாக 3 மாதங்களின் வழங்க படும் தண்டனை இந்த வழக்கில் 7 வருடம் வரை நீடிக்க செய்ததும் ஆழ்ந்த விசாரனையும் உலக மனித உரிமை நல அமைப்புகளின் தலையீடும் இருந்தும் அதற்கு பின்னும் இது கொலை குற்றம் தான் என்று அவர்களால் அறியப்பட்டு.. பின் பல முயற்சிகள் செய்து அவர்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு இறுதியில் அவர்கள் மன்னிக்க மறுக்கவே இத்தண்டனை வழங்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்!! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வழங்கப்பட்டதல்ல!!

மேலும் கட்டுரையாளர் மன்னிக்க மறுத்த அந்த பிள்ளையின் தாயை விமர்சித்திருக்கிறார்!! அது அல்லாஹ் வழங்கி உள்ள உரிமை அந்த தாய்க்கு!! மன்னிப்பதும் மறுப்பதும்.. நீங்கள் யார் அந்த உரிமையில் தலை இட? ஏன் நம் நாட்டில் உள்ள கேடு கேட்ட சட்டம் போல ஒருவன் தகப்பனை கொலை செய்து அவனுக்கு அளிக்கபட்ட தண்டனையை எவனோ ஒருவன் ஆட்சில் இருந்து கொண்டு அண்ணா பிறந்தா நாளுக்கும் காந்தி பிறந்த நாளுக்கும் வேண்டி மன்னிப்பு வழங்குகிறார்களே அது போல மன்னிக்க வேண்டுமா? அது போல சட்டம்தான் வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? இங்கே உள்ள இறைவனில் சட்டத்தினால்தான் நாங்களும் எங்கள் பெண்களும் சுதந்திரமாக வெளி சென்று வர முடிகிறது.. இங்கே கற்பழிப்பு கொள்ளை, கொலை இருக்குதா? இது எல்லாம் இல்லை என்றுதானே இன்றைய மேற்கத்திய ஊடகங்கள் கூச்சல் போடுகின்றன??

அவைகளுக்கு சொல்லும் விதமாகதானே இன்நாட்டில் வெளியுறவு துறை அமைச்சர் எங்கள் நாட்டில் சட்டத்தில் தலை இட யாருக்கும் உரிமை இல்லை என்று அறிவித்தார் அது குற்றமா?

இது வெளி நாட்டில் நடந்து இருந்தால் பிள்ளயை கவனிக்காத குற்றத்திற்கு இந்த பெற்றோர் தண்டனை பெற்று இருப்பார்களாம். சில நாட்கள் முன்பு நார்வேயில் ஒரு இந்திய பெற்றோருக்கு நடந்தது போல்!! இந்த மேற்கத்திய சில்லறை சட்டம்தான் மேலாக தோணுதா உங்களுக்கு? ஏன் வேலைக்கு ஆள் அமர்த்துவது இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரானதா? பால் குடி தாயார் என்ற பழக்கம கூட இஸ்லாம் அங்ககரித்த ஒன்று என்பதை மறந்தீர்களா?

மேலும் கேட்கிறார் அந்த பெண்ணுக்கு என்ன வந்த சில நாளின் அரபி புலமை எப்படி வந்தது அவள் எசமானியுடன் வாக்கு வாதம் புரிய என்று? ஆனால் சம்பந்தபட்ட பெண்ணுடன் உரையாடிய மௌலவி அவர்கள் அந்த பெண் சம்பவம் நடந்த வீட்டுகாரிடம் பிரச்னை செய்து கோபத்துடன் இருந்ததாகவும் அதனால்தான் அப்பெண் கொலை செய்து விட்டாள் என்று சந்தேகம் வலுத்ததாகவும் சொல்லுகிறார்.... கோபம் கொள்ள அரபிய புலமை தேவை இல்லை.. எப்படி வீட்டுகாரர் அப்பெண்ணிடம் குழந்தையை பார்க்க சொல்லி இருப்பாரோ எப்படி பால் கொடுக்க சொல்லி இருப்பாரோ எப்படி வீட்டை சுத்தம் செய்ய சொல்லி இருப்பாரோ.. அது போலேதான் கோபமும் வெளிகாட்டபட்டிருக்கலாம்.. அதற்காக ஏன் இந்த ஆராய்ச்சி?

அடிமை எண்ணம் நம்மை போன்றோரை இழிவாக பார்ப்பது இதுவெல்லாம் அவர்களது குணம் என்றால் அது அந்த மனிதர்கள் மேல் உள்ள குறை அதற்கு இந்த சட்டம் என்ன செய்யும்.. ஏன் நாம் பார்க்க வில்லையா? வெளிஊர்காரன் என்றும், மவ்லா இஸ்லாம் என்றும் நாம் சிலரை ஒதுக்கவில்லையா.. அது போல் அரபி என்ற பரம்பரை நோய்தானே அது.. அதற்கு நாடு பொறுப்பா??

உங்கள் கட்டுரைக்கு தீனி போட ஒரு சகோதரர் அவர் இகாமா (வொர்க் பெர்மிட்) இல்லாமல் வெளிய சென்றபோது பிடிபட்டு சிறையில் இருந்ததாக குறிப்பிட்டார்!! அவருக்கு தெரியும் இந்நாட்டின் சட்டம்... தெரிந்து கொண்டு ஏன் இகாமா இல்லாமல் வெளியே செல்ல வேண்டும்...? மேலும் அவருக்கு தெரியும் இங்கே நடக்கும் குற்றங்கள் போலி ஆவன தயாரிப்பு, FORGERY / திருட்டு / விபச்சாரம் இவைகளெல்லாம் ஆசியா / ஆப்ரிக்கா குடிமக்களால்தான் பெரும்பாலும் நடக்கிறது என்பது யாவருக்கும் தெரிந்ததே.. அது போன்ற சந்தேக கண் கொண்டு போலீஸ் பார்க்கும்போது இகாம இல்லாமல் வெளியே செல்லும் சிலர் கூட இதனால் பாதிக்கப்படலாம். அதற்காக பெண்டிங்லே உள்ள கேஸ் எல்லாம் கிடச்சவன் பேரில் எழுதும் நம்ம நாட்டு போலீஸ் போல் இல்லாமல்.. உங்கள் இகமா வந்த உடன் சரிபார்க்க பட்டு வீட்டிற்கு அனுப்பட்டு இருப்பீர். இதை கூட கொலை குற்றம் போல எடுத்து சொல்லனுமா இங்கே?

இறுதியாக...

எதை வேணும்னாலும் எழுதலாம் என்றில்லாமல் நடந்ததை பல புறமும் விசாரித்து எழுதுங்கள்... ஒரு புறம் ரிஷானாவிர்க்கு அஞ்சலி செலுத்திய இலங்கை பாராளுமன்றம் மறுபுறம்.. தனது நாட்டு அந்நிய செலவாணியை பெருக்க கடந்த ஆண்டை விட வரும் ஆண்டு இன்னும் அதிகம் பணியாட்களை வெளி நாடுகளுக்கு பார்சல் செய்யும் முயற்சியையும் சேர்த்து எடுத்து .. வருகிறது.. அவர்களின் இரட்டை நிலையை நீங்கள் உணர்ந்தீர்களோ இல்லை இங்கு வாழும் இலங்கை தேசத்தவர் அதிகம் உணர்ந்து இருக்கிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
21. Re:...
posted by: M. S. Shah Jahan (Colombo) on 29 January 2013
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 25270

Attention ; Br Cnash

As I have said in my article, I welcome comments from the Middle-east specially from Saudi Arabia with documentary evidence, instead of quoting mere hear say, so that l can pass to various organizations including the UN since Rizana's case has become a history.

இந்த கட்டுரையில் சவுதி அரசை விமர்சிக்கிறோம் என்ற பேரில் அல்லாஹ்வின் சட்டதினோடு விபரீதமாக விளையாடி இருப்பதை ஏனோ இங்கு சிலரும் ஆதரித்து இருக்கிறார்கள் ! இரக்கம் / அனுதாபம் என்ற பெயரில்!!

I wish to reaffirm here I have already said it was not my intention to touch the Shariya. What the whole world says is, the case was not properly investigated and executions are for Asians and Africans while westerners escape with diplomatic interference. Many such cases are given in detail.

இவர் எடுத்து காட்டி இருக்கும் நேரில் பார்த்து அந்த பெண்ணுடன் உரையாடிய சாட்சி ஒரே மௌலவி மக்தூம் அவர்கள் மட்டுமே (சவுதியில் மார்க்க பணியாற்றும் தாஈ). இவர் அளித்த செய்தியை கூட நம் கட்டுரையாளர் வேண்டுமென்றே தனக்கு சாதகமான ஒரு பகுதியை எடுத்து விட்டு மற்றதை மறைத்து விட்டார்.

You are wrong. Writing an article is not an easy thing. One has to reach so many sources spending lot of precious time but to critisize it is simple. I could get that portion only. Even in last week's ' Murasoli', DMK leader Karunanithy also used that portion only.

மரண தண்டனை விதிக்கப்படுகின்ற அந்த நேரத்தில் கூட தன் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக்குற்றத்தை அவள் அறவே மறுத்தாள்.

Is not this Mowlawi Mogdoom's version according to my article? Do you accept this statement? If so it contradicts with many of what you have said as Mowlavi said. I request you to give me the full text of Mowlawi Mogdoom's, and also his contact number as BBC Tamil Service will be interested to know his side of story. Let new things come out.

It was true in the beginning the media said the translator was from Karnataka. After that we are not aware of any other translator's involvement, but presently the media says he is a shepherd from Kerala.

Last night when I inquired about Mowlavi Mogdoom from a recruiting agent, he said a lady agent who had seen Rizana at the airport had told him she was thin and school girl like looking and no one would believe she was above 20.

இப்படி பல சந்தேகங்கள் தோன்றியதால் மீண்டும் ஒரு முறை வெளிநாட்டிற்கு பிரேத சோதனை அனுப்பட்டு அங்கேயும் குரல்வலை நெரிக்கப்பட்டு இறந்ததாக நிருபிக்கபட்டு ரிப்போர்ட் வந்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார்... இதை எல்லாம் கட்டுரை எழுதியவர் ஏன் மறந்தாரோ ...

We are not at all aware of the postmortem of the baby in Saudi or in any other country. May I know in which country it was performed? Has the government confirmed it? General opinion is there was no postmortem at all.

பால் குடி தாயார் என்ற பழக்கம கூட இஸ்லாம் அங்ககரித்த ஒன்று என்பதை மறந்தீர்களா?

Bottle feeding by a come and go servant is different from what a foster mother feeds from her breast. Does not Islam suggest the mother to breast feed her baby till 2 years? Taking care of domestic chores and taking care of an infant are defined differently in Saudi law too though many use servants for both. In this case Rizana was an unlicensed nanny which the Saudi family exploited illegally.

உலக மனித உரிமை நல அமைப்புகளின் தலையீடும் இருந்தும்

The non Muslim world leaders and world organizations argued for Rizana not for any love of her but they all felt she was not guilty of the said crime.

It was Dr. Mrs. Kifaya Ifthikar, a dentist based in Riyadh, was the regular- monthly visitor to Rizana. She helped her to speak to her family on her cell phone on her visit.

Even that fateful day, according to her interview with BBC, she was on the road to see Rizana after obtaining permission from the authorities, and having informed her family too to be ready to speak, but had to turn back on hearing Rizana was executed. Dr. Kifaya cried in the interview and said few times Rizana was innocent. That was her position through out.

ஒரு புறம் ரிஷானாவிர்க்கு அஞ்சலி செலுத்திய இலங்கை பாராளுமன்றம் மறுபுறம் .. தனது நாட்டு அந்நிய செலவாணியை பெருக்க கடந்த ஆண்டை விட வரும் ஆண்டு இன்னும் அதிகம் பணியாட்களை வெளி நாடு களுக்கு பார்சல் செய்யும் முயற்சியையும் சேர்த்து எடுத்து வருகிறது.

It is said Sri Lanka government is virtually living on house maid's income. It will never stop this and people due to their poverty will not hesitate to risk their life. See what Rizana's mother says; " Those who migrate for employment do so because of economic crises; because they wish to bring better times to their families. It is up to the individual to make the decision but I would like it if the death of our daughter was not invain and if it would help someone else save their life of a cruel end."

Also we have to take note until the last Rizana was asking:

"குற்றம் செய்யாத எனக்கு ஏன் உம்மா இந்த கோரத் தண்டனை? செய்யாத குற்றத்துக்கு நான் ஏன் உம்மா தண்டனையை பொறுப்பேற்க வேண்டும்?"

Was she lying?

Ref; http://dbsjeyaraj.com/dbsj/archives/14636


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
22. Re:...
posted by: சாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்) on 29 January 2013
IP: 116.*.*.* India | Comment Reference Number: 25275

கட்டுரையாளர் தரவுகளுடனும் தர்க்கங்களுடனும் ரிஸானாவிற்கு நடந்த அநீதியை பதிவு செய்துள்ளார். உடல் தளர்ந்த நிலையிலும் கருத்துக்களை நிமிர்ந்து சொன்ன கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.

சௌதி அரசின் முறை தவறிய செயல்பாடுகளை விமர்சிப்பதாலேயே ஷரீஅத் அடிப்படையிலான தண்டனை சட்டங்களை விமர்சித்ததாக ஆகாது. ரிஸானாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை புனிதத்தின் பெயரால் மறைக்க முயலுவதும் சரியல்ல.

மற்ற குற்றவியல் சட்ட நடைமுறைகளுக்கும் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு.

இஸ்லாமிய அரசானது குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்து முன்னர் நாட்டில் மனித மனங்களையும் சமூக , பொருளாதார , பண்பாட்டு சூழ்நிலைகளையும் சீர் செய்யும் . அதன் பிறகே குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

எடுத்துக்காட்டாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு முதல் வஹீ வந்து 15 வருடங்கள் கழித்துதான் இஸ்லாமிய அரசிற்கான அரசியல் யாப்பு இறக்கப்பட்டது.

அது வரை தனி மனித உருவாக்கம்தான் நடந்தது. தண்டனை சட்டமானது அஹ்ஜாப் போரின் போதுதான் இறங்கியது. ஒரு தடவை விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் ஸஹாபி தானே முன் வந்து நபியவர்கள் முன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும்போது அதனை உடனே ஏற்றுக்கொண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. முடிந்த மட்டிற்கும் அந்த பெண் ஸஹாபி அத்தண்டனையிலிருந்து விடுபட வேண்டும் என்பதே நபியவர்களின் உள விருப்பமாக இருந்தது.

குற்றமிழைத்த அந்த பெண் ஸஹாபி தானே நான்கு முறை சாட்சி சொன்ன பிறகுதான் அப்படி ஒரு குற்றம் இழைக்கப்பட்டதை ஆட்சித்தலைவரும் முதன்மை நீதிபதியுமான நபியவர்கள் ஒத்துக்கொள்கின்றார்கள். அதன் பிறகும் அவரின் கருவில் உள்ள குழந்தையை காரணம் காட்டி மரண தண்டனை சில வருடங்கள் வரை தள்ளி வைக்கப்படுகின்றது.

அதே போல் உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் காலத்தில் கடும் பஞ்சம் நிலவியது. அப்போது திருட்டுகள் நடந்தன. திருட்டு என்பது தனி மனிதனின் உரிமையை பொருளை பறிப்பது ஆகும். ஆனால் அது தனி மனித உரிமை என ஆட்சியாளர் ஒதுங்கி இருந்து விடவில்லை. உமர் அவர்கள் கை வெட்டும் தண்டனையை நிறைவேற்றவில்லை. சட்டத்திற்கும் இதயம் வேண்டும் என்பதை காட்டிடும் நிகழ்வுகள் இவை.

ஷரீஅத் சட்டத்தை வெறும் வாளாகவும் , லத்தியாகவும் , துப்பாக்கியாகவும் சுருக்கி பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தால் கொடுங்கோல் சர்வாதிகாரிகளின் சட்டத்திற்கும் ஷரீஅத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும்.

ரிஸானா விஷயத்தில் அய்யங்களுக்கு அப்பாற்பட்டு தெளிவாக குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அத்துடன் ரிஸானாவிற்கு முதலில் நீதி மன்றத்தால் மரண தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்படும்போது உலகம் முழுக்க அது விவாதப்பொருளாக மாறுகின்றது. அந்த விவாதங்களின் சந்து பொந்துகள் வழியாக ஷரீஅத் சட்டத்தையே இழிவுபடுத்த உள்நோக்கம் கொண்ட சில சக்திகள் முயற்சிக்கின்றன. இந்த நிலையில் சௌதி அரசு என்ன செய்திருக்க வேண்டும் ?

வெளிப்படையான மறு விசாரணைக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். தனது தீர்ப்பில் உள்ள நியாயத்தையும் தர்க்கத்தையும் உலகிற்கு முன் நிலை நாட்ட அது ஒரு நல்ல சந்தர்ப்பம். ஆனால் சௌதி அரசு இது எங்களது உள்நாட்டு விவகாரம். இதில் யாரும் தலையிடத் தேவையில்லை என முகத்தை திருப்பிக்கொண்டது.

ரிஸானாவின் மரண தண்டனைக்கு முன்னர் எத்தனையோ மரண தண்டனைகள் சௌதியில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றை யாரும் கேள்வி கேட்கவில்லை. இந்த தண்டனை மட்டும் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதின் காரணம் வழக்கு தெளிவற்றது. விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதுதான்.

சௌதி அரசின் காட்டு தர்பார் நீதியினால் அருமையான இஸ்லாமிய சட்டங்கள் கொச்சைப்படுத்தப்படுகின்றன. ரிஹானாவின் தலையை எடுக்க ஷரீஅத்தை முன்னிறுத்தும் சௌதி அரசிற்கும் அதன் செய்கையை ஆதரிப்பவர்களுக்கும் சில கேள்விகள் :

1. ஹஜ்ஜிற்கு செல்லும் பெண்களுக்கு மஹ்ரமான ஆணின் துணை வேண்டும் என வலியுறுத்தும் சௌதி அரசு எப்படி வெளி நாடுகளிலிருந்து வீட்டு வேலைகளுக்கு வரும் பணிப்பெண்களை மஹ்ரமில்லாமல் எப்படி அனுமதிக்கின்றது?

2. சௌதி அரபிய நாட்டு முதலாளிகள் அவர்களின் கீழ் பணி புரியும் வெளி நாட்டு தொழிலாளிகளின் பணி, ஓய்வு , சம்பளம் , விடுமுறை , தங்குமிடம் போன்ற விஷயங்களில் செய்யும் அநீதங்களுக்கு அந்நாட்டு அரசு ஷரீஅத் முறையில் துல்லியமாகத்தான் நீதி வழங்குகின்றதா?

3. வளைகுடா போரின் போது சௌதியின் பல்வேறு நகரங்களில் தங்கியிருந்த அமெரிக்க படையினர் அரை குறை ஆடைகளுடன் திரிந்தனர். மது அருந்தினர். இறக்குமதி செய்யப்பட்ட பெண்களுடன் பாலியல் வரம்பு மீறல்களில் ஈடுபட்டனர். அவர்களில் யாருக்காவது கசையயோ , தலை வெட்டோ கொடுக்க முடிந்ததா ?

4. இந்தியா , பாக்கிஸ்தான் , பங்களாதேஷ் , சிறீ லங்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பணியாளர்களிடமும் அதே போல வீட்டு வேலைக்கு செல்லும் இளம் வயது சிறுவர்களிடமும் , பெண்களிடமும் சௌதி முதலாளி வீட்டார் செய்யும் வன்முறைகளுக்கும் , பாலியல் அத்து மீறல்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கப்பட்டிருக்கின்றது ?

சவூதி அரபியாவில் அஜ்னபிகளுக்கும் அரபிகளுக்கும் வெவ்வேறு வகையான நீதி காட்டப்பட்டு வருவதை யாராலும் மறுக்க முடியாது. சௌதி அரசாங்கம் முழுமையாக ஷரீஅத் அடிப்படையில் செயல்படும் நாடு கிடையாது. தனது சொந்த மக்களை தீவிர கண்காணிப்பிற்குள் வைத்திருக்கும் ஒரு கெடு பிடி அரசு. மருந்திற்கு கூட அங்கு ஊடக சுதந்திரமும் இல்லை சன நாயகமும் இல்லை. இஸ்லாத்திற்கு புறம்பான மன்னராட்சி நடைபெறும் நாடு அது.

வறுமையில் எரிந்து அழிந்து கொண்டிருக்கும் குடும்பங்களை சார்ந்த எளிய உழைப்பாளிகளிடம்தான் அது தனது சட்ட அமுலாக்கம் என்ற குண்டாந்தடியை சுழற்றும். இதை நாவு கூசாமல் ஷரீஅத் சட்ட நடைமுறை எனவும் கூறிக்கொள்ளும். ஆனால் தேசிய , பன்னாட்டு அரசியல் என்று வரும்போது அமெரிக்கா , இஸ்ராயீல் நாடுகளின் முன் பவ்யமாக பணிந்து நிற்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
23. Re:...
posted by: Cnash (Makkah) on 30 January 2013
IP: 37.*.*.* | Comment Reference Number: 25280

Asslaamu Alaikum,

Thank you respected Brother Shajahan for your response and giving me a chance to clarify to you and to one who have similar opinion on the code of Islamic law in Saudi Arabia to manipulate the religion as a victim through this happening.

Whilst you were welcoming our ideas and thoughts (from ME/ KSA) with a documentary proof to support this case, you unfortunately failed to quote any evidence to support your article other than merely quoting hearsays and debased allegation from the local media.

Though you claimed your intention is not against Shariyah laws, your contents indirectly touches the Islamic Law and feeds anti-Islamism. What you have mentioned that ‘whole world says against this case’ can simply be described in other world as Islamophobic world stands against this. I welcome if you can list out the westerners who were favored with the diplomatic intervention whereas we have given an instance that a woman from Royal family was brought into justice earlier.

Here I must admit few diplomatic interventions to some petty crimes committed by the westerner where Islam permits and gives a right the ruler to pardon the convicts. But in this particular case Islam has given full rights to victim’s next of kin to decide the fate the convicts not to the ruler.

I agree with you that it is not an easy job to write an article by referring various sources and it causes you trouble while being criticized easily. In the same way, I had to interfere with my comment while the code of Islamic law is simply ridiculed here by the media and anti-Islamic elements and unfortunately by you as well in your article. I just wish to give you an instance from the media and please read below article on Jan 12, 2012 to understand how the Asian Tribune news has discharged a poison out of this subjected issue.

London, 12 January, A poor Sri Lankan housemaid was beheaded on a trumped up charge of killing an infant of her employer on Wednesday - 9th January 2013. Saudi TV went live with the vile execution which millions around the globe saw with awe and trepidation. World leaders and human rights organizations and Asian Tribune have condemned the Saudi Royal family for ordering the killing of an innocent girl from Sri Lanka. They beat the Sri Lankan maid before cutting off her head with a sword which was not a clean cut. Given below the link for the Saudi TV (in Arabic) which went live on the execution.

The given link by the Asian tribune is a fake and no footage is there to back this news. There is hundreds of such news being circulated in social media to strain Islam. You have taken such news to stuff your article. It is not an acceptable approach to point out DMK leader Karunadhi’s standpoint with a portion of statement. I should consider that it was his ignorance or any intention to take this to release his statement!! Why should I consider him? Does he connect in any way with this incident? Then we also have to think about the article of Mahushyaputran, Nakkeeran as well.

Please click this link to read full statement of Mawlawi Magdoom http://lankamuslim.org/2013/01/13/ You can admit how you are contradicting entirely with his statement, also you can contact your Sri Lankan sources i.e embassy to get his contact details if you wish to clarify with him further. Also I will try from my sources here to get his contact details.

Again I stress you not to conclude your thoughts with a general opinion without looking into the facts. Is it a logical argument that a girl was given death sentence by the Muslim scholars merely based on the translation of a shepherd? If you are ready to believe whatever the media say then you have to believe the following news related to this Risaana case which is also published in the media (…. I do not wish to circulate here since it is very abusive and malicious on the characters of those parents who refused to pardon Risaaana in connection with Risaana.. I will send separately to you email.)

Please click below link to recognize how this case was handled by the government of Saudi Arabia.

http://www.arabnews.com/saudi-arabia/maid%E2%80%99s-execution-ksa-won%E2%80%99t-allow-any-foreign-interference
http://www.arabnews.com/node/398461

Earlier Shoura council members have met the Sri Lankan diplomats in early 2012 to discuss the details of court hearings and verdict against Rizana. There was no question were raised on post-mortem or the way the case was mishandled. On the contrary they admired the Saudi authorities for helping them to take this case up to the Royal clemency and their support to convince the parents of the deceased infant.

We are not here to discuss the reasons why the mother failed to breast-feed her infant. But on the perspective of law and the mother, Risaana was a capable domestic helper to execute her responsibilities according to her forged age.

Please bear in mind that the said non-Muslim world leaders and so called human right / world organization raised their voice not in favour of either Rizana or to establish justice. Nevertheless their voice is always against Islam and they are watching with eagle-eye to pinpoint any slip-up to grasp social sympathy to scream against Islamic laws. They are well known for anti-death penalty and capital punishment, but they never voiced against homicide and genocide by the anti- Muslim elements in ME and Afghan …. Do you trust on their claims?

Again the same Dr. Kifaya Ifthikar has stated in the Arab news after visiting her in Jail that Rizana had been treated well in the prison and she absolutely declined the charges of torturing by the police. She asserted her living condition in the prison was pleasing.

Finally my humble suggestion and request to you not to spotlight such sensitive issue by blowing into massive based on the contents of some biased media and westernized statement. The media are very cautious to suppress of facts of this subject and on the other hand they conveniently outspread an indirect message against Islam and its code of law.

Discussing of this subject is not a right solution to restrict the formation of more Rizanaas in this world, but a person like you who are influential with the government sources must take controlling measure to supply so many innocents Risaanaa to the Middle East and to make propaganda against housemaid recruitment in Sri Lanka. Bangladesh, other poor nation like Srilanka has imposed a strict law to restrict the supply of domestic workers to KSA. India has also a better law on housemaid issues.

Last but not least, while analysing all these facts, I should say and criticize prejudiced and double standard policy of this government whereas they have set a very strict law and regulation of Mahram (women should be accompanied with their legal guardian) for women pilgrims and visitors who come to the Saudi Arabia despite a pure intention of worship in the holy mosque. But this country liberalizes this law and flap Mahram policy in the wind while they bring the housemaids to their homes and of course they are accountable to Allah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
24. ரிசானா மரண தண்டனை விஷயம்
posted by: J.S.A. BUKHARI (Dubai) on 30 January 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25281

கனம் வெப்சைட் நிர்வாஹிகளுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து இந்த கட்டுரைபற்றி மேற்கொண்டு எழும் வியாக்கியானங்கள், கருத்து பரிமாற்றங்களை பிரசுரிக்காமல், இத்தோடு முடித்துக்கொள்வது தான் உங்கள் வெப்சைடுக்கும், அதன் வாசகர்களுக்கும் நன்மை பயக்கும் என்று கருதுகிறேன். இல்லையேல், நீங்களே தேவையில்லாமல் ஒருத்தருக்கொருவர் மற்றவரின் மரியாதையை கெடுக்க வாய்ப்புகள் கொடுத்ததாக ஆகிவிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
25. Re:...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 30 January 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25282

ரிசானாவின் விவகாரம் குறித்து இங்கு வாசகர்களின் அனல் பறக்கும் வாதப்பிரதி வாதங்களில் இரண்டு வகையான மனப்போக்குகள் ஊடாடுவதை என்னால் அவதானிக்க முடிகிறது.

ஓன்று, மூடுண்ட சவூதி அரசின் நீதி, நிர்வாக அணுகுமுறைகளையும், அதன் முரட்டுத்தனமான போக்குகளையும் விமர்சிக்கிறேன் என்கிற என்கிற நிர்பந்தத்தில் இஸ்லாமிய ஷரீஆவை உரசிச்செல்வது.

இன்னொன்று, இஸ்லாமிய ஷரீஆவுக்கு கொடி பிடிக்கிறோம் என்கிற போர்வையில் சவூதி அரசின் சகல சீர்கேடுகளுக்கும் வக்காலத்து வாங்குவது.

இந்த இரண்டு போக்குகளுமே தவறானது.

பொதுவாக ரிசானாவின் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியாத நிலையில் வெறும் அனுமானத்தை வைத்து மட்டும் எதையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. இதற்கும் அப்பால் பொதுவாக சொல்வதற்கு நமக்கு சில உண்டு.

குற்றம் செய்பவர்களுக்கு இனமோ, மொழியோ அல்லது பால்வேறுபாடோ கிடையாது. ஒரு பெண் என்பதாலோ அல்லது அவள் ஏழை - அப்பாவி என்பதாலோ யாரும் குற்றம் செய்வதில் இருந்து விதிவிலக்கு பெற்றவர்கள் அல்ல. குற்றம் எனபது ஒரு திடீர் மனநிலையிலும் நடைபெறலாம். நன்கு திட்டமிட்டும் நடக்கலாம். அதற்கு நிகழ்வின் சூழல்களே பெரிதும் காரணமாக இருக்கின்றன.

பொதுவாக நாம் எந்த நாட்டில் வாசிக்கிறோமோ அந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டே வாழ்கிறோம். அப்படிப் பார்த்தால் ரிசானா சவூதி அரேபிய நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவள்தான். எனவே சவூதி அரசின் தண்டனை சட்டம் அவளுக்கும் பொருந்தும். இதில் சோகம் என்னவெனில் அது இஸ்லாமிய சட்டமாகவும் அமைந்து போனதுதான்.

சவூதி அரசு முழுமையான இஸ்லாமிய அரசுதானா....?

நமக்குத் தெரிந்து இஸ்லாமிய சட்டங்களை நூறு சதவீதம் பின்பற்றும் அரசு இன்னும் உலகில் எங்கும் நிறுவப்பட்டதாகத் தெரியவில்லை. அடி முதல் நுனி வரை சவூதியில் இஸ்லாமிய சட்டங்கள்தான் பின்பற்றப்படுகிறதா..? அப்படியானால் நண்பர் சாளை பஷீர் சொல்வது போல அமெரிக்க படையினரின் (பெண்கள் பிரிவு) அரைகுறை ஆடைகளோடு தெருவில் நடமாடியதை ஏன் அந்த சட்டத்தால் தடுக்க முடியவில்லை. ?

இது போரின்போது மட்டும் நடக்கும் ஒன்றல்ல.

இயல்பாகவே அங்கு வசிக்கும் - எண்ணை நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு அவர்கள் நாட்டில் வாழ்வதைப் போலவே சூழல்கள் அங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த காட்சியை தம்மாம் நகருக்கு அருகே உள்ள ரஹீமா என்ற ஊரில் நானே நேரில் கண்டுள்ளேன். இங்கெல்லாம் இஸ்லாமிய சட்டத்துக்கு வேலை இல்லையா..?

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
26. Re:...Rizana
posted by: M. S. Shah Jahan (Colombo) on 30 January 2013
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 25283

Brother; Cnash

Thanks for your comment for which I wish to respond in a day or two as I am bit busy with my professional matters. In the mean time, I read Mowlavi Mogdoom's letter to Rizana's family in lankamuslims.org

comments made by its readers are available at http://lankamuslim.org/2013/01/13/


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
27. Re:...
posted by: K S Muhamd shuaib (Kayalpatinam) on 30 January 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25286

(எனது முந்தைய கருத்தின் தொடர்ச்சி - பாகம் 2)

மேலும் அந்நாட்டு (சவூதி )சட்டப்படி அந்நிய பெண்கள் தகுந்த ஆண் துணையின்றி (மகரம்) அந்நாட்டுக்குள் வர முடியாது. ஆனால் இந்த சட்டம் பெரும்பாலும் ஹஜ், உம்ரா போன்ற புனித பயணங்களின் போதே கடுமையாக அனுசரிக்கபடுகிறது. வீட்டு வேலைக்காக அழைத்து வரப்படும் லட்சக்கணக்கான பெண்களின் விசயத்தில் இது கண்டு கொள்ளப்படுவதில்லை. விசா ஏஜெண்டுகள் அரசை ஏமாற்றி இவ்வாறு கூட்டி வருகிறார்கள் என்கிற வாதம் எடுபடாது.

தனது வறுமையை விரட்ட, தனது சக்திக்கு மீறி பொருள் செலவு செய்து வரும் பாவப்பட்ட பெண்கள் தனக்குத் துணையாக இன்னொருவரையும் அழைத்து வருவார்கள் என யாராலும் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறானால் இது சட்டமீறல் இல்லையா? தனது சுயதேவையை பூர்த்தி செய்து கொள்ள சட்டத்தை எப்படியும் வளைக்கலாமா..? இதுதான் இஸ்லாமிய நீதிநெறியோ ..?

"ரிசானா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறாள்" என்றும் இங்கு ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. தனது கஸ்டடியில் உள்ள ஒருவரிடம் போலிஸ் எப்படி வாக்குமூலம் வாங்கும் எனபது எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.

குற்றங்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் மட்டுமே இங்கு பொதுமக்களின் முன்னிலையில் பகிரங்கமாக நிறைவேற்றப்படுகிறது.. குற்ற விசாரணை, வாதி, பிரதிவாதி வழக்கறிஞர்களின் வாதம், குற்றம் சுமத்தப்பட்டவரின் பதில் -இவைகளெல்லாம் பெரும் மர்மதேசம்.

இன்னொன்றையும் இங்கு கூறியே ஆகவேண்டும்.

உலகில் அன்றாடம் குற்றங்களும், அவற்றுக்கான தண்டனைகளும் நித்தம் நித்தம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் சவூதியில் மட்டும் அது ஏன் விவாதப்பொருள் ஆகிறது..? இதுபோன்ற வெளிப்படைத்தன்மை இல்லாததுதான்.

ஒருநாட்டின் நம்பகத்தன்மையான சட்டவெளிப்பாடு எனில் அது அந்த சமூகத்தில் எல்லா நிலைகளிலும் பிரதிபலிக்கவேண்டும். கொலைக்கு மரணதண்டனை, திருட்டுக்கு கை வெட்டுதல் என்பதோடு மட்டும் அது நின்றுவிடக்கூடாது.

சில நாட்களுக்கு முன்பு இதே இலங்கையை சேர்ந்த ஆரியவதி என்ற பெண் கை, கால்களில் ஆணி அறையப்பட்ட காயங்களோடு இலங்கை வந்து சேர்ந்தாள். அவளுக்கு அத்தகைய துன்பம் இளைத்த சவூதிக்கு அந்நாட்டின் சட்டம் என்ன தண்டனையை அளித்தது..? என்று அறிய விரும்புகிறேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
28. Re:...
posted by: K S Muhamd shuaib (Kayalpatinam) on 30 January 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25287

(எனது கருத்தின் தொடர்ச்சி - பாகம் 3)

சவூதி அரேபியா பரம்பரை மன்னர்களால் வாரிசுரிமைப்படி ஆளப்படுகிறதே..? அது இஸ்லாமிய ஆட்சியின் ஒரு அம்சம்தானா...? என்பதையும் அறியவிரும்புகிறேன்..

சட்ட வரைமுறைகளுக்குள் வராவிட்டாலும் முஸ்லிம்களை நசுக்கத் துடிக்கிற அமெரிக்காவுடனும், அதன் கள்ளக் குழந்தை இஸ்ரேலுடனும் நட்பு பாராட்டுகிறதே... இதுதான் தூய்மையான இஸ்லாமிய அரசின் அடையாளமா..? என்று அறியவிரும்புகிறேன்.

-கட்டுரையாளருக்கு.....

நீங்கள் தமிழில்தான் கட்டுரை வரைகிறீர்கள். அதற்கு விளக்கங்கள் எதுவும் இருக்குமானால் அதையும் முடிந்த வரை தமிழிலேயே தருவதற்கு முயலுங்கள். எதிர்காலத்தில் இதில் கவனம் குவிப்பீர்கள் என நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
29. Re:...Rizana
posted by: M. S. ShahbJahan (Colombo) on 31 January 2013
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 25298

Attention;  K.S. Muhamad Suhaib

நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் எனக்கு கம்ப்யூட்டர் தமிழ் ட்ய்பிங் தெரியாது. நான் கற்றது கை மண் அளவுதான். பாப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
30. Re:...Rizana
posted by: M. S. Shah Jahan (Colombo) on 01 February 2013
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 25304

Brother Cnash;

I went through Mowlavi  Mogdoom's letter to Rizana's  parents. It does not look like I have any thing drastic omitted from that letter. Mowlavi says Rizana with a Karnataka translator, immediately after the arrest, admitted the crime and with the second translator from Tamilnadu, who was appointed as she agitated, denied the crime. This alone shows her true standing. The rest I have already mentioned. 

Amnesty International Spokeswoman Stephanie Farrior once said " inadequate trial procedures and feeble evidence requirements employed a range of torture techniques, including beating of the soles of the feet, use of electric shock devices and the extraction of nails to obtain confessions”.

“Defendants are rarely allowed formal representation by a lawyer and in many cases are kept in the dark about the progress of legal proceedings against them." Amnesty International said.

Also Mowlavi Mogdoom says மொழிப்பெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் பற்றி நான் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி விவரித்தேன். அதற்கு அவர்கள் அப்படி அவர் அநீதி இழைக்கப் பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள். எனினும் நான் அவர்களிடம் எனக்கு இது பற்றிய முழு தகவல்களும் கிடைக்க உதவி செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்ட போது, இன்ஷா அல்லாஹ் உதவுகிறோம் என்று கூறினார்கள்.

As far as the outside world is concerned there is no trace of postmortem in Saudi or in any other country. Even you have not come out what other country is. On the other hand the news is that the police failed to do postmortem which the government does not seem to have denied. Further a medical doctor's presence is vital for a murder case. Do not know who the doctor was.

Actually from the beginning I say the FIR that was filed against Rizana with Madam's version only, was one sided- biased. From here the camel went into the wrong desert. So I leave it to the readers to decide every thing that took place in Madam's house was just and fair or not. If they feel it is unjust- unfair then the whole thing could be unjust. Judgements are made not only by law and evidence but also using common sense.

Medical experts say there are chances for a baby to get chocked while drinking milk thus causing natural death. I listened to the Kuthba speech submitted here where the imam says, Rizana குழந்தையின் கழுத்தை தடவினாள். But மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று கூறுகிறார்கள்.

By any means the world feels it was the gross negligence of the Madam that brought this disaster for which she is responsible. That is my point too chiefly. The young servant was only 18 days old. Madam says Rizana was angry, had argument bla bla..... Under that condition how can you entrust your precious baby to a stranger? My dear reader, will your wife or sister leave her baby that way under this circumstance?

You handed over your brand new Mercedes Benz to a new driver, newly obtained his driving license. Now you say he knocked- damaged your car. Who is responsible for this damage? Let readers decide.

Every week some one is beheaded in Saudi. No body talks big about it. There are 45 Filipinos under death sentence. None is shouting in the streets. Rizana is not the first Sri Lankan to be chopped head. Why so much noise for her? Because they feel she is not guilty. It is the Madam.

Professor M Haris Z Deen analyzing Rizana Nafeek’s killing has pointed out that” If Saudi Arabia followed the law of the country in beheading Rizana, it is their law and should not compare with the Islamic Shari’ah”.

Br Cnash, two British nurses convicted of murder in 1997, were allowed to go home following a visit to the country by Tony Blair. There are more cases. Britain and Saudi have a long standing "friendship and cooperation" treaty. The House of Saud cannot deny request from the west. If you study the biography of Abdul Azia bin Abdul Rahman and the birth of Saudi Arabia you may know.

I am a freelance writer. We do not write without proof in hand. Otherwise we face the risk of being sued. I used to speak over Sri Lanka Broadcasting Corporation where nobody ever checked my script. What ever I write gets published without any editing in many countries.

It is only the wealthy permitted to employ servants. Why are there so many cases of non payment of salary for months and years in addition to hard working condition? $200 is a coffe - Kawa money for them. We put our head down when foreigners talk to us on such subjects.

Finally, our-my faith in Islam is not inferior to that of people living in Saudi or KPM. Personally I fight for issues that I feel I should in the international forum. When the hijab subject was raised in France, I fought with the western media. Further I am close to Barak Obama group. When he allowed same sex marriage I wrote to him against that and had arguments in the media.

I wish to end Rizana's saga with this. For the benefit of more readers, I shall be thankful to the admin if this could be translated in Tamil.

Salaams to all.

Ref;

http://www.latheeffarook.com/index.php/sri-lanka-muslims/396-sri-lanka-muslims-also-failed-rizana-nafeek

http://www.sailanmuslim.com/news/saudi-arabias-tribal-regime-by-latheef-farook/

This fire brand writer Latheef Farook was my classmate. He worked in Dubai with Gulf News and Khaleej Times for nearly 30 years. It was I who pushed him to go to Dubai.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
31. Re:...
posted by: Cnash (Makkah) on 03 February 2013
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25335

Dear Br. Shajahan,

Exchanging of statements cannot be a way out while you and I are adamant and justifying our stance persistently. Again you have highlighted various documentary proofs based on the pro-western media and so called westernized organizations like Human Rights Council, World Amnesty Organization etc. which are visibly known for its anti-Islamic guiding principle. They are against capital punishment, death sentence in any form but this will not be applicable for the genocides and homicides which are being carried out by the name of anti-terrorism. Thus it is not appropriate to argue with their statements and standpoints.

This hypocrite media take one standard while Malala was targeted by the Talibans and elevate her upto Nobel Prize honour, at the same time, thousand of innocent children are bombed and perished in the same land of Afghan is left inattentive by this organization in the name of fighting against terrorism. I insist on you to raise this issue through your media sources whatsoever it connects upto oval office.

Again I am not here to defend or encourage the all the activities of this country which has been brought and some overstated here by some commentators. I am not qualified enough to respond them all as well but still I could say what they have brought in to criticism is not in connection with criminal Shariah acts in any form which purely involves with other individuals rights.

But in the case of Risaana, we believe that it has been carried out in the right manner abiding by the law (Allah knows the best) which we sense from the sources that we are notified and through our understanding the enforcement of law here in our experience. That’s all I could say!!

One question is always raised about the transparency of this trial! Such debates are come about only while it happens in the country which follows the Islamic code of rule. Very recently David Headley was convicted by the US court, no required details was transpired to India and still it pursues to bring into their court which is simply rejected by the US. (where is the Human Rights to answer to the innocent family of the victim)

One critic says here “Why this case is only concerned by the world by pointing out so many offenders are beheaded in this country”. Reason is quite simple and observable to get sympathy of the world against Islam in the form of Risaana by portraying this victim as minor and fabricating associated story into compassion to illustrate the Islam and its law is cruel and barbaric. பினல்லி, I appreciate sincerely the way you have tried to make me clear and I urge you to exploit your influence to fight against the media target on Islam and its law in a similar way.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
32. Re:...
posted by: Cnash (Makkah ) on 04 February 2013
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25353

Belated but Good Initiative taken by the SL govt ... Govt. should stand firm on the decision to stop formation of 100s of Risaanas!!!

ARAB NEWS: 04.02.2013

The Sri Lankan government has suspended sending domestic maids to Saudi Arabia, the Association of Licensed Foreign Employment Agencies (ALFEA) said.

ALFEA Chairman W.M.P Aponso, quoted by The Sunday Leader, said that the government had decided to suspend sending domestic maids to Saudi Arabia until the maids are provided with an insurance cover by the Saudi authorities. He said that ALFEA will discuss the issue with Foreign Employment Minister Dilan Perera once he returns from overseas.

The move to suspend sending domestic maids to Saudi Arabia followed the execution of Sri Lankan maid Rizana Nafeek. Some 500,000 Sri Lankans are employed in Saudi Arabia, most of them as maids. When The Sunday Leader contacted the Chairman of the Sri Lanka Foreign Employment Bureau Amal Senalankadhikara, he confirmed that Sri Lankan domestic maids were not being sent to Saudi Arabia. He said the decision was taken over some pending issues, which will be discussed with the minister on his return from Lebanon.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
33. Re:...
posted by: sulaiman (saudi arabia) on 05 February 2013
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25381

AFTER READ ALL COMMENTS AND SOME PERSONAL EMAILS FROM MY FRIENDS REGARDING THIS ATRICLE, I WANT TO SHARE A LINK FOR THE VIEW OF MR.CNAASH KAKA, AND MR.M.N.L.RAFEEQ KAKA AND WHOSE ARE HAVING FULL FAITH IN SAUDIARABIAN JUDICIARY.. (PARDON ME..I AM NOT SAYING SHARIYA),, PLEASE GO THROUGH THE LINK,

http://www.aljazeera.com/news/middleeast/2013/02/201323223618362435.html


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
34. Re:...
posted by: Cnash (Makkah) on 05 February 2013
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25399

Dear Br. Sulaiman,

I also read this news which is being circulated by the same elements!! . what's more, I observed the facts behind this which I have given below as it was.

Subhana ALLAH, this is one example that illustrates how we don't take the verses of the Quran seriously: "O you who have believed, if there comes to you a disobedient one with information, investigate, lest you harm a people out of ignorance and become, over what you have done, regretful"

And here are few rectifications:

1- Fayhan Al-Ghamidi is not a Sheikh, is not even a Knowledge seeker. He was a drug addict until he was given Da'wah by few righteous people in the Masjid, and they offered him a Job as a teacher, and paid for his wedding, and he tells his story online and it's on Youtube, so some channels featured him just to tell his story, and he says that he was very bad to his mom and was asking her to forgive him.

2- He was mentally troubled and he speaks about that too.

3- He wasn't charged by raping his daughter, rather the Feminist Human Rights Female Group fighting the Women Driving Ban in KSA said that the Doctor said Fayhan doubted his 5 years old behavior and he got her virginity checked, and she was still a virgin.

4- How did the accusation of raping her came along! No idea! No one claimed so including those raising the attacks against the Islamists! No one ever claimed that, until I read it here from that article, which I have no idea how did they manage to slide it, as if there are no Arabic speakers in the English speaking world!

5- The Court has never revealed a single paper of the whole investigation, and the autopsy files were never shown to any media agency or newspaper, so whatever mentioned on the media is plain speculations.

6- The daughter, may ALLAH accept her, elevate her level, and cover her with His mercy was kept for 4 months in the Morgue for more investigation of the situation.

7- Her mom said that it was the step-mother, who was abusing the daughter, and he wasn't doing anything about it, he rather gave her the smirk whenever she wanted to speak to him about it, because the mother is divorced from him, and he was taking her to stay with him in the days of his turn.

8- The Hay'ah has asked the mother to seek her Blood right, i.e. to chop off his head, if found guilty.

9- No one said he will be forgiven even if he is found guilty. It is the Feminists group who speculated their fear of using a Fiqhi Opinion found in Al-Mughni of Ibn Qudamah Al-Maqdissi Al-Hanbali r.A, stating that a Father won't be killed by his kids' murder, but a mother will. The issue is that Anti-Secularists may adopt Ibn Qudamah's view just to oppose their opponents, and it is a strategy of secularists themselves, but I pray ALLAH will bring justice in this case.

10- Islam doesn't tolerate Sodomy, and it's an act to be punished by Death, let alone Incest + Sodomy. The Prophet PBUH gave a direct order to bring Him the head of the guy who committed Incest, and it has never been as clear as that, so there is not a tiny bit of accusation about incest, which some Kuffar are happy to promote.

11- This guy isn't known by anyone, but those who follow a so called Islamic Nasheed channels, where he was invited a couple of times, or was a guest in an Islamic Reality show.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved