காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில், நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்த மாணவ-மாணவியர் நேர்காணல் செய்யப்பட்டு, அவர்களுள் 42 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலக காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணைகளுடன், நமது இக்ராஃ கல்விச் சங்கத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியர் 61 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
வழமை போன்று இவ்விண்ணப்பங்கள் மூன்றடுக்கு விசாரணையின் கீழ் பரிசீலிக்கப்பட்டுள்ளன. துவக்கமாக, விண்ணப்பப் படிவங்களிலுள்ள ஜமாஅத் சான்றறிக்கை பரிசீலிக்கப்பட்டது. இரண்டாவதாக விண்ணப்பதாரர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்விசாரணையில், இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் இக்ராஃவிற்கு நேரடியாக அழைக்கப்பட்டு, நேர்காணல் செய்யப்பட்டனர். இந்த நேர்காணல் நிகழ்ச்சி, 02.08.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02:30 மணி வரை காயல்பட்டினம் கீழ நெயினா தெருவிலுள்ள இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்திற்கு எதிரே உள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.
இக்ராஃவின் துணைத்தலைவரும், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவருமான ஹாஜி எஸ்.ஏ.அஹமது ரஃபீக், இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர், ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் ஆகியோரடங்கிய குழு, நடப்பாண்டு இக்ராஃவின் கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பித்த மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தது. இவர்களுக்கு உதவியாக இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது மற்றும் தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயலர் எம்.எம்.செய்யது இஸ்மாயில் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நேர்காணலில், 14 மாணவர்கள், 28 மாணவியர் - நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கான உதவித்தொகையாக ரூபாய் 3,10,000/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில் இரண்டு மாணவர்கள் முழுமையான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விண்ணப்பித்து கல்லூரிக்கு செல்லாத மாணவ-மாணவியர், கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு விண்ணப்பித்து பின் பொறியியல் கல்லூரிக்கு மாறிச் சென்றவர்கள், இதர நிறுவனத்தின் / தனி நபர் மூலம் முழு அணுசரனை பெற்றவர்கள், விண்ணப்பத்தை காலம் தாழ்த்தி சமர்ப்பித்தவர்கள், ஏழ்மை நிலையில் இல்லாதவர்கள், ஏற்கனவே இக்ராஃவில் கல்வி உதவித்தொகை பெற்று படிப்பை இடைநிறுத்தம் செய்தவர்களின் சகோதரிகள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் என மொத்தம் 19 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ - மாணவியர்களில் பலர் ஆதரவற்றவர்கள்; வறுமையில் வாழ்ந்து வருபவர்கள் என்பதும், இவர்களை நம்பியே இவர்களின் குடும்பம் வாழ்ந்து வருகிறது என்பதும், இந்த மாணவ - மாணவியருக்கு தேவையான வழிகாட்டுதலும், மேற்படிப்பு குறித்த ஆலோசனைகளும் இந்நேர்காணலின்போது வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இந்த நேர்காணலில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும், கல்வி உதவித்தொகைகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) வெளியிட்ட KCGC BULLETIN மூன்று காலாண்டு இதழ்கள் சேர்த்து வழங்கப்பட்டன.
இந்த நேர்காணலில் 42 மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 3,10,000/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், நடப்பாண்டு (2015 -2016) கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை ரூபாய் 2,48,000/- மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது.இதனை பூர்த்தி செய்ய மேலும் ரூபாய் 62,000/- தேவைப்படுகிறது. இதில் அனுசரணை வழங்காத காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் இந்த மாணவ – மாணவியரின் ஒளிமயமான வாழ்விற்கு உதவிடும் வகையில் sponsor வழங்கி உதவிட அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது,
மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம்.
கடந்த (2014-2015) கல்வியாண்டில் இக்ராஃவால் நடத்தப்பட்ட கல்வி உதவித்தொகை நேர்காணல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |