Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:25:27 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 103
#KOTWEM103
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 31, 2013
கல்யாண வீட்டோரே... கவனம் கொள்ளுங்கள்!

இந்த பக்கம் 4849 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நள்ளிரவு பன்னிரெண்டு மணி... ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஊர் மக்கள்... ஆரவாரமற்ற தெரு வெறிச்சொடிப்போய்க் கிடந்த அர்த்த சாமம்... ஊருக்கு சற்று ஒதுக்குப் புறமான இடம் என்பதால் காற்றுக்குப் பஞ்சமில்லை... இருப்பினும் கோடைக்காலம் ஆதலால் வீட்டின் ஜன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தது...

திடீரெனக் காற்றில் கலந்தப் புகைப்படலமும், ஏதோ எரியும் நெருப்பு வாடையும் வீட்டிலுள்ளவர்களின் தூக்கத்தைக் கலைத்தது. வீடு முழுவதும் புகை சூழ்ந்திருப்பதைக் கண்டு பதைபதைத்துக்கொண்டு அடுப்பாங்கறையை நோக்கி தட்டுத் தடுமாறி ஓடிப்போய் பார்த்தால் ஒன்றுமில்லை!

பார்வை தானாகவே ஜன்னல் பக்கம் திரும்ப பதட்டத்தோடு ஓடிச் சென்று வெளியில் எட்டிப்பார்த்த போது அந்த பயங்கரம்! வீட்டுக்கு எதிர்புறத்தில் தனியாருக்குச் சொந்தமான காலி மனையில் படர்ந்திருந்த முட்செடிகளில் செக்கச்செவேலென அக்கினிப் பிழம்புகள் தம் கோரப் பசிக்கு நாட்டு உடைமரங்களை இரையாக்கிக் கொண்டிருதன. அரை பனை உயரத்திற்கு அதன் வீரியம் வெறிகொண்டு எழுந்தெரிந்த காட்சியைப் பார்த்தவுடன் பயத்தால் உடலுறுப்புக்கள் சலனமற்று உறைந்து போயிற்று.

பதைத்தது நெஞ்சம், பதறியது உள்ளம், நடுங்கியது உடல், காற்றின் வேகம் அதிகரிக்கவே அக்கினி தம்போக்கில் தாண்டவமாடத் துவங்கியது.



சற்று நேரத்திற்குள் தெருவாசிகள் விழித்தெழுந்து ஓடிவரவே கூக்குரலும், ஆரவாரங்களும் அந்த இடத்தை ஒரு போர்க்களம் போல் ஆக்கியது. கதவுகள் திறக்கப்பட்டன... தண்ணீருக்காக மோட்டார்கள் போடப்பட்டன... நீளமான பிளாஸ்டிக் (ஓஸ்) குழாய்கள் வழியாகத் தண்ணீரைப் பீச்சியடித்து தீயின் ஆவேசத்தைக் குறைக்க முயன்றனர் ஆசாரிமார் தெரு இளைஞர்கள். ம்ஹும் அது அடங்குவதாக இல்லை!

கட்டுக்கடங்காத தீயின் நிலை கண்டு சிலர் தீயணைப்புப் படையினருக்கு போன் போட்டு நிகழ்வை விளக்கினர். தெருவே கலவர பூமியாகக் காட்சியளித்தது. சின்னஞ்சிறுசுகள் தூக்கக் கலக்கத்தில் துரு துருவென செய்வதறியாது விழித்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து போராடி தீயை அணைக்க படாத பாடு பட்டுக்கொண்டிருந்தது ஓரு கூட்டம்.

கடந்த வருடம் நமதூரில் நகராட்சிக்கு எதிர் புறம் முத்தாரம்மன் கோவில் (வடக்கு) தெருவில் என் தாயார் வீட்டுக்கு முன் நடந்த சம்பவம்தான் இது!

ஒரு வழியாக தீயை அணைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்ட சில மணி நேரத்தில் மணியோசையும் சயரன் ஒலியோடும் தீயணைப்புப் படையினர் வந்து சேர்ந்தனர். செய்வதற்கு ஒன்றுமில்லை. சரி வந்தது வந்து விட்டோம் என அக்கம் பக்கத்தாரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தனர் அதிகாரிகள். படுவேகமாக பைக்கில் வந்த ஒருவர் அதை ஓரங்கட்டிவிட்டு, ஆவேசத்தோடு தீயணைப்பு படையினரோடு சண்டைக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். தைக்காத் தெருவில் நான் போட்டிருந்த சாமியானாப் பந்தலின் துணிகளையும் கம்புகளையும் உங்கள் வாகனம் கிழித்தெறிந்து விட்டு வந்துள்ளது. எனக்கு நஷ்ட ஈடு தாருங்கள் இல்லை என்றால் நான் கேஸ் போடுவேன் என மிரட்டிக் கொண்டிருந்தார். ஆத்திரமடைந்த தீயணைப்புப்படையின் அதிகாரி,

“ஏன்யா இங்கே தீயெரிஞ்சு மக்கள் செத்தாலும் பரவாயில்லை... உனக்கு உன் பந்தல்தான் பெருசா போச்சா? என்னய்யா ஊரு இது? எந்தத் தெருவுக்குள்ளே போனாலும் கல்யாண வீட்டுப் பந்தல் அதையும் பாதி இடத்துலெ தெருவையே அடச்சு வெச்சிருக்கீங்க? நாங்க எப்படி ஊருக்குள்ளே வர்றது? இனிமேல் ஹெலிக்காப்டர்லெதான் உங்க ஊருக்குள்ளெ வரணும். மூணு இடத்துல பந்தலைக் கடந்து வர முடியாமெ நாங்க தடுமாறிக்கிட்டிருந்தோம். ஊர்க்காரங்கதான் தைக்காத் தெரு வழியாப் போகச் சொன்னாங்க! அங்கே வந்து பார்த்தா அங்கேயும் துணிப்பந்தல் போட்டிருக்காங்க! அது உன் பந்தல்ன்ணு யாருக்குயா தெரியும்? ஏன் இப்படி எங்க உயிரை எடுக்கிறீங்க?”

என தாங்கள் சரியான பாதையில் வந்தும் சரியான நேரத்திற்கு உள்ளே வர முடியாத காரணத்தை விளக்கினர். புரிந்து கொண்ட பந்தல்க்காரர் மன்னிப்புக் கேட்டு விட்டு நைசாக நழுவினார்.

தீயணைப்புப் படையினரின் சேவைகள் மிக உன்னதமானவை. நம் உயிர் காக்க அவர்கள் தம் உயிரைப் பொருட்படுத்தாமல் மக்களை மட்டுமல்ல மிருகங்களின் உயிரையும் காப்பாற்றும் கடமை உணர்வுள்ளவர்கள்.

மணியோசையோடு அசுர வேகத்தில் சம்பவ இடத்திற்கு வந்து சேர சற்று தாமதித்து விட்டால் மக்களின் மலிவான ஏச்சுக்களும், பேச்சுக்களும் அப்பப்பா... அதையெல்லாம் செவிமடுக்காமல் காரியத்தில் இறங்கி காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவதே இவர்களின் பணி.

வழித்தடத்தில் ஏற்படும் இடைஞ்சல்களான பந்தல்கள், மின்வடம், குறுகிய சாலை அல்லது சந்துகள், தெருவோரங்களில் குவிக்கப்பட்டிருக்கும் கற்கள் மற்றும் மணல்கள் இவற்றையெல்லாம் தாண்டி ஊருக்குள் வந்து தீயணைத்து உயிர் காப்பது என்பது சாதாரண காரியமல்ல.





எந்த ஊர்களிலும் இல்லாத இந்த வழக்கம் நமதூரில் மட்டும்தான் உள்ளது. மக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதைகளை அடைத்து வைத்துக் கொண்டு தம் வீட்டு வைபவங்களை நடத்தி மகிழும் சுயநலம்!

ஒரு சைக்கிள் போகுமளவிற்கு மட்டும் வழியை விட்டு விட்டு மீதியிடங்களை நாட்கணக்கில் ஆக்கிரமித்து, வரிசையாக விழா எடுத்து சடங்கு சம்பிரதாயங்களை நடத்தும் கொடுமை!!

அழைப்பு, நிக்காஹ், கைப்பிடித்து விடுதல், மாலையில் பெண் சோடிப்பு, இரவு விருந்து, மறுநாள் வலிமா, இப்படி நான்கு நாள் அந்த தெருவை அடைத்து வைத்துக் கொண்டு வேறு யாரும் போக முடியாத நிலை!!!

சாதாரண நாட்களிலேயே இப்படி என்றால், திருமண சீசன் மாதத்தில் சொல்லவே வேண்டாம்! பொதுமக்கள் தமது அவசரத் தேவைக்காக ஆட்டோ, வேன், கார், பைக் போன்ற வாகங்களில் செல்லும்போது போகும் இடமெல்லாம் பந்தல், தட்டி அடைப்பு, தடுப்புக்கயிறு என இருப்பதால் நான்கு தெருக்கள் சுற்றிப் போகும் பரிதாப நிலை.

பிற ஊர்களில் நடக்கும் திருமணங்கள் கோயில், சர்ச், மண்டபங்கள் என யாருக்கும் தொந்தரவில்லாத நிலையில் நடக்கும். நமதூரில் மட்டும் இட வசதியில்லை, நிக்காஹ் மஜ்லிஸில் வைத்து நடத்தினால் சொன்னவன், சொல்லாதவன் எல்லாம் வருவாங்க என சுயநலம் கருதி பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் இச்செயலை நியாயப்படுத்தி வருகின்றனர்.

போதாதக் குறைக்கு பந்தல்காரர்கள் அடுக்கடுக்காக திருமணங்கள் நடக்கவிருப்பதால், முதலில் அமைத்த பந்தலை அகற்றாமல் அப்படியே நாட்கணக்கில் விட்டுவைத்து, அடுத்த தெருவில் அடுத்து நடக்கவிருக்கும் கல்யாணத்திற்கு அதைப் பயன்படுத்தி, தம் வாகனக்கூலி, பந்தல் பிரிக்கும் கூலி என செலவினங்களை மிச்சப்படுத்த, இவ்வாறு திருமணப் பந்தல்களை அம்போவென அந்த தெருக்களிலேயே நாட்கணக்கில் விட்டு வைத்திருக்கின்றனர்.

இது பொதுமக்களுக்கு பெரும் இடைஞ்சலை தரும் செயல். இதனால் அவசரத்தேவைக்கு கனரக வாகனங்களான லாரி, தீயனைப்பு வாகனம், வேன்கள் தெருக்களுக்குள் செல்ல இயலாமல் பெரும் சிரமத்திற்குள்ளாவது இயல்பான ஒன்றாகிப் போயிற்று. திருமண வீட்டாரிடம் கேட்டால்,

“கல்யாணம் முடிஞ்சு இரண்டு வாரம் ஆயிடுச்சு... பொண்ணும் மாப்பிளையும் டூர் போயிட்டும் வந்தாச்சு... மருமகன் அடுத்த வாரம் ஸஃபர் புறப்பட்டுப் போறாங்க... பந்தலுக்கு காசும் கொடுத்தாச்சு... பந்தல்காரர்தான் இன்னும் வரவில்லை... நாங்க என்ன செய்ய? எங்க வீட்டுக்குள்ளேயும் காற்றும் வெளிச்சமும் வராமெ நாங்களும்தான் ரெம்பவும் கஷ்டப்படுகிறோம்...” என்பார்கள்.

பொதுவாக இதுபோன்ற - நாட்கணக்கில் விட்டு வைத்திருக்கும் பந்தல் அல்லது தெருக்களை அடைத்து மேடை போட்டு நடத்தும் திருமணங்கள் இவற்றால் பாதிக்கப்படுவோர் பற்றிய எண்ணம் நமக்கில்லாமையே இதற்கு காரணம். நம் நகராட்சியும் தன் பங்கிற்கு பந்தல்காலுக்கு இவ்வளவு என்றும், சந்தோஷமா இவ்வளவு என்றும், வரியும் - படியும் வாங்கிச் செல்வதோடு சரி. அதுக்கப்புறம் அந்த பக்கமே தலை வைத்து படுப்பதில்லை.

ஒருவேளை அந்தப் பகுதியில் தீ விபத்தோ அல்லது மாரடைப்பு, மயக்கம், மரணம் போன்ற எதிர்பாராத சம்பவங்களோ நடந்தால் அவர்களின் நிலமை என்ன? ஒரு ஆம்புலன்ஸோ தீயணைப்புப் படையினரின் வாகனமோ அந்த தெருவுக்குள் வர இயலுமா? சரி, ஓர் அவசரத் தேவைக்கு ஆட்டோவில் செல்லும் சாதாரண நோயாளிகள் கூட தெருத் தெருவாக சுற்றிச் செல்லும் நிலமையைத்தானே இந்த திருமண சீசன் நாட்களில் நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்?

ஒருமுறை எங்கள் பக்கத்து வீட்டு மூதாட்டி பாத்ரூமில் வழுக்கி விழுந்து, கனுக்கால் எலும்பு விலகி, படாத பாடு பட்டார்கள். பதறியடித்துக் கொண்டு அவசரமாக ஆட்டோக்கு போன் போட்டால், அது வந்து சேர அரை மணி நேரம் பிடித்தது. தெருவெங்கிலும் திருமணப் பந்தலில் அழைப்பு. KMT மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தெருத்தெருவாய் சுற்றினார்கள். பாவம் கால் வலியில் அந்த மூதாட்டி பட்ட அவஸ்த்தையை நினைத்தால்... இப்படி பாதையை அடைத்து வீட்டில் வைத்து நடத்த வேண்டிய விஷேசங்களை வீதியில் வைத்து நடத்துவதால் ஏற்பட்ட விபரீதத்தின் விளைவுகளை எண்ணி மனம் வெதும்புகிறது. பாதிக்கப்பட்டோரது மன உளைச்சலும் பதுவாவும் (சாபமும்) வாழப் போகும் அந்த தம்பதியரைத் தாக்காமல் இறைவன் பாதுகாக்க வேண்டும்.

இதில் மார்க்க சட்டங்களோ, மாநபிகளார் கற்றுத்தந்த பொதுப்பாதை நியதிகளோ பேணப்படுவதில்லை. இஸ்லாமியர்கள், உலமாக்கள், மத்ரஸாக்கள் எனப் பல பெருமைகளுக்குச் சொந்தமான நம் காயலில் வீடுகள் கட்டப் பயன்படுத்தும் சல்லிக்கற்கள், செங்கல்கள், மண் குவியல்கள், என அனைத்தும் மக்கள் நடமாடும் பொதுப்பாதையில் குவிக்கப்பட்டு, காங்க்ரீட் போடும்போது தெருக்களில் கலவை வாகனங்களை நிறுத்தி வைத்து, பொது வழியை அடைத்து பிறருக்கு துன்பம் இழைத்து வருவது எவ்விதத்தில் நியாயம்?

போகும் பாதையில் கிடக்கும் ஒரு முள்ளை அகற்றி விட்டுச் செல்வோருக்கு அளவிலா நன்மைகளை அள்ளித் தரும் சன்மார்க்க சித்தாந்தங்கள் இங்கு மட்டும் ஏன் காற்றில் பறக்க விடப்படுகின்றது? அல்லாஹ் பாதுகாத்தான்... இதுவரை தீச்சம்பவத்தால் உயிர்ப்பலிகள் ஏதும் நடக்கவில்லை. மாறாக, குடியிருப்புப் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நடந்து, தீயணைப்புப் படையினர் ஊருக்குள் வர இயலாமல் போயிருந்தால், இத்தகைய திருமணப் பந்தல்களால் உயிரிழப்பும், பொருள் சேதமும் ஏற்பட்டிருக்கக் கூடும்.

இனியாவது வருங்காலங்களில் ரோட்டை அடைத்து வைத்து விழாக்கள், வைபவங்கள், திருமணங்கள் நடத்துவதை நாம் முற்றிலுமாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வாழையடி வாழையாக தொன்றுதொட்டு நடந்துவரும் இவ்வழக்கத்தை நாம் கைவிட்டு, யாருக்கும் இடைஞ்சல் இல்லாத இடத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி, நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்போமாக!

வல்லோனின் நல்லருள் நம் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.

-ஹிஜாஸ் மைந்தன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தீர்வு என்ன?
posted by: Abu Rushda (Chennai) on 31 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29881

அழகான கட்டுரை, கட்டுரையாளர் விமர்சனகளுடன் தீர்வையும் சொல்லிருந்தால் கட்டுரை சிறப்பாக இருக்கும். Practical Solution உடன் வரும் விமர்சனங்கள் மட்டுமே ஆரோக்கியமானதாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:... கல்யாணப் பந்தல்
posted by: Ismail Sufi (Muscat, Sultanate of Oman.) on 31 August 2013
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 29884

மருமகன் முஹம்மது ரபீக் அவர்கள் மிகவும் தெளிவான முறையில் நியாயமான தீர்வு ஏற்படுவதற்கு தன் கட்டுரையில் எழுதி இருக்கிறார்.

நமதூர் மக்கள் தான் இதை சிந்தித்து செயல் படுத்த வேண்டும்.

இனி வரும் காலங்களிலாவது ஊரின் பொது நலன் கருதி நமதூர் மக்கள் கல்யாணப் பந்தல் போடும்போது வாகனங்கள் செல்ல தடையில்லாமல் பந்தல் போடுவார்கள் என நம்பிக்கை கொள்வோம்.

நல்ல கருத்துக்களை எழுத்து மேடை மூலம் தெரிவிக்கும் ஹிஜாஸ் மைந்தன் முஹம்மது ரபீக் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

தகவல்
இஸ்மாயில் சூபி
மஸ்கட், ஓமன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஒவ்வொரு ஜமாத்திற்க்கும் ஒரு “ஜலாலியா” தேவை.
posted by: AbdulKader ThaikaSahib MSS (KPM) on 31 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29886

“Practical Solution” அப்படின்னு பார்த்தா ஒவ்வொரு ஜமாத்திற்க்கும் ஒரு “ஜலாலியா” தேவை.

ஆனால் தற்போதைய சூழலில் “Practical Solution” அப்படின்னு பார்த்தா குறைந்தபட்சம் “நிக்காஹ்” மற்றும் “வலிமாவிற்கு” அடைத்துவிட்டு உடனே பாதையை திறந்துவிடுவதுதான்...

தொடர்ந்து மூன்று நாட்கள் அடைத்துவிட்டு நாங்கள் அறிவிப்பு பலகை வைத்தோம் என்று சொல்வது எந்த விதத்திலும் ஏற்றுகொள்ள முடியாது. (தொடர்ந்து மூன்று நாளா ஏமாந்த கடுப்புல சொல்றேன்.... இந்த கடுப்புல யாரும் மணமக்களுக்கு துஆசெய்ய மாட்டார்கள்...)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: Mohudoom (calicut) on 31 August 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29891

வரும் முன் காப்போம்

அழகன கட்டுரை இதற்க்கு உடனடியாக ஜமாத்துக்கள் எல்லாம் ஒன்றாக கூடி நல்ல முடிவை எடுக்க இறைவனிடம் பிரார்திக்கேரன்

ஆதில் மொஹுதூம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: OMER ANAS (KAYAL PATNAM.) on 31 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29892

கட்டுரையாளர் ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டி, அதன் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியினையும் விளக்கி மக்களின் மன நிலையை மாற்றிடும் படி கேட்டுக்கொண்டுள்ளார். நன்றி நன்றி!

மக்களே இதனால் நாளை நமக்கும் இதுபோன்ற இடைஞ்சல் நடைபெறலாம். இதன் பாதிப்புக்கு நாம் ஆளாகாமல் இருக்க நாமும் இதுபோன்ற இடையூறு தரும் நிகழ்சிகளை தவிர்த்து கொள்வதோடு நம் அண்டை வீட்டாரும் இது போன்ற செயலில் ஈடுபடும் போது அதை தவிர்த்திடும் முகமாக இனிமையாக எடுத்து கூறுங்கள்.

இது போல் கல்யாண பந்தல் மட்டும் நமக்கு இடைஞ்சல் இல்லை கான்க்ரீட் போடுகிறோம் என்ற நிலையில் நாம் முன் அறிவிப்பு இன்றி ரோட்டை அடைத்து இடைஞ்சல் தருவதும் குற்றமே! அல்லாஹ் பாதுகாத்துக்கொள்வான் நம்மை ஆபத்துக்களில் நின்று.

இனியாவது ஒன்றுபடுவோம் விட்டுக்கொடுப்போம் வெற்றிகாண்போம். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தைக்கா கல்யாணம்
posted by: Hameed sulthan (Abudhabi) on 31 August 2013
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29893

நன்மையும் உண்டு தீமையும் உண்டு.

ஆகவே இனிவரும் நாட்களில் இருமனங்கள் இணையும் திருமணத்தை பிரமனங்கள் புண்படாமல் நடத்த ஒரே வழி தைக்கா திருமணம் மட்டுமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by: Vilack SMA (Huanghua , Hebei , china) on 31 August 2013
IP: 221.*.*.* China | Comment Reference Number: 29894

கூட்டாளி ஹிஜாஸ் மைந்தன், ஊரின் அவல நிலையை அழகாக சொல்லி இருக்கிறார் . இருந்தாலும் என்ன செய்வது ! அடுத்தவன் செத்தாலும் பரவாயில்லை , என் பிள்ளையை அழகு படுத்தி , நான்கு நாட்களுக்கு தெருவில் உட்கார வைப்பேன் என்று வைராக்கியம் பிடித்தவர்கள் உள்ளவரை இப்படித்தான் இருக்கும் .

சமீபத்தில் என் மகனை பைக்கில் உட்காரவைத்து , ரயில் நிலையம் செல்ல சுலபமாக செல்ல வேண்டிய பாதையில் செல்ல முடியாமல் , நான் இதுவரை ஊரில் பார்த்தே இராத சந்து பொந்துக்களைஎல்லாம் கடந்து ரயில் நிலையம் செல்வதற்குள் , ரயில் வந்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது . ஓடும் ரயிலில் தொற்றிக்கொண்டு ஏற வேண்டிய நிலை .

இதில் பந்தல் காரனையும் திருமண வீட்டாரையும் குறை சொல்வதைவிட , ரோட்டை அடைக்க அனுமதி அளித்த நகராட்சி நிர்வாகத்தைதான் குற்றம் சொல்ல வேண்டும் . நிர்வாக சீர்கேட்டைதான் இது காட்டுகிறது . பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களின் வீடுகளுக்கு , மின்சாரம் , தண்ணீர் இணைப்பை துண்டித்து , அபராதமும் விதித்தால் , " வெட்டை " இல்லாதவங்க நாங்க எங்கே போவது என்று ஒருவரும் வாய் பேச மாட்டார்கள் .

ஒவ்வொரு ஜமாத்திற்கும் ஒரு ஜலாலியா தேவை என்பதெல்லாம் தேவையற்ற வாதம் . இப்போது ஊரின் பெரும்பாலான பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு , சிறிய பெரிய அளவினாலான திருமணங்கள் நடத்த போதுமானதாகவே உள்ளது . தாலி கட்டும் நிகழ்ச்சி , கை பிடித்துவிடும் நிகழ்ச்சி , திருமணம் முடிந்த இரவில் நடக்கும் விருந்து போன்றவற்றிற்கு பெண்கள் தைக்காக்கள் இருக்கிறது . பந்தல் காரனுக்கு கொடுக்கும் தொகையைவிட பள்ளிவாசலுக்கும் தைக்காக்கும் கொடுக்கும் தொகை மிக சொற்பமே !

இனியாவது திருந்த பார்ப்போம் . அடுத்தவர் வசைபாட்டிலிருந்து புதிதாக வாழ்கையை தொடங்க இருக்கும் மணமக்களை பாதுகாப்போம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 31 August 2013
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29895

கட்டுரையாளர் திருமண வீட்டு பந்தல்கள் பற்றி எழுதி இருந்தார். சரி. அத்துணை கருத்துகளிலும் நியாயம் இருக்கிறது. இதில் வீடு கட்டுபவர்கள் தெருவில் கலவை இயந்திரத்தை நிறுத்தி கான்கிரீட் போடுவதை விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம்.

நமதூர் அமைப்பில் வீடு கட்டவேண்டும் என்றால் எனக்கு தெரிந்து இது ஒரு வழிதான் இருக்கிறது கான்கிரீட் போடுவதற்கு. இதற்க்கெல்லாம் ஜலாலியாவில் மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்கிருந்து கான்கிரீட்டை கலந்து எங்கள் வீடு கட்ட எடுத்து வர முடியாது. சந்தடி சாக்கில் எல்லா நடை முறைகளையும் குற்றம் கண்டு பிடிப்பது அவ்வளவு நல்லதல்ல. அல்லது கட்டுரையாளர் அதற்க்கு சரியான ஒரு தீர்வை சொல்லவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. பாராட்டவா? போராடவா?...
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 31 August 2013
IP: 59.*.*.* India | Comment Reference Number: 29896

நிதர்சனமான உண்மைகள். கட்டுரை ஆசிரியர் களம் இறங்கி போராட வர வேண்டும். அதற்கு இளைஞர் கூட்டம் துணை வர வேண்டும். மாற்றங்களை இளைஞர்களால்தான் ஏற்படுத்த முடியும்.

அசாத்தியமான தைரியம்.

இந்த கட்டுரை எழுதிய ஆசிரியருக்கு அல்ல, இந்த விஷயங்களை செய்கின்ற இளைஞர்களுக்கு, இவற்றை பார்த்தும் பார்க்காதது போல் இருக்கும் பெரியவர்களுக்கு, பெருந்தகைகளுக்கு, தனவந்தர்களுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு, யாருக்கு வந்த விருந்தோ நோயோ என்று வாளாவிருக்கும் ஒட்டுமொத்தமாக நம் எல்லோருக்கும்!

இதே இணையத்தளத்தில் சில நாட்களுக்குமுன் ஒரு செய்தி வந்தது, "கொஞ்சம் அஜஸ்ட் பண்ணக்கூடாதா?" என்ற தலைப்பு.

அதில் இந்த அடியேனின் ஒரு தாழ்மையான கருத்து பதிவு செய்யப்பட்டு இருந்தது.

RECEPTION IS AN UWARRANTED FUNCTION WHICH BRINGS UNNECESSARY TENSION என்று குறிப்பிட்டிருந்தேன். நபி வழி என்று அடித்துக் கொள்பவர்களும் ஆபாக்கள் நம் முன்னோர்கள் காட்டிய வழி என்று மார் தட்டிக் கொள்பவர்களும் இதற்கு எந்த முன்னுதாரணத்தையும் சொல்ல முடியவில்லை. எல்லோரும் இந்த வீண் கால விரயங்கள் பண விரயங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். யாரும் யாரிடமும் போய் இது சரி இல்லை, முறை இல்லை என்று நேரில் சொல்ல முடியவில்லை. தடுக்க முடியவில்லை. முஹல்லா பிரச்சினையாக. தெரு வழி பிரச்சினையாக, இன்னும் ஒரு படி மேலே சென்று அகீதா பிரச்சினையாக மாற்றப் பட்டு கலவர பூமியாக இந்த காயலர் பூமி மாறி விடக் கூடாதே. ஏற்கெனவே, 3 நாள் நோன்பு, 3 நாள் பெருநாள் என்றெல்லாம் நாம் பிரிந்து இருக்கிறோமே, இது வேறு பிரிவினையை ஏற்படுத்தி விடக்கூடாதே என்றுதான் நினைக்கிறோம்.

ஆனால் காலம் இப்போது கனிந்து வந்துள்ளது, எல்லோரும் சிந்திக்கிறார்கள், மாற்று வழிதான் என்ன.. எல்லா சங்கதினர்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து இதை பற்றிய ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்து, மக்கள் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பேச ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த கருத்தரங்கில் உலமாக்கள், அரபிக்கல்லூரி முதல்வர்கள், பள்ளிக்கூட முதல்வர்கள், கல்லூரி தாளாளர்கள் (ஆண்கள், பெண்கள்) எல்லோரும் தங்கள் கருத்துக்களை காய்தல் உவத்தல் இன்றி பதிவு செய்து, அதன் அடிப்படையில் ஊர் மொத்தமாக இந்த சாபக் கேடுகளுக்கு சாவு மணி அடிக்க வேண்டும்..

MANN YASHFAU SHAFAA ATHAN HASANATHAN YAKUN LAHOO NASEEBUM MINHAA

ஒரு நல்ல காரியத்துக்கு துணை சென்றால், பரிந்துரை செய்தால், அதற்காக முயற்சித்த எல்லோருக்கும் அதில் பங்கு உண்டு என்று அல்லாஹ் சொல்கிறான்.

வாருங்கள் போராடுவோம். இந்த சமூக சீர்கேட்டை சரி செய்வோம்.அல்லாஹ் துணை நிற்பான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. katturai arumai
posted by: seyed ibrahim K.M (chennai) on 31 August 2013
IP: 37.*.*.* | Comment Reference Number: 29897

Rafeeq brother katturai padithen arumaiyaga irunthadhu nadaimurai paduthu vaargala.....?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இந்த மாதிரியான திருமணங்களில் பங்கெடுக்காதீர்கள்!?
posted by: ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) on 31 August 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29898

சில தினங்களுக்கு முன் இந்த இனைய தளத்தில் வந்த ஒரு செய்திதான் என்பதால் அதற்க்கு நான் பதிவு செய்த கருத்தையே இங்கும் பதிவு செய்கிறேன்.

-----------------------------------------

12. இவைகள் நபி வழி திருமணம்?

அஸ்ஸலாமு அலைக்கும் வாசகர்களே,

பாதையில் அமர்வதால் அது பாத சாரிகளுக்கு இடைஞ்சல் ஏற்ப்படும் என்பதை கருத்தில் கொண்டு அப்படி அமராதீர்கள் என்றும், வழியில் இடைஞ்சல் உண்டாக்குவது தவறு போன்ற ஹதீஸ்கள் உள்ளதாக பாமரனான நான் அறிகிறேன். இது பற்றியெல்லாம் நம்ம மார்க்க அறிந்த ஆலீம்கள் அறியாமலா இருப்பார்கள்?

நாம் அதிகம் அதிகம் விரும்பும் அல்லாஹுவின் பரக்கத்து கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு திருமணங்கள் குறைந்த சிலவில் நடக்கணும் என்ற நபி மொழி இருப்பதாகவும் பாமரனான நான் அறிகிறேன். இது பற்றியெல்லாம் நம்ம மார்க்க அறிந்த ஆலீம்கள் அறியாமலா இருப்பார்கள்?

இது போன்ற திருமணங்களுக்காக வழியை அடைத்து மக்களை இடைஞ்சல் செய்யும் விஷயங்களை பற்றி நம் மக்களை நம் ஆலீம்கள் தான் விழிப்படைய செய்ய வேண்டும். ஆலீம்கள் நிறைந்த நம்ம ஊரில் இப்படியான செயல்கள் நடப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம் தான்.

வீடுகளில் இடமில்லை, வெட்டைகள் இல்லை, எல்லோருக்கும் கல்யாண மண்டபங்களில் நடத்த முடியுமா? இது போன்ற சாக்கு போக்குகளை இந்த இணையதளமும் சேர்ந்து சரி காண்பதும் வேதனைக்குரிய விஷயம்தான்.

நபி வழி படி திருமணங்கள் நடத்தினால் நிச்சயமாக இந்த மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்பதே என்னுடைய கருத்து.

செய்தியில் குறிப்பிட்ட படியுள்ள திருமணங்களுக்கு, அது நபி வழிக்கு மாற்றமாக இருப்பின், நம்மால் அதை தடுக்க இயலவில்லை என்றாலும் அதில் பங்கெடுக்காமல் இருப்பதே மேலானது என்பதே என்னுடைய கருத்து.

இப்படி நிறைய பேர்கள் பங்கெடுக்காமல் ஒதுங்கும்போது தான் இந்த மாதிரியான திருமணங்கள் குறையும். அதை விட்டு விட்டு திருமணத்திற்கும் பங்கெடுத்து, நல்லா சாப்பிட்டும் விட்டு, பிறகு இது மாதிரியான செய்திகள் என்பது வேடிக்கையாக தான் உள்ளது.

நபி வழி திருமணங்கள் அதிகமதிகம் நடை பெற பிரார்த்தித்த வண்ணம்.

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. நமக்கேன் வம்பு?
posted by: kavimagan m.s.abdul kader (doha..qatar.) on 31 August 2013
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 29899

பிறாண்டி விடுகிறது....
பாகுபாடின்றி
பூனைகள் அனைத்தும்.......
கீறல் பிறர்கென்றால்
கும்பலோடு கும்பலாய்.....


காந்துவது தனக்கென்றால்
குமுறலும், கதறலுமாய்... வழக்கமாய் மணியைக் கட்டும்
வாலிபப் பட்டாளம்
திகைத்துப் போய் நிற்பதில்
காரணம் இருக்கிறது....

இன்று வலிக்குது வலிக்குது
என்று அழுபவன்
குய்யோ முறையோ என்று
கூக்குரல் இடுவான்....

நல்லது செய்தால்
நாளும் திட்டுவான்....

தெருக்களை அடைக்காமல்
திருமணம் நடக்குமா என்று
பக்கம் பக்கமாய்
பாம்பெனக் கக்குவான்.....

நமக்கேன் வம்பு...?
கந்தசாமிகளுடன் ஐக்கியமாவதே
இப்போதைக்கு நல்லது.....

ஹிஜாஸ் மைந்தன்
நான் ரெடி....நீங்க ரெடியா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. சென்னையிலும் கூட சாலையை அடைப்பது உள்ளது.
posted by: V D SADAK THAMBY (Guangzhou,China) on 31 August 2013
IP: 113.*.*.* China | Comment Reference Number: 29901

நம் ஊர் நகராட்சிதான் என்றாலும் இன்னும் அது ஒரு பெரிய கிராமம்தான் . இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. சுற்றி வளைத்தால் எல்லோரும் சொந்தங்கள்தான்.எனவே கடுமையான கட்டுப்பாடு விதிக்க முடியாது.முடிந்தவரை திருமண மண்டபம் அல்லது பள்ளிவாசல்கள் மற்றும் பெண்கள் தைக்கா . முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் “நிக்காஹ்” மற்றும் “வலிமாவிற்கு” அடைத்துவிட்டு உடனே பாதையை திறந்துவிடுவதுதான்...

தெருவை அடைப்பது பல ஊர்களில் நடக்கிறது.பலகிராமங்களிலும் , நகராட்சிகளிலும் கூட இந்த வழக்கம் இன்னும் உள்ளது.நம் ஊரை மட்டுமே குறை சொல்லக்கூடாது. இன்னும் ஏன், சென்னை மாநாகராட்சியிலும் கூட சாலையை அடைப்பது அவ்வப்போது நடைபெறும் சம்பவம்தான். கல்யாணத்திற்க்காக அல்ல.பல்வேறு காரணங்களுக்காக .

12.12.2006.என் மருமகளுக்கு நிறைமாதம். சென்னை பெருநகரம் என்பதால், மருத்துவ வசதிகள் சிறப்பாக இருக்கும் என்பதாலும், வீட்டின் அருகே, தானா தெருவில் மருத்துவமனை என்பதாலும் , இங்கேயே பேர்காலம் பார்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டோம்.

எந்த நேரமும் டெலிவரி ஆகலாம்.மருத்துவ மனை அருகிலேயே வீடு இருப்பதால், வலி தெரிய ஆரம்பித்ததும் உடனே அட்மிட் செய்து விடுங்கள் என்று டாக்டர் அறிவுறுத்தி இருந்தார்.அன்று மாலை தானா தெரு முனையில் பிரம்மாண்டாமான பொதுக்கூட்டம் .தெருவெங்கும் ஒலிபெருக்கி ஓசை.பெருந்தலைவர்கள் பேச இருக்கின்றனர்..கூட்ட மேடை மருத்துவமனை அருகில்தான். வீடு இருப்பதோ மருத்துவ மனையில் இருந்து 200 மீட்டர் தூரம், தானா தெருவின் தென்பகுதி முனை. மாலை ஆறு மணி.பிரசவ வலி.போன் வந்தது. உடனே வீடு வந்தேன். கடுமையான இரத்தப்போக்கு.வீடெங்கும் ஒரே ரத்த மயம். நீர் குடம் உடைத்து இருக்கலாம் என்று பெண்கள் சொன்னார்கள்.

டாக்டருக்கு போன் பண்ணினோம். ஓர் அடிகூட நடக்க கூடாது, ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது, எப்படியாவது விரைவாக மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேருங்கள் என்றார். ஆம்புலன்ஸ் வர வழியில்லை. சேரில் உட்காரவைத்து வீட்டிலிருந்து இரண்டுமாடி கீழ் இறக்கி ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம் . செல்லும் வழியில்,தானா தெருவை 6 மணிக்கே அடைத்து விட்டனர்.குறுகிய தூரத்தை தெருத்தெருவாக சுற்றி மருத்துவமனை சென்றடைய 30 நிமிடம் ஆகிவிட்டது. சற்று நேரத்தில் சிசரியன் செய்து குழந்தை பிறந்தது.நல்ல வேளை, இன்னும் 20 நிமிடம் தாமதமாகி இருந்தால் தாய்/சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்தாகி இருக்கும் என்று டாக்டர் சொன்னார்.

இப்போது சொல்லுங்கள். எந்த ஊர்? எந்த இடம் ? என்ன சட்டம்? யார் காரணம்? யாரை குறை சொல்வது?

இதுவே நம் ஊராக இருந்திருந்தால் கல்யாண வீட்டில் இருந்து KMT மருத்துவமனை வரை குற்றச்சாட்டு மழை பொழிந்திருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. கல்யாண வீட்டோரே.
posted by: muhammad khalji (jaipur) on 01 September 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29910

தம்பி ரபீக் அஸ் ஸ லாமு அஅலைக்கும். உங்கள் கட்டுரையை பபடித்தேன் மிக வும் அவசியமான முத்தான செய்தி நமதூரில் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் விருந்து வைபவத்தில் சந்தோஷ ஆக. கலந்து கொள்கிறோமோ. அது மாதிரி வீதியை அடைப்பதில் அனைத்து இயக்கமும் ஜமாஅத்துகளும் மகிழ்ச்சியுடன் செயல் படுகின்றன.

மக்ககளுக்கு இடைஞ்சலை ஏற்ப படுத்துவது ஒரு முஸலிமுக்கு அழகல்ல என்று விளங்கியுமட. ் அ ைவரும் ஒற்றுமை யாக இநத விட யத்தில் இருக்கிறார்களே என்று நினைக்கும் போது மனம் வேதனை அடைகிறது வல்ல ரஹ்மான் நம்மனைவருக்கும் நேர் வழி யை காண்பித்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...ரோட்டு திருமணங்கள் -- சில ஆலோசனைகள் ---
posted by: vakil ahamed (chennai) on 01 September 2013
IP: 14.*.*.* India | Comment Reference Number: 29914

ரோட்டு பந்தல் திருமணங்கள்.....

சில ஆலோசனைகள்.......

1. வீதியில் திருமணங்களை நடத்துவதில்லை என மனவீட்டாரின் மனங்களில் முதலில் மாற்றங்கள் மலர வேண்டும்.

2. இறை இல்லத்தில் திருமணங்கள் நடத்தபடுவதுதான் சிறந்தது என்பதை உணர வேண்டும். ஆலிம்கள் இதனை எடுத்து சொல்லவேண்டும்.

3. தங்களது வாழ்விடத்துக்கு அருகில் நிகாஹ் மஜ்லிஸ் அல்லது திருமண மண்டபம் இல்லாத பட்சத்தில் அருகில் உள்ள பள்ளிவாசலில் நிகாஹ் நடத்த முடிவெடுக்க வேண்டும்.

4. கொள்கை பிரச்சினையால் அருகில் உள்ள பள்ளிவாசலில் இடம் சாத்தியப்படாவிட்டால், தங்கள் கொள்கைக்கு ஒத்து போகிற பள்ளிவாசலில் திருமணத்தை நடத்த முடிவெடுக்க வேண்டும்.

5. இருக்கிற திருமண மண்டபங்கள், மைதானங்கள், பள்ளிகூடங்கள், சங்கங்கள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத திறந்தவெளி இடங்களையும் வாய்ப்புகளின் அடிப்படையில் திருமணங்களுக்கு பயன்படுத்தலாம் .

6. பெண்கள் சார்ந்த திருமண வைபவங்களுக்கு, பெண்கள் தைக்காக்கள், மதரசாக்கள்,மொட்டைமாடிகள், தோட்டங்களை பயன்படுத்தலாம்.

7. காலம் காலமாக பழகிப்போன ரோட்டு பந்தல் திருமணங்கள் உடனடியாக முடிவுக்கு வராது. எனவே குறைந்த பட்சம் 6 மாதம் அல்லது அதிகபட்சம் 1 வருடம் வரை நகராட்சி நிர்வாகம் ரோட்டு பந்தலுக்குஅனுமதி நீடிப்பு செய்வதுதான் இயற்கை நீதிப்படி சரியானது. ஆனால் இதை கண்டிப்புடன் அறிவிப்பு செய்து,அந்த கால கெடுவுக்குள் முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.

8. வேறு வழியே இல்லை என்று திருமண வீட்டார் தகுந்த காரணம் காட்டுகிறது நகராட்சி நிர்வாகத்திற்கு சரியென்று பட்டால், திருமணத்திற்காக ஒரு நாள் மட்டும் ரோட்டில் பந்தலிட அனுமதிக்கலாம். மறுநாள் பந்தல் பிறிக்க படாத பட்சத்தில் அதிக பட்ச அபராதம் விதிப்பதோடு, பந்தலை நகராட்சி நிர்வாகம் பிரிதெடுப்பதோடு அதனை ஜப்தி செய்யவேண்டும்.

9. ரோடுகளில் திருமணம் நடைபெறும்போது, பிரித்து சேர்க்கும் முறையில் அமைந்த ரெடி மேட் மேடைகள் வைத்து கொள்வதற்கு மட்டும் அனுமதி வழங்கவேண்டும். சண்ட்ரிங் பலகை மேடைகளுக்கு அனுமதி வழங்ககூடாது. வைபவம் முடிந்ததும் மேடை உடனடியாக பிரித்து அகற்றப்படவேண்டும்.

10. ரோட்டில் பந்தல் அமைத்தால், பந்தலில் நடைபெறும் திருமண நிகழ்வுகள்,தொடர்புடைய வைபவங்களை ஒரே நாளில் முடித்திட மணவீட்டார் முன்கூட்டியே திட்டமிடவேண்டும்.

11. வைபவ நேரங்களை தவிர, மற்ற நேரங்களில் பந்தலை தேவை இல்லாமல் அடைத்து வைத்து போக்குவரத்தை தடை செய்யக்கூடாது.

12. பந்தல் பாதை குறிப்பிட்ட நேரத்திற்கு அடைக்கப்படும் பட்சத்தில், அருகில் உள்ள மாற்றுவழி பாதை குறித்து அறிவிப்பு தெரு முனையில் அல்லது சந்திப்பில் எழுதி வைக்கப்படவேண்டும்.

13. பந்தல் அமைத்தவரின் பெயர், முகவரி, செல்பேசி ஆகியவை குறித்த விபரம், அவரை தேவையானால் உடனே தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக பந்தலில் குறித்து வைக்க படவேண்டும். அவரை பற்றிய மேற்படி விபரம் நகராட்சி நிர்வாகத்துக்கும் தெரியபடுத்தபடவேண்டும்.

இதுபோன்ற மாற்று ஆலோசனைகளை நம் மக்கள் முன் எடுக்காத பட்சத்தில், யாராவது நீதி மன்றத்தை நாடினால் ரோட்டு பந்தல் எப்போது வேண்டுமானாலும் நிரந்தரமாக தடை செய்யப்படலாம்.

தோழமையுடன்...
வக்கீல்.ஹெச்.எம்.அஹ்மத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. தீர்வு என்ன...? கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது.
posted by: M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) on 01 September 2013
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29918

அன்புக்குரிய வாசகர்களே அஸ்ஸ்லாமு அலைக்கும். இக்கட்டுரை சம்பந்தமாக கருத்து பதிந்த, இன்னும் பதிந்து கொண்டிருக்கும் அவைவர்க்கும் எனது இதயம் கனிந்த நன்றி!

பொதுப்பாதை நியதி தொடர்பாக இத்தளத்தில் வெளிவந்த செய்தி மற்றும் அதை தொடர்ந்து வெளிவந்த எனது கட்டுரையில் நிகழ்வுகள் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி மட்டுமே அலசப்பட்டிருந்தது. தீர்வு என்ன என்பது பற்றி நான் இக்கட்டுரையில் கூறியிருந்தால் அது ஒரு தனி மனிதனின் கருத்தாகவே கணிக்கப்பட்டிருக்கும். ஆதலால் மதிப்புக்குரிய வாசக பெருமக்களின் மேலான கருத்துக்கள் மூலம் தீர்வு கிடைக்கட்டுமே என்று இருந்து விட்டேன்.

பலதரப்பட்ட கருத்துக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதில் பெரும்பாலும் பொதுப்பாதையை அடைப்பதற்கு எதிராகவே வந்துள்ளது. ஆகையால் இதற்காகன நல்ல தீர்வு அதுவும் நமதூருக்கு ஒத்துப்போகும் தீர்வுகளை தங்கள் கருத்துக்கள் மூலம் எதிர்பார்க்கின்றேன். எப்படியாவது இதற்கு ஓர் நல்ல தீர்வு வந்தால் நாமும் கலந்தாலோசித்து ஜமாஅத்துகள் மூலம் செயல்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதை அறிய தருகின்றேன். வஸ்ஸ்லாம்.

என்றும் அன்புடன்,
ஹிஜாஸ் மைந்தன்.
கட்டுரை ஆசிரியர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by: T.S.A. Aboothahir (chennai) on 01 September 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29923

பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட இது போன்ற கட்டுரைகள் இணையதளத்தில் இருந்தால் மட்டும் போதாது. எல்லோரையும் சென்றடையும் வகையில் பிரசுரங்களாக பிரசுரிக்கப் பட்டு மக்களிடையே வழங்கப் பட வேண்டும். இன்ஷா அல்லாஹ் நிச்சயம் தீர்வு வரும்.

மற்றபடி, மணமக்களின் வாழ்வு, துஆ, பதுஆ போன்ற வார்த்தைகள் தவிர்க்கப் பட வேண்டியவை.

பள்ளப்பட்டி போன்ற ஊர்களில் ஒரே மண்டபத்தில் கூட்டு திருமணங்கள் நடக்கின்றன. சொந்தங்களாகத்தான் இருக்க வேண்டுமென்ற எந்த நிபந்தனைகளும் இல்லை. கொஞ்சம் இதை பரிசீலிக்கலாமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. ஊரை குறை காண்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது
posted by: N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) on 01 September 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29926

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இந்த கட்டுரையை எழுதிய சகோதரர் ஹிஜாஸ் மைந்தன் அவர்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொள்கிறேன் – என் மனதில் உதித்ததை அவர் செயல்படுத்தியதற்காக.

------------------------------

கட்டுரையாளரின் ஆதங்கம் புரிகிறது – கருத்தாளர்களின் கருத்துக்களும் கணிக்கப்படுகிறது , விமர்சனர்களின் விமர்சனங்களும் விளங்குகிறது. பலரும் பலவிதமான பார்வையில் பார்க்கிறோம் – பார்வை பலவிதம் என்றாலும் நோக்கம் ஒன்றாக அமைந்து செயலில் இறங்கினால் அனைத்தும் நன்மையாகவே இருக்கும்.

---------------------------------

பிற ஊர்களில் நடைபெறும் திருமணத்தை நம் ஊரில் நடைபெறும் திருமணத்தோடு எந்த விதத்திலும் ஒப்பிட முடியாது.

திருமணத்திற்கு அழைப்பதிலிருந்து , திருமண சம்பந்தமான எல்லா வைபவங்களிலும் பலவிதமான மாற்றங்கள் இருக்கிறது.

இந்த மாதிரியான மாற்றங்கள் சில ஊர்களில் இருக்கிறது ஆனால் ஒட்டுமொத்தமான மாற்றங்கள் இல்லை என்றாலும் சில மாற்றங்கள் சில ஊர்களிலும் வேறு சில மாற்றங்கள் வேறு சில ஊர்களிலும் இருக்கத்தான் செய்கிறது – அதை இல்லை என்று யாராலும் மறுக்க இயலாது.

சில ஊர்கள் என்று குறிப்பிடுவது நம்மவர்கள் வாழும் தமிழ்நாடு அல்லது இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை மட்டும் குறிப்பிடுவதல்ல – பிற நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா , அரபுநாடுகள் மற்றும் ஆசிய , ஆஃபிரிக்கா நாடுகளையும் குறிக்கும். அந்தந்த நாடுகளில் உள்ள சிற்றூர்களில் இந்த மாற்றங்களை, மக்களுக்கு திருமணம் மற்றும் விழாக்களினால் ஏற்படும் இடையூறுகளை காணலாம் – தலை நகர்கள் மற்றும் பெரிய நகரங்களை வைத்து எதையும் கணக்கிடல் கூடாது.

அதனால் நம்ம ஊரில்தான், மக்களுக்கு இந்த மாதிரியான தொல்லைகளை கொடுக்கிறார்கள் என்று ஒட்டுமொத்தமாக நம்ம ஊரை குறை காண்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

-----------------------------------

இதற்கு நல்ல தீர்வு என்பது மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். அதற்கான முயற்சியில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்! நம் ஊர் சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்க வழக்கத்திற்கும் அதன் மரபுக்கும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே நேரத்தில் இன்றைய கால சூழலுக்கு ஏற்ப மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் திருமண நிகழ்வுகள் நடந்தேற நாம் அனைவரும் ஒத்துழைப்போம் அது இறைவனருளால் நிறைவேறும்.

இன்ஷா அல்லாஹ்! நேரம் அனுமதித்தால் இதையொட்டிய விளக்கமான கட்டுரை மக்களின் ஆலோசனைகளுக்காக எழுதப்படும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by: S.M.I.Zakariya (chennai) on 02 September 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29933

சில வீடுகளில் நடக்கும் திருமணங்களில் தெருவுக்கே பந்தல் போடுகிறார்கள். அவர்களுக்கு தாங்கள்தான் காயல்பட்டினத்தின் ஜாம்பவான்கள் என்ற மமதை.

reception யை வைக்கவேண்டும் என்றால் வைக்கட்டும். ஆனால் பந்தல் இல்லாமல் வைத்தால் வருகிறவர்கள் வந்து தாரளமாக chocalate வாங்கி விட்டு செல்லலாம். யாருக்கும் எந்த கஷ்டமும் இல்லை.

கல்யாணத்தையும் சாப்பாட்டையும் பள்ளிவாசல்கலியோ சங்கங்கழிலோ அல்லது மண்டபங்களிலோ வைத்தால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. நம்மூரில் மேலும் சில மண்டபங்கள் வந்தால் நன்றாக இருக்கும்.

பொதுவாக எளிமையாக பந்தல் போடாமல் பத்து சாப்பாடு இல்லாமல் நடத்தும் கல்யாணங்களால் யாருக்கும் கெடுதல் இல்லை. என்னா நாலுபேரு என்னை கல்யாணத்திற்கு கூப்பிடவில்லை என கம்ப்ளைன் பண்ணுவான் பண்ணுன பண்ணிட்டு போறான் என்று விட்டால் இந்த மாதிரி பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. விவேகானந்தர் சொன்ன கதை
posted by: A.R.Refaye (Abudhabi) on 02 September 2013
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29945

இந்த உலகில் யாரும் யாரையும் மாற்றமுடியாது. நாமே நம்மை மாற்றிக்கொண்டால்தான் உண்டு.

நம்மாற்றமே இன்னொருவரின் மாற்றத்துக்கு அடிப்படையாக இருக்கும் என்பதே உலகியல் உண்மை.

விவேகானந்தர் சொன்ன கதை..

எல்லாம் நிறைவேறும் எனக் கருதி ஒரு முனிவரை அணுகித் தொந்தரவு செய்ய அவரும்,''நான் உனக்கு அடிமையாய் ஒரு பூதம் தருகிறேன்,ஆனால் அதற்கு நீ தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.இல்லையெனில் அது உன்னையே கொன்று விடும்,''என்று கூறி தன ஆற்றலால் ஒரு பூதத்தை வரவழைத்து அவனிடம் கொடுத்தார்.

அவன் கட்டளைகளைச் சொல்லச் சொல்ல பூதம் உடனுக்குடன் செய்தது.ஒரு நிலையில் என்ன வேலை கொடுப்பது என்று தெரியாமல் நிற்க பூதம்அவனைக் கொல்ல வந்தது.அவன் மீண்டும் முனிவரை தஞ்சம் அடைந்தான்.முனிவர் சொன்னார்,''உன் பூதத்திடம் ஒரு நாயின் வாலை நிமிர்த்த சொல்லு,'' என்றார்.அவனும் அவ்வாறே பூதத்திடம் உத்தரவிட,பூதம் முயற்சி செய்து முடியாமல் போகவே களைத்துப்போய்,ஆளை விட்டால் போதும் என்று ஓடி விட்டது.இந்த உலகமும் நாயின் வால் போல் தான் உள்ளது.அதை நிமிர்த்த மனிதர்கள் காலம் காலமாய் முயன்றும் இன்னும் சரி செய்ய முடியவில்லை...

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved