Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:45:40 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 167
#KOTWEM167
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 11, 2015
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை!

இந்த பக்கம் 4155 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள குக்கிராமத்தில் இயற்கை வேளாண்மை கூட்டுறவு பண்ணை ஒன்றிற்கு ஓய்விற்காக நண்பருடன் அண்மையில் செல்ல நேரிட்டது.

கிட்டதட்ட இருபது ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மலையடிவார பண்ணையில் நிறைந்திருந்த ஏகாந்தத்தின் பின்னணி இசையாக பறவைகளின் இடைவிடாத இசைக் கச்சேரியானது பகல் முழுக்க நடந்து கொண்டே இருந்தது.

அந்தப் பண்ணையைக் கவனித்துக் கொள்ள வயதான இணையர் இருந்தனர்.

அவர்களின் உடமைகளாக அங்கு இருந்தவை ஒரு சில கலங்கள், ஒரு கட்டில், போர்வை, இரண்டு தலையணை, ஒரு ஜெர்ஸி கறவை பசு, இரண்டு ஆடுகள் மட்டுமே.





அங்கு வேயப்பட்டிருந்த சிறிய கொட்டாயில்தான் அவர்களுடன் நாங்களும் தங்கினோம்.



எங்களுக்கு மதிய உணவாக நொய்யரிசிச் சோறும், வறுத்த நிலக்கடலை பிரட்டலுடன் கூடிய முருங்கைக் கீரையும், சாம்பாரும் பரிமாறினர். நிலக்கடலையும் முருங்கைக் கீரையும் அங்கேயே விளைந்தவை.



பகல் முழுக்க நிலத்தில் ஆடு-மாடுகளுடன் உழைப்பு. மதியம் பன்னிரண்டரை மணிக்கு மதிய உணவு. அவ்வப்போது சிறு ஓய்வு. மாலை ஐந்தரை மணிவாக்கில் இரவு உணவை சமைத்து சாப்பிட்டு விடுகின்றனர். இரவு உணவில் மிஞ்சுவது மறு நாளைய காலை உணவாக தேறுகின்றது.

முதியவரின் வயது எழுபதைத் தாண்டியிருக்கும். அண்ணாதுரை இறப்பு, எம்.ஜி.ஆரின் இறுதிச்சடங்கு என அவர் சென்னைக்கு தன் வாழ்நாளில் இரண்டு முறைதான் வந்து போயிருக்கின்றார்.

அந்தி சரிந்தவுடன் படுக்கைக்கு செல்பவர்கள் மறுநாள் கதிரவனின் முதல் கீற்று தோன்றும் வைகறையின் தொடக்கக் கணங்களிலேயே கண் விழித்து விடுகின்றனர்

அவர்கள் தங்கும் கொட்டாயில் மின்வசதி இல்லை. அந்தப் பண்ணைக்கு மிக அருகிலேயே உலோக நட்டுவாக்காலிகள் போன்ற கோபுரங்களின் தலை வழியே விரல் ரேகைகள் போல தொய்ந்து நீளும் மின் கம்பிகள் பல மெகாவாட் மின்சக்தியை சுமந்து செல்கின்றன.

கதிரவனின், பறவைகளின் நேர அட்டவணைப்படி கழியும் - ஆரவாரம் இல்லாத - எல்லாம் நிறைந்த வாழ்க்கை. சொற்ப உடைமைகளுடன் எளிய உழைப்பில் தன் பிள்ளைகளையும் கரையேற்றி விட்டு தங்களின் மேலதிகமான வாழ்வை இங்கு கழிக்கின்றனர் இந்த இணையர்.

அந்தப் பண்ணையின் நுழைவு வழி அருகே வட்ட வடிவ அரங்கு ஒன்று இருந்தது. கிட்டதட்ட 2000 சதுர அடியில் நிற்கும் இந்த அரங்கை களிமண் சுவர், பனை மரத்தடி, துண்டுக்கட்டைகள், தென்னங்கிடுகு போன்றவற்றைக் கொண்டு மரபுசார் முறையில் கட்டியிருந்தனர். நாங்கள் பார்ப்பதற்காக அரங்கின் கதவை திறக்குமாறு அந்த முதியவரின் மனைவியிடம் கேட்டேன்.

“அந்த பங்க்ளா சாவியா கேக்குறீங்க?“ என எங்களிடம் திரும்பக் கேட்டார் அந்த பெண்மணி .



குக்கிராமவாசியின் பார்வையில் அந்த மண் கிடுகு அரங்கானது பங்களாவாக தெரிகின்றது. உண்மையான பங்களாவைக் கண்டால் அந்த முதிய பெண் என்ன பெயர் சொல்வாரோ?

--------------------------------------------------------------------------

புள்ளிகளின் இடம் பெயர்ச்சிகளில் பணம் நடனமாடும் மும்பையின் தலால் தெரு. பங்குச் சந்தையின் அதி வேகச் சுழல் மையம். அங்கு ஒரு உணவகம் உள்ளது . அதன் வாடிக்கையாளர்கள் பங்குச் சந்தை வணிகர்கள். அவர்களின் இடைவிடாத பணவழிபாடு தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கழிப்பறையில் கூட சந்தை நிலவரங்களை காட்டும் தொலைக்காட்சித் திரை பொருத்தப்பட்டிருக்கின்றது.

````````````````````````````````````````````````````````````````````

>> மின்னொளி / நுகர்வு பண்பாட்டின் வலைவீச்சிலிருந்து முழுவதுமாக விலக்கப்பட்ட நிலத்துளி .

>> மனிதனின் எல்லாத் தருணங்களிலும் வெளிச்சம் பாய்ச்சி> அந்தரங்க வேளை என்ற ஒன்றையே இல்லாமலாக்கும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய பணம் இறைக்கும் பரபரப்பு.

எதிரும் புதிருமாக நிறுத்தப்பட்டிருக்கும் இந்த இரண்டு வாழ்க்கை மாதிரிகளின் கூறுகள் நம்முள் வாழ்க்கை பற்றிய மதிப்பீட்டின் எல்லைக்கற்கள், அளவு கோல்கள் பற்றிய பல கேள்விகளை ஓயாமல் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன.

இந்திய நகரங்களில் உள்ள சில லட்சம் பேரின் நவீன வசதிகளுடன் கூடிய பரபரப்பு வாழ்க்கை முறையுடன் மோத இயலாமல், கோடிக்கணக்கான எளிய இந்தியர்களின் வாழ்க்கை முறையானது வீதியில் கசக்கி எறியப்பட்ட காகிதம் போல புறக்கணிக்கப்படுகின்றது.

நாட்டின் சிறிய எண்ணிக்கையிலான மக்களின் சொகுசு வாழ்க்கை வகை மாதிரியைக் கொண்டு, ஒட்டுமொத்த நாட்டின் வாழ்க்கை, வறுமை, வசதி, வளர்ச்சி, முன்னேற்றம் பற்றி வரையறுக்க முயலும்போதுதான் சிக்கலே தொடங்குகின்றது.

வருடாவருடம் இந்தியப் பயணம் செல்லும் கார்ப்பரேட் / தேசீயத்தின் சாய்மானம் கொண்ட புனைவு எழுத்தாளர் ஒருவர் இமயமலையின் இண்டு இடுக்குகளில் வாழும் தொல்குடிகளின் வாழ்க்கை முறையைப் பார்த்துவிட்டு, தன் மன ஓட்டத்தை பின்வருமாறு பதிவு செய்கின்றார்:-

“இவர்களின் வாழ்வு மிகவும் மந்த கதியில் ஊர்வதோடு வறுமையால் நிரம்பியதாகவும் உள்ளது. நாம் அனுபவிக்கும் .வளர்ச்சிக்குள் இவர்கள் கொண்டுவரப்பட வேண்டும். சுற்றுலா தொழில் இங்கு ஊக்குவிக்கப்படவேண்டும்“.

வாழ்க்கையின் ஓட்டத்திற்கும், தங்களின் தனித்தன்மைக்கும் இடையே ஒரு அற்புதமான ஒத்திசைவை நெய்து எடுத்து, அதன் பாதையில் தவழும் அந்த மலை நில ஆதிகுடிகள் இந்த எழுத்தாளரிடம் தங்களை மீட்க மனு கொடுத்தது போல பாவித்துக் கொண்டு அறிவுரை கூறுகின்றார்.

இதுபோன்ற படைப்பாளிகளின் குரல்கள் புத்தன் காலனியாதிக்க யானையின் வரவை அறிவிக்கும் மணியோசை போன்றவை.

காலனியாதிக்கத்தின் புதிய பெயர் கார்ப்பரேட் வணிகம் . பெயர்களை பலவாறாக மாற்றிக்கொண்டாலும், அடிப்படை என்னவோ வரைமுறையற்ற ஆதாயத்தை குவிப்பது ஒன்றுதான் நோக்கம். இவர்களின் இந்தக் கொள்ளை ஆதாய வெறியானது மிகை உற்பத்தியையும், மிகை உற்பத்தியானது இயற்கை வளங்களை வரைமுறையின்றி சுரண்டுவதிலும் கொண்டு வந்து சேர்க்கின்றது.

அத்துடன் அதன் தொடர் விளைவாக கொள்ளை ஆதாய வெறியானது தங்களது உற்பத்தியை நுகரும் மனதையும், இயற்கை வளங்களின் சுரண்டலை ஏற்றுக்கொள்ளும் மனிதர்களையும் உண்டு பண்ணுகின்றது.

தங்களின் இந்த விபரீத விளையாட்டிற்குத் தேவையான மனங்களையும், மனிதர்களையும் உண்டுபண்ணுவதற்கு முன்பு, வாழ்க்கை பற்றிய நெடும் பண்பாட்டு மரபின் சட்டகங்களை ஆதாய வெறியானது தகர்த்து எறியும். அதன் பின்னர் தன் வசதிக்கும் நோக்கத்திற்கும் ஏற்ப புதிய வரைவிலக்கணங்களை பல கவர்ச்சிகரமான விளம்பர பரப்புரை உத்திகளின் வழியாக நிறுவிக்கொள்ளும்.

தங்களின் உண்மையான அடையாளத்தையும், நோக்கத்தையும் இதுபோன்ற உள்நோக்கம் கொண்ட சக்திகள் முதலில் நேரடியாக இனங்காட்டுவதேயில்லை. “வறுமை ஒழிப்பு“ என்ற முழக்கத்தை முன்னிருத்திக்கொண்டு, வாழ்க்கை - வறுமை பற்றிய தங்கள் நோக்கங்களுக்கு இசைவான புதிய வரையறையை முதலில் முன் வைப்பர். பின்னர் அதையே உலகம் ஏற்கும்படியும் செய்வர்.

புகழ்பெற்ற “பதேர் பாஞ்சாலி“ யின் ஆசிரியரான பிபூதி பூஷண் பந்த்யோபாத்யாய் உருவாக்கிய மற்றொரு பங்காலி மொழி புதினம் “ஆரண்யக“. நகரமயமாக்கத்தின் விளைவாக தெற்கு பிஹாரில் பாரிய அளவில் நடந்த காடழிப்பை மையமாகக் கொண்ட கதை அது.

“ஆரண்யக” புதினத்தில் உலாவும் கதை - மனிதர்கள் தனிமை விரும்பி, கடும் வறுமையிலும் மாணவர்களுக்கு உணவிட்டு கல்வி புகட்டுபவர், காடு வளர்ப்பை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர், உயிர் உடலில் தங்குவதற்கு தேவையான அளவு மட்டும் உழைத்து உண்டு குடும்பத்தைக் காப்பாற்றி மீதி நேரம் ஏகாந்தத்திலும் தியானத்திலும் வாசிப்பிலும் கழிப்பவர், சிறிது நேரம் குடும்பத் தலைவனாகவும் மீதி நேரம் துறவியாகவும் வாழ்பவர் என காட்சியளிப்பதைக் காண முடியும்.

சோற்றுக்கு வழியின்றி கடும் பசியினால் வேப்பம்பழத்தைத் தின்ற தலித் சிறுவர்களுடன் சேர்ந்து தானும் அதை உண்ட மகாகவி பாரதியால்தான் அந்தக் கொடிய வறுமையின் மீது ஏறி நின்று கொண்டு

“எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா! இறைவா! இறைவா!

சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்!

அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்!“


என்று பாட முடிந்தது.

மிக எளிதாகவும், தங்கள் மனதிற்குப் பிடித்த வழியிலும் வாழ்வதை கதை மனிதர்கள் வழியாக உருவகிப்பது என்பது படைப்பாளிகளின் அதி தீவிர மன நிலை தேர்வு என ஒதுக்கி விட முடியாது. படைப்பாளிகளின் உருவாக்க தளம் ஆதி மன நிலையிலிருந்துதான் பீறிடுகின்றது.

இன்றும் பஸ்தரிலும், வடகிழக்கிலும் வாழும் இந்தியத் தொல்குடிகளில் பலர் தங்களுக்கென நிலம் வைப்பதையும் தேவைக்கு மேலாக எதையும் சேகரிப்பதையும் பெரும் பாவமாக கருதுவதுண்டு. அதன் நீட்சியைத்தான் வேலூர் மாவட்டத்தின் தனித்த மண் பரப்பிலும் காண முடிகின்றது.

படைப்பு மனமும் அடி நிலை மனிதனும் ஒன்றிக்கலக்கும் புள்ளியானது பெருவாரியான மானுடச்சரடின் பிரிக்க முடியாத கண்ணிகள் என்றே முடிவிற்கு வர முடிகின்றது.

ஒரு சமூகமானது, “நாங்கள் மிகக் குறைந்த தேவைகளுடன் வாழ்ந்து கொள்கின்றோம்” என மரபணு தொடர்ச்சியாகவே முடிவெடுப்பது என்பது அந்த இனக்குழுவின் பண்பாட்டுச் செழுமையையும், அக வலிமையையும் எளிதில் நிறையும் அவர்களின் மனப்பேற்றையுமே சுட்டிக் காட்டுகின்றது.

இந்த நிறைந்த மன நிலையானது இறை நம்பிக்கை, தொன்மங்கள், பிரபஞ்சத்தின் ஒரு துளியாக கருதும் உணர்வு நிலை போன்றவற்றின் வழியாக அந்தந்த சமூகங்களுக்கு மரபுத்தொடராக கையளிக்கப்படுகின்றது . இதன் விளைவாக பொறாமை ,ஆதாயக் கொலைகள், விரக்தியின் இறுதி புகலிடமான தற்கொலை போன்ற பிறழ்வு நிலைகளுக்கு இடமில்லாமல் போகின்றது.

தமது சந்தை நோக்கத்திற்காக இன்னின்ன வசதிகள் இருந்தால்தான் வாழ்க்கை முழுமை பெறும் என நவீன வறுமை ஒழிப்புச் சட்டகத்தை குடிமக்களின் மனதில் ஆணியடித்து நிலை நிறுத்துகின்றனர் சந்தையாளர்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கு தடையின்றி கனிம வளங்களைச் சுரண்டுவதற்காக பழங்குடியினரும் விவசாயிகளும், கடலோடிகளும் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துரத்தியடிக்கப்படுகின்றனர்.

அவர்களின் மீது வலுவாகத் திணிக்கப்பட்ட கதியற்ற வாழ்க்கையையே புதிய வறுமைக்கான விளக்க சித்திரமாக மாற்றி, அதன் மூலம் இந்தியப் பொதுமகனின் மனதை தங்களுக்குத் தோதுவாக வசப்படுத்துகின்றனர் கார்ப்பரேட்டுகளின் ஊடக லாபியினர்.

பழங்குடியினரின் தன்னிறைவான முந்தைய வாழ்க்கைக்கு ஆதரவாகவும், தற்போது அவர்கள் மீது திணிக்கப்பட்ட கையறு வறுமை நிலைக்கு எதிராகவும் குரல் குரல் கொடுப்பவர்கள் மீது “மாவோயிஸ ஆதரவளர்கள்“, “நாட்டு வளர்ச்சிக்கு எதிரானவர்கள்“, “அன்னிய கைக்கூலிகள்“ என்ற முத்திரைகளை கார்ப்பரேட் ஆதரவு லாபியினர் ஓயாது பதிக்கின்றனர்.

இதன் விளைவாக சராசரி மனிதனின் மரபார்ந்த - தன்னிறைவான வாழ்வியல் பண்பாடு அவனிடமிருந்து துடைத்து நீக்கப்படுகின்றது. அந்த மரபுப் பண்பாட்டின் ஆக்க விளைவான மன வலிமையும், நிறைவும் சன்னம் சன்னமாக முடமாக்கப்பட்டு அவன் புதிய வறுமையின் எளிய இரையாக ஆக்கப்படுகின்றான்.

இந்த புது வறுமையை போக்க கூடுதலான பொருள் உற்பத்திதான் தீர்வு என தன்னல நோக்க சக்திகள் மீண்டும் மீண்டும் சொல்லி தங்களின் இலக்கை எளிதாக நிலை நிறுத்தி விடுகின்றனர்.

புதிய பொருளாதார பாதையின் நல்ல விளைவாக இருபதாண்டுகளுக்கு முன்னர் இருந்த வேலையில்லாத திண்டாட்டத்தை இன்று பார்க்க முடியவில்லை என்பது உண்மையே.

ஆனால் பெருவாரியான மக்களிடையே வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தியதுடன், பணப்புழக்கத்தையும் தாரளமாக ஏற்படுத்தி, மங்கள இசையாக ஒலிக்கும் இந்த வளர்ச்சியானது பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிஸா காடுகளில் கொடூரமான சுருதி பேதமாக மாறி ஒலிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

நேற்று வரை கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஸைபர் கூலிகள் இன்று ஈவிரக்கமில்லாமல் ஆள் குறைப்பின் பேரில் தூக்கி எறியப்படுகின்றனர்.

புதிய வளர்ச்சியின் நேற்றைய பலியாடுகள் விளிம்பு நிலை மனிதர்கள் என்றால் இன்றைய பலியாடுகள் நடுத்தரவர்க்க மக்களாக இருக்கின்றனர்.

சந்தை இயக்குனர்கள் ,கார்ப்பரேட்டுகள் ஆகியோரின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை வசதி, வறுமை பற்றிய ஒற்றை அளவுகோலைத் தூக்கி அந்தப் பக்கம் வைத்து விட்டு, நம் நாட்டின் அனைத்து குடிமக்களையும் தழுவிய நலன் சார்ந்த புதிய அளவு கோல் சமைக்கப்பட வேண்டும்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Mauroof (Dubai) on 14 April 2015
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40125

சிறந்ததோர் கட்டுரையை தந்திட்ட ஆசிரியர், இயற்கை ஆர்வலர் திரு. சாளை பஷீர் ஆரிஃப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

//ஒரு சமூகமானது, “நாங்கள் மிகக் குறைந்த தேவைகளுடன் வாழ்ந்து கொள்கின்றோம்” என மரபணு தொடர்ச்சியாகவே முடிவெடுப்பது என்பது அந்த இனக்குழுவின் பண்பாட்டுச் செழுமையையும், அக வலிமையையும் எளிதில் நிறையும் அவர்களின் மனப்பேற்றையுமே சுட்டிக் காட்டுகின்றது.

இந்த நிறைந்த மன நிலையானது இறை நம்பிக்கை, தொன்மங்கள், பிரபஞ்சத்தின் ஒரு துளியாக கருதும் உணர்வு நிலை போன்றவற்றின் வழியாக அந்தந்த சமூகங்களுக்கு மரபுத்தொடராக கையளிக்கப்படுகின்றது . இதன் விளைவாக பொறாமை ,ஆதாயக் கொலைகள், விரக்தியின் இறுதி புகலிடமான தற்கொலை போன்ற பிறழ்வு நிலைகளுக்கு இடமில்லாமல் போகின்றது//.

மேற்சொல்லப்பட்டுள்ள “நாங்கள் மிகக் குறைந்த தேவைகளுடன் வாழ்ந்து கொள்கின்றோம்” என்ற கோட்பாட்டிலிருந்து நானும் அடங்கிய வெகு ஜன சமூகம் வெகு தூரம் சென்று விட்டது வேதனைக்குரியது. ஒரு போலி வாழ்க்கை வாழ்கிறோம் என்றால் அது மிகையில்லை.

தொடர்ந்து நல்ல பல கட்டுரைகளைத் தாருங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: K.S.Seyed Mohamed Buhary (abu dhabi) on 21 April 2015
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40233

பழந்தமிழ் சில பதங்கள் புரிய கடினமாக இருந்தது ஆசிரியர் யாவரையும் தமிழில் தன்னைப்போல் எண்ணிக்கொண்டார்கள் போலும்

இல்லை என்றால் கருத்து மழை பெய்திருக்கும் இவ்வருமையான கட்டுரைக்கு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நமது பங்கு என்ன?
posted by: M.S. அப்துல் ஹமீது (Dubai) on 29 April 2015
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40266

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிராமங்களுக்கு என் நண்பர் குழாம் ஒன்று சென்றிருந்தது. அந்தப் பகுதி மக்களின் வாழ்வு நிலை குறித்து அறிவதற்கான பயணம் இது.

ஒரு கிராமத்திற்குள் நுழையும்பொழுது மாலைப் பொழுது மங்கிய நேரம். என் நண்பர்கள் வருகை அறிந்து அந்தக் கிராம மக்கள் ஒரு சிறிய எளிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கிராமம் முழுவதும் திரளாக வந்து காத்திருந்தனர்.

மின்சாரம் என்ற வாசனையே அறியாத கிராமம். பொழுது சரிந்ததால் வெளிச்சத்திற்கு மண்ணெண்ணை விளக்குகள் எரிந்தன மேடையில். எளிய நிகழ்ச்சி முடிந்து மக்களுடன் அளவளாவும்பொழுது, “உங்கள் கிராமத்திற்கு மின்சாரமே இல்லையா?” என்று என் நண்பர்கள் அந்த மக்களிடம் கேட்டனர்.

“ஓ இருக்கிறதே...” என்று ஒரு திசையில் கை நீட்டி காண்பித்தார்களாம். அங்கே தூரத்தில் அந்தக் கிராமத்து எல்லையில் மின் கம்பிகள் கம்பீரமாக வீற்றிருந்தன.

//அவர்கள் தங்கும் கொட்டாயில் மின்வசதி இல்லை. அந்தப் பண்ணைக்கு மிக அருகிலேயே உலோக நட்டுவாக்காலிகள் போன்ற கோபுரங்களின் தலை வழியே விரல் ரேகைகள் போல தொய்ந்து நீளும் மின் கம்பிகள் பல மெகாவாட் மின்சக்தியை சுமந்து செல்கின்றன.//

கட்டுரையாளர் சாளை பஷீரின் அவருக்கே உரிய உதாரணத்தைச் சொல்லும் பாங்குடன் கூடிய இந்த அழகிய வரிகளைப் படித்தவுடன் எனக்கு மேற்சொன்ன நிகழ்வுதான் நினைவுக்கு வந்தது.

இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் அடியோடு இல்லாத அவலங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. என் நண்பர் குழுவை ஏதோ சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்று எண்ணி அந்தக் கிராம மக்கள் தங்களுக்குள்ள குறைகளைத் தீர்த்துத் தருமாறு விண்ணப்பிக்கத் தொடங்கி சூழ்ந்து கொண்டார்களாம்.

ஒரு பக்கம் கார்ப்பரேட் காரியவாதிகளின் தன்னல ஆதாய சுரண்டல் என்றால் மறுபக்கம் இந்த மக்கள் சொந்த மண்ணிலேயே அன்னியர்கள் என்றும், மதத்தை மனதில் வைத்து புறக்கணிக்கப்படும் கொடுமையான சூழல்.

இயற்கையைக் காப்பாற்ற வேண்டியதுதான். இயற்கையோடு இயைந்து வாழ வேண்டியதுதான். ஆனால் அவர்களின் வாழ்வையே குறி வைக்கும் நச்சுப் பாம்புகளை என்ன செய்வது? அவர்களது வாழ்வாதாரங்களைப் பாதுக்காக்க நாம் என்ன செய்கின்றோம்? அவர்களது இயற்கை செழுமை மாற்றப்படாமல் அவர்களது வாழ்வு நிலையை மேலோங்கச் செய்வதற்கு நமது பங்களிப்பு என்ன?

என் எழுத்தாள நண்பர் சாளை பஷீரின் அருமையான படைப்புகளுள் ஒன்று இது. ஆழமான கட்டுரை. இந்தக் கட்டுரையைப் படித்து ஆதங்கப்படுவதோடு நின்று விடாமல் நமது பங்களிப்பைக் குறித்து சிந்திக்க வேண்டும். நமது மார்க்கம் அதற்கு முழுமையான வழிகாட்டுதலையும் தந்துள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved