Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:04:46 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 176
#KOTWEM176
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 30, 2015
ப்ளாக் பெல்ட் நோம்பாளி!

இந்த பக்கம் 5016 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நோம்பு மாசம் வந்தாச்சி...!

அது என்ன நோம்பு மாசம்...?

ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆங்கில மாதங்களை சிறிதும் தயக்கமின்றிச் சொல்லும் நம் பிள்ளைகள். ஏன், சித்திரை முதல் பங்குனி வரை தமிழ் மாதங்களைக் கூட அழகாகச் சொல்லிவிடும். ஆனால், முஹர்ரம் முதல் துல்ஹஜ் வரை ஹிஜ்ரீ மாதங்களையெல்லாம் கேட்கக் கூடாது. அது, பரீட்சை நேரத்தில் மட்டும் மனப்பாடம் செய்யவும், வளர்ந்து ஆளான பிறகு திருமணத்திற்கு நாள் குறிக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது நமதூரின் எழுதப்படாத விதியாகவே இன்றளவும் உள்ளது.

போதிய விபரங்களைப் பெற்றிராத நம் முன்னோர்கள் கூட, ரபீஉல் அவ்வல் மாதத்தை ‘ஸுப்ஹான மவ்லூது மாசம்’ என்றும், ரபீஉல் ஆகிர் மாதத்தை ‘முஹ்யித்தீன் மவ்லூது மாசம்’ என்றும், ரஜப் மாதத்தை ‘புகாரி ஷரீபு மாசம்’ என்றும் அவர்களுக்குப் பழக்கப்பட்ட மொழிகளிலேயே கூறி வந்தனர். இன்றும் கூறி வருகின்றனர். அந்த வரிசையில்தான் புனித ரமழான் மாதமும் ‘நோம்(ன்)பு மாசம்’ என்று அழைக்கப்படுகிறது.

ரமழானுக்கு முந்திய ஷஃபான் மாதம் துவங்கிவிட்டால், காயல்பட்டினம் ஆண்கள் அரபிக் கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டு, கல்லூரி விடுமுறையும் அளிக்கப்படும். அம்மாதத்தின் பிற்பாதி துவங்கிவிட்டால், ரமழான் தலைப்பிறை குறித்த சர்ச்சைகளும் துவங்கிவிடும். முன்பு வாயளவிலும், பின்னர் எழுத்தளவிலும், தொலைபேசிகள் மூலமாகவும் மட்டுமே விவாதிக்கப்பட்டு வந்த இந்த தலைப்பிறை சர்ச்சை, இன்று ‘ஃபேஸ்புக்’கையும் நிறைத்துக் கொண்டிருக்கிறது. “நான் சொல்வதே சரி” என தம் கருத்துக்காக முகநூலில் மல்லுக்கட்டும் யாருக்குமே புரிவதில்லை அதை முஸ்லிம்கள் மட்டும் பார்க்கவில்லை என்பது!

ஒரு சாரார் சந்திர ஓட்டத்தைக் கணக்கிட்டு ரமழான் முதல் நாளை அறிவிப்பர். மறுசாரார் சர்வதேச பிறைத் தகவல் அடிப்படையில் அறிவிப்பு வெளியிடுவர். இன்னொரு சாரார் ஊரிலுள்ள இரண்டு அரபிக் கல்லூரிகளில் கலந்தாலோசித்து வெளியிடப்படும் அறிவிப்புகள் அடிப்படையில் செயல்படுவர். இவ்வாறாக ஒரு வகையாக ரமழான் நோன்பு துவங்கும்.

அசைவமின்றி ஸஹர் உணவு ஹல்கை (தொண்டைக் குழியை)த் தாண்டாது. ரமழான் முடியும் வரை அதிகாலை ஃபஜ்ர் தொழுகையில் பள்ளிவாசல்களில் வரிசைகள் ஓரளவுக்கு நிரம்பும். தொழுத வேகத்தில் துவங்கும் உறக்கம், குழந்தைகளுக்கான பள்ளிக்கூட நாட்களில் பெற்றோருக்கு காலை 8 மணி வரையிலும், விடுமுறை நாட்களாயின் 10 மணி முதல் 12.30 மணி வரையிலும் கூட நீடிக்கும். சிறிது வேலைகளைப் பார்த்த பின் மீண்டும் தொடரும் உறக்கம் அஸ்ர் வரை நீடிக்கும்.

“நோன்பு நோற்றுக்கொண்டு உறங்குவதும் நன்மையே!” என்ற கருத்தை முன்வைத்துக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நீண்ட நேர உறக்கம் சில காலமாக விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், தற்காலத்தைப் பொருத்த வரை - இருவர் கூடிவிட்டால், கிடைத்தவர்களையெல்லாம் கழுவிக் குடிக்கும் நிலையையும், தொலைதொடர்புக் கருவிகளில் நேரத்தைத் தொலைப்பதையும் பார்க்கும்போது, உறக்கம் எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நோன்பு கால மாலை நேரங்களில், வீடுகள் களை கட்டும். அவரவருக்குத் தெரிந்த வடைக்கலையெல்லாம் அடுப்பேறும். சமைத்தது, பொரித்தது என நோன்பு துறக்க வகை வகையாகப் பரத்தி வைக்கப்பட்டிருக்கும். இப்போதுதான் நம் பெண்களுக்கு உடல் வளைவதே இல்லையே...? எனவே, கடைகளிலிருந்து வாங்கி வரப்படுகிறது.

ஆண்கள் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் நோன்பு துறப்பர். சிலர் வீடுகளில் துறந்துவிட்டு, பள்ளிவாசலுக்குத் தொழ வருவர். பின்னர் வீடுகளில் சிறிது ஊண், உறக்கம் முடித்துவிட்டு, தராவீஹ் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குத் திரண்டு செல்வர் ஆண்கள். பெண்கள் அவர்களுக்கான தைக்காக்களிலும், சில இடங்களில் பள்ளிவாசல்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் தொழுகையை நிறைவேற்றுவர்.















பின்னர், விரும்புவோர் இரவுணவு உண்பர். மற்றவர்கள் நோன்பு நோற்பதற்காக நள்ளிரவு 03.30 மணியளவில் ஸஹர் உணவு மட்டும் உண்பர்.

திருக்குர்ஆனோடு தொடர்புள்ளவர்கள், இந்த ரமழான் மாதத்தில் கூடுதல் நேரம் எடுத்து, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அதனைப் பொருளறிந்தோ - அறியாமலோ ஓதி நன்மைகளைச் சேர்ப்பர். இவையே காயல்பட்டினத்தில் ரமழான் மாதத்தின் ஒருநாள் காட்சிகள்.

“சரி, இப்ப என்ன சொல்ல வர்றே...?”

நோன்பாளிகள் அதிகாலை சுமார் 05.00 மணி முதல் மாலை 06.30 மணி வரை கிட்டத்தட்ட 13 முதல் 14 மணி நேரங்கள் உண்ணாமல், பருகாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பர். சுவையான உணவு சட்டி நிறைய இருக்கும்... நல்ல குளிர்பானம் குளிர்சாதனப் பெட்டியில் அமர்ந்துகொண்டு அழைக்கும். பார்வைக்கழகாக இல்லத்தரசியும் இருப்பார். பார்க்க யாருமே இல்லாவிட்டாலும் கூட நோன்பாளிகள் உண்ணவோ, பருகவோ, வீடுகூடவோ மாட்டார்கள். “யாரு பார்க்கப் போறாங்க...? ஒருத்தரும்தான் இங்கு இல்லையே...?” என - நோன்பு நோற்ற யாரிடம் கேட்டாலும் அவர் சொல்லும் மறுமொழி, “படச்ச ரப்பு (இறைவன்) பார்க்காமலா இருப்பான்...?” என்பதாகவே இருக்கும்.

யார் பார்க்காவிட்டாலும், இறைவன் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான் என்ற எண்ணம்தான் இந்த நோன்பின் அடிப்படை. இந்த எண்ணம், இஸ்லாம் மார்க்கத்தை நன்கு கற்றுணர்ந்தவர்களை மட்டுமின்றி, நோன்பு நோற்கும் பாமர முஸ்லிமிடமும் கூட வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால், இந்த தாக்கம் நாள்தோறும் நோன்பு துறந்ததோடு முடிந்துவிடுவது ஏன்? மொத்தத் தாக்கமும் ரமழான் மாதம் முற்றுப்பெற்றதோடு முடிந்து போவது ஏன்? என்ற கேள்விகளுக்கு நாம் விளங்கியும் விடையளிக்க மறுக்கிறோம்.

வாய் திறந்தாலே காது கூசும் சொற்களையே பேசிப் பழகியவர்கள் பலர் நோன்பு நோற்றிருக்கும்போது கட்டுப்பாட்டுடன் இருக்கின்றனர். வெளியிடும் மூச்சுக் காற்றெல்லாம் செய்யது பீடியில் துவங்கி, கோல்ட் ஃப்ளேக், மார்ல்பொரோ சிகரெட் புகைகளாகவே விட்டுத் தள்ளிக்கொண்டு, “ஐந்து நிமிடங்கள் கூட புகை பிடிக்காமல் என்னால் இருக்க முடியாது” என்று கூறிக்கொண்டிருப்பவர்களெல்லாம், அதிகாலை முதல் நோன்பு துறக்கும் வரை காத்திருக்கத்தான் செய்கின்றனர்.

கஞ்சி உள்ளே இறங்கிய சில விநாடிகளில் காய்ந்த பீடியும் இறங்குவது ஏன்? அதிகாலை முதல் இரவு துவக்கம் வரை - இறைவன் பார்க்கிறான் என்ற ஒரே காரணத்திற்காக எல்லாத் தீமைகளையும் விட்டவர்கள், நோன்பு துறந்தவுடன் மீண்டும் அதைக் கையிலெடுக்கிறார்கள் என்றால், ஒருவேளை நோன்பு துறந்த பின் இறைவன் யாரையும் பார்ப்பதில்லையோ...? ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறானோ...?

பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் இஃப்தார் நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர், அதன் சுற்றுப்புறங்களில் தண்டவாளம் இல்லாமலேயே ரயில் ஓடும். அப்படி ரயில் ஓட்டிக்கொண்டிருந்த ஒருவருடனான எனது உரையாடல்:

“காக்கா, காலையிலேர்ந்து கட்டுப்பாடாத்தானே இருந்தீங்க... இப்ப ஏன் காக்கா இதைக் கையில் எடுத்தீங்க...?”

“என்னடா செய்ய...? சனியத்த உட்டுத் தொலைக்கத்தான் நெனைக்கிறேன்... முடிய மாட்டேங்குதே...?”

“ஏன் காக்கா உங்களையும் அறியாம பொய் சொல்றீங்க...? செய்ன் ஸ்மோக்கரான நீங்க, நோன்பு பிடிச்சிட்டா, காலையிலிருந்து நைட் வரைக்கும் விடத்தானே செய்றீங்க...? அப்ப மட்டும் எப்டி முடியுது...?

“அட, அதுக்காக நோம்பு புடிச்சிகிட்டா சிகரெட் பத்த வைக்க சொல்றா...? நோம்பு முறிஞ்சுடுமேடா...?”

“யாரு காக்கா பார்க்கப் போறாங்க...?”

“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு...? அல்லா பாக்க மாட்டானா...?”

“ஓஹோ...? அப்டீன்னா, அப்ப பார்க்கிற அல்லாஹ் இப்ப மட்டும் பார்க்க மாட்டானா...?”

“சரி, சரி... விடு! நீ என்ன சொல்ல வர்றான்னு புரியுது!! சீக்கிரமே ஸ்டாப் பண்ணிடுறேன்...!”

வருடம் தவறாமல் வாக்களிக்கும் இப்படிப்பட்டவர்கள் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். வாயைத் திறந்தாலே அடுத்தவர் பற்றிப் புறம் மட்டுமே பேசிக்கொண்டிருப்போர் கூட, நோன்பு நோற்றிருக்கும்போது, “ச்சே நோம்பு பிடிச்சிட்டு இப்டியெல்லாம் பேசக்கூடாது...” என்று இருப்பர். நோன்பு துறந்தவுடன் மீண்டும் துவக்கிவிடுவர்.

நோன்பு நோற்றிருக்கும்போது பார்க்கும் இறைவன் இதர நேரங்களிலும் பார்க்கிறான் என்பதை இவர்கள் அறிந்தும் உணர்வதில்லை என்பதையே இது உணர்த்துகிறது. நோன்பு நோற்ற நிலையில் ஒரு குணத்தோடும், நோன்பு துறந்தவுடன் இன்னொரு குணத்தோடும் நடப்பவர்கள் யாவருமே, “நோம்பு பிடிச்சிட்டுதான் இதெல்லாம் செய்யக் கூடாது” என்றே நினைத்துக்கொண்டுள்ளனர்.

“கெட்ட பேச்சுக்களையும், அதனடிப்படையில் செயல்படுவதையும் எவன் விட்டுவிடவில்லையோ, அவன் அவனது உணவையோ, குடிப்பையோ விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை...” என்ற நபிகளாரின் பொன்மொழி உணர்த்துவதென்ன? “நீங்கள் பட்டினி கிடப்பது முக்கியமில்லை... தாகத்தோடு இருப்பது முக்கியமில்லை... வீடு கூடாமல் இருப்பது முக்கியமில்லை... இறைவனாகிய நான் தடுத்தேன் என்பதற்காக, மற்ற நாட்களில் உனக்கு அனுமதிக்கப்பட்டவற்றைக் கூட நோன்பு நோற்ற நிலையில் தவிர்த்த நீ, அனுமதிக்கப்படாதவற்றை எக்காலத்திலும் செய்யக் கூடாது...” என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

நோன்பு குறித்து பேசும் சில மார்க்க அறிஞர்களும் கூட,

“நோன்பாளி சளியை விழுங்கலாமா...?”

“பேஸ்ட் வைத்து பல் துலக்கலாமா...?”

“அத்தர், ஸ்ப்ரே அடிக்கலாமா...?”

என்பன பற்றியெல்லாம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு, நோன்பின் அடிப்படை நோக்கம் குறித்து சிறிதும் பேசாமலேயே இருந்துவிடுகின்றனர்.

பசியோ, தாகமோ முக்கியமில்லை; பயிற்சியே முக்கியம் என்பதை உணர்த்தும் சில வழிகாட்டல்களைப் பாருங்கள்:-

நோன்பு நோற்ற நிலையில், மறதியில் சாப்பிட்டுவிட்ட ஒருவர் அதுகுறித்து நபிகளாரிடம் கேட்டபோது, “உன் நோன்பு முறிந்துவிட்டது” என்று கூறவில்லை. மாறாக, “அது அவருக்கு அல்லாஹ் அருளியது” என்றார்கள்.

நோன்பு நோற்பதற்காக ஸஹர் உணவு உண்டுகொண்டிருந்த நிலையில் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்கான அழைப்பொலி எழுப்பப்பட்டுவிட்டால், “உணவைத் தவிர்க்கத் தேவையில்லை... (புதிதாக உணவைத் தட்டில் ஏற்றாமல், ஏற்கனவே) தட்டில் உள்ளவற்றை மட்டும் சாப்பிட்டுவிட்டு எழலாம்” என்கிறது இஸ்லாம்.

நோன்பு நோற்றுவிட்டு, உணர்வு மேலீட்டால் வீடுகூடிவிட்ட ஒரு நபித்தோழர் நபிகளாரிடம் வந்து பரிகாரம் கேட்க, தொடர்ந்து 60 நோன்புகள் நோற்கச் சொல்கிறார்கள். தான் பலவீனமானவன் என்றும், தன்னால் தொடர்ச்சியாக நோன்பு நோற்க இயலாது என்றும் கூற, 60 ஏழைகளுக்கு உணவளிக்கச் சொல்கிறார்கள் நபிகளார். அந்தளவுக்கு தன்னிடம் வசதியில்லை என்று அவர் மீண்டும் கூற, பைத்துல் மால் எனும் பொதுக் கருவூலத்திலிருந்து பேரீத்தம்பழங்களை எடுத்துக்கொடுத்து, “இவற்றை 60 ஏழைகளுக்குப் பகிர்ந்தளியுங்கள்!” என்று கூறுகிறார்கள் நபிகளார்.

“அல்லாஹ்வின் தூதரே! இந்த மதீனா நகரில் என்னை விட ஏழ்மை நிலையில் யார் இருக்கிறார்...?” என்று அந்த நபித்தோழர் அப்பாவித்தனமாகக் கூற, அண்ணல் நபிகளார் தம் கடைவாய்ப் பல் தெரிய சிரித்துவிட்டு, அப்பழங்கள் அனைத்தையும் அந்த நபித்தோழரையே பயன்படுத்தச் சொல்லி அனுப்புகிறார்கள்.

நோன்பாளிகளுக்குத் தடுக்கப்பட்ட ஒரு பெரும் செயலையே (தாம் அறியாத நிலையில்) செய்துவிட்டவர்களைக் கூட நபிகளார் தண்டிக்கவில்லை; கண்டிக்கவுமில்லை என்றால், இந்த நோன்பைக் கொண்டு இறைவனும், இறைத்தூதரும் நாடுவதென்ன என்பதை இப்போது விளங்க முடிகிறதல்லவா?

அப்படியானால், நோன்பு நோற்ற நிலையில் நாம் தவிர்த்த புறம் பேசல், பொய் சொல்லல், பிறரைத் துருவித் துருவி ஆராய்தல், உறவுகளில் பிரச்சினை ஏற்படுத்தல், புகைப்பிடித்தல் போன்ற தீய செயல்களை எல்லாக் காலங்களிலும் நாம் தவிர்க்கத் துணியவில்லையெனில், வெறுமனே நாம் பசித்திருந்தோம், தாகித்திருந்தோம் என்பதைத் தவிர - அந்த நோன்பைக் கொண்டு வேறென்ன கிடைத்துவிடப் போகிறது...?

கட்டுமஸ்தான கராத்தே மாஸ்டரிடம் காலங்காலமாகப் பயிற்சியெடுத்து, கருப்புப் பட்டையெல்லாம் வாங்கிய பின்பு, முன்பின் தெரியாதவரிடம் தர்ம அடி வாங்கி முகம் முழுக்க தையலுடன் நிற்பவருக்கும், ‘நம்ம நோன்பாளி’க்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கப் போகிறது...???

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Vilack sma (jeddah) on 30 June 2015
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41192

நல்ல கட்டுரை . நோன்பு திறந்ததும் அந்த ஒருவருடனான உரையாடல் தமாசாக உள்ளது .

< கட்டுமஸ்தான கராத்தே மாஸ்டரிடம் காலங்காலமாகப் பயிற்சியெடுத்து, கருப்புப் பட்டையெல்லாம் வாங்கிய பின்பு, முன்பின் தெரியாதவரிடம் தர்ம அடி வாங்கி முகம் முழுக்க தையலுடன் நிற்பவருக்கும், ‘நம்ம நோன்பாளி’க்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கப் போகிறது...??? > C & P

மொத்த கட்டுரைக்கும் இறுதியில் உள்ள இந்த வரிகள் தீர்ப்பாகவும், யோசிக்கும்படியாகவும் உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ப்ளாக் பெல்ட் நோம்பாளி
posted by: shaik mohamed sulaiman (Riyadh) on 30 June 2015
IP: 23.*.*.* United States | Comment Reference Number: 41193

உண்மையில் யோசித்துபார்க்க வைத்தது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...வெயில்தான் குறிஞ்சி காத்தடிக்கிதே....
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 01 July 2015
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41194

என்னடா ப்ளக் பெல்ட் நோம்பாளி ன்னு சம்பந்தமில்லாமே பேசுறானே, வெயில்தான் குறைஞ்சி காத்தடிக்குதே...அப்படின்னு நெனச்சி சும்மா சொடுக்கி பாத்தா, அடேயப்பா புட்டு புட்டுன்னு வைச்சிட்டியே மருமகனே....

உங்க வாப்பா எனக்கு கூட்டாளி, மச்சான் மச்சினபுள்ள உறவும் கூட. கண்டியிலே அவர் பணக்கார பள்ளிக் கூடம். நான் ஏழை பள்ளிக் கூடம் ஆனால் இங்க்லீஷ் எல்லாம் ஒண்ணுதான். அங்கேயும் உம்மாக்கு மதர் னுதான் சொல்லிக் கொடுப்பாங்க எங்களுக்கும் மதர்னுதான் சொல்லிக் கொடுப்பாங்க இருந்தாலும் உங்க வாப்பாவுக்கு மவுசு கூடத்தான், பணம் பவுசு உள்ள ஆளு. அந்த காலத்திலேயே கூடு கொடி எல்லாம் எதிர்த்து தைரியமா களம் இறங்கி கலக்குவாரு, இப்போ அதெல்லாம் நீ பேசுனா முதுகுலே டின்னை கட்டிக்கிட்டு ஓடனும்..

சரி விஷயத்துக்கு வாறன். உங்க வாப்பா செயின் ஸ்மோகர். மச்சான் இப்படி ஊதி தள்ளுறியலே ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணுரியளே என்று கேப்பேன். மச்சின புள்ளை நீ சொல்றது சரிதான். இந்த சிகரெட்டை சத்தியமா இனி குடிக்கமாட்டேன் என்பார் அதை ஊதி தள்ளிட்டு தூர எறிவார். புதுசா ஒன்னு பத்துவார்.. என்னங்க சத்தியம் பண்ணுனிங்க...அடே அது அந்த சிகரெட். அதை இனி சத்தியமா தொடமாட்டேன். இது வேறே...பேச்சிலேயே மடக்கி விடுவார்.

எங்க வாப்பா மக்கி ஆலிம்சா என்றால் இலங்கையிலே பட்டி தொட்டி எல்லாம் தெரியும். அவங்களுக்கு இரவு சாப்பாடு என்ன தெரியுமா ஒரு NAVY CUT WILLS சிகரெட்தான்.உயர்ந்த ரகம். ஊதி ஊதி தள்ளுவார்கள். டின் டின்னாகதான் அந்த சிகரெட் வரும். ஹஜ்ஜுக்கு போகும்போது சிகரெட் குடிக்கிறதை நிர்ப்பட்டுனாங்க. அங்கே போனபிறகு யாரோ ஒரு புண்ணியவான்... ஆலிம்சா இந்த சிகரெட்டை குடித்து பாருங்க, இது STATE EXPRESS உங்க ஊர்லேல்லாம் கிடைக்காது.... அப்படியா தாங்க பாப்போம். ஆஹா இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம் இப்படித்தான் அந்த சிகரெட் பெட்டியில் போட்டிருக்கும். அல்லாஹ்வின் அன்பையும் பெற்று நபியின் நல்லாசியையும் பெற்று கையேடு நண்பரின் STATE EXPRESS சிகரெட்டையும் பெற்று சுகமாக ஊர் வந்தார்கள். அதன் பிறகு ஒரு நோம்பு நாளில் அதை நிர்ப்பாட்டினார்கள். வாழ்வின் இறுதிவரை சிகரெட்டை தொடவில்லை.

ஆனால் அவர்களின் தொண்டைக் குழியை அந்த சிகரெட் பதம் பார்த்தது. இதயத்தை ஓட்டை ஆக்கியது எப்போதும் இருமல் பேசினாலும் ஓதினாலும் தொழுதாலும் அது தொடர்ந்து கொண்டே இருந்தது அவர்கள் வாழ்க்கையின் இறுதி நாட்கள் அந்த ஷைத்தான் கொடுத்த நோயுடன்தான் முடிந்தது. அவங்க நிறைய சிகரெட் குடித்து முடித்தாலே நாங்க அண்ணன் தம்பி யாரும் அதை தொடல்லெ... அல்லாஹ் காப்பாத்தினான். யாரும் ஓசி சிகரெட் இப்போது தருவதும் இல்லை. அதற்கு எங்களிடம் பணமும் இல்ல.

இன்னொன்று தெரியுமா ஒரு ஆலிம்சா பயான் செய்தார்...''சொர்க்கத்தில் நீங்கள் விரும்பியது எல்லாம் கிடைக்கும்''...''அப்படியா மிக்க சந்தோஷம். நான் அடிக்கடி சிகரெட் குடிப்பேன். சொர்க்கத்தில் சிகரெட் கிடைக்குமா?...நல்ல கேள்வி இப்போது இப்படித்தானே இஸ்லாமிய கேள்வி பதில்கள் இருக்கின்றன. சஹர் நேர ஒளி பரப்பும் இதைத்தானே ஊக்குவிக்கிறது... ஆலிம்சா இப்போ பதில் சொன்னார்...''ஒ கிடைக்குமே.. ஆனால் அந்த சிகரெட்டை பத்த வைக்க நெருப்பு வேணுமே.. அதற்கு நீங்க நரகத்துக்குதான் போகணும்... போவீர்களா''... மூச்சு பேச்சு இல்லை.

மருமகன் சாலிஹ் அவர்களின் இந்த கட்டுரை நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும், படிப்பவர்கள் ஆரம்பத்திலிருந்து அணுவணுவாக படித்து பாருங்கள். எல்லோருக்கும் நல்ல படிப்பினை பல கோணத்திலிருந்து பேசுகிறார். வாப்பவுடைய குசும்பும் இருக்கிறது.

இப்படி கட்டுரை எழுத ஒரு துணிச்சலும் வேண்டும். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: H.I.Rugnudeen Buhary (Kerala) on 01 July 2015
IP: 27.*.*.* India | Comment Reference Number: 41195

நண்பர் சாலிஹ் அவர்கள் மிக அருமையாக கடந்தகால நிகழ்வுகளை சுட்டிகாட்டி, இஸ்லாம் நோன்பு மூலம் எதை எதிர்பார்க்கிறது என்பதை மிக தெளிவாக விளக்கியுள்ளார். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!

நண்பர் சாலிஹ் அவர்கள் இது போன்ற சிந்தனைக்குரிய பதிவுகளை மேன்மேலும் தர படைத்தோனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: கே எஸ் முகமத் ஷூஐப் (காயல்பட்டினம். ) on 01 July 2015
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41197

நோன்பு மாதத்திற்க்கேற்ற மிக நல்ல கட்டுரை. தம்பி சாலிகுககு நமது பாராட்டுக்கள்.

நல்ல பழக்க வழக்கங்கள்,நன்மையான செயல்கள்,பிறருக்கு தீங்கிழைக்காமை,நல்லதே எண்ணுதல், நல்லவையே பேசுதல் எனபது எப்போதும் நமக்கு வேண்டிய ஓன்று. ஆனால்..நோன்பு மாதம் என்ற ஒன்றை அதற்காக ஒதுக்கி கட்டம் கட்டி ,அப்போது மட்டும் நன்மை செய்தால் போதுமானது...எனபது ஒரு வழக்கம் நம்மிடையே உள்ளது. இது தவறான நிலைப்பாடாகும்.

அதனால்தான் ஐவேளை தொழாதவர்களும் கூட தராவீஹ் என்னும் இரவுத் தொழுகையை தொழ பள்ளிவாசலில் வரிசை கட்டி நிற்கின்றனர்.

மனிதவாழ்வு தேவைகளாலும், பழக்க வழக்கங்களாலும் நிரம்பிக் கிடக்கிறது...

உணவு உண்ணுதலும், வீடு கூடலும் தேவை மட்டுமே. ஆனால் புகை பிடிப்பதும், வெற்றிலை போன்ற லாகிரி வஸ்த்துக்களை பயன் படுத்துவதும் ,தொலைக் காட்சியில் மூழ்கிக் கிடப்பதும் பழக்க வழக்கங்கள். தேவையைக் கட்டுப்படுத்தி விடலாம். பழக்க வழக்கங்களை கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிரமம்.

இங்கு கட்டுரையாசிரியர் குறிப்பிட்டிருக்கும் அந்த பீடி புகைக்கும் சகோதரர் மூன்று நாளைக்கு வேண்டுமானாலும் உணவின்றி பட்டினி கிடப்பார். ஆனால் ஒருவேளை புகைக்காமல் அவரால் முடியாது. தேவைகளை பழக்க வழக்கங்கள் ஓரம் கட்டும் நிகழ்வுகள் இப்படித்தான் துவங்குகின்றன.

தம்பி ஸாலிஹ் வீட்டில் தினசரி பொறித்த ஐட்டங்கள் இல்லையோ..என்னவோ...ரொம்பவும் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

எனக்குத் தெரிந்து அவர் இதுபோன்ற உணவுகளின் மீது ஆர்வம் குறைந்தவர்.

ஆனால் ..என்னதான் விலங்கு காட்சி சாலையில் வளர்க்கப்பட்டாலும்.... நினைவில் காடுள்ள மிருகம் இருப்பதைப்போல..... என்னதான் இயற்க்கை உணவு, அது,இது என்று பேசினாலும்... காயலானுக்கு வடையும், வாடாவும், சமோசாவும், கட்லட்டும் சோத்து வாடாவும் இருந்தால்தான்...அது நோன்பு....

அதைத் தின்ன மாட்டோம் என்று சொல்பவர்கள் பண்ணுவது வெறும் வீம்பு...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 01 July 2015
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41198

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்துஹு.

இறையருள் நிறைக.

நோன்புடையநேரத்தில் நோன்புமான்பாகிறது, மற்ற நேரத்தில் நோன்பு நோன்புபிடிக்கிறது அவ்வளவுதான்.

தம்பி சாலிஹின்பதிவு புரிதல் உள்ளவர்களுக்குக் கட்டுரை காட்டும் நல்லுரை,
புரிந்தும் புரியாதவர்களாயிருப்பவர்களுக்கு காட்டுரைதான்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஒரேயொருவராவது...
posted by: S,K.Salih (Kayalpatnam) on 01 July 2015
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41199

அதிகம் ஆசைப்படவில்லை! ஒரேயொருவராவது, “இக்கட்டுரையைப் பார்த்த பின்பு நான் புகைப்பழக்கத்தைக் கைவிட முடிவு செய்து விட்டேன்” என்று கூறி முன்னுதாரணமாக இருக்க மாட்டார்களா என்ற ஆவல் என்னுள் அதிகமாக உள்ளது. (புகைப்பவர்களுக்கு மட்டும்!!!)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. S .K .சாலிஹ் சிறப்புமிகு சிந்தனைப்பேழை !
posted by: முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) on 01 July 2015
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 41201

வளைகுடா நாட்டில் காரை ஓட்டிக்கொண்டு வெளியூர் செல்லும் பொழுது வாகன சோதனைசாவடி(check point )யை நெருங்கும் பொழுது உடனே நாம் சீட்பெல்டை மாட்டுவது மட்டுமல்ல மற்றவர்களையும் மாட்ட சொல்கிறோம். ஏன்? பயம்,அபராதம் அசிங்கம் ஆகிய தண்டனையில் இருந்து தப்பிக்க,

அந்த சோதனை சாவடி தாண்டிய பிறகு அந்த சீட்பெல்டை அசால்ட்டாக தளர்த்திவிட்டுக்கொண்டே சுவராசியமாக நம் கதைகளை பேசிக்கொண்டே பயணம் செய்கிறோம்!

ஒரு குறிப்பிட்ட தூரம்வரை சென்ற நம் வாகனம் நாம் சென்று கொண்டிருக்கும் சாலையில் வேறொரு வாகனம் குப்பற விழுந்து கிடப்பதை காண முடிகிறது.அதை பார்த்த நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது .அந்த வாகனத்தில் பயணம் செய்தவர்களில் இருவர் வெளியே தூக்கி எறியப்பட்டு மரணித்தும் விட்டாரகள்!

அந்த விபத்து இடத்தில் சிலர்கூடி உதவி செய்வதில் முனைந்திருந்த அந்த வேலையில் அங்கிருந்து கேட்டகுரல், இந்த இரண்டுபேரும் சீட்பெல்ட்டை மாட்டியிருந்தால் இவர்கள் மரணித்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்!

நம்முடைய நலமான,பாதுகாப்பான வாழ்வு என்ற வழிநெறி முறையை நம் புண்ணிய இஸ்லாம் மார்க்கம் மிகத் தெளிவாக நமக்கு தந்திருக்கிறது. அதுதான் "சீட் பெல்ட்" என்பது அதையணிந்து இவ்வுலக வாழ்வு என்ற பயணத்தில் பாதுகாப்பாக செல்வது ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமையாகும்!

இதில் அசால்ட்டாக இருக்கும் அதிகமானோருக்கு சோதனை சாவடி என்ற இடத்திற்குறிய நேரமான புனித ரமலான் நோன்பு காலம் வருகிறது, அந்த காலத்தில் மட்டும் பயந்து "சீட்பெல்ட்" போடுபவர்கள், அந்த மாதம் முடிந்தவுடன் அந்த பாதுகாப்பு கருவியை தொடர்ந்து உபயோகிப்பது இல்லை.அப்படி பின்பற்றா தவர்களின் முடிவு வழியில் விபத்தில் சிக்குண்டவர்களின் பரிதாப நிலையைத்தான் வாழ்வில் பெறவேண்டியது வரும் என்ற மிகப்பெரிய மார்க்க உத்தம உண்மையை மிக சிம்பாலிக்காக என் அன்பு மருமகன் S.K சாலிஹ் கூறியுள்ளார்!

அருமை மருமகன் S .K .சாலிஹ் அவர்கள் இதுபோன்ற பயனுள்ள கருத்துக்களை பீரிட்டு பாயச்செய்யும் சிந்தனை ஊற்றறிவின் அமுத சுரபியல்லாவா? நாம் எல்லோரும் சேர்ந்து எப்படி அள்ளினாலும் அன்றே அடுத்த கணமே அப்படியே ஊறிவிடும் மறுபடியும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்! .

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: mohmed younus (chennai) on 02 July 2015
IP: 223.*.*.* India | Comment Reference Number: 41202

மிக அழகான கட்டுரை. அழகான murayil அலசி இருக்கிறார்.

நான் ஒருவரை பார்த்து இருக்கிறேன். எல்லோரும் ஈத்தபபலத்தை வைத்து நோன்பு திறப்பாடு மாதிரி இவர் பீடி புகையை வைத்து நோன்பு திறப்பார். அதாவது ஒரு மிடறு கஞ்சிதான் குடிப்பார். பின் அதை ஆசுஇலுக்க போய் விடுவார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. பாசஞ்சர் அல்லது விரைவு ரயில்
posted by: Abuthahir.mik (Holy Makkah Mukarramah) on 03 July 2015
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41205

கண்டதைப் படித்தால் பண்டிதர் ஆகலாம் என்பார்கள். அதனை மனதிற்கொண்டு, ‘கருப்பு பெல்ட்’ என்ற தலைப்பில் சொடுக்கி, ஏதோ கராத்தே பற்றித்தான் சொல்லப் போகிறார் என்று நினைத்துப் பார்த்தால், காலத்தின் கோலத்திற்கேற்ப அழகான கட்டுரையை - கருத்துக்களைப் பதிவு செய்துள்ள வாசகர்கள் சொன்னது போன்று, தனக்கே உரிய குசும்பு பாணியில் தந்துள்ளார் ஆசிரியர்.

“நீங்களெல்லாம் எதை வைத்து நோன்பு நோற்கிறீர்கள்?” என்று ஒருவர் கேட்க, சிறியவர் – “மீன், இறைச்சி, இறால் இவற்றுடன் சோறு” என்று கூற, அதற்கு அவர், “அதே போன்றுதான் நானும் நோன்பு நோற்கிறேன்... ஆனால் காலையிலேயே வயித்தைப் பிடுங்க ஆரம்பித்துவிடுகிறது” என்று சொல்லிவிட்டு, “அதெல்லாம் கூட பரவாயில்லப்பா... புகையை விட்டு விட்டு இருக்கும் எனக்கு அதை விட்டு தான் என்னால இருக்கவே முடியலே... நோன்பு துறந்துவிட்டு ஐந்து அல்லது ஆறு பாசஞ்சர் அல்லது விரைவு ரயில் ஓட்டிவிடுவேன்” என்று சொன்ன ஒருவரின் உரையாடல்தான் என் நினைவுக்கு வருகிறது.

நவீன கருவிகள் என்ற பத்தியைப் படிக்கும்போது ஒருவகையான ஓட்டம் மனதில். (விபரம் இல்லை!).

அரபி மாதங்களின் பெயர்களைத் தெரிந்துகொள்வதும், நடைமுறைப்படுத்துவதும் அவசியம் என்பதை கட்டுரை ஆரம்பத்திலேயே உணர்த்துகிறது. அழகான நடையில், ஆரோக்கியமான வாழ்வியலை எடுத்துச் சொல்லும் இக்கரங்களின் பணிகள் இன்னும் தொடர வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் புனித ரமலானில் சந்திப்போம் புகையை வெறுக்கும் நல்ல மனிதனாக..!
posted by: தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) on 03 July 2015
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41209

கட்டுரை மிக அருமை.. சகோதரர் S .K .சாலிஹ் என்னை மன போராட்டத்திற்கு ஆளாக்கி விட்டார்.. என்பது உண்மை..!

சகோதரர் S .K .சாலிஹ் அவர்களின் கட்டுரையை படித்ததில் சில வரிகள் (புகைப்பழக்கம்) குறித்து என்னை நானே சுய பரிசோதனை செய்து கொண்டாலும் மனம் ஏனோ இக்கட்டுரையில் (புகைப்பழக்கம் குறித்து) குறிப்பிட்டுள்ள நல்ல விசியத்தை ஏற்க மறுக்கிறது.

மேலும் சகோதரரின் அழகிய இக்கட்டுரைக்கு கருத்து பதிய அருகதையற்றவனாக இருக்கிறேனே என்பதையும் உணருகிறேன்..!

இன்ஷா அல்லாஹ்..! இக்கட்டுரையில் சகோதரர் கோர்த்த வரிகளின்படி என்னை நான் திருத்திக்கொள்ள முயற்சிக்கறேன் - இன்ஷா அல்லாஹ் இந்த சகோதரரின் ஆவல் மற்றும் குறிப்பாக குடும்ப உறவுகளின் எதிர்ப்பார்ப்பு நிறைவேற நானும் ஒருவானாக இருக்க விரும்புகிறேன்..

புகைப்பழக்கத்திற்கு அடிமையான நான் இக்கட்டுரையின் வாயிலாக புகைப்பழக்கத்திலிருந்து மீண்டு எழ எனக்காக நீங்களும் பிராத்தியுங்கள்..

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் புனித ரமலானில் சந்திப்போம் புகையை வெறுக்கும் நல்ல மனிதனாக..! வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. அல்லாஹ் அருள் புரியட்டும்!
posted by: S,K.Salih (Kayalpatnam) on 03 July 2015
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41210

என் பாசத்திற்குரிய காக்கா - பொதுநல ஆர்வலர் தமிழன் முத்து இஸ்மாஈல் அவர்களுக்கு மிக்க நன்றி.

தன்னிலை விளக்கத்தை மனத்துணிவுடன் தந்ததோடு மட்டுமின்றி, வருங்காலத்தில் புகையற்ற வாழ்வைக் கைக்கொள்வதாக வாக்கும் அளித்துள்ளார்.

காக்கா! தங்களைப் புகையின்றி சந்திக்க அடுத்த ரமழான் வரை காத்திருக்கத் தேவைப்படாது... இன்ஷாஅல்லாஹ் இன்றே வைராக்கியம் வையுங்கள்! அல்லாஹ் சொன்னதற்காக அதிகாலை முதல் மஃரிப் வரை ஒரு மாதம் காத்திருக்கும் தாங்கள், அல்லாஹ்வையும் - அவன் தூதரையும் முன்னிறுத்தி உங்கள் அன்புத் தம்பி சொன்னான் என்பதற்காக இன்றே நல்ல முடிவெடுங்கள்! அல்லாஹ் நிச்சயம் தங்களுக்கு நல்லருள் புரிவான்!

புகையைப் பகைப்பதால் மிகைக்கும் தொகையைப் பல வகைகளில் செலவழிக்க அல்லாஹ் கிருபை செய்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. குவாலிட்டியை அப்படியே மெயிண்டன் பண்ணுங்க...
posted by: M.N.L.Mohamed Rafeeq (Singapore) on 04 July 2015
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 41212

காயல் தமிழில் அழகான பதிவு. புகைக்கும் பழக்கம் உள்ளவர்க்கு புரியும் விதம் பல உதாரணங்களை எடுத்துக் காட்டி நாசூக்காக சொல்லியிருப்பது SK அண்ட் சன்ஸ் நிருவனத்தின் பாரம்பரிய குவாலிட்டி! மக்கி நூகுத்தம்பி மாமாவிடம் SK பிராண்ட் சரக்கு நிறைய ஸ்டாக் இருக்கும்.

உங்கள் தகப்பானாரின் சொல் செயல் அனைத்திலும் நகைச்சுவையுடன் கூடிய ஆழமான அர்த்தம் இருக்கும். முல்லா நஸ்ருத்தீன், தெனாலி ராமன், பீர்பல், ஆகியோரை கதையில்தான் பார்த்துள்ளோம். எனில், வாழும் காலத்தில் இம் மூவரையும் ஒருவராக, உம் தந்தையைக் கண்டேன். என்ன இருந்தாலும் உமது எழுத்திலும் சொல்லிலும் செயலிலும் தீர்விலும் தகப்பனின் சாயல் இல்லாமல் இல்லை!

காயல் வட்டார வழக்கில் கட்டுரையைப் படிக்கும் போது கி. ராஜநாராயணன் அவர்களின் கரிசல் காட்டு மண் எனும் ஆக்கம் தான் நினைவுக்கு வருகின்றது. தொடர்ந்து எழுதுங்கள். நண்பர் SK.சாலிஹ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்...!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by: K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) on 05 July 2015
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41216

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் அருமை சகோதரர் S.K.சாலிஹு அவர்களின் ..இந்த கட்டுரையில் நல்லதோர் பக்குவமும் ,,முதிர்ச்சும்,, அனுபவமும் ,,தெரிகிறது ....சொல்வார்களே நம் ஊரில் ஒரு பழமொழி ''......இரும்பை அடிக்க ,,அடிக்க ,, தான் ...அது ஒரு பக்குவத்துக்கு வரும் என்று .....அது போல தான் ..நம் சகோதரர். S.K.சாலிஹு அவர்களின் ( கட்டுரைகள் எழுத ,,எழுத தான் ) கட்டுரை ஒவ்வொன்றிலும் மாஷா அல்லாஹ்.... நல்ல அனுபவும் தெரிகிறது .....

தொடரட்டும் தங்களின் இது போன்ற பக்குவமுள்ள நல்ல கட்டுரைகள் .....

நிச்சயம் தங்களின் இந்த கட்டுரை படித்து நிறைய பேர்கள் அவர்களாகவே தேவைகற்ற அவர்களின் கெட்ட பழக்கங்களை விட்டு ,,விடுவார்கள் ......இப்போவே நம் சகோதரர் ஒருவர் அவர்கள் தானாகவே முன்வந்து ...நல்ல செய்தியை தரும் போது...அதுவே தங்கள் கட்டுரைக்கு கிடைத்து ஒரு முதல் வெற்றியே ......நிச்சயம் நிறைய பேர்கள் திருந்துவார்கள் ....

நல்ல கூர்ந்து .... தங்களின் இந்த கட்டுரையை நாம் படிக்கும் போது .....நம் மனதே நமக்கு நல்ல ஒரு வழியை காட்டுகிறது ...அது தான் உண்மை .....

நல்ல அருமையான கட்டுரைகளை தொடர்ந்து தாருங்கள் .......... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved