Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:01:27 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 68
#KOTWEM68
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 22, 2012
காயலின் கல்விச்சாலைகள்! கனவு போல் கலைந்தது ஏனோ?!

இந்த பக்கம் 3015 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அப்போது எனக்கு அஞ்சு வயசு. விசித்திரமான உலகை வியப்போடு பார்க்கும் மழலை பருவம். காலையிலிருந்தே என் தாய் சுறுசுறுப்போடு பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தாள். என்னை எழுப்பி விட்டு முகம் கை கால் கழுவி ஆடை நீக்கிய பசும்பால் தந்து உச்சியில் முகர்ந்து குளியலறைக்கு அழைத்துச் சென்று லைஃப் பாய் சோப்பு போட்டு நீராட்டி விட்டாள். வழக்கத்திற்கு மாறான அவளது அவசரமும், பாசமும் என்னை அவள் எதற்காகவோ தயார் படுத்துகின்றாள் என மட்டும் புரிந்தது.



பட்டு ஜரிகை(போலி) வேலைப்பாடுடன் கூடிய வேஷ்ட்டி முதன் முறையாக எனக்கு உடுத்தப்பட்டேன். இடுப்பிலிருந்த அரைஞான் கயிற்றில் ஒட்டிக் கொண்டிருந்த துவாக்கூடு வெளியில் தெரிய சுருட்டப்பட்ட வேஷ்ட்டிக்கு அதுவே பெல்ட்டாக மாறியது. மெல்லிய வலை பனியனும், கழுத்து முகம் என பாண்ட்ஸ் பவுடர் பூச்சும், புத்தம் புது சட்டையும், முத்து காக்கா கடையில் எப்பவோ வாங்கிய புது பின்னல் தொப்பியும் அணிவித்து ஒரு மஞ்சள் நிறப் பையில் அலிஃப், பே என தமிழ் மற்றும் அரபியில் எழுதியிருந்த பிளாஸ்டிக் அட்டை அத்துடன் ஆசாரி செய்து தந்த புது குட்டிப் பலகை மூன்று சாக்லேட்டுகள், இவற்றுடன் ஒரு தட்டில் மிக்க்சர், வேறொன்றில் மைசூர் பாகு, ஜாங்கிரி, வெற்றிலை களிப்பாக்கு, அசோகா பாக்கு ஒரு குலை கதளி வாழைப்பழம், சின்ன சில்வர் குடம் நிறைய பசும் பால், என சிலர் தயாராகி தலைவாசலில் நின்று கொண்டிருக்க, உம்மம்மா முதலில் முகர்ந்து ஏதோ முனுமுனுத்துக் கொண்டு உச்சி முதல் இடுப்பு வரை வருடி விட்டாள். அதன் பின் பெருமா, லாத்தா, சாச்சி ஆகியோர் அதே மாதிரி செய்ய “எங்கே உம்மாக்காரியெ? கூப்பிடுமா...புள்ளையெ மோக்கச் சொல்லு” என அவசரப்படுத்த ஏதோ ஒருவித பயம் என்னைக் கவ்விக் கொண்டது. உம்மா கண்ணீர் மல்க ஏதோ புலம்பிக் கொண்டு என் கண் காது நெற்றி என ஒரு வரைமுறையில்லாமல் முகர்ந்து “வாப்பா போய்ட்டு வாம்மா! அங்கெ பிரளி பண்ணக்கூடாது! நல்லா சொல் கேக்கணும்! நீ அழுவக்கூடாது! என் கண்ணுல்லெ,முத்துல்லெ, சீக்கரமா வாப்பா வந்து கூப்பிட்டு வந்துருவாங்க என்னா?” என ஏதேதோ அடுக்கிக் கொண்டே போனாள்.

நேற்று மாலையில் வாங்கியிருந்த மல்லிகைப்பூச்சரம் பால் குடத்தின் கழுத்தில் சுற்றப்பட்டு வாடிப்போய் இருந்தது. வாப்பாவின் கையில் அது சற்று கனமாகத்தான் இருந்திருக்க வேண்டும். காரணம் கையை மாற்றி மாற்றி நடந்து வந்தார்கள். குத்து மதிப்பாக ஏழெட்டு பேர் வந்திருப்பார்கள். தெருவில் ஒரு குட்டி ஊர்வலம் போல் நடந்து ஜாவியாவுக்குள் புகுந்தோம். மூங்கில் பட்டிகளால் அடைக்கப்பட்ட ஜன்னல்கள், வாசலில் நிறைய குட்டி குட்டி செருப்புக்கள், இன்னது தான் எனக் கேட்க முடியாத பல குரல்களின் கலவை அது ஒலியாகவோ? ஓசையாகவோ? தோன்றவில்லை! ஏதோ ஓதுகின்றனர் என மட்டும் தெரிந்து. நாங்கள் சலாம் சொல்லி உள்ளே புகுந்ததும் கப்சிப். சில நிமிடங்கள் மயான அமைதி நிலவியது. பரபரப்போடு கண்களை அகல விரித்துப்பார்க்கும் பார்வைகள். இன்னைக்கு நமக்கு ஜாலிதான் என குதுகலிக்கும் புன்னகை, கொஞ்சம் குசு குசுப்பு பின்னர் கலபில சத்தம் துவங்கவே டேய்...எனும் ஒரு சிங்கத்தின் கர்ஜனை! நடுநடுங்கிப் போனேன். குரல் வந்த திசையில் கலக்கத்தோடு என் பார்வையை செலுத்திய போது அந்தோ! வீற்றிருந்தது ஒரு சிம்மம். அடர்ந்த வெண்தாடி, அஜானுபாகுவான உடல் தோற்றம், விரிந்த மார்பு, உருண்டு திரண்ட புஜங்கள், கூரிய நேர் பார்வை, கவனி ஜுப்பா, உள்ளே கை பனியன், இடுப்பில் பச்சை பெல்ட், இளஞ்சிவப்பு வேஷ்ட்டி, தலையில் குஞ்சம் வைத்த துருக்கி தொப்பி, இத்தனைக்கும் சொந்தக்காரர் தாம் மண்மறைந்த மர்ஹூம் ஜெய்லாணி லெப்பை அவர்கள். அவரது வலக்கை பக்கத்தில் நீளம், குட்டை, தடிமன், ஒல்லி எனப் பல்வேறு வடிவங்களில் கம்புகள் இருந்தன. அதில் மெல்லிய வளையக்கூடிய பிரம்பு ஒன்று என் கண்ணை உருத்திக் கொண்டேயிருந்தது.



அரபி எழுத்துக்களின் அரிச்சுவரியை ஒவ்வொன்றாக படித்துக் கொண்டிருந்த காலம். பள்ளி என்றதும் பயமும் அதே நேரத்தில் நேரந்தவறாமையும், பயிலும் கட்டாயமும் பெற்றோர்களால் எனக்குச் சுமத்தப்பட்ட ஓர் பெரும் சுமையாகவே சில காலம் வரை எண்ணியிருந்தேன். நாட்கள் உருண்டோட அதுவே சராசரி வாழ்க்கை போல் பழகி விட்டது. இனி பள்ளித்தோழர்கள், பாடம் கொடுக்க வேண்டும் என்கிற அக்கறை, பல்வேறு நிகழ்வுகள், புதியவர் வருகை, இப்படி சுவரஸ்யமான நாட்களாகத் தான் பின்னர் உள்ள காலம் கழிந்தது. மறக்க முடியாத காலம் மனதில் இன்றளவும் பசுமை மாறாத காட்சியாகவே இருந்து வருகின்றது. பிள்ளைகள் ஓதும் பள்ளிகளில் ஒரு கட்டுப்பாடும் கண்ணியமும், பெற்றொர்களின் பேராதரவும் இருந்து வந்த காலம்! திருமறையின் தூய வசனங்களை துளிர்கள் உள் வாங்கி அதை ஒப்பிக்கும் போது ஏற்படும் தப்புத் தவறுகள் திருத்தப்பட்டு புதிய பாடம் எனத் துவங்கும் செயல் வழக்கம். வஷ்ஷம்ஷு துவங்கி விட்டால் அதற்கும் ஒரு பாராட்டு விழா பள்ளியில் நடக்கும். அதன் பின் முதலாம் ஜுசு அம்மயத்து அதற்கும் வட்டா எனப்படும் பண்ட பலகார உபசாரம். இனி யாசீன், ஐந்து, பத்து, பதினைந்து என முப்பது அத்தியாயத்தையும் ஒரு மாணவன் ஓதி முடித்து விட்டால் அம் மாணவனுக்கும், கற்பித்த ஆசானுக்கும் தனி மரியாதை தான். அவனை பள்ளியில் சேர்க்கும் போது செலுத்திய சீர் சினத்தியை விட பலமடங்கு அதிகமாக தம் பிள்ளை ஓதி முடித்து விட்டான் என பணமுடிப்பும், பலகாரங்களும், ஆடை அணிகலன்களும் அப் பள்ளிக்கு சமர்ப்பிக்கும் பெற்றோர்கள் நிறையவே இருந்தனர். சிலர் அதையும் தாண்டி பெட்டி சோறு, தாலஞ்சோறு என பகிர்ந்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

பள்ளிகளில் திருமறையை மட்டும் ஓதிக்கொடுக்காமல் ஒழுக்கம், நீதி, நன்னடத்தை, பெற்றோரைப் பேணுதல், கலிமா, தொழுகை அதன் சட்ட திட்டம், செயல்வடிவங்கள் என மார்க்க போதனைகளை பிஞ்சு மனதில் பதிய வைக்கும் தூய சேவையை லெப்பை என்பவரால் நடத்தப்பட்டு வரும். புதன் கிழமை மாலையில் பள்ளி முடியும் போது வரிசையாக வந்து நின்று கையை நீட்டி லெப்பையிடம் செல்ல அடியை வாங்கிச் சொல்வோம். காரணம் வியாழன் காலை கம்ச துட்டு (கமீஸ் துட்டு) அஞ்சு பைசா பத்து பைசா என லெப்பைக்கு அன்பளிப்பு அளித்தல் வழக்கம். அன்று மாலை முதல் மறுநாள் வெள்ளிக் கிழமை வரை விடுமுறை. இனி சனிக் கிழமை வழக்கம் போல் மீண்டும் பள்ளி துவங்கும். ஓதிக் கொடுக்கும் உஸ்தாதுகளுக்கு கொடுக்கும் மாத ரூபாய் மிகச் சொற்பமானதே! இரண்டு முதல் ஐந்து ரூபாய் தான். கனிசமான பிள்ளைகள் இருப்பதால் மாதக் கடைசியில் மொத்த வருமானம் நூறுக்குள் தான் இருக்கும். அதுவே அப்போது பெரிய தொகை.

வீட்டில் பெற்றொர் சொல் கேளாத, பிரளி மண்ணக்கூடிய, யாருக்கும் அடங்காத அத்தனை வாண்டுகளுக்கும் பள்ளி தான் நீதிமன்றமும், சிறைச்சாலையும். நீதிஅரசர் லெப்பை மட்டுமே! இதில் மேல் கோர்ட்டு கீழ் கோர்ட்டு என்பதோ வழக்கு பரிந்துரை என்பதோ கிடையாது. முழு அதிகாரமும் பெற்றோர்கள் ஆசானுக்கே வழங்கியிருந்தனர். தண்டனைகளுக்கும் குறைவில்லை. செயலுக்கேற்ப சிறிய பெரிய அளவிலான தண்டனைகள் உண்டு. பிட்டத்திலும் கைகளிலும் பிரம்படி வாங்குதல், தோப்புக்கரணம் போடுதல், கைகளை உயர்த்தி முட்டு போட்டு நிற்பது, குனிந்து கால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டிருப்பது, நின்ற நிலையில் ஒரு காலை தூக்கி வைத்து சரியாமல் நிற்பது, நின்று பாடத்தை மனப்பாடம் செய்வது, சுவரில் சாய்ந்து கொண்டு நாற்காலியில் அமர்வதைப் போன்று குறுகி முட்டுக்களை மடக்கி நிற்பது, மதியம் சாப்பாடு கொடுத்து விட வேண்டாம் என சொல்லி ஒரு வேளை பட்டினி போடுவது, (இதை பெற்றோர்களும் ஆமோதிப்பது அப்போது கொடுமையாகத் தெரியும்), அதையும் தாண்டி குட்டை போடுவது அதாவது தடித்த கனமான மரத்தடியில் கிளாம்பு அடித்து அதில் சங்கிலி பூட்டப்பட்டிருக்கும் அதை மாணவனின் கால்களில் பூட்டி மணிக்கணக்கில் சில வேளை நாள் முழுவதும் வைத்தல், பையன் பாத்ரூமுக்கு போனால் கூட அவிழ்த்து விட மாட்டார்கள். அதை செல்லும் இடமெல்லாம் சுமந்து கொண்டு திரியும் மாணவன் இனி தவறு என்பதை தவறிக்கூட செய்ய மாட்டான்.

சில நேரங்களில் கூட்டாக தவறுகள் செய்து பிடிபட்டால் அந்த காட்சியை பார்க்க பள்ளிவாசலில் உள்ள அத்தனை பேரையும் அழைத்து அவர்களுக்கு முன்னால் கூட்டுத் தோப்புக்கரணம் போட வேண்டியிருக்கும். உன்னலெ நான் கெட்டேன் என்னாலெ நீ கெட்டாய் அண்ணாவி என்ன செய்வாரு...னு பாடிக் கொண்டே போடுவோம். அதுவே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தாண்டும் போது ஒப்பாரியாகவும், ஓலங்களாகவும் மாறி விடும். கால்கள் கடுக்க காதுகள் சிவக்க கண்ணில் வழியும் கண்ணீர் ஆசனின் கண்ணுக்குத் தெரியாதா? என ஏங்கித் தவிப்போம். இவ்வாறான தண்டனைகள் தாம் மாணவர்களுக்கு வெட்கத்தையும், இனி செய்யவே கூடாதெனும் அச்சத்தையும், திருந்த வேண்டும் எனும் ஆவலையும் அன்று அளித்தது. இன்றைய நவீன காலங்களில் கூறப்படும் மணவியல் உளவியல், போன்ற அவியல்களெல்லாம் அப்போது கிடையாது. பெற்றோர்கள் தன் பிள்ளைகளை கண்டிக்கும் போது கூட “இரு நான் லெப்பை கிட்டெ சொல்லிக் கொடுக்கிறேன் பார்!” என்று தான் மிரட்டுவது வழக்கம். இது இக் காலத்தை சாத்தியப் படாமல் போனது ஏன்? மாணவர்களை தண்டிக்க கூடாது எனும் சட்டமும், பிள்ளையே தவறு செய்திருந்த போதிலும் அவனுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு வாத்தியார் மேல் கேஸ் போடும் பெற்றோர்களும் இருக்கின்றனர். தனக்கு சாதகமான இந்த சட்ட ஓட்டைகளைப் பயன் படுத்திக் கொண்டு மாணவன் தன்னை தட்டிக் கேட்க யாரும் இல்லை எனும் தைரியத்தில் ஆசிரியரைக் கொலை செய்யும் அளவிற்கு துனிந்து விடுகின்றான்.

ஒரு பிள்ளைக்கு பெற்றோர்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தான் கடமை, கல்வி, கட்டுப்பாடு இவைகளை போதிக்க இயலும். அவன் வெளி உலகை தெரிந்து கொண்டு தனது தன்நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள பால வாடிகள், அங்கன் வாடிகள், ஆரம்பப் பள்ளிகள், இவைகளால் மட்டுமே இயலும். எனவே தாம் பண்டைய காலத்தில் அரசர் தமது அன்பிற்குரிய அரச குமாரனை பஞ்சணையில் வைத்து பாலும் தேனும் பருப்பும் கொடுத்து போற்றி வளர்த்த போதிலும் மகன் நாடாள வேண்டுமே? உலக நடப்புக்கள், சூட்சமம், சோதனை, திறமை, பொறுமை, படை, பலம், கொடை, களம் என அனைத்தையும் கற்றறிந்து நாடுபோற்ற நல்லாட்சி தர வேண்டுமே? தந்தை பெயர் சொல்லும் தனையனாக வேண்டுமே? எனும் நோக்கில், எங்கோ ஒரு காட்டில் குடில்களில் வசித்து, கடும் குளிர், வெயில் மழை, புயல், பசி, பட்டினி, என பக்குவப்பட குருகுலங்களுக்கு அனுப்பி வைக்கின்றான். அத்தனையும் கற்று தேர்ந்து மகா புஷனாக மன்னன் மகன் முடி சூட்டிக் கொள்வான்.

இன்று நம்தூரில் இது போன்ற (மக்த்தபுகள்) ஓதிக் கொடுக்கும் பள்ளிகள் எறும்பும் ஊர கல்லும் தேயும் எனும் கதையாக தேய்ந்து மறைந்து போயிற்று. வறுமையின் காரணமாக ஒரு சிலர் மட்டுமே பள்ளி எனும் பெயரில் ஏதோ கடமைக்கு நடத்தி வருகின்றனர். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. ஆயிரம் கண்டிஷன்களோடு தான் பிள்ளையைச் சேர்க்கின்றனர். தனிச் சலுகைகள், ஸ்கூலுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு வரக்கூடாது, பேண்ட் போட்டுக் கொண்டு தான் பள்ளிக்கு வருவான். அடித்தாலோ? அல்லது அதட்டினலோ? போதும் உடனே லெப்பைக்கு போன் போட்டு, “அவன் வர மாட்டேங்கிறான். இன்னைலேர்ந்து சாச்சிகிட்டெ அவன் ஓதிக்கிடுவான். நீங்க தப்பா நினைக்காதீங்க” என சப்பைக்கட்டும் தாய்க்குலங்கள் தாராளமாகவே இருக்கின்றனர். நாங்கள் அன்று பயின்ற காலங்களில் எங்கள் லெப்பைக்கு நாங்கள் செய்த சேவைகள் ஊழியங்கள் சொல்லி மாளாது. லெப்பை எச்சில் துப்பும் படிக்கன் அல்லது மண்சிட்டியை சுத்தம் செய்வது, பலகை அழித்து கொடுப்பது. தலா இரைத்து கவுளுக்குள் தண்ணீர் விடுவது, மாடு வளர்க்கும் லெப்பைக்காக மாங்கொட்டைகளைத் தேடி அலைந்து பொறுக்கி வர அவர் அதனை உடைத்து அதன் பருப்பை தோல் நீக்கி ஆடு, மாடுகளுக்கு தீனி போடுவார்கள். இனி எங்காவது மரம் ஒடிந்து விழுந்து கிடந்தால் அதன் கிளைகளை அள்ளி வந்து இலைகள் பிரித்து இந்தாங்க என நீட்டுவோம்.

ஒருநாள் நான் பள்ளிக்கு கட்! மறுநாள் தயக்கத்தோடு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். தெருவோரத்தில் வெட்டி எறியப்பட்ட பப்பாளி மரம் எனது கண்ணில் படவே ஆர்வத்தோடு அதை இழுக்க முடியாமல் இழுத்து வந்தேன். லெப்பைக்கு இதை கொடுத்தால் நேற்று பள்ளிக்கு வராததை மறந்து விடுவார்கள் எனும் குருட்டு நம்பிக்கை. போனேன், கொடுத்தேன், இன்முகத்தோடு பெற்றுக் கொண்டார்கள். அப்பாடா! தப்பித்தோம் என நினைத்தேன். சற்று நேரத்திற்குப் பிறகு நான் பள்ளிக்கு வராத காரணத்தை லெப்பை கேட்கவே அசால்ட்டாக ஒரு நொண்டிச் சாக்கை கூறினேன். அவ்வளவு தான் அவர் எழுந்துச் சென்று அந்த பப்பாளி மரத்தண்டை இரண்டாக வெட்டி ஒரு துண்டை எடுத்து வந்து என் பின்னங் கழுத்தில் வைத்து விட்டு, “நான் வர்ற வரைக்கும் நீ இந்த இடத்தை விட்டு அசையக்கூடாது.” என எங்கேயோ ஒரு பெயர் சூட்டும் வைபவத்திற்குப் போய் விட்டார். “அடடா...! நாம தப்பு செஞ்சிட்டோமே? இந்த சனியத்தைக் கொண்டு வராமல் இருந்திருந்தால் ஒன்னு ரெண்டு அடியோடு தப்பித்திருப்போமே” என அழுது வடித்தேன். (அதை நான் சுமந்தேன? இல்லையா? என்பது வேறு விஷயம்) சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு லெப்பை வந்து என் கழுத்திலிருந்த மரத்தண்டை இறக்கி வைத்து போய் ஓது எனப் பனித்தார்கள். இது போன்ற சம்பங்கள் இப்போது நடந்தால் பெற்றோர்க்கும் லெப்பைக்கும் இடையில் ஒரு பிரளயமே நடந்து போகும்.

வருங்காலத்தில் நம் பிள்ளைகள் பெரும் சாதனைகள் புரிய சாகசம் செய்யாவிட்டலும், ஒரு சாதாரண மனிதனாக, நல்லொழுக்கம் உள்ளவனாக, பெற்றொர்களைப் பேணுபவனாக, மார்க்க நெறிகளின் அடிப்படையைத் தெரிந்தவனாக, சுருக்கமாகச் சொன்னால் ஒரு தர்த்தீபும், தர்பியத்தும் உள்ளவனாக வளர வேண்டுமெனில் முன்னொரு காலத்தில் பள்ளிவாயில்கள் தோறும் தனியிட வசதியில் நடைபெற்று வந்த ஓதிக் கொடுக்கும் பள்ளிகள் மீண்டும் உருவாக வேண்டும். உலக கல்விக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம், முன்னுரிமையில் நேர் பாதி அளவேனும், இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடிய கல்வியை போதிக்கும் இது போன்ற பள்ளிகளுக்கு கொடுத்து நம் பிள்ளைகளின் தனிமனித ஒழுக்கம் தழைத்தோங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக நமதூர் சமூக நல அமைப்புக்கள், முஹல்லாக்கள், முத்தவல்லிகள் என அனைவரும் முழு மூச்சாக ஒத்துழைத்து ஓதும் பள்ளிகளை மீண்டும் ஆங்காங்கே உருவாக்க முன் வர வேண்டும். இது ஒரு கனவாகவே கலைந்து போகாமல் நிஜமாக நிகழ்காலத்திலும் நிலைத்திருக்க வல்ல அல்லாஹ் துணை புரிவானாக! ஆமீன்.

-ஹிஜாஸ் மைந்தன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சிறிய பந்து
posted by: இப்னு சாகிப் (சதக்) (Dammam, Saudi Arabia) on 23 December 2012
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24753

நண்பன் ரபீக், ஜெய்லானி லெப்பையிடம் ஓத சென்ற சம்பவங்களை எழுதி பழைய நினைவுகளை கிழரி விட்டிருக்கிறார்.

சிறிய, பெரிய பிரம்புகளோடு, சிறிய பந்தும் அவர்களிடம் இருக்கும். யாராவது ஓதாமல் சும்மா தலையாட்டி கொண்டிருந்தால் அவ்வளவுதான். சரியா குறி தவறாமல் அந்த பந்தை வீசி, தவறு செய்த மாணவனை பந்தை கொண்டு வர சொல்லி, கை நீட்ட செய்து அடிப்பார்கள்.

நானும் இப்படி அடி வாங்கி....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...மலரும் நினைவுகள் அதிர வைக்கிறது
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 23 December 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24755

நாங்கள் தப்பித்தோம். எங்கள் தந்தை எங்களை கூட்டிக்கொண்டு கொழும்புக்கு போய்விட்டார்கள். ஆசிரியரின் நினைவலைகளில் எதுவுமே எங்களை ஆட்கொள்ளவில்லை. ஆனாலும் எங்களை எங்கள் பெற்றோர் போற்றும் அல்லது காண்பவர்கள் இன்னார் மகனா என்று கேட்கும் அளவுக்கு ஓரளவு இறை பக்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்". மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான்கொல் எனும் சொல்" என்ற குறளுக்கு இலக்கணமாக எங்களால் வாழ முடிகிறது. அல்ஹம்து லில்லாஹ்.

ஆனால் இப்போது வேறு பரிணாமம் இந்த இளைஞர்களை தொற்றிக்கொண்டது. அன்று அலிப் பே ஓதினாலும் ஐந்து வேளை தொழுதாலும் நோன்பு பிடித்தாலும் எல்லோரும் ஒன்றாக அதை ஆமோதித்தார்கள். அந்தக்காலத்திலும் சரி இந்தக் காலத்திலும் சரி நம்மை இயக்குபவர்கள் நமது பெற்றோர்களை விட நமது உஸ்தாதுகள்தான். ஆனால் இன்று நமது உஸ்தாதுகளுக்கே பாடம் படித்து கொடுப்பவர்களாக மாணவர்கள் மாறிவிட்டார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை.

இஸ்லாம் மார்க்கம் 5 காரியம் கொண்டு எடுக்கப்பட்டது என்று அன்று சொன்னவர்கள் அந்த 5 காரியங்கள் எவை எவை என்று சொல்ல வரும்போது அதில் உஸ்தாத்மார்களுக்கே கருத்து வேற்றுமை. "ஆமன்த்து பில்லாஹி என்று ஆரம்பித்து வல் கத்ரி க்ஹைரிஹீ வஷர்ரிஹீ மினல்லாஹி த ஆலா" என்று அன்று பட்டியலிடப்பட்ட விஷயங்கள் இன்று மிகைப்படுத்தப்பட்டு எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் என்று சொல்வார்களே அதே போல் அவரவர்கள் தகுதிக்கு அதில் மாற்றம் செய்து ஏற்ற இறக்கத்துடன் போதிக்கப்படுகிறது.

"இன்ன அக்ரமகும் இந்தல்லாஹி அத்காக்கும்" உங்களில் அல்லாஹ்விடத்தின் உயர்வாக கருதப்படுபவர் உங்களில் இறை அச்சம் உள்ளவர் யாரோ அவரே என்ற இறை வசனத்தை தாண்டி, நான் இன்னார் மகன், இன்னார் வம்சம். கோத்திரம், குலம் அதனால் நான் அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவன் என்று நானே என்னை சொல்லிக் கொள்கிறேன். நமது கண்ணியமும் புண்ணியமும் மிக்க உஸ்தாதுகள் நம்மை அப்படிதான் வழி நடத்தி செல்கிறார்கள். இதற்கு ஆசிரியரின் பதில் என்ன. அல்லாஹ்வின் கட்டளை திருமறை... நபிகள் நாயகத்தின் ஹதீத்கள் அவர்களின் வழிமுறை இவை இரண்டிலும்தான் ஈருலக வெற்றி இருக்கிறது என்று உறுதியாக சொல்லித்தர நமது உஸ்தாத்கள் தயாரில்லை. எல்லோருக்கும் ஒரு வகையான EGO அது எப்படி இவர்களிடம் குடிகொண்டது, அதை எப்படி அவர்களிடம் இருந்து வெளியேற்றுவது அவரவர்கள் செய்பவற்றை அவரவர்கள் சரி என வாதிக்கிறார்கள். அவற்றுக்கு குர் ஆன் ஹதீத்களிலிருந்து ஆதாரமும் தருகிறார்கள். மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் என்போன்ற சாமானியர்கள் திகைதுக்கொண்டு கை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள்.

ஆசிரியர் ஒரு நிவாரண வழியை சொல்லுங்கள்.. குறைகளை சொல்வதனால் குறைகள் நீங்கிவிடாது அதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள். முயற்சித்து பாப்போம். மலரும் நினைவுகள் மறைவதில்லை.... தொடரும் பயணங்கள் முடிவதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கட்டுரை அல்ல.. கல்வெட்டு!
posted by: kavimagan (qatar) on 23 December 2012
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 24761

ஒரு கட்டுரையை வாசித்தேன் என்று சொல்வதை விட, நதியின் நடைக்கிசைந்த படகினில் பயணித்தேன் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். சிறுவயது முதலே, சிங்காரத் தமிழின் கரம் பற்றி நடந்த காரணத்தால், நினைவுகளை நீலவானமாய் விரிக்கின்ற சக்தி நண்பருக்கு சாத்தியமாயிற்று.

பரந்து பட்ட இவ்வுலகில், விரிந்து விட்ட விஞ்ஞான சக்தியாலும் தர முடியாத வாழ்வியல் ஒழுக்கங்களை நமது முன்னோர்கள் நமக்குக் கற்றுத் தந்தவிதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காத அந்த உத்தமர்களுக்கு, நன்றி சொல்வோம். அவர்களுக்காக துஆ செய்வோம்.

மொத்தத்தில் இது வெறும் கட்டுரை அல்ல. கல்வெட்டு!

வாழ்த்துக்கள் ரஃபீக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: Mohamed Salih (Bangalore) on 24 December 2012
IP: 121.*.*.* India | Comment Reference Number: 24772

மிக அருமை ..

சொல்ல / வாழ்த்த வார்த்தை இல்லை ..

என்றும் அன்புடன் ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்.
பெங்களூர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...அருமை அருமை
posted by: NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) on 24 December 2012
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24774

மச்சான் ரபீக் உடைய அந்த நாள் நினைவுகள் நெஞ்சினில் வந்தது. காலத்திற்கேற்ற அவசியமான கட்டுரை. மக்தபுகளுக்கு சென்று கால் மடித்து குர்ஆன் ஓதியது மற்றுமல்ல. ஒழுக்கமும் உயரிய பண்புகளும் கட்டாயமாக போதிக்க பட்டதின் விளைவுதான் ஒரு நல்ல மனிதனாக (அல்ஹம்துலில்லாஹ் ) இருகிறோம்.

அண்ணல் இன்றோ ஒழுக்கம் இல்லாமல் காயல் மாநகர பாரம்பரியம் இல்லாமல் பெரியோரை எடுத்தெறிந்து உலக கல்வியில் உயர்வு பெற்று விட்டோம் என்ற அகம்பாவம், நமதூர் கலாசாரம் இன்று மண்ணாகி போய் விட்டது.

மக்தபுகள் புத்துயிர் பெறவேண்டும். ஒழுக்கமாகவும் கண்ணியமாகவும் தொப்பி அணிந்து பெரியோரை மதிக்கும் கலாசாரம் உண்டாக வேண்டும். காலத்தின் கட்டாயம் இது.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஓல்டு இஸ் கோல்ட்.!!!
posted by: s.s.md meerasahib (riyadh) on 25 December 2012
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24781

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பு நண்பர் எம்.என்.எல். முஹம்மது ரபீக் அவர்களின் கட்டுரை...... எங்களை பள்ளிப் பருவத்திர்க்கே....... கொண்டுபோய் சேர்த்துவிட்டது. நானும் ஜாவியாவில் ஓதின காலம்கள் கண்முன்னே...... தோன்றியது.

எனது உஷ்தாது மிஸ்கீன் சாஹிப் ஆலிம் அவர்கள். அவர்களுக்கு கோபம் வந்தால் பசுமை மாறாத்த நார் பிரம்பு..... நாலு திசையிலும் சுழலும். பிரம்பு இருக்கும் இடமோ...... அவர்களுக்கும் எனக்கும் இடையில்தான் இருக்கும். அதன் பக்கத்தில் ஒரு மடையும் இருக்கும். நாம..... எப்படி ஆளு.......... ஓதிக்கொண்டு இருக்கும் போதே.... ஒவ்வொரு இஞ்சாக பிரம்பு ஆலிமுக்கு தெரியாமல் மடைக்குள்ளே நகரும். இறுதியில் என் விரலும் மூணு இஞ்ச் நுழைந்து பிரம்பு மறுபக்கம் ரோட்டை எட்டிப்பார்க்கும். பள்ளி விட்டதும் பிரம்பும் வீடு வரை என்னுடன் வரும். இப்படி பலதடவை நடத்துள்ளது.......

இன்றுவரை அது அவர்களுக்கு புரியாத புதிராக இருக்கலாம். மொத்தத்தில் நண்பரின் கட்டுரை ஓல்டு இஸ் கோல்ட்.!!! என்பதை நினைவு கூறுகிறது.

வஸ்ஸலாம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...வந்திடாத மீண்டும் அந்த நாட்கள்
posted by: சாளை பஷீர் (மண்ணடி,சென்னை) on 25 December 2012
IP: 116.*.*.* India | Comment Reference Number: 24784

நண்பர் ரஃபீக்கிற்கு பூமாலைதான் சூட வேண்டும். பால்ய பருவத்து நினைவுகளின் ஏக்கம் மனதை என்னமோ செய்கின்றது.

நான் சிறு வயதில் காலணாவிற்கு அவர் வீட்டில் வாங்கி தின்ற சுண்டக்காய்ச்சிய பால் கோவா துண்டம் போல் அடி முதல் நுனி வரை கட்டுரை இனிக்கின்றது, ருசிக்கின்றது. இன்னும் பல விதமான நல்ல நினைவுகளை மனதில் நிறைக்கின்றது.

அரசிளங்குமாரரின் குரு குல கல்வி எடுத்துக்காட்டானது கட்டுரையின் உச்சம் என கூறலாம்.

நண்பர் ரஃபீக் ஓதிய அதே பள்ளியில்தான் நானும் அதே காலகட்டத்தில் ஓதினேன்.

எனது உம்மா வீட்டிற்கு நேர் எதிர் தென்புறமாக அமைந்த கண்ணியத்திற்குரிய ஜெய்லானி லெப்பை அவர்களின் மக்தபில் குட்டையுடன் நான் கிடந்த நாட்கள் என் மனக்கண் முன் மறு ஒளிபரப்பாகின்றது.

லெப்பை அவர்களால் நான் தண்டிக்கப்படும் நாட்களில் அறியாத வயதில் அன்னாரை எதிரியாகவே கருதியுள்ளேன். என்னைப் போலவே தண்டிக்கப்பட்ட மாணவர்கள் லல்லல் ஜெய்லானி நாதமூ ஜெய்லானி என கிண்டலாக பாட்டும் பாடியுள்ளோம்.

ஜாவியா கந்தூரி நாட்களில் ஒவ்வொரு நாளும் வைகறை வேளையில் குர்ஆன் ஓதி கத்தம் செய்து தேனீரும், எண்ணைப் பலகாரம் அடங்கிய நேர்ச்சையும் கொடுப்பார்கள். இவ்விரண்டும் ஜெய்லானி லெப்பை அவர்களின் பள்ளியில் ஓதும் பிள்ளைகளுக்கும் கொடுக்கப்படும்.

நான் பல நாட்கள் கண்கள் செம்ம தூங்கி விட்டு பள்ளிக்கு தாமதமாக செல்வேன். தாமத தண்டனையாக என் கைகளில் அடி விழும். அடி விழுந்த கையோடு எனக்கென எடுத்து வைத்த தேனீரையும் நேர்ச்சை பலகாரத்தையும் தருவார்கள் லெப்பையவர்கள்.

நேர்ச்சையை வயிற்றிற்குள் தள்ளியவுடன் அன்னாரின் மீதான எனது கோபம் பூனைக்குட்டி போல் எங்கேயோ ஓடி மறைந்து விடும்.

ஜெய்லானி லப்பை அவர்களின் கனிவும் கண்டிப்பும் கலந்த குடும்ப பாங்கிலான போதனை முறைகள் அன்று கற்றலை ஒரு வித நடுக்கத்துடன் கூடிய இனிய அனுபவமாகவே எங்களுக்கு காட்டியது.

யா அல்லாஹ் ! குர் ஆன் மக்தபிற்காகவே தனது வாழ்நாளை சமர்ப்பித்த எங்களது ஆசிரிய தந்தையின் மண்ணறையை ஒளியால் நிரப்புவாயாக ! அன்னாரை ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் நுழையச்செய்வாயாக !!

அவசர உலகத்தில் இன்று நமது மீட்பர்களாக நிறைய ஜய்லானி லப்பைகள் தேவைப்படுகின்றார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கணும்...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) on 25 December 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24790

கட்டுரையில் பதிய முடியாத சில சம்பங்களை இக்கருத்து மூலம் பகிர்கின்றேன்.

நான் ஓதிய காலத்தில் ஜாவியாவில் கண்ணியத்திற்குரிய சாவன்னா ஆலிம், அப்துல்லாஹ் லெப்பை, ஃபாருக் ஆலிம், கல்ஜி ஆலிம் போன்றோர் இருந்த காலம். ஒழுக்கத்திற்கும், பக்குவத்திற்கும் அடிகோலிய அப்பெருமக்கள் தங்களது சேவையை தாராளமாக தந்துதவிய பொன்னான காலம்.

நோன்புக்கு ஒரு வாரத்திற்கு முன் கஞ்சி குடிப்பதற்கு மண்சிட்டிகள் மாட்டு வண்டியில் வரும். லெப்பை எங்களில் சில மாணவர்களை அழைத்துக் கொண்டு அடுக்கி வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிட்டிகளில் உறுதியான உருவில் பெரிதான சிட்டிகளை தேர்வு செய்து பள்ளிக்கு கொண்டு வருவார்கள். நோன்பு முப்பதும் இனி அந்த சிட்டியில்தான் எங்களுக்கு கஞ்சி! குடித்து விட்டு கழுவி மீண்டும் பள்ளிக்கே கொண்டு வந்து பாதுகாத்து வைப்போம். ஓதும் பிள்ளைகளுக்கு நிறைய சலுகைகள் உண்டு. நார்சா, அழைப்பு, விசேஷம் ஆகியவற்றில் எங்களுக்குதான் முன் வரிசை! முதல் மரியாதை! முன்னுரிமை எல்லாமே!

ஒருநாள் என் பெற்றொர்கள் எனது அநியாயம் தாங்க முடியாமல் லெப்பையிடம் போட்டுக் கொடுக்க, அவர் எனது கழுத்தில் குட்டையை மாட்டி அதற்கு மைமூன் எனப் பெயரும் சூட்டி விட்டார்கள். பல மணி நேரத்திற்குப் பிறகு சரி வீட்டிற்குப் போகும் முன் அவிழ்த்து விடுவது வழக்கம்தானே? என எண்ணியிருந்த எனக்கு பெரும் ஏமாற்றமே! காரணம் இப்படியே வீட்டுக்குப் போ என அனுப்பி வைத்து விட்டார்கள். இதை சுமந்து கொண்டு ரோட்டு வழியாக எப்படி போவது? உடனே வெளியே வந்து சட்டைக் காலர் பட்டனை அவிழ்த்து பூட்டை உள்ளே போட்டு சங்கிலியை வயிற்று வழியாக எடுத்து கையில் குட்டையை ஏந்திக் கொண்டு நடந்தேன்.

என்னா? குட்டையா? யாருக்கு கொண்டு போறா? இப்படி பல புன்னியவான்களின் கேள்வி! ஆமா! தங்கச்சி பிரளி பண்ணுறா அதுக்குத்தான் லெப்பைட்டெ வாங்கிட்டு போறேன் என சாமர்த்தியமாக சமாளித்து விட்டு வீட்டுக்குச் சென்றதும் அக்குட்டையை ஆவேசத்துடன் எங்கள் வீட்டு மரத்தூணில் வைத்து சாத்து சாத்தென சாத்தினேன். உம்மா பரிதாபத்தோடு பார்த்து ஆறுதல் சொன்னால்.

அடெ! இப்ப குட்டை உடஞ்சிட்டுன்னா அதுக்கும் நீ அடி வாங்கணும் உன்னை அவுத்து விட நான் லெப்பைட்டெ சொல்லுறேன். நீ அடங்கி இரு! என வாக்கும் தந்தாள். (கருத்து நீளமாக இருப்பதால் முழுவதுமாக போஸ்ட் செய்ய முடியவில்லை! தொடர்ச்சி அடுத்த கமெண்ட்டில் பார்க்க...!)

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கணும்...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) on 25 December 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24791

முந்தைய கருத்துப் பதிவின் தொடர்ச்சி....

ஒரு முறை என் நண்பன் இப்ராஹீம் கலீல் கடுமையான சேட்டை பண்ணுவதாக அவன் வீட்டிலிருந்து தகவல் வர கம்பும் கையுமாக லெப்பை கிளம்பிச் சென்றார்கள். நடத்த வேண்டிய பூசைகளெல்லாம் முறையாக நடத்தி அவனை இரண்டு அடி நடக்கச் சொல்லி பின்னர் ஒரு தோப்புகரணம் இப்படியே தெருவில் அழைத்து வந்தார்கள். இக்காலத்தில் இது போன்ற சிட்சைகள் சாத்தியமா? எனில் சத்தியமா இல்லை எனலாம்!

லெப்பை முடிவெட்டுவது, நகம் வெட்டுவது யாவும் பள்ளியில் வைத்துதான். கையில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துக் கொண்டு நோட்டமிடுவார்கள். பேசிக் கொண்டிருப்பவனுக்கு குறிபார்த்து பந்து வந்து விழும். இனி அர்ச்சனையும் அபிஷேகமும்தான்!

ஜாவியா தோட்டத்தில் குளித்து விட்டு மடிப்பு குலையாத ஆடைகள் உடுத்தி ராஜ நடையோடு வரும்போது புது மாப்பிள்ளையைப் போல் தோற்றமளிப்பார்கள். பெரும்பாலும் லெப்பைக்கு மதிய உணவு பள்ளியில் வைத்துதான். நன்றாக சாப்பிடுவார்கள். நான் உருவத்தில் சற்று குள்ளமானவன். என் தோள் புஜம் அளவிற்கு அலுமினிய டிஃபன் ஆறடுக்குள்ளது அதில்தான் சாப்பாடு வரும். வகை வகையான உணவுகள், பழங்கள் இருக்கும். தாம் சாப்பிடும்போது அருகில் இருப்போர்க்கு பகிந்து உண்ணும் பழக்கம் உள்ளவர். க்ரீச்சிட்டு ஓடிவரும் அணிலுக்கு நிச்சயம் ஒரு பங்கு உண்டு. லெப்பையின் காலத்திற்குப் பிறகும் மதிய வேளியில் அந்த அணில்கள் வந்து போவது வழக்கம் என பிறர் கூறக் கேட்டுள்ளேன்.

பள்ளி காலங்களில் நாங்கள் பண்ணாத அட்டகாசங்கள் இல்லை. சுன்னத்து, பெயர் சூட்டுதல், நிக்காஹ், மரணம் இப்படி லெப்பை வெளியில் சென்று விட்டால் பள்ளியே அல்லோலப்படும். ஆட்டமும், பாட்டமும் அதிர வைக்கும். அந்த காலத்தில் சிறு நெய்னார் பள்ளிக்கு இரு புறமும் வட்ட வடிவில் சுழலும் கேட் இருக்கும். நாங்கள் காவலுக்கு ஆள் போட்டு வைத்திருப்போம். முதாலம் கேட்டை லெப்பை சுற்றி வந்தாலே தகவல் வந்து விடும். நல்ல பிள்ளைகளாக அமர்ந்து சத்தமாக ஓதத் துவங்கி விடுவோம்.

ஒருமுறை புதிதாக ஓத வந்த ஒரு பையனிடம் இதற்கு முன்னால் எங்கே? யாரிடம் ஓதினா? என விசாரித்து விட்டு அலிஃபுக்கு எத்தனை நுக்கத்து என்று கேட்டார்கள். அவனோ சற்றும் தயங்காமல் முப்பது நுக்கத்து என்றான். புருவத்தை உயர்த்தி கண்களை அகல விரித்து எப்படி? என்றார்கள். அவன் அதற்கு, மேலெ பதினைந்து கீழெ பதினைந்து என்றான். பள்ளி முழுவது ஒரே சிரிப்பொலி ன். லெப்பை அடிக்கடி இதைச் சொல்லி சிரிப்பார்கள்.

இது போன்று எத்தனையோ அனுபவங்கள்! மாணவர்களின் உயர்வுக்காக அந்த மஹான் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தது உண்மை! வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்க வேண்டுமெனில் அந்தக் காலத்தில் பல பள்ளிகளிலும் தம் மூச்சுக் காற்றால் (ஆவியைக் குறைத்து) தீன் வளர்க்க பாடுபட்ட என்னிலடங்கா ஆசான்களாகிய லெப்பைமார்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். நன்றி! வஸ்ஸலாம்.

-ஹிஜாஸ் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved