Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:03:19 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19740
#KOTW19740
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 28, 2017
மாவட்ட நூலக அலுவலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரையிடல் நிகழ்ச்சி!!! எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் இணைவில் நடந்தேறியது!!!
செய்திஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம், சஊதி அரபிய்யா)
இந்த பக்கம் 2985 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & காயல்பட்டினம் அரசு பொது நூலகம் ஆகியன இணைந்து, 10.09.2017 ஞாயிற்றுக்கிழமையன்று, பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள அரசு பொது நூலகத்தில் – இரு வேறு ஆங்கிலப் படங்களை திரையிட்டன.

ஆர்வலர்கள் & வாசகர்கள் பலரும் பங்கேற்று பயனடைந்த இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் திரு. ராம் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-

இந்த செய்தியறிக்கையின் உள்ளடக்கங்கள்:

(அ) நிகழ்வு # 18
(ஆ) புதிய நிகழ்விடம் - அரசு பொது நூலகம்!!!
(இ) துடிப்பான நூலகர் - ஜனாப் அ. முஜீப்!!!
(ஈ) திரையிடல் # 1: Modern Times
(உ) கதைச் சுருக்கம் (Modern Times)
(ஊ) படம் கூறும் பாடம் (Modern Times)
(எ) திரையிடல் # 2: The Man Who Planted Trees
(ஏ) கதைச் சுருக்கம் (The Man Who Planted Trees)
(ஐ) படம் கூறும் பாடம் (The Man Who Planted Trees)
(ஒ) சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட நூலக அலுவலர்!!!
(ஓ) நூலக உலகில் பாராட்டு!!!
(ஔ) முக்கிய மேற்கோள்கள்

(அ) நிகழ்வு # 18

சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு – நூலாய்வு, திரையிடல் & விவாத அரங்குகள் போன்ற நிகழ்வுகளின் மூலம், நமதூர் மக்களிடம் புதிய / மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தனித்த சிந்தனைத்தளமாக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” விளங்குகிறது.

இவ்வமைப்பின் 18-வது நிகழ்வாக, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்துடன் இணைந்து - இரு வேறு ஆங்கிலப் படங்கள், 10.09.2017 ஞாயிற்றுக்கிழமையன்று, பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள அரசு பொது நூலகத்தில் திரையிடப்பட்டன. “அரசு நூலகத்தில் நடத்தப்படும் முதன்முதல் எழுத்து மேடை மைய நிகழ்வு இது,” என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆ) புதிய நிகழ்விடம் - அரசு பொது நூலகம்!!!

1964-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நமதூரின் அரசு பொது நூலகம், கட்டிட சீரமைப்பு பணிக்கு உட்படுத்தப்பட்டு - புதுப் பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டது. சுமார் 32,000 க்கும் மேலான நூல்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த கிளை நூலகத்தில், சுமார் 3200-க்கும் மேலானவர்கள் உறுப்பினர்களாகவும் & 150-க்கும் மேலானவர்கள் புரவலர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு சார்ந்த திட்டங்களுக்கும் வசதிகளுக்கும் முன்னுரிமை வழங்கும் நோக்கோடு, இந்த திரையிடலுக்கு அரசு பொது நூலகம் நிகழ்விடமாக தேர்வுசெய்யப்பட்டது.



(இ) துடிப்பான நூலகர் - ஜனாப் அ. முஜீப்!!!

நமதூர் அரசு பொது நூலகத்தில் எழுத்து மேடை மையத்தின் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்திட, எமது அமைப்பின் சார்பில் இதுகாலம் வரை நடத்தப்பட்ட நிகழ்வுகளின் மீளாய்வு அறிக்கையை - நூலகர் ஜனாப் அ. முஜீப் அவர்களின் வழியாக - மாவட்ட நூலக அலுவலரிடம் வழங்கி, முறைப்படி அனுமதி பெறப்பட்டது.

ஜனாப் அ. முஜீப் கடந்த 2013-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலகராக (மாவட்ட அளவில் நன்நூலகர் விருது) தேர்வுசெய்யப்பட்டு, தமிழ்நாடு அரசின் டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதினை இளம் வயதிலேயே (தனது 36-வது வயதில்) பெற்ற முதல் நூலகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூலகம் இன்றைய நிலையை அடைந்தமைக்கு, இறையருளுக்குப் பின்னர் - இவரின் அயராத உழைப்பே முதன்மை காரணம் என்றால் அது மிகையாகாது.



(ஈ) திரையிடல் # 1: Modern Times

மக்கள் கலைஞன் சார்லி சாப்ளின் எழுதி, இயக்கி & நடித்து, 1936-ஆம் ஆண்டு வெளியான மெளனமொழி திரைப்படமே இந்த மாடர்ன் டைம்ஸ் (Modern Times). நவீன தொழில்மயமான உலகில், வாழ்வதற்கு போராடும் எளிமையான மனிதனின் கதாபாத்திரத்தில் சாப்ளின் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் வாழ்ந்திருப்பார். முப்பதுகளில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியின் (Great Depression) கோர முகத்தை இந்த படம் வெளிக்காட்டுகிறது.

மகாத்மா காந்தியுடனான சந்திப்பு, தொழில்மயமாக்கல் குறித்த அவரது நிலைப்பாடு & அது தொடர்பான உரையாடலுமே, இப்படத்திற்கான உத்வேகத்தை சாப்ளினுக்கு அளித்தது என்பது வரலாறு.



(உ) கதைச் சுருக்கம் (Modern Times)

ஒரு நவீன தொழிற்சாலையின் உற்பத்தி வரிசையில் பணியாற்றும் தொழிலாளியாக டிராம்ப் (Tramp) எனும் கதாபாத்திரத்தில் சாப்ளின் இப்படத்தில் தோன்றுகிறார். இடைவிடாது விரைந்து செல்லும் திருகு இயந்திரத்தின் வேகத்துக்கு, அவர் ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடுகிறார். பின், புதிதாக உருவாக்கப்பட்ட உணவு இயந்திரத்தின் சோதனைக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பழுதாகும் அந்த இயந்திரத்தினால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் அவர், ஒரு கட்டத்தில் - வேலை அழுத்தத்தால் – மன நிலை பாதிக்கப்பட்டு, தொழிற்சாலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறார். சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் உடல் தேறிய நிலையில் வெளியேறும் அவர், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தால் அவதியுறுகிறார்.



தெருவில் நடக்கும் ஒரு கம்யூனிஸ ஆர்ப்பாட்டத்தின் போது, தவறுதலாக அவர் கைது செய்யப்படுகிறார். சிறையில், தற்செயலாக போதைப் பொருளை உட்கொள்ளும் அவர், ஒரு குற்றவாளியை சிறையில் இருந்து தப்பிக்க விடாது தடுக்கிறார். அந்த செயலினால், அவர் ஒரு கதாநாயகனாக புகழப்பட்டு, சிறையில் சிறப்பு உபசரிப்போடு வாழ்க்கையை நகர்த்துகிறார். தனது வீர செயல்கள் காரணமாக, அவர் விரைவில் விடுதலை செய்யப்படுகிறார். சொகுசான சிறை வாழ்க்கையை விட்டு வெளியேற - துளியும் விருப்பமில்லாத அவர், அரசு பரிந்துரைக் கடிதத்துடன் ஒரு புதிய வேலையில் சேர்கிறார்.

அந்த வேலையில் அவர் தவறிழைக்கவே, கிடைத்த வேலையும் பறிபோகிறது. சமீபத்தில் அனாதையான ஒரு பெண்மணி (எல்லென் Ellen கதாபாத்திரத்தில் நடித்துள்ள கதாநாயகி பாலேட்டே கோடார்ட் Paulette Goddard) ரொட்டித் துண்டை திருடியதற்காக காவல்துறையினரால் விரட்டப்பட, திருட்டுப் பட்டத்தை தானே ஏற்றுக்கொண்டு சிறை செல்ல விரும்புகிறார் சாப்ளின். அவர் ஏமாற்றியதை ஒரு சாட்சி வெளிப்படுத்த, சாப்ளின் விடுவிக்கப்படுகிறார். சிறை செல்லும் கனவு பழிக்காமல் போகவே, மீண்டும் ஒரு திட்டம் போடுகிறார்.

ஒரு உணவு விடுதியில் வயிறாற சாப்பிட்ட பின், கொடுப்பதற்கு பணமில்லாமல் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறார். அவரை ஏற்றிச் செல்லும் அதே ஊர்தியில், கதாநாயகியை சந்திக்கிறார். அந்த ஊர்தி விபத்துக்குள்ளாக, இருவரும் தப்பி ஓடுகின்றனர்.

சிறப்பான வாழ்க்கைக்காக கனவு கண்டவராய், ஒரு பல்பொருள் அங்காடியில் இரவு நேரக் காவல்காரராக வேலைக்கு சேர்கிறார். இரவில் யாருக்கும் தெரியாமல் பாலேட்டேவை அங்காடிக்குள் அழைத்துச் செல்கிறார். கூடவே, மூன்று திருடர்களும் வந்து சேர்கின்றனர். அதில் ஒருவர், சாப்ளினோடு தொழிற்சாலையில் பணியாற்றிவர். பசியின் கொடுமையினாலேயே அங்காடிக்குள் நுழைந்ததாக - வந்தவர் கூற, சாப்ளின் பானங்களை பகிர்ந்துகொள்கிறார். மறுநாள் காலையில், திருட்டுக் குற்றத்திற்காக மீண்டும் ஒரு முறை கைது செய்யப்படுகிறார் சாப்ளின்.

விடுதலையான பின், ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்கிறார். அதன் தொழிலாளர்கள் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, இவர் மீண்டும் ஒரு முறை தவறுதலாக கைதாகிறார். விடுதலையானதும், கதாநாயகி ஒரு விடுதியில் நடனக் கலைஞராக பணி புரிவதை தெரிந்துகொள்கிறார். அவரும் அதே விடுதியில் பாடகராக சேர்கிறார். நாட்கள் நகர்கிறது. ஒரு நாள், காவலர்கள் கதாநாயகியை அவரது பழைய குற்றத்திற்காக கைது செய்திட முயல்கின்றனர். இருவரும் தப்பி ஓடுகின்றனர்.

இறுதிக் காட்சியில், ஒரு நிச்சயமற்ற ஆனால் நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை நோக்கி - ஒரு சாலையில் அவர்கள் நடந்து செல்கின்றனர்.

(ஊ) படம் கூறும் பாடம் (Modern Times)

“பொருத்தமில்லாத பிடித்தமில்லாத இயந்திரத்தனமான வாழ்க்கை என் மீது திணிக்கப்பட்டுள்ளது. என் வாழ்வில் எந்த சுவையுமில்லை. ஒரே மாதிரியான சலிப்பான வாழ்க்கை போகின்றது,” என நம்மில் பலரும் புலம்புகின்றோம். இப்படியான வாழ்க்கையை சார்லி சாப்ளின் போன்ற ஒரு மக்கள் கலைஞன் தனது கலைப்பார்வையின் வழியாக எப்படி பார்த்துள்ளான் என்பதுதான் இப்படத்தின் சுவையான கரு. சார்லி சாப்ளின் படங்கள் அனைத்தும் அனைவருக்கும் புரியும் உலக மொழியில் அமைந்தவை. அவற்றின் காட்சிகள் உயிர்ப்பும் துடிப்பும் மிக்கவை.

இப்படம் வெளிவந்த காலத்தை போல, இப்போதும் கூட காலத்தை கடந்து மிகவும் அர்த்தமுள்ளதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது. இயந்திரமயமாக்கப்பட்ட உலகில் மனித உரிமைகளுக்காக போராடுவதை ஆழமாக பிரதிபலிக்கிறது. கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகில், உதவியற்ற கரங்களைப் போல உணரும் அனைவருக்கும் வலிமையையும் ஆறுதலையும் அளிக்க வேண்டிய அவசியத்தை இப்படம் உணர்த்துகிறது. உலகளாவிய கருப்பொருள்கள் & நகைச்சுவையான புனைவு மூலம், சாப்ளினின் ஆகச் சிறந்த படைப்புகளுள் இத்திரைப்படம் ஒன்றாக விளங்குகிறது.

தொழில் புரட்சி பல்வேறு நல்ல விதமான மாற்றங்களை இவ்வுலகில் ஏற்படுத்திய போதிலும், மனித உளவியல் அமைப்புக்குள் அது ஏற்படுத்திய சிக்கல்களின் மீதான விமர்சனமாகவே இப்படம் அமைகிறது. அத்தகைய நெருக்கடியில் இருந்து தப்பிக்க முனையும் கதாபாத்திரத்தில், சாப்ளின் அவருக்கே உரிய பாணியை கையாண்டுள்ளார். இயந்திரமயமான வாழ்வில் இருந்து விடுதலையாவதற்கான எளிய வழிகளை, ஒவ்வொரு மனிதனும் தனக்கே உரிய இயல்பினைக் கொண்டு தேடிக்கொள்ளலாம்.

இந்த Modern Times திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், திரையில் விடைபெறுவது படத்தின் கதாநாயகனும் கதாநாயகியும் மட்டுமல்ல; மெளனமொழி படங்களின் பொற்காலமும்தான். இத்தகைய மனித ஓசையில்லா திரைக்காவியங்களுக்கு, இப்படத்தின் மூலம் இறுதி காணிக்கையை அழகாக வழங்கியுள்ளார் சாப்ளின்.



திரையிடலுக்குப் பின்னர், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் ஃபழ்ல் இஸ்மாயீல் Modern Times திரைப்படம் குறித்து சுருக்கமாக உரையாற்றினார். அதனை தொடர்ந்து, பார்வையாளர்களின் கருத்துபரிமாற்ற நிகழ்வு நடைபெற்றது.





(எ) திரையிடல் # 2: The Man Who Planted Trees

ஜீன் ஜியோனோ (Jean Giono) எழுதிய The Man Who Planted Trees எனும் கதை 1953-இல் வெளியானது. வெறும் 4000 வார்த்தைகளுள் இருந்த இது, எழுத்து உலகில் மிகுந்த வரவேற்பை பெற்றது. 1987-ஆம் ஆண்டு, இந்த கதையை கோட்டோவிய திரைப்படமாக (animation movie) ஃப்ரெடெரிக் பேக் (Frédéric Back) உருவாக்கினார். பல விருதுகளைப் பெற்ற அந்த படம், ஆங்கில துனைத் தலைப்புகளுடன் இந்நிகழ்வின் இரண்டாம் திரையிடலாக அமைந்தது.



(ஏ) கதைச் சுருக்கம் (The Man Who Planted Trees)

1913-ஆம் ஆண்டில் இந்த கதை தொடங்குகிறது. கதையை சொல்லும் இளைஞன் பிரான்ஸ் நாட்டின் புரோவென்ஸ் (Provence) பகுதியில் ஆல்ப்ஸ் (Alps) மலையை கடந்து தனியாக நடைபயணம் மேற்கொள்கிறான். ஒப்பீட்டளவில் மாசுபடாத வனப்பகுதியை ரசித்தபடியே அவன் பயணத்தை தொடர்கிறான்.

வழியில், தண்ணீர் இல்லாத நிலையில், ஒரு தனி வனாந்திரமான பள்ளத்தாக்கை அடைகிறார். லாவெண்டர் செடிகளையும் & (வாழ்ந்து முடிந்த) பழைய, உடைந்த வெற்றுக் கட்டிடங்களையும் தவிர, நாகரிகத்தின் எந்த தடையுமும் அங்கு தென்படவில்லை. தண்ணீருக்காக அலைந்து திரிந்துகொண்டிருக்கையில், அவனது கண்ணில் ஏதோ ஒன்று தெரிகிறது. ஒரு மனிதனும் சில ஆடுகளும். அந்த மனிதர் நடுத்தர வயதுடைய மேய்ப்பர். ஆடுகளுடன் ஒரு நாயும் அவருடன் இருக்கிறது. இளைஞன் நீர் தந்து உதவுகிறார். சிறிது காலம், அவருடனே அவன் தங்குகிறான்.



இந்த மனிதரைப் பற்றி அறிந்திட ஆர்வமாக உள்ளான் இளைஞன். தனது மனைவியின் இறப்புக்குப் பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட அந்த மேய்ப்பர் எல்ஜார்ட் பஃப்பியர் (Elzéard Bouffier), மக்களால் கைவிடப்பட்ட அந்த பள்ளத்தாக்கு பகுதியின் பாழாக்கப்பட்ட நிலத்தை மீட்டெடுக்க முடிவு செய்து, தனி ஒருவனாக அங்கு மரங்களின் விதைகளை நட்டு வருகிறார்.

அந்த மேய்ப்பரை விட்டுவிட்டு (கதைசொல்லி) இளைஞன் வீடு திரும்பிய பின்னர், முதல் உலகப் போரில் கலந்துகொள்கிறான். 1920-இல், போருக்குப் பின்னர், அதிர்ச்சியும் மனச்சோர்வும் அடைந்த அவன் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பி வருகிறான். அவன் காணும் காட்சியால் மிகுந்த வியப்படைகிறான். மேய்ப்பர் நட்ட கன்றுகள் பள்ளத்தாக்கில் வேர்விட்டிருந்தன.

மேடுகளில் காணப்படும் புதிய நீரோடைகளை கண்டு வியப்படைகிறான். இந்த மறுமலர்ச்சியைக் கண்டு மன அமைதி கொள்கிறான். பஃப்பியரின் பணியை காண ஒவ்வொரு ஆண்டும் அவன் தொடர்ந்து வருகிறான். பஃப்பியர் இனி ஒரு மேய்ப்பர் அல்ல. தன்னுடைய இளம் மரங்களை எண்ணி கவலையுற்ற அவர், ஆடுகளை விடுத்து தேனீக்களை வளர்க்கத் துவங்குகிறார்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பஃப்பியர் மரங்களை நட்டு வருகிறார். அந்த பள்ளத்தாக்கு ஒரு பெருந்தோட்டமாக மாறுகிறது. துடிப்பான ஒன்றாக மாறிய அந்த இடம், பல்லுயிரிகளின் வாழ்விடமாக மாறுகிறது. அரசு பாதுகாப்பையும் பெறுகிறது. இந்த காட்டின் விரைவான வளர்ச்சியானது, ஒரு விசித்திரமான இயற்கையான நிகழ்வு என வன அலுவகர்கள் கருதினர். அவர்கள் பஃப்பியரின் தன்னலமற்ற செயல்களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. சுமார், 10,000க்கும் அதிகமானோர் அங்கு குடியேறுகின்றனர். அவர்கள் அனைவரது மகிழ்வான வாழ்க்கைக்கும், தன்னை அறியாமலேயே பஃப்பியர் காரணமாகிவிட்டார். 1945 ஆம் ஆண்டு, கிழவனான பஃப்பியரை கதைசொல்லும் இளைஞன் இறுதியாக சந்திக்கிறான். 1947 ஆம் ஆண்டு, ஒரு பெருங்காட்டை வளர்த்த கிழவர் இயற்கையோடு இணைகிறார்.

(ஐ) படம் கூறும் பாடம் (The Man Who Planted Trees)

பாழடைந்த ஒரு இடத்தை, மரங்களை நட்டு தன்னந்தனியாக உயிர்ப்பித்த மனிதனின் அர்ப்பணிப்பே இந்த கதை. வெகு காலம் வரை, இக்கதையில் தோன்றும் எல்ஜார்ட் பஃப்பியர் ஒரு உண்மையான வரலாற்று நாயகன் என்றே மக்கள் கருதினர். கதையை கூறிய கவர்ச்சிகரமான விதமே அதற்கு முழுக் காரணம் எனலாம். 1957-ஆம் ஆண்டில், “பஃப்பியர் என்பவர் ஒரு கற்பனை கதாபாத்திரமே,” என நூலாசிரியர் ஜீன் ஜியோனோ ஓர் கடிதத்தின் வாயிலாக உலகுக்கு தெரிவித்த பின்பே, இக்குழப்பம் முற்று பெற்றது.

மழையின்மை, வறட்சி, நீர் நிலைகளின் அழிவு & பாலைவனமாக்கல் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு நம் மாநிலம் தள்ளப்பட்டுள்ளது; அதிலும் குறிப்பாக, நம் பகுதியில் சூழலியல் மாற்றத்தின் தாக்கத்தை வெகுவாகவே உள்ளது. இன்றைய காயலின் சில தெருக்களில் மட்டுமே எஞ்சியுள்ள பெரிய மரங்கள் அனைத்தும், என்றோ நம் மூதாதையர்களால் நடப்பட்டவை. இன்றோ, அவை நமக்கு பயனளிக்கின்றன.

ஒரு பாழடைந்துபோன வாழ்விடத்தை தனி மனித முயற்சியினால் - உயிர்பூக்கும் சோலையாக மாற்ற முடியும் என்னும் நம்பிக்கையை இக்கதை நமக்கு வழங்குகிறது. அத்தகைய தன்னலமற்ற முயற்சிகள், தனி நபர்களாலும் சமூக மாற்றத்தை விரும்பும் பல்வேறு குழுக்களாலும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை இன்று நமதூருக்கும் ஏற்பட்டுள்ளது.

திரையிடலுக்குப் பின்னர், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் ஹபீப் இப்றாஹீம் The Man Who Planted Trees திரைப்படம் குறித்து சுருக்கமாக உரையாற்றினார். அதனை தொடர்ந்து, பார்வையாளர்களின் கருத்துபரிமாற்ற நிகழ்வு நடைபெற்றது.





(ஒ) சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட நூலக அலுவலர்!!!

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட நூலக அலுவலர் திரு. ராம் சங்கர் அவர்களை எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப் சாளை பஷீர் ஆரிஃப் வரவேற்று-அறிமுகப்படுத்த, காயல்பட்டினம் அரசு பொது நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் ஜனாப் T.S. அபூபக்கர் அவருக்கு பொன்னாடை அணிவித்தார். பின்னர், உரையாற்றிய நூலக அலுவலர், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காக வாழ்த்து தெரிவித்து, இது மாதிரியான பல்வேறு திரையிடல்கள் & நூலாய்வு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்திடுமாறு வேண்டுகோள்விடுத்தார்.



அதனை தொடர்ந்து, சிறப்பாக செயல்படும் நூலகர் ஜனாப் முஜீப் அவர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.



வாசகர் வட்டத்தின் சார்பில் பேசிய ஜனாப் முஜாஹித் அலி, கிளை நூலகமாக செயல்பட்டு வரும் இந்நூலகத்தை - முழு நேர நூலகமாக மாற்றிடுமாறு மாவட்ட அலுவலருக்கு கோரிக்கைவிடுத்தார்.



எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் சார்பில், மாவட்ட நூலக அலுவலர் திரு. ராம் சங்கர் அவர்களுக்கு - காலச்சுவடு பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடான ‘தாகங்கொண்ட மீனொன்று’ எனும் தலைப்பினைக் கொண்ட ‘ரூமி’ கவிதைகள் நூல் (தமிழில் எஸ். சத்தியமூர்த்தி) நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.



(ஓ) நூலக உலகில் பாராட்டு!!!

காயல்பட்டினம் அரசு பொது நூலகத்துடன், எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியின் ஒளிப்படங்கள், மாநில அளவிலுள்ள அரசு நூலக வட்டத்திற்கு - மாவட்ட நூலக அலுவலரால் பகிரப்பட்டது. தமிழக நூலக உலகில் இந்நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நமது அமைப்பு அதற்கேயான ஆக பொருத்தமான நிகழ்விடங்களையும் (பள்ளி & நூலகம்) பயனாளர்களையும் (மாணவர்கள் & நூல் வாசகர்கள்) நோக்கி நகர்வது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, துஆ கஃப்பாராவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இதுபோன்று பல்வேறு திரையிடல் நிகழ்வுகள் & நூலாய்வு அமர்வுகளையும், அரசு பொது நூலகத்தின் இணைவில் வருங்காலங்களிலும் எம் அமைப்பு சிறப்புற நடத்திட - வல்ல இறைவன் உதவிபுரிவானாக! ஆமீன்!!

(ஔ) முக்கிய மேற்கோள்கள்

1. Modern Times: Full Movie in YouTube (முழு நீள படம்)
https://www.youtube.com/watch?v=o-x2QArMpEQ

2. Modern Times: Synopsis (கதைச் சுருக்கம்)
http://www.charliechaplin.com/en/films/6-Modern-Times/articles/11-Modern-Times-Synopsis

3. Filming Modern Times
http://www.charliechaplin.com/en/films/8-Monsieur-Verdoux/articles/6-Filming-Modern-Times

4. Modern Times: Wikipedia Page
https://en.wikipedia.org/wiki/Modern_Times_(film)

5. The Man Who Planted Trees: Animation Movie by Frédéric Back
https://www.youtube.com/watch?v=KTvYh8ar3tc

6. The Man Who Planted Trees: Story Book by Jean Giono
http://www.idph.com.br/conteudos/ebooks/the_man_who_planted_trees.pdf

7. The Man Who Planted Trees: Wikipedia Pages
https://en.wikipedia.org/wiki/The_Man_Who_Planted_Trees
https://en.wikipedia.org/wiki/The_Man_Who_Planted_Trees_(film)

8. காயல்பட்டினம் அரசு நூலகர் முஜீப் - தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த நூலகர் விருதினை சென்னையில் பெற்றார்!
http://www.kayalpatnam.com/shownews.asp?id=12343

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளிப்படங்கள்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம்


செய்தியாக்கம்:
சாளை பஷீர் ஆரிஃப்
அ.ர.ஹபீப் இப்றாஹீம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஹாஜிகள் ஊர் வருகை!  (28/9/2017) [Views - 2351; Comments - 0]
நேற்றும், இன்றும் சாரல்!  (28/9/2017) [Views - 1675; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved