Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:47:11 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 198
#KOTWEM198
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 8, 2016
ஒரு தாய்மையின் பார்வையில்....

இந்த பக்கம் 3259 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சுவாதி... தமிழ்நாட்டுப் பெற்றோர் ஒவ்வொருவரின் மனதிலும் சுவாதீனமாய் ஒட்டிக்கொண்டவர்...

குறிப்பாக பெண்களைப் பெற்ற தாய்மார்களின் தலைமகளாகத் தத்தெடுக்கப்பட்டவர்....

நுங்கம்பாக்கம், சூளைமேடு வாசிகளின் உள்ளத்திலிருந்து ஒரு நிமிடமும் அகல மறுத்தவர்.... "இறைவா...! இனியொரு கொடுமை இது போன்று வேறெந்தப் பெண்ணுக்கும் நிகழக்கூடாது..." என்று மதங்கள் கடந்த மனிதநேயப் பிரார்த்தனைக்குக் காரணமானவர்...

எதிர்வீட்டிலிருந்தும், பக்கத்து வீட்டிலிருந்தும் அலுவலகம் செல்லும் ஆயிரக்கணக்கான சென்னை முகங்களின் ஒரு அங்கம்... கல..கல பேச்சும், நுனி நாக்கு ஆங்கிலமும், பளிச் முகமும், நேர்த்தியான உடையமைப்புமாய் அப்பெண்களின் உலகமே வேறு.... அவர்களில் ஒருத்தியான சுவாதியின் கொடூர மரணம் மனதில் இனம்புரியாததொரு பயத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, பெண் குழந்தைகளை பெற்றவர்களின் மீது பல்வேறு கேள்விகளையும் வீசிச் சென்றிருக்கிறது...

குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மகள்களை அனுப்பி விட்டு, அவர்கள் திரும்பிவரும் வரையிலும் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்கும் தாய்மார்கள் தூக்கம் தொலைத்து பல நாட்களாகி விட்டன. "ஆணுக்கிணையாய் பெண்களுமிங்கே அறிவிலோங்கியில் இவ்வையகம் தழைக்குமாம்" என்று பாரதி கொளுத்திப் போட்டத் திரி... பல்வேறு திசைகளில் வெடித்ததன் விளைவுதான்... பெண்களின் உயர் கல்வியும், வேலை வாய்ப்புகளும்...

கால மாற்றத்தின் அழுத்தம் நம் பெண் பிள்ளைகளின் மேற்படிப்பிற்கு நம்மை நிர்பந்திக்கிறது... இரு பாலார் பயிலும் கோ-எஜுகேஷன் கல்லூரிகளிலும், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்காக பெண் பிள்ளைகளை அனுப்பும் நிலை இன்று நம்மிடம் பரவலாகி விட்டது. நமது பிள்ளைகள் கடிவாளமிடப்பட்ட குதிரைகளாக ஒரே நேர்க் கோட்டில் பயணித்தாலும், குறுக்கே விழுந்து குதறக் காத்திருக்கும் வல்லூறுகளாய் ஒரு கூட்டம் நமக்கு அருகிலேயே -இவந்தான் என நமக்கு அடையாளம் தெரியாமலேயே- வலை விரித்துக் காத்திருக்கும் என்பதற்கு இச்சம்பவம் வெளிச்சமாக்கப் பட்ட ஒரு சாட்சி... எந்த புற்றில் எந்தப் பாம்பு என்று யாருக்கும் தெரியாத நிலையில், ஏதோ எல்.கே.ஜி, யூ.கே.ஜி, வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்பி விட்டு இருப்பதைப் போல, பருவ வயதுப் பெண் பிள்ளைகளை கல்லூரிக்கும், வேலைக்கும் அனுப்பி விட்டு சர்வ சாதாரணமாக இனிமேலும் இருந்து விட முடியாது என்பதைத்தான் இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

காலையில் மகளை ஸ்டேஷனில் விட்டுச் சென்ற அப்பா நினைத்திருப்பாரா...? அவர் அறியாத ஓர் இருண்ட உலகத்தில் மகள் இதுவரை பரிதவித்து வந்திருக்கிறாள் என்பதை...? வேலைக்குச் சென்று விட்டு மகள் மாலை பத்திரமாக வீடு திரும்புவாள் என்ற நம்பிக்கையோடுதானே நம் எல்லோரையும் போல அவரும் அன்று நம்பிக்கையோடு வீடு சென்றிருப்பார்??

ஆனால் தந்தையின் கரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சுதந்திரமாக பறக்க அனுமதிக்கப் பட்ட அந்தக் கிளி.... தனது எல்லையைத் தாண்டும் முன்னரே குரல்வளை நெரித்துக் குதறப்பட்டதே...! அந்தச் சுதந்திரம் நம் பெண்களுக்கு பாதுகாப்பானதுதானா...? என்பதுதான் இன்று நம் முன்னுள்ள மிகப் பெரிய கேள்வி...

படிக்க ஆசைப்படுகிறார்கள் என்பதற்காக படிக்க வைக்கிறோம். பெண்கள் மட்டுமே பயிலும் கல்லூரியானாலும் சரி... இருபாலார் இணைந்துப் பயிலும் கல்லூரியானாலும் சரி... வீட்டை விட்டு வெளியில் சென்றதுமே அவர்களுக்குள் ஒரு சிறு இறக்கை முளைத்துதான் விடுகிறது...

கூட்டிற்குள் அவர்கள் திரும்பி வரும் வரை முழுக்க, முழுக்க இறைவனின் பாதுகாப்பில்தான் அவர்கள் என்பதால்... உரிமையோடு அவர்களை இறைவனிடம் ஒப்படைக்க தினம், தினம் நாம் மறந்து விட வேண்டாம்.

பதின் பருவம் என்பது ஒரு தனி உலகம்.... அவர்களும் அவர்களது நண்பர்களுமான அவ்வுலகில் பெற்றோர்களான நமக்கோ கொஞ்சமே கொஞ்சம்தான் அனுமதி... குறிப்பாக தந்தைகளுக்கு no entry...! அம்மாக்களின் தயவு அவர்களுக்கு அவ்வப்போது அவசியம் என்பதால்தான் அந்த அனுமதியும் கூட... அவர்களின் நட்...பூக்கள் மணம் வீசும் மலர்கள்தானா? இல்லை காகிதப் பூக்களா....? என்பதை ஓரக்கண்ணால் உற்று நோக்க வேண்டியது நம் கடமை... அதனை நாம் இதுவரை சரியாக செய்து வந்திருக்கிறோமா... என்பது இன்னொரு கேள்வி.

ஆண் நண்பர்கள் இருப்பது தவறில்லை... சகஜமான ஒன்றுதான் என்பது போன்றதொரு பொய்ப் பிம்பம் இன்று திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் நிலையில்... அந்த நட்புறவிலே மூன்றாவது நபராக ஷைத்தானும் இருக்கிறான் என்ற பேருண்மையை அழுத்தமாக பிள்ளைகளிடம் பதிவு செய்திருக்கிறோமா....!

ப்ளஸ்டூ வரை அவர்களை நமது கண்ட்ரோலில் வைத்து விட்டு ப்ள்ஸ்டூ ரிசல்ட் வந்தவுடனேயே அடித்துப் பிடித்து ஆண்ட்ராய்டு போன்களை வாங்கிப் பிள்ளைகளின் கையில் கொடுப்பதே இன்று அப்பாக்களின் முதல் கடமை என்றாகி விட்டது.... அதோடு சரி... இது நாள் வரை நம்மையேச் சுற்றிச் சுற்றி வந்த அவர்களை இனி நாம்தான் சுற்றி வர வேண்டும். வாட்ஸ் அப், ஃபேஸ் புக் ... என்று அலிபாபா குகை போல நீண்டு செல்லும் இந்த ஆண்ட்ராய்டு வெட்டி வைத்த குழிக்குள் அவர்கள் விழுந்து கிடக்கிறார்கள் என்று நாம் பின்னர் கிடந்து அங்கலாய்க்கிறோமே, நாமாகத்தானே அதிலே அவர்களைத் தள்ளி விட்டோம் என்பதை என்றாவது நாம் உணர்ந்ததுண்டா...?

முகநூல் மற்றும் பகிரி (வாட்ஸ்-அப்) வலைத் தளங்களில் தங்களது புகைப் படங்களை விதம் விதமாக பதிவேற்றம் செய்வதையும், பகிர்வதையும் தங்கள் முழு முதற் கடமையாகவே இளைய தலைமுறை கருதுகிறது... ஆனால் இதன் பின்னால் அணி வகுத்து நிற்கும் ஆபத்துகளைப் பற்றி அலட்சியம் காட்டுகின்றனர்.... எடுத்துச் சொன்னாலும் கேட்பதில்லை...

இதோ! சேலம் வினுப்பிரியாவின் பரிதாப முடிவு நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணி! பிள்ளைகளிடம்... குறிப்பாக பெண் பிள்ளைகளிடம் இதன் எதிர்வினைகளைப் பற்றித் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருப்பது நமது கடமை... அவர்கள் எரிச்சலடைந்தாலும் பரவாயில்லை... என்று நாம் நமது கடமையில் உறுதியாக இருக்கிறோமா..., அல்லது அவர்கள் வளர்ந்து விட்டார்கள் என்று ஒதுங்கி விடுகிறோமா...!

நன்றாகப் படிக்கிறோம் ... கேம்பஸில் வேலை கிடைத்தால் அனுப்புவீர்களா? என்பதே இன்று பெரும்பாலான மகள்களின் கேள்வியாக இருக்கிறது... படித்தால் வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் அழகு என்ற எழுதப்படாத விதியும், கல்வியை பொருளீட்டும் கருவியாக மட்டுமே கணக்குப் போடும் பொதுப் புத்தியும் தவறு என்பதை நமது பிள்ளைகளுக்கு உணர்த்தத் தவறி விட்டோமா...!

இஸ்லாம் பொருளீட்டும் பெரும்பொறுப்பை ஆண்களுக்கு மட்டுமே கடமையாக்கியுள்ளது... பெண்களின் மீது பொருளாதாரச் சுமைகளை ஒரு போதும் சுமத்தவில்லை என்பதை குர்ஆன், ஹதீஸ் ஒளியில் அவர்களிடம் தெளிவுபடுத்தியிருக்கிறோமா...?

பிள்ளைகள் ஆசைப்படுகிறார்களே என்பதற்காக வேலைக்கு அனுப்பும் கலாச்சாரமும் இன்று நம்மை மெல்ல... மெல்ல... ஆக்கிரமித்து வருகிறது... ஆனால் இதன் நீட்சியாக ஆபத்துக்கள் ஒவ்வொரு சம்பவங்களாக அவ்வப்போது அலாறமடித்தாலும்... அதன் தாக்கம் நம் மனதில் படிந்திருப்பது ஒரு சில காலங்கள் மட்டுமே...! அதன் பின்னால் நம்மை நமது வழக்கமான அலட்சியம் ஆட்கொண்டு விடுகிறது.

அதிலும் ஐ.டி. துறையின் கால நேரங்கள் நிச்சயமாய் பெண்களுக்கு பாதுகாப்பானதல்ல...! ஆணும் பெண்ணும் கலந்துப் பழக அதிக வாய்ப்புள்ள இத்துறைகளில் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ யாருமே இல்லாத நிலையில், சின்னச் சிரிப்பும், பார்வையும் கூட விபரீதங்களை உருவாக்கி விடக்கூடும். சாதாரண பேச்சுக்களையும் கூட எல்லை மீறிக் கையாளத் துடிக்கும் சராசரி புத்திகளின் வலையில் எலிகளாகப் பெண்கள் மாட்டுவதை அவ்வப்பொழுது அறிந்தும் கூட இந்த ஆபத்தான பணியிடங்கள் பெண்களுக்கு அவசியம்தானா....? என்ற கேள்விக்கு நாம் விடை காணவில்லை.

பிள்ளைகள் ஆசைப்படுகிறார்கள் என்பதற்காக இதுபோன்ற பாதுகாப்பற்ற பணியிடங்களுக்கு தம் பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களே...! தயவு செய்து உங்கள் நிலைப்பாடுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்துங்கள்!!

இளம் வகுப்புக்களில் பயிலும் போது, பள்ளியில் அன்றாடம் நடந்ததை அப்படியே நம்மிடம் ஒப்படைக்கும் நமது குழந்தைகள், வயதும், வகுப்புகளும் ஏற, ஏற

"இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்திச்சு...?”

என்ற நமது கேள்விகளுக்கு,

" போம்மா...! எல்லாம் வழக்கம் போலத்தான்...”

என்ற சலிப்பையே பதிலாகத் தருகிறார்கள். ஆனால் மேல் வகுப்புகளிலும், கல்லூரிகளிலும், பணியிடங்களிலும் தங்கள் அனுபவங்களை, அசெளகரியங்களை, வெளியிடங்களில் தாங்கள் எதிர்கொள்ளும் அசாதாரண நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்துக் கொள்ளக்கூடிய பக்குவத்தை பிள்ளைகளுக்கு நாம் பழக்கியிருக்கிறோமா...? நமக்குத் தெரியாமல் ஒரு இருண்ட உலகம் நம் பிள்ளைகளின் வாழ்வில் இருந்து விடக் கூடாது என்பதில் நாம் முழு கவனமாக இருக்கிறோமா... என்பதெல்லாம் நம் மனதைக் குடைய வேண்டிய கேள்விகள்.

எதுவாக இருந்தாலும் பெற்றோர் மற்றும் உறவினர்களின் துணைக் கொண்டே தீர்க்க வேண்டும், நாமாக சமாளித்து விடலாம் என்ற அசட்டு தைரியத்தில், அதிரடிகளில் இறங்கி ஆபத்துகளை விலைக்கு வாங்கிடக் கூடாது என்பதுதான் இச்சம்பவம் நமக்கு உணர்த்தும் பாடம்.

அனைத்திற்கும் மேலாக எங்கு சென்றாலும், எந்தச் சூழ்நிலையிலும்... இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களும், பண்பாடுகளும் நம்மை விட்டும் அகலாமல் கவனமாய் இருக்க வேண்டியதன் அவசியத்தை பிள்ளைகளின் மனதில் ஆழப் பதிக்க வேண்டும். "நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்பது எனக்குப் பெருமையே..." என்னும் உணர்வை அவர்களின் உள்ளத்தில் வேறூன்றி விதைக்க வேண்டும்.

"எனது ஹிஜாப்... எனது உரிமை...! என்ற எண்ணம் அவர்களை வழி நடத்த வேண்டும். " என் குடும்பத்திற்கு நான் மிகவும் முக்கியமானவள்... என் பெற்றோரும், என் குடும்பமும், அவர்களது கெளரவமும், என் சமுதாயமும்தான் எனக்கு எதனை விடவும் முக்கியமானது...

எனவே, அவர்களுக்கு ஒரு சிறு கரும்புள்ளி ஏற்படும் விதத்திலே எனது நடவடிக்கைகள் எப்போதும் அமைந்து விடக்கூடாது" என்ற உள்ள உறுதியை சிறு வயது முதலே அவர்களது உள்ளத்தில் ஆழ விதைத்திருக்கிறோமா....? அவர்களது பிரச்சனைகளை நம்மிடம் மனம் விட்டு பேசுவதற்கான தளங்களை உருவாக்கி கொடுத்திருக்கிறோமா...? அவர்களின் வார்த்தைகளுக்கு காது கொடுத்து அரவணைத்திருக்கிறோமா...? என்பதையெல்லாம் நாம் சுய சோதனை செய்துக் கொள்ள வேண்டிய தருணமிது.

பாதிக்கப்பட்டது பெண் என்பதால்... இக்கட்டுரையை அந்தக் கோணத்தில் மட்டுமே நான் கையாண்டுள்ளேன். தவறு செய்யும் பெண்களும் கூட தப்பித் தவறி இருக்கத்தான் செய்கிறார்கள்... இல்லையென்று சொல்ல வரவில்லை... இருந்தாலும், முள்ளுக்கும் சேலைக்குமான போராட்டத்தில் கிழிபடுவதென்னவோ சேலைகள்தான் என்பதை மனதில் கொள்ளல் வேண்டும்.

இக்கட்டுரையை எழுதி முடிக்கப் பெறும் தருணத்தில்தான் கொலையாளி பிடிபட்டான் என்றும், அவனல்ல; வேறு ஒருவன்! என்பன போன்ற செய்திகள் கிடைத்தது...

மொத்தத்தில் இதுபோன்ற கொலைகளைச் செய்யும் கொலையாளிகள் "இவனெல்லாம் ஒரு ஆளா... ஃபூ... என்று நினைக்கத் தோன்றும் அப்பாவி கிராமத்து இளைஞனின் தோற்றத்தில்தான் இருக்கிறார்கள்... ஒரு வேளை சுவாதியும் அப்படித்தான் தப்புக் கணக்குப் போட்டாளோ.. என்னவோ...! யாரிடமும், எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே இந்த முகம் நமக்குக் கற்றுத் தரும் செய்தி...

அதே வேளையில்... முஸ்லிம்களின் மீது துவேஷத்தைக் கக்கியுள்ள காவிகளையும் இச்சம்பவம் நமக்கு அடையாளம் காட்டியுள்ளது. மரணத்திலும் மனிதநேயம் மறந்து மதச்சாயம் பூச நினைத்த 'ஒசந்த சாதிகள்' (என்று தங்களையே மார்த் தட்டிக் கொண்டவர்கள்) இப்போது முகத்தை எங்கே வைத்துக் கொள்ளப் போகிறார்களோ ... தெரியவில்லை.

சுப.வீ. அழகாகச் சொன்னார்...

“சுவாதியை அரிவாள் ஒருமுறைதான் கொன்றது... ஆனால் இந்தச் சாதிகள் அவளைப் பலமுறை கூறு போடுகிறது." என்றார். இதோ...! கொலையாளி பிடிப்பட்டப் பிறகும் இந்தச் சாதிச் சண்டைகள் தீர்வதாயில்லை... சாதிகள் மட்டுமே அப்பெண்ணைக் கூறு போடவில்லை... மனித நாவுகளும்தான்... அரிவாளை விட கொடுவாள் நாவுகள்தான்...

அந்த நாவுகளின் கொடூரங்களிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக. இனி இதுபோன்ற தலைப்புச் செய்திகளில் தன் பிள்ளைகளைப் பார்க்கும் கொடுமை எந்தப் பெற்றோருக்கும் வர வேண்டாம் என இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சுவோம். இன்ஷா அல்லாஹ்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Shaamila Abdul Cader (Srilanka) on 08 July 2016
IP: 123.*.*.* Sri Lanka | Comment Reference Number: 44229

இக்கட்டுரை ஆசிரியர் பல ஆக்கங்களுக்கு சொந்தமானவர்...காலத்திற்கு பொருத்தமான விடயத்தை மையமாக வைத்து ...அறிவுரை பகர்வதில் திறமையானவர்..

யாவரும் வாசிக்கும் வகையில் கட்டுரை அமைந்திருந்தது.வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...மனிதன் அறிவாள் கலாச்சாரத்தில் இருந்து அரிவாள் கலாச்சாரத்திற்கு மாறிவிட்டான்..!
posted by: AnbinalA (jaipur) on 09 July 2016
IP: 115.*.*.* India | Comment Reference Number: 44232

அன்று ஒருதலை காதல் வாழும் வரை மனதிலே இருந்தது இன்று "ஒரு 'தறுதலை" காதல் வாளுடன் மரணத்தில் முடிந்தது..!

சகோதரர்.சுப.வீரபாண்டியன் உண்மையை அழகாகவே சொன்னார்...!

வாள் ஒருமுறை தான் சுவாதியை வெட்டியது..?ஆனால்..! உயர்ஜாதி என்ற போர்வையில் "அவ் 'வாள்" மத நல்உணர்வுகளை துண்டு துண்டாய் கூறுபோட்டது.!! மனித நாவுகள் கொடுவாள் கொண்டு தாக்கியதுதான் சோகத்திலும் சொல்ல முடியா உச்ச சோகம்!!!

காலத்திற்கு தேவையான ஆக்கம்...

ஆசிரியருக்கு
நன்றி...
பாராட்டு...
வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...குற்றங்களில் திரைப் படங்களுக்கு பங்கில்லையா?
posted by: mackie noohuthambi (kayalpatnam ) on 09 July 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44234

சீரழிய சினிமாவை பாருங்கள் என்று சொல்வார்கள். இன்றைய தமிழ் ஹிந்து நாளிதழில் குற்றங்களில் திரைப் படங்களுக்கு பங்கு இல்லையா என்ற ஒரு அற்புதமான கட்டுரை சகோதரி உம்மு நுமைரா அவர்களின் ஆதங்கத்துக்கு வலு சேர்க்கிறது.

இந்த இணையதளத்தின் நிர்வாகத்துக்கு அதை அனுப்பியுள்ளேன். இங்கே அதை பதிவு செய்தால் மக்கள் படித்து பயன்பெறலாம்.

எல்லா தாய்மார்களும் உம்மு நுமைரா அவர்கள் மாதிரி சிந்திக்க ஆரம்பித்தால், குற்றங்களில் திரைப் படங்களுக்கு பங்கில்லையா என்ற கட்டுரையை படித்து சிந்தித்தால் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. வாட்ஸுப்பும் முகநூலும் தொடர் நாடகங்களும் கதி என்று நம் பெண்கள் அவற்றை சுற்றி சுற்றியே வந்தால் நாசம்தான்.

புரியாத பலபேருக்கு புது நாகரிகம்
பொய்யான சிலபேருக்கு இது நாகரிகம்
முறையோடு வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. காவுதளமா/காலக்கொடுமையா?
posted by: Sheikh Abdul Qader (Riyadh) on 09 July 2016
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 44235

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

இறையருள் நிறைக

பூக்களில் ஜாதிகாணும் உலகமிது நிர்பயாவும்,சுவாதியும்தான் மனிதப்பிறவிகளா முனியம்மாக்களும் பாத்திமாக்களும் விதிவிலக்கா ஊடகங்களும் இப்படிப்பிரித்துதானே கொடிபிடிக்கிறது இதோ இந்தக்கட்டுரையை ஆசிரியையான நீங்கள்உள்பட.

(சுவாதி... தமிழ்நாட்டுப் பெற்றோர் ஒவ்வொருவரின் மனதிலும் சுவாதீனமாய் ஒட்டிக்கொண்டவர்...

குறிப்பாக பெண்களைப் பெற்ற தாய்மார்களின் தலைமகளாகத் தத்தெடுக்கப்பட்டவர்....

நுங்கம்பாக்கம், சூளைமேடு வாசிகளின் உள்ளத்திலிருந்து ஒரு நிமிடமும் அகல மறுத்தவர்.... "இறைவா...! இனியொரு கொடுமை இது போன்று வேறெந்தப் பெண்ணுக்கும் நிகழக்கூடாது..." என்று மதங்கள் கடந்த மனிதநேயப் பிரார்த்தனைக்குக் காரணமானவர்...

எதிர்வீட்டிலிருந்தும், பக்கத்து வீட்டிலிருந்தும் அலுவலகம் செல்லும் ஆயிரக்கணக்கான சென்னை முகங்களின் ஒரு அங்கம்... கல..கல பேச்சும், நுனி நாக்கு ஆங்கிலமும், பளிச் முகமும், நேர்த்தியான உடையமைப்புமாய் அப்பெண்களின் உலகமே வேறு.... அவர்களில் ஒருத்தியான சுவாதியின் கொடூர மரணம் மனதில் இனம்புரியாததொரு பயத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, பெண் குழந்தைகளை பெற்றவர்களின் மீது பல்வேறு கேள்விகளையும் வீசிச் சென்றிருக்கிறது... )

என் இந்த முகஸ்துதி?

யூதர்கள் அநியாயமாக லட்சக்கணக்கானோரைகொன்றுகுவிக்கிறார்கள் ஆனால் அவர்களில் ஒருவர்கொல்லப்பட்டாலும் குமுறிஅழுகிறார்கள் ஏன் உலகம் இப்படிப்பட்டோருக்கு திருமுகம்காட்டுகிறது இவர்களுக்குமட்டும்தான் அருள்முகமா?

எத்தனையோ பள்ளிகல்லூரி மாணவிகள் சிதைக்கப்பட்டு தண்டவாளங்களிலும்,கூவங்களிலும்,குப்பைத்தொட்டிகளிலும் கண்டெடுக்கப்பட்டு கண்டுகொள்ளாமல் எத்தனை எத்தனை நியாயங்களோ கண்டுகொள்ளாமல் தள்ளிவிடப்பட்டுவிட்டன அவர்களின் பெற்றோர்களின் குமுறல்களுக்கு இதுவரை நியாயம்கிடைத்திருக்கிறதா? இதுபோன்றகோடூரங்களுக்கு முதல்வரும்,பிரதமரும் தலையிட்டால்தான் விடைகிடைக்குமா?

(முன்பு ஒருமுறை மறைந்த பிரதமர் வி.பி.சிங் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்த ஞாபகமிருக்கிறது அதில் பிரதமரே தலையிட்டு விசாரணை நடத்தச்சொன்னார் )

ஊடகங்கள் விளம்பரத்தைமட்டுமே தேடுகின்றன இதோ இந்தக்கோரசம்பவம் இன்னும் சிலநாட்களில் மறக்கடிக்கப்பட்டுவிடும் இதுஊடகங்கள் வாயிலாக மறுஆராய்வுக்கு வருவதில்லை சிலவெளிமாநில சிலஊடகங்களைத்தவிர,

பதின்வயது மக்களின் கையில் கையடக்க தொலைபேசியோ எந்த ஒரு வலைத்தளம் சம்பந்தப்பட்ட தொடர்போ இருக்கவேண்டாமென்பது அனைத்துசமூக மக்களின் கருத்தும்தான் ஆனால் சிலருக்கு அது கௌரவப் பிரச்சினை மொபைல் மட்டுமல்ல மொபெட்டும் பைக்கும் வாங்கிக்கொடுத்து காவெடுத்து,காவுகொடுப்பார்கள்

வினுப்பிரியா விஷயத்தில் வேலியே பயிரைமேய்ந்திருக்கிறது அதுதான் காவல்துறையில் ஒருவர் செல்போன் கேட்டுவாங்கியிருக்கிறார் சரிவாங்கினார்களே உடனடியாகவாவது நடவடிக்கையெடுத்தார்களா? அப்படிக்கொடுத்தால்தான் நடவடிக்கையெடுப்பார்களென்றால் வினுப்பிரியாவின் தந்தைக்கு வசதியிருந்தது வாங்கிக்கொடுத்தார் இல்லாதவர்கள் அன்றாடம் காய்சசிகளுக்கு நீதிகிடைக்கக்கூடாதா?

"இளைஞ,இளைஞிககளே,மாணவ,மாணவிகளே இதுக்காதல் சம்பவமோ எதுவோ இந்தக்காதல் சின்னத்தைப்பாருங்கள் ஹாட்டினும்,அம்புமிருக்கும் அம்பு ஹாட்டினைக்குத்தி இரத்தம் சொட்டசெய்திருக்கும் இந்தசிம்பிள் அழிவென்பதை நமக்கு சிம்பாலிக்காக உணர்த்தவில்லை?

மக்கள் பெற்றோரைப்புரிதல் வேண்டும்,பெற்றோர் மக்களைப்புரிதல்வேண்டும் இல்லையெனில் பிரிதலென்பது தடுக்கமுடியாது ஒன்றாகிவிடும்

ஆசிரியையும் ஒருதாயென்பதன் ஆதங்கம் வெளிப்பட்டிருக்கிறது தாய்மார்களுக்கும் பெற்றோர்களும் ஆறுதல்தரட்டும் அதேசமயம் விழிப்புணர்வும் வரட்டும் ஜஜாக்குமுல்லாஹ் ஆசிரியரே

ஏக இறைவா மனிதப்போர்வைக்குள்ளிருந்து துவேஷத்தைக்கக்கும் விஷமிகளைக்களைஎடுத்து மனிதத்தைப்புனிதப்படுத்து மனிதசமூகம் ஒற்றுமையுடன் வளம்பெற நீயே அருள்புரி.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். .
posted by: சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான். ஜித்தா. (ஜித்தா. ) on 13 July 2016
IP: 37.*.*.* | Comment Reference Number: 44237

இக்காலத்திற்கேற்ற விழிப்புணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்தும் மிக அருமையான அதுவும் ஆக்கபூர்வமான படைப்பு.

இக்கட்டுரை ஆசிரியரின் இது போன்ற எல்லா ஆக்கங்களையும் மிகவும் ஆர்வத்துடன் தொடர்ந்து படித்து வருவதோடு எமது உறவுகள் நட்புக்களுக்கும் பகிர்ந்தும் வருகிறேன்.

கட்டுரை ஆசிரியை சசகோதரி அவர்கள் எங்களது குத்துக்கல் தெரு என்பதோடு எனது மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய அஜீஸ் காக்காவின் மகள் என்பதும் அவர்கள் மூலமாக அறிந்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி. மாஷாஅல்லாஹ்.

வாழ்த்துக்கள். ...பாராட்டுகள். .. அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக ஆமீன். ஜஸாக்கல்லாஹ் ஹைரா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by: K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) on 14 July 2016
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44241

அஸ்ஸலாமு அழைக்கும்

நம் பெண்மக்கள் கவனத்துக்கு தற்போதைய காலத்திக்கான, சூழ் நிலைமை பற்றிய ,ஒரு தகவலை ,, சுட ,,சுட ...தந்த நம் சகோதரி அவர்களை பாராட்டுகிறோம் .....

சகோதரி அவர்களின் இந்த படைப்பை அனைத்து தரப்பினரும் பார்பதினால் நல்ல பலன் உண்டு ....பெண்மக்களை பெற்ற ..பெற்றோர்களும் இது போன்ற '' தவர்கள் '' மேலைக்கு நடக்காமல் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம் .....

தங்களின் இந்த படைப்பு ஒரு காவியம் என்றே சொல்லலாம் .....நல்ல ஒரு படைப்பை தந்த அருமை சகோதர அவர்களை பாராட்டுகிறேன் .....

தங்களின் ஒவ்வொரு படைப்பும் வித்தியாசமாகவும் ,,கருத்தானதாகவும் இருப்பதும் பாராட்டப்படக்கூடியதாகவும் இருக்கிறது .....தொடரட்டும் தங்களின் படைப்புக்கள் ........

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...வாழ்த்துக்கள்
posted by: KASALI MARICAR (MUMBAI) on 19 July 2016
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44277

அருமை. வாழ்த்துக்கள்

கசாலி மரைக்கார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved