Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:50:18 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
காயல் வரலாறு
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 4
#KOTWART074
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 7, 2014
காஹிரீ தர்ஸ் நடத்திட்டுண்டு...!
இந்த பக்கம் 7373 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்திற்கும் கேரள மாநிலத்தின் கண்ணூர், தலஸ்ஸேரி, கோழிக்கோடு தெக்கேபுரத்தில் உள்ள குட்டிச்சிறா போன்ற பகுதிகளுக்கும் நிறைய வாழ்வியல் ஒற்றுமைகள் உண்டு என ஒரு உரையாடலின் போது கூறினார் எழுத்தாள நண்பர் அப்துல் ஹமீத். கோழிக்கோடு செல்லும் திட்டம் உடனே மனதில் முளைத்து விட்டது.

கோழிக்கோட்டில் கடை நடத்தி வரும் மலபார் காயல் நல மன்றத்தின் தலைவர் மசூத் காக்கா அவர்களிடம் இது பற்றி விசாரிக்கையில் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள், நான் குடியிருப்பதே குட்டிச்சிறாவில்தான் என்றார். இந்த வருட ரமழானுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு அதிகாலையில் நானும், நண்பர் முஹம்மத் தம்பியும் நேரே கோழிக்கோடு போய் இறங்கினோம். தொடர் வண்டி நிலையத்தின் கோபுரங்களின் பின்னணியில் கருத்து இருண்ட மழை மேகங்கள் சூழ்ந்து உயர்ந்து நின்ற காட்சி இதமாக இருந்தது.

கோழிக்கோடு தொடர்வண்டி நிலையத்தின் பின்புறம்தான் குட்டிச்சிறா பகுதி அமைந்துள்ளது. மஸூத் காக்காவின் வீட்டிற்கு போய் குளித்து உடைமாற்றி உணவுண்டு குட்டிச்சிறாவை உலா வந்தோம்.





முதலில் வரலாற்று பெருமை வாய்ந்த மிஷ்கால் மஸ்ஜித் சென்றோம். இந்த பள்ளியானது நாஹூதா மிஷ்கால் என்ற யமன் நாட்டு வணிகரால் 14 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. கேரள கோயில் பாணி கட்டிடக்கலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மஸ்ஜிதின் தரைத்தளம் தவிர நான்கு தளங்களும் முழுக்க முழுக்க மரத்தால் கட்டப்பட்டதாகும். கி.பி. 1510 இல் போர்த்துக்கீஸீய ஆக்கிரமிப்பாளர்களால் இதன் ஒரு பகுதி கொளுத்தப்பட்டது. பின்னர் மறு சீரமைப்பு செய்யப்பட்டது.

மிஷ்கால் மஸ்ஜித் வெளிப்புறம் ...









மிஷ்கால் மஸ்ஜித் உள்புறம் ...













மிஷ்கால் மஸ்ஜித் உட்புற வேலைபாடுகள் ...



















கப்பல் போன்ற அழகிய தோற்றமுடைய இந்த பள்ளிக்குள் நுழைந்தவுடன் கண்ணில் பட்டது அதன் வரலாறு பொறிக்கப்பட்ட கல்வெட்டும் கோழிக்கோடு நகர காழிகளின் வரிசைத்தொடர் பட்டியலும்தான். இந்த பட்டியலில் 11 வது இடத்தில் ஸதக்கத்துல்லாஹ் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இவரின் காலம் கி.பி.1720-1775.





இது குறித்து கோழிக்கோடு நகர காழியும் குட்டிச்சிறா பள்ளியின் தலைமை இமாமாகவும் பணியாற்றுகின்ற இம்பீச் கோயா அவர்களிடம் கேட்ட போது “எங்கள் காழி தலைமுறையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த சமயம் மகான் ஸதக்கத்துல்லாஹ் காஹிரீ இங்குள்ள முச்சந்தி மஸ்ஜிதில் மார்க்க பாடம் (தர்ஸ்) நடத்திக்கொண்டிருந்தார்கள். அந்த குழந்தைக்கு பெயரிடுவதற்காக ஸதக்கத்துல்லாஹ் காஹிரீயிடம் கொண்டு சென்றபோது அவர்கள் தனது பெயரையே அந்த குழந்தைக்கு சூட்டினார்கள். அதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் எங்களது தலைமுறையில் ஸதக்கத்துல்லாஹ் என்ற பெயர் இருந்ததில்லை “ எனக்கூறினார்.

முச்சந்தி மஸ்ஜித்













அங்குள்ள முச்சந்தி மஸ்ஜிதிலும் சென்று ஸதக்கத்துலாஹ் அப்பா பற்றி விசாரித்ததில் மேலதிக தகவல் ஒன்று கிடைத்தது. நாஹூர் ஷாஹூல் ஹமீத் நாயகம் அவர்களும் இந்த முச்சந்தி பள்ளியில் இறை தியானத்தில் வீற்றிருந்ததாகவும் கூறி அந்த இடத்தையும் பள்ளி நிர்வாகிகள் காட்டினர்.

வரலாறும் பண்பாட்டுச்செழுமையும் நிறைந்த இந்த மூன்று நகரங்களும் இணையும் வரலாற்று கண்ணியாக விளங்கும் இந்த பள்ளியின் பெயரும் முச்சந்தி என்றிருப்பது தற்செயலான - ஆனால் வியப்புக்குரிய - செய்தி.

குட்டிச்சிறா, கண்ணூர், தலஸ்ஸேரி உள்ளிட்ட இடங்களில் நமதூரைபோலவே திருமணம் முடிந்து மாப்பிள்ளைகள் பெண் வீட்டிற்கு செல்லும் வழமை இன்றளவிலும் நடைமுறையில் இருக்கின்றது. இந்த பகுதிகளில் வீட்டிற்கு வரும் மாப்பிள்ளைகளுக்காக தனி வீடு என கட்டமாட்டார்கள். ஏற்கனவே இருக்கும் பரந்த வீட்டில் தனி அறையை ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.

மிகச்சிறிய விதிவிலக்கை தவிர்த்து கேரளத்தின் பெரும்பகுதியானவர்கள் ஷாஃபி மத்ஹபை பின்பற்றுகின்றனர். அத்துடன் நம்மைப்போலவே அரபு வணிகர்களினாலும் மார்க்க பரப்புரையாளர்களினாலும்தான் இங்கு இஸ்லாம் பரவியுள்ளது. நமதூரின் சில மண்ணறை கல்வெட்டுக்களில் (மீஸான் கற்கள்) கொல்லம் ஆண்டு என குறிப்பிடப்படுகின்றது. இந்த ஆண்டானது கி.பி.824 முதல் கேரளத்தில் பின்பற்றப்பட்டு வரும் வருட கணக்கீட்டு முறையாகும்.

ஷெய்கு ஸைனுத்தீன் மக்தூம் என்பவர் எழுதிய துஹ்ஃபத்துல் முஜாஹிதீன் -- கேரளமும் போர்ச்சுக்கீசிய காலனிய ஆதிக்கமும் (16 ஆம் நூற்றாண்டின் வரலாற்று ஆவணம், அடையாளம் வெளியீடு) என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கும்போது கீழ்க்கண்ட தகவல் கண்ணில் பட்டது. மீன்பிடி உரிமை தொடர்பாக காயல்பட்டின முஸ்லிம்களுக்கும் பரதவர்களுக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவில் போர்த்துக்கீசிய படையெடுப்பாளர்கள் பரதவர் பக்கம் நின்றனர்.

இந்த போரில் காயல்பட்டினம் முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக கேரளத்தின் மலபார் பகுதியிலிருந்து அலி இப்றாஹீம் மரைக்காயர், ஃபகீஹ் அஹ்மத் மரைக்காயர், அவரது சகோதரர் குஞ்ஞு மரைக்காயர் உள்ளிட்டோர் 42 மரக்கலங்களில் நமதூர் வந்து போராடி ஷஹீதாகினர். அனைத்து மரக்கலங்களும் போர்த்துக்கீசியரால் சிறைப்பிடிக்கப்பட்டன. இது நடந்தது ஹிஜ்ரி 944 ஆம் ஆண்டு ஷஃபான் மாதம், கி.பி.1538.

மேற்கண்ட நூலின் ஆசிரியரான ஷெய்கு ஸைனுத்தீன் மக்தூம் அவர்களின் மத்ரஸா பஹ்ருல் உலூமில் {கேரள மாநிலம், பொன்னானி} ஸதக்கத்துல்லாஹ் அப்பாவின் தந்தை சுலைமான் லெப்பை ஆலிம் அவர்கள் ஓதி பட்டமும் (ஸனது) பெற்றுள்ளார்கள். {தகவல் நூல்: நினைவு மலர்கள் – எம்.இத்ரீஸ் மரைக்காயர்}

பிரபல ஷாஃபீ மத்ஹப் சட்ட நூலான பத்ஹூல் முயீனை உருவாக்கியதும் ஷெய்கு ஸைனுத்தீன் மக்தூம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷெய்கு ஸைனுத்தீன் மக்தூம் அவர்களின் முன்னோர்களான ஷேஹ் அலீ பின் அலீ பின் அஹ்மத் அல் மஃபரி, அவரது சகோதரர் ஷேஹ் இப்றாஹீம் ஆகியோர் யமன் நாட்டைச் சார்ந்த மார்க்க பரப்புரையாளர்கள் ஆவர். இவர்கள் தமது பணிக்காக தென் தமிழகத்திற்கு வந்த சமயத்தில் கடைசியாக தங்கிய இடம் நமதூராகும். நமதூரின் அறப்போர், கல்வி, மார்க்கம், மரணம் என வரலாற்றின் பண்பாட்டின் பயணத்தில் கேரளம் இணைந்திருந்த புள்ளிகள் ஏராளம் என இதிலிருந்து தெளிவாகின்றது. அரபகம் > காயல்பட்டினம் > கேரளம் என வரலாறானது தொடர்ந்து சுழலும் வளையமாக இருந்திருக்கின்றது.

ஷவ்வால் மாதத்தின் ஆறு பிறைகள் கழிந்த பிறகு கேரளத்திலிருந்து புறப்படும் நினைவிட காணுதல் பயணிகள் கூட்டம் நமதூரின் மஹ்லறா, பெரிய பள்ளியைக் காணாமல் செல்வதில்லை. அவர்கள் நமதூர் நினைவிடங்களுடன் தமிழகத்தில் உள்ள ஏனைய நினைவிடங்கள் அமைந்திருக்கும் ஊர்களான ஏர்வாடி, முத்துப்பேட்டை, நாஹூர் வரை செல்கின்றனர். அவர்கள் வேறு மாநில நினைவிடங்களுக்கு செல்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற பயணங்கள் கூடுமா கூடாதா என்ற விவாதங்களுக்குள் நுழைய விரும்பவில்லை. ஒரு வரலாற்று மாணவன் என்ற அடிப்படையில் ஒருக்கால் இது அன்றைய பண்பாட்டு தொடர்ச்சியின் நீட்சியோ என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளது.

2009 ஆண்டு பிப்ரவரி மாதம் கோழிக்கோட்டில் பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா [PFI] அமைப்பின் சார்பில் ஒரு தேசிய அரசியல் மாநாடு நடந்தது. அதில் பண்பாட்டு கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அந்த கண்காட்சியில் கேரளத்தில் இஸ்லாத்தின் வருகை பற்றிய ஒலி ஒளிக் காட்சி ஒன்றை நடத்தினார்கள். மகத்தான அந்த வரலாற்று வளையத்தில் காயல்பட்டினத்தின் கண்ணியை தெள்ளிய மலையாளத்தில் விவரித்துக் கொண்டே செல்கையில் மனமும் கண்களும் நிறைந்தன.



நமதூரின் வரலாற்றை அரபுலகத்துடனும், கீழக்கரையுடனும், இலங்கையுடனும் இணைத்து பார்க்கும் அளவிற்கு கேரளத்துடன் சேர்த்து பார்க்காதது நாம் இழைத்து வரும் ஒரு வரலாற்றுக் குறைபாடேயாகும். வரலாறு என்பது மனித குலத்தின் சென்ற கால நினைவுகள் பதிவுகளின் அடுக்காகும். அதனை நாம் தக்க வைக்கவும் மீட்டெடுக்கவும் தவறும்போது மாபெரும் மனித குல சங்கிலியிலிருந்து நம்மை நாம் அறுத்துக் கொண்டு பெருங்கடலில் தனித்து நிற்கும் மணல் திட்டு போல் ஆகி விடுவோம்.

வரலாற்றை மீட்டுவது என்பது அதன் வழியாக பயணித்து சென்று பழங்கால பெருமிதங்களுக்குள் தேங்குவதற்காகவோ அல்லது மத இன மாச்சரியங்களை பாராட்டுவதற்காகவோ அல்ல. வரலாற்றை மீட்டு எடுக்கும்போது அதை எவ்வித சாய்மானங்களும் கூடுதல் குறைவுகளும் இல்லாமல் உள்ளது உள்ளபடி செய்ய வேண்டும் என்பதும் மிக முக்கியமாகும். இவ்வாறு செய்யும்போது வாழ்வின் உண்மையான திசை வழியில் நடக்க முனையும் நமது விருப்பம் உறுதிப்படுத்தப்படும்.

கிட்டதட்ட 500 வருடங்களுக்கு முன்னர் மொழி, இனம், பிராந்தியம் என்ற எல்லைகளை கடந்து போர்த்துக்கீசிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக மலையாளக்கரையிலிருந்து காயல்பட்டினத்தின் கடற்கரை வரை வந்தனர் மாப்ளாக்கள். அன்று அவர்ளை வழி நடத்திய உணர்வும் நோக்கமும் எது என்பதை நாம் உணர்ந்து அறிவதற்கு வரலாற்றை தவிர வேறு ஊடகம் இல்லை.

நமதூரின் மீது ஆக்கிரமிப்பை நடத்திய போர்த்துக்கீசீயர்களை எதிர்த்து இந்த மண்ணில் மலையாள மாப்ளாக்கள் நடத்திய போர் என்பது உண்மையில் முதலாவது விடுதலைப்போராகும். ஏனென்றால் போர்த்துக்கீசியர்கள் இந்தியாவை அரசியல், பொருளாதார சுரண்டலுக்கு ஏற்ற காலனி நாடாக மட்டுமே பார்த்தனர். அந்த ஒரு நோக்கத்திற்காக மட்டுமே அவர்கள் தமிழக, கேரள, கோவா, இலங்கை கடற்கரைகளின் வழியாக தங்களது அழிச்சாட்டியங்களை நிகழ்த்தினர். தங்களின் மத அடையாளத்தை சுரண்டல் நோக்கங்களுக்காக தவறாகவும் பயன்படுத்திக் கொண்டனர்.

இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது சரியில்லை. ஒரு நினைவுச்சின்னத்தை நமதூர் கடற்கரையின் வடக்கு எல்லையில் அமைக்கலாம். அவ்வாறு அமைப்பதன் மூலம் வரலாற்றின் கடந்த கால கண்ணியை நிகழ்கால நம் நினைவுகளின் ஓட்டத்தோடு இணைத்த மாதிரி இருக்கும்.

நினைவுச்சின்னம் அமைப்பது என்பது வரலாற்றை தக்க வைப்பதற்கான முயற்சியின் ஒரு தொடக்கமே. கேரளத்திற்கும் நமதூருக்கும் இடையேயான வரலாறு என்பது பல புள்ளிகளில் சிதறி கிடக்கின்றது. அந்த புள்ளிகளை அதனதன் இடத்தில் கோர்க்கும்போது அழகிய வரலாறானது தேர்ந்த ஓவியம் போல நம் முன் எழுந்து நிற்கும். கேரளத்தில் இது போன்றதோரு நினைவுச்சின்னங்கள் உள்ளது.

இந்தியாவின் முதல் அய்ரோப்பிய காலனிய ஆதிக்கவாதியான வாஸ்கோடகாமா கோழிக்கோட்டின் காப்பாடு கடற்கரையில் வந்து இறங்கினார். அவர்தான் முதல் போர்த்துக்கீசிய படையெடுப்பாளரும் கூட. அந்த வரலாற்று நிகழ்வை நினைவூட்டும் வகையில் நினைவுத்தூண் ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. கேரளம், கோவா, தமிழக நிலபரப்புகளில் அவர்கள் நடத்திய கொடூரங்களை தன்னுள் சுமக்கும் நினைவுத் தூணானது உப்புக்கரிக்கும் கடல் காற்றில் அந்த நினைவுகளை மெலிதாக தவழ விட்டுக் கொண்டே இருக்கின்றது.

கல்வெட்டு ஆய்வாளரான சென்னையைச் சார்ந்த திரு.ராமச்சந்திரன், மானிடவியல் ஆய்வாளரான பாளையங்கோட்டையைச் சார்ந்த பேரா. திரு. தொ.பரமசிவம் ஆகியோர் நமதூரின் வரலாறு முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதை பல்வேறு தருணங்களில் வலியுறுத்தியுள்ளனர்.

கொல்லம் ஆண்டு, மரைக்கார், மக்தூம், சுலைமான் வலீ, சதக்கத்துல்லாஹ் அப்பா, மக்தூம் பள்ளி, நூஹ் வலீ, பூவார் என்ற குறிச்சொற்கள் கேரள – காயல்பட்டினம் வரலாற்று பெட்டகத்தின் திறவு கோல்கள் போன்றவை. இந்த தலைப்புக்களில் விரிவான ஆய்வும் தேடலும் நடத்தப்படும்போது பல உள்ளறைகளை தன்னுள் கொண்ட வரலாற்று பெட்டகமானது பல புதிய பேழைகளை நமக்கு திறந்து தரும்.















[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 5:45pm/08.08.2014]
[கட்டுரை திருத்தப்பட்டது @ 12:00 pm / 15.1.2015]

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அழகிய வரலாற்றுக் கட்டுரை!
posted by: S.K.Salih (Kayalpatnam) on 07 August 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36286

அழகிய வரலாற்றுக் கட்டுரை! எளிய நடை!!

கட்டுரையாளர் இப்பயணத்தில் இணைய என்னையும் அழைத்தார். அந்நேரத்தில் என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. இப்போது அந்த வாய்ப்பைத் தவற விட்டதை எண்ணி வருந்துகிறேன்.

கட்டுரையாளர் கூறுவது போல, கேரள மாநிலத்துடனான நமது தொடர்புகள் குறித்து நீண்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான வாசல்கள் திறந்தே இருக்கின்றன.

முனைவர் படிப்புக்காக ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் ஆலிம் மாணவர்கள் - காயல்பட்டினத்திற்கும், கேரளத்திற்குமுள்ள முஸ்லிம்களின் தொடர்பைத் தலைப்பாகக் கொண்டு தகவல் திரட்டலாம். அதற்கு இக்கட்டுரை ஒரு தூண்டுதலாக அமையட்டும்.

இதே பாணியில் இன்னும் பல எதிர்பார்க்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. சதக்கதுல்லாஹ் அப்பா
posted by: பாளையம் சதக்கதுல்லாஹ் (தமாம், சவுதி அரேபியா) on 07 August 2014
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36287

வாவ்! எங்கள் அப்பா, கேரளாவிற்கெல்லாம் சென்றார்களா?! என் முன்னோர்களின் சரித்திர நிகழ்வுகளை, உங்கள் பயணக் குறிப்பின் மூலம் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி சகோ. சாளை பஷீர் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. முகவரிகள் தொலைந்தனவோ....?
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) on 07 August 2014
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 36288

சரித்திரங்கள் சாகா வரம் பெற்றவை. எனவேதாம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும் அதன் சான்றுகள் நம் கண்முன்னே வந்து நிற்கிறது. குறிப்பாக இந்தியாவில் முஸ்லிகம்ளின் ஆரம்ப வருகை எங்கு எப்போது என்பது பற்றி ஆராய்ந்தால் அதன் சங்கிலித் தொடர் நீண்டு கொண்டே போகும். இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு என்பதை உணர்ந்து பதிவு செய்தல் வேண்டும்.

நாளை நம் சந்ததிகளுக்கு வழித்தோன்றலின் கால்ச்சுவடுகள் அல்லது முன்னோர்தம் முகவரிகள் தெரிய வேண்டுமெனில் பதிவுகள் அவசியம் வேண்டும். அருமை நண்பர் எஸ்.கே.சாலிஹ் அழகாகச் சொன்னார். நம் மாணவர்கள் தமது ஆராய்ச்சியை இந்த வழிகளில் செலுத்த முன் வர வேண்டும். அது அவர்களுக்கு பட்டம் கிடைக்கும் என்கிற அடிப்படையில் இல்லாமல் நம் அப்பன் பாட்டன் வந்த வழிகளைத் தேடி பயணித்தால் பாதை வெகு தூரம் எனினும் பலமான சான்றுகள் நமக்கு கிடைக்கும். நமது பூர்விகம் புலப்படும்.

உலகில் பாரம்பரியத்தின் முகவரி தெரியாத மக்கள்தாம் கலவைக் கலாச்சாரத்தில் நுழைந்து எது நமது பண்பாடு எது நமது கலாச்சாரம் என்று தெரியாமல் திண்டாடுவர். நமக்கென்று ஒரு தனித்துவம் உள்ளதே அதன் பிறப்பிடமும், நாகரீகத்தின் மைய்யப்புள்ளியும் எங்குள்ளது? எங்கிருந்து வந்தது? என தேடுவது காணமால் போன நம் சொந்த தாயைத் தேடுவதற்குச் சமம். சபாஷ்...! சாளை பஷீர். உமது எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்...!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. அருமையான கட்டுரை !
posted by: Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore ) on 08 August 2014
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 36289

((நினைவுச்சின்னம் அமைப்பது என்பது வரலாற்றை தக்க வைப்பதற்கான முயற்சியின் ஒரு தொடக்கமே. கேரளத்திற்கும் நமதூருக்கும் இடையேயான வரலாறு என்பது பல புள்ளிகளில் சிதறி கிடக்கின்றது. அந்த புள்ளிகளை அதனதன் இடத்தில் கோர்க்கும்போது அழகிய வரலாறானது தேர்ந்த ஓவியம் போல நம் முன் எழுந்து நிற்கும். கேரளத்தில் இது போன்றதோரு நினைவுச்சின்னங்கள் உள்ளது. )) copy & Paste .

மாஷா அல்லாஹ் ஒரு அருமையான , அவசியமான , கண்டிப்பாக (காயல் வாசிகள் ) தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு அற்புதமான கட்டுரை !

கட்டுரை ஆசிரியருக்கு எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் , துஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் . வல்ல நாயன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் , நிறைந்த அறிவையும் , நிரப்பமான வாழ்வையும் வளமாக்குவானாக ! ஆமீன் !

இக்காலத்தில் என்னத்தான் ஆன்மீகத்தை இழித்து பேசினாலும், மறுத்தாலும் , கொச்சை படுத்தினாலும் ,கேவலமாக விமர்சனம் செய்தாலும் அத்தகைய குறைமதியாளர்களுக்கு அவ்வப்போது வரலாற்று ரீதியான , ஆதாரப்பூர்வமான "சாட்டை அடி " விழுந்து கொண்டேதான் இருக்கிறது ! அல்ஹம்துலில்லாஹ் !

நமதூர் முழுவதும் ஆன்மீக வரலாற்றை அடிப்படையாக கொண்டது . நமதூரில் உள்ள ஒவ்வொரு (ஆன்மீக அரசர்களை ) ஒலிமார்களின் வாழ்க்கை , வரலாற்றை எடுத்துக்கொண்டால் அவசியம் அவர்களின் வரலாறு , ஆன்மீகப்பணி , சன்மார்க்க தீனின் சேவை , மார்க்கப்பணிகள் என அனைத்துமே ஒரு வரலாறை சொல்வதாகவும், நமதூரை மையப் படுத்துவதாகவுமே நிச்சயம் அமைந்திருக்கும் !

அந்த அளவில் இன்றும் நம்மில் சிலர் வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு நெய்யுக்கு அலைந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம் .

ஆகவே ! ஆன்மீக வரலாற்றை மறுக்கும் மனிதன் , அதனை இருட்டடிப்பு செய்யும் மனிதன் அதற்காக வெட்கப்பட வேண்டும் என சொன்னாலும் அது மிகையாகாது !

இன்னும் இதுபோன்ற பல கட்டுரைகள் வெளியாக வேண்டும் , தெளிவாக வேண்டும் !

வல்ல நாயன் அல்லாஹ் அதற்க்கான தெளிவான ஆய்வு செய்யும் அற்புதமான அறிவாற்றலை நம் அனைவருக்கும் வழங்குவானாக ! ஆமீன் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: mohamed salih (chennai) on 08 August 2014
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36290

மாஷா அல்லாஹ்..

மிக அருமையான கட்டுரை.. இந்த கட்டுரையை படித்து விட்டு நானும் இந்த ஊருக்கு போகணும் போல ஆசையாக இருக்கு .. இன்ஷா அல்லாஹ் ..

இந்த கட்டுரை ஆசிரியர் மிக அருமையாக வாசகங்கள் மற்றும் புகை படங்களை தொகுத்து தந்து இருக்கிறார் .

இது போல் பல நல்ல சரித்திர கட்டுரை உங்கள் மூலம் வர வல்ல இறைவனை வேண்டுகிறேன் இன்ஷா அல்லாஹ் ..

என்றும் அன்புடன் ,
சென்னையில் இருந்து ,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. நிறை குடம் தழும்பாது.
posted by: s.s.md meerasahib (TVM) on 09 August 2014
IP: 106.*.*.* India | Comment Reference Number: 36294

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு நண்பர் சாளை பஷீர் ஆரிஃப் அவர்களின் இந்த கட்டுரையும், அதன் வழி தேடலும் நமக்கு முகவரியை உறுதி படுத்தக்கூடியவை. அன்பு ஆசிரியர் அவர்களே....... உங்களின் இந்த பயணத்தில் உங்களின் நெருங்கிய நண்பர்களிடம் இருந்தே....... உங்களுக்கு தொய்வு ஏற்படலாம். ஏனெனில் விலை மதிப்பற்ற முத்துவை எடுக்க செல்கிறீர்கள்.

மதிப்பிற்குரிய காஜா முஹியதீன் ஆலிம், எஸ்.கே. சாலிஹ், ஹிஜாஜ் மைந்தன் இவர்களின் பதிப்பினையும் நானும் வழி மொழிகிறேன்.

கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு முத்து சிப்பியை நான் காட்டித்தருகிறேன். முத்துவை நீங்கள் எடுத்து உலகிற்கு கொண்டு வாருங்கள்.

மதிப்பிற்குரிய ஜலீல் முஹியதீன் ஹஜ்ரத்திடம் சென்றால் உங்களுக்கு 75% வேலை குறையும். ஆனால் உங்களின் நப்சு இடம் கொடுக்குமா? என்பது (?) ஹஜ்ரத்தின் கொள்கையை நான் முழுமையாக ஆதரிப்பவன் இல்லை. ஆனால் இந்த உங்களின் கட்டுரைக்கு இவர்கள் 100% பொருத்தம்.

இதை நான் இங்கு பதிக்க காரணம்.கிட்டத்தட்ட பத்து வருடம்களுக்கு முன்பு. நானும் என் சக நண்பர்களும் ஜாலிக்காக உல்லாச பயணம் மேற்கொண்டு ஊரை விட்டும் புறப்பட்டு சென்று 65 கிலோ மீட்டர் தூரத்திலேயே........ அல்லாஹ் அவன் விருப்பபடி ஆன்மீக பயணமாக அதை மாற்றிவிட்டான்.

நாங்கள் எதிர் பாராவண்ணம் ஹஜ்ரத் அவர்களும் எங்களுடன் மற்றொரு வேனில் பயணித்தார்கள்.இதை நான் அந்த நேரத்தில் விரும்பவில்லை. ஆனால் இன்றோ...... அந்த பயணத்தை என் வாழ் நாள் பாக்கியமாக கருதுகிறேன். ஏனெனில் பயணம் கேரளாவில் நுழைந்ததும். கேரளாவுக்கும், காயல்பதிக்கும் உள்ள ஆன்மீக தொடர்பு, அது நடந்த ஆண்டு, போன்ற பலவகை அம்சம்கள் ஹஜ்ரத்தின் நுனி நாக்கில் புரள்வதை பார்த்து அந்தம் விட்டு போனின்.(மதி மயங்கினேன்) எனக்குள் ஒரு ஆன்மீக சக்தி ஊடுருவதை உணர்ந்தேன். நம் ஊரின் பாசம் என் உள்ளத்தை கொள்ளை கொண்டது.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:...
posted by: Hameed Rifai (jeddah ksa) on 09 August 2014
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36295

அழகான வரலாற்றுக் கட்டுரை. கட்டுரையாளர் எங்களையும் கை பிடித்து அழைத்துச் சென்ற உணர்வு கிட்டியது.

நான் மட்டும் ஊரில் இருந்திருந்தால், கண்டிப்பாக இந்தப் பயணத்தில் இணைந்திருப்பேன்.

காட்டுவாசி கட்டுரைகளாக (அவையும் தேவையும், ரசிக்கத்தக்கனவும்தான்) தந்துகொண்டிருந்த சாளை பஷீர் காக்கா அவர்கள், வரலாற்றுத் துறையில் எடுத்து வைத்துள்ள முதல் அடியே அழகாக உள்ளது.

தொடர்ந்து இதுபோன்ற ஆக்கங்கள் பல வெளிவர வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. வேர்களைத் தேடி.....
posted by: கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா) on 09 August 2014
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36299

“தன்னை அறிந்தவன் தன் இறைவனை அறிந்துக் கொள்வான்” என்பார்கள். அறிந்ததைப் பதிவும் செய்பவர்கள் அறிஞர்கள்.

“ஹெரிடேஜ்”ஐ அறியாதவன் அறிஞனல்ல என்பது மட்டுமல்ல; அவற்றை அழிப்பவன் அயோக்கியனும் கூட!

நல்ல வேளை – புஹாரி இமாம் உள்ளிட்ட முஹத்திதீன்கள் & நபியவர்களின் சீறாவை எழுதிய தொலை நோக்கு அறிஞர்கள் இஸ்லாத்தை அழகுற பதிவு செய்து சென்றுள்ளார்கள். இல்லையெனில், உலகமயமாக்கல் மோகத்தில், மக்கா ஹரத்தைச் சுற்றியுள்ள “பிக்பென்?” கடிகார டவரையும், ஹில்டன் ஹோட்டலையும் தான் இஸ்லாமியப் பாரம்பரியமிக்க தலங்களாக நம்பியிருப்போம்!

முதன் முதலில் நபிகளார் குறைசித் தலைவர்களைக் கூட்டி அழைப்புப் பணி மேற்கொண்டார்களே அம்மலை, அந்த பிக்பென் டவரின் அடி ஆழத்தில் சுக்கு நூறாக நொறுங்கிப் போய் இருப்பதுவும், அபுபக்கர் ஸித்திக் [ரலி] போன்ற சஹாபாக்கள் பிறந்து, தம் இளமைக்காலங்களில் வாழ்ந்த இடங்கள், ஹரத்தைச் சூழவுள்ள பெரும் பெரும் நவீன ஹோட்டல்களுக்கு அடியில் புதையுண்டு இருப்பதுவும் தெரியாமலே போயிருக்கும்.

வேர்களைத் தேடிய உங்கள் இனிய பயணம் எங்கள் கருத்துக்கும், புலனுக்கும் விருந்தளித்தன.

உங்கள் தேடல் மென்மேலும் தொடர்ந்து, புதையுண்ட அறியப்படாத களஞ்சியமான உண்மைகள் வெளிக்கொணரப் பட வேண்டும்! பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணாக்கர்களுக்கு இது ஒரு “ அலிஃப்” ஆக, “அ”கரமாக அமையட்டும்.

நாலோடு இன்னொன்று என்பது போன்ற கட்டுரையாக இதை ஆக்கிடாமல், முறையாக ஆவணப்படுத்த வேண்டிய பதிவு இது!

நல்ல பதிவு!

சகோ. சாளை பஷீர் அவர்களுக்கும், இணையத்தாருக்கும் நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. காயல் வரலாறு தொடர்ச்சி ...
posted by: அ மு அன்வர் சதாத் (mayiladuthurai) on 09 August 2014
IP: 59.*.*.* India | Comment Reference Number: 36304

அன்பு நண்பர் காகா
சாளை பஷீர் அவர்களுக்கு,

வரலாற்றை தேடும் தங்களின் இந்த விண்ணப்பம்
உள்ளபடியே மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

கிழக்கு கடற்கரை சாலைகள் முழுவதும்
வியாபித்து இருக்கும் வரலாற்று தடங்களை

ஒரு மிஷனாக செய்யவேண்டும்
என பெரிதும் விரும்புகிறேன்.

காரணம்

ஏராளமான பொக்கிஷங்களை
அது தன்னகத்தே கொண்டுள்ளது.

அவைகள் எமக்கும் எமது சந்ததியினர்களுக்கும்
சமர்ப்பித்து பாது காக்கவேண்டியது எமது கடமை.

வஸ்ஸலாம்

அன்புடன்

அ.மு அன்வர் சதாத்
மயிலாடுதுறை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. Re:...
posted by: mohmed younus (chennai) on 09 August 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36307

நானும் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு கோழிகோடு சென்று இந்த குட்டிச்சராவை சுற்றி பார்த்து இருக்கிறேன். அந்த தெப்ப குளத்தில் உட்கார்ந்து பேப்பர், நாவல்கள் படித்து நேரம் போக்கி இருக்கிறேன்.

அருமையான தகவல்கள் தந்ததற்கு ஆயிரம் நன்றிகள்... இதுபோன்ற கட்டுரை எழுத வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. அன்றும் இன்றும்
posted by: seyed mohamed buhary (kayalpatnam) on 13 August 2014
IP: 59.*.*.* India | Comment Reference Number: 36381

ஒவ்வொரு கால கட்டத்திலும் கேரளாவிற்கும் நமதூரிற்கும் தொடர்புகள் தொடர் கின்றன

சதக்கத்துல்லா அப்பா அவர்கள் அங்கு படித்தது கொடுத்தும்

உமர் ஒலியுல்லா அவர்கள் கண்ணூர் புஹாரி தங்களிடமும்

ஸாஹிப் அப்பா அவர்கள் கோழிக்கோடு ஜிஃப்ரி தங்களிடமும் படித்தும்

உள்ளனர்

இன்றும் பலர் படிக்கின்றனர் கல்வி கற்க ஏது கண்

சீனா தேசம் சென்றாகிலும் அல்லாவை அறிய வேண்டுமல்லவா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
12. Re:...
posted by: Ahamed Sulaiman (Dubai) on 01 October 2014
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37568

அஸ்ஸலாமு அலைக்கும்,

வரலாறு என்பது கண் போன்றது நம் மக்கள் தங்கள் வரலாறு குறிந்த தகவல்களை சரியான முறைகளில் அறிவது நமக்கு நல்ல பலனை தரும் மேலும் அவைகள் நம்முடைய மனப்பான்மையை நல்ல நிலைக்கு பயணிக்க செய்யும் . நம் மக்கள் இது போன்ற பதிவுகளை ஆதாரத்துடன் பயண புரிந்து பல சிதைந்து சிதறி கிடக்கும் இது போன்ற வரலாறுகளை கோர்வை செய்து பதிய செய்தால் அவைகள் கண்டிப்பாக பயனாக அமையும் .

ஆரிப் காகா அவர்களுக்கும் இது போன்ற பணிகளுக்கு உதவிய அனைவர்க்கும் நன்றி .....

நம் மக்கள் நிறைய பயண கட்டுரைகள் எழுதணும் அவைகள் நமக்கு பல பயனுள்ள தகவல்களையும் அது சமையம் வரலாற்றையும் நமக்கு அறிய தரும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
13. Re:...
posted by: Eassa Zakkairya (Jeddah) on 27 October 2014
IP: 37.*.*.* | Comment Reference Number: 37893

அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு அல்லாஹ் அருள் மழை பொழிவானாக -ஆமின்

அருமையான, செழுமையான பதிப்பாகவும் மனதுக்குள் மழை துளி விழுந்ததாக நாம் இதை உணருகிறோம் .

எந்த ஒரு சமூகமும் தனது துவக்கத்தை அறியாதவரை உணர்வு பெற்ற சமூகமாக மாறுவதில்லை .

நன்றி உணர்வோடு நம் முன்நூர்களை (நூர்) நினைவு கூறவேண்டும் -அதற்கு அல்லாஹ்விடமே நாம் பிராத்தனை செய்யவும் வேண்டும் . வல்ல நாயன் நம் அனைவர்களும் அந்த பொக்கிஷத்தை தந்து அவனை அறிகின்ற "விலாயத்" உடைய அருளை தருவானாக - தருவான் என்று கூறி

"வரலாறு ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது " (பல நேரங்களில் நாம் விரும்பாததையும் வரலாறு பதிவு செய்யும் - பொதுவாக )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
14. Re:...நீண்ட
posted by: Eassa Zakkairya (Jeddah) on 27 October 2014
IP: 37.*.*.* | Comment Reference Number: 37894

ஒரு நீண்ட பயணத்திற்கான முன் ஏற்பாடுகள் - ஆசரியர் அவர்கள் நாளைய தலைமுறைக்கு எதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று சாட்டையை எல்லா புறமும் அக ஒழுக்கம் பெறவேண்டி சுழற்றுகிறார்; நன்றி உணர்வோடு நல்ல உள்ளங்களை நினைவும் கூறுகிறார் - அருமையான உணருபூர்வமான பதிப்பு -

கிருபை உள்ள ரஹ்மான் ஆசரியர் அவர்கள் மீது அருள் மழைபொழி வானக -ஆமின்

"சமூகம் என்கிற கூட்டு முயற்சி " (சில கருப்பு ஆடுகள் அந்த கூட்டு முயற்சியை சிதைகிறார்கள் ) அடி வேரிலே திரவகத்தையும் சேர்த்தே ஊத்துகிரார்கள்-


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved