Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:49:26 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 232
#KOTWEM232
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 18, 2017
வட கிழக்கிந்தியப் பயணம் – 4

இந்த பக்கம் 2580 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஷில்லாங்கின் மார்வாடி உணவகத்தில் வாடகைக் கார் ஓட்டுனர் கிடைத்தார். பெயர் ஹூஸைன். அஸ்ஸாமியர். நல்ல மனிதர்.

ஸோஹ்ராவில் உள்ள (ஸோஹ்ராவின் பழைய பெயர் செராபுஞ்சி), வஹ் கபா அருவி, நோஹ் கா லி கா அருவி, மவ்ஸ்மாய் அருவி & குகை போன்றவற்றிற்கு சென்று வர அவரின் வண்டியையே அமர்த்திக் கொண்டோம்.

ஷில்லாங்கிலிருந்து ஸோஹ்ரா 62 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. மேற்கண்ட தலங்கள் அனைத்துமே கிழக்கு கசி மலைத் தொடரில் அமைந்துள்ளன.

துவான் சிங் செய்ம் என்ற பாலத்தைக்கடந்துதான் போக வேண்டும். பாலத்துக்கருகில் மலைக் காட்சி.



எதிரே நடுவே வலம் இடம் என மலை சரிந்து விழுந்து கொண்டே இருந்தது. மனது அந்த சரிவில் போய் அமர்ந்து விட்டது. கதிரவனின் ஒளியில் கரும்பச்சை இளம் பச்சையும் ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக நின்று பரஸ்பரம் பார்த்துக் கொண்டிருந்தன. ஒன்று பலவாகி ஒன்றையொன்று அறிந்து மீண்டும் ஒன்றாகும் முடிவற்ற முயற்சி.

மலைகளின் அருவமான முயக்க மொழியின் மிக வலுவான விசையில் இழுபட்ட புலன்களின் குவி மையம் தன்னைத்தானே முழுவதுமாக கரைத்துக் கொண்டது. கரைந்த மனம் கண்களின் வழியாக பொங்கியது.







வஹ் கபா அருவிக்கு போகும் வழியில் பலகை அடித்த பெட்டிக்கடைகள். கசி மொழி மட்டுமே அறிந்த முதியவர். கீறித் திறந்து விட்ட கண்கள். இனிப்பு பணியாரமும் ஆவி பறக்கும் தேநீரும் தந்தார். உடலுக்குள் உண்டான இள வெப்பம் உற்சாகமளித்தது.



பொதுவாக அருவிகளை ஒற்றை நோட்டத்தில் சுருட்டி நம் புலன்களுக்குள் கொண்டு போய் வைக்க இயலாது. காரணம் எல்லாப்பக்கங்களிலும் அது பேருரு கொண்டு நிற்கும்.

இதை ஒரு குழந்தை அருவி என சொல்லலாம். குட்டி மீன்களும் பச்சைப்பாசியும் கலந்த மலை மேல் குட்டையிலிருந்து நீரானது நம் கால் பாதங்களின் கீழாக நழுவி புன்னகை போல சிதறுகின்றது. நம் வீட்டு ஏணிப்படிகளில் நீர் ஒழுகி வருவது போன்ற உணர்வு.



“மேகாலயா“ என்றால் மேகங்களின் இருப்பிடம் என்று பொருள். உண்மையில் இது மேகங்களின் நாடுதான்.

ஸோஹ்ராவிற்கு வந்து சேர்ந்தோம். தென் மேற்கு பருவ காலத்தின் விளைவாக உலகிலேயே மிகக் கூடுதலான மழை பொழியும் இடமாக ஸோஹ்ரா அறியப்பட்டாலும் உண்மையில் அதற்கு இரண்டாம் இடம்தான்.

பொதுவாக நீர்வீழ்ச்சிகள், பன்மய உயிரிகளின் இருப்பிடம் ஸோஹ்ரா எனச் சொல்கிறார்கள். நீர் வீழ்ச்சிகளை பார்க்க முடிந்தது. ஆனால் பன்மய உயிரிக்கு அடையாளமாக ஒன்றையும் பார்க்க முடியவில்லை.

ஸோஹ்ராவிலிருந்து 16 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மவ்ஸின்ராம் என்ற இடத்திற்குத்தான் முதலிடம். மவ்ஸின்ராமில் வருடத்திற்கு கிட்டதட்ட 12,000 மில்லி மீற்றரும் ஸோஹ்ராவில் கிட்டதட்ட 11,500 மில்லி மீற்றரும் பெய்கின்றன. ஆனால் மழையல்லாத காலங்களில் மவ்ஸின்ராமில் வறட்சிதான் என்கின்றனர். மலைப்பகுதியாக இருப்பதால் மழை நீரை சேமிக்கும் வழிவகை இல்லை போலும்.

எங்கள் வண்டியின் ஓட்டுனர் ஹுஸைன், “பெஹ்லா ஜோய்ஸா பாரிஸ் இதோர் நஹீ கிர்ரா பாய் (முன் போல் இங்கு மழை பெய்வதில்லை) என பெங்காலி உச்சரிப்பிலான ஹிந்தியில் சொன்னார்.

தெருவின் இரு விளிம்புகளையும் அடைத்துக்கொண்டு வீட்டின் மடையையும் தொட்டுக் கொண்டு ஓடும் மழைப்பொழிவை ஊரில் இளம்பருவத்தில் பார்த்ததுதான்.

பல வருடங்களாகவே ஒவ்வொரு மழைக்காலத்திலும் மண் வாசனை அடிக்கும். மேகங்கள் கறுத்து உருண்டு திரண்டு வரும். ஆனால் மழை பெய்யாது. சுட்டெரிக்கும் வெயில் தாம்பாளத்தில்தான் ஊர் காய்கிறது. ஏதாவது புயல், காற்றழுத்த தாழ்வு உயர்வு என வந்தால் ஒழிய ஊரானது கிட்டதட்ட மழை மறைவு பிராந்தியமாகவே மாறி விட்டது.

மழைக்குள் வசிக்கும் மழைத்துளி போல ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு ஊர் அடர் மழைக்குள்ளும் இயல்பாக இயங்குமாம். மழைக்குள் இருப்பதற்காகவே ஒவ்வொரு வருடமும் கேரளத்திற்கு காரில் பயணிக்கும் இலக்கிய குழுக்களும் உண்டு.

சோஹ்ராவில் மலையை ஒட்டிய ஒரு வெண் மணல் திடலில் தொழுதோம். நிறைவு செய்யும் தருணத்தில் குழந்தைகள் எறியும் கோலிக்காய்களைப்போல பருத்த மழைத்துளி தொழுகை விரிப்பில் சடசடவென விழுந்தது. ஓடிப்போய் வண்டியில் ஏறிக் கொண்டோம்.

கொஞ்ச நேரத்தில் உன்மத்தம் கொண்ட நடன மங்கையாக வெள்ளுடுப்பில் வந்த மழை ஆடத் தொடங்கியது. மேகத்தில் நின்றிருந்த பெரும் பசுவின் பருத்த காம்புகளிலிருந்து பீய்ச்சிய பால் சரடாய் இறங்கிக் கொண்டிருந்தது. என் நனவிலியில் ஒட்டிக்கிடந்த மழைக்கான ஏக்கம் ஈரத்தில் ஆழ்ந்து தோய்ந்து கிடந்தது.

பொதுவாகவே வடகிழக்கில் கூடுதலாக மழை பொழிவதால் வீடுகளை அதற்கேற்பவே அமைத்துள்ளனர். நான்கு கம்பை நட்டு அதன் மேல் மரப்பலகைகள் அமைத்து மூங்கில் படல், தகரம், ஒட்டுப்பலகை போன்ற ஏதாவது ஒன்றினால் பக்கவாட்டு சுவர்களை அமைக்கின்றனர். கூரைக்கு தகரம் போடுகின்றனர். மிகச்சில இடங்களில் மட்டுமே காங்கிரீட் வீடுகளை பார்க்க முடிகிறது.

இந்த மாதிரி வீடுகளினால் மழை நீர் வீட்டுக்குள் ஒழுகுவதில்லை. மழை நீர் தேக்கம், வெள்ளத்தினாலும் வீடுகள் பாதிக்கப்படுவதில்லை. வடகிழக்கு மக்கள் எளிய வறிய வாழ்க்கை உடையவர்கள். அதனால் வீட்டில் கனமான தளவாடங்கள் இருப்பதில்லை, எனவே பலகை தளங்கொண்ட வீடுகளின் தாங்கும் திறனைப் பற்றி கூடுதல் கவலை கொள்ள வேண்டியதில்லை. வடகிழக்கின் கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் மியான்மர் வரையிலும் இம்மாதிரி வீடுகளையே அமைக்கின்றனர்.

ஸோஹ்ராவில் மற்றொரு முக்கியமான இடமான மவ்ஸ்மாய் குகைகளுக்கு சென்றோம். போகிற வழியில் அருவிகள் இருந்தன. பழுப்பேறிய செங்குத்து பாறை உயரத்திலிருந்து மலை பாய்ச்சும் வெண் நுரை உயிர் நீர் வழிந்திறங்கி பாறைத்தளத்திற்கும் செடி கொடிகளுக்கும் நடுவே தன்னை ஒளித்துக் கொண்டது.

எதிர் திசை மலையை சுட்டிக்காட்டி பங்ளாதேஷ் என்றார்கள். தலைக்கு பத்து ரூபாய்கள் வாங்கிக் கொண்டு பைனாகுலர் தந்தான் அங்குள்ள சிறுவன். வெறுங்கண்ணால் பார்ப்பதற்கு மேலாக அது எதையும் காட்டிடவில்லை. பார்த்து பார்த்து தேய்ந்து திப்பிலியாகியிருக்கும் போல.



மவ்ஸ்மாயில் புதிய குகை பழைய குகை என இரண்டு உள்ளது. பழைய குகையினுள் மட்டுமே மின் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய குகை ஆய்வாளர்களுக்குரியது. அதனுள் சுற்றுலாப்பயணிகள் செல்வதை தவிர்க்குமாறு அறிவிப்பு பலகை சொல்லியது.

குகைக்கு செல்ல கட்டணம் வாங்குகிறார்கள். இந்த குகைகள் சுண்ணாம்பு பாறையினால் ஆனவை. வாய் பிளந்து சோம்பல் முறிக்கும் மலை யானையின் வாய்க்குள் சென்றோம்.

உள்ளே போன நடுத்தர வயது ஆணும் பெண்ணும் ஒரு வகையான விலகல் முகத்துடன் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் எனக்கும் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனது ஆகட்டும் என நுழைந்து விட்டேன்.



மண் அடுக்குகளிலிலும் தாவர வேர்களிலிலும் சேமிக்கப்பட்டிருக்கும் மழை நீர் குகையின் முகட்டிலிருந்தும் பக்கவாட்டிலிருந்தும் கசிந்து சொட்டி தரையில் ஆங்காங்கே திட்டு திட்டாக தேங்கியிருக்கிறது. உருளைக்கிழங்கு வடிவில் வழு வழு கற்கள். கூர்மையான பாறை விளிம்புகள். தலைக்கு மேலே பாறையின் கூர் முனைகள். பனிக்கட்டியில் செய்த பரட்டைக் கத்திகள் போல தொங்கும் பாறைக்கூம்புகள். ஆங்காங்கே தலையை இடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.



விரிந்த குகை வாய் ஒரு திருப்பத்தில் ரகசிய அறை போல மாறுகிறது. கதிரொளி முழுக்க இல்லாமலாகி மின்னொளி மட்டுமே வழிகாட்டுகின்றது உள்ளே சென்றால் காலப்பெட்டகத்திற்குள் சிக்கினது போல பிரமை. பழுப்பேறிய பாறைச் சுவர்கள். பெருங்கட்டிகள் கொண்ட உடல் போல குகையின் உட்புற மடிப்புகள். பெருங்குகை சட்டென சிறு புழையாக சுருங்குகிறது. உடலை மூன்றாய் மடித்து மூச்சடக்கி புழைக்குள் புகுத்தி அடுத்த குகைக் கூடத்திற்குள் நுழைய வேண்டும். உள்ளே படமெடுத்த நாகத்தோற்றத்தில் இரண்டு பாறை செதுக்குகள்.

சிறுவயதில் சிறார் சித்திரக்கதைகளை வாசிக்கும்போது தாவரங்களின் வேர்களுக்குள்ளும். இலைகளுக்குள்ளும் நம்மால் போய் இருக்க முடிந்தால்….. என்ற ரீதியில் மனது கழன்று மிதக்கும். அந்தக்கதைகள் நமது மன உலகில் கட்டி எழுப்பும் மாய உலகின் வாசம் தரும் கிறக்கமானது இந்த வயதிலும் நம்மை மிதக்கத்தான் வைக்கிறது.



நெட்டையான வலுவான மரங்கள், செடி கொடிகளின் வேர்களுக்கு கீழான உண்மையான பாதாள உலகத்திற்குள் உயிர்ப்புள்ள கல்லறைக்குள் பூமியின் வயிற்றுக்குள் இருக்கிறோம் என்ற பரவசமும் குகை தரும் திகிலும் எல்லா புலன்களையும் நிறைத்தது.

அடுத்து நோஹ் கா லிகா அருவிக்கு போகும் வழியில் மதிய உணவிற்கு நிறுத்தினோம். உணவகம் தூய்மையாகவும் அழகாகவும் இருந்தது. பணிப்பெண்கள் குள்ள மனுசிகள். சுறுசுறுப்பாக எறும்புகளைப்போல குறுக்கும் நெடுக்குமாக உலாவினர். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் புன்னகை மாறாத சேவை. கசி மரபு மரக்கறி உணவு. இனிப்பு புளிப்பு கலந்த வெஞ்சனம். நல்ல சுவை.



ஸோஹ்ராவில் அங்குலக் கணக்கில் மழை பெய்தாலும் வெயில் 38 பாகை வரை செல்கிறது. பயணித்துக் கொண்டிருக்கும்போது பல இடங்களில் எந்த ஒரு மரமும் இல்லாமல் லேசாக புல் படர்ந்த கட்டாந்தரை பகுதிகள் நிறைய தென்பட்டன. சிறு சிறு தாவரங்களைத்தவிர வேறொன்றும் இல்லை. டிப்பர் லாரிகள் ஆங்காங்கே தென்பட்டன. சிறு கருங்குன்றுகள். இவையனைத்தும் நிலக்கரி வயல்கள்.

மேகாலயாவின் நிலக்கரி இருப்பு பல மில்லியன் டன்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே அகழத் தொடங்கி விட்டார்களாம். நாட்டின் மொத்த நிலக்கரி வளத்தின் 0.2 சதவிகிதம் இங்கிருக்கிறதாம். மக்களின் வாழ்வாதாரத்தில் நிலக்கரி தலையாய பங்கு வகிக்கின்றது. நீரும் நெருப்பும் ஒரே துறையில் சேர்ந்து அருந்தும் மேகாலயாவிற்கு துணைப்பெயராக கரியாலயா என பின்னர் யாராவது சூட்டக்கூடும்.

(பயணம் தொடரும்…)

இக்கட்டுரையின் முந்தைய பாகங்களைப் பின்வரும் இணைப்புகளில் சொடுக்கிக் காணலாம்:-


முன்னுரை || பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஓசிப் பயணம்!
posted by: S.K.Salih (Kayalpatnam) on 20 December 2017
IP: 106.*.*.* India | Comment Reference Number: 45948

சாளை பஷீர் அவர்களின் கட்டுரை, ஒற்றைப் பைசா செலவின்றி பல ஊர்களைச் சுற்றிக்காண்பிக்கிறது. எழுத்தோட்டமும், காட்சிகளை அவர் அவதானித்ததற்கேற்ப ஆங்காங்கே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளும் கவனத்தைக் கவர்ந்தன.

எனினும்.....

\\.....பொதுவாகவே வடகிழக்கில் கூடுதலாக மழை பொழிவதால் வீடுகளை அதற்கேற்பவே அமைத்துள்ளனர். நான்கு கம்பை நட்டு அதன் மேல் மரப்பலகைகள் அமைத்து மூங்கில் படல், தகரம், ஒட்டுப்பலகை போன்ற ஏதாவது ஒன்றினால் பக்கவாட்டு சுவர்களை அமைக்கின்றனர். கூரைக்கு தகரம் போடுகின்றனர். மிகச்சில இடங்களில் மட்டுமே காங்கிரீட் வீடுகளை பார்க்க முடிகிறது.

இந்த மாதிரி வீடுகளினால் மழை நீர் வீட்டுக்குள் ஒழுகுவதில்லை. மழை நீர் தேக்கம், வெள்ளத்தினாலும் வீடுகள் பாதிக்கப்படுவதில்லை. வடகிழக்கு மக்கள் எளிய வறிய வாழ்க்கை உடையவர்கள். அதனால் வீட்டில் கனமான தளவாடங்கள் இருப்பதில்லை, எனவே பலகை தளங்கொண்ட வீடுகளின் தாங்கும் திறனைப் பற்றி கூடுதல் கவலை கொள்ள வேண்டியதில்லை. வடகிழக்கின் கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் மியான்மர் வரையிலும் இம்மாதிரி வீடுகளையே அமைக்கின்றனர்.....//

C&P

இதுபோன்ற இடங்களில், அந்த வீட்டையும் காட்சிப்படுத்தியிருந்தால் இன்னும் மெருகேறியிருக்கும். சொல்லாமல் விடுபட்ட பல தகவல்களை ஒற்றைப் படம் சொல்லியிருக்கும்.

அடுத்தடுத்த பதிவுகளில் கவனத்தில் கொள்வாராக, ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved