Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:30:10 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 220
#KOTWEM220
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 7, 2017
ஹாசினிகளைப் பாதுகாப்போம்....

இந்த பக்கம் 4105 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மார்ச் 08ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப் படுகிறதாம்... பொன்வண்டு சோப்பு விளம்பரம் முதல் லலிதா ஜுவல்லரி விளம்பரம் வரை போட்டி போட்டுக்கொண்டு பெண்களை வாழ்த்தி தங்கள் பொருட்களை கூவிக் கூவி சந்தைப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

“பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்... பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்... பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்...” என்று தனது இறுதி மூச்சின்போதும் உறுதிபட அறிவுரைத்துச் சென்ற அண்ணல் நபிகளார், ஆண்டின் 365 நாட்களும் பெண்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்தான் என உரக்கச் சொன்னது இந்த உலகின் மூடிய காதுகளுக்குள் இன்னும் முட்டித் தெறிக்கவில்லை... அதனால்தான் மார்ச் எட்டை மட்டும் பெண்களுக்கான நாள் என ஒதுக்கி நல்ல நாடகத்தை அரங்கேற்றுகிறது இந்த அற்ப உலகம்.

பெண்கள் இன்று கல்வியில் முன்னேறிவிட்டார்கள்... அரசியலில் கால் பதித்தது மட்டுமல்ல... காலடியில் வீழவும் வைத்து விட்டார்கள்... இரும்புப் பெண்மணி... எதிரிகளை எறும்பு போல் நசுக்கி விடும் பெண்மணி என்று பெண்களின் முன்னேற்றம் வாய்ப்பந்தல்களில் ஒருபுறம் கிழிகிறது... மறுபுறமோ...

மலரும் முன்பே கருக்கப்படும் அரும்புகளின் எண்ணிக்கை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ஆம்... ஹாசினிகளைப் பெற்ற எங்களின் வயிறுகள் மீண்டும் நெருப்புக்ளைச் சுமக்க ஆரம்பித்துவிட்டன.

ஒவ்வொரு நாளும் காலையில் பள்ளிக்கூடத்திற்குப் பிள்ளைகளை அனுப்பிவிட்டு மாலையில் அவர்கள் வீடு திரும்ப எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் அந்த ஏழு மணி நேரங்களும் ஏழு ஜென்மங்களாக நீண்டு நெளிகிறது... இடையில் அறியாத, தெரியாத எண்களிலிருந்து தொலைபேசி ஒலித்தால் வயிற்றில் புளியைக் கரைக்கிறது...

“பள்ளிக்கூட வேன்களிலும், ஆட்டோக்களிலும்... இனி யாரை நம்பி குழந்தைகளை அனுப்புவது...? பள்ளியில் வாட்ச்மேன் இருப்பாரே...? இதர பணியாளர்கள் இருப்பார்களே...? கோ-எஜுகேஷன் பள்ளி என்றால் ஆண் ஆசிரியர்கள் இருப்பார்களே...? விடலைப் பருவ மாணவர்களும் நிறைய இருப்பார்களே...?” என்று - வேண்டாத கற்பனைகளை விபரீதமாய் மனம் விரிக்கிறது... குழந்தைகளைக் கூட குழந்தைகளாய் பார்க்கத் தெரியாத கொடூரர்களின் கூடாரமாய் இன்று உலகம் மாறிக் கொண்டிருக்க... மார்ச் எட்டு உலக மகளிர் தினமாம்... என்ன ஒரு நகைமுரண்...?

ஹாசினி..., நந்தினி..., ரித்திகா..., சூர்யகலா... என்று கடந்த ஒன்றரை மாதங்களில் வெளியில் வந்த பெயர்கள் இவை... வெளியில் வராமல் எத்தனையோ... நமக்கு அருகிலேயே நாம் அறியாமலேயே... நித்தமும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை...

ஹாசினியை சிதைத்த அந்தப் பாவி ஒரு டிப்ளமோ பொறியியலாளன்... ஐ.டி. கம்பெனி ஒன்றில் பணியாற்றுபவன்... படிப்புக்கும், பண்பாட்டுக்கும் தொடர்பே கிடையாது என்ற உண்மை நம் பொதுப்புத்திக்கு எப்போதுதான் உறைக்கப் போகிறதோ...?

இந்தக் கயவர்களை அவ்வளவு எளிதில் அடையாளம் கண்டுவிட முடியாது... நல்லவர்கள் முகமூடியுடனேயே நமக்குள்ளே உலா வருபவர்கள்... நம் வீட்டுக்கு அருகிலேயோ..., பள்ளியிலோ..., நம் நெருங்கிய வட்டாரங்களிலோ... எங்குமிருக்கலாம்!

குழந்தைகள் மீது நடத்தப்படும் இதுபோன்ற வன்கொடுமைகளில் என்பது முதல் தொன்னுறு சதவீத குற்றங்கள் குழந்தைகளுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவும், நன்கு நெருக்கமானவர்கள் மூலமாகவும்தான் நடக்கின்றன. இவர்களுள் படித்தவர்கள், படிக்காதவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என எந்த வேறுபாடும் இல்லை என்பதை குழந்தைகள் மீதான குற்றங்கள் பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் 53 சதவீத குழந்தைகள் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், யூனிசெப், மற்றும் save the children ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாகவே பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களை மனிதர்களாகக் கூட நம்மால் மதிக்க முடியாது எனும்போது, குழந்தைகளிடம் போய் கேவலமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த இழி பிறவிகளை மிருகங்களுக்கும் கீழாகத்தான் கருத வேண்டியுள்ளது. இந்த இழிபிறவிகளின் இலக்குகள் பன்னிரண்டு வயதுக்குக்குட்பட்ட சிறுமிகள்தானாம்!

குழந்தைகள் குரலற்றவர்கள்... அவர்களால் எதிர்ப்புக் காட்ட முடியாது என்னும் யதார்த்தமே இவர்களது கேடயமாகிறது.

தனக்கு என்ன நடந்தது என்பதை புரிந்தும், புரியாத தன்மை...

“வெளியே சொல்லலாமா, கூடாதா?” என்ற குழப்பம்... “சொன்னால் நம்புவார்களா, மாட்டார்களா?” என்ற பயம்...

“நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” என்ற வெட்கம்...

“உறவுகளை இழந்து விடுவோமோ?” என்ற அச்சம்...

“விஷயம் பெரிதாகி நம் நண்பர்கள் மற்றும் உறவுகள் முன்னிலையில் அசிங்கப்பட்டு விடுவோமோ...?” என்ற பதட்டம்...

இவ்வாறான பலவித குழப்பங்கள் அந்தப் பிஞ்சு மனதிற்குள்ளே சுற்றிச் சுழல... பல குழந்தைகள் தனக்கு நேர்ந்த அந்த பயங்கரத்தைத் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு, வாழ்நாள் முழுவதும் மனரீதியாக அனுபவிக்கும் துயரங்கள் விவரிக்க முடியாதவை. ஹாசினிகளைப் பெற்றவர்களாகிய நமக்குத்தான் ஐம்புலன்களையும் விழிப்பாக வைத்துக்கொள்வது அவசியமாகிறது....

குழந்தைகள் ஆணோ, பெண்ணோ... வளரும்போதே அவர்களுக்கு ‘குட் டச்... பேட் டச்..’ பற்றிய தெளிவினை ஊட்டிவிட வேண்டும். வெட்க உணர்வை எப்படி பெண் குழந்தைகளுக்குள் ஆழ ஊன்றி விதைக்கிறோமோ அதுபோல, ஆண் குழந்தைகளிடத்தும் விதைக்க வேண்டும். குழந்தைகளைப் யாரைப் பற்றியாவது நம்மிடம் வித்தியாசமாகப் புகார் கூறினால் அதை அலட்சியப்படுத்தாமல், காது கொடுத்துக் கேட்டு, அது சம்பந்தமாக மேல் நடவடிக்கை எடுப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.

மஹ்ரமல்லாத உறவினர்கள், நண்பர்களுடன் குழந்தைகள் தனியாக இருக்க ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்! பிள்ளைகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது, பெரியவர்கள் இல்லாத வீடெனில் பெற்றோர்களில் யாராவது ஒருவர் கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டும்.

பக்கத்து வீடுகளில் சாவி கொடுத்து வைத்து - நாம் வீட்டுக்குத் திரும்பி வரும்வரை அங்கே அவர்களை காத்திருக்கச் சொல்வதையும், பக்கத்து வீடுகளுக்கு நம் பிள்ளைகளை விளையாட அனுப்புவதையும் பெரும்பாலும் தவிர்க்கவே முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக... “வீட்டு டிரைவர்தானே?” என்று குழந்தைகளை அவர்களுடன் பள்ளிகளுக்கோ...,வெளியிலோ... தனியாக அனுப்பவோ... அவர்களுடன் நெருங்கிப் பழகவோ அனுமதிக்க வேண்டாம்... ஆணானப்பட்ட நடிகைகளையே டிரைவர்கள் படுத்திய பாடு கேரளாவில் சமீபத்தில் பூதாகரமானதை நாம் அறிவோம்... சிறு குழந்தைகள் எம்மாத்திரம்...?

இஸ்லாம் என்றுமே உண்மையை போட்டு உடைக்கத் தவறியதே இல்லை... மஹ்ரமில்லாத உறவினர்களுடன் நடந்துகொள்ளும் முறையைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டபோது, “ஒரு பெண் அவளது கணவனின் சகோதரர்களுடன் நடந்துகொள்ளும் முறை மரணத்திற்குச் சமம் எனுமளவிற்குப் பேணி நடக்க வேண்டும்!” என்று கூறினார்கள்.

“உறவினர்கள்தானே?” என்று நீக்குப் போக்காக நடந்துகொள்ள இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

குழந்தைகள் எதையும் வெளியில் சொல்ல மாட்டார்கள்... நாமாகத்தான் அவர்களின் முகத்தை தினமும் கண்காணித்து வரவேண்டும்.

அவர்களிடம் வழக்கத்திற்கு மாறான பயமோ...
பள்ளிக்குச் செல்வதில் தயக்கமோ...
குறிப்பிட்ட ஒரு ஆளைப் பார்த்தவுடன் வெறுப்போ...
அவர்களது இயல்பான துறுதுறுப்பு தொலைந்து எதையோ இழந்தது போன்ற அமைதியோ...
என்று, எந்த மாற்றத்தைக் கண்டாலும் சரி! அன்பாக... மெதுவாக அவர்களிடம் பேச்சுக்கொடுத்து, இன்னதென்று விசாரித்தறிந்து தக்க நடவடிக்கை எடுக்க நாம்தான் முயற்சிக்க வேண்டும்.

ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ - இரண்டுமே இறைவன் நமக்களித்த அமானிதங்கள்! அதிலும் பெண் குழந்தைகள் பெற்றோருக்கு சுவர்க்கத்தின் வாசலைத் திறந்துவிடும் திறவுகோல்கள்!! பெண் குழந்தைகளை ஒழுக்கத்தோடும், பண்பாட்டோடும் வளர்க்க வேண்டும் என்பதில் நாம் காட்டும் அதே அக்கறையை ஆண் குழந்தைகளின் வளர்ப்பிலும் நாம் செலுத்தியாக வேண்டியுள்ளது.

பெண்களை உயர்வாக மதித்து நடத்த வேண்டியதன் அவசியத்தை வெறும் வார்த்தைகளால் மட்டுமல்ல... நமது வாழ்க்கையாலும் ஆண் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். “பெண்களை மதித்து நடப்பவனே உயர்ந்த மனிதன்” என்னும் எண்ணத்தை அவர்களின் உள்ளத்திலே ஊன்ற விதைக்க வேண்டும். “ஆம்பளப் பிள்ளைதானே... சேத்த கண்டா மிதிப்பான்... தண்ணிய கண்டா கழுவுவான்...” என்ற மனோபாவத்தை மறந்தும் நம் மகன்களிடம் புகுத்திவிட வேண்டாம்!

தாயாக, சகோதரியாகவே இருந்தாலும் கூட சிறுவயது பிள்ளைகள் முன்னிலையில் வெட்கம் பேணி நடத்தல் அவசியமாகும். அப்போதுதான் தானாகவே வெட்க உணர்வு அவர்களுக்குள்ளும் ஊடுருவும்.

குழந்தைகள் மீதான இந்த வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில் 2012ஆம் ஆண்டு போக்ஸோ (POCSO- PROTECTION OF CHILDREN FROM SEXUAL OFFENCE ACT ) என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டப்படி குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கொடுக்கப்படலாம்... ஆனால் நம் நாட்டு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் இலட்சணங்கள்தான் நமக்குத் தெரியுமே...?

என்ன சட்டம் வந்து என்ன பயன்...? திட்டம் போட்டு குற்றம் செய்பவர்களை என்ன செய்ய முடியும்...? சட்டத்தின் சந்துபொந்துகளெல்லாம் இவர்களுக்கு சாதமாகிக் கொள்ளும்போது, ஏட்டளவில் இருக்கும் சட்டங்களால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

குற்றம் நடந்த பின் கிடைக்கும் தண்டனைகளை விட, வருமுன் பாதுகாப்பதுதான் முக்கியம்! அதனால்தான் சொல்கிறேன்... பெற்றோர்களே...! ஒவ்வொரு நொடியும் கண்ணை இமை காப்பது போல ஆண், பெண் ஆகிய இரு குழந்தைகளையும் யாருடைய பொறுப்பிலும் விடாமல் நீங்களே பாதுகாத்து வாருங்கள். ஏனெனில் பிள்ளைகளை விட நமக்கு வேறெதுவும் முக்கியமில்லை...

பள்ளிகளிலே பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை இரத்து செய்வோம் என்றார்கள்... இதுநாள் வரை ஒரு ஆசிரியரின் சான்றிதழ் கூட இரத்து செய்யப்பட்டதில்லையாம்...

வெளிநாடுகளிலே பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை “இவன் ஒரு பாலியல் குற்றவாளி இவனிடம் எச்சரிக்கையாக இருங்கள்” என பொது இடங்களில் விளம்பரம் செய்வார்களாம்... ஆனால் இங்கு பெரும்பாலான பாலியல் குற்றவாளிகள் தண்டனையே பெறாமல் தப்பித்து விடுகிறார்கள். போக்ஸோ சட்டப்படி பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஐந்து சதவீதம் வழக்குகளில் கூட குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில்லை என்கிறார் குழந்தைகள் நல உரிமை ஆர்வலர் தேவநேயன் அவர்கள்.

“நள்ளிரவில் நகைகளை அணிந்து கொண்டு தனியாக ஒரு பெண் எப்போது பாதுகாப்பாக செல்ல முடிகிறதோ அப்போதுதான் இந்தியா உண்மையான சுதந்திரம் அடையும்!” என்றார் தேசத் தந்தை... ஆனால் இன்று தேசத்தின் சொத்துக்களான குழந்தைகளுக்கு பட்டப் பகலிலே கூட பாதுகாப்பில்லை...

பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்களது அதிகாரச் சண்டைகளின் அமளிதுமளிகளில் ஹாசினிகளின் கதறல்கள் ஈனஸ்வரமாய் அடங்கிப்போய்விட்டது. கூவாத்தூரின் கொண்டாட்ட சப்தங்களிலும்... சமாதிகளின் மீதான சபதங்களின் நாடகங்களிலும்... நான்தான்... எனக்குத்தான் என்ற இழுபறிகளின் கூக்குரல்களிலும்... ஹாசினியின் பெற்றோரின் கதறல் கண்டுக்கொள்ளப்படவே இல்லை...

ஐயா...! ஆட்சியாளர்களே...!!

முப்பது மூன்று சதவீதம் தந்து முதுகிலே குத்தும் போலி கவுரவங்கள் எங்களுக்கு வேண்டாம்! தனி மனித ஒழுக்கத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!!

உங்கள் சண்டைகளைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, சட்டம் ஒழுங்கைக் கொஞ்சம் கவனியுங்கள்!!!

சட்டைகளை கிழிப்பதை விட்டுவிட்டு சாட்டைகளைக் கொஞ்சம் சுழற்றுங்கள்!!!

உங்கள் நோக்கம் ஜனநாயகமோ... அல்லது பணநாயகமோ... உங்கள் வீடுகளிலும் ஹாசினிகள் வளருகிறார்கள் என்பதை தயவுசெய்து மறந்துவிடாதீர்கள்!!!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பெண் பிள்ளைகள் ...
posted by: Salma Aboobacker (Chennai) on 07 March 2017
IP: 122.*.*.* India | Comment Reference Number: 45319

பெண் பிள்ளைகள் மீது மிக்க கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

இயற்றிய சட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தாது இருக்கின்ற, நாளுக்கு நாள் pedophile- களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், நம் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிப்பது மிக அவசியமான ஒன்று.

மேலும், கட்டுரை ஆசிரியர் கூறியது போல ஆண் பிள்ளைகளையும் மார்க்கதின் கண்டிப்போடு வளர்க்க வேண்டும். அவன், ஒரு நல்ல மகனாக, நல்ல சகோதரனாக, பின்னாளில் தன் மனைவிக்கு நல்ல கணவனாக, தன் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக, சமூகத்திற்கு உதவும் ஒரு நல்ல மனிதனாக உருவாவதற்கு பெற்றோரின் வளர்ப்பு முறை தான் பெரும் பங்காற்றுகின்றது; சமுதாயத்தின் பங்களிப்பும் இதில் சேர்ந்து இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re: ஹாசினிகளைப் பாதுகாப்போம்...
posted by: Koos Aboobacker (Riyadh) on 07 March 2017
IP: 37.*.*.* | Comment Reference Number: 45321

Brave... Brave... What a brave article?

We need such great articles on similar social disaster topics !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. குழந்தைகளின் பயமும்,சட்ட அமைப்புமே குற்றங்களுக்கு துணைபோகின்றன
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 08 March 2017
IP: 5.*.*.* | Comment Reference Number: 45326

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

நாய்களை இரண்டுவகையாகப்பிரிக்கலாம் ஒன்று பழகிய நாய் மற்றவர்களைக்கண்டு நாம் பயப்பட்டால் நமக்குத்துணையாக நிற்கும்

பழகாத நாயைக்கண்டு நாம்கண்டு பயந்தால் நமது கண்களில் பீதியைப்பார்க்கும்போது நமது சிறுநீரகத்திலிருந்து ஒரு திரவம் சுரக்குமாம் அந்தசுரப்பியின் வாசம் நாய்கள் விரும்புவதில்லை அத்தருணத்தில் அதற்கு வெறிபிடிக்கிறது அப்பொழுதே அதுகடிக்கவும் முடிவு செய்கிறது என்று படித்த ஞாபகம்.

இதில் ஹாசினிகளின் நிலை இரண்டாவது வலையில் சிக்குகிறது

வெறிநாய்களைக்கொள்ளவேண்டும் என்பதுதான் சட்டம் அதை அரசு சரியாகக்கடைப்பிடிக்கிறது. ஏனோமனித முகமூடியிட்ட வெறிநாய்களை சரியாகதண்டிப்பதில்லை. சட்டமும் தண்டனையும் கடுமையானால்தான் இதுபோன்ற கொடுமைகளிலிருந்து விமோட்சனம் கிடைக்கும்.

குழந்தைகளிடம் நாம் பெற்றோர்கள் திறந்துபேசிப்பழகவேண்டும் தைரியமாக வளர்க்கவேண்டும் தற்காப்பு பயிற்சிகளையும் ஒழுக்க,வெட்க உணர்வுகளையும் கட்டாயமாகக்கொடுக்கபபடவேண்டும் அப்பொழுதே மனதும்,உடலையும் வலிமையாகும் பள்ளிக்கு,வெளியில் சென்றுவரும் குழந்தைகளிடம் இன்று பள்ளியில் என்ன நடந்தது யாரையெல்லாம் சந்தித்தாய் என்னென்ன பேசினாய்,/பேசினார்கள் என்று தவறாது விசாரிக்கவேண்டும் ஒருவேளை நாம் கேட்க மறந்துவிட்டாலும் நீ எனக்கு ஞாபகமாக சொல்லவேண்டுமென்று அன்பாக சொல்லிக்கொடுக்கவேண்டும் அந்த பதிலைவைத்து ஆட்களை நாம் சரியாக அடையாளம் கண்டுகொள்ளமுடியும்.

இன்னும் வர்கள் வழக்கமாகச்செல்லுமிடமல்லாது வேறுவழியில் செல்கிறீர்களா? என்றுகண்டறிய அவர்களோடு ஜி பி எஸ் கருவிகளைப்பொருத்தி அனுப்பலாம் வழக்கமானவழியல்லாது மாற்றுவழியில் செல்கிறார்களென்றாலும்,உடலளவிலோ,மன அளவிலோ மாற்றம்னுதென்பட்டாலும் நமக்கு அது எச்சரிக்கை சமிக்கைசெய்வதாக இருக்கவேண்டும் இன்ஷா அல்லாஹ் இதுசாத்தியமென்பது என்கருத்து (உதாரணம் ஃபால்ஸ் மானிட்டரிங்).

எது எப்படியிருந்தாலும் சட்டமும் தண்டனைகளும் கடினமாகவேண்டும் இல்லையெனில் புரட்சிசெய்துதான் தீர்வுகாணவேண்டும்.

கட்டுரை ஒருதாய் தன் குழந்தையை பாதுகாக்கநினைக்கும் ஏக்கத்தால் வெளிப்படும் மூச்சுத்திணறல்போலுள்ளது காலத்தின் கட்டாயம் எழுதத்தூண்டியிருக்கிறது ஹைர் இறைவன் நிம்மதியைக்கொடுப்பானாக ஆமீன் இதுபோன்ற கட்டுரைகளைதொடராமலிருக்க அல்லாஹ்வினிடம் துஆச்செய்வோம் ஆமீன்

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பெற்ற வயிறு...
posted by: S.K.Salih (Kayalpatnam) on 09 March 2017
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45332

பெற்ற வயிறு பற்றி எரிந்திருக்கிறது...

காலம் வெகுவாகக் கெட்டுப் போய்க்கிடக்கிறது. ஒரு காலத்தில் எல்லோரும் நல்லது செய்வர்; எங்காவது சிலர் தவறிழைப்பர்; எனவே, அது பாரதூரமானதாக இருந்தது...

இன்றோ, எல்லோரும் தவறு செய்ய - எங்கோ, யாரெவரோ ஓரிருவர் நல்லது செய்தால், அவர்கள் மனிதப் புனிதர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.

அந்த வகையில், பெண்குலத்திற்கெதிரான பாலியல் வன்முறைகள் இன்று சர்வ சாதாரணமாகிப் போனது. யாரும், யாரையும் தட்டிக் கேட்கத் திராணியற்ற நிலையில்தான் மனித சமூகம் இன்று இருந்து வருகிறது.

எத்தனை சட்டங்கள் வரட்டும்! எத்தனை பேர் வேண்டுமானாலும் தத்துவம் பேசட்டும்!! எல்லோரையும் படைத்த இறைவன் அளிக்கும் சட்டங்களால் மட்டுமே முழுத் தீர்வு கிடைக்கப் பெறும். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மனங்கள்தான் திறக்க வேண்டும்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக - இஸ்லாம் இயம்பும் சட்டங்களை வெவ்வேறு வடிவங்களில் திரைப்படங்கள் வாயிலாகவும், அரசியல் பேட்டிகள் வாயிலாகவும் பலரும் வெளிப்படுத்தித்தான் வருகின்றனர். சூழல் அவர்களை அவ்வாறு பேச வைத்திருக்கிறது.

தவறுகள் தவிர்க்கப்பட இயலாதவையாகக் கருதப்படும் ஆணாதிக்கச் சமூகத்திற்கு கட்டுரையாளர் சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறார்.

“ஆம்புள புள்ள...
அவன் சேத்தக் கண்டா முங்குவான்...
ஆத்தக் கண்டா குளிப்பான்...”

குரூர சிந்தனைகளால் மயங்கிப் போன மனதுடையவர்களின் உதடுகள்தான் இதுபோன்ற சொல்லாடல்களை உச்சரிக்கும்.

இறைவன் நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்) on 09 March 2017
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45336

ஷமீம் காக்காவின் “தலாக்! தலாக்!! தலாக்!!! - வெறிக்கூச்சலும் வெளிச்சமான உண்மையும்!!!” துவங்கி, சகோதரி பின்த் மிஸ்பாஹீயின் “அவசிய திருத்தமும், அழகிய தீர்வும்” என தொடர்ந்து, சகோதரி உம்மு நுமைராவின் “ஹாசினிகளைப் பாதுகாப்போம்” வரை, சமீபகாலமாக பெண்ணிய கட்டுரைகள் வலைதளத்தில் அதிகம் பதிவிடப்படுவது சமூகத்திற்கு ஆரோக்கியமானதே.

நம் வீட்டினுள் புகும்வரையிலும் எந்த ஒரு பிரச்சனையையும் வெறும் செய்தியாகவே பார்க்கும் மனப்போக்கை இவை மாற்றிட உதவிடும்.

ஒரு சமுதாய பிரச்சனையை வருத்தத்தோடு விவரிக்கும் இக்கட்டுரையின் ஆசிரியர், அதனை களையும் தீர்வையை சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டுக்குறியது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by: சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கொபார் ) on 09 March 2017
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 45337

மீண்டும் மீண்டும் அருமையான பதிவுகளைத் தரும் நுமைராவின் தாயாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

* நல்ல சந்ததியரையும், நல்ல சமுதாயத்தையும் உருவாக்க அருமையான டிப்ஸ்கள் பரவிக்கிடக்கும் நல்ல கட்டுரை.

* ஒரு நல்ல தாயின் மனநிலையையும், இந்த சமுதாயத்தில் பரவிக்கிடக்கும் கொடுமைகளையும் படம்பிடித்து காட்டும் நல்ல ஆக்கம்.

* பாலியல் தொல்லைகள் தந்து மாட்டிக்கொள்ளும் ஆசிரியர்களின் கதையை பத்திரிகையில் படிக்கும் போது கொதிப்பு தான் வருகிறது. இவர் இந்த ஆண்டு இதே மாதிரி தொல்லையில் பிடிபட்டு இந்த இடத்திற்கு மாற்றப்பட்டார். இந்த ஆண்டு இந்த ஊரில் மீண்டும் இதே தவறு செய்து வேறு ஊருக்கு பந்தாடப்பட்டார் ... என்றே தொடர்கதை மாதிரி இவரின் செயல்கள் தொடரும் ....

இறுதியில் என்ன. ??

மீண்டும் உம்மு நுமைராக்கள் கொடுமைகளை கட்டுரைகளாக வடிப்பார்கள், எங்களைப் போன்றவர்கள் ஆதங்கங்களை கருத்துக்களாக எழுதுவார்கள். அதற்க்கு மேல் ... ஊஹூ...ம் . ஒரு ஆணியும் பிடுங்கப் படாது

* நம் குழந்தைகளுக்கு நாம் தான் முதல் ஆசிரியர். நாம் தான் கத்துக்கொடுக்கனும்.

இங்கு.. ( சவுதியில் ), நண்பர் ஒருவர் தன் பெண் குழந்தையை 12 ஆம் வகுப்பு இங்கு முடித்ததும், சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்த்து விட்டார். இந்த பெண்குழந்தை பிறந்ததில் இருந்தே சவுதியில் வளர்க்கப் பட்ட பெண். வீடு படிப்பு வீடு படிப்பு. அவ்வளவு தான்.

எலி, பூனையை தவிர வேறு எந்த விலங்கும் தெரியாது. ஊரில் விடுமுறைக்கு செல்லும் சமயம் எல்லாம் ஒரு ஆட்டைப் பார்த்தாலே அதிசயித்து நின்று விடுவாள்.

அவளுக்கு பார்வை எப்படி பார்க்கணும், எதை மறைக்கனும், எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்ளனும், ஆண்களின் பார்வை, தொடுதல், உரசல் எதுவும் எடுத்து சொல்லப்படவில்லை. மார்கழி மாத நாய்களின் நடத்தைகளை அப்படியே அப்பாவித்தனமாக நடுரோட்டில் அதிசயித்து பார்க்கும் இந்த பெண்ணை.. சமுதாயம் எப்படி நடத்தும்.. அதுவும் இளவட்டங்கள். இதற்க்கு மேல் அந்த பெண்ணுக்கு நடந்தவைகளை எழுத நாகரிகம் இடம் தராது.

மிகவும் நொந்து அழுது விட்டார் அந்த நண்பர்.

இந்த நினைவுகள் எல்லாம் இந்த கட்டுரை படிக்கும் போது நினைவுகளில் வந்து சென்றன.

பாதுகாக்கப் பட வேண்டிய கட்டுரையில் இதுவும் ஒன்று.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் , அல்கொபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by: Mirshadhunnisa (Adiyakkamangalam,thiruvarur) on 17 March 2017
IP: 117.*.*.* India | Comment Reference Number: 45352

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சமூகத்தின் மீதான கவலை மற்றும் அக்கறை பொதிந்த பதிவு,மா ஷா அல்லாஹ்.

சட்டத்தின் படி செயல்படவேண்டிய சட்டமன்றமும்,அதை உறுதி செய்யவேண்டிய நீதிமன்றமும் பொறுப்பை தவற விடுகின்றன.

படிக்கும் கல்வி முதல் பக்கத்தில் வாழும் பருவ,நடுத்தர,முதிர்ந்த ஆணானாலும்,பெண்ணானாலும் வழிமாறி செல்வதின் விளைவின் பலனை எல்லோருமாய் சேர்ந்து அனுபவிக்க நேருகிறது. இன்றைய இந்திய குற்றவியல் சட்டத்தின் சந்து பொந்துகளால் இதை சரிசெய்யவும் முடியாது.

இதற்கு ஒரே தீர்வு,சமுதாயத்தில் நிகழும் ஒழுக்கச்சீர்கேட்டை களைய அந்நூர் அத்தியாயத்தில் இது சம்பந்தமாக வந்துள்ள சட்டங்களை அரசு ஏற்று சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும்.செய்வார்களா? அவர்கள் அந்நூர் ஸூராவின் 1-26 வசனங்களில் இது சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கு செயல்வடிவம் அளிக்கமாட்டார்கள்.

எனவே,

ஒழுக்கச்சீர்கேடுகளுக்கு சாவுமணி அடிக்கவும், நிகழாமல் தடுக்கவும் அந்த ஸூராவின் மீதமுள்ள (27-64)வசனங்களில் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை தற்காத்துக்கொள்ள தேவையான தெளிவான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.நாம் அவற்றை பின்பற்ற வேண்டும். நம் பிள்ளைகள் ஆணாயினும் பெண்ணாயினும் அவ்வாறு வாழ சொல்லித்தர வேண்டும்.

மதவேறுபாடின்றி,மக்கள் இந்த சீரிய வழிகாட்டல்களை எடுத்துக்கொண்டால், பலன் அவர்களுக்கு கிடைக்கும்.இல்லையெனில் கயவர்களின் கையே ஒங்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved