Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:19:15 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 39
#KOTWART0139
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 2, 2013
மலேஷியாவில் ஆட்சி மாற்றம் வருமா?
இந்த பக்கம் 2283 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அது ஏப்ரல் 22ஆம் தேதி நள்ளிரவைத் தொட்டுவிட்டது. இரவு 11.30 மணிக்கு, மலேஷியாவின் கோலாலம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பேருந்திற்காகக் காத்திருந்தோம். இறுதியாக பேருந்து வந்தது. என் மகளையும், அவளது கணவரையும் அனுப்பி விட்டு, நானும், என் மனைவியும் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்புவதற்காக, வந்த டாக்சியை கை காட்டி நிறுத்தினோம். சாரதி தமிழர். உள்ளே நுழைந்ததும் வரவேற்றது மக்கள் திலகத்திற்காக டி.எம்.சௌந்திர ராஜன். ‘தாயில்லாமல் நானில்லை’ என்று உரத்து பாடினார். உண்மைதான்.

முன் ஆசனத்தில் அமர்ந்த நான் ஓட்டுநரைப் பார்த்து, “நீங்கள் எம்.ஜி.ஆர். ரசிகரா?” என்று கேட்டேன். “என்ன சார் அப்படி கேட்டுட்டீங்க...? ரேடியோவில் பாட்டு போடுறாங்க. நான் கேட்கிறேன்...” என்றார். ஆம், நான் ஹோட்டல் செல்லும் வரை எம்.ஜி.ஆரின் தனிப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. ஓட்டுநர் மேலும் பேசினார்.

“அவரைப் பிடிக்கிறவங்க உண்டு... பிடிக்காதவங்க உண்டு... இல்லாட்டி எப்படி சார் ஒருத்தர் அவரை சுடப்போவார்...?” என்று, 1967இல் நடந்த எம்.ஆர்.ராதா துப்பாக்கி சூடு சம்பவத்தை அவர் விவரமாக வர்ணித்தபோது, உண்மையில் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. எப்படி இவர் இவ்வளவு தெளிவாக இத்தனை விஷயங்களையும் நினைவில் வைத்திருக்கிறார் என்றெண்ணி வியந்தேன். இறுதி வரை அவர் பேச்சிலிருந்து அவர் எம்.ஜி.ஆரின் விசிறியா அல்லது எதிரியா என்று என்னால் இனங்காண முடியவில்லை.

மே 5 ல் வரக்கூடிய மலேஷிய நாடாளுமன்றத் தேர்தலின் பக்கம் எனது பேச்சைத் திருப்பினேன். “தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?” இது என் கேள்வி. “அரசாங்கம்தான் சார் ஜெயிக்கும்... எதிர்க்கட்சிக் காரங்க வாயால் பேசுவாங்க... அவங்களால ஒன்னும் செய்ய முடியாது... அப்படியே அவங்க வந்தாலும் மூனு மாசத்துல போட்டுட்டு ஓடிடுவாங்க... யாரு சார் அவங்களுககு சப்போர்ட் பண்ணுவாங்க? அமெரிக்கா காரன் சப்போர்ட் பண்ணுவான்னு நினைக்கிறாங்க... அதெல்லாம் நடக்காது...” என்று கூறிக்கொண்டே போனார்.

“இப்போ பாருங்க! நாங்க டாக்சி ஓட்டுறோம்... எங்களுக்கு டாக்சி லைசென்ஸ் தர்றாங்க... இரண்டு டயர் இலவசமா தர்றாங்க... மாச தவணைல பணம் கட்டி, 6, 7 வருஷத்துல டாக்சி எங்களுக்கு சொந்தமாகிறது...” என்று பல வசதிகளைப் பற்றி சொல்லிக்கொண்டே வந்தார்.

“இந்த அரசாங்கத்தில் ஊழல் அதிகமாக இருக்கிறதாகவும், எல்லோரும் சம்பாதிக்கிறவங்களா இருக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டுகிறார்களே...?” என்று கேட்டபோது, அவர் அதை மறுக்கவில்லை. “ஆமாம் சார்... நம்ம வாழ்க்கை முன்னேறுதா இல்லையா? நம்ம குழந்தைகள் படிச்சு முன்னுக்கு வர்றதுக்கு வாய்ப்பு தர்றாங்களா இல்லையான்னு நாம அதைப் பார்த்துகிட்டு போகனும் சார்... அவன் சாப்பிடுறதை நாம தடுக்க முடியாது” என்றார்.

மொத்தத்தில், இவர் எம்.ஜி.ஆரின் அனுதாபியா இல்லையா என்பதை இவர் வெளிக்காட்டவில்லை. ஆனால், தான் ஆளும் கூட்டணியின் தீவிர ஆதரவாளன் என்பதை வெளிப்படையாகக் காட்டினார்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த மலேஷிய இந்திய காங்கிரஸ் நியாயமான பின்னடைவைச் சந்தித்ததற்கும், அதன் தலைவராக இருந்த அமைச்சர் டத்தோ சாமிவேலு தோல்வி அடைந்ததற்கும், பல தமிழர் குறைகள் களையப்படாமலேயே இருந்தது முக்கிய காரணம்.

அவற்றுள் ஒன்று இந்த டாக்சி ஓட்டுநர் பிரச்சினை. மலேஷிய தமிழர்கள் பலர் டாக்சி ஓட்டுநர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முறையாக உரிமம் வழங்கப்படாது பாரபட்சம் காட்டப்பட்டு வந்தது. அதனைத் தலைவர்களால் சரிப்படுத்த முடியவில்லை. ஆகவே, 2008 தேர்தலில் மக்கள் எதிர்கட்சி பக்கம் சாய்ந்தனர்.

தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள 13.3 மில்லியன் வாக்காளர்களில், 950,000 பேர் இந்திய வம்சாவழியினர் என்பது குறிப்பிடத்தக்கது. 222 நாடாளுமன்றத் தொகுதிகளில், கிட்டத்தட்ட 60 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இந்த இந்திய வம்சாவழி வாக்காளர்கள் உள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இதனால் ஆளும் கூட்டணியும், எதிரணி கூட்டணியும் இம்மக்களைக் கவர பல விதமான வழிகளில் முயல்கிறார்கள். நவீன கணணி யுக்திகளும் YouTubeகளும் புகுந்துள்ளன என்பது ருசிகரமான தகவல்தான்.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மலேஷிய தேர்தலில் தமிழ்மொழி புழக்கம் ‘கொலவெறி’யாக வலம் வருகிறது. தமிழன்னைக்கு சந்தோஷம்தான். தமிழில் மட்டுமே அச்சடிக்கப்பட்ட வேட்பாளர்களின் பிரசுரங்கள் நிறையவே கண்களில் படுகின்றன. ஆளும் தேசிய கூட்டணியை ஆதரித்து ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பாடல்கள் YouTubeஇல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி அணியை ஆதரித்தும் ஐந்து பாடல்கள் உள்ளன. கட்சிகள் தங்கள் பிரச்சாரத்திற்கேற்ப பாடல் வரிகளை மாற்றியமைத்துள்ளன.

தமிழ் மக்களிடையே பிரபலமான ‘கும்கி’ படத்தின் “சொய்... சொய்...” பாடல் வரிகள் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், ‘கொலவெறி’ பாடலானது அரசாங்கத்திற்கு எதிராகவும், ஆட்சியை மாற்றக் கோரியும் பாடுகின்றன. ஏப்ரல் 24ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட ‘கொலவெறி’ பாடலை, ஏப்ரல் 28ஆம் தேதி மாலை 06.00 மணி வரை 64,212 பேர் பார்த்ததாக YouTube கூறுகிறது. அப்படியானால், தமிழ் இளைஞர்கள் ஒருவர் மீது இருவர் சாய்ந்து எதிரணி பக்கம் செல்கிறார்கள் என்பதுதான் பொருள்.

இதைத் தவிர, முப்பது நிமிடங்கள் ஓடக்கூடிய ‘விடியல்’ எனும் நாடக வடிவிலான பிரச்சார வீடியோ ஒன்றும் எதிர்தரப்பின் சார்பில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மலேஷிய பொதுத் தேர்தலில் இம்முறைதான் அதிகளவில் தமிழ் திரைப்படப் பாடல்களும், வீடியோக்களும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறுகிறார்கள்.

இது நிற்க, மலாய் சமூகத்தினர் நாட்டின் 28.3 மில்லியன் ஜனத்தொகையில் 63 சதவிகிதத்தினர். சீனர்கள் 27 சதவிகிதம். இந்திய வம்சாவழியினர் தமிழர்கள் உட்பட 9சதவிகிதமும், ஏனையோர் 1 சதவிகிதமும் ஆகும்.

ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சியான ஐக்கிய மலாய் கட்சியை சுமார் 72 விகித மலாய் மக்கள் ஆதரிப்பதாகவும், சீனர்களில் 20 விகிதம் மட்டுமே ஆதரிப்பதாகவும், ஜனவரி - பிப்ரவரியில் எடுத்த ஓர் ஆய்வு அறிவிக்கிறது. அதாவது, சீன வாக்காளர்களில் முக்கால் பகுதியினர் ஆட்சி மாற்றத்தைக் கோருகிறார்கள். தமிழர்களைப் பொருத்த வரை பாதி அளவிற்கு இரு பகுதிகளுக்கும் அது பிரியலாம் என்று எதிர்பார்க்கலாம். இளவட்டங்கள் மாற்றங்களை எதிர்பார்ப்பது இயற்கை. அதன் சாயலும் பல இடங்களில் தெரிவதாகவே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இருப்பினும், மலாய் மக்கள் மொத்தமாக அரசு பக்கம் திரண்டு நின்றால் எதிரணி சற்று சிரமப்படவே செய்யும். முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மத் பிரச்சார களத்தில் நிற்கிறார். அரசை ஆதரிப்பதுதான் மலாய் மக்களுக்கு நல்லது என்றும், எதிரணிக்குத் தலைமை வகிக்கும் முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்றாஹீம் கூறும் சமத்துவ அரசு, மலாய் மக்களின் முதன்மையையும், இஸ்லாத்தின் மேன்மையையும் அழித்து விடும் என்றும் பிரச்சாரம் செய்கிறார். கிராமங்களில் அவரது பெயருக்கும், பேச்சிற்கும் நல்ல செல்வாக்கு உண்டு.

ஆகவே, மலாய் குடும்பங்களில் மூத்தவர்கள் தொடர்ந்தும் ஐக்கிய மலாய் கட்சியை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கும்போது, இளவட்டங்கள் ‘ஊழல் - Corruption” என்று முனங்கிக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. ஆம், காலம் மாறிவிட்டது. கல்வி வளர்ந்துவிட்டது. கணணியும் வந்துவிட்டது. அது எல்லா விபரங்களையும் தருகிறது.

மக்களுக்கு, மாடு வாங்கும் பணத்தில் சொகுசு வீடு வாங்கிய அமைச்சர் மீது நடவடிக்கை ஏதுமில்லை. பாலம் கட்டியதில் ஊழல், ரோடு போட்டதில் ஊழல், அதில் கமிஷன், இதில் கமிஷன் என அத்தனையுமே கணணியில் வருவதால், இளைஞர்கள் வெறுக்கிறார்கள். அதில் அவர்களுக்கு மலாய் என்றோ, சீனர் என்றோ, இந்தியர் என்றோ பிரிவினை இல்லை. இள இரத்தம் எல்லாம் ஒன்றுதான்.

எதிர்க்கட்சி கூட்டணி தலைவர் அன்வர் இப்றாஹீம், அரசின் ஊழலை - பண விரயத்தைத்தான் பிரதானமாக எடுத்து மேடைகள்தோறும் பேசுகிறார். ஓர் இரவில் சுமார் மூன்று ஊர்களில் பேசுகிறார். அவர் சிறந்த பேச்சாளர். இஸ்லாமிய மார்க்க அறிஞர். சென்ற 2011ஆம் வருடம் பிப்ரவரி 23ஆம் திகதி கர்நாடகா - மங்களூரில் நடந்த ஓர் இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர் வந்தபோது, சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர். ஒரே குடும்பத்திலிருந்து வந்த இரண்டாவது பிரதமர் என்றும் இவரைக் குறிப்பிடலாம். இவரது தந்தை துன் அப்துல் ரசாக் அவர்கள் 1970 முதல் 1976 வரை மலேஷியாவின் பிரதமராக இருந்தார். மலேஷியாவில் நான் வசித்த அக்காலத்தில் ஒருமுறை, ‘மஸ்ஜித் நெகரா’ என்று சொல்லப்படும் தேசிய மஸ்ஜிதுக்கு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்று, மூன்றாவது வரிசையில் அமர்ந்து இருக்கையில் எனக்கருகில் வந்தமர்ந்த நபரைப் பார்த்து நான் அப்படியே அசந்து போய்விட்டேன். அது அன்றைய பிரதமர் துன் அப்துல் ரசாக் அவர்கள்தான்.

இறுதியாக, ஏப்ரல் 23ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து தாய்லாந்தின் தலைநகரான பேங்காக் செல்வதற்காக அறையைக் காலி செய்து வெளியேறியபோது, “டாக்சி வேண்டுமா?” என ரூம் பாய் (அவர் பையன் அல்ல, 35 வயது இருக்கலாம்) கேட்டார். “ஆமாம்” என்ற நான், “சாமான்களைக் கீழே வையுங்கள். 15 நிமிடங்கள் ஹனீஃபா கடைக்குப் போய் வர வேண்டும்” என்றேன். ரூம் வாடகையை முன்கூட்டியே மொத்தமாக செலுத்திவிட்டோம்.

ஆகவே நாங்கள், அறையைக் காலி பண்ணிவிட்டோம் என்று ரிசப்ஷனில் சொல்லவும், அங்கிருந்த நங்கை, “நீங்கள் 45 ரிங்கித் (மலேஷிய நாணயம்) கட்டணம் தொலைபேசியில் பேசியதற்கு செலுத்த வேண்டும் என்றார். ஒரு ரிங்கித் சுமார் 17 இந்திய ரூபாய். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. “உங்கள் தொலைபேசியில் உள்ளூர் அழைப்பு ஒன்று மட்டுமே எடுத்தேன்... அதற்கு 3 ரிங்கித் மட்டுமே வரும்” என்று நான் வாதிட, “இல்லை, நீங்கள் டெல்லிக்கு இரண்டு முறை பேசியுள்ளீர்கள்...” என்றார்.

நான் மறுத்து, “அந்த இலக்கத்தை சொல்லுங்கள்” என்றேன். அவர், “நீங்கள் உள்ளூருக்குப் பேசிய இலக்கத்தைச் சொல்லுங்கள்!” என்றார். எனது கைபேசியில், அந்த இலக்கத்திற்குப் பலமுறை நான் பேசியதைக் காட்டினேன். அதே இலக்கம்தான் அவரது அட்டையில் டெல்லி எண்ணோடு பதிவாகியுள்ளது. ஆகவே, அவர் தான் கணணி இலாகாவில் விசாரிப்பதாகவும், நான் வெளியே சென்று வரலாம் என்றும் சொன்னார்.

பின்பு நான் வந்ததும், “அது கணணியின் தவறு, மன்னிக்கவும்... கட்டணம் கட்ட வேண்டியதில்லை...” என்றார். எனக்கு எரிச்சலாக இருந்தது. நான் அந்தப் பெண்ணிடம், “இந்த ஹோட்டல் எந்தக் குழுமத்தின் நிர்வாகத்தில் உள்ளது என்று எனக்குத் தெரியும்...” என்று சொல்லி, எனது கைபேசியின் Contact பகுதியைக் காட்டி, “இவரை உங்களுக்குத் தெரியுமா...? நானும், இவரும் இதே தெருவிலுள்ள Malay Mansionஇல் ஒரு காலத்தில் ஒரே மாடியில் வசித்தோம்...” என்றேன். அந்தப் பெண் ஆடிப் போய்விட்டார். அதில் இருந்த பெயர்: HAJI SYED M.SALAHUDDIN, ETA ASCON GROUP, DUBAI.

அருகில் நின்ற ரூம் பாய், ஏற்கனவே சாமான்களை டாக்சியில் வைத்துவிட்டதாகவும், “அதுதான் டாக்சி! 80 ரிங்கித்” என்றார். “ஏன் வைத்தீர்கள்...? ஏன் டாக்சிக்கு ரேட் பேசினீர்கள்...? மீட்டர் படிதானே காசு கொடுக்கனும்...?” என்று சொல்ல, அவர் தலையை சொறிந்தார்.

மலேஷியா செல்லும் பயணிகள் கவனிக்க வேண்டும். அங்கு எங்கு சென்றாலும் மீட்டர் படிதான் காசு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலே ரேட் பேசுகிற வழக்கத்தை வைத்து - குறிப்பாக, மலேஷிய தமிழ் டிரைவர்கள் ஒன்றுக்கு இரண்டாக, மூன்றாக, ஏன் நான்காகக் கூட சகோதர தமிழனிடம், தொப்புள் கொடி உறவைக் காட்டி ஏய்க்கிறார்கள். ரூம் பாய் மன்னார்குடியிலிருந்து வந்தவராம். கேட்க வேண்டியதில்லை!

இப்போது டிரைவரிடம், “எவ்வளவு?” என நான் கேட்டேன். “80 ரிங்கித்” என்றார். “மீட்டரைப் போட்டு, எவ்வளவு வருகிறதோ அதனை எடுத்துக்கொள்ளலாமே...?” என்றேன். உடனே “சரி” என்று மீட்டரைப் போட்டுவிட்டார். இதமான மனிதர். அவரது நடத்தை எனக்குப் பிடித்திருந்தது.

சில தினங்களுக்கு முன் பக்கத்திலிருந்த நகை, ஆபரணக் கண்காட்சிக்கு நான் டாக்சியில் சென்றபோது, ஐந்து ரிங்கித் வந்ததாகவும், பின்பு எனது மகள், மனைவி, மருமகன் ஆகியோர் வரும்போது, தமிழ் டிரைவர் 25 ரிங்கித் கேட்டதாகவும், மீட்டர் போட மறுத்ததால் வேறு டாக்சியில் வந்ததாகவும், அது ஏழு ரிங்கித்தில் வந்ததாகவும் நான் அவரிடம் குறிப்பிட்டு, சிங்கப்பூரில் இதுபோன்ற தில்லுமுல்லுகள் இல்லை என்று குறிப்பிட்டேன்.

அவர் எனது கருத்தை ஆதரித்தார். தான் சிங்கையில், நெடுங்காலமாக சிங்கை - கோலாலம்பூர் பஸ் ஓட்டியதாகவும், பின்பு தாய்லாந்து - கோலாலம்பூர் பஸ் ஓட்டியதாகவும் கூறினார்.

பின்பு மெதுவாக அரசியலுக்கு பேச்சைத் திருப்பினேன். இவர் முழுக்க முழுக்க ஊழல் எதிர்ப்பாளர். ஆகவே, ஆட்சி மாற்றம் வேண்டும் என்றே பேசினார். அரசு தோல்வியடைவது உறுதி என்றார். திடீரென எனக்கோர் அதிர்ச்சி ஏற்பட்டது. இவ்வளவு நேரமும் இவரை நூற்றுக்கு நூறு ஹிந்து என்று நினைத்தே பேசிய நான், காரின் முன்பு இருந்த ஓட்டுநரின் அடையாளப் படத்தில், இவர் தொப்பி அணிந்திருந்ததைப் பார்த்ததும், “உங்கள் பெயர் என்ன?” என்றேன். “முஹம்மது சுலைமான்” என்றார். அதோடு, “எனது கதை மிகவும் வித்தியாசமானது” என்றார்.

“நான் பிறவியில் ஒரு ஹிந்து... எனது தந்தை வங்கியிலும், தாய் ஆசிரியையாகவும் பணிபுரிந்தனராம்... எனக்கு மூன்று வயது இருக்கும்போது அவர்கள் இருவரும் ஒரு கார் விபத்தில் மரணமாகவே, ஒரு மலாய் குடும்பத்தில் என்னை எடுத்து வளர்த்தனர்... எனக்கு தமிழ் தெரியாது... வளர்ந்த பின், கொஞ்சங்கொஞ்சமாக தமிழ் பேசக் கற்றுக்கொண்டேன்...” என்றார்.

மலாய் பெண்ணைத் திருமணம் செய்து, மூன்று ஆண் மக்களும், ஒரு பெண்ணும் இருப்பதாகவும், மூவரும் படித்து வேலை செய்வதாகவும், கடைசி பெண் மட்டும் படித்துக்கொண்டிருப்பதாகவும், அவரும் படித்து முடித்துவிட்டால் தனக்கு ஓய்வாகிவிடும் என்றும் கூறினார் அவர்.

“அரசு டாக்சி டிரைவர்களுக்கு நிறைய சலுகைகள் தந்திருப்பதாக சொல்கிறார்களே...?” என்று கேட்டபோது, “அப்படி சொல்ல முடியாது... ஒரு கையில் கொடுத்து அடுத்த கையில் வாங்கிவிடுகிறார்கள்... பின்னால் பல பிடிகளை வைத்துள்ளார்கள்...வண்டி ரிப்பேருக்கு அவர்கள் குறிப்பிடும் இடத்திற்குத்தான் போக வேண்டும்... பொருட்களை, அவர்கள் குறிப்பிடும் இடத்தில்தான் வாங்க வேண்டும்... இப்படி நிறைய ஊழல் உண்டு!” என்று அவர் பொரிந்து தள்ளினார். மீட்டர் 55 ரிங்கித் வந்தது. நான் 80 கொடுத்தேன்.

டாக்சி டிரைவர் முஹம்மது சுலைமான் தமிழ் பேசினாலும், மலாய் குடும்ப சூழலில் வசிக்கிறார். இவர் ஊழலை எதிர்க்கிறார் என்றால், ஓரளவு விபரமறிந்த மலாய் மக்கள் இவரது மனநிலையில் இருக்கிறார்கள் என்பது பொருள். இளைஞர்கள் சிங்கப்பூரை உதாரணமாகப் பார்க்கிறார்கள். ஊழலற்ற ஆட்சியை அவர்களால் தர முடியும் என்றால், ஏன் நம்மால் முடியாது என்பது கல்வியறிவுள்ள அவர்களின் கேள்வி.

ஆனால் கிராமத்து மலாய் பாமர மக்கள், தங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்தே வருவதால், பெருச்சாளிகளைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஆனாலும், சமீபத்திய ஆய்வு அன்வர் இப்றாஹீம் தரும் ஊழல் - பண விரயம் பற்றிய புள்ளி விபரம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதாகவே சொல்கிறது.

பிரதமர் நஜீப் அவர்களைப் பொருத்த வரையில், மலாய் வாக்குகளை உறுதிப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார். சென்ற முறை எங்கெல்லாம் அற்ப சொற்ப வாக்குகளில் வென்றனரோ, தோற்றனரோ அங்கெல்லாம் அவரது குழு சுத்திச் சுத்தி வருகிறது. “மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெல்வோம்” என்று அவர் வெளிப்படையாகக் கூறினாலும், தொடர்ந்து 60 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், சுதந்திரம் கிடைத்த பின்னர் 13ஆவதாக நடைபெறும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயமாக இழுபறி நிலையைத்தான் தரப்போகிறது.

பணபலமும், ஆட்சியதிகாரமும் கையிலிருப்பதால் அரசு மீண்டும் பதவிக்கு வரலாம். ஆனால் அது இலகு நடையாக இருக்க முடியாது. இந்தக் கணக்கிற்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்து, எதிரணியை சிம்மாசனத்தில் அமர்த்தவும் செய்யலாம். அன்வரா? நஜீபா? மலேஷியாவில் ஆட்சி மாற்றம் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சுவாரஸ்யம்
posted by: Mauroof (Dubai) on 02 May 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27172

"மலேஷியாவில் ஆட்சி மாற்றம் வருமா" கட்டுரை படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

அப்படியே கட்டுரை ஆசிரியர் அவர்கள் தனது பார்வையை அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் ஏற்படவிருக்கும் / ஏற்படாதிருக்கும் ஆட்சி மாற்றம் மற்றும் அதனைச் சார்ந்து தமிழகத்தில் ஏற்படப்போகும் / முறியப்போகும் கூட்னிகள் குறித்த கட்டுரை ஒன்றை விரைவில் வழங்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. இந்திய மக்கள் இனி பசியில்லாமல் வாழ ஒரு இராணுவ ஆட்சி வேண்டும்...
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 02 May 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27175

மலேஷியாவில் ஆட்சி மாற்றம் வருமோ...! வராதோ...!

முதலில் நமது இந்தியாவில் மக்களாட்சி மறைந்து இராணுவ ஆட்சி விரைவில் மலர வேண்டும்... கட்சியும் வேண்டாம்... அதற்க்கு பல கலர்களில் கொடியும் வேண்டாம்...! அக்கட்சிகளுக்கு பல தலைவர்களும் வேண்டாம்...! இந்திய மக்கள் இனி பசியில்லாமல் வாழ ஒரு இராணுவ ஆட்சி வேண்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...பயண கட்டுரை..
posted by: mackie noohuthambi (ooty) on 03 May 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27182

இதயம் பேசுகிறது என்ற ஒரு இதழில் திரு மணியன் அவர்கள் பயண கட்டுரை எழுதுவார்கள். படிக்கும்போது எங்கே போகாவிட்டாலும் இலங்கை, மலேசியா,சிங்கப்பூர் சென்று வரவேண்டும் என்ற ஆசை துளிர் வீடும். ஆனால் என்னைபோன்ற ஏழைகளுக்கு அது எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது.

இலங்கை மட்டும் எனது தந்தை தந்த நட்பு வட்டங்கள், எனது தந்தையின் தந்தை விட்டு சென்ற உறவுகளின் வட்டங்கள் எட்டும் தூரத்தில் வெறும் 8 ஆயிரம் ரூபாய்களில் போய்விட்டு வரக்கூடியதாக உள்ளது. விசா பிரச்சினையும் இல்லை. அங்குள்ள விமான நிலையத்திலேயே ஒரு மாதம் விசா தருகிறார்கள். எனக்கு சிங்களத்தில் பேசி சமாளிக்கும் முறையும் தமிழ் ஆங்கிலம் அங்கு சரளமாக பேசப்படுவதால், விலைவாசிகளும் நமதூர் கணக்கிலேய்லே இருப்பதால் சமாளிக்க முடிகிறது. அங்கு விலை அதிகம் என்று நினைத்தாலும் exchange rate பார்த்தால் எல்லாம் ஒன்றுதான். விரும்பியதை சாப்பிடலாம் நமதூர் மாதிரி நல்ல இயற்கை சூழல்கள்..உபசரிப்பவர்கள் ஒரு புன்சிரிப்போடு அதை செய்கிறார்கள், விருந்தாளிகள் வந்தால் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள்.

இதே நிலை சிங்கப்பூர் மலேசியா வில் இருப்பதாக தெரியவில்லை. அங்குள்ள வாழ்க்கை முறை, அணுகுமுறைகளை ஆசிரியர் சொல்லியிருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.விசா எடுப்பதில் உள்ள சிரமங்கள், தங்குவதற்கு இடம் தேடுவதில் உள்ள சிரமங்கள்..ஆசிரியர் BORN WITH SILVER SPOON என்று சொல்வார்களே அந்த உயர் குடியை சேர்ந்தவர் என்பதால் அவரை கை நீட்டி ஆரத்தழுவ நமதூர் காயல் நல மன்றங்கள் கூட முன் வரலாம்.

எனவே வெறும் அரசியல் பற்றி எழுதுவதை விட சாமானியர்களும் அந்த நாட்டுக்கு சென்று வர என்னென்ன தேவை படும் என்று எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்போதும் காலம் கடந்து விட வில்லை..பயணக் கட்டுரை தொடர் என்று அவைகளை எழுதினால் நல்லது.

நமது பயண கட்டுரைகள் மற்றவர்களுக்கு அங்கு போக வேண்டும் என்ற ஆசையை தூண்ட வேண்டும். மற்றப்படி அரசியல் உள்ள காலம் எல்லாம் ஊழல் இருக்கவே செய்யும். மூக்கு உள்ளவரை சளி இருக்கவே செய்யும். ஆட்சி மாற்றங்களால் ஊழல் கை மாறுமே தவிர ஊழல் மாறாது. ஊழல் செய்யும் தந்திரங்கள் உபாயங்கள், வழி முறைகள் மாறும். இது இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஊழல். இஸ்லாமிய ஆட்சிகள் கூட அப்படிதான். இஸ்லாமியர்கள் உலகில் நிறையப்பேர் இருக்கிறோம் ஆனால் இஸ்லாம் சொன்னபடி நாம் வாழ்கிறோமா எனபது MILLION DOLLAR QUESTION.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: Cnash (Makkah) on 06 May 2013
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27256

ஒரு மாற்றமும் வரவில்லை .... 60 ஆண்டு கால ஆளும் கட்சியே மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. மலேசியாவில் நிலையான ஆட்சி
posted by: V D SADAK THAMBY (Guangzhou,China) on 06 May 2013
IP: 218.*.*.* China | Comment Reference Number: 27258

பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை என்பது வருத்தப்படக்கூடிய விஷயமே.

நல்லவேளை மலேசியாவில். நம் நாட்டைபோன்று கூட்டணிக்கட்சிகளின் தயவில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படாமல் தனிக்கட்சிக்கு பெரும்பான்மை அங்கு கிடைத்ததே! அதுவும் ஆளும் கட்சிக்கு அருதிப்பெரும்பான்மை கிடைத்ததால் நிலையான ஆட்சி அங்கு அமையும். அல்ஹம்துலில்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved