Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:36:10 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 101
#KOTWART01101
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 18, 2016
நினைவில் நிற்கும் மக்கி மாமா!
இந்த பக்கம் 3494 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் பொருளாளர் - மக்கீ மாமா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட எம்.என்.முஹம்மத் இப்ராஹீம் மக்கீ அவர்கள் கடந்த 14-01-2016 அன்று சாதாரண சளி, காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணித்துவிட்டார்கள் என்ற செய்தி அஸ்ஹர் ஜமாஅத்தினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பொது வாழ்வில் அர்ப்பணிப்பும், காதலும் கொண்ட ஓர் அருமையான மனிதரை இழந்து விட்டோம்.

தொழில் ரீதியாகவும் பொதுச் சேவைகள் மூலமும் அவர்களுடன் இணைந்து பழகியவர்கள் அவர்களின் செயல்பாட்டில் நிறைய அம்சங்களைக் கற்றிருப்பார்கள்.

நாணயம் - நம்பிக்கையுடன் வாழ்ந்ததுடன், பண விஷயமென்றால், என்னதான் சொந்தம் - நட்பு என்ற உறவிருந்தாலும் - அது சமுதாயம் சார்ந்த விஷயமென்றால் யாரிடமும் எவ்வித சார்புத் தன்மையையும் காட்டமாட்டார்கள். ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதைச் சீராகவும் செம்மையாகவும் செய்ய வேண்டும் என்ற அழுத்தம் கொண்டிருந்தார்கள்.

அல்ஜாமிஉல் அஸ்ஹர், இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் (இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் - ஐ.ஐ.எம்.) சார்ந்த ஒரு வேலை என அலுவலகத்திற்குச் சென்றால் அநேகமான நேரங்களில் தென்படுபவர் மக்கீ மாமாவாகத்தான் இருப்பார்.

மக்கீ மாமா மறைந்துவிட்டார்கள் என்றாலும் அஸ்ஹர் அலுவலகத்தின் பக்கம் செல்லும் போதெல்லாம் என்னையுமறியாமல் என் கண்கள் அவர்களை ஏனோ தேடுகின்றன. அவர்கள் இல்லாத அலுவலகம் ஏதோ பொலிவிழந்ததாக உணர்கிறேன். அந்தளவுக்கு அஸ்ஹர் மற்றும் ஐ.ஐ.எம். சார்ந்த அனைத்து செயல்பாடுகளிலும் தன்னை ஏதோ ஒரு விதத்தில் ஈடுபடுத்தி செம்மையாகச் சேவையாற்றி நம் மனதையெல்லாம் கொள்ளைகொண்டு விட்டார்கள்.

எழுபத்தி நான்கு வயதிலும் ஓர் இளைஞனைப் போன்று - அதிகாலை முதல் இரவு பின்னேரம் வரை சுறுசுறுப்பாக சுழன்று செயல்பட்டது பிரமிக்கத்தக்கது.



தினமும் காலை எட்டரை மணிக்கு, எல்.கே.ஜி. மாணவர்களுடன் குத்துக்கல் தெருவில் விஸ்டம் பள்ளிப் பேருந்திற்காகக் காத்திருப்பதைக் காண முடியும். பகல் பின்னேரம் வரை - அவர்கள் அறங்காவலர்களுள் ஒருவராகப் பணியாற்றிய அப்பள்ளிக்கூடத்தில் பொறுப்பாற்றிவிட்டு, சற்று நேர ஓய்வுக்குப் பின் மஃரிபிலிருந்து இரவு 10-11 மணி வரை அஸ்ஹர் அலுவலகத்தில் காணலாம். விடுமுறை நாட்களில் காலை முதல் பகல் 2.30 மணி வரையிலும் அஸ்ஹர் அலுவலகத்தில்தான் இருப்பார்கள்.

அல் ஜாமிவுல் அஸ்ஹரின் அன்றாடக் கணக்கு வழக்கு,
அதன் புதிய கட்டிட கணக்கு,
அதன் மக்தப் - ஹிஃப்ழு மத்ரஸா - தீனியாத் கணக்கு,
ஐ.ஐ.எம். அமைப்பு மற்றும் அதன் பைத்துல்மால் கணக்கு,
என பல செயல்பாட்டுக் கணக்குவழக்குகளை தனியே அமர்ந்து தம் கையாலேயே எழுதிப் பராமரித்தும், பாதுகாத்தும் வந்தார்கள்.

கணினி இருந்தும், கணினி முறையில் எழுத ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தும் - முதலில் தன் கைப்பட எழுதிய பின்பே கணினியில் பதிவேற்றக் கொடுப்பார்கள். “கணினியை கற்றுக் கொள்ளுங்கள் மாமா!” என்று சொன்னால், “போ... போ...! உனக்கு வேலைதானே நடக்கனும்...? நடக்குதா, இல்லையா...? குறையிருந்தால் சொல்லு!” என்பார்கள். மக்கி மாமாவின் மறைவால் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை.

அவர்களின் இடத்தை வேறு ஒரு தனி மனிதனால் ஈடு செய்ய முடியுமா என்பது ஐயத்திற்குரியதே.

மெதுவாகத்தான் செய்தார்கள்; ஆனால் முழுமை இருந்தது. பழைய முறைகளைத்தான் பின்பற்றினார்கள்; ஆனாலும் எந்தக் குறையுமின்றி நிறைவாக இருந்தது.

என்னதான் பழையதாகவும், மெதுவாகவும் சென்றாலும் ‘ஓடிக்கொண்டிருப்பதுதான் சிறந்த வாகனம்’என்ற ஒரு சொல்லாடல் உருது மொழியில் உள்ளது. இந்த ஒப்பீடு மக்கீ மாமாவுக்கு மிகவும் பொருந்தும்.

நேர்மை, நேரந்தவறாமை, பணியாளர்களிடம் கனிவுடன் கூடிய கடுமை, யாருக்காகவும் வளைந்து போகாமை, அவ்வப்போது சினம் கொண்டாலும் அநேகமான நேரங்களில் சிரிப்பும் நகைச்சுவையும் கூடிய தன்மை என பல ‘மை’களைக் கொண்டு ஆமை போல செயல்பட்டு, வேகத்தில் கூடிய முயலையே வென்ற நல்ல பண்பாளர். பொதுப் பணத்தை - சிக்கனம், வீண்விரயம் இரண்டையும் பகுத்தறிந்து பாதுகாத்தவர்.

அவர்களுடன் இணைந்து பணியாற்றும்போது உற்சாகமும், மகிழ்ச்சியும் மிகுதியாக இருக்கும். பிறர் தன்னைக் கேலி செய்வதையும் ரசித்து சிரிக்கக்கூடிய சீரிய மனிதரல்லவா அவர்...?

ஒவ்வொரு நாளும் ‘தான் நாளையே இறந்து விடலாம்’ என்று எண்ணியே அன்றைய வேலைகளை அன்றைய நாளிலேயே முடிக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதிபட வாழ்ந்தவர்.

அதனால்தான், தான் கடைசியாக சுகவீனப்பட்டபோது தன் குடும்பத்தாரிடம், “எல்லாக் கணக்குவழக்கையும் முடிச்சிட்டேன்... நான் யாருக்கும் எந்தத் தொகையையும் கொடுக்க வேண்டியதில்லை... யாருக்கும் நான் பொறுப்பாளியில்லை...” என்று கடைசியாகப் பேசுவது போலவே பேசி, வீட்டை விட்டும் மருத்துவமனைக்கு விடைபெற்றுச் சென்றதாக அறிந்துகொண்டேன்.



ஒவ்வொரு ஜூம்ஆ வசூலும், பெருநாள் வசூலும் ஏதோ தனக்குக் கிடைக்கப் போவதைப் போன்று ஆட்களை ஏவுவதும், வசூலான பணத்தை எண்ணும்போது சென்ற ஆண்டை விட இம்முறை கூடுதலாக வந்துள்ளதா என பரபரப்புடன் எதிர்பார்ப்பதும், பணத்தை எண்ணுபவர்கள் வேண்டுமென்றே கூட்டலில் குறைவாகக் காட்டி அவர்களைக் கிண்டல் செய்வதும் - இனி கிடைக்கவே கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும்.

நோன்பு காலத்தில் கஞ்சி ஏற்பாடு, குர்ஆன் வகுப்பிற்கு ஆலிம்களை வரவழைத்தல், அவர்கள் உண்ண, உறங்க இட ஏற்பாடுகளைச் செய்தல், உள்ஹிய்யா மிருகங்கள் வாங்குவது தொட்டு, பங்கிட்டு வினியோகிப்பது வரையிலுள்ள அனைத்துப் பணிகளுக்கும் தானே முன்னின்று செயல்படுவதுடன் அந்தந்த குழுவினரை உற்சாகப்படுத்தி வேலை வாங்குதல் என அனைத்திலும் சகல வல்லமை பொருந்தியவர்.



கணினியை வைத்துள்ள நாம் கவனக் குறைவுகளாலும், சோம்பலாலும் நிறைய வேலைகளைத் தேக்கி வைத்திருக்கலாம். ஆனால் கணினி முறைக் கணிதத்தைக் கற்காத மாமாவின் கணக்கில் ஒரு நாளும் அடித்தல் திருத்தல் இருந்ததில்லை... கூட்டல் கழித்தலில் தவறு என்றுமே ஏற்பட்டதில்லை.

கருணையுள்ள அல்லாஹுத் தஆலா மக்கீ மாமா அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளைப் பொறுத்து, அவர்களின் சேவையை ஒப்புக் கொள்ளப்பட்ட சேவையாக ஏற்று, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் நல்லோருடன் நிறைவாக அமர்ந்திருக்கும் நல்ல பாக்கியத்தை அவர்களுக்கும், நம் யாவருக்கும் தந்தருள்வானாக, ஆமீன்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...எதனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை
posted by: mackie noohuthambi (kayalpatnam ) on 19 January 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42881

எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை.

இதைப் படிப்பவர்கள் சிலர் உடனே சலித்துக் கொள்வார்கள் இவனுக்கு எம்ஜியார் பாட்டை எழுதாமல் நேரம் போகாது. சிலர் எப்படி சமயோசிதமாக எழுதுகிறான் என்று பாராட்டுவார்கள்.

இது எம்ஜியார் பாடிய பாடல் அல்ல கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் TMS பாடியது எம்ஜியார் வாயசைத்தார் என்பதை ஏனோ இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

மக்கி மாமா அவர்களை பற்றிய இந்த சிறப்பு கட்டுரை இதை எல்லாம் உள்ளடிக்கிய தத்துவம் உள்ளதுதான். மக்கி மாமா அவர்களை மாணிக்க வியாபாரியாக இருக்கும்போது தொடர்பு கொண்டவர்களுக்கு அவரை ஒரு நேர்மையான வியாபாரியாக தெரியும்.

என்போன்று அவர்களுடன் சமீபத்தில் இலங்கை இந்திய கப்பல் போக்குவரத்து ஆரம்பித்து அது அல்ப ஆயுசில் முடிந்து விட்டதே அப்போது அவர்களுடன் கப்பல் பயணம் மேற்கொண்ட அனுபவம் உள்ளவர்களுக்கு அந்த விஷயம்தான் தெரியும்.

தரீக்காவின் தலைவர்களுக்கு சொந்தக் காரராக இருந்து அவர் வாழ்ந்த போது அவருடன் இருந்தவர்களுக்கு அவரை தரீக்காவின் ஒரு உறுப்பினராகவே தெரியும். ஆனால் நல்ல மனிதன் என்று ஒருவரை சொல்வதற்கு இதெல்லாம் காரணிகள் இல்லை என்று நபி தோழர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன செய்தி ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது.

ஒருவரை நல்லவர் என்று அடையாளம் காட்ட மூன்று செய்திகளை அவர்கள் சொல்கிறார்கள். பக்கத்து வீட்டுக் காரராக அவர் நம்முடன் பழகும் முறை - பயணத்திலே அவர் நம்முடன் அனுசரித்து செல்லும் முறை - கொடுக்கல் வாங்கலிலே அவர் நடந்து கொள்ளும் முறை இவை மூன்றும்தான் ஒருவனை நல்லவனா என்று தீர்மானிக்கும் LITMUS TEST .

இந்த பரீட்சையில் அவர்கள் A GRADE வாங்கி இருப்பதாக இந்த கட்டுரை மட்டும் சொல்லவில்லை அவரைப் பற்றி அறிந்தவர்கள் எல்லோருமே அப்படிதான் சொல்கிறார்கள்.

நெல்லை ROSEMARY மருத்துவ மனையில் அவர்கள் அனுமதிக்கப் பட்டுள்ள செய்தி கேள்விப் பட்டவுடன் அவர்கள் நாளை வீடு திரும்பி விடுவார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறுவிதமாக இருந்தது. அவசர அவசரமாக ROSEMARY சென்றபோது ''IT IS TOO LATE FOR COLLECTION ''என்று வங்கியிலே சொல்வதுபோல் சொல்லி விட்டார்கள்.

கையை பிசைந்து கொண்டு நின்றபோது அவரை தாங்கி செல்லும் அமரர் ஊர்தி எனக்காகவே காத்திருந்தது. மக்கி மாமா அவர்களும் என் வரவை எதிர்பார்த்தவராக இருந்ததுபோல் இருந்தது. எங்கிருந்தோ ஒரு கை கண்ணாடியை இழுத்து எனக்கு வழிவிட்டது அவர்கள் நாடியை பிடித்து உயர்த்தவும் அவர்கள் நெற்றியை தொட்டு முத்தமிடவும் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை அல்லாஹ் வழங்கினான்.

பேச்சில் இனிமை தொழிலில் நேர்மை பொது வாழ்வில் தூய்மை இவற்றின் மறுபதிப்பு மக்கி மாமா அவர்கள்.

''புரியாத பிரியம் பிரியும்போது புரியும்'' என்பார்கள். அன்று பிரிந்தவர் உறவு எனக்கு புரிந்தது.

ALLAAHUMMAGHFIR LAHOO VARHAMHOO..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. மறக்க முடியாத மாமனிதருள் ஒருவர் மக்கீ மாமா!
posted by: S.K.Salih (Kayalpatnam) on 19 January 2016
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42882

என் தந்தையின் - எஞ்சியிருக்கும் மிக நெருக்கமான தோழர்களுள் ஒருவர்... என் பாசத்திற்குரிய தோழப்பா... என் மீதும், என் குடும்பத்தின் மீதும் தீராத அக்கறை கொண்டவர்...

என்றென்றும் வேடிக்கையாகவே பேசிப் பழக்கப்பட்டவர்... அவர் இருக்குமிடத்தில் கலகலப்பிற்குப் பஞ்சமிருக்காது...

கள்ளங்கபடமற்றவர்... எல்லோரும் நல்லா இருக்கனும் என்ற சிந்தனையை தன் நிறைவு நாள் வரை கொண்டிருந்தவர்...

அவர் சார்ந்த ஒரு நிறுவனத்திலிருந்து நான் விடைபெற்ற பிறகு, “கொளத்தோட கோவிச்சிக்கிட்டு ...னாவ கழுவாம போயிட்டியே...?” என்று வேடிக்கையாகச் சொல்ல, அதற்கு நான் என் பாணியில் விளக்கம் சொல்ல - தானும் சிரித்து, என்னையும் சிரிக்கச் செய்தவர்.

ஐ.ஐ.எம். உள்ஹிய்யா ஏற்பாடுகளை முன்னின்று பொறுப்பேற்றுச் செய்தவர்.

ஒருமுறை அவர்கள் ஹஜ் பயணத்திற்காக என்னிடம் பயணம் சொன்னார்...

“மக்கா நா ஹஜ்ஜுக்கு போறேன்... துஆ செய்!”

“அல்லாஹ் உங்க அமல்களை தனதருளால் கபூல் செய்வானாக... உங்க துஆவில் என்னையும், என் குடும்பத்தையும் மறந்துடாதீங்க... வாப்பாவுக்கும் நிறைய கேளுங்க...”

“கண்டிப்பா மக்கா...”

“சரி மாமா... உள்ஹிய்யா வேலையெல்லாம் இருக்கே... பெருநாளுக்குள்ள வந்துடுவீங்களா...?”

“ம்... சொல்ல முடியாதுப்பா... (என்றவர் ஏதோ நினைவுக்கு வந்தவராக) முட்டப்பயலே! போறதே பெருநாளுக்காகத்தானே... பைத்தியமா ஒனக்கு முட்டாப்பய?”

இப்படி சென்றது எங்கள் உரையாடல்!

ஒருமுறை அவர்கள் உள்ஹிய்யாவுக்காக மாடு கொள்முதல் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், என் மூத்த நண்பர்கள் சிலரது “வேண்டுகோளுக்கு” இணங்க, அவருக்கு அறிமுகமில்லாத ஓர் எண்ணிலிருந்து அவர்களின் கைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு, செத்துப்போன ஒரு மாடு குறித்து, மாட்டு விற்பனையாளர் போலவே பேசினேன்... அவரும் நம்பி என்னிடம் பேச, சீரியஸாக அவர்களிடம் வாக்குவாதமும் செய்தேன்... (அது ஒரு நீண்ட கதை!)

லுஹ்ர் ஜமாஅத் நேரத்தில் என்னிடம் வந்து, “மக்கா! அந்த மாட்டுக்காரப் பய என்கிட்ட கூடக்கொறைய பேசுனான்... நல்...லா குடு குடுன்னு குடுத்துட்டேன்...”

“(நல்லவன் போல) ஏன் மாமா... என்னெ கூப்பிட மாட்டீங்களா...? என் பங்குக்கு நானும் கிழி கிழின்னு கிழிச்சிருப்பேனே...?”

“சரி வுடுப்பா... போயிட்டுப் போறான்...”

என்று கூறிச் சென்றுவிட்டார்.

அதுவரை என்னுடன் இருந்து சிரித்துக் கொண்டிருந்த மூத்த நண்பர்கள் சிலர், இஷாவுக்குள் அவரிடம் உண்மையைப் போட்டுக் கொடுத்துவிட்டனர்.

“(சிரித்துக்கொண்டே வந்தவர்...) பைத்தியகாரப் பயலே! செய்றதையும் செஞ்சிட்டு, நல்லவன் மாதிரி பேசுறியோ...?

என்று தனக்கே உரிய பாணியில் கேட்க, நான் அவர்களிடம் சிரித்துக்கொண்டே மன்னிப்புக் கேட்டேன்.

மைத்ரிபால சிரிசேனவுக்குக் கூட விளங்க இயலாத சிங்களத்தில் நான் மாமாவிடம் பேச, ஒரிஜினல் சிங்களத்தில் அவர்கள் அதை மறுதலிக்க, மொழியறிந்தோர் அதைப் பார்த்து சிரிக்க, நான் ரசிக்க... -இவையெல்லாம் சில நாட்களுக்கு முன்பு வரை தொடராக நடந்த கதைகள்!

இவற்றையெல்லாம் இங்கே சொல்வதற்குக் காரணம், வயது வேறுபாடின்றி எல்லோரோடும் இணக்கமாகப் பழகியவர் என்பதால்!

அவர்களைப் பார்த்தாலே என் தந்தை என் நினைவுக்கு வந்து செல்வார்... அவர்களின் பேச்சிலும் என் தந்தை குறித்த தகவல்கள் இடம்பெறாமல் இருக்காது...

உளத்தூய்மையான - நேர்மையான - இறையச்சம் கொண்ட தனது தன்னிகரற்ற பணியால் அனைவரையும் கவர்ந்தவர்...

பல்வேறு காரணங்களால் வாக்குவாதங்களில் ஈடுபடுவோரைக் கூட தன் இனிய பண்பால் சில நிமிடங்களில் அமைதிப்படுத்தி விடுவார்...

மக்கீ மாமாவின் மரணச் செய்தியின் கீழ் இக்கருத்தை நான் பதிவு செய்கையில், என்னையுமறியாமல் கட்டுரையாகவே அது நீண்டது... எனினும், தற்காலத்தின் அவரது நிர்வாக ரீதியான தகவல்கள் என் எழுத்தில் விடுபட்டுவிடும் என்பதால் அம்முயற்சியை நான் எடுக்கவில்லை. ஆனால், எம்.எஸ்.செய்யித் முஹம்மத் காக்கா அவர்கள் அதை கனகச்சிதமாகச் செய்துவிட்டார்கள்.

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க எனதன்பு மக்கி மாமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

எனதன்பு தோழப்பாவின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களின் குடும்பத்தார், அவர் சார்ந்த நிர்வாகத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: Mohmed Younus K.S (Dubai-UAE) on 19 January 2016
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42887

அஜ்ஹரின் ஒரு தூண்....

தான் பணியில் இருக்கும்போதே தன்னை போல் திறமையான இன்னொரு ஆளை நியமித்து விட வேண்டும் என்பதில் துடியாய் துடித்தார்கள்...

நான் லுஹர் தொழுது விட்டால் அவர்கள் அலுவலகம் செல்லாமல் இருக்க மாட்டேன்... நான் சென்ற உடன் அவர்கள் பீரோவில் இருந்து இஞ்சி மிட்டாயும், கடலை மிட்டாயும் எடுத்து தருவார்கள்..

திறம் பட பணியாற்றியவர்கள்... வீடும் பள்ளியும் என்றே கழித்தவர்கள்... இவ்வளவு அலுவல்களுக்கு இடையில் ரமலான் மாதத்தில் இஹ்திகாபும் இருப்பார்கள்...

அல்லாஹ் அவர்களுக்கு மேலான சுவன்பத்தியை அளிப்பானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...எழுத முடிய வில்லை
posted by: Razak (Chennai) on 19 January 2016
IP: 192.*.*.* United States | Comment Reference Number: 42890

கட்டுரையையும்,கருத்துக்களையும் படித்து முடித்த பின் எதுவும் எழுத முடிய வில்லை மேலும் கீழுள்ளதைதவிர வேறெதுவும் என்னால் copy & paste கூட செய்ய முடியவில்லை ..

கருணையுள்ள அல்லாஹுத் தஆலா மக்கீ மாமா அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளைப் பொறுத்து, அவர்களின் சேவையை ஒப்புக் கொள்ளப்பட்ட சேவையாக ஏற்று, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் நல்லோருடன் நிறைவாக அமர்ந்திருக்கும் நல்ல பாக்கியத்தை அவர்களுக்கும், நம் யாவருக்கும் தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...மக்கி மாமா
posted by: HYLEE (KAYALPATNAM) on 28 January 2016
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42974

மக்கள் மனதில்' மங்காத 'மக்கி மாமா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved