Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:02:25 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 182
#KOTWEM182
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 27, 2015
மறந்ததை உணர்த்திய மழை!

இந்த பக்கம் 6901 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

16ஆம் திகதி அதிகாலை 04.50 மணி...

எங்கள் இல்லத்தில் உறக்கத்திலிருந்தோம். அலாரத்தின் அலறல் கேட்டு விழித்த என் கணவர், கட்டிலிலிருந்து காலைக் கீழே வைத்ததுதான் தாமதம்! தேள் கொட்டினாற்போல காலை இழுத்துக்கொண்டு சப்தமிட்டார்....... அல்லாஹு அக்பர்! வீடு முழுக்க தண்ணீர்!!

எப்போதும் சற்று சோம்பலோடு சில நிமிடங்கள் சென்ற பின்பே எழும் நான் சடாரென்று எழுந்து காலைக் கீழே வைத்தால், கடல் அலையில் கால் நனைத்தது போல கரண்டைக் கால் வரையிலும் தண்ணீர்! என்ன நடந்திருக்கும் என்று யூகிக்கும் முன்னரே மூளை அவசரச் செய்தியொன்றை மனதிற்கு அனுப்பியது. “பொறுமை! பொறுமை!! நிதானம்!!! பதட்டப்படாதே!!!!”

அத்தனையையும் உள்வாங்கிக்கொண்டேன். படுக்கையறையை விட்டும் வெளியே வந்து, நடு ஹாலில் நின்றுகொண்டு, நிதானமாக - அதே நேரம் உரத்த குரலில், “எல்லோரும் பதட்டப்படாமல் எழுந்திருங்கள்...! வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது!!” என்றேன்.

நாங்கள் படப்போகும் பாட்டைப் பார்க்க மனமின்றி, மின்சாரமும் ஏற்கனவே காணாமல் போயிருந்தது... எமர்ஜென்ஸி விளக்கு அப்போதுதான் நினைவுக்கே வந்தது. தேடி எடுத்து வந்து வெளிச்சமேற்றினால்...... கால்களால் மட்டுமே அதுவரை உணர்ந்து வைத்திருந்த தண்ணீரை அப்போதுதான் கண்களால் பார்க்கிறோம்... ஏதோ விபரீதம் என புரிய ஆரம்பிக்கிறது...

“யா அல்லாஹ்! பிள்ளைகள் இரண்டும் தரையில் கை மெத்தை மீது தூங்கினார்களே...?” என்றெண்ணியவாறே ஓடிப்போய்ப் பார்த்தால், அங்கே இரண்டும் அலறிக்கொண்டே எழுந்து நிற்கிறது... கை மெத்தையோ - படகு போல அங்குமிங்கும் மிதந்தோடிக்கொண்டிருக்கிறது...





பிள்ளைகள் தண்ணீரை உணருமுன்பே நமக்கு உணர்வூட்டிய அல்லாஹ்தான் எவ்வளவு கருணையாளன்...?

இன்றைக்கெல்லாம் எழுப்பினாலும், “இன்னும் அஞ்சி நிமிஷம்மா...” என்று என்னிடம் கடன் கேட்கும் என் இரண்டாவது மகள் கூட ஒரே வீச்சில் செங்குத்தாக எழுந்து நின்றுவிட்டாள்... யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை...

“எல்லோரும் முதலில் உளூ செய்து தொழுதுவிட்டு துஆ கேளுங்கள்...! மற்றதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்...!!” மவுனத்தைக் கலைத்து, நான்தான் முதலில் பேசினேன். உளூ செய்வதற்காக பாத்ரூம் கதவைத் திறந்தால்........ ஸுப்ஹானல்லாஹ்! பாத்ரூம் தண்ணீரால் நிரம்பி வழிகிறது! அறுவறுப்புக்கொள்ளவோ, அசூயையடையவோ முடியாத நேரம்... காலைக் கடன்களை முடித்துவிட்டு, உளூ செய்து தொழுகையை முடித்ததும், “யாஅல்லாஹ்! எந்த நிலமையாக இருந்தாலும் இதை இலேசாக்கி வை! எதிர்கொள்ளும் சக்தியையும், பொறுமையையும் தந்தருள்!! என இறைவனிடம் இறைஞ்சிவிட்டு, எல்லோரும் வீட்டின் தரையில் கிடக்கும் சாமான்கள்... பைகள் என ஒவ்வொன்றாகப் பத்திரப்படுத்தி, கட்டிலின் மீது... நாற்காலிகளின் மீது... என கிடைத்த உயரங்களிலெல்லாம் வைக்கிறோம்... சின்ன மகளின் ஸ்கூல் பேக்...??? அதோ! அது முழுவதுமாக நனைந்துவிட்டது... ஒவ்வொரு சாமானாகத் தேடித்தேடி எடுக்கிறோம்... எல்லாமே தண்ணீரில் நன்றாகக் குளித்திருந்தன.

மணியும் 05.15 ஆகிவிட்டது... ஜன்னலைத் திறந்து பார்க்கிறோம்... கும்மிருட்டு! அமானுஷ்ய அமைதி... மழை! அதனிடம் பெரிதாக அழுகையோ, ஒப்பாரியோ இல்லை. சிணுங்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் இருட்டிற்குக் கண்கள் பழகியதும்தான் தெரிகிறது... மதம் பிடித்த யானையைப் போல தெருவில் சீறிக்கொண்டு வரும் தண்ணீரின் வேகம்...

எங்கிருந்து இவ்வளவு தண்ணீர்...? “எங்களது இடங்களை நீங்கள் ஆக்கிரமித்தால், உங்களது வீடுகளை நாங்கள் ஆக்கிரமித்துக்கொள்வோம் - என்ற கோபத்தில் விளைந்த பழிவாங்குதலா?” என அந்த நேரத்திலும் மனம் அசைபோடுகிறது! பெருங்கருணையாளனே...! ஏதோவொரு படிப்பினையை நாடுகிறாய் என மனம் நிதர்சனத்திற்கு வருகிறது. நிகழ்வின் விபரீதம் முழுவதுமாக விளங்குகிறது... கால்களிலோ நீர்மட்டத்தின் அளவு ஏறிக்கொண்டே செல்கிறது.

இதனிடையே... எமர்ஜென்ஸி லைட்டும் “என் பணி முடிந்துவிட்டது... இனி உங்கள் பாடு... எனக்குத் தினமும் உணவு தராவிட்டால் உங்களுக்கு இதுதான் தண்டனை” என சொல்லாமல் சொல்லிவிட்டு மவுனமானது. பரவாயில்லை! இன்னும் சில மணித்துளிகளில் சூரியன் தலைகாட்டிவிடுவான் என்ற தைரியமும் தகர்ந்தது. மழை சூரியனிடம் மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது போலும்! விடிந்தும் விடியாத அந்தக் காலைப்பொழுது நீண்டுகொண்டேயிருந்தது.

“இரண்டு நாட்களுக்கு முன்பு இதைவிடப் பெரிய மழை பெய்தபோது வீட்டு வாசல்படி வரை தயங்கித் தயங்கித்தானே தண்ணீர் நின்றது...? இப்போதோ, இந்தச் சிறு சிணுங்கலிலும் அழையா விருந்தாளியாக அப்படியென்ன அவசரம்?” என்ற குழப்பமும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்க, இரண்டு அட்டைப்பெட்டிகளைத் தூக்கிகொண்டு வந்த உம்மா, “இந்த புத்தகங்களெல்லாம் தேவையாமா...? நனைஞ்சிடிச்சி பாருங்க!” என்றார்கள். எனக்குப் புரிந்துவிட்டது - பெரிய அட்டைப்பெட்டி முழுவதும் என் மூன்றாம் மகளின் புத்தக நண்பர்கள்... அவளுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான் என்று கருதிய நான், அவற்றை அவளறியாமலேயே உயரத்தில் வைத்தேன். சிறிய அட்டைப் பெட்டியில் சுமார் 25 புத்தகங்கள் இருக்கும்... அத்தனையும், கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சியின்போது ஆசை ஆசையாய் வாங்கியவை... புக் ஷெல்ஃபில் இடம் போதாமல் அட்டைப்பெட்டியில் அடுக்கி வைத்திருந்தேன்... பெரிய புக் ஷெல்ஃப் வேண்டும் என நான் போட்டுக்கொண்டிருக்கும் மனுக்கள் வழமை போல தள்ளுபடியாகிக்கொண்டே இருக்கின்றன.

இதோ! அடுத்த ஜனவரியும் வருகிறது. இலக்கியமும், இஸ்லாமுமாய் எனது தேடலுக்கான வடிகால்... நானும், எனது மகளுமாய் நான்கு கைகளில் புத்தக மூட்டைகளைச் சுமந்துகொண்டு, எங்கள் வீட்டுப் பொருளாளரின் பர்ஸைக் காலியாக்கிவிடுவோம்... நகைக்கடைக்குச் செல்வது கூட (அது குறிஞ்சிப்பூ போல எப்போதாவது நடக்கும் நிகழ்வுதான் என்றாலும்) இவ்வளவு மகிழ்ச்சியை எங்களுக்கு அள்ளித் தருமா என்று தெரியாது... நாங்கள் புதிய புத்தகங்களில் வாசனை விரும்பிகள்... இப்போது என்னையும், மூழ்கி முத்தெடுத்த எனது அந்த சிறிய அட்டைப்பெட்டியையும் நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்!

இப்படியாக, அந்தத் தண்ணீர்ப் புதையலில் ஏகப்பட்ட அதிர்ச்சிகள் எங்களுக்கு! “தண்ணீர் நம் வீட்டில் மட்டும்தான் தங்க இடம் கேட்டு வந்துள்ளதா? அல்லது தெருவின் அனைத்து வீடுகளுக்குமே அழையா விருந்தாளியாக அடைக்கலமாகியுள்ளதா?” என்ற விபரம் தெரியாமல் நாங்கள் குழம்பி நிற்க, ஆள் அரவமற்ற அந்த நிலவரமே எங்கள் வயிற்றில் கலவரத்தை ஏற்படுத்தியது...

எனக்கோ, யூனுஸ் நபி, நூஹ் நபி காலத்து வெள்ளப் பிரலயங்கள் மாறி மாறி மனக்கண் முன் ஸ்லைடுகளாய் ஓடிக்கொண்டிருந்தன... “லாஇலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக்க இன்னீ குன்து மினல் ழாலிமீன்...” என என்னையுமறியாமல் என் உதடுகள் உரக்கக் கூறிக்கொண்டிருந்தன... கூடவே சேர்ந்து என் கணவரும், குழந்தைகளும் கோரஸ் பாடினர்.

கட்டில், நாற்காலி, சோஃபாக்கள் என எல்லாவற்றிலும் பொருட்கள் வியாபித்திருக்க... நாங்களோ, கிடைத்த மூலைகளில் எங்களைக் குறுக்கிக்கொண்டோம்... கால்களைத் தரையில் - ஸாரி! தண்ணீரில் படாமல் கவனமாய் உயர்த்தி வைத்துக்கொண்டோம்... காரணம்! தண்ணீருடன் கூடவே இன்னும் சில அழையா விருந்தாளிகள்... அவர்களைப் பார்த்தால் நல்லவர்களாகத் தெரியவில்லை. கறுப்பாக... கரடுமுரடாக... அழுக்காக... என தோற்றமே சரியில்லை. “ஆகா... இது மழைநீர் அல்ல!” என அதன் மணம் சொன்னது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளைப் படம்பிடித்து வைக்க வேண்டுமென டிஜிட்டல் இந்தியாவின் தூதர்கள் (வேற யாருங்க? வாப்பாவும், பிள்ளைங்களும்தான்!) தலைகீழாய் மெனக்கெட்டனர்.



ஒவ்வொருவரிடமிருந்தும் அலைபேசியின் ஆயுள் விடைபெற்றுக்கொண்டிருந்தது. வெளியுலகத்தோடு எமக்கிருந்த கடைசித் தொடர்பும் அறுந்துவிடாதிருக்க, பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டோம் நாங்கள்! இதற்கிடையே...

“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; (தூதரே! பொறுமையுடையோருக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக!” எனும் திருக்குர்ஆனின் 002ஆவது அத்தியாயத்திலுள்ள 155ஆவது வசனம் எங்கள் மன உறுதியை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது...

சுங்க இலாகாவின் சோதனை அதிகாரிகள் போல அதிகாலையிலேயே வீடு புகுந்த தண்ணீர் அதிகாரிகள், வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் புகுந்து புரட்டிப்போட்டுக் கொண்டிருந்தனர். சமையலறை கப்போர்டுகளின் கீழ் அடுக்குகள், துணிமணிகள் வைக்கும் அலமாரியின் கடைசித் தட்டு என அவர்களின் சோதனை - எட்டும் உயரம் வரை நீண்டுகொண்டேயிருந்தது... புக் ஷெல்ஃபின் கடைசித் தட்டையும் கபளீகரம் செய்துவிட்டிருந்தனர்.

இத்தனை களேபரங்களுக்கிடையே, காலை 7 மணிக்கு, எதுவும் தெரியாதவன் போல சூரியன் அப்போதுதான் மெல்ல எட்டிப்பார்க்கத் துவங்கினான். தெருவில் ஒரு மனிதர் நடந்து சென்றார்... இல்லையில்லை! நீந்திச் சென்றார்...



அப்போதுதான் நிகழ்வின் ஆழம் புரிந்தது. அவரது இடுப்பளவுக்குத் தண்ணீர்... சிங்காரச் சென்னையைச் சுற்றி ஓடும் கால்வாயின் அருகில் வசிக்கும் “பாக்கியசாலி”கள் நாங்கள். “கால்வாயின் உடைப்பினால்தான் தெருவுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது” என்ற முதல் FIRஐ அவர்தான் பதிவு செய்தார். பாத்திரத்தின் கொள்ளளவு அறிந்து பிச்சையிடாதது மனிதனின் குற்றம்தானே தவிர தண்ணீரின் குற்றமா என்ன?

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளார்களாம்... அது கால்வாய் வழியாகக் கடலில் கலக்கச் செல்லும் வழியில், எங்கள் வீதிகளைக் கண்டதும் விளையாட வந்துவிட்டது போலும்! செம்பரம்பாக்கம் ஏரி என பள்ளியில் படித்தபோது, வாயில் நுழைய மறுத்த அந்தப் பெயர் இன்று எங்கள் நுனிநாக்கில் புரண்டு - வாழ்வில் மறக்க முடியாத பெயராகிப்போனது.

அடுத்து என்ன செய்வது என்றுதான் யோசிக்க வேண்டுமே தவிர, இனி கவலைப்பட்டு ஆகப்போவது எதுவுமில்லை என மனஉறுதி கொண்டோம்...

“துன்பம் வருங்கால் பொறுமை காத்தால் அல்லாஹ் இரண்டு கூலிகளைத் தருவான் என ஊருக்கு உபதேசம் செய்கிறாயே...? இப்போது உன் வாழ்வில் அதற்கான வாய்ப்பு வந்துள்ளது!” என என் உள்மனம் எச்சரித்துக்கொண்டேயிருந்தது.

வயிறு அலாரமடிக்கத் துவங்கியது... எதையாவது வயிற்றில் போட்டால்தான் ஏதாவது யோசிக்க முடியும் என்ற நிலையில் நாங்களிருக்க, அந்தத் தண்ணீருக்குள் நின்ற நிலையிலேயே என் உம்மா தேனீர் தயாரித்து, ஆவி பறக்க இட்லியையும் அவித்துவிட்டார்கள். தேனீர் அருந்தியதும் பிள்ளைகளை மட்டும் மாடியிலுள்ள மாமி வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தோம். மாடிக்குப் போவதென்றால், தெருவைச் சுற்றித்தான் போக முடியும். நீச்சல் தெரியாத பிள்ளைகளைச் சோதிக்க விரும்பாத நாங்கள், வீட்டின் சிட்அவுட் வழியாக எகிறிக் குதிக்க வைத்து, எப்படியோ ஏணிப்படியில் ஏற்றிவிட்டோம்...

இதற்கிடையே, அடுத்த தெருவிலிருக்கும் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து - அவர்களின் வீட்டிற்கு வந்து விடுமாறு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார்கள்... போய்த்தான் ஆக வேண்டும்! வேறு வழியேயில்லை... ஆனால், வீட்டை அப்படியே விட்டுவிட்டு எப்படிப் போவது...? வீடும் உணர்வில் கலந்த ஒன்று என்பதை அன்றைக்குத்தான் முழுமையாக உணர்ந்தோம்... ஆனால், எதையெல்லாம்தான் கொண்டு செல்வது...? எதையாவது எடுக்க வேண்டுமென கப்போர்டுகளைத் திறந்தால், “அவ்வளவுதான்! தண்ணீருக்குள் குதித்து விடுவோம்” என துணிமணிகள் ஒருபுறம் மிரட்டிக்கொண்டிருந்தன.

இதற்கிடையே, முதுகில் மூட்டைகளையும், தோளில் பிள்ளைகளையும் ஏற்றிக்கொண்டு, ஒவ்வொரு குடும்பமாக தண்ணீரில் நீந்திச் செல்லத் துவங்கினர். பாதிப்பேர் பங்களாவாசிகள்! அல்லாஹ் வழங்கும் படிப்பினையைத்தான் என் மனம் அசைபோட்டது.

முந்தைய இரவில் எனது இளைய மகள் மழை பற்றி ஒரு சிறு கட்டுரை எழுதியிருந்தாள். அவ்வப்போது தன்னைப் பாதித்த எதைப்பற்றியாவது இப்படி எழுதுவது அவளது வழக்கம்... மழை காரணமாக தனது குதூகலத்தைப் பதிவு செய்திருந்த அவள், ஏழைகள் மற்றும் தெருவோரம் வசிக்கும் மக்கள் பற்றிய தன் கவலைகளையும் பதிவு செய்திருந்தாள்... எழுத்தில் இலக்கணப் பிழைகள் சில இருந்தன என்றாலும், இந்த இளம் வயதில் அவளது சமூகப்பார்வையை எண்ணி நான் அவளை உச்சிமுகர்ந்தேன்.

ஏழைகளுக்கும், தெருக்களில் வசிப்போருக்கும் மட்டும்தான் பாதிப்பு என்று அவர்களுக்காக ஒரு ச்...சூ... கொட்டிவிட்டு நாமெல்லாம் கோட்டைக்குள் வசிக்கிறோம் என்ற நமது இறுமாப்பிற்குக் கிடைத்த பலத்த அடியாகத்தான் அன்றைய நிலையை உணர முடிந்தது... அடி வலிக்கவில்லை! மாறாக, உச்சந்தலையின் உள்மூளை வரையிலும் இறைவனின் திருவசனத்தை ஓங்கி உணரச் செய்தது...

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளுக்குள் இருந்தபோதினும் சரியே!” (திருக்குர்ஆன் 4:78)

மரணம் மட்டுமல்ல! மழை வெள்ளமும் அப்படித்தான் என மனம் உணர்ந்துகொண்டது. மாடி வீட்டு மாமியும், அண்டை வீட்டு அனிதாவும் அருகில் இருந்தாலும் கூட, அவ்வப்போது ஒரு புன்னகை மட்டுமே எங்களுக்குள் உறவாக இருந்தது... (நாங்கள் நகரவாசிகளாயிற்றே...?) அண்டை வீட்டாரின் அருமையை உணர்த்தும் அரிய நாளாக அன்று அமைந்தது.

உறவுகளை விடவும் அதிகமாக அண்டை வீட்டாரிடம் அனுசரணையாக நடந்துகொள்ள நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுறுத்தியதன் காரணத்தை அன்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம்.

“தண்ணீர் தானாக வடிந்துவிடுமா...?” என்ற நப்பாசையிலும், “கார்ப்பரேஷன்காரர்கள் வந்து கைகொடுப்பார்களா?” என்ற பேராசையிலும் மதியம் வரை பொறுத்திருந்தோம். காரில் இருந்தபடியே மேட்டுப்பகுதியிலிருந்து மேற்பார்வையிட்ட அமைச்சரின் விசிட்டும் கைகொடுக்கவில்லை. “இனிமேல்தான் ஏரியைத் திறந்துவிடப் போறாங்களாம்...” என்று எங்கள் தெருவின் ஆஸ்தான பால்காரர் போகிற போக்கில் ஒரு திரியைக் கொளுத்திப்போட்டு, அவர் பங்குக்கு எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டார்.















[மேலுள்ள படங்கள், வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட - சென்னை தாம்பரத்தின் வெள்ளக் காட்சிகள்]

பக்கத்துக் குப்பத்திலிருந்து சிறுவர்கள் தண்ணீரில் நீச்சலடித்துக்கொண்டும், தெர்மகோல் படகுகளில் மிதந்து விளையாடிக்கொண்டுமிருந்தனர். அது அவர்களின் உலகம். பிரிக்க முடியாதது? தண்ணீரும் - தமிழ்நாடும் என்ற எண்ணம் மனதில் ஓடியது. மழைக்காலம் என்றால் இந்தத் தண்ணீர்; எல்லாக் காலங்களிலும் அந்தத் தண்ணீர் என எப்போதுமே ஏதோ ஒரு தண்ணீரில் தமிழ்நாடு தள்ளாடிக்கொண்டுதான் இருக்கிறது.

இனிமேல் எதுவும் செய்வதற்கில்லை... இருட்டிவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில், அடுத்த தெருவிலிருக்கும் குடும்ப நண்பர் வீட்டிற்குச் செல்வதென ஒருவழியாக முடிவெடுத்தோம். மதியம் அவர்கள் வீட்டிலிருந்துதான் பிரியாணி சாப்பாடு வந்தது. “இந்தக் கூவத் தண்ணீருக்குள்ளிருந்து கொண்டா பிரியாணி சாப்பிடுவது?” என எதிர்மறையாய் நான் சிந்தித்துக்கொண்டிருக்க, என் மகளோ, “ம்...மா... இந்தத் தண்ணீரிலும் கூட நம்மை அல்லாஹ் பிரியாணி சாப்பிட வைத்துள்ளானே...?” என அதே அம்சத்தை நேர்மறையாகப் பேசினாள். ஆம்! மாற்றி யோசித்தால் மனது எவ்வளவு இலேசாகிறது என்பதையும் உணர வைத்த தருணம் அது!

ஒருவழியாக, தேவையான பொருட்களை அவரவர் முதுகுகளில் மூட்டைகளாகச் சுமந்துகொண்டு, மகனை என் கணவர் தன் தோள் மீது சுமந்துகொள்ள, அல்லாஹ்வின் பெயர் கூறி, இடுப்பளவு தண்ணீரில் தெருவில் இறங்கி நடக்கத் துவங்கினோம்... சிரியா, பர்மாவின் அகதிகளெல்லாம் அந்த கனப்பொழுதில் கண் முன் வந்து சென்றனர். அவர்களின் அவதிகளைக் கற்பனையால் கூட உணர முடியாமல் வெறும் காட்சிகளாக மட்டுமே கடந்து சென்ற நமக்கு அதில் ஒரு துளியளவேனும் அனுபவிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பு! சொந்த ஊரை விட்டு, சொந்தங்களை விட்டு, அண்ணல் நபிகளார் ஹிஜ்ரத் செய்த நிகழ்வும் நெஞ்சில் நிழலாடியது.

அந்நிய வீட்டிற்கு வந்துள்ளோம்... என்ற உணர்வு ஏதும் எங்களுக்கு ஏற்படாவண்ணம் எங்களை அவர்கள் அரவணைத்துக்கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்! கலங்கிய உள்ளத்துடனும், நாளை என்னவாகுமோ என்ற கலக்கத்துடனும், துஆக்களுடனுமாக - அன்றைய இரவு எங்களுக்குத் தூங்காவனமானது. விடிய விடிய விழித்திருந்து, பாங்கு ஒலித்ததும் தொழுதுவிட்டு, மீண்டும் அதே ஐந்து மணிக்கு ஓடிவந்து, தெருவையும் - வீட்டையும் பார்த்த பின்புதான் நிம்மதியே வந்தது. தெருவில் தண்ணீர் காலைச் சுற்றும் செல்லப் பிராணியாய் எங்களைத் தழுவிச் சென்றது. நேற்று வில்லனாய்த் தெரிந்த தண்ணீர் இன்று சில்லென்றிருந்தது.

நேற்றைய நிகழ்வு, எம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சரித்திரம். அதன்பின்னான இழப்புகளும், பொறுப்புகளும் எங்கள் தோள்களில் இன்னும் சில காலங்களுக்குத் தொடரும்... என்றாலும்.........

“எந்த ஓர் ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை“ என்ற இறைவாக்கு தந்த மனவலிமையுடனும், “ஒவ்வொரு அவதிக்குப் பின்னாலும் ஒரு இலேசு காத்திருக்கிறது...” என்ற இறைவசனம் தந்த அசுர பலத்துடனும் மீண்டு வருவோம்.

இதோ! அடுத்த புயல் என்கிறார்கள்... மழை என்கிறார்கள்... மூஸா நபியவர்கள் கூறியது போல, “நிச்சயமாக எனதிறைவன் என்னோடு இருக்கிறான்; அவனே எங்களை வழிநடத்துவான்” என்ற இறைநம்பிக்கையுடனும், அதிகமாய்ப் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி பின்னர் அறியவந்தபோது, “நாமெல்லாம் ஒன்றுமேயில்லை” என்ற ஆறுதலுடனும் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகிறோம்...

மழையென்பது இறைவன் நமக்களித்த வரம்! அந்த வரமே சாபமானது மனிதனின் குற்றம்தானே தவிர மழையின் குற்றமல்ல!

அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்கப் போதுமானவன்!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மழை தரும் பாடம்...
posted by: mackie noohuthambi (kayalpatnam ) on 27 November 2015
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42323

சகோதரி அவர்களின் கட்டுரை வெறும் எழுத்தல்ல

''நான் எழுதுவது கடிதம் அல்ல - உள்ளம்
அதில் இருப்பதெல்லாம் எழுத்தும் அல்ல - எண்ணம்
உன் உள்ளமதை கொள்ளை கொள்ள ....''

இது ஒரு பாடல் வரிகள்.

ஆனால் இந்த கட்டுரை நமக்கு உணர்த்துவது மழையின் கொடூரம் மட்டுமல்ல அது .நாம் செய்கின்ற கொடூர செயல்களின் பிரதிபலிப்பு என்பதை திருமறையின் வெளிச்சத்தில் நபி வழியின் பிம்பத்தில் நமக்கு எடுத்துக் காட்டி இருக்கிறார் சகோதரி உம்மு நுமைரா அவர்கள் வாழ்த்துக்கள்.

''அடடா மழைடா அட மழைடா...
அழகா சிரிச்சா புயல் மழைடா''

என்று மழையையும் புயலையும் ஒரு ஜாலியாக பாடி ரசிக்கும் பெண்கள் மத்தியில் அதை வித்தியாசமாக அணுகி நம் உள்ளங்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்பும் சகோதரி அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

இது காயல் கண்மணியின் சாயலா அல்லது காயல் மண் வாசனை தந்த வெளியூர் சகோதரியா என்ற தகவல் தெரியவில்லை. பல கவிஞர்களை ஈன்றெடுத்த காயல்பட்டினம் வரகவியையும் வரையற்ற கவிஞர்களையும் உலகுக்கு அளித்து பெருமை சேர்த்துக் கொண்ட காயல்பட்டினம் என்பது வரலாற்று உண்மை என்பது மட்டுமல்ல அது இன்றும் வாழும் நிதர்சனம் என்பதை சகோதரி அவர்களின் கட்டுரை உணர்த்துகிறது.

''என்றுமே தண்ணீரில் மிதக்கும் தமிழகம்...''

இந்த வரிகளை படிக்கும்போது பயமாக இருக்கிறது. கோவன் பாடிய பாடல் - அவர் படும் பாடு நினைவுக்கு வந்தது. பெண்கள் எல்லோரும் உங்களை போல் நேர்மறையாக சிந்தித்து பழக்கப்பட்டவர்கள் இல்லை.

இத்தகைய தீன் குலப் பெண்களை அறிமுகப் படுத்தும் இஸ்லாமிய கல்லூரிகள் பலவுள்ள இந்த ஊரில் இன்னும் இலைமறை காய்போல் இருக்கும் சகோதரிகள் இப்படி நல்ல பல சிந்தனை கட்டுரைகளை இந்த சமுதாயத்துக்கு வழங்க வேண்டும். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...வீட்டில் கிணற்றை காணவில்லை..? வீடே கிணறாக இருந்ததால்..!
posted by: AnbinalA (Jaipur) on 27 November 2015
IP: 101.*.*.* India | Comment Reference Number: 42326

கடலை தேடி மக்கள்
செல்வது தான் வாடிக்கை
ஆனால் - தமிழகத்தில்
கடலே மக்களை தேடி
வந்தது தான் வேடிக்கை..!

ஒவ்வொரு உயிரும் ஜனிப்பது
மோதலில் தான்...!
தமிழகம் தண்ணீரிலேயும்
தமிழர் சிலர் தண்ணிலேயும்
மிதப்பில் தான்..!

அசையும் நாற்காலியில்
அசையா சொத்துக்களின்
பதவிப்பிரமாணம்
ஐந்தாண்டு திட்டம்..?

இந்திய ஓட்டு பெட்டி
லாபகரமான கல்லாப் பெட்டி..!

கனவு காணுங்கள்
விடிந்ததும் த(க)ண்ணீரில்
மிதப்பது போன்று
இந்தியா 2020 வல்லரசாக..?

மிதப்பில் தான்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...முள் குத்தினாலே இப்படி என்றால் அல்லாஹு அக்பர்
posted by: Abdul Razak (Chennai) on 28 November 2015
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42327

சகோதரி லரீபா ஆலிமா அவர்களே ,
மிக அருமையான தத்ரூபமான கட்டுரை ,

இன்று சென்னை-ஆலந்தூரில் ஜுமுஆ மஸ்ஜிதில் கேட்டதை இங்கே பகிர்கிறேன் ...

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஒரு சிறிய முள் குத்தினாலும் அதற்கு (அந்த ஒரு சிறிய வழிக்கும் பகரமாக) அவருடைய பாவம் மன்னிக்க படுகிறது என்றார்களே ,

அல்லாஹ் எல்லா பாவங்களையும் விட்டு நம்மை சுத்தப்படுத்த இப்படியும் ஒரு நாட்டமோ --

எப்படியோ பரிசுத்தவான்களாக நம் அனைவரின் பாவங்களையும் கழுகி சுவனத்தில் நுழைவிப்பானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் ( அல்கோபார்) on 28 November 2015
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42328

இதுவரை பல நிகழ்வுகளை பார்த்தும் படித்தும் இருக்கின்றேன்.

சாச்சச்..சா... பாவமே இப்படி கஷ்டப்படுகிறார்களே..!! என்று அனுதாப்பட்டு, அடுத்த செய்திக்கு சென்று விடுவேன். மீண்டும் சாச்சச்..சா போடுவதற்கு. காரணம் இதுமாதிரியான கஷ்டங்களை அனுபவித்தது இல்லை.( அல்லாஹ் காப்பாற்றுவானாக).

ஆனால், இந்த ஆக்கம் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணியது.

காரணம் என் அடுத்தவீட்டு நெருங்கிய உறவு , அதுவும் மனைவியின் தோழி இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்களே என்பதும், மற்றும் ஆக்கத்தை எழுதிய நடையும் தான்.

இந்த கட்டுரை படிக்க படிக்க நாமே அந்த நிகழ்வுடன் சங்கமித்தமாதிரி ஓர் உணர்வு. படித்துக்கொண்டு இருக்கும் போதே அனிச்சையாக என்னுடைய காலை நான் தூக்கிக் கொண்டேன். சாக்கடை தண்ணீர் காலில் பட்டுவிடக்கூடாதே என்று. பாராட்டுக்கள் சகோதரி.

இதில் பல பாடங்கள் நமக்கு படிப்பினைகள் கொடுத்துள்ளன. எங்கு.. எங்கு.. எல்லாம் தண்ணீர் கட்டுகிறதோ, அங்கு எல்லாம் நாம் இயற்கையுடன் விளையாடிய விளையாட்டுக்கள் அப்பட்டமாக தெரியும்.

நம் ஊரை எடுத்துக்கொள்ளுங்களேன்,

குத்துக்கல் தெருவில், எம்‌கே‌டி அப்பா வீட்டிற்க்கு அருகில் நிரந்தரமாக கட்டும் தண்ணீருக்கு காரணம், அதன் அருகில் இருந்த தரவை குளம் மாயமானதே.

சதுக்கை தெரு சென்ட்ரல் பள்ளியில் இருந்து கட்டும் தண்ணீருக்கு காரணம், இரட்டை குளம் என்று ஒன்று இருந்ததாமே..!! அதை இல்லாமல் ஆக்கியதே..!!

இப்படி எங்கு எல்லாம் தண்ணீர் தேங்குகிறதோ அங்கு எல்லாம் நம் விளையாட்டை காணலாம். என்ன செய்வது..!! அதான் புரியாத புதிர்..?? யாரை குற்றம் சொல்லுவது..! தெரியவில்லை.

வல்ல அல்லாஹ் நம் அனைவர்களையும் கொடிய தீங்கில் இருந்து காப்பானாக.

@ நூகு தம்பி காக்கா, இக் கட்டுரை எழுதிய சகோதரி, நமது கலாமி காக்கா அவர்களின் மருமகளும், சகோ. அஜீஸ் அவர்களின் மகளும், தைக்கா தெருவில் அடங்கி இருக்கும் மகான் சாகிபு அப்பா அவர்களின் பேத்தி..( அல்லது பேத்தி மகளா ...? ) ஆவார்கள்>

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: nizam (india) on 28 November 2015
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42329

முதலில் காயல் நெட்டுக்கு ஓரு பெண்மணிக்கு கட்டுரை எழுத வாய்ப்பளித்தற்கு நன்றி இதுபோல மற்ற பெண்களும் தங்களது எழுத்தாற்றலை வெளிப்படுத்த முன்வர வேண்டும்

நகரத்திலே வாழ்ந்தால்தான் மதிப்பு என்ற மாயைக்குள் தமிழகம் தவிக்கிறது அந்த ரீதியில் கிராமத்தில் உள்ள பாமரன் கூட சென்னையில் வீடு வாங்க ஆசைப்படுகிறான். இவர்களது ஆசைகளை பணம் பண்ண வர்த்தக நிறுவனங்கள் அதிகார வர்க்கத்தை கையில் போட்டுக்கொண்டு நீர்நிலைகள் நீர்போகும் பாதைகளை பிளாட் போட்டு விற்றதால் உள்ள ஏதிர் வினை சென்னை நகரமே நரகமாக காட்சியளிக்கிறது இந்த பாவத்திற்கு தொலைக்காட்சிகளும் நட்சத்திர கலைஞர்களும் உடந்தை

மிகவும் வளர்ச்சி அடைந்த நாடுகளில் மக்கள் சிறிய நகரங்களில்தான் வாழ ஆசைப்படுகிறார்கள் ஏனென்றால் அதிக மாசு இல்லா சூழ்நிலை குறைந்த வாழ்க்கை செலவு குறைந்த தொழில் போட்டி குறைந்த சம்பளத்தில் பணியாளர்கள் கிடைப்பதால்.

அந்த காலத்தில் சென்னையை நோக்கி படையெடுத்தார்கள் என்றால் கிராமங்களில் சாலைவசதி தொலைததொடர்பு பின்தங்கி இருந்தது தற்போது சென்னையை ஐந்து மனி நேரத்தில் அடையும் வாகன சாலை முனனேற்றம் வைபை தொடர்பு தரமான பொரியற்கல்லுரிகள் ஏல்லாம் வந்தாயிற்று பக்கத்தில் விமான நிலையம் துறைமுகம் காயல் தொழிலதிபர்கள் தங்களது முதலீடுகளை கொஞ்சம் ஊர்பக்கம் ரியல்ஏஸ்டேட் கல் வியாபாரம தவிர்த்து மற்ற தொழில்களில் செய்தால் எண்ணற்ற நமதூர் படித்த ஆண் பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் இதற்கான தொழில் திட்டத்தை காயல்நெட்டே முன்னின்று உருவாக்க வேண்டும்.

எனக்கு நெருக்கமான சென்னையில் உணவு தொழிலில் கொடிக்கட்டி பறக்கும் ஓரு தொழிலதபரின் வாக்கை பதிவு செய்ய விரும்புகிறேன் சென்னையில் உள்ள தொழில்கள் நிறைவு நிலையை saturation point அடைந்து விட்டது ஆகையால் எனது முதலிடுகளை தென்னகத்தை நோக்கி நகர்த்துகிறேன்

கடைசியாக பொதுத்துறை பொறியாளர் என்கிற பார்வையில் சில கருத்துக்கள் நகராட்சியோ பொதுமக்களோ ஓரு நிலத்தை வீடு கட்ட அனுமதி கொடுக்கும் போது அந்த இடத்தில் இ யற்கையாக தண்ணீர் வடியும் நிலை உள்ளதா என்று ஆராய வேண்டும் அப்படி இல்லாத சூழ்நிலையில் வடிகால் அமைத்த பிறகுதான் வீடு கட்ட அனுமதிக்க வேண்டும் ஓவ்வொரு மழை காலத்துக்கு முன்பும் வடிகாலை தூர்வார வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Tough..
posted by: Seyed Ibrahim S.R. (Abu Dhabi) on 28 November 2015
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42330

Excellent Narration Sis, But with a bad experience. Anyways Let Almighty Allah makes things lighter and easier.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...மக்கள் இயல்பு நிலை திரும்ப இறைவனிடம் வேண்டுகிறேன்
posted by: Refaye (Abudhabi) on 29 November 2015
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42333

படிக்கும்போதே நெஞ்சை உறையவைக்கும் கட்டுரை. ஊறுக்கு ஒரு சாராயம் ,தள்ளாடுது தமிழகம் !!என்று பட்டி தொட்டி எல்லாம் கேட்ட பாடல் தந்தவரை விட என்னால் செய்து காட்ட முடியும் என்று வீறு கொண்டு எழுந்ததா இயற்க்கை!!!

வளர்ச்சி வளர்ச்சி என்று காடுகளை அழித்து,மரங்களை வெட்டி, ஆறு குளம் குட்டை மற்றும் நீர் நிலைகளையும் கொன்று இயற்க்கை, இயற்க்கை எய்ததினால் நல்ல பாடம் தந்து வீடு,வீதி தோறும் இன்று அவள் ஆச்சி,

இனி உன்னை (இயற்க்கை ) மதிப்போம் வரும் காலம்களில்,மழை நீர் பாதைகள், மழை வடிநீர் பாதைகள் இவற்றையும் இல்லையென்றாக்கி அவற்றின்மீது தங்க நாற்கர சாலைகள் அமைத்து, வானுயர் குடியிருப்பு அடுக்கு மாடிக் கட்டிடங்கள், தொழில் நுட்ப அலுவலகங்கள் என பல கட்டிடங்களை பெரும் பாறைச்சுவர் போல் கட்டி எழுப்பி மழை நீர் பிடிப்புத்தேக்கங்களையும் அதிலிருந்து வழிந்து கடலுக்குள் செல்லும் உபரி நீர் ஓட்டத்தையும் தடுத்து நிறுத்தமாட்டோம் என்று உறுதி மொழி எடுப்போம்.

ஆட்சி செய்பவர்கள் புத்தியைத்தீட்டி. இயற்க்கை காக்க வழி வகை செய்து சென்னை மட்டுமல்ல பூரா ஊரையும் தண்ணீர் புகாமல், சிங்கப்பூர் போல் ஆக்கவிட்டாலும் மலை காலங்களில் மழை நீர் தேங்கவண்ணம் சீராக செல்ல வடிவமைப்போம் என இப்போதே தேர்தல் வாக்குறுதி தாருங்கள்.

மக்கள் இயல்பு நிலை திரும்ப இறைவனிடம் வேண்டுகிறேன் .

A.R.Refaye
Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இறையச்சம் மிளிரும் எழுத்துக்கள்
posted by: கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா – கத்தார்) on 29 November 2015
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 42335

தமது துவக்க நாகரீகத்தின் தொட்டிலான ஆற்றுப் படுகைகளிலும், நீரோட்டப் பாதையின் ஓரங்களிலும் குடியமர்ந்துக் கொண்ட மனிதன், காலப்போக்கில் மாசுக்களாலும், ஆக்கிரமிப்புகளாலும் இயற்கையின் ஓட்டத்தில் தமது கரங்களால் சுய நலத்துடன் அன்றாடம் தடைகளை ஏற்படுத்தியவன், அதே இயற்கைத் திருப்பி அடிக்கும் போது தான் அதன் வலி எவ்வளவு ஆழமானது என்பதை உணர்ந்துக் கொள்கிறான்.

வேர்களைத் தேடிய பயணம் போல், குளங்களையும் ஏரிகளையும் தேடிய நெடும் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. ஊடக உரிமையாளர்களும், தனியார் கல்லூரி நிறுவனர்களும், அரசியல் வாதிகளும், ரியல் எஸ்டேட் முதலைகளும் அவற்றைக் கையகப்படுத்திக் காலங்கள் பல சென்று விட்டன; இழப்புகளுக்குப் பின்னராவது அரசுகளும், பொதுமக்களும் சரியான படிப்பினை பெற்றுக் கொள்ளுவார்களா?

இயற்கையோடு ஒன்றிய வாழ்வுச் சூழலுக்குத் தங்களைத் தகவமைத்துக் கொள்வார்களா? குறைந்தபட்சம், ஏரிகளைத் தூர்வாரவோ, அணைக்கட்டுகளை அதிகப் படுத்தவோ, மழை நீர் சேகரிப்பை ஊக்குவிக்கவோ அரசுகள் செய்யுமா? என்பதைப் பார்க்கலாம்.

PhD ஆன கட்டுரை ஆசிரியர் (சகோதரி) அவர்களின் எழுத்துக்களில் இக்லாஸ் மிளிர்கிறது; இன்பச் சூழலிலும், சோதனைக் காலங்களிலும் மிகுந்த பக்குவத்துடனும் அதே சமயம் இறை நினைவிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்ற நன்னெறிக் கருத்துக்களை, பதற்றமில்லா எளிய எழுத்துக்கள் மூலம் மிக அழகாக அவர்கள் எடுத்தியம்பியுள்ளார்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) on 01 December 2015
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42345

இந்த சகோதரியின் "மறந்ததை உணர்த்திய மழை" என்ற உண்மை கட்டுரை எனது மனதை நெகிழ வைத்தது ... அவரது ஒவ்ஒரு வார்த்தைகளும் மழையால் பாதிக்கப்பட்டு கஷ்டங்களை அனுபவித்து வரும் அனைவர்களின் உள்ள குமுறல் ....

வல்ல நாயன் நாடியதை யாரால் தான் மாற்ற முடியும் ? இனி வரும் காலங்களில் அவன் நமக்கு வழங்க நாடும் அவனது அருள் மழையை நமக்கும் ... நமது ஊருக்கும் .... நமது நாட்டிற்கும் எந்த கேடு விளைவிக்காத பறக்கதான மழையாக தர நாம் அனைவரும் அவனிடம் து ஆ செய்வோம் .... ஆமீன் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. கனமழையால் நெஞ்சம் கனக்கிறது...
posted by: M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்) on 04 December 2015
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 42357

எழுத்துமேடையின் புதுமுக ஆசிரியை அவர்களை பாராட்ட வேண்டும் எனும் எண்ணம் என் உள்ளத்தில் இருந்த போதிலும் தருணம் இதுவல்ல என தவிர்த்துக் கொண்டேன். காரணம் அவர் விவரித்த இன்னல்களின் வீரியம்தான் என் மனக்கண்ணில் துளிகளாய்த் ததும்பி நின்றது.

கட்டுரையின் தலைப்பைத் தழுவிய எனது ஆதங்கத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

எம் சமுதாயத்தின் மீது பூசப்பட்ட பழிச்சொல்லை
தொடர்மழையால் துடைத்துவிட்டான் இறைவன்.

இடிப்போம் என்ற பள்ளிவாசல்கள் இன்று இருக்க இடம் தரும் காட்சி! ஆண், பெண் பேதமின்றி களப்பணியாற்றி எம்மீதுள்ள களங்கத்தை கரையோதுக்கிவிட்டனர்.

முகநூலில் பார்த்த அத்தனை படங்களிலும் எம் சமுதாய இளைஞர்களின் கடமை உணர்வு பிரதிபலிக்கின்றது. அரசு அதிகாரிகளோ, அமைச்சர்களோ, ஏன் இராணுவம்கூட கண்ணில் படவில்லை.

கரைபுரண்டோடும் வெள்ளத்தில் மீட்பு பணியாற்ற காவிக்கும்பலை காணவில்லை! மாறாக, மதம் கடந்த மனித நேயத்தை அதன் உரிய நேரத்தில் உதவி மூலம் இரவு பகலாக சேவையாற்றும் எம் சகோதர்கள் சற்றும் சளைக்காமல் களப்பணியாற்றி வருவதைக் காண முடிந்தது.

இந்த சமுதாயம்தான் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள், என சித்தரிக்கப்பட்டு, இதே சென்னையில் இஸ்லாமியனுக்கு வாடகைக்குகூட வீடு தர மறுத்த எம் சகோதர சமுதாயம் இப்போது உணர்ந்து கொண்டது...ஏய்! பாய் நம்ம ஆளுப்பா...!

குறிப்பு: இந்த இயற்கை பேரிடரில் இஸ்லாமியர்கள் மட்டுமே உதவிக்கரம் நீட்டுகின்றனர் என நான் சொல்ல வரவில்லை! நல்லுள்ளம் கொண்ட அனைத்து மக்களும் உதவி வருகின்றனர். தேச பக்தி என வாய்கிழிய பேசி வரும் காவிக்கும்பல்களைத் தவிர...

-ஹாஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by: ALS Mama (Kayalpatnam) on 06 December 2015
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42368

மனந்திறந்து எழுதிய மழைவெள்ள செய்திக்கு பாராட்டு மழை அளிப்போம்
A.L.S.இப்னு அப்பாஸ்
(இணையதள எழுத்தாளர்> நிரூபர்> சமூக ஆர்வலர் & ஓவியர்)
காயல்பட்டினம்.

மறந்ததை உணர்த்திய மழை! சகோதரி உம்மு நுமைரா M.A., M.Phil., (Ph.D.,)

காயல்பட்டணம் தைக்கா தெருவைச் சேர்ந்த சகோதரியின் ஆக்கத்தை முதன் முதலில் படித்த போது வெள்ளத் தோடு நானும் இழுத்துச் சென்றது போல உணர்வை ஏற்படுத்தி இருந்தார்.

சுமார் 7 பக்கம் சென்னையின் வெள்ளக் காட்டை படம் பிடித்துக் காட்டினார். இறைவனின் கோபப் பார்வை ஒரு காரணம் என்று ஆலிமாவாக இருப்பதால் அறிந்து தெரிந்து எழுதி மெய்சிலிர்க்க வைத்தார்.

இவர்கள் மகளிர் கல்லூரி ஒன்றில் ஆசிரியை என்றும் அறிந்தேன். இவர்களின் எழுத்தாற்றலில் புதிய பாணி தனி நடை புதுமையாக படிக்கத் தூண்டியது. டிசம்பர் நான்கு தேதி வரை 1428 பேர்கள் படித்து இருப்பதும்> பத்து பேர் கருத்து மழை பொழிந்து இருப்பதும் அறிந்து சந்தோஷப்பட்டதற்கு காரணம் நான் இவர்களை போல கட்டுரையாளர் தான் எனது கட்டுரை டிசம்பர் 2 ல் எழுத்து மேடையில் வெளியாகி உள்ளது.

அது வெள்ளக்காடு காயலைவிட்டு இன்னும் ஏன் வெளியேற வில்லை என்ற தலைப்பில் ஒன்றரை பக்கமாக எழுதியவை இருநாட்களில் படித்தோர் உலகத்தர எண்ணிக்கை 620 க்கும் மேல் இந்த பதில் எழுதுவதற்குப் இன்னும் அதிகமானோர் நமது இணையதளத்தில் படிப்பார்கள் இரண்டு பேர் கருத்து பதிந்து இருந்தார்கள்.

இவர்களைப் போல மழை கட்டுரை என்றதாலும் காயல் தெருக்களில் இன்னும் வெள்ளம் தெருக்களில் ஆறுபோல தேங்கி நிற்பதால் வாகனங்கள் போகும் போது நடந்து செல்லும் மக்கள் ஆடையில் மேனியில் அசுத்த வெள்ள நீர் வாரி வீசப்படுகிறது தவிர்க்க முடியாத நிலையில்தான் இன்னும் கவனிக்கப்படாமல் வெள்ள நீர் தேங்கிய நிலையில் தூங்கிக் கிடக்கிறது. இதனால் மக்கள் உள்ளம் ஏங்கி தவிக்கிறது கவனிக்க யாரும் வரலே ஏன்? நமதூர் கவுன்சிலர்கள் எங்கே போய்விட்டார்கள்.

சென்னை வெள்ளம் குறித்து தொலைகாட்சியில் பலதிக்கிடும் சம்பவங்கள் மக்கள் மனதிலிருந்து இறக்கி வைத்தார்கள். காவிப்படையாம் மோடிப்படையினர் மாட்டிறச்சி சாப்பிடும் முஸ்லீம்களை பாக்கிஸ்தானுக்கு துரத்தி அனுப்ப ஆங்காங்கே கூக்குரல் போட்டது வட மாநிலம் ஒன்றில் மாட்டை வெட்டிய முதியவர் ஒருவரை அநியாயமாக கொன்ற கொடுமையை பிரதமர் கண்டித்தாரா? மௌன சாமியாராகி அவர்பல நாடு சுற்றி பரந்து போனாரே. ஹஜ்பெருநாள் என்பதே குர்பானி என்ற பெயரால் கிடா மாடுகளை பலிஇடும் நாள் தியாகத் திருநாள் இதை காவிப்படை காலித்தனமாக எதிர்த்ததே - இந்த மழை வெள்ள அழிவுக்கு காரணமாக இருக்கலாமோ என்று இந்த நேரத்தில் அப்பாவியும் அறிந்த மக்களும் பேசிகொள்கிறார்கள்.

நாடு எங்கிலும் மாடு வெட்டுவது முஸ்லீம் அவரவர் கேட்பாடு மாடு வெட்டியவனை பாக்கிஸ்தானுக்கு அனுப்ப சொன்ன காவிப்படை கூப்பாடு போட்டது சரியா? முஸ்லீம்கள் பாக்கிஸ்தானில் இருந்தா இந்தியா வந்தார்கள். சென்னையில் காவிப்படையினர் துவேஷ அணியில் முஸ்லீம்களை சாடியவர்கள் இந்த மழை வெள்ளத்தில் பள்ளி வாசலில் மனித நேயத்துடன் தங்கவைத்து உறைவிடம் உணவு உடை கொடுத்து வரவேற்றதாக முஸ்லீம் அல்லாத மக்களே தொலைகாட்சியில் பேட்டி தகவல் சொல்வதை கேட்டு மனித சமுதாயம் மெய் சிலிர்த்து போய்விட்டதை உணர்ந்து கொண்டார்கள்.

இந்தியாவின் ஒருமைபாடு என்பது ஜாதியை குறிப்பிட்டு தனியாக தாக்குவது சரிஅல்ல காவிப்படையின் கொடுமையான வார்த்தையால் முஸ்லீம் மக்கள் இறைவனிடம் கை ஏந்தி பிராத்தனை செய்ததின் விளைவாக சென்னையில் காவிப்படையையும் சூழ்ந்து இழுத்து அடித்து செல்லும் வெள்ளத்தை இறைவன் தந்து விட்டானா? என்று இப்போது மனம் பதைபதைக்கிறார்களாம் யாரையும் தாக்கும் வார்த்தையால் எந்த ஜாதியினரும் மனசும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதை காவிப்படை எனும் காலிப்படை உணர்ந்து கொள்ளட்டும்.

மனித நேயம்தான் இந்திய வளர்ச்சிக்கு ஆன்மீக தன்மைக்கு நல்லது. மழைகாலத்தில் அழகான கருத்தை மின்னல் போல் இடி போல் முழங்கிய கட்டுரையை தந்த சகோதரியை மனதார பாராட்டி வாழ்த்தி போர்வையை போர்த்துவோம் வாரீர்.

இவர்களை போல மற்ற சகோதரிகளும் கட்டுரை பலதரனும். எனது வெள்ளக்காடு கட்டுரை படித்து சகோதரிகள் கருத்து அனுப்புங்கள். எழுத எழுத எழுத்து மின்னும் பிரகாசிக்கும்.

A.L.S.மாமா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by: Omar (Riyadh ) on 06 December 2015
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 42369

For an accident of this , sister took a chance to write the remembrance of most of many historical incidents and bring back all the prohpets strating from Noohu nabi , younus nabi , moosa nabi to finally hijrath , in between customs offcier raid , FIR so on , very interesting ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved