Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:41:55 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 14
#KOTWEM14
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 5, 2012
காயல் பிறைக்கொடியான்!

இந்த பக்கம் 4084 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அல்லாஹ் உன் பேரைச் சொல்லி ஆரம்பிக்கும் போது எல்லாமே வெற்றிதானே தோல்வி என்பதேது? தித்திக்கும் தேன்குரலால் திசைதோறும் முழங்குகின்ற, தீன்முரசு உஸ்மான் காக்கா அவர்களது திகட்டாத பாடல் காற்றில் கலந்து நமது காதை நனைக்கின்றது. கண்கள் கண்ணீரில் கரைகின்றது.காலத்தால் காய்ந்துபோகாத இதுபோன்ற ஆயிரமாயிரம் சன்மார்க்கப்பாடல்களை வடித்தெடுத்த அற்புதமான கவிஞர்,காயல்பிறைக்கொடியான் மர்ஹூம் எஸ்.எம்.பி.மஹ்மூது ஹுசைன் தோழப்பா அவர்கள் இந்த மண்ணுலகைப் பிரிந்து ஆண்டுகள் ஐந்து உருண்டோடி விட்டாலும், தமிழ் இஸ்லாமிய இலக்கியத்திற்காக அவர்கள் ஆற்றிய அருந்தொண்டு, அன்னைத்தமிழ் அகிலத்தில் வாழும்வரை நிலைத்திருக்க,ஏக நாயனை இருகரமேந்தி துஆ செய்து துவங்குகின்றேன்.

அருநகிரி நாதரின் திருப்புகழுக்கு, மறுப்புகளும்,மறுபுகழுமாக,திருப்புகழ் இன்பத்தை வடிவமைத்த வரகவி காசிம் புலவர் நாயகத்தின் ஏழாவது வழித்தோன்றலான கவிஞர் அவர்கள், அன்பும், எளிமையும், நேர்மையும், இறைபக்தியும், தன்னகத்தே நிரம்பப்பெற்ற மிகப்பெரும் சமூக,மத நல்லிணக்கவாதி ஆவார்கள். தனது இளமைக்காலம் தொட்டு, தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தொண்டராக வாழ்ந்த இந்த மாமனிதரை, முஸ்லீம் லீக்கின் சாதாரண உறுப்பினர் முதல்,இயக்கத்தின் தேசியத் தலைவர்கள் வரை அறிந்து வைத்திருந்தார்கள். இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, தாய்ச்சபையால் மாத்திரமே இயலும் என்று உறுதிபட நம்பிய எஸ்.எம்.பி.அவர்கள் தான் சார்ந்த இயக்கப்பற்றின் காரணமாக ' காயல் பிறைக்கொடியான் ' என்ற அடைமொழியில் எழுதிய கவிதைகள், பாடல்கள்,எண்ணிலடங்காதவை.அதிலும் குறிப்பாக நமது நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து பிறைக்கொடியான் வடித்த பாடல்கள் அனைத்தும் பரவசமூட்டக் கூடியவை.

நினைவு யாதும் உங்கள் மீது யாரசூலல்லாஹ்
நீங்களின்றி நாங்களேது யாரசூலல்லாஹ்!
அணைந்திடாத உலகஜோதியாய்த் தோன்றி
அகிலமெங்கும் ஒளிதெளித்த யாஹபீபல்லாஹ்!

என்று எழுதிய கவிஞர் அவர்களின் இந்தப்பாடலை,தனது வாழ்நாள் முழுதும், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பாடி பாடி பரவசம் அடைந்த, நமது மண்ணின் மைந்தன், மர்ஹூம் பாடகர்.ஸாலிஹ் காக்கா அவர்கள் என்றும் நமது நினைவில் போற்றத்தக்கவர். சிறுபள்ளி கட்டிட நிதிக்காக,அன்னார் அவர்கள் இந்தப்பாடலை பாடாத மேடைகளே இல்லை என்று சொல்லலாம். மறைந்த மரியாதைக்குரிய தலைவர்கள் பனாத்வாலா, ஆ.கா.அ.அப்துல் சமது மற்றும் லீக்கின் நிகழ் தலைவர் பேராசிரியர்.காதர் முஹைதீன், அருமை சகோதரர் அபூபக்கர் ஆகியோரின் அன்பையும்,பாராட்டையும் பெற்ற நமது கவிஞரின் ஏராளமான கவிதைகள் அலங்கரித்த நாட்கள் ' மணிச்சுடர் ' பத்திரிகையின் பொற்காலமாகும்.

இறைநேசர்கள் மீது, இடையறா நேசம் கொண்ட இனிய நம் கவிஞர் ,குத்பு நாயகம் அவர்களின் புகழ்பாடும் இனியபல பாடல்களை தந்தவர் ஆவார்கள். " யாமுஹ்யத்தீனின் நாமம் யாம்புகழ்ந்தோம் பாரிலே "என்ற பாடல், தலைமுறைகளைத் தாண்டியும் நிலைத்து நிற்கின்றது. மகான்.தைக்கா சாஹிபு வலியுல்லாஹ் அவர்களின் மாண்பைக் குறித்த, நூற்றுக்கணக்கான பாடல்கள்,என்றென்றும் பிறைக்கொடியானின் புகழைப்பாடி நிற்கும்.இவற்றுள் ' எழில் முத்துப் போலே 'என்ற பாடல், கடல் கடந்து வாழ்கின்ற தமிழ் முஸ்லிம்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கின்றது.

மார்க்கப்பற்றையும்,தேசப்பற்றையும் தனது இருகண்களாகக் கருதிய கவிஞர் அவர்கள்,'இந்தியா என்னருமைத் தாய்நாடுதான், இதில் இல்லையொரு எள்ளளவும் முரண்பாடுதான் ' என்ற பாடல் உட்பட ஏராளமான தேசியப்பாடல்களை எழுதி இருக்கின்றார். அன்னாரது ஏராளமான பாடல்களை, நமது காயலின் இளம்சிறார்களைப் பாடவைத்து,ஒலிநாடாக்களாக வெளியிட்ட பெருமை 'வாய்ஸ் ஆஃப் இஸ்லாம் ' லரீஃப் அவர்களைச் சாரும். மிகுந்த நகைச்சுவை உணர்வுடைய தோழப்பா அவர்கள் எழுதிய ஹாஷ்யப் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. ' போவோமா குற்றாலம். பெறுவோமே சந்தோஷம்.

மே ஜூன் ஜூலை மாசம், மேலாம் சீசன் காலம் அனுபவிப்போமே சுகந்தானே,அறுந்திடுங் காசு பணம்தானே' என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் அருவியில் குளிப்பது போன்ற ஒரு குதூகலம் ஏற்படும். கவிஞரின் அனைத்து பாடல்களையும் திரட்டி, 'நந்தவனப் பூக்கள்' என்ற தலைப்பில், பேராசிரியர் அவர்களது அன்புக்கரங்களால் வெளியிடச் செய்த வரலாற்றுப் பெருமைக்கு சொந்தக்காரர், கவிஞரின் நண்பரும்,நலவிரும்பியும்,கவிதை மாணவருமான ஏ.ஆர்.தாஹா மற்றும் குழுவினரைச் சாரும்.

'பத்ரீன்களின் தானம் காண,பெரு மாண்புயர் தளங்கள் காண மதிநபியாம் மஹ்மூதவரின் திரு மணிரவ்ழா அதைக்காண அருள்வாயல்லாஹ், ஆவல் நிறைவேற்றல்லாஹ்' என்ற மர்ஹூம்.எஸ்.எம்.பி.அவர்களின் தீராத ஆவலை வல்ல ரஹ்மான் நிறைவேற்றாமலே,அவர்களைத் தன்னிடம் அழைத்துக் கொண்டான். அன்னாரது ஆவல் நிறைவேற நாளை வரும் மறுமையில், எங்கள் நாயகம் (ஸல்) அவர்களுடன், சுவனப்பதியில் ஒன்றாக இணைந்திருக்க, வல்ல நாயனை, நாம் அனைவரும் மன்றாடி வேண்டுவோமாக!

காயல் பிறைக்கொடியான் அவர்கள்,இந்த பூவுலகைப் பிரிந்து செல்கையில், நெஞ்சுருகி,நமது வலைதளத்தில் நான் எழுதிய ஒரு புதுக்கவிதையை,மீண்டும் உங்கள் பார்வைக்கு வைத்து விடைபெறுகின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).

மறக்க முடியுமா தோழப்பா!
உங்கள் கரம் பற்றி நடந்த
கவிதை நாட்களை!

சிதறாமல் சேகரித்து
வைத்து இருக்கின்றேன்
உங்கள் பேனா முட்கள் சிந்திய உதிரிப்ப+க்களை!

வெறு(ம்)மை கொண்டு
வடித்ததல்ல உங்கள் கவிதைகள்
அவை எம்மண்ணின் உயிர்மை
அத்துனையும் எங்கள் உரிமை பெருமை.

தாய்ச்சபையின் தலைமகனே!
பிறைக்கொடியே உங்கள் மணிமுடி
சமூக சாக்கடைகளை சுத்தப்படுத்திய
உங்கள் கரங்களில்
எப்போதும் சந்தன வாசம்

நெஞ்சு வலி வந்தபோதும்
நோகாமல் சிரித்த முகம்
தேகபிணி கண்ட போதும்
துவளாத உங்கள் மனம்

நான் அறிந்த கவிஞர்களுள்
மனம் விட்டு சிரிக்கத்தெரிந்தவர்
நீங்கள் மட்டும் தான்!

நீங்கள் இல்லாத வெற்றிடத்தை
உங்கள் கவிதைகளைத்தவிர
காற்றால் கூட நிரப்ப முடியாது.

உளமாற வேண்டுகிறேன் நல்லிறையை
உம் பிழை பொறுத்து சுவனத்தில் சேர்த்திடவே.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல் பிறைக்கொடியான்!...
posted by: Eassa Zakkariya (Jeddah) on 05 March 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20597

அன்பு கவிமகனின் பதிவு; என் மனதுக்குள் மழவிழுந்தது போல் பூரிகின்றேன் - செழுமையான பதிவு ; தொடர வாழ்த்துக்கள்- ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல் பிறைக்கொடியான்!...
posted by: Mauroof, S/o. Mackie Noohuthambi (Dubai) on 05 March 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20598

சிரித்த முகமும் இனிமையாக பழகும் தன்மையையும் தன்னகத்தே கொண்டிருந்த கவிஞர், காயல்பிறைக்கொடியான் மர்ஹூம் எஸ்.எம்.பி. மஹ்மூது ஹுசைன் அவர்களை அறிந்தவர்களில் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. அவர்களின் நற்குணங்களை இணையத்தின் வாயிலாக எம்போன்றோருக்கு நினைவுபடுத்திய மரியாதைக்குரிய மர்ஹூம் சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மகனார் சகோ. கவிமகன் அப்துல் காதர் அவர்களுக்கு நன்றி. எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம்களின் பிழைகளை மன்னித்து அவர்களின் மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து கொடுப்பதுடன் மறுமையில் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல் பிறைக்கொடியான்!...
posted by: A.R.Refaye (Abudhabi) on 05 March 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20599

அன்பர் அப்துல்காதர் அவர்களே காயல் பிறைக்கொடியான் நம்மை விட்டு பிரிந்தாலும் நம் நினைவுகளில் என்றும் பிரியாமல் வாழ்கிறார் அவர்களுக்காக 25-02-2008 நான் வார்த்த வரிகளை மீண்டும் நினைவு படுத்துகிறேன் கண்டிப்பாக கவிதை இல்லை மர்ஹூம் எனக்கு கற்றுத் தந்த தமிழில் இருந்து இரங்கல் பா!!!!!!!!!!!!!!

" கவி ஞானி காயல் பிறைக்கொடியான் புகழ் நிலைக்கும் "

கவிக் கொண்டல் என்றும்
பிறைக் கொடியான் என்றும்
விருது பெற்று அல்லாஹ்வின்
ஏற்ற மிகு நல்லடியாராய் வாழ்ந்தவர்!!!

வரகவி காஸிம் புலவரின்
வழித்தோன்றலாய் வளமோடு பல
பாக்களையும், எழுpல் முத்துக்களையும் தந்த
மஹ்மூது ஹ}ஸைன் என்ற மூத்த கவிஞர்; அவா.;!!!

சாகித்திய அகாதமி
விருது பெறா சாதனையாளர்
சாமானியர்களுக்கம் எளிதாக
புரியும்படி எழுதியவர் !!!

கதை, கட்டுரை கடிதம் வாழ்த்து
என பல் திறமை வித்தகர்
கடுமையான உழைப்பால்
கவிச்சிகரம் சென்றவர் !!!

ஏழைகளின் இன்னலை
கவிதைகளில் வடித்தவர்
ஏழைகளோடு ஏழையாய்
கடைசி வரை வாழ்ந்தவர் !!!

எளிமையின் சின்னமாய்
எனறென்றும் இருந்தவர்
ஏற்ற தாழ்வுகளை உயர்ந்த
கவிதையால் சாடியவர். !!!

தாய்ச்சiபாயாம் லீக்கிற்கு
தாரக மந்திரமாய் இருந்தவர்
பச்கை; கொடிக்கு
பசுமை முலாம் பூசியவர்

இச்சை இளைஞர்களை
கச்சிதமாய் நெறி படுத்தியவர். !!!
சிற்றிதழ்களின் இராஜாவாக
சிம்மாசனம் இட்டவர் பல முறை
அழைப்பு வந்தும்
'அம்மாசனம்" போகாதவர் !!!

கருப்பு , வெள்ளை சிகப்பு வண்ணங்கள்
ஆல் வட்டம் அடித்தபோது
பச்சை பிறைக் கொடியை பற்றி பிடித்த
பாசமிகும் மறவர் அவர் !!!

வாழ்த்துரை கேட்டால் வாகாய் தருபவர்
வாழும் தலைமுறை மூன்றை
வளமாய் பெற்று சீரிய எழுத்தால்
காயலர் தம் இதயத்தில் நிலைத்தவர் !!!

கர்வம் என்றால்
என்னவென்று அறியாதவர்
கனிவான பேச்சால்
குழந்தைகளை வென்றவர். !!!

மயிலிறகு வருடுவது போல்
விமர்சனம் செய்தவர்
மனது புண்படும்படி என்றும்
விமர்சனம் அறியாதவர். !!!

வாழ்ந் நாட்களில் ஆசை அறவே அற்ற
நவீன கவிஞர் அவர்
ஆழ்ந்த அன்பில், பண்பில்
காயலர் இதயத்தை கவர்ந்தவர். !!!

பணம்,பதவி, புகழ் விரும்பாத
கவி ஞானியே
பாடகர் பலர் உயர்ந்திட காரணமாய்
இருந்த ஏணியே. !!!

உலகம் உள்ள வரை
கவிதை இருக்கும்
கவிதை உள்ள வரை நம்
காயல் பிறைக் கொடியான்
SMB-ன் பகழ் நிலைக்கும்

A.R.Refaye-Jeddah(25-02.2008)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காயல் பிறைக்கொடியான்!...
posted by: MAHMOOD HASAN(mammaash) (QATAR) on 05 March 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20600

As a grand son i know his humanbeing...no words tell that...i didnt see he hurt anybody in his life.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:காயல் பிறைக்கொடியான்!...
posted by: AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) on 05 March 2012
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20601

விழி நீர் மல்க கரங்களை ஏந்தி வேண்டுகின்றோமே இறையோன்... வளமார் உந்தன் கருணையினாலே வெண்டளை ஏற்பாய் எகோனே...

http://www.youtube.com/watch?v=yiqPQtuxmO8


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காயல் பிறைக்கொடியான்!...
posted by: mackie noohuthambi (colombo) on 05 March 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20602

மிக அற்துபுதமான எண்ண அலைகள், மலரும் நினைவுகள்." நான் இறந்த பிறகு எனக்கு ஒரு தாஜ் மகால் கட்ட வேண்டாம் நான் இருக்கும்போது வாழ்வதற்கு ஒரு குடிசை கட்டி தாருங்கள் என்று ஒரு புதுக்கவிதை சொல்கிறது. காயல் பிறைககொடியானுக்கு பாராட்டு விழா காலம் கடந்து நடந்தபோது நான் இதை அந்த கூட்டத்தில் தெரிவித்தேன்.

நாம் ஒருவர் மறைந்த பிறகுதான் அவருக்கு பாரத ரத்தினா என்ற நாட்டின் மிகப்பெரிய விருதையே கொடுக்கிறோம்.கவிஞர் அவர்களின் பெயரால் ஒரு கல்யாண மண்டபம் நமதூரில் கட்டப்பட வேண்டும் அதற்கு முஸ்லிம் லீகே கால் கோள் விழா எடுக்க வேண்டும். முஸ்லிம்களின் திருமணங்களும் அங்கே நடக்கவேண்டும். கவியரங்கம், பட்டிமன்றங்கள், ஊர் நன்மைக்கான கூட்டங்கள் அங்கே நடைபெற வேண்டும், ஊருக்குள் இது அமைய வேண்டும் எனபது எனது அவா.

கவிமகன் அவர்களே, உள்ளாட்சி தேர்தலிலே களம் இறங்கி ஊரை அதிரவைத்த சொல்லேர் உழவரே, முயற்சி செய்யுங்கள், வாழும்" yessembee " என்று நான் செல்லமாக அழைக்கும் கவிஞர் தாஹா அவர்களை துணைக்கு அழைத்துக்கொள்ளுங்கள். கனவல்ல இது, நிஜமாகும் நீங்கள் நினைத்தால், இன்ஷா அல்லாஹ். இப்படி ஒரு நினைவரங்கம் அமைவதுமட்டுமே அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறாக இருக்கும். மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மனதை காயப்படுத்திய 'காயல் பிறைக்கொடியானின்' பாராட்டு விழா
posted by: சாளை S.I.ஜியாவுத்தீன் (?????????) on 05 March 2012
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20603

இந்த கட்டுரையை படித்ததும், மனத்தால் குழந்தையான காயல் பிறைக்கொடியான் அவர்களை நான் சிறுவனாக இருந்த காலம் முதல், பாயிஸீன் சங்க படிகளில் அவர்களுடன் கேலியும், கிண்டலும், நகைச்சுவையும் கலந்து, வயது வித்தியாசம் இல்லாமல் பழகிய அந்த நாட்களை நினைவு படுத்தியது.

வல்ல ரஹ்மான அவர்களின் பாவத்தை மன்னித்து, சுவன சுகத்தை அனுபவிக்கும் நற்பேற்றினை அருளி இருப்பான்.

இவர்கள் உடல் நலமில்லாமல் இருந்த கடைசி காலத்தில் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவும், பொற்கிழி வழங்கும் விழாவும் மிகவும் சிறப்பாக, என்னுடைய ஆசான் பேராசிரியர் கே.எம். காதர் முஹையதீன் அவர்களின் தலைமையில், நம்முடைய ஜலாலியாஹ் மண்டபத்தில், ஒரு கட்சியின் மாநாடு போல, மிக சிறப்பாக நடந்தது. நானும் கலந்து கொண்டேன். இந்த விழாவை ஆனா முதல் அக்கன்னா வரை சகோ.கவிஞர் A.R.தாஹா அவர்கள் அருமையாக செய்து இருந்தார்கள்.

அனைவர்களும் காயல் பிறைக்கொடியான் அவர்களை பாராட்டு பாராட்டு என்று பாராட்டி, பொன் ஆடைகளால் கவுரவித்து சீராட்டினார்கள். ஒவ்வொரு முறையும் எழுந்து எழுந்து அவர்களுக்கு மீண்டும் நெஞ்சு வலி வந்து, சிறிது நேரம் ஒரு பரபரப்பு பத்திக்கொண்டது.

கொஞ்சம் அவர்கள் ரெஸ்ட் எடுக்க வைக்கப்பட்டு, பொற்கிழி கொடுத்து ஜாம் ஜாம் என்று நடந்து முடிந்து.

அனைவர்களும் தலைவர்கள், பெரியவர்கள் மற்றும் அனைவர்களுக்கும் சலாம் கொடுத்து அரங்கம் காலியாக ஆகிவிட்டது.

நம் சகோதரர்கள் தலைவர் KMK அவர்களை வழி நடத்துவதிலும், அவர்களை விருந்துக்கு அழைத்து செல்லுவதிலும் பிஸியாக காரிலும், பைக்கிலும் சென்று விட்டார்கள்.

கடைசியில் திரும்பிப் பார்த்தால் விழாவின் கதாநாயகன் காயல் பிறைக்கொடியான் அவர்களை இரண்டு கைகளிலும் கனமான இரண்டு பைகள், கக்கத்தில் இரண்டும் பிளாஸ்டிக் பொதிகள் ஆகியவற்றை சுமந்து கொண்டு தேமே என்று அப்பாவியாக நின்று கொண்டு இருந்தார்கள்.

எனக்கு ஒரே அதிர்ச்சி.. நானும் அன்று பைக் கொண்டு வரவில்லை.

என்ன மாமா இப்படி நிற்கின்றீர்கள் என்றதும்,

நகைச்சுவையுடன் "மருமவனே. படம் முடிந்து விட்டது, அனைவர்களும் சென்று விட்டார்கள் - ஒரு ஆட்டோ சொல்லேன்.. வாடகைக்கு தான் " ( கையிலே பொற்கிழி இருப்பாதால் சொந்தமாக வாங்குவதற்கு என்று நினைத்து விடக்கூடாது அல்லவா...)

பின்பு ஆட்டோ பிடித்து, கூடவே ஒருவருடன் அனுப்பி வைத்தோம்.. நேராக வீட்டிற்கு சென்றார்களா அல்லது இரண்டு இட்லி சாப்பிட ஹோட்டலுக்கு சென்றார்களா.. தெரியவில்லை.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:காயல் பிறைக்கொடியான்!...
posted by: சாளை பஷீர் (??????,??????) on 05 March 2012
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20604

படைப்பாளியின் வாழ்நாளை விட அவனது படைப்புக்கள் நெடிய ஆயுளைக்கொண்டவை என்பதற்கு இந்த நினைவேந்தல் கட்டுரையே சாட்சி. கவிமகனுக்கு நன்றிகள்.

தன் வாழ்வின் இறுதி மூச்சு வரை தன் கவியுள்ளத்தால் இறைப்பணி செய்த படைப்பாளி மஹ்மூது ஹுஸைன் அவர்கள்.

கவிஞர் மஹ்மூது ஹுஸைன் அவர்கள் காலத்தில் கரைந்து போவதற்கு சில மாதங்களுக்கு முன் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க நேர்ந்தது.

மாமா! தாங்கள் எழுதும் கவிதைகளுக்கும் பாடல் வரிகளுக்கும் முன்னோடியாக எதைக்கருதுகின்றீர்கள் ?எனக்கேட்டபோது அன்னார் சில வரிகளைப்பாடிக்காட்டினார்.

பிடி சோற்றில் படி நெய்யை பிழிந்து காட்டி
பிரியாணி என்ற பெயர் அதற்கு சூட்டி
முடியாத புளிச்ச ஏப்ப குழுவைக்கூட்டி
முதுகை வரை புடைக்கின்ற உணவையூட்டி
.............ஏழைகளைப்புறக்கணிக்கும் இவர்களெங்கே?

அடி வயிற்றில் கல் மூன்றைக்கட்டிக்கொண்டு
அகழ்ப்போரில் ஈடுபட்ட எம் அண்ணலெங்கே?

கேட்ட எனக்கு இடையில் உள்ள ஒரு வரி மட்டும் மறந்து விட்டது.அதை அறிந்தவர்கள் யாராவது தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

முஸ்லிம் சமூகத்தின் மேல்தட்டினர் கடைப்பிடிக்கும் ஆடம்பரத்தினையும்,வீண் விரயத்தினையும் பற்றி கேட்பவர் மனத்தில் காலத்திற்கும் நிலைக்கும் குற்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய வலிமை பெற்றவை இந்த அடிகள்.

அண்ணலாரின் வாழ்வு மீதான கவிஞரின் செயலூக்க அன்பை பறை சாற்றும் அந்த வழிகாட்டு வரிகள் அவரின் படைப்புக்கள் நெடுக கசிந்துக்கொண்டே இருக்கின்றதை் யாரும் அவதானிக்க முடியும்..

அதே போல் நினைவு யாவும் உங்கள் மீது யா ரஸூலுல்லாஹ்! என்ற பாடலில் வரும் ஒரு வரி ....”இரண்டு வாழ்வின் பொருளைச்சொன்ன இனிய தீபமே....” என்ற வரிகளை எப்போது கேட்டாலும் நெஞ்சு விம்மி கண்களில் நீர் நிறையும்.

இவ்வுலகையும் மறுவுலகையும் தன் வாழ்நாளிலேயே வெற்றிகரமாக இணைத்துக்காட்டிய அந்த திரு நபியின் தூய ரிஸாலத்தின் அரிய வெற்றியை ஒற்றை வரியில் அழகுபட வேறு யாராவது சொல்லியிருக்கின்றார்களா ? தெரியவில்லை.

போலி ஆன்மீக கூழாங்கற்கள் மினுக்கு காட்டிய நேரத்தில் இறுதிதூதர் முஹம்மத் (ஸல்) என்ற மெய்ஞான மாணிக்கத்தின் ஒளிக்கற்றையை நுட்பமாக வேறுபடுத்திக்காட்டும் வரிகள் அவை.

பைத்துல் முகத்தஸ் தொடங்கி பாபர் மஸ்ஜித் வரை முஸ்லிம் உம்மத்தின் ஏக்கத்தையும்,தலைமுறைதாண்டியும் மீட்பு போராட்டம் தொடரும் என்ற வைராக்கியத்தையும் உணர்வு குன்றாமல் சொல்லிய பரந்துபட்ட முஸ்லிம் உம்மத்தின் பேராளர் அவர்.

திருமண வாழ்த்துப்பா,ஹஜ் வரவேற்பு கீதம் என்ற அளவில்தானே அன்னாரின் எழுத்துக்களைப்பயன் படுத்தினோம்.

மறைந்த பிறைக்கொடியான் அவர்கள் சரியாக மீட்டப்படாத வீணை.அது வீணையின் குற்றமில்லை.மீட்டியவர்களின் ஞானக்குறைவு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:காயல் பிறைக்கொடியான்!...
posted by: M.N.L.முஹம்மது ரஃபீக், (????????????.) on 05 March 2012
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20605

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? கவியின் மகனே! உன் எழுத்தாற்றலால் என் இதயத்தை குளிர்வித்தாய்! நீ நடை பயிலும் முன்பே, உன் தந்தையின் கரம் பற்றித் தமிழ் நடை பழகப் பெற்றாய்! அழகானச் சொல் நயம், ஆழமான பதிவுகள்,அற்புதமான மய்யக் கரு, இவன் தந்தை என்னோற்றான் எனச் சொல்லவைத்து உன் தந்தை பெயர் காத்த கவிமகனே! வாழிய உன் வலக் கரம், வரையட்டும் பல சரித்திரம்! வாழ்த்த நான் உள்ள போது வாழட்டும் உன் ஆக்கங்கள்...

-ஹிஜாஸ் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:காயல் பிறைக்கொடியான்!...
posted by: AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) on 06 March 2012
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20608

பேரப்பிள்ளைகள் நாங்கள் "பூவப்பா" என்று செல்லமாக அழைக்கும் எங்கள் அன்பு அப்பா மர்ஹூம் காயல் பிறைகொடியான் SMB மஹ்மூது ஹுசைன் அவர்களை நினைவு கூர்ந்த கவிமகன் அவர்களுக்கு நன்றி.

SMB அப்பா அவர்களின் குடும்பத்தார்.
KTM தெரு, அலியார் தெரு, தைக்கா தெரு மற்றும் LF Road.
---------------------------------------
அபு சாலிகு உன்னாலே சமையல் ஆகுது தன்னாலே வயிறு நோகுது பின்னாலே, என்னான்னு சொல்லவும் முடியலே....

மீனுவாங்க சொன்னா மீனாவிடம் போயி நிக்கிறே முன்னாலே... அவள் பேச்சில் மயங்கி நீ நொந்த மீனைஎல்லாம் வாங்குறே தன்னாலே... அம்மி aaஅறைக்கிற வேலைக்காரியிடம் கொடுத்தான் பின்னாலே அவள் கழுவிதந்து அத சமச்ச பின்னே அத சாப்பிட நல்லாலே...

பத்து பதினைந்து காய் கறிகளை வாங்குறே தன்னாலே.. அது பத்து பதினைந்து ரூபாய் கமிஷனா மாறுது தன்னாலே... கோழி வாங்க சொன்னா சேவல் வாங்கி வந்து நிக்கிறே முன்னாலே..

அத குக்கருல போட்டு சமச்ச பின்ன அத சாப்பிட நல்லாலே கோழியில் ஊழல் பண்ணி சமைகிரியே nநல்லாலே.... இப்படியே போயிடுச்சுன்னா என்னாகும் எங்க நிலை.....

----------------------------------------------------

பாடல் வரிகள் முழுவதும் நினைவில் இல்லை........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:காயல் பிறைக்கொடியான்!...
posted by: KAYVEE. MAC. MOHUDOOM (Dubai) on 06 March 2012
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20615

ஒரு நல்ல பண்புள்ள மனிதனை நம் சமுதாயம் இழந்து இருக்கிறது. அந்த காலி இடத்தை நிரப்ப யாரும் இன்று வரை பிறக்வில்லை. என் அருமை அப்துல் காதர் மச்சான் எழுதிய கவிதை மிகவும் அருமையானது. அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை கொடுபானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:காயல் பிறைக்கொடியான்!...
posted by: K.V.A.T.HABIB MOHAMED (QATAR) on 11 March 2012
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 20622

அன்பு மச்சான் அப்துல் காதிர் அவர்கள், மறந்த மர்ஹூம் S.M.B மாமாவைப் பற்றி இரத்தின சுருக்கமாக நினைவு கூர்ந்தது அருமை ! கவி மகனின் பேனா துளிகள் ஒவ்வொன்றும் கவி அரசரின் (மஹ்மூது ஹுசைன் அவர்களின்) கடந்த சுவடுகள் ! காலத்தால் அழியாத பொக்கிஷத்தின் அருமை உணர்த்தும் ஆனந்த வரிகள்!

கவி அரசரின் மதிப்பை மக்கள் மன்றத்தில் மறக்காமல் அவ்வப்போது பறை சாற்றியவர்கள் முஸ்லிம் லீகர்களே .... இன்னும் அவர்களின் புகழ் மங்காது நிலைத்து நிற்கும் வண்ணம் மரியாதைக்குரிய மக்கி நூஹு தம்பி அவர்கள் சொல்லியது போல ஒரு மணி மகுடம் எழுப்பி ....ஏழை பாலைகளுக்கு ஏற்ற வகையில் பயன் பாட்டிற்கு வருமேயானால் அதுவே அந்த மகா கவி மகனாருக்கு நாம் செய்யும் மகத்தான நன்றிக்கடன் போலாகும் . யார் மனதில் வல்ல அல்லாஹ் இந்த உதிப்பை கொடுத்து செயல் பட வைக்க போகிறானோ...அவர்கள் நிச்சயமாக இரு உலகிலும் பாக்கிய சாளிகலாகவே ஆவார்கள் !

இந்த நேரத்தில் கவி அரசரின் நினைவு கூற வழி வகுத்து தந்த இந்த இணைய தளத்தினருக்கும் , கவி மகன் காதர் அவர்களுக்கும் மற்றும் படித்து கருத்து கூறிய அனைவருக்கும் அன்பான நன்றிகள் உரித்தாகட்டும் !

குறிப்பு: கவி அரசரின் கவிதை தொகுப்பு அச்சுப்பணி சிறப்புற செய்து தருமாறு எங்கள் K.V.A.T. அச்சகத்தை, விழாக் குழுவினர் பணித்த போது நடை பெற்ற சிறிய நிகழ்ச்சி எங்கள் அறக்கட்டளையில் வைத்து தான் நடைபெற்றது. அதில் கவி அரசர் அவர்களின் பொற்கரங்களால் என்னிடம் வழங்கப்பட்டதை இப்போது நான் நினைக்கும் போது கண்கள் பணித்தது .

அன்புடன் ,
K.V.A.T.ஹபீப்,
கத்தார் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. நெஞ்சார்ந்த நன்றி!..
posted by: kavimagan (dubai) on 11 March 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20626

"காயல் பிறைக்கொடியான்" அவர்களைக் குறித்த இந்தக் கட்டுரைக்கு வாழ்த்துரைத்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களையும்,நன்றியையும் முதற்கண் உரித்தாக்குகிறேன். உங்கள் அனைவரது வாழ்த்துக்களும், பாராட்டும்,துஆவும் இந்தப் பதிவிற்கானது இல்லை என்பதையும், இதற்கான பெருமை அனைத்தும் கட்டுரையின் நாயகரையே சேரும் என்பதனை உணர்ந்தே இருக்கிறேன்.

மாமனிதர் எஸ்.எம்.பி.தோழப்பா அவர்களின் புகழ் முழுக்க பதிவு செய்ய வேண்டுமானால்,பலநூறு பக்கங்கள் கூட போதாது.சுருக்கம் கருதி நான் வடித்த இந்தக்கட்டுரையில் கவிஞர் அவர்களின் பல்வேறு நண்பர்கள்,கவிதைகள் மற்றும் சம்பவங்கள் இடம்பெற வில்லையே என்ற ஆதங்கம் எனக்கும் இருக்கிறது.குறிப்பாக " திங்கள் வழங்கும் சுடர் " என்ற பாடலை, தனது செழுமையான குரலில்,இகமெங்கும் இசைக்கச் செய்த சங்கநாதச் செம்மல் மர்ஹூம்.பாடகர் ஷேக் முஹம்மத் காக்கா,கவிஞரின் மீது பேரன்புகொண்ட, அவரது உற்ற நண்பர்களுள் ஒருவரான ஹாஜி.கே.வி.ஏ.டி. ஹபீப் முஹம்மத் அவர்களுடனான நட்பு, எனது தந்தை மர்ஹூம்.எஸ்.கே.எம்.சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களுடன் இணைபிரியாது இருந்த இலக்கிய நட்பு,நான் அகரம் பழகிய நாட்களிலேயே எனக்கு " கவிமகன்" என்று பெயரைச் சூட்டி நான் பரவசம் அடைந்த அந்தத் தருணம்,இன்னும் எத்தனை, எத்தனையோ நான் அறிந்த,கேள்விப்பட்ட சம்பவங்கள் என்று ஏராளம் இருக்கின்றன.இன்ஷாஅல்லாஹ்.வாய்ப்பு வரும்போது அவர்களது முழு வரலாற்றையும் பதிவு செய்யும் தீராத ஆவல் எனக்கு உண்டு.

அன்பிற்கினிய மக்கி நூஹுதம்பி காக்கா போன்றவர்களின் அபிலாஷை காலப்போக்கில், இறையருளால் கைகூடும் என்று நம்புகிறேன்.சகோதரர்.ஜியா அவர்கள் குறிப்பிட்டதைப் போல,இப்படிப்பட்ட மகத்தான மனிதருக்குச் செழுத்த வேண்டிய கௌரவத்தினின்றும்,காயல் மாநகரம் தனது கடமையைச் செய்யத் தவறி விட்டதே என்ற குற்ற உணர்வு எனக்குள்ளும் உண்டு.

நடந்ததை நினைத்து வருந்தாமல்,அன்னாரது உயர்ந்த எண்ணங்களைச் செயல்படுத்தி,அவர்களுக்காக துஆசெய்வது நமது கடமை என்று எண்ணுகிறேன்.



என்றும் அன்புடன்,

கவிமகன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. தினத்தந்தி அதிபர் ஆதித்தனாரின் அன்பு மகன் ஐயா சிவந்தி ஆத்தினார் அவர்கள் அந்த பாடலை திரும்ப ஒரு முறை பாடும் பாடி கேட்டு பாடப்பட்டது காயல் பிறைக்கொடியான் அவர்களுக்கு கிடைத்த மிக பெரிய பெருமை... !
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ((?????)) on 15 March 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20634

கவி மகனின் கட்டுரை படித்தேன் மிக நேர்த்தியாக உள்ளதை உள்ளபடி கட்டுரை வடித்து இருக்கிறார்.. கவி மகனுக்கு எனது வாழ்த்துக்கள்..

இந்தியா எம் இனிய தாய் நாடு தான்.. என்ற தலைப்பில் தொடங்கும் ஒரு தேச பற்று பாடல் ஓன்று சில வருடங்களுக்கு முன் கேட்டு கேட்டேன் அது காயல் பிறைக்கொடியான் அவர்கள் எழுதியதாக அறிந்தேன்...

நமதூர் அருகில் உள்ள தமிழர் தந்தை ஆத்தினார் கல்லூரி ஆண்டு விழாவில் மேடையில் நமதூர் கல்லூரி மாணவர்கள் அந்த பாடலை பாடி முடித்த மறுகணம் அந்த மேடையில் இருந்த தினத்தந்தி அதிபர் ஆதித்தனாரின் அன்பு மகன் ஐயா சிவந்தி ஆத்தினார் அவர்கள் அந்த பாடலை திரும்ப ஒரு முறை பாடும் பாடி கேட்டு பாடப்பட்டது காயல் பிறைக்கொடியான் அவர்களுக்கு கிடைத்த மிக பெரிய பெருமை... !

அதை என்னால் மறக்க முடியாது...

அந்த பாடலில் உறங்கி கிடக்கும் அணைத்து இந்தியர்களின் தேச பற்று உணர்வுகளை சிலிர்த்து தட்டி எழுப்ப கூடிய அர்த்த மிகுந்த இந்தியா எம் இனிய தாய் நாடு தான்.. என்ற தலைப்பில் தொடங்கும் ஒரு தேச பற்று பாடல் அது..

கவிமகன் அவர்கள் மிக அருமையாக காயல் பிறைக்கொடியான் அவர்களை பற்றி கட்டுரை எழுதி உள்ளார்கள்... பாராட்டுக்கள்..

காயல் பிறைக்கொடியான் மர்ஹூம் அவர்களின் தர்ஜாவை உயர்த்தி மேலான சுவனத்தை அளிப்பானாக ஆமின்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved