Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:20:30 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 233
#KOTWEM233
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 4, 2018
வடகிழக்கிந்தியப் பயணம் --- 5

இந்த பக்கம் 2508 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



ஸோஹ்ராவில் உள்ள நோஹ் கா லிகா அருவிக்கு நாங்கள் போன சமயம் பார்த்து கடுமையான மேக மூட்டம். ஏமாற்றமாக இருந்தது.. நோஹ் கா லிகா அருவிக்கு அந்த பெயரானது வந்த காரணத்தை பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

கா லிகா என்ற பெண்ணொருத்திக்கு முதல் திருமணம் முடிந்து அதன் மூலம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. கா லிகாவை இரண்டாவதாக மண முடித்த கணவன் அந்த பெண் குழந்தையை வெறுத்தான்.

ஒரு நாள் கா லிகா வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சமயம் கணவன் உணவை சமைத்து வைத்திருந்தான். அதைப் பார்த்து வியப்படைந்த கா லிகா ஐயங் கொள்ளாமல் உணவருந்தினாள். பின்னர் பாக்கு கொட்டை கூடைக்குள் கணவனால் கொல்லப்பட்ட தனது மகளின் கைவிரல்களை கண்டுபிடித்தாள். மனத்துயரில் உள்ளம் உலைந்து போன கா லிகா அருகிலுள்ள செங்குத்தான பாறைக்கு சென்று அருவிக்குள் பாய்ந்து தன்னை முடித்துக் கொண்டாள். அன்றிலிருந்து கா லிகாவின் பாய்ச்சல் எனப் பொருள் படும்படியாக நோஹ் காலிகா அருவி என அழைக்கப்படலாயிற்று.

மேக மூட்டம் கடுமையாக இருந்தது. மொத்த வானத்தையும் பள்ளத்தாக்கிற்குள் இறக்கி நிறைத்தாற் போல வெண் குவியல். மழை தூறிக் கொண்டிருந்தது. சாலை தடுப்பின் விளிம்பு வரை சென்று ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு இளைஞியை அவருடன் வந்த முதியவர் பதட்டத்துடன் திட்டிக் கொண்டிருந்தார். அதைப்பற்றி அந்த கேமிராப்பெண் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இயங்கிக் கொண்டிருந்தார். குஜராத்தி சாயலுள்ள ஆட்கள்.

அங்கு வரிசையாக கடைகள் இருந்தன.. ஸோஹ்ரா கருவாப்பட்டைக்கு பெயர் பெற்ற இடம் போலும். இரண்டு முதிய பெண்கள் கருவாப்பட்டையை சீவிக் கொண்டிருந்தனர். சுருட்டப்பட்ட தோல் போல குச்சியாக கட்டி வைத்திருந்தனர். கருவா பட்டையுடன் அக்கடைகளில் வாழைப்பழம், தேன், பழச்சாறு, ஊறுகாய், நொறுக்குத்தீனிகள், கைவினைப்பொருட்கள் போன்றவை விற்பனைக்கிருந்தன. இந்தக்கடைகளில் முழுக்க முழுக்க இளம் பெண்களே இருந்தனர்.

மாணவி போல் தோற்றமளித்த கடை உரிமையாளரான இளைஞியிடம் பேசிக்கொண்டிருந்தபோது நீங்களெல்லாம் எத்தனை வயதில் திருமணம் முடிப்பீர்கள்? எனக் கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே பின்பக்கம் திரும்பி ஏதோ பெயரைக் கூப்பிட்டார். கூட்டுக்குள்ளிருந்து குருவி கிளம்புவது போல இரட்டைக் குழந்தைகள் குடிலின் பக்கவாட்டிலிருந்து எங்கள் முன் வந்து நின்றனர்.



அங்கெல்லாம் பருவத்துடன் காதலும் சேர்ந்தே வருவதால் திருமண தாமதம் என்ற பேச்செல்லாம் இல்லை போலும்.

மேக மூட்டம் விலகாததால் நான் அங்குள்ள ஒரு திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பூனை ஒன்று அரைக்குரலில் மியாவிக் கொண்டிருந்தது. மெல்ல என்னருகில் வந்து தன் மென் மயிர் வயிற்றை என் மேல் உராய்ந்தது. பிறகு தரையில் ஆணி அடித்தாற்போல நான்கு கால்களையும் அகல விரித்து கொஞ்ச நேரம் சலனமற்றுக் கிடந்தது. பிறகு அங்குமிங்கும் உருளத் தொடங்கியது. பூனைக்கு மண்டைக்குள் இளகி விட்டதோ என்ற ஐயம் கிளம்பியது.

அதற்குள் ஸுலைமானும் ஷரஃபுத்தீனும் அருவியைப் பார்த்து விட்டோம் என வந்து சொன்னார்கள். ஆனால் பனி மூட்டம் அப்படியேதான் இருந்தது. அந்த சாலையிலேயே கொஞ்ச தொலைவு நடந்து சென்றால் பள்ளத்தாக்கிற்குள் இறங்கும் வகையில் படிக்கட்டுகளை அமைத்திருக்கின்றனர்.

ஸுலைமான் முன்னூற்றைம்பது படிகள் வரைக்கும் சென்று பார்த்திருக்கிறான். இன்னும் நூற்றைம்பது படிகளாவது இருக்கும் என சொன்னான். என் முட்டியை நினைத்து நடையை ஐம்பது படிகள் வரைக்கும் போவோம் என முடிவு செய்து கொண்டேன், இருபது படிகள் இறங்கினவுடனேயே அருவி தென்படத் தொடங்கியது.

மேகத்தை நிலத்தில் பிணைத்து வைத்திருக்கும் வெள்ளைக்கயிற்றைப் போல அந்தரத்திலிருந்து பசுந்தடாகத்திற்குள் விழுந்து கொண்டிருந்தது. தன்னழிப்பின் வழியாக கணவனின் தவறை காலிகா தண்டித்ததினால் என்னவோ அம்புக்கூர்மையுடன் அருவி நீர் கொட்டியது.

ஷில்லாங் திரும்பும் முன்னர் கடைசியாக பார்க்க வேண்டியது ராமகிருஷ்ணா மிஷன் வளாகம். அங்கு எதற்கு போக வேண்டும்? என ஒட்டுனர் ஹுஸைன் முகஞ்சுளித்தார்.

எங்கிருந்தோ வந்த மனிதர்கள் இவ்வளவு உயரமான தொலைவான இடத்தில் இவ்வளவு பெரிய நிறுவனத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். அதற்காகவாது செல்வோம் என முடிவெடுத்தோம்.

பழுப்பேறிய நிறப்பின்னணியில் உறுதியாகவும் அகலமாகவும் நின்றது ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கூடம். திடலின் ஓரத்தில் பொன்னிறத்தில் விவேகானந்தர் சிலை. ஓரமாக ஆசிரம, அலுவலக கட்டிடங்கள். நடுவணரசின் அலுவலகத்திற்குள் நுழைந்தது போல இருந்தது..

முதலில் கண்ணில் தட்டுப்பட்டது விற்பனையகம். ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் போதனை & ஹிந்து மத நூல்கள், உருத்திராட்ச மாலை, குர் குரே வகை நொறுக்குத்தீனி பொட்டலங்கள், சாக்லேட்டுகள், கோல்கேட் பற்பசை என கதம்பமாக இருந்தது. காவியுடைத்துறவிகள்தான் விற்பனையாளர்கள்.

1924 ஆம் ஆண்டு ராமகிருஷ்ண மடத்துறவி ஒருவர் இங்கு வந்து பணி தொடங்கியிருக்கிறார். 1952 ஆம் ஆண்டு தலைமையமைச்சர் ஜவாஹர்லால் நேரு வருகை தந்து விரிவாக்கத்திற்கான அடிக்கல் நாட்டியிருக்கின்றார். மடத்தின் கீழே நெசவு பயிற்சிக்கூடமும் மேல் தளத்தில் அருங்காட்சியகமும் அமைத்துள்ளனர்.

ஷில்லாங்கின் தொன்போஸ்கோ அருங்காட்சியகத்தை விட இது பழமையானது என்பதால் பெரிதாக கவனத்தை கவரவில்லை. இங்கு படம் எடுக்க முனைந்த போது அங்கு நின்ற பொறுப்பாளர் படம் எடுக்க தடை என எழுதப்பட்ட அறிவிப்பு பலகையை சுட்டிக் காட்டினார். அங்கு மட்டுமல்ல மடத்தின் வளாகம் முழுக்க இந்த படத்தடை அறிவிப்புகள் இருந்தன. இந்த அறிவிப்பை வெறும் கரும்பலகையருகிலும் எழுதி வைத்திருந்தார்கள்.

தொன்போஸ்கோவில் தேவைப்படாத தடை இங்கு ஏன்? நீங்கள் ஐம்பது வருடம் பின்னால் அல்லவா இருக்கின்றீர்கள்? எனக்கேட்டதற்கு நாங்கள் இலவசமாக சேவை செய்கிறோம். அவர்கள் அதில் காசு பார்க்கின்றார்கள் என சூடாக மறு மொழி வந்தது.

கடை, உணவகம், சந்தை வேலை, விவசாயம் என எந்த பொது வெளியானாலும் கசீ பழங்குடியினப் பெண்களைத்தான் கூடுதலாக பார்க்க முடிகின்றது. அஸ்ஸாம் நீங்கலாக நாங்கள் போன நான்கு வ.கி. மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. ஆண்கள் என்ன செய்கிறார்கள்?

இங்குள்ள பெண்களிடம் தங்க அணிகலன்கள், சாலைகளில் இரு சக்கர ஊர்திகளையோ மிதிவண்டிகளையோ பார்க்க முடிவதில்லை. கவனித்தீர்களா? என ஷரஃபுத்தீன் கேட்டார்.

பழங்குடி வாழ்வின் கூறுகளும் கிறிஸ்தவ நெறியின் உள்ளுறைக் கூறுகளும் கலந்த உற்சாகத் திரவம் கசீ பழங்குடியினரின் வாழ்க்கைக் கலனை நிரப்புகின்றது. நிரம்பியதற்குள் மேற்கொண்டு எதைக் கொண்டு நிரப்புவது? நாங்கள் ஷில்லாங் திரும்பும்போது ஏறக்குறைய ஆறு மணியாகி விட்டது. இருளின் அடர்த்தியை பார்க்கும்போது இரவு 10 மணி போல இருந்தது. ஐந்து மணிக்கெல்லாம் அந்தி சரிந்து விட்டது. இருளும் மழையும் கலந்த கரைசலுக்குள் நின்றது ஷில்லாங்.

மதீனா மஸ்ஜிதிற்கு தொழச்சென்றோம். இஸ்லாத்தைத் தழுவிய கசீ பழங்குடியினரால் கட்டப்பட்ட மஸ்ஜித் என ஓட்டுனர் சொன்னார். மஸ்ஜிதின் மினாரா, முகப்பு உள்ளே வெளியே என எல்லா திசைகளிலிருந்தும் பச்சை நிறம் கசிந்து மரகத ஒளிர்வை தந்து கொண்டிருந்தது.





இதன் குப்பா (கவிகை மாடம்) மினாரா (கோபுரம்) இரண்டும் கண்ணாடியினால் ஆனது. இந்தியாவிலேயே இத்தகைய மஸ்ஜித் இது ஒன்றுதானாம். மஸ்ஜிதின் உள், வெளிப் பகுதிகளில் ஒரே நேரத்தில் எட்டாயிரம் பேர் வரை தொழ முடியும். உள்ளூர் முஸ்லிம்களின் பொருளுதவியில் இதனை கட்டி எழுப்பியவர்கள் ஹிந்துக்களாவர்.

மறு நாள் நோஹ்வெட் கிராமத்தில் தைலாங் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள லிவிங்க் ரூட்ஸ் பாலத்திற்கு சென்றோம். போகும் வழி முழுக்க சில் வண்டுகளின் ஓசையானது தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே வந்தது. இந்த ஓசையை வடகிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் கேட்க முடிகின்றது. சாலைக்கும் காட்டிற்கும் இடையே போடப்பட்ட ஒலி அரண் போல, வடகிழக்கின் அடையாள முத்திரை இசை போல வண்டுகளின் ரீங்காரம்.

ஷில்லாங்கிலிருந்து நோஹ்வெட் கிராமம் வரையிலான 38 கிலோ மீற்றர் பாதையில் கொஞ்சம் பகுதியைத் தவிர்த்து மீதி முழுக்க சாலைப்பயணமானது நெடுஞ்சாலையின் வறண்ட உணர்வைத் தரவில்லை. அந்த சாலைகளை, இரு கரையிலும் பசுமை அரண்களால் காப்பிடப்பட்ட கல் மண் நாளங்கள் என சொல்வதுதான் சரியாக இருக்கும். நெடும் குழாய்க்குள் வழுக்கி வழுக்கி பெருந்தொட்டிக்குள் விழுந்தது போன்ற பயண பட்டறிவு.

மலையிலிருந்து ஒழுகும் நீர்த்தாரையிலிருந்து பயணிகள் நீரருந்துவதற்கு வசதியாக குழாய்களை செருகி வைத்திருக்கிறார்கள். நாங்களும் நீரருந்தி குப்பிகளிலும் நிறைத்தோம்.

தேநீருக்காக ஒரு கடையில் நிறுத்தினோம். இங்கெல்லாம் பெரும்பாலான தேநீர்க்கடைகளில் முழு உணவும் சமைத்து பரிமாறுகின்றார்கள். பன்றி இறைச்சி இங்கு அறிவிக்கப்படாத தேசீய உணவு. நாங்கள் ஏற்கனவே இருப்பில் வைத்திருந்த ரொட்டி, பழக்கூழ், பழங்கள், நொறுக்குத்தீனிகள் பெரியதாக கை கொடுத்தது.

நோஹ்வெட் கிராமத்தில் ஏராளமான கைவினைப்பொருட்களின் விற்பனையகங்கள். இங்கு மூங்கிலும் மர வகைகளும் ஏராளமாக கிடைப்பதால் விதம் விதமான அறை, சமையல் கலன்கள், மர முட்டைகளுடன் உண்மையான பழத்துண்டங்களும் விற்பனைக்கிருந்தன.



நாங்கள் சென்றது ஒற்றைப்பாலத்திற்குத்தான் மலையாற்றின் குறுக்கே உயிருடனுள்ள மர வேர்களினால் ஆன பாலம். இதில் இரண்டடுக்கு பாலமும் உண்டு. ஆனால் அதை அடைவதில் பாதை சிரமங்கள் உள்ளன.





இடையறாத மழைப் பொழிவிற்கு பெயர் பெற்ற ஸோஹ்ராவின் சுற்றுப்பகுதிகளில்தான் இவ்வகையான உயிருள்ள மரவேர் பாலங்கள் அமைந்துள்ளன. திடுமென உயரும் ஆற்றின் நீர்ப்பெருக்கால் அடித்துச் செல்லப்படும் மூங்கில் பாலங்களுக்கு மாற்றாக கசீ இன முன்னோர்கள் இயற்கையின் போக்கிலேயே சென்று அதை தங்களுக்கு இசைவாக்கியுள்ளனர். ரப்பர் மர வேர்களை திட்டமிட்டு ஆற்றின் குறுக்காக நெய்து வளர்த்தனர். வருடங்கள் பல கடந்தன. அவர்களின் பொறுமையான முயற்சி பலன் கொடுத்தது. இவற்றின் வயது நூற்றிலிருந்து நூற்றைம்பது வருடங்கள் வரை என சொல்கின்றனர்.

பாலத்தின் இரு பக்கமும் கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். யாரையும் அதில் நிற்க விடுவதில்லை. பாலத்தின் நடுவில் நின்று படமெடுக்கவும் சம்மதிப்பதில்லை. கைக்குழந்தைக்குரிய முழுக்கரிசனையுடன் பாலம் பராமரிக்கப்படுவதால் வேர்கள் புத்திளமையுடன் வலுவாக இருக்கின்றன.

மரத்திலும் செடி கொடிகளிலும் ததும்பும் பச்சையமானது நீர்த்தளத்தில் ஊறி பாறைகளின் பழுப்புடன் கலந்து வெயிலுக்கும் நிலத்துக்கும் இடையில் ஒரு சுவர் போலவும் சுவரில்லாதது போலவும் ஒரு வன அரசிற்குரிய தோரணையை உண்டாக்கியிருந்தது. அந்த பேரரசின் எல்லைக்குள் குட்டிப் பருவத்து நினைவுகளும் கனவுகளும் மட்டுமே நடமாடிக் கொண்டிருந்தன.

இந்த உயிரி பாலம் அமைக்கப்பட்டதற்கான நினைவுக் கல்வெட்டை தாய்லாந்து இளவரசியைக் கொண்டு திறந்திருக்கிறார்கள். வடகிழக்கின் வேர்களை சரியாக புரிந்து கொள்பவர்களால் மட்டுமே வடகிழக்கை முறையாகக் கையாள முடியும். அதை விட்டு விட்டு ரொட்டி, உருளைக்கிழங்கு, ஹிந்தி, இந்தியா, நீ, நான் எல்லாம் ஒன்றுதான் என்ற ஒற்றை உருண்டையாக உருக்கி வார்க்கும் முயற்சியால் இடைவெளிதான் மிஞ்சும்.

மவ்லிங்லாங் மாதிரி கிராமத்திற்கு சென்றோம். கிறிஸ்தவ பரப்புரை பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனைக்காக இரண்டு இளம் மருத்துவர்கள் வந்திருந்தார்கள். இருவருமே ஹோமியோபதி மருத்துவர்கள். அரசு தோற்கும் அல்லது இல்லாமல் போகும் இடங்களை கிறிஸ்தவ நலன் புரி நிறுவனங்களே நிரப்புகின்றன.

படமெடுக்க முனைந்த போது பல குழந்தைகள் வெட்கி தலை திருப்பின, முகம் பொத்தின. கேமிராவிற்குள் குழந்தைமையை உறைய வைத்து விடுவார்கள் என அந்த பிஞ்சு இதயங்கள் படபடத்திருக்குமோ?





மேற்கு ஜைந்தியா மலைத் தொடரில் இருக்கும் இந்திய பங்ளாதேஷ் எல்லை நகரான தவ்கீக்கு சென்றோம். போகும் வழியிலேயே அக்கரையில் பங்ளாதேஷ் நிலப்பரப்பு தெரிகின்றது. அந்த பசுமை நிலப்பரப்பில் கால்நடைகளும் மேய்ப்பர்களும் சட்டை அணியா சிறார்களும் எறும்பு போல ஊர்ந்தனர். நூறு மீற்றர்களுக்கு ஒன்று வீதம் என எல்லை பாதுகாப்பு படையின் சாவடிகள் உள்ளன. பல சாவடிகளில் ஆளில்லை.

அப்படியான ஒரு சாவடியில் உத்திரப்பிரதேசம், ராஜஸ்தானத்தை சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் இருந்தனர். மிகவும் ஓய்வாக காணப்பட்ட அவர்களுடன் உரையாடினோம்.





பங்ளாதேஷ் முஸ்லிம்கள் பாக்கிஸ்தானிகளைப்போல இல்லை. பெங்காலிகள் நல்லவர்கள். பங்ளாதேஷ் நட்பு நாடும் கூட. எல்லை தாண்டுவோர் அன்றாடங்காய்ச்சிகள் என்பதால் அவர்கள் இங்கு வந்து போவதை நாங்கள் தடுப்பதில்லை. அப்படி வந்து போவோரிடம் சில்லறை வேலைகளை வாங்குவோம். அது போல மேகாலயாவின் மக்களும் போதை பாக்கிற்கு அடிமையானவர்கள். அவர்களின் முழு தினமும் போதையிலேயே கழிவதால் எங்களுக்கு இங்கு எந்த விதமான பாதுகாப்பு சிக்கலுமில்லை.

மற்ற வடகிழக்கு மாநிலங்கள் எப்படி? எனக் கேட்டதற்கு மணிப்பூரும் நாகலாந்தும் மோசம். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. மக்கள் கூடுதல் புழங்காத இடங்களுக்கு செல்லாதீர்கள். மிஜோரத்தில் சிக்கலில்லை என்றனர். இந்தியாவின் ஆளும் வர்க்கம், ஊடகம், பொது மனம் ஆகியவை படைத்தளிக்கும் முன் கருதலும் வெறுப்பும் மேட்டிமை & ஆதிக்க மன நிலையும்தான் இந்திய எல்லையில் நிற்கும் கடைசி சிப்பாயின் உலோக மூளையையும் ஆயுத விரல்களையும் இயக்குகின்றன.

எல்லை பாதுகாப்பு படையின் பாளையங்களும் படை வீடுகளும் வரிசையாக இருந்தன. தொடர் மழை வீழ்ச்சியினாலும். அசைந்தாடி செல்லும் பாதுகாப்புத் துறையின் கனரக ஊர்திகளினாலும் சாலைகள் உருக்குலைந்துள்ளன. தவ்கி கிராமம் இந்திய எல்லையில் உள்ளது. மறுபக்கம் பங்ளாதேஷின் சில்ஹட் மாவட்டத்தின் தமாபில் கிராமம்.

குவாஹத்தி – ஷில்லாங் – தாகா இடையிலான இந்திய பங்ளாதேஷின் வாரமொரு தடவை பேருந்து போக்குவரத்து சேவை இந்த தடத்தின் வழியாகத்தான் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இரு நாட்டு மக்களின் தொடர்பும் எல்லையோர வணிகமும் எவ்வித பதட்டமுமின்றி இந்த பகுதிகளில் நடைபெறுகின்றன.

நாங்கள் உம்ன்காட் நதித்துறையை நெருங்கவும் சாலையின் இரு மருங்குகளிலும் அமர்ந்திருந்த சிறுவர்களும் இளைஞர்களும் எங்கள் வண்டியை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் தீவிரமான முக பாவனையும் உடல் மொழியும் கொஞ்சம் பதட்டத்தை ஏற்படுத்தியது.

ஓட்டுனரிடம் கேட்ட போதுதான் அவர்கள் வாடகை படகோட்டிகள் என்றார். வாடிக்கையாளர்களை கவர்வதில் போட்டா போட்டி.

உம்ன்காட் நதி இந்தியாவில் பிறந்து பங்ளாதேஷ் வழியாக பாய்ந்து பெங்கால் வளைகுடாவில் கலக்கிறது.

நதியில் குளிப்பதற்காக நாங்கள் இறங்கியபோது எல்லை பாதுகாப்பு படையின் கண்காணிப்பு கோபுரத்திலிருந்து ஆறு இணை கண்கள் எங்களையே உற்று நோக்கத் தொடங்கின. இவர்களுக்கு இங்கு என்ன வேலை? என நினைத்தார்களோ என்னவோ?

கண்காணிப்பு கோபுரத்தின் கீழ் இரண்டு நாடுகளையும் பிரித்து போடும் பன்னாட்டு எல்லைக்கு அடையாளமாக வெள்ளைக்கொடியும் எல்லைக்கல்லும் நின்றிருந்தன. இந்த எல்லைப்பிரிவினை உம்ன்காட் ஆற்று நீரையும் ஊடறுக்கின்றது. நாங்கள் இறங்கி குளிக்கும்போது மேலிருந்து காவலர்களின் ஊதல் ஒலி கேட்டது. நான்கடி தாண்டினால் பங்ளாதேஷ் எல்லை. எனவே எச்சரிக்கை ஒலி. காற்றும் ஆற்று நீரும் எந்த ஊதல் ஒலிக்கும் காத்து நிற்கவில்லை.

சிறு கடிகள், தின்பண்டங்களை விற்கும் பங்ளாதேஷின் சிறு வணிகர்கள் கடை போட்டிருந்தனர். மலிவு விலை சில்லறைப் பொருட்களை விற்கும் கடைகள் இரு மருங்கிலும் இருந்தன.

பொட்டு வைத்த பங்ளாதேஷி ஹிந்து இளைஞிகள் உற்சாகத்தில் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்தனர். ஒரு ஊதல் ஒலியில் அவர்கள் இரண்டு எட்டுக்கள் பின் வைத்து அவர்களின் மண்ணிற்குள் மீண்டனர்.









(பயணம் தொடரும்…)

இக்கட்டுரையின் முந்தைய பாகங்களைப் பின்வரும் இணைப்புகளில் சொடுக்கிக் காணலாம்:-


முன்னுரை || பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: vilacksma (jeddah) on 05 January 2018
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45962

சுற்றுலா ஆர்வத்தை தூண்டுகிறது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வெறி (ந்தியா)
posted by: shahul hameed sak (malaysia) on 07 January 2018
IP: 113.*.*.* Malaysia | Comment Reference Number: 45964

ரொட்டி, உருளைக்கிழங்கு, ஹிந்தி, இந்தியா, நீ, நான் எல்லாம் ஒன்றுதான் என்ற ஒற்றை உருண்டையாக உருக்கி வார்க்கும் முயற்சியால் இடைவெளிதான் மிஞ்சும் c /p

பிஜேபி ஆண்டாளும், காங்கிரஸ் ஆண்டாளும், மத வெறி, இந்தி வெறி நிறைந்த கொலை வெறியர்களால் (இந்தி- யா) என்ற தேசத்தை வரலாற்றில் மட்டுமே படிக்க வேண்டியதிருக்கும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved