Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:25:48 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 92
#KOTWEM92
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 16, 2013
பள்ளிப் படிப்பும்... பிள்ளைக் குறும்பும்!

இந்த பக்கம் 8626 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கும் இத் தருணத்தில் எனது பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத பசுமை நினைவுகளாக இன்றும் என் மனதில் பதிந்திருக்கும் அந்த சுவையான சில அனுபவங்களை இக் கட்டுரையின் மூலம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
– ஹிஜாஸ் மைந்தன்.


ஒருவரது வாழ்நாளில் மறக்க இயலாத பொற்காலம் என்பது அவரது பள்ளிக்கூட வாழ்க்கைதான். காரணம் வீடு மற்றும் பெற்றொர்களின் அரவணைப்பில் மட்டுமே வாழ்ந்து வந்த நாம் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் பள்ளிக்கூடம் எனும் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் போது தான் பிறர், பிற சமூகம், பண்பாடு, தோழமை என வாழ்வியலின் அரிச்சுவடியில் முதல் அடியெடுத்து வைக்கின்றோம்.

கல்லூரி வாழ்க்கை என்பது சுதந்திரமானது. பள்ளிக்கூட வாழ்க்கை என்பது ஆசிரியருக்கும் கட்டுப் பட வேண்டும் அநியாயமும் செய்ய வேண்டும், பெற்றோருக்கும் பணிய வேண்டும், பிரளியும் பண்ண வேண்டும் எனும் ஓர் சூழ்நிலைச் சிக்கலில் இளங்கன்றுகள் தம் சுதந்திரத்தை இழந்தாலும் சுயமாக சுவாசிக்கும் ஓர் அற்புதமான பொற்காலத்தைப் பெற்று விடுகின்றன. எனவே தாம் அந்த நாட்கள் நம் வாழ்வில் என்றும் பசுமை மாறாத இனிய நினைவுகளாக பவணி வந்து கொண்டிருக்கின்றது.



எழுபது எழுபத்தி இரண்டு காலகட்டம். எனக்கு ஐந்து வயது நிறம்ப இன்னும் சில மாதங்களே இருந்தன. இப்போது இருக்கும் LKG, UKG யெல்லாம் அப்போது கிடையாது. பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோருக்கு கல்வித்தகுதி, பிள்ளைகளுக்கு திறனாய்வு, இண்டர்வியூ ஈரமண்ணு, மண்ணாங்கட்டி என ஒன்றும் கிடையாது. இருக்க வேண்டிய ஒரே தகுதி தனது வலது கையை தலை வழியாக கொண்டு வந்து இடது காதைத் தொடவேண்டும். தொட்டு விட்டால் ஒன்னாம் வகுப்பிற்கு அட்மிஷன். இல்லையெனில் நர்சரி ஸ்கூல் அதாவது நம்ம ஊர் பாஷையில் சொன்னால் குட்டியாப்பு. அன்று எனக்கு கை எட்டவில்லை எனவே கூலற்கடை பஜாரிலிருக்கும் LK தாமரை ஸ்கூல் குட்டியாப்பில் தான் முதல் பிரவேசம்.

கையில் ஏவி அண்ட்கோவின் மஞ்சள் நிறப்பையும் அதற்குள் மரச்சட்டத்தினாலான தகர க்ளிப் அடித்திருக்கும் கல் சிலேட் ஒன்று, ஒரு நீண்ட பாம்பே கல் குச்சி இவைகள் தான் நான் கற்கப் போகும் ஆயுத எழுத்திற்கான ஆயத்தக் கருவிகள்.

முதல்நாள் வகுப்பில் சேர்க்க காலை எட்டு மணிக்கே வந்த என் தாயார் இன்னும் போக வில்லை என்பது மூங்கில் பட்டியலின் வழியாக எனக்குத் தெரிந்தது. அவளைப் பார்ப்பதும் என் உதட்டைப் பிதுக்கி அழ முயற்சிப்பதும், ஆயா அம்மா வந்து கிலுகிலுப்பை பந்து இவற்றைக் காட்டி என் கவனத்தை திசை திருப்புவதுமாக நேரம் கழிந்தது.

டீச்சரம்மா அருகில் வந்து கன்னத்தைக் கிள்ளும் போதெல்லாம் அவரது நீண்ட ஜடைப்பின்னல் தலையிலிருந்து வரும் தேங்காய் எண்ணெய் மணமும், நேற்று வாங்கி வைத்து சற்றே வாடிய மல்லிகைப்பூ வாடையும், கோகுல் பவுடர் வாசனையும் எனக்குப் புதிதாகவே தோன்றியது.

வகுப்பறையில் தரையில் என்னைப் போன்ற அவஸ்த்தையில் அமர்ந்திருக்கும் மழலைகளில் சிலர் அலறினார்கள் சிலர் விளறினார்கள். சிலர் எதுவுமே நடக்காததைப் போன்று விளையாட்டுப் பொருட்கள் மீது தனது ஆராய்ச்சியை செலுத்திக்கொண்டிருந்தனர். பள்ளிக்கூட மூலையில் தொங்க விடப்பட்டுள்ள தட்டை வடிவிலான மணியில் கட்டை சுத்தியலால் அடிக்கும் போதெல்லாம் எனது தலையை உயர்த்தி கண்களை விரித்து அந்த பரிச்சயமில்லாத ஓசையைக் கூர்ந்து கவனிப்பேன். இப்படி முதலாம் நாள் வெற்றித்திருநாளாக முடிந்தது.

காலங்கள் உருண்டோட ஒன்றாம் வகுப்பு கல்லாஜி சார் வகுப்பாசிரியர். என் மீது அக்கறையும் பாசமும் கொண்டவர். நாலுமாவாடியிலிருந்து தினமும் வருவார். ஒரு முறை வீட்டில் பசியாற பழஞ்சோற்றுடன் பச்சை மிளகாய் போடப்பட்டிருந்தது. இது எனக்கு வேண்டாம் உறைக்கும் என அடம் பிடித்தழுதபோது ஆறுதலுக்காக என் தாயார், பச்சை மிளகாய் உடம்புக்கு நல்லது நீ உன் வாத்தியாரிடம் போய் கேள் என்றார். நானும் வகுப்பறையில் இதை வாத்தியாரிடம் கேட்க அன்று முதல் 46 வயதான இன்று வரை பச்சை மிளகாய் எனும் பட்டப் பெயர் எனக்கு சூட்டப்பட்டு விட்டது.

பின்னர் இரண்டாம் மூன்றாம் வகுப்பு என மாறிச் சென்ற போது மர சிலேட் ஆப்பிள் வடிவ ப்ளாஸ்டிக் சிலேட்டாகவும், மஞ்சள் நிறப் பை ப்ளாஸ்டிக் ஒயர்களால் பின்னப்பட்ட பின்னல் பைகளாகவும், அதுவே காலப்போக்கில் அலுமினியப் பெட்டிகளாகவும் மாறியது. சத்துணவு அறிமுகப்படுத்தப்படாதா காலம். ஆயினும் எங்கள் பள்ளியில் மதிய உணவு உண்டு. ரவையினால் ஆன ஏதோ ஒருவித சுவையான உணவு வழங்கப்படும்.

நெட்டைக்கொக்கு வாத்தியார் கணக்குப் பாடம் சொல்லித் தருவார். அவர் அடிக்கடி தனது சட்டைப் பையில் குத்தியிருக்கும் மை பேனாவைத் திறந்து கசிந்த மையை தனது தலையில் தேய்ப்பது வழக்கம்.

ஒன்னும் ஒன்னும் ரெண்டு, ரெண்டும் ரெண்டும் நாலு என உலாத்திக்கொண்டு தனது வேஷ்ட்டியை அவிழ்ப்பதும் பின்னர் சீராக உடுப்பதுமாக முழு பீரியடும் முடிவடைந்து விடும்.

ஒருமுறை கரும்பலகையில் சூரியன் மேற்கே உதிக்கும் கிழக்கே மறையும் என தவறாக எழுத்திப் போட்டு அன்றைய தினம் இன்ஸ்பெக்ஷனுக்கு வந்த கல்வி அதிகாரியிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டதை மறக்க இயலாது.

மூன்றாம் வகுப்பு கம்சா மைதீன் வாத்தியார். அடேயப்பா கையில் பிரம்பும் கண்டிப்பும் மிக்கவர். பாரபட்சமின்றி விளாசியெடுப்பார். இரவுப்பாட சீட்டு எனும் பாக்கெட் டயரியில் பெற்றோர்களிடமிருந்து இன்று இரவு எனது மகன் படித்தான் என கையொப்பம் வாங்கி வர வேண்டும். வகுப்பிற்கு வந்ததும் க்ளாஸ் லீடர் எல்லோரிடத்திலும் அதை வாங்கி சார் டேபிளில் வைத்து விடுவான். முப்பதுக்கும் மேற்பட்ட அத்தனை டயரியையும் வாசித்துப்பார்த்து அவரும் அதில் கையெழுத்திடுவார்.

சில வேளை பேனாவை வைத்துக் கொண்டே கோழித்தூக்கம் தூங்கி விழுவார். நாங்கள் சப்தமின்றி கள்ளத்தனமாக சிரித்து மகிழ்வோம்.

நான்காம் வகுப்பு அலாவுத்தீன் சார், ஹார்மோனியப்பெட்டி எஸ்போன் சார், தபலாக் கொட்டு அப்பன் சார், வேஷ்ட்டியைத் தூக்கி பின்னால் கைகளைக்கட்டிக் கொண்டு நடக்கும் தங்கராஜ் சார் இப்படி பல பிரிவுகள் இருந்தன.

அலாவுத்தீன் சார் எங்களைப் பாடச் சொல்லி கேட்டு மகிழ்வார். அவர் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர் என்பது எங்களுக்குத் தெரியும். நான் பாடும் போது தொப்பி போட்ட எம்.ஜி.ஆர் பிறருக்கு தொப்பி போடும் எம்.ஜி.ஆர் என பொடி வைத்து பாடியதும் நான்கு குட்டுகள் எனது தலையில் விழுந்தன.

ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக இருந்தது ஹெட்மாஸ்டர் தங்கபாண்டி சார். விசிலும் நார்க் கம்பும் அவரோடு ஒட்டிப்பிறந்ததோ? என்னவோ? அவரது மகன் அலெக்சாண்டர் என்னோடு படித்த சக மாணவன்.

அசம்பெளியில் ஸ்கூல் அடென்ஷன் எனக் குரல் வந்ததும் சலசல சத்தம் மறைந்து அமைதியுடன் வரிசையில் நின்று வாத்தியார் சொல்லுவதைக் கவனமாகக் கேட்போம்.

தமிழ்த் தாய் வாழ்த்து, ஆதியருள் கனிந்திளங்கி, ஓதுவோம் வாருங்கள், போன்ற பாடல்கள் ஒலிக்க தமது திறமைகளை ஆர்மோனியப்பெட்டி மற்றும் மிருதங்கத்தில் ஆசிரியர்கள் வெளிப்படுத்த எல்கே அப்பா எல்.எஸ். போன்றோர் அறிவுரைகள் கூற, இப்படி அந்த மகத்துவமான நிமிடங்கள் இன்னும் நீளாதா? என ஏங்கியதுண்டு.

அவ்வப்போது எல்கே அப்பா மாணவர்களை வரிசையாக நிற்கச் செய்து விரல் நகத்தைப் பார்பதும் ஈ...எனப் பல்லிளிக்கச் சொல்லி பரிசோதிப்பதும் அவர்கள் மாணவர்களின் நலனில் மீது கொண்டுள்ள அக்கறைக்கு எடுத்துக்காட்டாகும்.









இண்டர்வெல் எனும் பாட இடை வேளையின் போது கூலற்கடை பஜாரே களை கட்டும். கலர் கலராக அடுக்கி வைக்கப்பட்ட சர்க்கரைப் பாணி பாட்டில்களை கைவண்டியில் வைத்து ஐஸ் கட்டியை செதுக்கி கண்ணாடி கிளாஸில் நிறைத்து அதை வண்ணமயமாக்கி கட்டைக்குச்சியைப் போட்டு தரும் சீவல் ஐஸ், மூலையில் சாக்கு மற்றும் தென்னை ஓலைகளால் வேயப்பட்ட குட்டிக் கூடாரத்திற்குள் மெலிந்த உடலும், சுருக்கு விழுந்த முகமும், கூன் முதுகுமாய் படு ஜோராக வியாபாரம் செய்து வரும் பிராட்டி! அவளிடத்தில் தன் வேஷ்ட்டியில் அள்ளி வந்த புளியங்காய்களை மொத்தமாக கொடுத்து காசு வாங்கிச் செல்லும் சுபுக்கு எனும் புளியங்கா கள்ளன், கூறு போட்டு விற்கும் கொடுக்காப்புளி, மாங்காய், கொல்லாம்பழம், சுட்ட பனைங்காய், சொடக்குத்தக்காளி, ஒட்டுப்பழங்கள் இப்படி வகை வகையான தின்பண்டங்கள் பிராட்டியின் ஓலை சூப்பர் மார்க்கெட்டில் தான் கிடைக்கும்.

அருகில் மரப்பெட்டியில் சவ்வு மிட்டாய்களை விற்பனை செய்யும் தொட்டாசியை மறக்க இயலாது. அவர் டீ குடிக்கச் செல்லும் போது நான் தான் அவர் பெட்டிக்கு பாதுகாவலன். அதற்கு கூலியாக எனக்கு ஐந்து பைசா சவ்மிட்டாய் இலவசமாகக் கிடைக்கும் போது அலாதியான ஆனந்தம்.

பக்கத்திலுள்ள சந்தை அப்போது கட்டிடமாக இல்லை ஓலைக்கூரைகள்தான் இருந்தன. அதைச் சுற்றி பல்வேறு வியாபாரிகள் கூட்டங்கூட்டமாக இருப்பார்கள். மரவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, சீனிக்கிழங்கு, அகத்திக்கீரை, வெள்ளரிப் பிஞ்சு, கொய்யாப்பழம், நாவற்பழம், மாம்பழம், பலாப்பழம், நெல்லிக்காய், பழைய பூட்டு சாவி, உபயோகித்த டார்ச் லைட்டு, மர்ஃபி ரேடியோ , சைக்கிள் டைனமோ இப்படி அந்த இடமே ஒரு பல்பொருள் அங்காடியாகத் தோன்றும். நமதூர் பாஷையில் சொன்னால் அங்கு பில் போட எங்களில் ஒரு குழுவே இருந்தது.

ஆறாம் வகுப்பு மாறியதும் ஹைஸ்கூலுக்குப் போனோம். எங்கள் வழக்கமும் வாடிக்கையும் தலைகீழாக மாறியது.

நீண்ட கோபுரத்தில் ஊரையே உசுப்பிவிடும் சங்கு (சைரன்) பயன்பாட்டில் இருந்து வந்தது. திரு ஞானய்யா சார் தான் தலைமையாசிரியர். சுடலையும், முருகனும் மெய்க்காப்பாளர்கள். இண்டர்வெல்லுக்கு கேட்டு பூட்டப்பட்டிருக்கும். வெளி நடமாட்டம் குறைவு இவையெல்லாம் எமக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது.

எதிரே இருக்கும் கொல்லன் பட்டறை பம்பரத்திற்கு ஆணி போட வசதியாக இருந்தது. முடி வெட்டும் கடை, கடலை வறுக்கும் கடை (வறுக்கும் போது வகுப்பறை வரை வாசம் மூக்கை துளைக்கும்) பள்ளியில் தமிழ் பாடம் திரு நாராயணன் அவர்கள் பாடத்தை ராகத்தோடும் அவருக்கே உரித்தான நகைச்சுவை நையாண்டியோடும் நடத்துவார்.

நாயை அடிப்பதில் ஆராம்பள்ளித் தெருக்காரந்தான் (மத்தீன்) கெட்டிக்காரன். ஓடுற நாயில் காலில் அடிக்கணுமா? வாலில் அடிக்கணுமான்னு அவனுக்குத்தான் தெரியும் என சொல்லிக் கொண்டே அவனது கை முழிகளில் ஸ்கேலை குறுக்காக வைத்து டட்டொடைன்...என்று உடம்பைக் குலுக்கிக் கொண்டே அடிப்பார்.

அடுத்த வகுப்பில் அதே பாடம் நடத்தும் ஜோசப் சாருக்கும் நாராயணன் வாத்தியாருக்கும் அடிக்கடி செல்லச் சண்டைகள் நடக்கும்.

தேனாய் தீப்பழமாய் என இழுத்து ராகத்துடன் அவர் பாடம் நடத்த ஒரே மூச்சில் அந்த செய்யுளைப் படித்துக் காட்டும் ஜோசப் சார், யோவ்...நிறுத்தி நிதானமாப் பாடம் நடத்தும் ஓய் என்று இவர் கிண்டலடிக்க இப்படி வகுப்பறையில் ஒரே அமர்க்களம்தான். அவரிடம் தான் நான் டியூஷன் படித்தேன். வந்ததும் வராததுமாக ப்ளாக் போர்டில் கடகடவென எழுதிப்போட்டு விட்டு அமர்ந்துவிடும் கண்ணன் சார் எனும் இராமநாதன் வாத்தியார் என்னைப் பார்த்து எழும்புலே..ராஸ்க்கல் என சொல்ல நான் எழுந்ததும் உன்னை எவன்டா எழச் சொன்னான்? எனக் கடுப்பாவார். அவருக்கு சற்று மாறுகண் என்பதால் யாரை எழச் சொல்லுகினார் என்கிற குழப்பம் வெகுநாட்களாகவே எனக்குள் இருந்து வந்தது.

உன்னை வெச்சு பாடம் நடத்துறதுக்கு நாலு கழுதைகளை வெச்சு பாடம் நடத்தினா அதுகளாவது நல்ல படிச்சு பாஸாயிட்டு போகும். நான் வேலை வெட்டி இல்லமயாடா பாடம் நடத்துறேன்? போங்க போய் மேனேஞ்மெண்ட்கிட்டெ சொல்லுங்க..எனக்கு இந்த மடமில்லைன்னா சந்த மடம்! எனப் பொரிந்து தள்ளுவதை நல்ல பிள்ளைகள் போல் முகத்தை வைத்துக் கொண்டு நாங்கள் ரகசியமாக ரசிப்போம்.

நாக்கை இரண்டாக மடித்து பல்லால் கவ்விக் கொண்டு சாத்து சாத்தும் நெய்னா முகம்மது சார் எனக்கு கிளாஸ் டீச்சர்.

அடே! வாப்பா நெய்னா முகம்மது நீ எனக்கு ஒரு அழகான பையனை முடிச்சு தாவேன் என கலாய்க்கும் சபியா கம்மாதான் எங்கள் பள்ளியின் அப்போதைய ஹீரோயின். துப்புறவு பணிக்காக அவர் பாடவேளைகளில் வந்துவிட்டால் ஒரே களேபாரம்தான்.

வகுப்பு நேரங்களில் பூனை போல ஓசையின்றி வந்து எட்டிப்பார்க்கும் மதிப்பிற்குரிய ஞானய்யா சாருக்கு அந்த பெயரே பட்டப் பெயராகி விட்டதுதான் உண்மை.

ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு இலக்கிய மன்றம் இப்படி வருடங்கள் ஓடின. வரலாறு பாடம் நடத்து செய்ஹுலா சார் தான் எனக்கு வகுப்பாசிரியர். அவரிடமுன் நான் டியூஷன் படித்திருக்கின்றேன். எளிமையானவர், இபாதத்து நிறைந்த நல்ல மனிதர். தனது இயலாத கைகளை குவித்து வைத்து மொத்து மொத்தென்று மொத்தும் போதும் வலிப்பதில்லை.

அறிவியல் பாடம் நடத்தும் ராமன் சார் தனது நெற்றியில் சிவப்பு நிறத்திலான ஒரு மெல்லிய கோடு போட்டுக் கொண்டு வருவார். அவருக்கு பட்டை எனப் பெயர் வைத்திருந்தனர். கிராப்ஃட் சார் அடேயப்பா...ஒரு கதை ஒன்று சொல்லுவார். ஏதோ மந்திரப்பந்து...மரம் வளர்ந்துகிட்டே போகும் மாயாவி, மாயக்கிளவி இப்படி முடிவில்லா கதை சொல்லுவதில் அவருக்கு நிகர் அவரேதான். எனவே தாம் நம் மக்களால் பெருமையுடன் கப்ஸா மன்னன் என அழைக்கப்பட்டார்.

அப்போது ஆங்கில மீடியம் துவங்கப்பட்ட காலம். கின்ஸ்லி வாத்தியார் புதிதாக வந்தார். அவர் அடிக்கடி சைலன்ஸ் எனக் கூறுவதால் அவருக்கு சைலன்ஸ் சார் எனும் பெயர் நிலைத்தது.

டிராயிங் சார் அட்டை, காட்போர்டுகளில் படங்களை ஒட்டி அதை மெல்லிய அரத்தால் வெட்டியெடுக்கவும், ஓவியங்கள் வரையவும் கற்றுத்தருவதில் வல்லவர். யாரிடமும் அதிகம் பேசுவதோ வழகுவதோ கிடையாது. எனவே அவருக்கு பட்டப்பெயரும் கிடையாது.

ட்ரில் மாஸ்ட்டர் கோல்டு ராஜ் சார் ஆங்...ஆங் லைனாப் போ...என பாவலர் பூங்காவிற்கு விளையாட எங்களை அழைத்துச் சொல்வார்.

சாகுல் ஹமீது சார் எங்களை ஸ்கூல் விட்ட பிறகும் (எக்ஸஸைஸ்) உடற்பயிற்சி செய்யச் சொல்லி உயிரை எடுப்பவர். பள்ளி விட்ட பிறகும் எங்களை அவர் பழி வாங்குவதாகவே அப்போது தோன்றும்.

சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை போன்ற அமைப்புகள் அப்போது தான் புதிதாக நம் பள்ளிக்கு அறிமுகம் செய்யப்பட்ட காலம். காக்கி உடை தொப்பி, ஷூ, சாக்ஸ் என ஒரு போலீஸ் தோரணை அந்த சீருடைக்கு இருந்தது. அதில் சேருவதற்கு உயரம், உருவம் மற்றும் காலை சேர்த்து வைக்கும் போது முட்டுகள் ஒட்டக்கூடாது என பல விதி முறைகள் இருந்தன. நான் குள்ளமாக இருந்த படியால் தேர்வு செய்யும் வரிசையில்கூட நிற்கின்ற தகுதியை இழந்தேன்.

அந்த காலத்தில் ஒர் சுவரஸ்யமான நிகழ்வு நினவுக்கு வருகின்றது. நம் பள்ளியை ஒட்டி மெயின் ரோட்டில் சோமசுந்தர நாடார் என்பவர் குளிர்பாணக் கடை வைத்திருந்தார். பெரிய செட்டுக்களான அலி அக்பர், காஜா போன்றோர் NCC யில் பயிற்சி முடிந்த கையோடு சர்பத் குடிக்க சோமசுந்தரத்தின் கடைக்கு வந்துள்ளனர். காக்கி உடையில் அவர்களைப் பார்த்ததும் யப்பா..நீங்க எப்ப போலீசானீங்க? என வெள்ளந்தியாக அவர் கேட்டதை பிடித்துக் கொண்டு ஆமா அண்ணாச்சி! நாங்க இப்ப ஆறுமுகநேரி ஸ்டேஷன் போலீஸ் ஆயிட்டோம். நான் கான்ஸ்டபிள் இவன் ஏட்டய்யாவாயிட்டான். ஆமா உங்க கடைலெ கிளாஸெல்லாம் சுத்தமா இருக்கா? நன்னாரியிலெ கலப்படமில்லையே? நாங்க டெய்லி வந்து செக் பண்ணுவோம் என அவரை மிரட்ட, வாங்க தம்பி நீங்க எப்ப வந்தாலும் காசு தர வேண்டாம் சும்மாவே குடிச்சிட்டுப் போங்க ஆனா கம்ளைண்ட் மட்டும் பண்ணிடாதீங்க என அவர் மிரண்டு போயிருக்கிறார்.



இப்படியே பல நாள் அவர்கள் ஆட்டையைப் போட ஒரு நாள் வாத்தியார் ஒருவர் சோமசுந்தரத்திடம் விபரத்தை விளக்கமாகச் சொல்ல சர்பத் குடிக்க வந்தவர்கள் மீது வாங்கடா வாங்க துலுக்கப்பயபுள்ளைங்களா...இம்புட்டு நாளா என்னயா ஏமாத்தினீங்க? என ஆத்திரத்தோடு கிளாஸ் கழுகிய தண்ணீரை அவர்களுக்கு மேல் வீசவே, ஓஸி சர்பத் குடிக்க வந்தவர்கள் என்ன நடந்தது என தெரியாமல் தலை கால் தெறிக்க ஓடினார்களாம்.

அதே குறும்புக்கார மாணவர்கள் காக்கி யூனிஃபார் அணிந்து கொண்டு பகல் நேரங்களில் மிடுக்கோடு முடுக்குகளில் பவணி வர அப் பகுதி பெண்கள் போலீஸ்க்காரர்கள்தான் வந்து விட்டார்கள் என பதறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடி ஒளிந்தார்களாம். நாளடைவில் இந்த குறும்பர்கள் நம்மவர்கள்தாம் எனத் தெரிய வர தாய்க்குலங்களின் அர்ச்சனை பலமாக இருக்க இவர்கள் ஓடி ஒளிவார்களாம். இப்படி எகப்பட்ட குறும்புகள் பள்ளிக்கூட வாழ்க்கையில் மட்டும் தான் கிடைக்கும்.





அந்த காலத்தில் தெருக்களில் வலம்வரும் கனி ஐஸ், ரெக்ஸ் ஐஸ், ராஜன் ஐஸ், பால் ஐஸ், சேமியா ஐஸ், நுனியில் மட்டும் இருக்கும் ஜவ்வரிசி ஐஸ் இவைகளை சுவைக்கத நபர்களே இருக்க முடியாது.

மஃரிப் ஆகி விட்டால் ஐந்து பைசாவுக்கு இரண்டு ஐஸ் கிடைக்கும் ஊருக்கு வெளியில் ஐஸ் பெட்டிகளிலிருந்து கொட்டப்படும் பனிக்கட்டிகளை ஓடிப்போய் எடுத்து சுவைப்பதும் அது உப்பு கரிப்பதும் ஒரு டேஸ்ட்டுதான்.

மண்ணில் கிடக்கும் ஐஸ்பார்களில் ஏறி நின்று கூத்துப்போடுவதும் ஓர் குளிந்த அனுபவமே! குமரன் சைக்கிள் மார்ட் மீசை, ஹபீபா சக்கிள் மார்ட், SMT, சலீம், ஜுவைரியா, யாசீன், தம்பி, போன்றவைகள் தான் நல்ல பொழுது போக்கிற்காக உதவும் பிரதான ஸ்தாபனங்கள்.

கால்வண்டி, அரை வண்டி, முழு வண்டி என சைக்கிள் கடைகளில் ஒரு மணிநேர வாடகைக்கு எடுத்து அதை பின்னாலிருந்து ஒருவன் பிடித்துக் கொண்டே ஓடி வர நாம் தத்தக்க பித்தக்கா என ஓட்டி அவன் கையை விடும் போது சரிந்து விழுந்து நொறுங்கிய அனுபவமும் உண்டு. பின்னர் டைம் ஆயிடுச்சுடான்னு பதறிக்கொண்டு ஓடி கடைக்குச் சென்றதும் கடிகாரத்தைப் பார்த்தது அடடா அஞ்சு நிமிடம் கூடிப்போச்சே என அசடு வழிந்து நின்றதும் உண்டு.

தைக்கா தெரு கருவண்டு எனும் நண்பன் புளிய மரம் ஏறுவதில் எக்ஸ்பர்ட். அவனை ஊர் முழுக்கத்தேடினாலும் கிடைக்க மாட்டான். புதுப்பள்ளிக்கு எதிரே அமைந்துள்ள புளியமரத் தோட்டத்தில் மரக்கிளைகளில் படுக்கை செய்து அதில் குடியேறி குடித்தனமும் நடத்திவிடுவான். அதே மரத்தில் சுபுக்கு காக்காவை கட்டி வைத்து உரித்த கனவான்கள் பலர் இன்று மண் மறைந்து விட்டனர்.





மனதில் மறையாத இது போன்ற அனுபவங்களை எழுதிக்கொண்டு போனால் முப்பது பாகங்கள் ஆனாலும் முடியப்போவதில்லை. ஏதோ என் நினைவில் நீங்கா இடம் பெற்ற சில சம்பவங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்துள்ளேன். இது யாரையும் குறை கூறுவதற்காகவோ அல்லது குறைத்து மதிப்பிடுவதற்காவோ அல்ல என்பதைக் கூறி விடை பெறுகின்றேன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: vilack noor mohamed (dubai) on 16 June 2013
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28084

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! வந்ததே! தம்பியே, ரபீக்கே! இந்த நாள் அன்று போல் இல்லையே அது ஏன் ஏன் அருமை தம்பியே?

தம்பி ரபீக் கொஞ்ச காலமாக இளைமைக்கால நினைவுகலையே உசுப்பேத்தி விட்டுக்கொண்டு இருக்கிறார். காயலும்,கால்பந்தாட்டமும் அதுக்கு சுட ச்சுட கமெண்ட் எழுத நினைத்தேன் சமயம் கிடைக்கவில்லை.

நானும்,எனது அருமை நண்பர்கள் எஸ்.எ.எஸ். சதகதுல்லாஹ் (சவுதி இ.டி.எ.எப்.டி), சாலை பாசீன் எல்கே பள்ளியில் 1974-1975 அடித்த சில கூத்துகளை சொல்லித்தான் ஆகவேண்டும்.

பள்ளியில் உள்ள போனை எடுத்து ஆறுமுகநேரி சப் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு (பெயன்விலை இல் இருந்தது) போனே போட்டு டேய் உடனே ஒரு லச்சம் ருபாய் எடுத்துகொண்டு காயல்பட்டணம் கடற்கரைக்கு வரேவேண்டும் என்று சொன்னயுடன் டேய் யாருடா? யாருடா?என்று அந்த எஸ்.ஐ கேட்டாரே பார்கலாம்.(அப்போதெல்லாம் போனை டிரெஸ் பண்ணமுடியாது)

ஒருநாள் வகுப்பு நடந்து கொண்டு இருக்கும்போது நண்பன் பாசீன் பெல்லை அடித்து களபரம் பண்ணிவிட்டான்,உடனே ஹெச்.எம். ஞாநையா வந்து நான் முருகனை அல்லவா பெல் அடிப்பதற்கு வைத்து உள்ளேன் .நீ எப்பம்பா பியூன் வேலைக்கு சேர்ந்தாய் என்று கேட்டாரே பார்கலாம்.

திரு ஞானியா அவர்களும் சரி,கண்ணியதிருக்குரிய கல்வித்தந்தை எல்கே மாமாவும் சரி எங்களைத்தான் அந்த சோமு நாடார் கடையில் போய் சர்பத் வாங்கி வரசொல்லுவர்கள். நாங்கள் சர்பத் வாங்கி வரும்போதே கொஞ்சம் குடித்துவிட்டுத்தான் கொண்டுபோய் குடுப்போம்.அவர்கள் கேப்பார்கள் ஏன் சர்பத் குறைந்து உள்ளது,நாங்கள் சொல்லுவோம் சார் கீழே சிந்திவிட்டது என்று.

அடுத்து எதாவது தவறு செய்து விட்டால் கண்ணியத்திற்குரிய எல்கே மாமா அவர்கள் பிரம்பை எடுத்து அடிக்கும் பொது டேய் உங்க வாப்பாவை தெரியும், உம்மாவை தெரியும், கம்மாவை தெரியும் என்று சொல்லும்போது நாங்கள் சொல்லுவோம் எங்க வீட்டு வேலைக்காரியை தெரியுமா என்று கேப்போம். அப்போது எல்லோரும் சப்தமாக சிரித்துவிடுவார்கள் கண்ணியதிருகுரிய எல்கே மாமாவும் சேர்ந்து சிரிப்பார்கள்.

இன்னும் எழுதி கொண்டு போகலாம்.

பள்ளி வாழ்க்கை அவ்வளவு இனிமையானது. சுகமான ராகங்கள். ஆனால் எங்களுடைய அருமை பள்ளித்தோழர்கள் ஒரு சிலர் எங்களை பிரிந்து ஆக்ஹிரத் சென்று விட்டதை நினைக்கும்போது நெஞ்சு வலிக்கிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக!ஆமீன்!

விளக்கு நூர் முஹம்மது.துபாய்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: Hameed Sulthan (Mumbai) on 16 June 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 28085

என் பள்ளி நினைவுகளை REWIND பண்ணதுக்கு நன்றி. நான் என் office work அதிகமாகும் போது இந்த பள்ளி பருவத்தை நினைத்து பார்பேன்.அந்த நிம்மதியான life இப்போ இல்லை. நாம் அனுபவித்த விளையாட்டுகளை நம் பிள்ளைகள் அனுபவிப்பது இல்லை. Jazakkallah Mr.Hijaz.

இன்னும் இது போன்ற கட்டுரை உங்களிடம் எதிர் பார்த்தவனாக

LK school old student Hameed Sulthan


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அருமை அருமை !
posted by: Raiz (Sydney) on 17 June 2013
IP: 156.*.*.* Australia | Comment Reference Number: 28092

ஆஹா! ஆஹா , ஆழ் மனதை வருடும் அழகான ஆழமான கட்டுரை! நன்றி ஹிஜாஸ் மைந்தன்!

நம் ஆழ் மனதில் ஆயிரமாயிரம் சந்தோஷமான பதிவுகளும் சில கஷ்டமான பதிவுகளும் மூழ்கி கிடந்த போதிலும், எப்போதும் சந்தோசத்தை மட்டுமே கிளறும் ஒரே பருவம் ....பள்ளி பருவம்!

நான் 1978-79 ல் 'குட்டியாப்பு' படிக்கும்போது நீங்கள் சொல்லும் அந்த டீச்சர் இருந்தாங்க , அன்பானவங்க, கொஞ்சம் காலை சரித்து நடப்பார்கள்! ஆனால் ஆயா கொஞ்சம் கண்டிப்பு! அங்கே இருந்த மர குதிரை இன்றும் என் மனதில் ஓடுகின்றது!

எங்கள் முதல் வகுப்பு சாரை 'bullet ' சார் என்று அழைப்போம் (கொஞ்சம் குண்டாக இருப்பார்கள்) -மன்னிக்கவும் அவர் பெயர் மறந்து விட்டது !

நாங்கள் படிக்கும்போது ஹல்லாஜி சார் ஸ்கூல் பின் புறம் ஒரு line வீட்டில் தங்கி இருந்தார்கள்! ரொம்ப நல்ல சார் ! அவர்கள் எனது இரண்டாம் வகுப்பு சார் ! அவர் , 1980 ல் மக்கள் தொகை கணக்கு எடுப்பு எடுப்பதற்கு என்னையும் எனது நண்பன் noor mohideen யும் KTM தெருவுக்கு பொறுப்பாக போட்டார்கள்! ஆனால் நாங்கள் இருவரும் எங்கள் வீட்டு படியில் இருந்த படியே எல்லா வீட்டு details யும் fill up பண்ணினோம் (எந்த வீட்டுக்கும் போக வில்லை! )

பீர் முஹம்மத் சாரும் (இப்பொழுது சொளுக்கர் தெருவில் இருக்கிறார்கள்) ரொம்ப அன்பாக பழுகுவார்கள் !

எங்கள் காலங்களில் நாங்கள் LK அப்பாவை பார்த்ததில்லை , எங்களுக்கு எல்லாமே LS அப்பா தான் (நான் ரொம்ப நாளாக அவங்கதான் LK அப்பா என்று நினைத்து கொண்டிருந்தேன்)

நாங்கள் 5ம் வகுப்பு படிக்கும்போது புஹாரி என்ற நண்பன் எல்லா சினிமா படங்களையும் பார்த்து விட்டு என்னிடமும் Noor Mohideen டமும் (அப்ப நாங்கள் சினிமாவே பார்த்ததில்லை) ஒவ்வொரு காட்சியையும் தத்ரூபமாக நடித்து காண்பித்து ,,, ரீல் விட்டு எங்களை வறுத்து எடுப்பான்!

மாணிக்கம் சார் மிக உயரமானவர், POCKET ல் தான் அவர் கை எப்பவும் இருக்கும், அமைதியின் உருவானவர் , இங்கிலீஷ் வாத்தியார் !

எஸ்போன் சார் அப்போதே மிக பிரபலம், வெரி ACTIVE AND LIVELY சார் !

இப்படி எவ்வளவோ ஆயிரமாயிரம் நினைவுகள் ! கிளறி விட்டதற்கு ஹிஜாஸ் மைந்தனுக்கு ஆயிரம் நன்றிகள் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. காலப்பதிவின் பெட்டகம்
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 17 June 2013
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28093

ஹிஜாஸ் மைந்தா, அந்த காலத்துல வீடியோ கேமரா எங்கப்பா இருந்தது, மொபைல் போனும் கெடையாதே, அப்புறம் எப்படி இவ்வளவு நேர்த்தியான HDMI குவாலிட்டி பதிவுகள். கண்கள் நிறைகின்றன. பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பதிவு.

கீரி குளத்திலும், மாட்டு குளத்திலும் மீன் பிடித்த அனுபவமும், குட்டியாப்பள்ளி புதருக்குள் போய் கவுதாரி பிடிக்க எத்தனித்த தருணங்களும் தனக்கு வாய்க்கவில்லை போலும். அல்லது இது பள்ளி வாழ்வைப்பற்றிய பதிவு மட்டும்தானா?

ஞாயிற்று கிழமைகளில் தெரு அளக்கப்போகும்போது ஒலி மாசு இல்லாத அந்த காலத்தில் வீடுகளில் இருக்கும் பழங்காலத்து மணிகளின் டிக் டிக் ஓசை, புகை இரத வண்டியின் பெருமூச்சு, சிட்டுக்குருவிகளின் சிணுங்கல்கள், வால்வு ரேடியோ பெட்டியின் "ஆல் இந்தியா ரேடியோ, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி" என்ற கணீர் குரல், மாட்டு வண்டிகளின் சலங்கை ஒலி மற்றும் கல் ரோதை சரல் ரோட்டில் செல்லும்போது எழுப்பும் சப்தம், எப்போதாவது கேட்கும் நாடார்களின் புல்லட் ஓசை மற்றும் ஊரில் அன்று இருந்த ஒன்றிரண்டு கார்களின் பீப் பீப் என்று மட்டும் ஒலிக்கும் ஹாரன் சப்தம்,

இன்னும் எத்தனையோ.....

நன்றி நண்பா, மனம் கசிந்து கண்களில் நீர் வருகிறது, என்று வருமோ அந்த வசந்த காலம். ஹூம், அது வரப்போவதில்லை என்று தெரிந்தும், ஏங்கும் மனதுடன்,

ஹுசைன் நூருத்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Nostalgic feeling ... Thanks Green Chilli kaka!!!
posted by: Firdous (Colombo) on 17 June 2013
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 28111

பழைய நினைவுகளை கிளறிவிட்டதற்கு மிக்க நன்றி. கன நேரத்தில் Time machine லே ஏறி பின்னோக்கி கொண்டு சென்றமைக்கு. அது ஒரு பொற்க்காலம்.

நான் +1 படிக்கும் பொது நண்பன் SKS அடித்த லூட்டி சொல்லி மாளாது. எங்களுக்கு Maths எடுத்த வாத்தியார் pant க்கு ஜிப் போட மறந்து வகுப்புக்கு வந்து விட்டார். உடனே கழுகு பார்வைக்கொண்ட SKS ஜிப் போடவில்லை என்று சொல்ல அவருக்கு முகம் வியர்த்து உடனே போர்டு பக்கம் திரும்பி ஜிப் போட்டுக்கொண்டார்.

மறுநாளும் அவருடைய வகுப்பில் SKS அதே மாதிரி சொல்ல அவர் மீண்டும் போர்டு பக்கம் திரும்ப, அதற்க்கு சார் நீங்க போட மறந்தது உங்க bag in ஜிப்பை என்று சொல்ல அவர் டென்ஷன் ஆகிவிட்டார். இவ்வாறு எவ்வளோ சம்பவங்களை பட்டியலிடலாம்.

பசுமையான நினைவுகளை அசைப்போட வைத்த சகோதரர் ரபீகிற்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்களது கட்டுரை என்றும் நமதூர் மற்றும் ஊரை சார்ந்தே இருக்கும். உங்களது ஆக்கங்கள் இன்னும் பல வர இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. யாதோன் கீ பராஅத்....
posted by: S.A.C.ஹமீத் (அபூ தாபி) on 21 June 2013
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28195

ரஃபீக், மொபைலில் Reminder வைத்து, இன்று வெள்ளிக்கிழமையாதலால் தங்கள் கட்டுரையை பொறுமையாக நிதானமாக ர்சித்து படித்து முடிந்தது. கட்டுரையை படிக்க படிக்க ஏனோ என் நினைவுத் திரைகளில் தங்கள் ஒவ்வொரு பாராவும் படமாக ஓடியதை என்னால் தவிர்க்க முடியவில்லை. (நான்காம் வகுப்பு வரை நானும் எல்கே ஸ்கூல் மாணவன்).

மொத்தத்தில் நம்மை கடந்து சென்று விட்ட காலத்தினை கச்சிதமாக கண் முன்னே நிழலாடச் செய்துள்ளீர். யாதோன் கீ பராஅத் (நினைவலைகளின் ஊர்வலம்). சபாஷ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நினைக்க நினைக்க திகட்டாத மலரும் நினைவுகள் !
posted by: Salai.Mohamed Mohideen (Bangalore) on 22 June 2013
IP: 116.*.*.* India | Comment Reference Number: 28227

நம்மில் பெரும்பாலானோர் கடந்து வந்த மிகவும் அற்புதமான மலரும் நினைவுகள் ! நாம் அப்படியே இருந்திருக்க கூடாதா என்று எண்ணும் அளவுக்கு மிகவும் அருமையான பள்ளி பருவம். இக்கட்டுரையில் நினவு கூறப்பட்டுள்ள ஆசிரியர்கள் சிலரை நாம் அறிந்திருக்கக் வாய்ப்பில்லா விட்டாலும்... காட்சி ஏதோ ஒன்று தான் (கதா) பாத்திரங்கள் மட்டும் தான் வேறு.

கட்டுரைக்கு தகுந்தாற்போல் புகைப்படங்களையும் தேடிப்போய் தனது கேமராவில் சுட்டு தள்ளியிருக்கிறார் ஆசிரியர்.

சீவல் ஐஸ் புகைப்படத்தை பார்த்தவுடன் ஞபாகத்துக்கு வருகின்றது. லாஸ்ஏஞ்சல்ஸ் downtown - னை (நகரத்தின் முக்கிய பகுதி) சுற்றிகொண்டிருந்த போது, ஐஸ் வேனை சுற்றி சிறார்கள் கூட்டம். கூட வந்த கீழக்கரை நண்பன் ஷேவ் (Shave) ஐஸ் சாப்பிடுகின்றாயா என்றான். அது என்ன ஷேவ் ஐஸ் என்று போய் பார்த்தால்... நம்ம ஊர் 'சீவல் ஐஸ்' கலர் கலராக பல வித மேங்கோ, ஸ்ட்ராபரி சுவைகளில். அநேகமாக பள்ளிக்கூட வாழ்க்கைக்கு அப்புறம் அப்பொழுது தான் சீவல் ஐஸ் சாப்பிட்டேன் என்று நினைக்கின்றேன்.

அது என்னமோ தெரிய வில்லை... பள்ளிக்கூட / சிறுவயது தின்பண்டங்கள் சிலவற்றை பெரிய பிள்ளையாகி விட்டால் நம்மை விட்டு விலக்கி வைத்து விடுகின்றோம். ஒரு வேளை அப்படி தின்றால் கூட... என்னப்பா இன்னும் சிறுபிள்ளை மாதிரி இவைகளை போய் சாப்பிடுகின்றாயே எனும் சிலர் !

தேசம் கலாச்சாரம் மாறினாலும் ஷேவ்/சீவல் ஐஸ் போன்ற சமாச்சாரங்கள் பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரபலமாகத்தான் உள்ளது. ஒரே ஒரு வித்தியாசம் அங்கே shaving ஐஸ் மெசின் பயன்படுத்து கின்றார்கள்... நாம் மரக்கட்டையில் தேய்க்கின்றோம்.

கடந்த கால நினைவுகளை கட்டுரையாக சுவையுடன் வரைவதில் ரபீக் காக்காக்கு நிகர் அவரே. பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. பச்ச மிளகாய் தித்திப்பதேனோ.!!!?
posted by: s.s.md meerasahib (TVM) on 22 June 2013
IP: 180.*.*.* India | Comment Reference Number: 28231

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு நண்பர் எம்.என்.எல். முஹம்மது ரபீக் அவர்கள். இதயம் குளிரவைக்கும் கட்டுரை நடைமுறையை கையாண்டு இருக்கிறார். போட்டோக்கள் படு ஜோர்.

எங்களின் பள்ளிப்பருவ நினைவும் இதில் அடங்கியே.... இருப்பதால் கூடுதல் கமாண்டு அடிக்க விடாமல் என் கையை கட்டி விட்டார். என்றாலும் ஒரு சில சுவாரசியம்கள் உண்டு.

எல்லா வகுப்பறையிலும் மாப்பிளை பென்ஞ் என்று ஒன்று கடைசியில் இருக்கும். அதில் இருப்பவர்கள் இரண்டு முறை பெயில் ஆனவர்கள் தான் இருப்பார்கள்.

ஒரு முறை பரீச்சை பேப்பர் திருத்தி வாத்தியார் அவர்கள். நம் கையில் தந்து எல்லோரும் பார்த்தபின் சந்தேகம் இருந்தால் கேட்டுவிட்டு அவரவர் பெயரை வாசிப்பார். அப்படி வாசிக்கும் போது நாம் நம் மார்க்கை 95 or 90 or 85 என்று சொல்லணும். அப்படி இருக்க மாப்பிளை பெஞ்சில் ஒருவரின் பெயரை வாசிக்க.... அதுக்கு அவர் "வழக்கம்போல" என்று சொன்னார். அப்பொழுது வாத்தியார் என்னலே....? வழக்கம் போல....? என்று கோபத்துடன் கேட்க்க ஜீரோ சார். என்றதும். எழுந்து வந்து நெடு நெடுண்டு வளந்து நிற்கும் நண்பரின் காதுகளின் நுனியை அவரின் கைவிரல் நகத்தால் பிதுக்கி ஒரு பாட்டும் பாடுவார்.

"ஓ... ஓ.... மரமே..... உயர்ந்த மரமே.... ஒரு கொத்து இலைக்கு விதியத்த மரமே...... என்பார்."

மேலும்... சபியா கம்மாவின் ரூம் எதிர்புறம் தான் எங்களின் வகுப்பறை. இண்டர்வெல் நேரத்தில் சபியா கம்மாவின் ரூம் பூட்டில் சாவி ஓட்டையில் சிவிங்கியை வைத்து அடைத்து வைத்து. கம்மா அவர்கள் வந்து ஓட்டையை தேடி ஒரு மணிநேரம் பூட்டோடு போராடுவதை பார்த்து வகுப்பறை மாணவர்கள் ரசித்ததுண்டு.

இது எங்களின் சைத்தான் பருவத்தில் நடந்தவை. இன்றளவும் வருந்துகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் மண்ணறையை ஒளிமயமாக்கி சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்.

பச்ச மிளகாய் என்றாலே..... காரமாக இருக்கும். ஆனால் நம் கட்டுரை ஆசிரியர் மிஸ்டர் பச்ச மிளகாய் தித்திப்பதேனோ.!!!? வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நாங்க ஆரம்பக் கல்வியை கற்றது சி கஸ்டம்ஸ் ரோட்டில் உள்ள எலிமென்டரி ஸ்கூல்லதான்.........
posted by: S.K.Shameemul Islam (Chennai) on 03 July 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 28383

நாங்க ஆரம்பக் கல்வியை கற்றது சி கஸ்டம்ஸ் ரோட்டில் உள்ள எலிமென்டரி ஸ்கூல்லதான். நமக்கும் கை எட்டாமல் குட்டியாப்பு படித்த அனுபவம் உண்டு. காலைல நேரத்தோடையே ஸ்கூலுக்கு வந்து ஒவ்வொரு வாத்தியாருக்கா ரிசெப்ஷன் நடத்துவோம். கரீம் சார் வாராங்க, கரீம் சார் வாராங்க. இது போல குலாம் சார், உச்சி மாணிக்கம் சார், மாணிக்கம் சார் என ஒவ்வொருவருக்கும். மூன்றாம் கிளாஸ் அந்த பள்ளிக்கூடத்தின் நிகழ்ச்சிகள் நடக்கும் மேடையில் இருக்கும்.

பெல் அடிக்கும் இரும்பு கம்பியை வைத்து குழி தோண்டி ஒவ்வொரு கல்லாக எடுத்து பெஞ்சில் இருந்தவாறே பெல்லில் கிளீன் போல்ட் செய்வதில் என் நண்பனும் உறவினனுமான செய்ம் சாய்ப் எக்ஸ்பெர்ட். அன்றைய வீர விளையாட்டுக்களே மரம் ஏறுவதும் கோட்டைச் சுவரில் ஏறி விளையாடுவதும் தான். இன்று ஆயிரம் படிகள் தாண்டி விட்டாலும் அன்று ஆனா, ஆவன்னா கத்துக்கொடுத்த கரீம் சாரும் குலாம் சாரும் மறக்க முடியாதவர்கள். எல் கே அப்பா ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையில் இன்ஸ்பெக்ஷன் வருவார்கள்.

நகம், முடி, பல், இத்துடன் யூனிபார்மையும் சோதிப்பார்கள். ஆறாம் கிளாஸ் போனதும் வித்தியாசமான பல அனுபவங்கள். நண்பர் ஹிஜாசார் அதில் பலதை கூறிவிட்டார். செருப்பு போடாமலே பாடம் நடத்தும் கண்ணன் சார் பிளேக் போர்ட் பக்கம் திரும்பும் போது குறும்பு செய்யும் மாணவர்களைப் பார்த்து கால்ல கடக்குற செருப்பாலேயே அடிப்பேன் என்று சொல்வார்.

what is a stone age எனக் கேட்டு ஏல கம்பெடுத்து வா எனக் கேட்கும் அக்பர் சாரை மறக்க முடியுமா. அன்றும் இன்றும் என் நண்பன் அடிவாங்கும் போது அவரைப் பார்த்து அழுவது போல நடித்து எங்களைப் பார்த்து சிரித்தாரே பார்க்கலாம். ஒரு நாள் சார் அதை பார்த்து பிருத்தெடுத்தது இன்றும் மறையாத ஞாபகம். நெற்றியில் வடியும் வேர்வையை ஒத்தை விரலால் துடைத்துக் கொண்டே தமிழ் பா பாடும் ஜோசப் சார் சுவாரஸ்யமான வகுப்பிற்கு சொந்தக்காரர்.

செய்ற அநியாயத்தலாம் செஞ்சிட்டு அந்த சாருக்கு வருடம் முடிவில் பார்ட்டி கொடுப்பவர்கள் நாங்களாகத்தான் இருக்கும். கண்ணன் சாருக்கு ஆருமுகநேரிக்குப் போய் கொடுத்தோமே. கோயில் முத்து சார் ஊரிலிருந்து ஆறுமுகநேரிக்கு சென்று படம் பார்க்கும் சக மாணவர்களை கவனித்து விட்டு மறு நாள் வகுப்புக்கு வந்து அவர்களின் காதுகளில் ஓட்டை போடுவாரே பார்க்கலாம்.

ஹனீபா சார் மிக அருமையாக வகுப்பெடுப்பதில் கெட்டிக்காரர். ஏல TNT- னா Trinitrotoluene. அதுக்கு பதிலா Tamilnadu Transport என்று யாராவது எழுதுனா உரிச்சிபோடுவேன் எனச் சொல்லியும் சக மாணவர் ஒருவர் அவ்வாறே எழுதி உரிக்கவும் பட்டார். மாணவனையும் அடித்துவிட்டு தானும் அழும் பீட்டர் சாரை யார் மறப்பார். ஆங்கில வாத்தியார் திருமலை சாரை மறப்பது உகந்ததோ.

ஆங்கிலத்தை உச்சரிப்பு மாறாமல் உயர்வாகச் சொல்லித்தரும் தேவராஜ் சாரை மறத்தல் நியாயமோ. திரு ஞானைய்யாவின் 10, 12 இரவு விசிட் மறக்க முடியாதது. இப்படி படிப்பிலும் ஆர்வம் காட்டி குறும்பிலும் முதலிடம் வகித்த அந்த மாணவப் பருவம் என்றென்றைக்குமே மறக்க முடியாத ஒரு மகத்தான பருவம் தான்.

நினைவு படுத்திய ஹிஜாசாருக்கு நன்றிகள் பல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved