Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:55:45 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 90
#KOTWEM90
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 15, 2013
தங்கம் பெறுமோ தண்ணீரின் விலை...?

இந்த பக்கம் 7588 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர், வானத்திலிருந்து நாம் நீர் பொழிவித்து, அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம். நீங்கள் அதனை சேகரிப்பவர்களும் அல்லர். (திருக்குர்ஆன் 15:22)



மனிதன் உயிர் வாழ நீர் அவசியம். “நீரின்றி அமையாது உலகு” என்பது பழந்தமிழ்ப் பாடல். மனிதனின் உடல் அமைப்பே குறிப்பிட்ட சதவிகதம் நீரால் ஆனதுதான். நீர்ச்சத்து இறங்கினால் மனிதன் அதோகதியாகி விடுவான். நீரும், நிலமும் மனிதன் உயிர் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. நிலம் செழிக்கவும் நீர் தேவை. ஒரு நாட்டின் வளத்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை நிலையையும் - அந்நாட்டில் பாயும் செழிப்பான ஆற்றுப்படுகைகளோ அல்லது காய்ந்து உலர்ந்த வறண்ட பூமியோதான் தீர்மானிக்கின்றன.

பெட்ரோல் வளம் நிரம்பிய மத்திய கிழக்கு நாடுகளில் நீருக்கு மக்கள் திண்டாடுகின்றனர். அங்கு பெரும்பெரும் செலவில் நீராதாரங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பாட்டில்களில் அடைத்து தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. நீர் அங்கு ஒரு வியாபாரப் பொருள். நமது நாட்டிலும் கிட்டத்தட்ட அதே போன்ற நிலை நகர்ப்புறங்களில் வந்துவி்டாலும், கிராமங்களில் இன்னும் அந்த கலாச்சாரம் பரவவில்லை. ஆறுகளையும், ஓடைகளையும், கிணறுகளையும், ஏரி - குளங்களையும் நம்பியே இன்றளவும் கிராமங்கள் வாழ்கின்றன. இந்த நிலைக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதை விவரிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

“தண்ணீர்” குறித்து நம் சமூகத்தில் பாரம்பரிய நம்பிக்கைகள் உள்ளன. மலிவாகவும், தட்டுப்பாடின்றியும் கிடைக்கும் எந்தப் பொருளையும் நாம் “தண்ணீர் பட்டபாடு” என்று சுலபமாகச் சொல்லிவிடுவோம். ஆனால் இன்று அந்த தண்ணீரைப் பெறவே படாத பாடு பட வேண்டியதிருக்கிறது. “தவிச்ச வாய்க்கு தண்ணீர் போல” என்பது இன்னொரு வழக்குச் சொல். சாராயம் போன்ற போதைப் பொருட்களை உட்கொள்பவர்களை நாம் கேலியாக “தண்ணி போட்டிருக்கிறான்...” என்று சொல்வது கூட, என்னதான் அதை காசு கொடுத்து உட்கொண்டாலும், அது சுலபமாக - தட்டுப்பாடின்றி கிடைக்கிறது என்பதால்தான்.

அதுபோல, “தண்ணி தெளிச்சு விட்டுட்டேங்க” என்று சிலர் சொல்வார்கள். தண்ணீரைக் கொண்டு அவனை விலக்கி வைத்துவிட்டேன் என்பது அதன் பொருள். இப்படியாக நமது சமூக வாழ்வில் தண்ணீருக்குள்ள இடம் மிக உறுதியானது; மறுக்க முடியாதது.



தமிழகத்தில் சென்னை தவிர பிற எல்லா மாவட்டங்களும் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கியுள்ளன. சென்ற வருடம் பருவ மழை பொய்த்துவிட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 18 அடிக்கும் கீழே போய்விட்டது. அந்த அணையின் உட்பரப்பில் ஆடு - மாடுகள் மேய்கின்றன. விவசாயிகள் தங்களது வாழ்வைத் தொலைத்துவிட்டு நிற்கின்றனர். சிலர் தற்கொலையும் செய்துகொண்டனர்.

தமிழகத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஒன்றும் புதிதல்ல. இங்கு ஒரு மூன்று தலைமுறையாக காவிரி நீர் சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வருடங்கள் தவிர, எல்லா கோடை காலங்களிலும் மக்கள் குடிநீருக்குத் திண்டாடுவது இங்கு பழகிப்போன ஒன்று. அதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். அரசு, ஆறு - குளங்களை சரியாகப் பராமரிக்காதது, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்புவது, திட்டமிட்ட வினியோகமின்மை, சமீபத்தில் ஏற்பட்ட மின் தட்டுப்பாடு... இப்படி பலப்பல.



ஆனால், இயற்கையான காரணம் என்னவெனில் தாமிரபரணி நதியைத் தவிர, பிற எந்த நதியும் தமிழகத்தில் உற்பத்தியாவதில்லை. மற்ற நதிகளின் உற்பத்தி ஸ்தலம் அண்டை மாநிலங்கள். எனவேதான் தமிழகம் இத்தனை நெருக்கடியை சந்திக்கிறது. காவிரியும், முல்லைப் பெரியாறும், கிருஷ்ணா நதியும் வேறு வேறு இடங்களில் உற்பத்தியாகி, அவர்கள் தயவு வைத்தால் மட்டுமே அவை இங்கே வரும் நிலை. எனவே, தமிழகத்தில் விவசாய நிலத்தின் பரப்பளவு வெகுவாகக் குறைந்துவிட்டது. குன்று விவசாயம் லாபகரமான தொழிலல்ல.



தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 18 லட்சம் கிணறுகளில், 2 லட்சம் கிணறுகள் வறண்டு போய்விட்டன. தமிழகத்தின் 384 வட்டங்களில் 142 வட்டங்களில் நீர் பெருமளவு உறிஞ்சப்பட்டுவிட்டது. 33 வட்டங்கள் மிகவும் சிக்கலாக இருக்கிறது. 57 வட்டங்களில், தண்ணீர் தட்டுப்பாடு தொடக்க நிலையிலுள்ளது.

உலகிலேயே ஒரு தனி நபருக்குக் கிடைக்கும் தண்ணீரின் அளவு 6000 கனமீட்டர் எனில், ஓர் இந்தியருக்கோ இது 2000 கன மீட்டர் மட்டும்தான் கிடைக்கிறது.

மழையின் அளவும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. ராஜஸ்தானில் 11 மி.மீட்டர் மழை எனில், கேரளாவில் 6000 மி.மீட்டர்; சிரபுஞ்சியில் 11,500 மி.மீட்டர் எனில், தமிழகத்தில் வெறும் 600 முதல் 1100 மி.மீட்டர் மழைதான் பெய்கிறது. கேரளாவில் உள்ள 44 ஆறுகளின் 80 சதவிகித நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஒவ்வொரு நதியும் தோன்றிய 30 கிலோ மீட்டர் அளவிலேயே கடலைத் தொட்டுவிடுகிறது. இத்தகைய ஓர் இக்கட்டான சூழலில்தான் மத்திய அரசின் “தேசிய நீர் கொள்கை 2012” வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நீர் இனி இலவசமாகத் தரப்படாது. நீருக்கு விலை உண்டு. தண்ணீர் இனி வியாபாரப் பொருள். நீரின் பயன்பாட்டிற்கு ஏற்ப இனி ஒவ்வொருவரும் தண்ணீருக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். இப்போது நாம் கட்டணம் செலுத்தி பெறும் நீர் நகராட்சி, பஞ்சாயத்துக்களால் வழங்கப்படுகிறது. ஆனால் இனி உங்களுக்குச் சொந்தமான நிலத்தில் நீங்கள் கிணறு தோண்டினாலும், அதிலுள்ள நீர் உங்களுக்குச் சொந்தமல்ல. அதற்கு நீங்கள் அரசுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். 1882 இந்திய சொத்துரிமைக் கட்டுப்பாட்டு சட்டத்தைத் திருத்தி, “நிலத்தடி நீரின் மீது நிலத்தின் சொந்தக்காரனுக்கு எவ்வித உரிமையும் இல்லை” என்று சொல்கிறது இந்த சட்டம்.

10 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தற்போது எவ்வாறு “மின்சார ஒழுங்குமுறை ஆணையம்” மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கிறதோ, அதுபோல, தண்ணீரையும் “தண்ணீர் ஒழுங்குமுறை ஆணையம்” ஒன்றை ஏற்படுத்தி, ஊரிலுள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், தனி நபர்களுக்குச் சொந்தமான இடங்கள் எல்லாவற்றையும் இந்த ஆணையம் கைப்பற்றி, தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்யுமாம். இதற்காக மாநிலங்களின் அதிகரப் பட்டியலில் உள்ள 17ஆம் பிரிவான - ஆறுகள், பாசனக் கால்வாய்கள், அணைக்கட்டுகள், மின்சார நிலையங்கள் போன்றவற்றை மத்திய அரசுப் பட்டியலுக்கோ அல்லது பொதுப் பட்டியலுக்கோ மாற்ற வேண்டும் என்கிறது. இனி உங்கள் வயலுக்கோ, தென்னந்தோப்புக்கோ நீர் பாய்ச்ச வேண்டும் எனில், அரசுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த நீர் உங்கள் நிலத்திலிருந்தே பெறப்பட்டாலும், உங்களுக்குச் சொந்தமானதல்ல.

தண்ணீர் இனி பொதுச் சொத்தல்ல. அது அரசுக்கோ அல்லது அரசால் ஏற்படுத்தப்படும் அமைப்புக்கோ சொந்தமானது. இந்த நடைமுறை 1993ஆம் ஆண்டே ஆரம்பமாகிவிட்டது. அந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் (தற்போதைய சட்டீஸ்கர்) உள்ள ஷியோநாத் ஆற்றின் குறுக்கே அணை மற்றும் நீர்த்தேக்கம் கட்டி, அதை நிர்வகிக்கும் பொறுப்பு, “ரேடியஸ் வாட்டர் லிமிட்டெட்” என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. உள்ளூர் மக்களின் ஜீவாதார உரிமையாக விளங்கும் இந்த ஆற்றின் 23 கி.மீ. பரப்பளவை இந்நிறுவனம் ஆக்கிரமித்தது. 2000ஆம் ஆண்டில் இதை எதிர்த்து மக்கள் போராடினார்கள். பிறகு அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.



உலக அளவில் இது 1992ஆம் ஆண்டு ரியோ-டி-ஜெனிரோ நகரில் நடந்த “உலக பூமி உச்சி மாநாட்டில்”தான் தண்ணிர் என்பது பொருளாதார மதிப்பு மிக்க பொருள் - கச்சா எண்ணெய் மாதிரி - என்ற கருத்து உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நீர்க்கழிவு மேலாண்மை, குடிநீர் வினியோகம், கழிவு நீர் அகற்றுதல், நீர் குழாய்கள் அமைத்தல், குடிநீர்த் தொட்டி கட்டுதல், அணைகள் கட்டுமானம், தண்ணீர் வியாபாரம் போன்றவற்றை விவெண்டி, பெக்டெல், சூயஸ் போன்ற பகாசுர தனியார் நிறுவனங்கள் கையில் எடுத்தன.

இலத்தீன் அமெரிக்க நாடான பொலியாவில் உள்ள ‘கொச்சகோம்பா’ நகரின் நீர் வினியோகத்தை அமெரிக்க நிறுவனமான ‘பெக்டெலு’க்கு அந்நாட்டு (பொலிவியா) அரசு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியது. அந்நிறுவனம் அங்கு பெய்யும் மழைக்கும் கூட சொந்தம் கொண்டாடியது. அதுவரை அங்கு மக்கள் செலவில் கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், அணைகள் எல்லாவற்றையும் அது தன் கைவசப்படுத்தியது. மக்கள் குடிநீருக்கு வரிசையில் நின்றார்கள். குடிநீர் கட்டணம் கிட்டத்தட்ட 500 மடங்கு உயர்ந்தது. மக்கள் தெருவில் இறங்கிப் போராடினார்கள். போராட்டம் வலுக்கவே, பொலிவிய அரசு ‘பெக்டெல்’ உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அரசின் இந்த முடிவை எதிர்த்து உலக நீதிமன்றத்தில் 200 கோடி நஷ்ட ஈடு கேட்டு ‘பெக்டெல்’ வழக்கு தொடர்ந்திருக்கிறது.

இந்த மக்கள் போராட்டத்தை சித்தரிக்கும் இஸியார் பொலன் என்பவரின் ‘Even the rain” (மழையும் கூட) என்ற திரைப்படம் உலகப் புகழ் பெற்றது. இதைப் போன்றே, தென்னாப்பிரிக்காவில் பல நகரங்களில் குடிநீர் வினியோகம் தனியார் மயமாக்கப்பட்டது. சூயஸ், விவெண்டி, பைவாட்டர் போனற் நிறுவனங்களிடம் குடிநீர் வினியோகப் பொறுப்பு கையளிக்கப்பட்டது. அவர்கள் குடிநீர்க் குழாய்களில் மீட்டர் பொருத்தினார்கள். கட்டணமாக 7500 ரூபாய் வசூலித்தார்கள். இடையிடையே கட்டணங்களை் வரம்பின்றி உயர்த்தப்பட்டன. கட்டணம் செலுத்த வழியில்லாத 1 கோடிமக்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. ஏழை - எளிய மக்கள், ஆறுகள் – குளங்களில் தேங்கிக் கிடந்த நீரைக் குடித்ததால் - வாந்தி, பேதி, காலரா நோய்களால் பாதிக்கப்பட்டனர். பலர் இறந்தனர். எனவே மக்கள் வெகுண்டெழுந்து போராடினார்கள். பிறகு அரசு இறங்கி வந்து, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 25 லிட்டர் நீர் இலவசம் என்று அறிவித்தது. இன்றளவும் அங்கு இதே நிலைதான்.

நமது நாட்டிலும் - கேரளாவில் உள்ள பிளாச்சிமடா என்ற ஊரில் ‘கோகா கோலா’ நிறுவனத்திற்கெதிராக மக்கள் போராடி, அந்நிறுவனத்தை விரட்டியடித்தனர். அது இப்போது நமது நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் என்ற இடத்தில் தனது ஆலையை அமைத்து வருகிறது. நீரை வைத்து இன்று கோடிகளில் புரள்கிறார்கள். “டேங்கர் லாரி” வைத்திருப்பவனே பெரும் முதலாளி ஆகிவிடுகிறான். கிணற்று நீரை “ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்” (எதிர் சவ்வூடு பரவில்) முறையில் சுத்திகரித்து, நீரை பாட்டில்களிலும், கேன்களிலும் அடைத்து விற்பனை செய்கிறார்கள். தண்ணீர் தட்டுப்பாடு ஒருபுறமிருக்க, கிடைக்கும் தண்ணீரும் தூய்மையற்றதாக - குடிப்பதற்கு லாயக்கற்றதாக இருக்கிறது. எனவேதான் தண்ணீர் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

“உணவையும், நீரையும் காசுக்கு விற்பதே பெரும்பாவம்” என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. யாத்ரீகர்களுக்கு இலவச உணவும், தங்குமிடமும் அளிப்பதற்காகவே அக்கால மன்னர்கள் வழியெங்கும் “அன்ன சத்திரங்கள்” அமைத்து வைத்தார்கள்.

சேவைத் தொழில்களான கல்வி, மருத்துவம் - இவற்றோடு, தண்ணீரும் இன்று விற்பனைப் பொருளாக - மக்களைக் கசக்கிப் பிழியும் ஒன்றாக ஆகி வருகிறது.

உலகின் மொத்த தண்ணீர் அளவில் 97 சதவீதம் கடல் நீராகும். மீது 2.5 சதவீதம் பனிக்கட்டியாக உள்ளது. 0.5 சதவீதத்தை மட்டுமே நன்னீராக நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்று இந்தியாவில் ஒருவனது தண்ணீர்த் தேவை 2500 கியூபிக் மீட்டர். இது வெகுவிரைவில் 10,000 கியூபிக் மீட்டராக மாறும் தேவையுள்ளது. எனவே, இனி வருங்காலங்களில் தண்ணீரின் தேவை நம்மை பயமுறுத்தக் கூடும்.

இப்போதே கூட பெரும்பாலான நகராட்சிகளில் தண்ணீர் கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். தண்ணீரும் - வாரம் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை என்ற அளவில்தான் வினியோகம் செய்யப்படுகிறது. மிகப்பெரும் ஹோட்டல்களும், தங்கும் விடுதிகளும் தண்ணீருக்காகவே பெருமளவு பணத்தை செலவிடுகின்றன. இவையனைத்தும் வாடிக்கையாளர்கள் தலையில்தான் சுமத்தப்படுகின்றன.

நாம் அருந்தும் ஒரு லிட்டர் தண்ணீரில் நைட்ரேட் 20 மில்லி கிராம், துத்த நாகம் - ஃப்ளோரைடு தலா 1 மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம் என்ற அளவை மிகாமல் இருக்க வேண்டும். இதுவே முறையான நல்ல நீராகும். ஆனால், இவை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் உள்ள நீர்தான் தமிழகத்தின் பல மாவட்டங்களில் குடிநீராகப் பயன்படுத்தப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு. சிறுநீரக நோய்கள், இதய நோய் போன்றவை இவற்றால் உருவாகின்றன.

ஆறுகளிலும், கடலிலும் தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலப்பதால், சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு ஏற்பட்டு - அது மனிதனைத் தொற்றி, பல நோய்களுக்கு அவனை ஆளாக்குகிறது. திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலப்பதால், அங்கு விவசாயம் பாழ்பட்டது. குடிநீருக்கும் கேடு வந்தது. வியாதிகளும் பெருகின.

இந்திய அளவில் பாட்டில் தண்ணீர் வியாபாரம் தமிழகத்தில்தான் அதிக அளவில் நடக்கிறது. சாராய அதிபர்கள், கல்வி வள்ளல்கள் ஆகியோருக்கு அடுத்தபடியாக, நீரைக் கொள்ளையடித்து விற்பவர்கள்தான் பெரும் பணக்காரர்களாய் இருக்கிறார்கள்.

இன்று நீர், நிலம் (மணல் கொள்ளை), காற்று (தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் விஷவாயு) எல்லாம் நாசமாகிவிட்டன. இறைவன் படைத்த உலகத்தை மனிதன் தனது சுயநல வெறியால் கூறு போடுகிறான்; நாசமாக்குகிறான். இயற்கையோடு இணைந்த வாழ்வே நல வாழ்வாகும். இயற்கையின் முன்னாள் மனிதன் வெறும் குழந்தைதான்!

அவனது பிள்ளை விளையாட்டை, இயற்கைத் தாயும் வலி மிகுந்த ஒரு குறுநகைப்போடு, வேறு வழியின்றி பொறுத்துக்கொண்டிருக்கிறாள். வேறு என்ன சொல்ல...?

“உங்களின் தண்ணீர் பூமியினுள் போய்விட்டால், அப்போது ஓடம் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதைத் தெரிவியுங்கள் என (தூதரே!) கூறும்.” (திருக்குர்ஆன் 67:30)

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நீர் கிரீடம்
posted by: சாளை பஷீர் (மண்ணடி , சென்னை) on 15 June 2013
IP: 180.*.*.* India | Comment Reference Number: 28049

காயல்பட்ணம் இணைய தளத்தில் இது வரை வாசகர் மடல் மூலம் தனது முத்தாய்ப்பான கருத்துக்களை பொழிந்து வந்த ஷுஅய்ப் காக்கா அவர்கள் முதல் முறையாக கட்டுரை எழுதியுள்ளார்கள். எனது எழுத்தாள சகாவின் வருகை நல்வரவாகுக!

வாழ்வாதார பிரச்சினையை முழுத்தரவுகளுடனும் வைத்து வெளுத்து கட்டியுள்ளார். அவர் எழுதிய கட்டுரை மணி கிரீடத்தில் ஒரு வைரத்தை பொறித்த மாதிரி உள்ளது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

அடுத்து ஓர் உலகப் போர் மூள்வதாக இருந்தால் அது தண்ணீருக்கான போராகத்தான் இருக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

மாமழை மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் , நீரின்றி அமையாது உலகு என்பன போன்ற நீரியல் கருத்துக்கள் தமிழர்களின் வாழ்வில் தொன்று தொட்டே நீங்கா இடத்தை பிடித்திருக்கின்றன.

ஆனால் அணு குண்டையும், செயற்கை கோளையும் வல்லரசுக்கான அளவு கோளாக கருதும் நம் தாய் திரு நாட்டில் ஒரு குடிமகனுக்கு தூய்மையான போதுமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை அரசினரால் வழங்க முடியவில்லை என்பது பேரவலம்தானே !! அது ஒரு தோற்ற அரசுதானே !!!

சென்னையில் வினியோகிக்கப்படும் மாநகராட்சி தண்ணீரானது எப்போது வரும் என்ற உத்திரவாதமில்லை. வந்த நீரிலும் கழிவு நீர் கலக்கவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

தனியார் விற்கும் குடம் நீர் , குடுவை நீரையாவது வாங்கலாம் என்றால் அதன் விலைகளும் கட்டுப்படியாகவில்லை. அப்படியே அவர்கள் கேட்கும் காசை கொடுத்தாலும் உரிய நேரத்தில் நீர் வந்து சேராது. பல முறை தொலைபேசியில் மன்றாடிய பிறகுதான் குடமும் குடுவையும் வந்து சேரும்.

அன்றாட தொழில் அலைச்சலுடன் நீருக்கான உளைச்சலும் கூடுதல் சுமையாக தலையில் வந்து உட்கார்ந்து கொள்கின்றது. இது எனது சொந்த பட்டறிவு.

சென்னையில் நீர் நிலைகள் இருந்தும் வருடாந்திர பருவ மழையானது தேவைக்கு மேல் பொழிந்தும் பயனில்லை. இன்று சென்னை நகரம் தனியார் தண்ணீர் லொறி மாஃபியாக்களின் பிடியில் சிக்கி தவிக்கின்றது.

அது போல் நமதூர் சுற்று வட்டாரத்தில் இருந்த நீர் நிலைகளை இன்று காணவில்லை. ( எ.கா ) கடல் போல் அலையடிக்கும் நல்லூர் குளம், குளிக்க குளிக்க இன்பமூட்டும் சுனை.

பொதுவாக நமது மாவட்டம் மழை மறைவு மாவட்டமாகும். இந்த நிலையில் நமது மாவட்டத்தில் உள்ள தனியார் ஆலைகள் சட்டத்திற்கு முரணாக நிலத்தடி நீரை பென்னம் பெரும் தொட்டி உருளை லொறிகளை வைத்து உறிஞ்சுகின்றன. இது இப்படியே தொடர்ந்தால் நமது மாவட்டமும் வறண்ட பாலையாகி விடும்.

வற்றாத உயிர் நதியான தாமிரபரணியிலிருந்து நமக்கு தேவையான தண்ணீரை குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி வருகின்றது. ஆனால் தண்ணீர் மாஃபியாக்களை ஊக்குவிக்க கொழுத்து கொள்ளையடிக்க நகராட்சியில் உள்ள சில அழுகிய சக்திகள் அரசு வழங்கும் நீரை தடுத்து வருவதாக செய்திகள் வருகின்றன.

ரத்தம் சிந்தும் யுத்தம் நடத்திதான் நமது அடிப்படை தேவையான தண்ணீரை பெற முடியும் அல்லது மீட்க முடியும் என்கின்ற நிலை வந்து விடுமோ என்ற அச்சம் நம் மனதில் அலையடிக்கின்றது.

இந்த நேரத்தில் தொலை நோக்குள்ள நமது முன்னோர்களை நினைக்காமல் நன்றி செலுத்தாமல் இருக்க முடியவில்லை. அவர்கள் உருவாக்கித் தந்த மறு சுழற்சி முறையிலான கழிவு நீர் தொட்டிதான் நமதூரின் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாத்து வருகின்றது.

நீரை தந்த அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துவோம். தண்ணீரின் அருமை அறிந்து அளவாக செலவழிப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தங்கள் வரவு நல்வரவாகுக...வாழ்த்துக்கள்.
posted by: M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) on 15 June 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28051

சமரசம் உள்ளிட்ட பல இதழ்களிலும் இணையதளம் மற்றும் முகநூல்களில் தம் முத்துக்களைப் பதித்த சொல் வித்தகர் நிதர்சண எழுத்தாளர் சுஐப் அவர்கள் எழுத்து மேடை வரவு நிச்சயம் இத் தளத்தின் வாசகர்களுக்கு இனிப்பான செய்தி! குறும்பு,குசும்பு என சொல்ல வந்ததை சுவையோடும் சுறுக்கமாகவும் சொல்லும் அசாத்திய திறமை இவருக்கு கை வந்த கலை!

குர்ஆனின் ஆணித்தரமான வசனங்களை தொடக்கத்திலும் முடிவிலும் பதித்து நீர் ஆதாரங்களின் நிலை குறித்த இந்த பதிவு மக்களூக்கோர் நல்ல ஓர் மெசேஞ்! வாழ்த்துக்கள்...! தொடர்ந்து இன்னும் பல ஆக்கங்களை அள்ளித்தந்து எங்கள் எழுத்துபசிக்கு தீனி போடுவீர்கள் என நம்புகின்றேன். வல்ல நாயன் உங்கள் உடல் நலத்தை சீராக்கி நீண்ட நாள் வாழ வழி செய்வானாக! ஆமீன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஓங்கியடிக்கும் ஓர் எச்சரிக்கை மணி!
posted by: kavimagan (doha..qatar.) on 15 June 2013
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 28052

ச்சே ச்சே என்ன ஒரு புழுக்கம்..
விசிறியைச் சுழற்ற மின்சாரம் இல்லை..
ஒரே ஒரு வழிதான்...
குடிநீர்க் குழாயைத் திறந்து அதன்
அடியில் உட்கார்ந்தேன்....
"என்ன ஒரு சுகமான காற்று"......

நேர்மறை எழுத்தாளர் சுஐப் காக்கா அவர்களை வருக வருக என "எழுத்து மேடை" வாசகர்கள் சார்பாக வரவேற்கிறேன்.பத்து ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த "தண்ணீர் தேசம்" நினைவுக்கு வருகிறது....

"மழை நீர் சேகரிப்புத் திட்டம்" என்ற மகத்தான திட்டத்தை அம்மா அவர்கள் அறிமுகம் செய்த போது ஏளனம் செய்தவர்கள் எண்ண அலையில் வந்து போகின்றார்கள். என்னைக் கவராத படைப்பாளியின் "தண்ணீர் தண்ணீர்" நினைவுகளை நனைக்கிறது. எக்கச்சக்க இலக்கணப் பிழையுடன் நான் எழுதிய முதல் கவிதை "மழை" முப்பதாண்டுகளுக்குப் பின் மூளையில் சாரல் அடிக்கிறது..இத்தனைக்கும் காரணம் காக்கா அவர்களின் இந்தப் பதிவு...ஓங்கியடிக்கும் ஓர் எச்சரிக்கை மணி...ஒரு சமூக சிந்தனையாளனின் சக்தி வாய்ந்த படைப்பு...ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இந்தக் கட்டுரை சலனத்தை ஏற்படுத்தும்...

பிரார்த்திப்போம் படைத்தவனிடம்...தண்ணீரைத் தந்து நம் கண்ணீரை மாற்ற..

தொடருங்கள் காக்கா! பின்தொடர்ந்து நாங்கள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. தண்ணீர் தண்ணீர் Re:...
posted by: vilack noor mohamed (dubai) on 15 June 2013
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28053

ஆஹா!ஒரு பூங்காற்று புயலாக மாறிவிட்டதோ? நாட்டுக்கும் (நாட்டை ஆளுபவர்களுக்கும் )வீட்டுக்கும் (நாட்டுமக்களுக்கும்) சரியான எச்சரிக்கை கலந்த மணியான சிந்தனை. அருமைநண்பர், அமைதியானவர் சுஐபா இந்தபோடு போட்டு உள்ளார்? சபாஷ்! தொரட்டும் உமது கட்டுரை பயணம்.

விளக்கு நூர் முஹம்மது.
துபாய்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...நாம் என்ன செய்கிறோம்.....
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 15 June 2013
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28056

நல்ல கருத்து, ஆழிய சிந்தனையும் அறிவார்ந்த புள்ளிவிவரங்களுடன் வழங்கப்பட்டுள்ள உயரிய இக்காலத்தில் மிகவும் தேவைக்குரிய அருமையான கட்டுரை. இதை வழங்கிய ஷுஐபு காக்க அவர்களுக்கு பாராட்டுக்கள்.

சரி, கட்டுரையை படித்தாகிவிட்டது, அடுத்து நம் கடமை என்ன, அடுத்த முறை குளிக்கும்போது, ஏன் ஒழு செய்யும்போதாவது நாம் தண்ணீர் உபயோகத்தை குறைக்க எண்ணம் ஏற்பட்டுள்ளதா!? நாம் உபயோகித்த தண்ணீரை நம்மால் முடிந்த அளவு மறுசுழற்சி செய்து உபயோகிக்க முயற்சி செய்யப்போகிறோமா, நம் வீட்டில் அதற்க்குண்டான முயற்ச்சிகளை செய்ய எத்தணிப்போமா? ஹூம், கேள்விப்பட்டியல் நீண்டு பயனில்லை.

ஷுஐபு காக்கா, உங்களால் முடிந்தால் இதன் தொடர்ச்சியாக அடுத்து ஒரு கட்டுரை, நம் வீட்டில் நம்மளவில் நீரை சிக்கனப்படுத்த, சேகரிக்க, நமதூர் சூழ்நிலையில் என்ன வழிகள் உள்ளன என்பதையும் நம் மக்களுக்கு தெளிவு படுத்துங்களேன்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நீர் நிரம்பிய பின் மோட்டரை (OFF) செய்வது நன்று...
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 15 June 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28061

ஷுஐபு காக்கா அவர்களின் கட்டுரையின் மூலம் நீர் சம்பந்தமான பல திடுக்கிடும் உண்மை தகவல்கள் அறிய முடிந்தன..

அடுத்து ஓர் உலகப் போர் மூள்வதாக இருந்தால் அது தண்ணீருக்கான போராகத்தான் இருக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்...! என்ற செய்தியை கருத்தின் மூலம் பதிவு செய்த சாளை பஷீர் அவர்களின் தகவல் மிக வேதனைக்குரிய சோதனையான காலத்தை முன்னோக்கி நாம் சென்று கொண்டு இருக்கிறோம்...!

நமது நகரின் அருகிலுள்ள நல்ல நீரோடையில் அமில கழிவை கொட்டி அந்த நல்ல நீரோடையையும் - மண் வளத்தையும் - விவசாயத்தையும் நாசப்படுத்தி வரும் D C W தொழிற்சாலைகளை போன்று பல தொழிற்சாலைகள் இந்தியாவில் இருக்கும் வரை நமது தலைமுறைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகத்தான் அமையும் இதில் மாற்று கருத்தல்ல... அல்லாஹ் பாதுகாக்கட்டும்... ஆமின்..

நாமும் நமது வீட்டில் உள்ளவர்களும் நம்மால் தினமும் கடைபிடிக்க வேண்டியது என்னவனில் தாம் தமது வீட்டில் நிலத்தடி நீரை மோட்டார் மூலம் நீர் சேமிப்பு தொட்டிக்கு மேலே நிரப்பும் போது அதில் அதிக அக்கறையுடன் கவனம் செலுத்தி நீர் நிரம்பிய பின் மோட்டரை (OFF) அணைத்து விடுவது மிக நன்று.. இதை நாம் அனைவர்களும் கடைபிடித்தாலே ஓரளவு நீர் சோதனை காலத்தில் சில வருடங்களை சமாளிக்கலாம்...

ஷுஐபு காக்கா அவர்களின் இது போன்ற பல நல்ல கட்டுரைகள் இந்த இணையத்தளத்தில் அதிகம் வரவேண்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by: Rilwan (Michigan) on 15 June 2013
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 28062

அருமையான கட்டுரை. காயல்பட்டினத்தில் மழை தண்ணீர் தேங்கும் குளங்கள் எங்கே? கீரிக்குழத்தின் தண்ணீரை சேமித்து வைக்காமல் கடலுக்கு வெட்டி விடுவது தவறு..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. தண்ணீர் பிரச்சனை !!
posted by: Salai. Mohamed Mohideen (Bangalore) on 16 June 2013
IP: 116.*.*.* India | Comment Reference Number: 28083

இவ்விணைய தளத்தில் வெளிவந்துள்ள ஷூஐப் காக்கா அவர்களின் முத்தாய்ப்பான முதல் கட்டுரை மிகவும் அருமை ... சிந்திக்க தூண்டுபவை !

முன்னொரு காலத்தில் "பணத்தைத் தண்ணீயா செலவழிக்காதே!” என்பார்கள் ஆனால் இன்று அந்த தண்ணீருக்காக பணத்தைத் தண்ணீயா செலவழிக்கும் கொடுமை. செய்தித்தாள் என்று எந்த ஊடகங்களை புரட்டினாலும் 'தலைவிரித்தாடும் குடி தண்ணீர் பிரச்சனை' பற்றிய செய்தி தான்.

பல நாடுகளில் தங்களின் ஆதிக்கத்தையும், மூலதனச் சுரண்டலையும் மூர்க்கத்தனமாக நடத்தி வரும் பன்னாட்டு நிறுவனங்களின் தண்ணீரில் (ex: பிஸ்லரி, பெய்லி, அக்வாஃபினா) ஆர்கட்னா குளோரின், ஆர்கட்னா பாஸ்பரஸ் என்ற பூச்சிக் கொல்லி நச்சுகள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. எவரும் இதனை பொருட்படுத்துவதே இல்லை. நீண்ட நேர பயணத்தின் போது வீட்டிலிருந்து தண்ணிரை எடுத்து செல்வதை விட ' நாங்கெல்லாம் மினரல் வாட்டர் தான் குடிப்போம்' என்ற பவுசை காட்டியதன் விளைவு தான் இது!

நீர் வழங்கல் மட்டுமின்றி வேறு எந்தத் துறையானாலும் அரசால் தரமான உருப்படியான சேவையை அளிக்க முடியாது. 'தனியார்' என்றால் அதில் ஒரு 'கார்ப்பரேட் தரம்' இருக்கும் என்று தனியார்மயதாசர்களின் பிரச்சாரம் வேறு. மைசூர் / மங்களூர் மாநகராட்சியின் குடிநீர் வழங்கல் டாடாவின் ஜஸ்கோவிடம் & வியோலியா என்கிற ப்ரெஞ்சு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காசு உள்ளவனுக்கே தண்ணீர் என்ற அவல நிலமை !

டாஸ்மார்க் - கில் எவ்வித தங்கு தடையின்றி 'அந்த தண்ணீ' கிடைத்திட கவனம் செலுத்தும் நம் அரசு, பொது மக்களின் அன்றாட குடிநீர் விசயத்திலும் அதீத கவனம் செலுத்த வேண்டும்.

தண்ணீரை வியாபார மாக்கி சுரண்டி கொழுக்கும் முதலைகளை அப்புறப்படுத்த வேண்டும் . தண்ணீரைத் தனியார் முதலாளிகளுக்குத் & பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கக் கூடாது. நீர் பொதுவானதாகப் பாதுகாக்கப்பட வேண்டும். நல்ல நீருக்கான மாற்று ஆதாரங்கள் (மழை நீரைத் தேக்கி வைத்தல், கடல்நீரை சுத்திகரித்தல், நீரை மறு சுழற்சி செய்தல்) உருவாக்கப்பட / நடைமுறை படுத்தபட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved