Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:40:33 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 156
#KOTWEM156
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 17, 2014
அந்தரத்தில் அலைக்கழியும் பழுத்த இலை!

இந்த பக்கம் 3348 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அண்மையில் நமதூரில் நடந்த ஒரு இறுதிச் சடங்கில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜனாஸா தொழுகை நல்லடக்கம் என எல்லாம் முடிந்த பின்னர், இறந்தவரின் நெருங்கிய உறவினர்களுக்கு ஸலாம் கொடுக்கும் நிகழ்வு.

இறந்து போனவரின் வாழ்க்கைத் துணை நைந்து போய் காட்சியளிக்கின்றார். முதுமையின் தள்ளாமையும், இறப்பின் சோகமும் ஒன்று சேர - அவரால் வரிசையில் நிற்கக் கூட முடியவில்லை. அருகே அவரின் பிள்ளைகள் கண்களில் கண்ணீருடன் நிற்கின்றனர்.

அவரின் பிள்ளைகள் அனைவருமே வெளிநாட்டில் நல்ல நிலைமையில் இருக்கின்றனர். இங்கே ஊரில் இறந்துபோனவரும், அவரது வாழ்க்கை இணையரும் மட்டுமே தனியாக வீட்டில் இருந்திருக்கின்றனர். இரண்டு பேருமே நோயாளிகள். தாயாரின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், அவரது பிள்ளைகள் உட்பட அனைவரும் வெளிநாட்டிற்கு புறப்பட்டுச்சென்று விட்டனர்.

மறுமணம் செய்யும் வயதிலும் அந்த முதியவர் இல்லை. அவரது பிள்ளைகளும் அருகில் இல்லை எனும்போது, இனி அவர் மட்டும் மீண்டும் பாரம் நிறைந்த தனிமைக் கூட்டுக்குள் தள்ளப்படுவார்.



இந்த நிகழ்விற்குப் பிறகு ஒரு பழைய திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது அப்படியே அச்சடித்தாற்போல நமதூரின் துயரத்தைச் சொல்வது போலவே இருந்தது. உலகம் முழுக்க மனிதர்கள் உணரும் துயரத்திற்கு மொழி இன பிராந்திய வேறுபாடுகள் ஏது? காலத்தால் கசக்கி எறியப்பட்ட காகிதம்தான் முதுமை. ஆதரவும் அரவணைப்பும் கூடுதலாகத் தேவைப்படும் அந்த கனிந்த பருவத்தில், முதியவர்கள் மீது உறவுகளால் திணிக்கப்படும் தனிமையை, ஒரு கலைஞன் எப்படி தன் படைப்பின் வழியே கேள்விக்குள்ளாக்குகின்றான் என்பதற்கு காலஞ்சென்ற ஜப்பானிய திரை இயக்குநர் யசூஜிரோ ஓஸூ (YASUJIRO OZU) இயக்கிய “ தோக்கியோ ஸ்டோரி http://www.youtube.com/watch?v=rCgMpwDBC-Y TOKYO STORY “ திரைப்படம் ஒரு சாட்சியாக நிற்கின்றது.

ஜப்பானில் தென்மேற்கு சிறு நகரமான ஓனோமிச்சியில், ஓய்வுபெற்ற தம்பதியான சூகிச்சியும், டோமி ஹிரயாமாவும் தங்களது மணமாகாத கடைசி மகள் கியோக்கோவுடன் வசித்து வருகின்றனர். கியோக்கோ ஆசிரியையாக பணிபுரிகின்றார்.

இந்தத் தம்பதிக்கு மூன்று ஆண்களும் இரண்டு பெண்களுமாக மொத்தம் அய்ந்து பிள்ளைகள்.

மூத்த மகன் மருத்துவராக பணி புரிகின்றார். இரண்டாவது மகன் போரில் மடிந்து விடுகின்றார். அவரது கைம்பெண் மனைவி மறுமணம் செய்யாமல் தனியே வசித்து வருகின்றாள். மூன்றாவது மகள் சிகை அலங்காரக் கூடம் ஒன்றை நடத்தி வருகின்றார். இம்மூவரும் தலைநகர் தோக்கியோவில் வசித்து வருகின்றனர்.

ஓனோமிச்சிக்கும் தலைநகரான தோக்கியோவிற்கும் இடையில் அமைந்திருக்கும் ஒஸாகா நகரில் இளைய மகன் குடும்பத்துடன் வசித்து வருகின்றான்.

முதிய தம்பதி இதுவரை தலைநகர் தோக்கியோ சென்றதில்லை. திடீரென்று ஒருநாள் அங்கு சென்று பிள்ளைகளைக் காண வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு உண்டாகின்றது. தொடர்வண்டியில் புறப்பட்டுச் சென்று மூத்த மகன் வீட்டில் தங்குகின்றனர். மகனின் இரண்டு குழந்தைகளும் தாத்தா பாட்டியோடு அவ்வளவாக ஒட்டுறவாடவில்லை.

வார விடுமுறை நாளில் தோக்கியோ நகரத்தை பெற்றோருக்கு சுற்றிக்காட்ட வேண்டும் என மூத்த மகன் திட்டமிட்டிருக்கின்றார். வெளியில் கிளம்பும் சமயம் பார்த்து தவிர்க்க இயலாத மருத்துவப் பணி ஒன்று குறுக்கிடுகிறது. இதனால் நகர உலா கைவிடப்படுகிறது.

வேறு வழியின்றி தனது பேரப்பிள்ளையோடு அருகிலுள்ள திடலுக்கு உலாவச் செல்கின்றார் பாட்டி டோமி ஹிரயாமா. அப்போது அவர் பேரனின் எதிர்கால விருப்பத்தைக் கேட்டறிகின்றார் .

பேரன் வளர்ந்து பெரியவனாகும் வரைக்கும் தான் இருக்க வேண்டும் என விரும்புகின்றார். வாழ்வின் நீட்டிப்பு மீதான அவரின் எதிர்பார்ப்பும் அது சாத்தியமில்லை என்ற உண்மையும் சந்திக்கும் புள்ளியில் அவர் கண் கலங்குகின்றார்.

பரபரப்பான நகர வாழ்வின் நெருக்கடிகளுக்கு நடுவே நேரம் ஒதுக்கி தன் வயதான பெற்றோருடன் நகர் உலா செல்வதற்காக மூத்த மகனும் மகளும் ஆயத்தமாக இல்லை. இறுதியில் கைம்பெண்ணான மருமகள் மனம் உவந்து முதிய தம்பதியை நகர உலாவிற்கு அழைத்து செல்கின்றாள்.

கணவனும், குழந்தைகளும் இல்லாத வெறுமையிலும் எப்போதும் அவள் முகத்தில் புன்னகை ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றது. முதியவர்களின் நகர தங்கலின்போது தன்னால் இயன்றவரை அவர்களுக்கு அவள் மன நிறைவை கொடுத்துக் கொண்டே இருக்கின்றாள்.

பெற்றோருடன் நேரம் கொடுப்பதில் உள்ள விருப்பமின்மை வெளிப்படாமல் இருக்க சுடு நீர் ஊற்று குளியல் விடுதிக்கு அவர்களை மூத்த மகனும் மகளும் அனுப்பி விடுகின்றனர்.

விடுதியில் உள்ளவர்களின் இராக்காலக் களியாட்டக் கூச்சல்களின் விளைவாக முதியவர்களின் தூக்கம் கெடுகின்றது. இளையவர்களின் இருப்பிடத்தில் நமக்கு வேலையில்லை என்கின்றார் சூகிச்சி. இளமைக்கும் முதுமைக்கும் இடையேயான பெரும் இடைவெளியை அங்கு இருவருமே உணர்கின்றனர். அங்குள்ள சூழல் ஒத்துப்போகாததால் அவர்கள் விடுதியை விட்டு வெளியேறி பிள்ளைகளின் வீடு வந்து சேருகின்றனர்.

தோக்கியோவில் உள்ள தனது பழைய நண்பர்களை தேடிப்போய் பெரியவர் சூகிச்சி சந்திக்கின்றார். அனைவரும் இரவு நெடு நேரம் வரைக்கும் குடித்து தீர்க்கின்றனர். போதை தலைக்கேறவும், அவர்களின் ஆழ்மனதின் திரை விலகி விடுகின்றது. நண்பர்கள் ஒவ்வொருத்தராக மனம் திறக்கின்றனர்.

முதியவர் சூகிச்சியின் மனப்போராட்டமும் வெளியில் வந்து விழுகின்றது.

“மனிதர்களுக்கு குழந்தைகள் இல்லாவிட்டாலும் பிரச்சினைதான். குழந்தைகள் இருந்து அவர்கள் பெரியவர்களான பின்னர் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஒத்துப்போவதில்லை என்பதும் பிரச்சினைதான்“ என நண்பர்களிடம் பகிர்கின்றார் சூகிச்சி.

ஊர் திரும்பும் முதிய தம்பதியை வழியனுப்புவதற்காக தொடர்வண்டி நிலையத்திற்கு பிள்ளைகள் வருகின்றனர். பிள்ளைகளிடம் பிரியாவிடை கொடுக்கும்போது ஏனோ இறப்பின் நினைவுகள் மேலிட டோமி ஹிரயாமா கண் கலங்குகின்றார்.

பயணத்தின் இடைவழியிலேயே டோமி ஹிரயாமாவிற்கு உடல் நலம் குன்றுகின்றது. ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு தம்பதியர் சொந்த ஊரான ஓனோமிச்சி போய் சேர்கின்றனர்.

ஊர் போய் சேர்ந்ததும் டோமி ஹிரயாமாவின் உடல் நிலைமை மிகவும் மோசமடைகின்றது. தோக்கியோவில் உள்ள பிள்ளைகளுக்கு தந்தி பறக்கின்றது.

இளைய மகனைத் தவிர அனைவரும் வந்து சேர்கின்றனர். தாயார் டோமி ஹிரயாமாவின் உயிர் சொட்டு சொட்டாக ஒழுகிக்கொண்டே இருக்கின்றது. இரவின் இறுதிக் கணங்களில் தாயாரின் கடைசி உயிர்த்துளியும் தீர்ந்து விடுகின்றது.

நெடுநாட்கள் கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த டோமி ஹிரயாமாவிற்கு திடீரென நகர வாழ்க்கையின் பரபரப்பும், பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமான குடும்ப வாழ்க்கையின் வசந்தங்களும் அறிமுகமாகின்றன.

இந்த புதிய பட்டறிவின் தாக்கமும் இவை அனைத்தும் சில நாட்களே நீடிக்கக் கூடிய தற்காலிகத் தன்மை பெற்றவை என்ற ஏமாற்ற உணர்வும் ஒருங்கே சேர்ந்து அவரை மனதளவில் நிலைகுலைய வைக்கின்றது. இறுதியில் அதுவே அவரது இறப்பிற்கும் காரணமாகின்றது.

தாயார் இறந்த பிறகே இளைய மகன் வந்து சேருகின்றான். வணிக விஷயமாக வெளியூர் சென்றிருந்ததால் தந்தி கிடைக்கவில்லை என்கின்றான். தாயாரின் உடலருகே பணிந்து அமர்ந்து தாமதமான வருகைக்கு மன்னிப்புக் கோருகின்றான்.

தாய் டோமி ஹிரயாமாவின் உடலருகே அனைவரும் ஒன்று கூடி கண்ணீர் விடும் அதிகாலை வேளையில் தந்தை சூகிச்சி கடற்கரையில் நின்று கொண்டிருக்கின்றார். “என்ன அழகான உதயம்? ஆனால் வெப்பமான பகல் பொழுதுகள்“ என தனக்குத்தானே சொல்லிக்கொள்கின்றார்.

ஜப்பானிய தத்துவ மரபு தந்த மனக்கொடையின் விளைவாக தன் வாழ்வின் துயரத்தை அழகியல் உணர்வுகளோடு சூகிச்சி கடந்து செல்லும் தருணங்கள் அவை.



இறுதிச் சடங்குகள் நிறைவடைந்ததும், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடுகின்றனர். கடைக்குட்டி கியோக்கோவின் திருமணத்திற்கு பிறகு தந்தை இன்னும் தனிமையில் இருக்க வேண்டி வரும். எனவே இனிமேல்தான் அவர் தன் உடல் நலத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தந்தைக்கு அறிவுரை கூறுகின்றனர்.

பரஸ்பர அறிவுரைகளுக்கும், நன்றி தெரிவித்தல்களுக்கும் பின்னர் அனைவரும் உடனே புறப்பட்டுச் செல்லுகின்றனர். மருமகள் மட்டும் சற்று தாமதிக்கின்றாள்.

அவர்களின் இந்த தன்னலம் வழியும் பரபரப்பைக் காணும் கடைசி மகள் கியோக்கோ அது பற்றி தந்தையிடம் முறையிடுகின்றாள்.

“என்ன செய்ய? அவரவருக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கின்றதே...? போகத்தான் வேண்டும்“ எனக் கூறி கடைசி மகளை சமாதானப்படுத்துகின்றார் தந்தை.

கைம்பெண்ணான மருமகளும் தோக்கியோவிற்கு புறப்படும் நேரம் வருகின்றது.

மருமகளின் அன்பான கவனிப்பிற்கு பலமுறை நன்றி சொல்லும் சூகிச்சி, அவளை நல்லவள் எனவும் பாராட்டுகின்றார். இறந்த கணவனைப் பற்றிய நினைப்பை விட்டு விடுமாறும் தனிமையில் உழலாமல் மறுமணம் செய்து கொள்ளுமாறும், அதுதான் அவளுக்கு நல்லது எனவும் சூகிச்சி அறிவுறுத்துகின்றார்.

“நீங்கள் நினைப்பது போல நான் நல்லவள் இல்லை. காரணம் நான் உங்கள் மகனை அறவே நினைக்காத நாட்களும் உண்டு. தனிமையைக் கலைக்கும் எண்ணம் அவ்வப்போது வந்து போகத்தான் செய்கின்றது“ எனக் கூறுகின்றாள் மருமகள். இதைக் கூறும்போது எப்பொழுதும் புன்னகை தவழும் அவளின் கண்களில் கண்ணீர் சிந்துகின்றது.

இரண்டு தனிமைகளின் உரையாடல் முடிவிற்கு வருகின்றது. மருமகளும் புறப்பட்டுச் செல்கின்றாள். கடைசி மகள் கியோக்கோவும் பணிக்கு சென்று விடுகின்றாள். தனித்து விடப்படும் முதியவர் சூகிச்சியை ஏகாந்தம் சுற்றி வளைக்கின்றது.

மனைவி இல்லாத தனிமையை போகிற போக்கில் பக்கத்து வீட்டுக்காரி நினைவூட்டி செல்கின்றாள்.

“இப்படியாகும் என தெரிந்திருந்தால் நான் என் மனைவியுடன் கனிவாக நடந்திருப்பேன். இனி வரும் நாட்கள் மிகவும் நீளமானவை“ என அண்டை வீட்டுக்காரியிடம் சொல்கின்றார் சூகிச்சி.

சூகிச்சியும் அவரது கைம்பெண் மருமகளும் தங்களைத் தாங்களே வெறுமையின் ஆழத்தில் நின்றுகொண்டு செய்யும் தன் விசாரணையானது துயரம் ததும்பும் தனிமைக்கு ஒரு ஞான சாரத்தை அளிக்கின்றது.

விளக்கு அணைந்தவுடன் விழுந்து கவியும் இருளைப்போல, தனிமை முழு வேகத்துடன் சூகிச்சியை மீண்டும் வளைத்துக் கொள்கின்றது. இந்த காட்சியின் வழியாக பார்வையாளர்களின் தலையிலும் தனிமையின் சுமை மலை போல கனக்கின்றது.

அதே நேரத்தில் கடலில் தன்னந்தனியாக ஒரு படகு விரைந்து செல்லும் நிறைவுக் காட்சியின் வழியாக தனிமை என்பது ஒரு தேக்கமல்ல அதுவும் பயணத்தின் ஒரு பகுதிதான் என்ற செய்தியையும் சேர்த்தே பதிக்கின்றார் படத்தின் இயக்குநர்.

மனித வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அழகியல் கலந்த உணர்வு நிலையுடன் இயற்கையுடன் பிணைத்து அணுகும் ஷின்தோ, பௌத்த தத்துவ மரபுகளைப் பெற்ற நாடு ஜப்பான். இசை, ஓவியம் போன்ற நுண்கலைகளில் பெரும் ஆர்வம் உள்ளவர்கள் ஜப்பானியர்கள்.

அதே ஜப்பானில்தான் அமெரிக்க நுகர்வுப் பண்பாடு பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது. கண்மூடித்தனமான உழைப்பு அதன் துணை விளைவான அளவுக்கதிகமான உற்பத்தி போன்ற அம்சங்கள் ஜப்பானியரை தனிமைக்குள் தள்ளியிருக்கின்றது. சக மனிதனிடம் பேணப்பட வேண்டிய உறவின் தொடர் நிலை குறித்து ஆழ்ந்த அறியாமையிலேயே ஒவ்வொரு ஜப்பானியரும் உள்ளனர்.

குடும்பங்களில் மூத்தோர் – இளையோர் இடையேயான உறவுப் பாலங்களில் உள்ள பெருத்த இடைவெளிக்கும் இதுதான் காரணம். எனவேதான் ஒவ்வொரு ஆன்மாவையும் வெறுமை கலந்த தனிமை சிறை வைத்துள்ளது. அதுவே அங்கு தேசீய குணமாகவும் உருவெடுத்துள்ளது.

இதன் விளைவாக தற்கொலைக்கான உலகின் முதல் பதினைந்து நாடுகளின் பட்டியலில் ஜப்பானும் இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வுகள் ஏதோ நேற்று இன்று நடப்பவை அல்ல. அறுபது ஆண்டுகளுக்கு முன்பும் இதுதான் நிலைமை என்பதற்கு 1953ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தோக்கியோ ஸ்டோரி படமே சாட்சி. ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி எட்டாண்டுகள் கழித்து உருவாக்கப்பட்ட படம் இது.

கூட்டுக் குடும்ப வாழ்க்கையை விட, தனி மனித சுதந்திர வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுப்பது அமெரிக்க வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையை, அணுகுண்டுப் பேரழிவிற்கு மிக நெருக்கமான கால கட்டத்திலும் ஜப்பானிய மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இன்றளவிலும் அந்த நிலைதான் தொடருகின்றது. ஜப்பானின் இந்த வாழ்வியல் முரணை எப்படிப் புரிந்துகொள்வது?

இப்படத்தை இயக்கிய - காலஞ்சென்ற ஜப்பானிய இயக்குநர் யசூஜிரோ ஓஸூ திருமணம் முடிக்கவில்லை. இறுதி வரை அம்மாவுடன் வாழ்ந்து வந்தார். அவரது அய்ம்ப்தெட்டாம் வயதில் அவரின் அம்மா இறந்து போகின்றார். இவர் தனது அறுபதாம் வயதில் காலமாகின்றார்.

முதுமையடைந்த தாயின் தனிமை, திருமணமாகாத தனது சொந்த தனிமை, ஜப்பானின் குடிமைச் சமூகத்தில் நிலவும் தனிமை போன்றவற்றிலிருந்துதான் தோக்கியோ ஸ்டோரிக்கான கதையை யசூஜிரோ ஓஸூ நூற்று எடுத்திருக்கின்றார்.

அவரது வாழ்க்கை முழுக்க தனிமை உணர்வு அடி நீரோட்டமாக ஓடியிருக்கும் போலும். ஏனெனில் அவரது ஏனைய படைப்புகள் நெடுக தனிமை மென்மையாக இழையோடுவதை அவதானிக்க முடிகின்றது.

மனிதன் மீது திணிக்கப்படும் தனிமையை தன் படைப்புக்களின் வழியே தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குகின்றார் இயக்குநர்.

முதுமையில் தன்னை தனிமை கவ்வுவதற்கு அனுமதிக்காமல், திருமணமற்ற ஒரு வாழ்க்கையின் வழியாக இயக்குநர் யசூஜிரோ ஓஸூ அதனை முன் சென்று எதிர் கொண்டிருப்பாரோ எனப்படுகின்றது.

மனித வாழ்வின் மீது திணிக்கப்படும் தனிமையை, தன் நிஜ வாழ்க்கையின் மூலமாகவும் படைப்புகளின் வாயிலாகவும் எதிர்த்து நின்றிருக்கின்றார் இயக்குநர் யசூஜிரோ ஓஸூ.

இந்தத் திரைப்படத்தின் வாயிலாக தனிமைக்குள் தள்ளப்படும் முதுமையின் முழு வடிவத்தையும் முகத்தில் அறையும் வீச்சோடு காண முடிகின்றது.

இந்தக் கட்டுரையின் முதல் பத்தியில் நாம் வாசித்தது போன்ற நடப்புகளை, தனித்த ஓரிரண்டு நிகழ்வுகள் என ஒதுக்கித் தள்ள முடியாது. முன்னெப்போதையும் விட சொல்லவும், கேட்கவும் இதுபோன்ற கதைகள் நமதூரில் இன்று நிறையவே உள்ளன.

ஒரு காலத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் உயர்சாதி குடும்பங்களில் மட்டுமே காணக்கூடியதாக இருந்த இந்த முதுமையின் தனிமையானது மெல்ல நகர்ந்து நமதூர் வரை எட்டியிருக்கின்றது.

உலகில் கல்வியறிவு பரவலாக இல்லாத காலகட்டத்திலேயே பெரிய, சிறிய, குறு தொழில் முனைவோர், வணிகர்கள் என நம்மவர்கள் தனக்குத்தானே முதலாளிகளாக இருந்தனர் .எண்ணற்ற ஆட்களுக்கு வேலைவாய்ப்பையும் அளித்தனர். கூட்டுக் குடும்பத்துடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள அனைவருக்குமே நேரம் இருந்தது.

இன்று கல்வி பரவலாகியிருக்கின்றது . உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் நம் நாட்டிற்குள் நிலை பெற்ற பிறகு தொழில் முனைவோர், வணிகர்கள் என்ற வர்க்கமே மறைந்து போய் - படித்தவர்களில் கிட்டதட்ட அனைவருமே கார்ப்பரேட் என்ற பெரு வணிக நிறுவனங்களில் சம்பளத்திற்குப் பணிபுரிவோராக மாறிவிட்டனர்.

இந்த புதிய வாழ்க்கை நிலைமை கை நிறைய பொருளாதாரத்தை நமக்கு அள்ளித் தந்திருக்கலாம். வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்திருக்கலாம் .நமது வாழ்க்கைத் தரத்தை பல வழிகளில் மேம்படுத்தியிருக்கலாம். ஆனால் அத்துடன் சேர்த்து அது நமக்கு விட்டுச் சென்றவை என்னென்ன என்ற கணக்கையும் சேர்த்துதான் பார்க்க வேண்டும்.

கார்ப்பரேட்டிசத்தின் பக்க விளைவுகளாக ஒற்றைக் குடும்ப முறையும் (Nuclear Family System), முதிய வயதுடைய பெற்றோர் தனித்து விடப்படுதலும் சமூகத்திற்குள் ஓசையின்றி கூடுதலாகி வருகின்றது.

கார்ப்பரேட்டிசம் அறிந்ததெல்லாம் மலை போல உற்பத்தியும், பிழிந்தெடுக்கும் உழைப்பும், கை நிறைய அச்சடித்த பணத்தாள்கள்களும்தான்.

அது அறிய வேண்டியது ஒன்று உள்ளது. அதுதான் மனித உறவுகளின் அருமை.

பொருள் தேடுவதின் நிமித்தம் நமது முதியோர்களைத் தனிமையின் தயவிற்குள் விட்டுச் செல்கின்றோம். வாழ்க்கை என்பது எறிந்தவனை நோக்கியே திரும்ப வரும் பூமராங் ஆயுதம் போன்றது. அந்த முதுமையின் தனிமை பின்னொரு காலகட்டத்தில் நம்மிடம் திரும்ப வரும்போது அதை தாங்கிக் கொள்ளும் திறன் நம்மிடம் இருக்குமா?

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தொலைபேசி உறவுகள்
posted by: பாளையம் சதக்கதுல்லா (தமாம், சவுதி அரேபியா) on 17 November 2014
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38175

நண்பர் பஷீரின் கட்டுரையை படிக்க படிக்க, என் தந்தை, அவர்களில் அந்திம காலத்தில் என்னுடன் தொலைபேசியில் பேசியவைகளே நினைவுக்கு வருகிறது. சிறிய குடும்பம், அதிக செல்வம், சந்தோஷம் கொடுக்கும் என்று நாம் அவைகளை விரும்புகிறோம். ஆனால் நிம்மதி...?

இருக்கும் போது தெரியாத அருமை, சொந்தங்களை இழந்த பின்பே புரிய முடிகிறது. நண்பனின் கட்டுரை நம் வாழ்கை சக்கரதத்தின் மீள் பார்வைக்கான முதல் படி.

நன்றி நண்பா! வேண்டும் இது போல் கட்டுரைகள் பல....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. முதுமையில் மனிதன் தனிமையில் ஒதுக்கப்படும் பதுமை
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 17 November 2014
IP: 5.*.*.* | Comment Reference Number: 38178

அஸ்ஸலாமு அலைக்கும் வர்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

ஆசிரியர் அவர்களின் படைப்பில் தோக்கியோவின் தாக்கம் ஆக்கத்தில் சிறப்பாக தழுகியிருக்கிறார்.

நிறைவுப்பகுதியில் சிறப்பு வாழ்க்கை ஒரு பல்சக்கரம்

"THE WHEEL FORTUNE WILL RETURN TO MEET ONCE IN EVERY ONCE LIFE" IF IT IS GOOD OR BAD"

அது நன்மையோ தீமையோ இலக்கை அடையும்போது தீண்டியே தீரும்.

என்பதை தெளிவாக்கியிருக்கிறார் அதுதான் பூமரேங்க் விஷயம் இது இன்றையதலைமுறையினருக்கு எச்சரிக்கையே தள்ளாத வயதில் முதியோர் இல்லங்களில் தள்ளிவிடும் உள்ளங்களில்லாத வில்லன்களாகிவருகின்றது மக்களாகிய வாரிசுகள். அந்தத்திரைப்படத்தில் அப்படிப்பட்ட பெரிய பெரிய கொடுமைக்காட்சிகளில்லையென்ற போதிலும்,

தனிமையைவிடக்கொடுமைகள் இருக்கமுடியாது, குழந்தைப்பருவத்தில் தேவைக்கு விளையாடிவிட்டு தூக்கியெறிப்படும் பதுமைகளாகிவிடுகின்றனர் பெற்றோர்கள்.

இறந்துவிட்டாலும் தூக்கிசெல்ல நான்குபேர்வேண்டும் இன்றைய சமூகத்திற்கு அந்தப்படம் நல்ல ஒருபாடம் தேவையானபோது அனுபவித்துக்கொண்டு தள்ளாதவயதில் தள்ளிவிடுகிறவர்களுக்கு "டோக்கியோ ஸ்டோரியை "இலவசமாக வீடுகளில் ஓளிபரப்புசெய்யலாம்.

"சூகிச்சி, டோமிஹிரயாமாவின் தம்பதியினரின் மக்கள் நல்லவர்கள்தானென்ற போதிலும் மனம் கனக்கிறது."

ஆசிரியர் சாளை பஷீர் ஆரிஃப் அவர்களின் மற்றுமோர் உன்னதப்படைப்பு மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்.

தொய்வில்லாது தொடரட்டும் இதுபோல் உங்களின் நல்லாக்கங்கள்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:.இளமை - இனிமை - புதுமை - முதுமை
posted by: mackie noohuthmbi (kayalpaattinam) on 17 November 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38179

கால சக்கரத்தின் சுழற்சியை சாளை பஷீர் அவர்கள் தெளிவாக நம் மனக்கண் முன் கொண்டு வந்துள்ளார்கள்.. அதன் நியாய சாட்சியாக ஒரு ஜப்பானிய திரைப் படத்தையும் இங்கே ஓட விட்டிருக்கிறார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் திருமறையையும் நபிகள் நாயகத்தின் வழிமுறையையும் பின்பற்றி வாழ்கிறவர்களுக்கு இந்த சுழற்சிகள் வெறும் சாதரணமான நிகழ்வுகளே.

அனாதைகளை ஆதரிக்க சொல்லும் அல்லாஹ்வும் ரசூலும் வயதான பெற்றோர்களை அரவணைத்து செல்லவும் அதற்கான வழி முறைகள், அப்படி செய்வதால் நமக்கு கிடைக்கும் இம்மை மறுமை நன்மைகள் எல்லாம் தெளிவாக விரிவாக இறைமறையிலும் நபிமொழி நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளன . அவற்றை நடை முறைப்படுத்தி வாழ்ந்த நபி, அவர்கள் தோழர்கள் வாழ்வியல்களிலும் கொட்டிக் கிடக்கின்றன.

சோதனைகள் வேதனைகள் மனைவி மக்கள் செல்வம் ஆட்சி அதிகாரம் இவை எல்லாமே அவர்கள் உள்ளங்களை உறுதியை அசைத்துப் பார்த்து தோல்விதான் கண்டுள்ளன. ஆனால் நமது வாழ்க்கை முறை இவற்றுக்கு மாறாக சென்று விட்டதாலும் திருமண மேடைகளில் ஒரு சம்பிரதாய முழக்கமாக - மரண வீடுகளில் அந்த நிகழ்ச்சிகள் வெறுமனே ஓதப்படும் சடங்குகளாக மாறிவிட்டதாலும் ஒரு வெறுமை - ஒரு சில தினகளுக்கு அல்லது ஒரு சில திங்களுக்கு மட்டுமே நம்மிடம் ஏற்பட்டு, மீண்டும் பழைய நிலைக்கு நாம் சென்று விடுகிறோம்.

இளமையை நாம் அனுபவிக்க ஆசைப் படுகிறோம்.அந்த இளமை தரும் இனிமை - சுகம் அவற்றை முழுமையாக சுவைத்து விட விரும்புகிறோம்.அதுவும் புதுமை நிறைந்த இந்த கால அறிவியல் வளர்ச்சியின் அதி நவீன வசதிகளுடன் வாழ்ந்து பார்க்க நம்மை தயார்படுத்திக் கொள்கிறோம் . இவ்வளவும் வெற்றிகரமாக நடந்து முடியும் போது இரவாகி விடுகிறது - ஆம் நாம் கண்ணுறங்கும் நேரம். அது முதுமையின் ஆரம்பம். விடியும்போது வாழ்வின் முடிவு ஆரம்பமாகி விடுகிறது. இப்போது நீங்கள் ஆரம்பத்தில் சொன்ன வெறுமை நம்மை ஆட்கொள்கிறது.

எனவே இப்போதே இஸ்லாத்தின் வாழ்வியல் உண்மைகளை திருமறையின் வெளிச்சத்தில் திருநபி வழிமுறையின் அடிச்சுவட்டில் தடம்பதித்து நமது வாழ்க்கையை ஆரம்பிப்போம்.

LA QADH KAANA LAKUM FEE RASOOLILLAHI USVATHUN HASANAA... நிச்சயமாக அல்லாஹ்வின் ரசூல் அவர்களிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது...

அல்லாஹ்வின் திருமறை ஆழமாக நம் உள்ளங்களில் பதிவு செய்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் வாழ்வின் எல்லா கோணங்களிலும் நாம் இந்த வைர வரிகளைப் பின் பற்றி அந்த நபியின் வாழ்வை பின்பற்றி வாழ்ந்து ஈருலகிலும் வெற்றி வாழ்க்கை வாழ்பவர்களாக ஆக்கி வைப்பானாக ஆமீன்.

சாளை பஷீர் அவர்களின் தமிழை ரசிக்கிறேன். சிந்தனை ஓட்டத்தை நேசிக்கிறேன். அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் அருளும்படி அல்லாஹ்வை யாசிக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சமூக மாற்றத்தை நோக்கி...
posted by: Salai.Mohamed Mohideen (Philly) on 18 November 2014
IP: 50.*.*.* United States | Comment Reference Number: 38182

சமூக மாற்றத்தை நோக்கி பயணிக்கத் தூண்டும் அழகான ஆழமான பதிவு.

ஷாப்பிங் முடித்து விட்டு பணம் கட்டும் இடத்திற்கு வந்த பொழுது, எங்களை நோக்கி வந்தனர் ஒரு வயதான தம்பதியினர். இந்த சிறு அன்பளிப்பை (விளையாட்டு பொருள்) உங்களுடைய மகனுக்கு நாங்கள் தரலாமா என்றனர். ஏன் என்றேன்? நீங்கள் கடைக்குள் நுழையும் போது எங்களை நோக்கி உங்கள் மகன் எங்களை பார்த்து புன்னகைத்தான். அது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது என்றனர்.

இது நடந்து மூன்றரை வருடங்கள் ஆகின்றது. இக்கட்டுரையை படித்தவுடன் இந்த சம்பவம் தான் ஞாபகத்துக்கு வருகின்றது. ஒரு மழலையின் புன்முறுவல்களுக்கு கூட முதியவர்கள் இந்நாட்டில் ஏங்கி தவிக்கின்றனர்.

வயதான காலத்தில் தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுடன் வசிக்கும் வாழ்வுமுறை (தங்களை பராமரிக்க பிள்ளைகள் உடன் இல்லாததால்) தங்களுடைய வீடு / சொத்துக்களை விற்று விட்டு முதியவர்களை பராமரிக்கும் (கட்டணம் வாங்கி) இல்லங்களில் (Senior Homes) தனிமையில் கடத்த வேண்டிய கட்டாயத்தில் முதியவர்கள்.

இது போன்ற மேலைநாட்டு வாழ்வுமுறை நமது நாடுகளிலும் பரவலாக ஊடுருவ ஆரம்பித்து விட்டது. ஒரே ஒரு வித்தியாசம்... பெற்று வளர்த்த கடனுக்கு பராமரிப்பகத்தின் செலவுத் தொகையை பொறுப்பேற்று கொள்கின்றனர் பிள்ளைகள்.

முதுமையின் தனிமைக்கு நமதூரிலேயே உதாரணங்களை கூறிவிடலாம். நண்பர் கனடாவிலும் அவர் சகோதரி கத்தரிலும் தம்பி டெல்லியிலும்... தனது மனைவியை இழந்த நண்பரின் தந்தை 'பாரம் நிறைந்த தனிமைக் கூட்டுக்குள்' காலம் தள்ளி வருகின்றார். தங்களின் கடைசி காலத்தை பாஷை தெரியாத பல்வேறு சீதோஷநிலைக்குட்பட்ட, தனிமையை (Privacy) சீர்த்தூக்கி பிடிக்கும் அந்நிய மண்ணில் கழிக்க வயோதிக பெற்றோருக்கு மனம் இடம் தருவதில்லை. கார்ப்பரேட் அள்ளி தந்த பொருளாதாரத்தை, 'வெளிநாட்டில் வசிக்கின்றோம்' என்ற பெருமையை / அடையாளத்தை விட்டு தர பிள்ளைகளுக்கும் விருப்பமில்லை. இது தான் நிதர்சனமான உண்மை.

நமது சமுதாயத்தில் கல்வி பரவலாகிய பின் தொழில் முனைவோர், வணிகர்கள் என்ற வர்க்கமே மறைந்து போய்விட்டது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இதனை ஒரு முறை KCGC யின் கூட்டத்தில் கலந்து கொண்ட போது பதிவு செய்து... இந்த இடைவெளியை போக்க (உள்நாட்டிலேயே பொருளீட்டும் வண்ணம் ) 'entrepreneurship' தொழில் முனைவோர் தொடர்பான நிகழ்சிகளை நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

" வாழ்க்கை என்பது எறிந்தவனை நோக்கியே திரும்ப வரும் பூமராங் ஆயுதம் போன்றது" - இதனை நாம் கண்கூடாகவே பார்த்து வரும் நூற்றுக்கு நூறு உண்மையான கூற்று. இதற்கு ஒரு குட்டி கதை தான் ஞாபகத்துக்கு வருகின்றது.

தங்களோடு ஒன்றாக டைனிங் டேபிளில் உணவருந்தி வந்த தன் பாட்டிக்கு, தன் தாய் வயோதிகத்தினால் சோற்று பருக்கைகளை சிந்துகின்றார், மெலமன் ப்ளேட்- க்களை ஒடைத்து விடுகின்றார் என்பதற்காக... கொட்டாங்குச்சியில் ஆன உணவு பாத்திரத்தில், தனியறையில் (மூலையில்) உணவு தருவதை பேரன் உள்வாங்கி வந்தான்.

ஒருநாள் வீடு திரும்பிய அவனின் தந்தை, தன் மகன் தோட்டத்தில் கொட்டாங்குச்சியை வைத்து எதோ தட்டு , கிண்ணம் செய்வதை ஆச்சர்யமுடன் கண்டு... என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்றார்?

பாட்டியை போன்று நீங்களும் முதுமையை அடைந்த பின்னர்... நீங்கள் உணவருந்துவட்காக இப்பொழுதே இவைகளை நான் தயார் செய்து கொள்கின்றேன் என்றான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: nizam (abudhabi) on 18 November 2014
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38185

சாளை பசீரின் கட்டுரை இன்றைய காலகட்டத்தின் நிஜத்தை படம் பிடித்து காட்டுகிறது நிஜத்தை சொன்னால் எனக்கே நமது முதுமையில் எப்படி இருப்போம் நினனைக்கவே பயமாக உள்ளது. ஏனென்றால் மனிதர்கள் மனிதர்களை கண்டுகொள்வதே அபூர்வமாகி விட்டபோது கவனிப்பது என்பது நினைத்துகூட பார்க்கமுடியாது. ஒரு சொந்த அனுபவத்தை பகிர்த்து கொள்ள விரும்புகிறேன்.

எனது சின்ன மூமா அவர்கள் கடந்த சுமார் இருபது வருடமாக கண்பார்வை இழந்து படுக்கையிலே இருந்தார்கள் அவர்களை முகஞ்சுளிக்காமல் ஹித்மத் செய்து வந்தார்கள் து அவர்களது மூத்த மகளார்.கடந்த வருடம் அவர்கள் காலமாகும் வரைக்கும். இதில் என்ன சுவராசியம் என்றால் அனைவரது ரிவாயத்து அவர்கள் ஒருதடவை கூட சலித்தது இல்லை. இதில் அவர்களது அங்காலயாப்பு இன்னும் கொஞ்ச காலம் இருந்துருந்தால் இன்னும் பராமரித்திருப்பேனே என்று? என்ன ஒரு மனிதத்தின் உச்சகட்டம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...ஓனோமிச்சியும், காயல்பட்டினமும் …
posted by: vakil. Ahamed (chennai) on 21 November 2014
IP: 14.*.*.* India | Comment Reference Number: 38212

" படம் பார்த்து கதை சொல்லுங்கள் '' என்று சிறு வயதில் படித்திருக்கிறோம். ஆனால், பஷீர் ‘ஒரு ஜப்பானிய திரைப் படத்தை பார்த்து, இந்த கதையை நமதூர் சம்பவங்களோடு நமக்கு சொல்லி யோசிக்க வைத்திருக்கிறார்.

முதுமையின் அனைத்து நிகழ்வுகளையும் இந்த கதைக்குள்ளே அடக்கிட்டிங்கலே, பஷீர். மிக சிறப்பானதொரு சிந்தனை கதையை தந்திருக்கீங்க. ரெம்ப நல்லாஇருக்குங்க!

' கார்ப்பரேட் யுகம் ' பெரும் பகுதியினரை பணத்தில் புரள வைத்திருக்கிறது. ஆனால், அது தனி மனித, குடும்ப, சமூக, கலாச்சார வாழ்வு முறைகளை சிதைத்திருக்கிறது என்பதை தைரியமாக உங்கள் பேனா முனைகளால் கீறி, கிழித்திருக்கிறீர்கள். சபாஷ்.

உங்கள் கண்களில்“ தோக்கியோ ஸ்டோரி' மாதரியான படக்காட்சிகள் இனியும் எத்தனையோ படக்கூடும், அவற்றிற்க்கு இறகு முளைக்கச் செய்வது உங்கள் பொறுப்பு, கடமை.

விதவிதமாய் கதை சொல்லுங்கள், சமூகத்தை தட்டி எழுப்புங்கள். எழுதுங்கள், உங்கள் பேனா இந்த சமூகத்துக்கு எதாவது ஒரு மாற்றத்தை தரும் என்று நம்புகிறேன். உங்களை ‘சமூக மாற்றத்துக்கான காயலின் கதையரசர்’ என வாழ்த்துகிறேன். மேலும் வளருங்கள்…….

வக்கில்.அஹ்மத்
நிறுவனர் & பணிப்பாளர்
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved