Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:36:17 AM
சனி | 4 மே 2024 | துல்ஹஜ் 1738, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்02:45
மறைவு18:28மறைவு15:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1305:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:41
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 48
#KOTWART0148
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 23, 2013
தீனாரும் திர்ஹமும் இல்லாத நாள்...!
இந்த பக்கம் 3474 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இறைவனின் அத்தாட்சிகளில் அதி அற்புதமான படைப்பாக மனிதன் இருக்கிறான். அந்த மனிதனிடத்தில் காணப்படவேண்டிய மனிதநேயப் பண்புகளில், மன்னிப்பதும், மன்னிக்க கோருவதும், மிக உன்னதப் பண்புகளாக நோக்கப்படுகிறது. உறவுகள் அறுந்திடாமல் அவ்வப்போது ஏற்படும் உரசல்களைக் களைந்து, உறவுகளை இணைத்து வாழ இந்தப் பண்புகள் மிக அவசியமாக பேணப்படவேண்டும்.

தனது தவறுகளை பிறர் மன்னிக்க வேண்டும் என விரும்பும் ஒருவர், பிறரை பொறுமை கொண்டு மன்னித்திடல் வேண்டுமல்லவா? மாறாக தான் செய்த தவறுகளை, அநியாயங்களை இலகுவாக மறந்து விடுவதும், பிறரின் தவறுகளை மன்னிக்க மறுப்பதும் குரோதங்கொள்வதும், மனித வாழ்வில் வாடிக்கையாகிப் போனது.

பொறுமையும், சகிப்புத் தன்மையும், அறுகிவிட்ட இந்த அவசர உலகில் ஒரு சகோதரர் சிறிதளவேனும் வரம்பு மீறி நடந்து விட்டாலே போதும், அதனை சகித்துக்கொள்ள முடியாத நாம் அவரை அடியோடு வெறுத்து ஒதுக்கிடுவோம். பன்னெடுங்காலமாக பார்த்து, பழகி, பேணிவந்த நம் உறவுகளை நொடிப்பொழுதில் அறுத்தெரிந்திடுவோம். மட்டுமல்லாமல் கோபம் கொப்பளிக்க அவரை பழிவாங்கிடவும் காத்திருப்போம் அல்லவா?

மனித வாழ்வில் நிம்மதி நிலவ உறவுகளுக்கிடையே குரோதங்கள் களையப்பட்டு நீதமும், நல்லிணக்கமும் பேணப்படவேண்டும். உரிமைகள் மறுக்கப்படும் போதும், உணர்வுகள் ஊனமாக்கப்படும் போதும், உறவில் விரிசல்கள் விழத் துவங்கி ஒற்றுமை உருக்குலைந்திடும். பிணங்கிய உறவுகள் பிரிவதும் - பிரிந்தவர்கள் இணைவதும் வாழ்வில் சகஜமே. ஆனாலும் கூட, பிரிந்தவர்கள் பகைவர்களாக இருக்கவே உலகையே பிரிந்திடுவதையும் சில நேரங்களில் அவதானிக்கலாம்.

நாம், ஒரு சகோதரனுக்கு அநீதியிழைத்து அதற்காக மனம் வருந்தி அவரிடம் மன்னிப்புகோரி சமரசம் செய்துகொள்ளத நிலையில், அவர் மரணித்து விட்டால் நமது நிலை எவ்வளவு பரிதாபத்திற்குரியது பாருங்கள்? இவ்வுலகில் மட்டுமல்லாது மறு உலகிலும் தான். நம்மால் பாதிப்பிற்குள்ளான அந்த சகோதரனின் ஜனாஸாவை எந்தக் கண் கொண்டு நாம் பார்வையிடுவது? எந்த மனம் கொண்டு ஜனாஸாவில் கலந்து கொள்வது? குற்ற உணர்வால் கூனிக் குறுகிட மாட்டோமா? சமூகத்தின் பார்வையை சந்திக்க திராணியற்று தப்பிக்கவே வழி தேடுவோம்.

சற்றே சிந்திப்போம்! நமக்கு ஏன் இந்த அவல நிலை? காலம் தாழ்த்தியிருக்காமல் அவரை நெருங்கி வருந்தி மன்னிப்புக்கோரி பறித்த உரிமைகளையும், சுரண்டிய சொத்துகளையும், இறைவனைப் பயந்து, நீதத்துடன் திருப்பிக் கொடுத்து, சமரசம் செய்திருக்க வேண்டுமல்லவா? இதற்கு மாறாக நம்மில் சிலர் உறவுகளை சரி செய்து கொள்ள திருமண நிகழ்வை, ஹஜ், உம்ராவை காரணமாக்கி காத்திருப்பார்கள். இந்தக் காலப் பகுதிக்குள் மரணம் நெருங்கிவிட்டால் இவர்களின் நிலை எவ்வளவு மோசமானது? குறிப்பாக புனிதப் பயணங்களுக்கு தயாராகும் போது மட்டுமே பல்லாண்டு காலம் பகை பாராட்டிய இரத்த உறவுகளும், சொந்த பந்தங்களும் நம் நினைவுக்கு வருவது ஆச்சர்யமே! அவர்களின் வீடு தேடிச் சென்று சமரசம் செய்து கொள்வதும், சில வேளைகளில் அவமானப்பட்டுத் திரும்புவதும் உண்டு. இன்னும் சிலரின் நடவடிக்கை விநோதமாக காணப்படும், முஹல்லா பள்ளிவாயிலின் அறிவிப்பு பலகையை நோக்கினால் இவர்களின் கடிதம், பொது மன்னிப்பைக்கோரி படபடக்கும். இது எந்த வகை சமரசம் என்பது புலப்படவில்லை.

நீதம் செய்ய மறுப்பவர்களுக்கு இவ்வுலகில் மட்டுமல்ல மறு உலகிலும் நெருக்கடியான வாழ்க்கைதான் ! என்பதை நபி மொழி ஒன்று இப்படிச் சொல்கிறது.

"ஒரு முஸ்லிமின் உரிமையை தன் வலக்கரத்தால் ஒருவன் எடுத்தால் அவனுக்கு அல்லாஹ் நரகத்தை கட்டாயமாக்கிவிட்டான்.அவன் மீது சொர்க்கத்தை தடை செய்து விட்டான், என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் .இறைத் தூதர் அவர்களே ! அது சாதாரணமாக இருந்தாலுமா ? என்று ஒருவர் கேட்டார் . ஒரு" அராக்" மரக் குச்சியாக இருந்தாலும் தான் . என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்:137)

இவ்வுலகில் இழைக்கப்பட்ட அநீதிக்கு இங்கேயே நீதி வழங்கி சமரசம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு தீர்க்கப்படாத கணக்குகள் அணுவளவு அற்பமாய் இருந்தாலும் அது மறுமையில் எவ்வாறு தீர்க்கப்படும் என்பதை -

அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் "ஒருவனிடம் தன் சகோதரனுக்குரிய கண்ணியத்திலோ,அல்லது வேறு ஒரு பொருளிலோ அநீதம் செய்து இருந்தால் இதற்காக இன்றே, தீனாரும் திர்ஹமும் இல்லாத (அந்த மறுமை ) நாள் வருவதற்கு முன் தன்னை தூய்மையாக்கிக் கொள்ளட்டும் !... (புஹாரி:2249)

அல்லாஹ்வின் தூதர் (ஸல் )அவர்கள்

"என் சமூகத்தில் திவாலாகிப் போனவர் ஒருவராவார் .அவர் மறுமை நாளில் தொழுகை,நோன்பு,ஜகாத் ஆகியவற்றுடன் வருவார் . (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார் , ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார் ஒருவரது பொருளை (முறைகேடாகப் ) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தை சிந்தியிருப்பர். ஒருவரை அடித்திருப்பார். (ஆகவே ) அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும். இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால் (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார். (அவரே திவாலகிப் போனவர்) என்று கூறினார்கள் (முஸ்லிம்: 5037)

தனி மனிதனின் உரிமையை, கண்ணியத்தை, பாதுகாப்பதில் இஸ்லாம் மிகுந்த அக்கறை செலுத்துவதை அவதானிக்க முடிகிறது.அநீதமிழைத்தவர் ஒரு சிறந்த வணக்கசாலியாக இருந்தாலும் கூட தண்டனையிலிருந்து தப்பித்து விட முடியாது. கூடவே அநீதி இழைத்தவரை பாதிப்புக்குள்ளானவர் மன்னிக்காத வரை இறைவனும் மன்னிப்பதில்லை என்பதையும் சொல்லித்தருகிறது.

பிறரிடம் மன்னிப்பு கோருவது என்பது, சமூகத்தில் ஒரு தனி மனிதனின் கௌரவக் குறைவாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.அவ்வாறல்ல ! இது முற்றிலும் ஒரு பிழையான உளப்பதிவே. உறவுகளில் ஏற்படும் மன மாச்சர்யங்களை உடனுக்குடன் சரி செய்திட இத்தகைய அணுகுமுறையை வாழ்வில் மிக அவசியமாக நடைமுறைப் படுத்திடவேண்டும். உதாரணமாக குறித்த நேரத்தில் ஒருவரை சந்திக்கவோ ,ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளவோ தாமதித்து விட்டால், தவறி விட்டால் அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரிடவேண்டும். ஏன் ? நம் வீடுகளிலிருந்தே இந்தப் பண்பை, பழக்கத்தை துவங்கிட வேண்டும் .சில வேளைகளில் நமது செயற்பாடுகள் நம் மனைவி ,மக்களின் உள்ளங்களை காயப்படுத்திடும். அச்சமயம் தயக்கமின்றி மன்னிப்புக்கோர முன்வரவேண்டும் .இதனால் நம் கண்ணியம் குறைந்திடாது மாறாக பிரியமும்,பாசமும் புன்முறுவல் பூக்கும் .இது போன்ற சின்னச் சின்ன விடயங்கள் என நாம் உதாசீனப்படுத்தும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நம் தவறுக்காக மன்னிக்க கோருவதை சகஜமாக்கி பக்குவப்படவேண்டும். இதனூடாக அவ்வப்போது ஏற்படும் மனக் கசப்புகளை களைந்து உறவுகளைப் பிரிந்திடாமல் பேணிடலாம்.

அதே நேரம் ஒருவர்,பாதிக்கப்பட்டவரை அணுகி தன்னை மன்னிக்கக் கோரினால் கோபம் கொண்டு ஏசிப் பேசி விரட்டிடாமல் இரக்கம் கொண்டு அவரை மன்னித்து சமாதானம் செய்து கொள்ளும் படி இறைவன் நமக்கு கட்டளை இடுகின்றான்.அத்தோடு அவனது நேசத்தை பெற்றுக்கொள்ள இப்படி வழிசொல்லித் தருகிறது இறைவேதம்.

"அவர்கள் எத்தகையோர் எனில் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும், (நல்வழியில்) செலவிடுவார்கள்.மேலும் அவர்கள் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள் .மேலும் மக்(களின் தவறு)களை மன்னித்து விடுவார்கள். இத்தகைய உயர்ந்த பண்பினரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)

யார் பொறுமையை மேற்கொள்ளவும் ,மன்னித்துவிடவும் செய்கிறார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச் )செயலை சேர்ந்ததாகும். (அல்குர்ஆன் 42:43)

...எவரேனும் (பிறரின் அநியாயத்தை) மன்னித்து அவருடன் சமாதானம் செய்து கொண்டால் அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கிறது . நிச்சயமாக அல்லாஹ் அநியாயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 42:40)

நாமோ இது போன்ற எண்ணற்ற நற்போதனைகளை அடிக்கடி கேட்டு, படித்து ,அறிந்துள்ளவர்களாக இருந்த போதும் இறை வசனங்களை அலட்சியப்படுத்துபவர்களாகவே செயல்பட்டு வருகிறோம் . இதற்கு மாறாக சிறப்புக்குரிய கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களின் வாழ்வில் காணப்பட்ட பெருந்தன்மை ,மன்னிக்கும் மாண்பு, இறைவனின் கட்டளைக்கு முற்றிலுமாக கட்டுப்படுதல் போன்ற அதி விசேட பண்புகள் நம் போன்ற பலஹீனமான இறை விசுவாசிகளுக்கு ஒரு பாடமாக,முன் மாதிரியாக அமைந்துள்ளதைக் காணலாம்.

ஒரு சமயம் அபூபக்கர் (ரலி) அவர்களின் பராமரிப்பில் வாழ்ந்து வந்த அன்னாரின் ஏழை உறவினர் ஒருவரின் அவதூறால் பாதிப்புக்குள்ளாகி மனம் புண்பட்ட நிலையில் "அல்லாஹ்வின் மீது ஆணையாக என் மகள் ஆயிஷா (ரலி) குறித்து மிஸ்தஹ் அவதூறு கூறிய பின்பு ஒரு போதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன்" என்று (சத்தியமிட்டு) கூறினார்கள்.

இதனைத் தொடர்ந்து "உங்களில் செல்வமும், தயாள குணமும் படைத்தோர் (தம்) உறவினர்களுக்கோ ,ஏழைகளுக்கோ ,அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ ,(யாதொன்றையும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம் .(அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதை நீங்கள் மன்னித்து புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா ?அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை உடையவனாகவும் இருக்கின்றான் . (அல்குர்ஆன் 24:22)

என்கிற இந்த இறை வசனங்கள் அருளப்பட்டதும் ,இறைவனுக்கு அஞ்சியவர்களாக உடனடியாக "அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ் எனக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு ,அந்த உறவினருக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள் .அவருக்கு (ச் செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன் என்றும் கூறினார்கள்.

சமூக வாழ்வில் இது போன்ற ஒரு சூழலுக்கு நாம் முகங்கொடுக்க நேர்ந்தால் நமது செயற்பாடு எப்படி அமையும் ?அதுவும் நம்மிடம் உதவி பெரும் ஒருவராக இருந்தால் ..? அதுவரை அவர் நம்மிடம் பெற்று வந்த அத்துனை உதவிகளையும் பட்டியலிட்டு பகிரங்கப் படுத்தி அவமானப்படுத்தியிருப்போம். கோபம் கொண்டு முகத்திலே விழிக்கக் கூடாது என கூப்பாடு போட்டிருப்போம். இல்லையா ? இதுவே இன்றைய நமது உறவு முறை பேணும் விதம்.

ஆனால் மென்மையான மனம் கொண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மன்னிப்பின் மீது ஆசையும் தேட்டமும் கொண்டவர்களாக தனக்கு ஏற்பட்ட அத்துனை துன்பங்களையும் துயரங்களையும் உதறிவிட்டு அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை மட்டுமே நாடி அந்த உறவினரை மன்னித்தார்கள் என்றால், எத்தகைய கட்டுப்பாடு ,பெருந்தன்மை, மன்னிக்கும் மாண்பு பாருங்கள் இது ?

இத்தகைய அழகிய முன்மாதிரியை பின்பற்றி நாமும் பிறரின் தவறுகளை மறந்து மன்னித்து, உறவுகளை மதித்து அரவணைத்து வாழ்வதின் ஊடாக அல்லாஹ்வின் அருளையும், மன்னிப்பையும் பெற்றுக்கொள்ள சகல வழிகளிலும் முயற்சிப்போம் !

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான்.அல்லாஹ்வுககாக ஒருவர் பணிவு காட்டினால் அவரை உயர்த்தாமல் இருப்பதில்லை. (முஸ்லிம்: 5447)

எந்த ஒரு நேரத்திலும், எந்த ஒரு மனிதனையும் மரணம் நெருங்கிடும் அல்லவா? மனிதனை அவனோடு பிணைக்கப்பட்டுள்ள மரணத்துடன் இணைத்தே சிந்தியுங்கள். கிடைப்பதற்கரிய பெரும் பேரான அல்லாஹ்வின் மன்னிப்பிலும், சுவர்க்கத்தின் இன்பங்களிலும் ஆசையும், நம்பிக்கையும் உள்ள எந்த ஒரு இறை விசுவாசியும், உறவுகளைப் பேணி வாழ்வதோடு, தனது தவறுக்காக மன்னிப்புக் கோரிடவும், பிறரின் தவறுகளை மன்னித்திடவும் இன்ஷா அல்லாஹ் ஒரு போதும் மறுக்கவோ, மறக்கவோ மாட்டார்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Koos Aboobacker (Riyadh) on 23 September 2013
IP: 37.*.*.* | Comment Reference Number: 30313

காலத்திற்கேற்ற அருமையான கட்டுரை. கருத்துக்களை மிக அழகாகவும் எளிமையாகவும் பதிந்து உள்ளார் ஆசிரியர்.

தற்போதைய சமூக நிலைமையையும், மார்க்கம் சொல்லி இருப்பதையும் சரியான விதத்தில், சரியான இடத்தில் மிக்ஸ் செய்து இருக்கிறார். மாஷாஅல்லாஹ்... எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு இதற்கான நற்கூலியை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. மரணத்தில் கலந்து கொள்வதில்லை ...
posted by: N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) on 24 September 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30323

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மன்னிப்பதும் , மன்னிக்க கோருவதும் பற்றிய விழிப்புணர்வூட்டும் கட்டுரையை மிகச் சிறப்பாக சகோதரர் எழுதியிருக்கிறார் – இன்றைய கால சூழலுக்கு ஏற்ற கட்டுரை.

-------------------------------------

கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பது நம்மில் சிலர் உறவுகளை சரி செய்து கொள்ள திருமண நிகழ்வு, ஹஜ், உம்ரா போன்றவற்றை காரணமாக்கி காத்திருப்பார்கள் என்று – ஆனால் இன்று அது பெரும்பாலும் நம் மக்களிடம் இல்லை.

திருமணத்திற்கு உடன்பிறந்தவர்களையே அழைப்பதில்லை, ஹஜ், உம்ரா செல்லும்போதும் சொல்லிப்போவதில்லை. அது மட்டுமல்ல தாய், தந்தையுடன் பிறந்தவர்கள் மரணித்தால் கூட அந்த மரணத்தில் (துக்கத்தில்) கலந்து கொள்வதில்லை – இதில் ஆண், பெண் இருபாலரும் சரி சமமே!

--------------------------------------

கட்டுரை குர்ஆன், ஹதீது விளக்கங்களுடன் நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது – இதை நாம் அனைவருமே பலமுறை படித்து பார்த்தோமானால் – உண்மை நிலையை உணர்ந்து உயர்வு பெறலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் மக்கள் அனைவரையும் உறவுகளைப் பேணி வாழ்பவர்களாகவும், தனது தவறுக்காக மன்னிப்புக் கேட்கக் கூடியவர்களாகவும் , பிறரின் தவறுகளை மன்னிக்கக் கூடியவர்களாகவும் வாழ கிருபை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) on 24 September 2013
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30326

மிக அருமையான தற்காலத்திற்கு மிகவும் அவசியமான கட்டுரையை ஆசிரியர் குர்ஆன், ஹதீத் மற்றும் சஹாபா தோழர்களின் எடுத்துக்காட்டோடு விளக்கியுள்ளார். அனைவரும் கட்டாயம் படிப்பதோடு படிக்காதவர் களையும் படிக்க தூண்டவேண்டும் .

தற்காலத்தில் உறவினர்களோ, நண்பர்களோ எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் திருமண பந்தத்தின் பிறகு இந்த குணங்கள் அடியோடு மாறுவதை நமதூரில் கண்கூடாக பார்க்கிறோம், விரல் விட்டென்னும் சிலறரை தவிர


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. முதலில் என்னது கொண்டுவந்தோம்...! முடிவில் என்ன எடுத்து போக...!
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 24 September 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30333

முதலில் என்னது கொண்டுவந்தோம்...! முடிவில் என்ன எடுத்து போக...! இதை புரிந்து வாழ்ந்து வந்தாலே ஏது குழப்பம் குரோதம் குடும்பத்திலும், இந்நகரிலும்..!

அனைவரும் கட்டாயம் படிப்பதோடு படிக்காதவர் களையும் படிக்க தூண்டும் வகையில் துண்டு பிரசுரமாக மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

ஆசிரியர் - எஸ்.ஐ. புஹாரி அவர்களின் ஆக்கங்கள் (கட்டுரை) சமீபகாலமாக இந்த இணையதளத்தில் வரவில்லை அதிக மாதங்கள் இடைவெளி விட்டு வந்துள்ளது...! இருந்தாலும் இது காலத்திற்கு ஏற்ற கட்டுரை என்றே கருதுகிறேன்...! மேலும் ஆசிரியர் - எஸ்.ஐ. புஹாரி அவர்களின் ஆக்கங்கள் இந்த இணையதளத்தில் நிறைய வரவேண்டும்... ஆவல்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...வேதனை கலந்த உண்மைகள்
posted by: mackie noohuthambi (colombo) on 25 September 2013
IP: 113.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30345

ஆசிரியரின் கட்டுரை தீனாரும் திர்ஹமும் இல்லாத ஒரு நாளில் தீன் மட்டுமே செல்லுபடியாகும் நாளில் நாம் எண்ணும் தீன்கள் தாரளமாக கிடைக்கும் ஒரு நாளை பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம். தீராத கோபம் யாருக்கு லாபம் என்று ஒரு தமிழ் அறிஞர் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.

திருமறை வசனங்களுக்கும் திருநபி பொன் மொழிகளுக்கும் குறைவில்லை. அதை அள்ளி தெளிக்கும் ஆலிம்களுக்கும் நம்மிடம் பஞ்சமில்லை.

ஆனால் துரசிர்ட வசமாக இன்றைய கால கட்டத்தில் பிரிவினைகள் சொத்து சுகங்கள் பறிக்கப்படுவதாலோ , உரிமைகள் மறுக்கப்படுவதாலோ ஏற்படுபவை மிக குறைவு. மாறாக அல்லாஹ்வின் பெயரால் அவனது நபியின் பெயரால் குர் ஆன் ஹதீதுகள் என்ற போர்வையில் உணர்வுகள் காயப் படுத்தப்பட்டு, கொப்பளங்கள் ரணமாகி புற்றுநோயாக பரிணாமம் பெற்று கசப்புணர்வுகள் பெருகி இருப்பதை காண முடிகிறது என்பதுதான் நிதர்சன உண்மை.

அவன் சிம்மாக போய்விட்டானாமே, அவன் வீட்டிலா சம்பந்தம் எடுப்பது, அவன் சுத்த கப்ரியாக இருக்கிறானே, அவன் வீட்டு கல்யாணத்துக்கா போவது, அவன் தப்லீக் ஜமாஅத்காரனாமே, நபியை சாதாரண மனிதர்தான் என்று சொல்கிரானாமே, அவன் சலாம் சொன்னால் பதில் சொல்வது கூட நம் ஈமானை பாதிக்கும் என்றெல்லாம் நம்மை அல்லாஹ்வின் பெயரால் நபியின் பெயரால் பிரித்து வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே, இவர்களை பற்றி ஆசிரயர் கண்டுகொள்ளாதது ஆச்சரியமாக இருக்கிறது.

நபிகள் நாயகம் சொல்வதாக அபூ தாவூதிலே ஒரு செய்தி வருகிறது. ஒருவர் ஒரு விஷயம் சரியாக இருந்தாலும் அதற்காக விவாதம் புரிவதை தவிர்த்துக் கொண்டால் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டி கொடுக்க நான் பொறுப்பேற்று கொள்கிறேன். ஒருவர் ஓர் சிறிய பிள்ளையை திருப்தி படுத்துவதற்காக பொய் சொல்வதை தவிர்த்துக் கொண்டால் அவருக்கு சொர்க்கத்தின் ஒரு பகுதியில் ஒரு வீடு கட்டி தர நான் பொறுப்பேற்று கொள்கிறேன் ..(.இன்னும் அதில் ஒரு பகுதி என் ஞாபகத்துக்கு வரவில்லை)..

இப்படி ஹதீத்கள் நிறைய இருக்கும்போது பிரிவினை வாதங்கள் வீண் விதண்டாவாதங்கள் நபியின் பெயரால் அல்லாஹ்வின் பெயரால் சிறிய விஷயங்கள் ஊதி பெரிதாக்கப்பட்டு நமதூரில் உறவுகள் அறுந்து கிடப்பதை ஆசிரியர் துணிவாக எடுத்து சொல்ல வேண்டும். இந்த பிரிவினைகள் சாதாரண அவாம்களால் ஏற்படுத்தப் பட்டது அல்ல, பெரும் பெரும் உலமாக்கள் என்று நம்மால் மதித்து போற்றப்படுபவர்களால் தினம் தினம் அரங்கேற்றப் படுகிறது.

இந்த கசப்பான உண்மைகள்,வேதனைகள், அடி வயிற்றில் அமிலம் சுரக்கும் காழ்ப்பு உணர்வுகள் எப்போது களையப்படும்...சற்று சமுதாயத்தை உசுப்பிவிடுங்கள்..இந்த மாற்றங்கள், மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மை, அடுத்தவர்கள் கருத்துக்கு மதிப்பளிக்கும் மனப்பாங்கு, பரந்த மனப்பான்மை எப்போது நம்மிடையே குடி கொள்ள ஆரம்பிக்குமோ அப்போது பிரிவினைகள், மன மாச்சரியங்கள் மறையும்.

திர்ஹமும் தீனாரும் பலனளிக்காத நாளில் அந்த வழக்குகள் மாலிகி யவ்மித்தீன் முன்னிலையில் நீதி மன்றத்துக்கு வரும்போது இங்கே அல்லாஹ்வின் பெயரால் நபியின் பெயரால் பிரிந்தவர்கள். அவர்களை பிரித்து வைத்தவர்கள் கை சேதப் படுவார்கள். ..வேதனை நிறைந்த உள்ளதுடன் ஆசிரியரின் கவனத்துக்கு எனது உள்ளக் கிடக்கைகளை சமர்பிக்கிறேன்.

உங்களால் ஒரு மனிதன் நேர்வழி பெற்றால் அது இந்த உலகம் அதில் உள்ள அனைத்தை விடவும் உங்களுக்கு சிறந்தது. மாறாக உங்களால் ஒரு உறவு முறிக்கபட்டால், ஒரு உள்ளம் உடைந்தால் அது கௌபதுல்லாவை இடிப்பதை விட கொடியது என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழியை இந்த நேரத்தில் ஞாபக படுத்திக் கொள்கிறேன்

இந்த ஹதீதுக்கு யாரும் ஆதாரம் கேட்காதீர்கள், சஹாபாக்கள் நபி சொன்னார்கள் என்றால் அப்படியே நம்பினார்கள். இப்போது அவர்கள் கேட்காத கேள்விகளை எல்லாம் நாம் கேட்டுக்கொண்டு அதற்கு விவாத மேடைகள் பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அல்லாஹ் நம் உறவுகளை பேணி நடக்க அருள் புரிவானாக, சிறு சிறு மாச்சரியங்களால், அல்லாஹ்வின் பெயரால் நபியின் பெயரால் நாம் பிரிந்து நிற்பதை மாற்றி எல்லோரும் ஒற்றுமையாக வாழ செய்வானாக,.

தீனாரும் திர்ஹமும் இல்லாத நாளை நினைத்து இப்போதே அதற்கு தயார் செய்யும் நல் உணர்வை நம் எல்லோருக்கும் தந்து அருள் புரிவானாக. ஆமீன்.

ஆசிரியர் மனம் புண்படும்படி எனது விமர்சனங்கள் அமைந்திருந்தால் அதற்கு நான் தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது ஆதங்கம் நியாயமானதுதான் என்று ஆசிரியர் உணர்ந்தால், இந்த விரிசல்களை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளும்படி வேண்டி கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. இதயத்தில் ஈரம்!
posted by: kavimagan (doha...qatar) on 28 September 2013
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 30432

மலரினும் மெல்லிய மனதிற்குச் சொந்தக்காரர் கட்டுரையாளர் புஹாரி ஹாஜியார் அவர்கள்......இதயத்தில் சுரக்கும் ஈரத்தால் நனைத்திருக்கின்றார்....கட்டுரையையும்,காண்போரின் கண்களையும்...

தந்தையின் உடன் பிறந்த சகோதரர் ஹம்சா நாயகத்தின், ஈரலை மென்றுமிழ்ந்து கொடுஞ்செயல் புரிந்திட்ட, ஹிந்தாவையும் மன்னித்த காருண்ய நபியை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் நாம்....வாளேந்தி வந்த உமர் ரழி அவர்களை,தனது தோளோடு தளபதியாய் நிற்கவைத்த வாஞ்சை நபி(ஸல்) அவர்களின் வாரிசுகள் நாம்.....நமக்குள் ஏன் விரோதமும்,குரோதமும்?

தரமான பதிவினைத் தந்த புஹாரி காக்கா அவர்களுக்கு அன்பும், நன்றியும்,வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:...
posted by: Abu Rushda (Dubai) on 28 September 2013
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30443

Shaykh Abdullah Hakim quick posted the following in his FB account. More relevant to this topic and present situation of our society…. 

“The Danger of Extremism”. Beware of people who kill innocents in the name of Islam or who are intolerant of other opinions or approaches to Sunnah or are cold and cruel to women. Even if they look like us and speak our language, they could be leading us to hellfire!The Prophet Muhammed (PBUH) said,  “At the end of time there will emerge a people who will be young in age and foolish. They will recite the Q’uran but it will go no further than their collarbones. They will quote the words of the best of mankind but they will pass out of Islam as the arrow pass out of the prey” (Buhari and Muslim)“Why can’t we respect all people regardless of their religion or creed? Even animals worship in their own way!!!!”Everything in the heaven and earth Glorify அல்லா

SWTShaykh Abdullah Hakim Quick25/Sep/2013 - Wed @ 12:07am in FB


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. இம்மையில் நிம்மதி மறுமையில் வெற்றி
posted by: seyed mohamed buhary (uae) on 28 October 2013
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31047

அதை நீங்கள் மன்னித்து புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா ?

நான் எனக்கு செய்த அத்துணை தீமைகளையும் மன்னித்து விட்டேன் என்ற ஒரு மனநிலையை வுருவாகினால் நமக்கு இம்மையிலும் மருமைஇலும் குடும்பத்திலும் வூரிலும் சண்டை சச்சரவுகள் நீங்கி சாந்தி சமதாம் இறை மன்நீப்பு வுண்டாகும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved