Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:35:25 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9853
#KOTW9853
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 23, 2012
DCWவின் இல்மனைட் ஆலையை மூடுக! சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆலையை ஆய்வு செய்க!! காயல்பட்டினம் வந்த சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் KEPA வேண்டுகோள்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4290 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட படி, DCW நிறுவனத்தின் இல்மனைட் ஆலையை மூடுமாறும், சுந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு தொழிற்சாலையை ஆய்வு செய்து அறிக்கை பெறப்படும் வரை அதன் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது என்றும், காயல்பட்டினம் வந்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் - சென்னை தலைமை அலுவலக அதிகாரிகளிடம், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்து, கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று, காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், கண்டன ஆர்ப்பாட்டமும், செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, 10.12.2012 திங்கட்கிழமையன்று காலையில், சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக அதிகாரிகளிடம் சென்னை வாழ் காயலர்கள் ஒன்றாகத் திரண்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகளை கடிதங்களாக அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக கேளரங்கில் சிறப்புக் கூட்டமும், பின்னர் வெளி வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் காயல்பட்டினம் வருகை:
சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் முன்வைக்கப்பட்ட முறையீட்டைத் தொடர்ந்து, அதன் தலைமை உதவி பொறியாளர் மோகன் நாயுடு, சுற்றுச்சூழல் தலைமை இணைப் பொறியாளர் சார்லஸ், அதன் ஆய்வக துணை இயக்குநா மாரிமுத்து, சுற்றுச்சூழல் தலைமை இணைப் பொறியாளர் கிருஷ்ணராம், தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் கோகுல் தாஸ், தூத்துக்குடி மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை விஞ்ஞான துணை அலுவலர் சுரேஷ் குமார் ஆகியோரடங்கிய குழுவினர், 22.12.2012 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில், ஆய்வக பரிசோதனைக்கான அனைத்து ஏற்பாடுகளுடனும் காயல்பட்டினம் வருகை தந்தனர்.



KEPA அலுவலகத்தில் வரவேற்பு:
அவர்களுக்கு, காயல்பட்டினம் கடைப்பள்ளி எதிரிலுள்ள - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) அலுவலகத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமை தாங்கினார். துணைத் தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிகாரி உரை:
தாம் வந்துள்ள நோக்கம் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை உதவிப் பொறியாளர் மோகன் நாயுடு அறிமுகவுரையாற்றினார்.

தன்னுடன் வந்திருந்த குழுவினரை அறிமுகப்படுத்திப் பேசிய அவர், சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் KEPA அமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்ட முறையீட்டின் தொடர்ச்சியாக, DCW ஆலையை ஆய்வு செய்ய தாம் யாவரும் வந்திருப்பதாகவும், தேவையான ஒத்துழைப்புகளைத் தருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.



KEPA கோரிக்கை:
அவரைத் தொடர்ந்து, KEPA அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் பேசினார். கூட்டத்தில் சங்கமித்திருந்த KEPA நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினரை அறிமுகப்படுத்திப் பேசிய பின்னர், அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-



ஊரின் ஒட்டுமொத்த எதிர்ப்பு:
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் சுமார் 50 ஆண்டு காலமாக இயங்கி வரும் DCW தொழிற்சாலையால் நகரில் சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாசடைந்துள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட கொடிய உயிர்க்கொல்லி நோய்களுக்கு இந்த ஆலையின் கழிவுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் நகர பொதுமக்கள் அனைவரிடமும் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பில், நகரில் நடத்தப்பட்ட அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் வட்டார நலக் கமிட்டியினர் உள்ளிட்டோர் நடத்திய கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகள் அதற்கு சான்று பகரும் வகையில் உள்ளது.

இல்மனைட் ஆலையை மூடி நம்பிக்கையளிக்க வேண்டுகோள்:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்டப் பிரிவு பரிந்துரைத்த படி, DCW ஆலையின் இல்மனைட் பிரிவு மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, துவக்கமாக DCW தொழிற்சாலையின் இல்மனைட் பிரிவை உடனடியாக மூட உத்தரவிடுவதன் மூலம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது நகர பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

KEPAவின் முறையீட்டை மதித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அளித்த உத்தரவின் பேரில் ஆய்வுக்கு வந்திருக்கும் குழுவினரை மனதார வரவேற்கிறோம். எங்களைப் போலவே உங்களுக்கும் குடும்பம் உள்ளது. நீங்கள் செய்யும் ஆய்வு உளத்தூய்மையானதாக இருக்க வேண்டும் என நாங்கள் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

சுதந்திரமான வல்லுநர் குழுவினர் ஆய்வுக்கு கோரிக்கை:
நீங்கள் செய்யும் ஆய்வுடன் நிறுத்திக் கொள்ளாமல், ஏற்கனவே எமது KEPA சார்பில் தங்களிடம் முன்வைக்கப்பட்ட படி, DCW தொழிற்சாலையால் இதுவரை நகரில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு குறித்தும், பொதுமக்களின் உடல்நலன் குறித்தும் சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.

அதுபோல, DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்தால் ஏற்படவிருக்கும் விளைவுகள் குறித்தும் சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கையளிக்க உத்தரவிட வேண்டும்.

விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது!
இந்த அனைத்து ஆய்வறிக்கைகளும் பெறப்படும் வரை அத்தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதியளிக்கவே கூடாது.

DCW தொழிற்சாலையை மூட நாங்கள் ஒருபோதும் கோரவில்லை. அரசின் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாக மதித்து அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்றே நாங்கள் விரும்புகிறோம்.

சுற்றுச்சூழல் மாசுகளால் உடல் நலன் பாதிப்பு:
சுற்றுவட்டாரத்திலுள்ள பலருக்கு இதனால் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து பலரால் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது. ஆனால், எங்கள் மக்களோ - புற்றுநோய் உள்ளிட்ட கொடிய உயிர்க்கொல்லி நோயால் பீடிக்கப்பட்டும், எங்கள் குழந்தைகள் ப்ரைமரி காம்ப்ளக்ஸ் பாதிப்பிற்குள்ளாகியும் - அனுதினமும் வேதனைகளை அனுபவித்து வருகிறோம்.

எனவே, எங்கள் உணர்வுகளை மதித்து - விலைமதிக்க முடியாத எங்கள் உயிர்களை மதித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட வேண்டுமே தவிர, அதன் நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாக அமைந்து விடக்கூடாது என்பதையும், முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளோம் என்பதையும் எமதூரின் அனைத்து மக்கள் சார்பாக உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு, KEPA அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தெரிவித்தார்.

KEPA நிர்வாகிகள் கருத்துரை:
அவரைத் தொடர்ந்து பேசிய KEPA அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், DCW ஆலைக்கு எதிரான எங்கள் ஊரின் போராட்டம் 1986ஆம் ஆண்டிலேயே தம்மால் முன்னெடுத்துச் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து பேசிய KEPA துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, செயற்குழு உறுப்பினர் எஸ்.அப்துல் வாஹித் ஆகியோர், DCW ஆலையின் கழிவுகளால் நகரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சான்றுகளுடன் விளக்கிப் பேசினர்.









ஐக்கியப் பேரவையினருடன் சந்திப்பு:
அதனைத் தொடர்ந்து KEPA குழுவினர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அலுவலகத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை அழைத்துச் சென்றனர். அங்கு ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற சொளுக்கு முத்து ஹாஜி உள்ளிட்டோரடங்கிய பேரவை குழுவினர் அதிகாரிகளுக்கு வரவேற்பளித்தனர்.



பின்னர் பேசிய ஐக்கியப் பேரவை நிர்வாகிகள், நகரில் புற்றுநோயின் பாதிப்பு மிகவும் கவலைப்படும் அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாகவும், அதன் காரணமாக எண்ணிலடங்காத உயிர்கள் பலியாகி வருவதாகவும், நோயால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமது சொத்துக்களையெல்லாம் விற்றுத் தீர்த்து நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்ததோடு, நேர்மையாகவும் - நகர மக்களின் உணர்வுகளை மதித்தும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.



குழந்தைகள் நல மருத்துவருடன் சந்திப்பு:
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அதிகாரிகளுடன், குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் இஸ்மாஈல் பேசினார். அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-



பச்சிளங்குழந்தை செய்த பாவமென்ன?
சுற்றுச்சூழல் மாசு காரணமாக நகரில் - ஒரு பாவமும் அறியாத பச்சிளங்குழந்தைகள் எல்லாம் படாத பாடுபட்டு வருகின்றனர். பிறந்து 15 நாட்களே ஆன பச்சைக் குழந்தைகளுக்கெல்லாம் இளைப்பும், சுவாசக் கோளாறும் ஏற்படுவதை அனுதினமும் கொதிப்புடன் கவனித்து வருகிறேன்.

காயல்பட்டினத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வருகிறேன். நான் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் குழந்தைகளின் நிலையைப் பார்த்துப் பார்த்து தினமும் இரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலையுள்ளது.

இந்தக் குழந்தைகள் செய்த பாவமென்ன? காயல்பட்டினத்திலுள்ள பெற்றோருக்கு பிறந்த ஒரே காரணத்திற்காக இவர்கள் இப்படிப்பட்ட நோய்களையெல்லாம் அனுபவித்துதான் ஆக வேண்டுமா?

ஊரைக் காலி செய்யுங்கள்!
“டாக்டர் சார்! இதற்கு என்னதான் வழி?” என்று கவலை பொங்க பெற்றோரும் - உறவினர்களும் கேட்கின்றனர். அவர்களிடம் நான் சொல்வதெல்லாம், “தயவுசெய்து இந்த ஊரை விட்டும் எங்காவது சென்று விடுங்கள்!” என்பதுதான்.



மீண்டும் பிறந்தால் இந்த ஊரில் வாழ மாட்டேன்!
ஏதோ இந்த ஊரில் வாழ்ந்து பழகிப் போனதால், இதை விட்டு எங்கும் செல்ல எனக்கும் - யாருக்கும் மனம் வரவில்லை. நானே இன்னொரு முறை பிறந்து வாழ்க்கை நடத்துவதாக இருந்தாலும் நிச்சயமாக இந்த ஊரை நான் தேர்வு செய்யவே மாட்டேன். நெல்லை மாவட்டத்திலுள்ள செங்கோட்டை போன்ற ஊர்களில் போய் தங்கி விடலாம் என்றே கருதுகிறேன்.

ஏதோ சிறிய விஷயத்தை பூதாகரமாக்கி நான் கூறுவதாக அதிகாரிகளாகிய நீங்கள் தவறாக எண்ணி விட வேண்டாம்! இது பல காலமாக என் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் குமுறல்! இன்று ஓரளவுக்கு சொற்களாக அது வெளிப்பட்டுள்ளது.

புதிய ஊர் அமைய வேண்டும்...
சுற்றுச்சூழல் மாசுகளை உருவாக்கும் காரணிகள் அமைந்துள்ள இடத்தை இயற்கைப் பேரிடர் தாக்கி, அது முற்றிலும் அழிக்கப்பட்டு, புதிய நிலப்பரப்பு அமைந்தால் மட்டுமே இனி வரும் சந்ததியர் நிம்மதியாக வாழ முடியும்.

நான் முழுமையாக எனது உள்ளக்குமுறலைக் கூறத் துவங்கினால், அது உங்களுக்கே தவறாகப் பட்டு விடும். இந்த இடத்திற்கு அது உகந்ததும் அல்ல என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.


இவ்வாறு, கே.எம்.டி. மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் இஸ்மாஈல் தெரிவித்தார்.

ஆய்வுக்காக மணல் - நீர் சேகரிப்பு:
பின்னர், காயல்பட்டினம் கடற்கரை கிழக்குப் பகுதி, காயல்பட்டினத்திலுள்ள கடையக்குடி (கொம்புத்துறை) கடற்கரைப் பகுதி, கடையக்குடி பகுதியில் - DCW தொழிற்சாலையின் அமிலக் கழிவு நீர் கடலில் கலக்கும் இடம், காயல்பட்டினம் புறவழிச் சாலையிலுள்ள காட்டு பக்கீர் தர்ஹா வளாகம் வழியாக செல்லும் ஆலையின் அமிலக் கழிவு நீர் ஓடை ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை KEPA குழுவினர் அழைத்துச் சென்றனர். அவ்விடங்களில், ஆய்வுக்காக மண் மற்றும் நீரை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.



















கடையக்குடி மக்களின் ஒத்துழைப்பு:
காயல்பட்டினம் - கடையக்குடி (கொம்புத்துறை) பங்குத்தந்தை விக்டர் லோபோ அறிவுறுத்தலின் பேரில், அப்பகுதி வட்டார மக்கள் நல கமிட்டி தலைவர் இயேசுதாசனும் KEPA குழுவினருடன் இணைந்து, ஆய்வக சோதனைக்கான பொருட்களை சேகரிப்பதற்கு உதவினார்.



கடையக்குடி மீனவர்களின் முறையீடு:
காயல்பட்டினம் - கடையக்குடி கடற்கரையில் அதிகாரிகளைச் சந்தித்த மீனவர்கள், தொழிற்சாலையின் கழிவு நீர் கடலில் கலப்பதால் தினந்தோறும் இன்னல்களை அனுபவித்து வருவதாகத் தெரிவித்தனர்.





உடலில் தாங்க முடியாத அளவுக்கு அரிப்பு ஏற்படுவதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்தக்க அரிய வகை மீன்களெல்லாம் - ஆலையின் அமிலக் கழிவுகள் காரணமாக அடிக்கடி கடலில் செத்து மிதப்பதாகவும், சாதாரண நேரங்களில் நன்றாக ஓடும் தமது படகுகளின் இன்ஜின் கருவிகள், ஆலையின் அமிலக் கழிவு நீர் கலக்கப்பட்ட கடற்பரப்பை அடைந்ததும் வித்தியாசமான சப்தத்துடன் இயங்குவதாகவும், அதைக் கொண்டே கழிவு நீரின் பாதிப்பை தங்களால் உணர்ந்துகொள்ள முடியும் என்றும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.





மீன்பிடி தொழிலைத் தவிர வேறு தொழில் தெரியாத காரணத்தால், வேறு வழியின்றி வெறுப்புடனேயே இத்தொழிலை செய்து வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.



பேசப்பட்ட அனைத்து கருத்துக்களையும் குறிப்பெடுத்துக்கொண்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நடுநிலையுடன் தமது ஆய்வை மேற்கொள்ளப் போவதாகவும், தங்களது இந்த வருகையால் நகரில் நல்லதொரு மாற்றம் ஏற்படும் என நம்புமாறு கேட்டுக்கொண்டனர்.

பல்வேறு இடங்களில் சோதனைக்காக மணலும், நீரும் எடுக்கப்பட்டதைப் போல, DCW தொழிற்சாலையிலிருந்து அமிலக் கழிவு நீர் துவக்கமாக வெளியாகும் இடத்திற்கருகில் பல்வேறு இடங்களில் மேற்புறமாகவும், உட்புறமாகவும் மணல் - நீரை சோதனைக்கு எடுக்குமாறு KEPA குழுவினர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டனர்.

தொழிற்சாலைக்கு உடன் வர KEPA மறுப்பு:
தொழிற்சாலை பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வுக்கும் உடன் வருமாறு அதிகாரிகள் KEPA குழுவினரைக் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததுடன், தமது வேண்டுகோளின் படி சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டும் ஆய்வுகளைச் செய்து அறிக்கையைப் பெற்று வெளியிடுமாறும், அதனடிப்படையில் தமது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

நிறைவில், காயல்பட்டினம் கடற்கரை முகப்பில் KEPA குழுவினருடன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றுச் சென்றனர்.





படங்களில் உதவி:
A.K.இம்ரான்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:... ஆலைக்கு சங்கு.....?
posted by M.S.ABDULAZEEZ (GZ, China) [23 December 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 24757

ஆலையில் சங்கு ஊதி பார்த்தவர்கள் உண்டு ஆனால் இன்னும் சிலநாளில்( DCW ) ஆலைக்க சங்குதும் நாள் நெருங்கி விட்டது. KEPA வின் விடா முயற்சி வெற்றி பெற அல்லாஹு அருள் புரியட்டும். இதற்காக செயல் படும் அனைத்து சகோதரர்களுக்கும் என் பாராட்டுடன் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சபாஷ்
posted by Muthu Magdoom VSH (Jeddah) [23 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24758

சபாஷ்..... நல்லதே நடக்கட்டும். பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by மஹ்மூது ரஜ்வி (தம்மாம்) [23 December 2012]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 24759

அஸ்ஸலாமுஅலைக்கும்,

சகோதரர் அப்துல் அஜீஸ் சொல்வது போல் இன்ஷா அல்லாஹ் ஆலைக்கு உலை வைத்து சங்கு ஊதும் நாள் விரைவில் நடக்கும் அந்நாள் ஆலையை சுற்றி உள்ள ஊர்களுக்கெல்லாம் பெருநாள். இதற்கெல்லாம் தேவை நம்மிடம் ஒற்றுமையுடன் கூடிய விடா முயற்சி.

மஹ்மூது ரஜ்வி,
தம்மாம், சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Cnash (Makkah) [23 December 2012]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 24760

நம் அனைத்து மக்களின் ஒட்டு மொத்த குரலும் சரியான முறையில் எதிரொலித்து சேர வேண்டியவர்களை சேர்ந்து இருக்கிறது. இதற்கு முயற்சித்த அனைத்து உள்ள்ளங்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவான்.

மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தாங்கள் கடமையை மனசாட்சிக்கு பயந்தும், தங்களின் குடும்பம் போல் இந்த ஊரில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் மனதில் கொண்டு உங்கள் ஆய்வினை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.

Dr. இஸ்மாயில் அவர்களின் ஆதங்கம் ஒரு டாக்டர் என்பதை விட பல பிள்ளைகளில் பெற்றோர் நிலையில் இருந்து எடுத்து சொன்னது, அவர்களின் காதுகளின் கண்டிப்பாக விழுந்து இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு மனவருடல், எதற்கெல்லாமோ கூச்சலும், கத்தலும் இட்டு ஒரு பெண் முன்னே மேஜையை தட்டி தட்டி தாங்கள் வீர தீரங்களை காட்டியவர்கள், வாடி போடி என்று குழாயடி சண்டை நடத்திய அந்த வீரத்திருமகள், கலக்டர் ஆபீஸ் வரை புனித பயணம் மேற்கொண்டு மீடியாவில் முகம் காட்ட தயங்கிய அந்த கண்ணியவான் இவர்கள் எல்லாம் ஊருக்காக இன்றைக்கு இறங்கி வந்து இவர்களை சந்தித்து கூப்பாடு போட்டிருந்தால், உங்களை தேர்தெடுத்த நாங்கள் பெருமைபட்டிருப்போம்.

இனிமேலும் உங்களை கேட்டு கொள்வது, அவர்கள் எல்லோரும் நல்லபடி செய்ய வேண்டிய காரியங்களை DCWக்கு எதிராக ஒழுங்கான முறையில் செய்து கொண்டு இருகிறார்கள் , நீங்கள் இனியாவது கூட்டம் நடத்துகிறோம், DCW காரன் பேச்சுவார்த்தைக்கு போன் போட்டான், ஆலையை ஆய்யு செய்வோம் என்றெல்லாம் ஏதும் பேசி காரியத்தை கெடுக்காமல் இருந்தாலே போதும் என்பதுதான் நீங்கள் ஊருக்கு செய்யும் ஒரே ஒரு நல்ல காரியம். ஒதுங்கி இருங்கள் அதுவே நீங்கள் செய்யும் ஒத்துழைப்பு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [23 December 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24763

அல்ஹம்து லில்லாஹ்.

திக்குத்தெரியாமல் காட்டாறில் அடித்து செல்லப்படும்போது ஒரு மரக்கட்டை கிடைத்தது போல ஒரு நிம்மதி கிடைத்துள்ளது. இந்த மரக்கட்டை கரை சேர்க்குமா என்பதை பொருத்துதான் பார்க்கனும்.

மரியாதைக்குரிய மருத்துவர் இஸ்மாயில் காக்கா, அவர்களின் கருத்தை படித்து சற்றே மனது வெம்புகிறது. தினமும் பல குழந்தைகளை அவதானிக்கும் அவர்களின் மனநிலையை அறிய முடிகின்றது.

அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து நம் நகருக்காக பாடுபடுவதை பார்த்து மிக்க மகிழ்ச்சி. வல்ல ரஹ்மான் அதற்க்கான நற்கூலியை வழங்குவானாக.

மாசு மாதிரிகளை DCW திறந்து விடும் சமயம் எடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். வீரியம் எல்லாம் குறைந்த பின்பு எடுத்தால் அதன் விடை எப்படி இருக்குமோ...!

சகோதரர்களே, நம்முடைய நோக்கம் DCW விற்கு சங்கு ஊதுவது அல்ல, வாழு.. வாழ விடு என்பதே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [23 December 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24764

மாஷா அல்லாஹ், இது நமது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. இந்த ஒற்றுமை இறுதி வரை தொடர வாழ்த்துக்கள்.

KEPA வின் சேவை மேலும் மேலும் தொடர வல்ல நாயன் துணை புரிவனாக. ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நல்லோருக்கு வல்லோன் துணை!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [23 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24765

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ள ஆலையின் அமிலக் கழிவுகள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் ஆபத்து அல்லது பேராபத்து உள்ளதென சான்றிதழ் வந்தவுடன் சங்கு ஊதுவோம்! பொறுத்தோம்... இன்னும் கொஞ்ச காலம் பொறுத்து முழுமையான அறிவிப்பு வந்ததும் குதுகலிப்போம்! கொண்டாடுவோம்! நம் குலக்கொழுந்துகளின் ஆரோக்கிய வாழ்வுக்கு வழி பிறந்ததென்று வாழ்த்திப் பாடி அகமகிழ்வோம்!

குழந்தை நல மருத்துவர் டாடர்-இஸ்மாயீல் அவர்களின் மனக் குமுறல்கள் நமக்கு நன்றாகவே தெரிகின்றது. அவர்தாம் நம் பிஞ்சுகளை நாள்தோறும் கண் கொண்டு பார்த்து வருகின்றார். அக்குழந்தைகளுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களும், பாதிப்புகளும் அவரை விட அதிகமாக வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

KEPA உனது முயற்சி அபாரம்! அமைப்பிலுள்ளோர்க்கு ஊர் நலனில்தான் எத்தனை அக்கறை? என் அருமை உடன்பிறப்புக்களே! உங்களது இம்முயற்சிக்கு தகுந்த பலனை வல்ல அல்லாஹ் தந்தருள்வான்! தொடர்ந்து களத்தில் கால் பதித்து நின்று காயல்பதிக்கு காவலராக கடமையாற்ற வாழ்த்துக்கின்றேன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. ரே..
posted by Haafil S.H.Zainul Abideen (Dammam) [23 December 2012]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24766

நமது இளைஞர் சமுதாயமும், அறிஞர் சமுதாயமும் ஒன்றிணைந்து மிக நேர்த்தியாக செய்ய கூடிய ஒவ்வொரு காரியமும் மிகவும் பாராட்ட தக்க வகையிலும், வரவேற்க தக்க வகையிலும் அமைந்து உள்ளது.

இன்ஷா அல்லாஹ நாம் நமது நியாயமான அதே நேரம் மிகவும் அவசியமான இந்த போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

நமது சமுதாயத்திற்காக தமது நேரத்தையும் பொருளையும் செலவு செய்யும் ஒவ்வொருவருக்கும் நன்றி. KMT Hospitalukku அதிகாரிகளை அழைத்து சென்று மரியாதைக்குரிய டாக்டர் அவர்களுடன் உரையாட வைத்து அவர்களுடைய உள்ள குமுறல்களை வெளிப்படுத்தியது அருமையான ஒரு நடவடிக்கை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. முதல் வெற்றி
posted by saburudeen (dubai) [23 December 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24769

இது KEPA வின் தன்னலமற்ற சேவைக்கு கிடைத்த முதல் வெற்றி இன்ஷா அல்லாஹ் முழுமையான வெற்றி கிடைக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. மாஷா அல்லாஹ்,
posted by Mohamed Salih (Bangalore) [24 December 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 24771

மாஷா அல்லாஹ்,

இது நமது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. இந்த ஒற்றுமை இறுதி வரை தொடர வல்ல இறைவனை வேண்டுகிறேன்

எல்லோருக்கும் என் நன்றிகள்

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by M.A.K.JAINUL ABDEEN,,Kaakkum Karangal Narpani Manram. (kayalpatnam) [24 December 2012]
IP: 112.*.*.* India | Comment Reference Number: 24776

அஸ்ஸலாமு அலைக்கும். kepa வின் அனைத்து முயற்சிகளும் முழு வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சகோதரர் "சீனாஸ்" எதற்கு உள்ளங்கைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுறார்னு தெரியல! DCW விசயத்தில் எந்த உறுப்பினர் DCW க்கு ஆதரவாக பேசினார் என்று சொல்லுகிறீர்கள். ஏன் வீணாக ஒரு பிரச்சனையை உருவாக்குகிறீர்கள்.

அட்மின் அவர்களே, இந்த மாதிரி கருத்துக்களை ஏன் அனுமதிக்கிறீர்கள்?

ஊரில் இருக்கிற "பலாய்" காணாதென்று இவர் வேறே புதுசா ஒரு பிரச்சனையை கொண்டுவர்றார்.

ஒன்று மட்டும் விளங்கிகொல்லுங்கள். ஒருவர்மீது அபாண்டமாக பலி சுமத்தாதீர்கள். ஒருபக்கமாகவும் பேசாதீர்கள். இரு தரப்பிலும் தீர விசாரித்து நியாயம் சொல்லுங்கள். இல்லைஎன்றால் அல்லாஹ்வின் கோபப் பார்வை உங்கள் மீது விழும். அல்லாஹ் நம் அனைவரையும் புறம் கூறுவதிலிருந்து பாதுகாப்பானாக. ஆமீன்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [25 December 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24779

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் ஊர் மக்களின் உடல் நலனுக்காக வேண்டி பாடு பட்டு வருகின்ற ...நம் >>KEPA << அமைப்பின் செயல்பாடுகள்.....வெற்றியின் விளிம்பின் முனைக்கு நாம் சென்று விட்டோம் .....என்பது மட்டும் நமக்கு உறுதியாகி விட்டது.

நாம் இத்தோடு நின்று விடாமல்... இன்னும் முழு கவனத்தோடு ....தீவிரமாகவே ஈடு பட வேணும். தங்களுக்கு நம் ஊர் மக்களின் முழுமையான சப்போட்டு + உலக அளவிலான நம் ஊர் நற்பணி மன்றகளின் முழு ஆதரவும். மாஷா அல்லாஹ்..பெருகி கொண்டே போகிறது .

தங்களின் கோரிக்கை முழுக்க அவசியமானதே .... சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆலையை ஆய்வு செய்வதுதான்.. சால சிறந்ததும் ,, நேர்மையாகவும் ,, இருக்கும் .....

KMT ..க்கு அழைத்து சென்று நம் குழந்தை நல DR .ஜனாப் இஸ்மாயில் மாமா அவர்களிடம் பேச வைத்ததும் ....DR மாமா அவர்கள் சொன்ன வார்த்தைகளை நாம் படித்ததும் நம் கண்ணில் இருந்து நீர் கொட்டியது.....

இக்கால நம் பிஞ்சு குழந்தைகளின் உடல் நலத்தின் பாதிப்பை நினைத்து நம் உள்ளம் வேதனை படுகிறது...... தாய் மார்களிடம் இவ் ஊரில் இருக்க வேண்டாம் ....வேறு எங்காவது போய் விடுங்கள்....என்று DR மாமா அவர்கள் மன சங்கடம் + வேதனையுடன் கூறியதை பார்க்கும் போது நம் மக்கள் எந்த அளவுக்கு உடல் + மன அளவில் பாதித்து உள்ளார்கள் .....நம் இந்த கால & வருங்கால அனைத்து மக்கள்களை நம்மை படைத்த இறைவன் தான் நலமாக்கி வைக்கணும் ............

நம் அருமை தம்பி SKS அவர்களின் உரை அருமை . >>>KEPA <<<அமைப்பினர்களை நாம் எந்த விதத்தில் பாரட்டினாலும் கூடும்....தங்கள் யாவர்களின் ஹக்கில் '' துவா '' கேட்ட வண்ணமாகவே இருக்கிறோம் ....

பாருங்கள்.....சார்.....பாருங்கள் ..... நம் ஊர் அனைத்து மக்களின் ஒற்றுமையில் எவ்வளவு முன்னேற்றம் என்று பாருங்கள் ...நம் ஒற்றுமையில் தான் நம் பலம் இருக்கிறது .....&...எதிரின் வீழ்வு இருக்கிறது ......

நாம் நம் தமிழக அரசு அதிகாரிகளின் பார்வையை நம் பக்கம் திருப்பி விட்டோம் ...இதுவே நமக்கு கிடைத்த முதல் வெற்றிதானே .............

>>KEPA << தங்களின் வெற்றி பயணம் தொடரட்டும் ....வெற்றி நமக்கே ....................... வஸ்ஸலாம்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:..மாஷா அல்லாஹ்!.
posted by OMER ANAS (DOHA QATAR.) [25 December 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24780

மாஷா அல்லாஹ்!

எல்லாவித மக்களையும், ஒருங்கிணைத்து, இன்றைய காலகட்டத்தினை கருத்தில் கொண்டு பேரவையோடும் பெரும் தன்மையோடு பேசி, பொதுநலனை மட்டுமே கருத்தில் கொண்டு சுயநலன் பாராமல் செயல்படும் KEPAவுக்கு முதற்க்கண் நன்றி!

உங்களை இன்று போற்றுவோரை விட, உங்களை தூற்றுவோரையும் நீங்கள் உங்கள் நல்ல செயலால், அவர்களே போற்றும் வண்ணம் மாற்றிக்காட்ட வேண்டும்!

துவேசம் என்பது இனி நமது சமுதாயத்திற்கு மட்டும் இல்லை. மாற்று சமுதாயத்திற்கும் இனி வரவேக் கூடாது!

சென்னை மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் நல்ல வல்லுநர் குழு கொண்டு DCWவின் உண்மை நிலையினை ஆராய்ந்து அறிந்து நமது மாவட்டத்திற்கு, நல்ல சேதியினை தருவார்கள் என்று நம்புவோமாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Kader K.M (Dubai) [25 December 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24782

வாழ்த்துக்கள் KEP ! அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நற்கூலியை தருவான் ஆமீன்!

மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தாங்கள், தங்கள் கடமையை மனசாட்சிக்கு பயந்தும், தங்களின் குடும்பம் போல் இந்த ஊரில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் மனதில் கொண்டு உங்கள் ஆய்வினை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. உத்தம போராட்டத்தின் உச்ச கட்டம் ...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [25 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24785

"போற்றுவோர் போற்றட்டும் புளுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்" என்ற பழமொழியை பொழிய எனக்கு விருப்பமில்லை, அன்புத்தம்பி anas சொல்வது போன்று நம்மை தூற்றுவாரும் நம் நம் நெடிய நற்செய்கையை கண்டு நடுநிலையை உணர்ந்தவராய் நம்முடன் கைகோர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது!

புண்ணிய நோக்கத்தை இலட்சியமாக கொண்டு நீங்கள் நடத்தும் நம்மூர்மக்கள் உயிர் காக்கும் உத்தம போராட்டத்தின் உச்ச கட்டத்தை ஒவ்வொருவரும் உணரும் நேரம் நெருங்கி கொண்டே வருகிறது. ஆகவே உள்ளத்தின் உறுதியோடு வீறுநடை போடுங்கள் வெற்றி உண்மையின் பக்கமான நம் பக்கமே கிடைத்திட வல்ல அல்லாஹ் வழி வகுப்பானாக ஆமீன்!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Cnash (Makkah) [25 December 2012]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24787

காக்கும் கரங்களே!! .. இப்போ நீங்க கொஞ்ச நாளாக தேமுதிக விஜயகாந்த் கட்சி செயலாளர் என்று உங்களை அடையாள படுத்தி கொள்வதில்ல.. அந்த கட்சியில் தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன் (சும்மா தெரிந்து கொள்ளத்தான்)!! ஏன் என்றால் முன்பு ஒரு முறை நான் விஜயகாந்த் பற்றி கருத்து சொன்னதற்கும் இப்படி தான் கோபம் உண்டாகும் பாவம் உண்டாகும் என்று சாபம் விட்டீர்கள் .

இப்போ விஷயத்திற்கு வருவோம்! இவ்வளவு அக்கறையாக உறுப்பினர்கள் சார்பில் பேசும் உங்களிடம் சில கேள்விகள்!!

1. DCW விற்கு எதிராக ஊரே ஒன்று திரண்ட பொது நீங்கள் சொன்ன உறுப்பினர்கள் எங்கே போனார்கள்? விடியோவிற்கும் கேமராவிற்கும் ஒற்றுமையுடன் சத்தம் போட்ட அந்த உறுப்பினர்கள் ஏன் இந்த விஷியத்தில் ஒன்று சேரவில்லை?

2. டிசம்பர் 5, தேதி அவர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில் துணைத் தலைவர் DCW நிர்வாகம் தன்னுடன் தொலைபேசி தொடர்பு கொண்டதாகவும் நகர்மன்றத்தின் சார்பில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆலைக்கு வருகை தரும்படியும், நமக்குள் இருக்கும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும்படியும், தன்னிடத்தில் DCW மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

எதற்கு ஒரு இயக்கம் வீரியமாக போராடும்போது அதற்கு ஆதரவு தெரிவித்து ஒற்றுமையை காட்டுவதை விட்டுவிட்டு DCW உடன் எதற்கு பேசி வார்த்தை என்றுதான் கேட்டேன். இதில் என்ன பலி பாவம், சாபம் எல்லாம் கண்டு பிடித்தீர்கள்? தேவை இல்லாத முடிச்சி யார் போடுகிறார்? நீங்களா நானா?

3. மேலும் ஆலையில் நகராட்சியினர் எவைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பது பற்றியும், இன்ன பிற குறிப்புக்களையும் உள்ளடக்கிய தட்டச்சு செய்யப்பட்ட அறிக்கை ஒன்றையும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கினார்கள் என்றும் 40 ஆயிரம் மக்களின் பிரதிநிதிகளான உறுபினர்களை பின்னுக்குதள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும், தங்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் KEPA கருதுவதாக உறுபினர்கள் சார்பில் தெரிவிக்கபட்டதே, அதை நீங்கள் படித்தீர்களா? அதற்கு ஏதும் விளக்கம் இருக்கா? அதற்காகத்தான் நான் சொன்னேன் அவர்கள் நல்ல படி செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை செய்ய விடுங்கள் என்று .. புரிந்து இருக்கும் என்று நினைக்கிறன்.

4. ஊர் நலனை விட, தங்களது அமைப்பை முன்னிருத்தும் சுய விளம்பர நோக்கிலும் நடந்துகொண்ட KEPA-வின் இச்செயல் ஆழ்ந்த வருத்தத்திற்கும், ஆட்சேபனைக்குரியதும் என்று சொன்ன உறுப்பினர்களை பார்த்துதான் கேட்கிறோம். அதற்கு நீங்கள் ஏன் பாவம் சாபம் எல்லாம் விடுகிறீர்கள்?

5. நகர்மன்ற கூட்ட அரங்கில் KEPA போன்ற பொது அமைப்புக்கள் ஆலோசனைக் கூட்டத்தை எப்படி நடத்த முடியும் என்று ஏதோ நம்ப வீட்டு திருமண கூட்டத்தை நகரமன்ற அரங்கில் வைத்து போல் கேள்வி எழுப்பி இருந்தார்களே ..அதற்கெல்லாம் உங்கள் பதில்?

யார் ஒரு சார்பா பேசுகிறார்!! யாருக்கு விசுவாசமா இருக்கிறார்கள் எல்லோருக்கும் தெரியும் .. உங்கள் கருத்துக்கும் அறிவுரைக்கும் நன்றி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by M.A.K.ZAINULABDEEN, President,Kaakkum Karangal Narpani Manram. (kayalpatnam) [26 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24796

அஸ்ஸலாமு அலைக்கும். ஹலோ சீனாசே, நான் இன்றும் தே.மு.தி.க. வில்தான் நகர தலைவரா இருக்கேன். இதேதான் கேட்டேன். உள்ளங்கைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதே உங்கள் வேலையாக இருக்குன்னு. இந்த விசயத்தில் ஏன் தே.மு.தி.க. வந்தது. kepa வும், உறுப்பினர்களும் ஒத்துமையாகத்தான் இருக்கிறார்கள். இதை kepa நிர்வாகிகளிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். நீங்கள் அமைதியாக இருந்தாலே எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. வீணாக குழப்பங்களை உண்டாக்காதீர்கள். அல்லாஹ்வின் சாபத்திற்கு பயந்துக் கொள்ளுங்கள். எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. வஸ்ஸலாம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Cnash (Makkah) [27 December 2012]
IP: 5.*.*.* | Comment Reference Number: 24798

சகோ. ஜைனுலாப்தீன்!! சாபம் இடுவதில் புராண காலத்து முனிவர்களையும் மீஞ்சி விடுவீர்கள் போல!! இந்த சாபம், கோபம், பாவம், பலி, இப்படிப்பட்ட வார்த்தைகளை தவிர வேற ஒன்றும் உங்க வாயிலே வராதா? சரி உங்கள் எண்ணம் போல உங்கள் வார்த்தையும்!!

உறுப்பினர்கள் எல்லாம் KEPA உடன் ஒற்றுமையா இருக்காங்க நீங்கள் சொல்லி இருக்கீங்கள், அப்படி இருந்தால் உங்கள் விட பல மடங்கு சந்தோஷம் எங்களுக்குதான். அப்படி இருக்கவே நாங்களும் வேண்டுகிறோம் துஆ செய்கிறோம்..

நான் முந்தைய கருத்தில் பதிவு செய்த 1-5 பாய்ண்ட்ஸ் எல்லாம் நான் சொன்னது அல்ல! உறுப்பினர்கள் சொன்னதாக ஒரு வலைதளத்தில் வந்த செய்திதான்!!

தூங்குகிறவனை எழுப்பலாம். துங்குவது போல பாசாங்கு செய்யும் உங்களை என்ன செய்ய? உங்களை எழுப்புவது ஏன் வேலையும் இல்லை, எனக்கு தேவையும் இல்லை...

நான் கேட்ட கேள்வியும் கருத்தும் நாங்கள் ஒட்டு போட்டு தேர்வு செய்த எங்கள் உறுப்பினர்களை பார்த்துதான் உங்களை பார்த்து இல்லை... உங்கள் சாபம் வரம் எல்லாம் உங்களோடு இருக்கட்டும்!

கேள்வி கேட்க வேண்டியவரிடம் எங்கள் கடமையை நாங்கள் கேட்கிறோம்.. உங்களை ஒரு நாள் நாங்கள் தேர்ந்து எடுத்து தேமுதிக MLA ஆக்கிய பிறகு உங்கள் இடத்தில் உரிமையுடன் கேள்வி கேட்கிறோம் அப்போது பதில் சொல்லுங்கள்! அதுவரை பொறுமையுடன் இருங்கள் .. வாழ்த்துக்கள்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. டிங் டாங் பெல்...
posted by Salai.Mohamed Mohideen (USA) [27 December 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 24799

யானை வரும் பின்னே மணி ஓசை கேக்கும் முன்னே .... DCW என்ற (புற்றுநோய் சப்ளையர்) கடையை சாத்த வந்த மணியோசை தான் இந்த மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வருகை.

சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை நமது பேரவைக்கும் அழைத்து சென்று அவர்களின் குரல்களையும் அதிகாரிகளிடம் ஓங்கி ஒலிக்க செய்து நம் பெரியவர்களையும் கண்ணிய படுத்தி விட்டீர்கள். அவர்களும் தங்கள் பங்களிப்பை அழகாக செய்து விட்டார்கள்.

நம் கருத்து வேறுபாடுகளை மனக்கசப்புகளை புறந்தள்ளி விட்டு, இது போன்று எவ்விடயத்திலும் நாம் அணைவரும் ஒன்றிணைவோம். நம்மை பிரித்தாளும் சூழ்ச்சி எண்ணம் கொண்டவர்களின் தவறை உணரவைத்து அவர்களையும் நம் வசப்படுத்துவோம்!

உங்களின் பணியை எவ்வித தொய்வில்லாமல் தொடருங்கள். இக்களத்தில் எனக்கு பரிச்சயமான நிறைய அன்பர்களை காணும்போது சமூக ஆர்வம் ஏற்படுகின்றது ... அதிகரிக்கின்றது போன்ற உணர்வு. இவர்களின் சமூக செயல்பாடுகள் போராட்டங்கள்... நம் இளைய தலைமுறையினருக்கு ஒரு உந்துதலாகவும், வீரியமிக்க சமுதாயத்தை உருவாகப் பயன்படும் என்பது மட்டும் நிச்சயம்.

உங்களைப்போன்று களப்பணியாற்றுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காவிட்டாலும் கூட... அணிலும் மண் சுமந்தது என்பார்களே அது போல எங்களால் முடிந்த பொருளாதார உதவியையும் நிறைவான ஆதரவையும் என்றும் தரத் தயாராக இருக்கின்றோம்.

வளமான காயலை உருவாக்க நாம் அனைவரும் ஓரணியில் திரள்வோம்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்......
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [27 December 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24803

சகோ. CNASH… அஸ்ஸலாமு அழைக்கும்...

யாராவது ஒருவன் வெற்றிக்காக பாடுபடும்போது சொல்வதுஎ "வீண் முயற்ச்சி" என்றே

அவன் வென்ற பின் சொல்வது
"விடா முயற்ச்சி" என்றே….

"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" என்பது பழமொழி.

நாம் எத்தனை தோல்விகளை எதிர்க்கொண்டாலும் நாம் மனம் தளர்ந்து விடகூடாது. விடாமுயற்சியுடன் பாடுபட வேன்டும். அவ்வாறு செய்தால்தான் நம்மால் நினைத்த இலக்கை, நினைத்த நேரத்தில், நினைத்த வகையில் அடையமுடியும்.

அதுமட்டுமின்றி, ஒரு வெற்றியாளனுக்கு பொறுப்புணர்ச்சியும், சகிப்புத்தன்மையும் இருக்க வேண்டும். பொறுப்புணர்ச்சி இருந்தால்தான் நமக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை நம்மால் சரியாகச் செய்து, சரியான நேரத்தில் கொடுக்க முடியும்.

பிறர் நம்மை பற்றி இழிவாக பேசினால், அவற்றை பொருட்படுத்தாமல், சகித்துக்கொண்டு நமது வேலைகளத் தொடர வேண்டும். ஏனென்றால், நாம் நமது இலக்கை அடைய நினைக்கும்போது நான்கு பேர் நான்கு விதமாக பேசுவார்கள். அதை சகித்துக்கொன்டால் தான் நம்மால் நமது இலக்கை வெற்றிக்கரமாக அடையமுடியும். (Net-இல் படித்ததில் பிடித்தது...)

எனவே KEPA வின் அனைத்து முயற்ச்சிக்கும் நாம் அனைவரும் பக்கபலமாக இருப்போம்... விமர்சனங்களை கண்டுகொள்ளவேண்டாம்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by M.A.K.JAINUL ABDEEN,,Kaakkum Karangal Narpani Manram. (kayalpatnam) [27 December 2012]
IP: 112.*.*.* India | Comment Reference Number: 24804

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் சீனாஸ் அவர்களே, ஒரே கவுத்தா கவுத்திபுட்டிங்களே? MLA அது, இதுன்னு. "சிந்திக்க சொன்ன மார்க்கத்தில் சிந்திக்க மறுக்கின்றனர், சிந்தனையை எதிர்கின்றனர். உனக்கு வழிகாட்ட வேத வரிகளும், தூதர் மொழிகளும் இருக்கின்றன. அதை மட்டும் பின்பற்று". எங்கோ கேட்ட ஒரு மந்திரம் என் காதில் ஒலிக்கின்றன. இது நம்ம ஊரைச் சார்ந்த சிலருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

காக்கா நான் உங்களை சாபம் விட, நான் உங்களால் பாதிக்கப்படவில்லை. சாபம் விடக்கூடிய அளவுக்கு (என்னைப்பற்றி தெரியாதவர்களுக்கு) நான் யோக்கியனும் இல்லை. கடந்த 24/12/2012 அன்று kepa அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், நம் நகர்மன்ற உறுப்பினர் ஜஹாங்கிர் அவர்கள், DCW விஷயத்தில் நகர்மன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் எந்த விசயத்தில் அவர்களுக்கு ஆதரவாகா நடந்து கொண்டோம், எந்த விஷயத்தில் kepa வுக்கு எதிராக நடந்துகொண்டோம் சொல்லுங்கள். வீணாக ஏன் எங்களை மனம் நோகும்படி செய்கிறீர்கள் என கேட்டார். இதற்க்கு பதிலளித்த kepa செயலாளர் அவர்கள், அனைவர்களின் ஒத்துழைப்புடன் தான் kepa செயல்படுகிறது. kepa எந்த உறுப்பினரையும் குறைசொல்லவில்லை. என்று அழகாக கூறினார்.

நான் கேட்கிறேன், ஒருவர் செய்யாத தவறை அவர்மீது சாட்டினால், அவர் பாதிக்கப்பட்டவராகி விடுவார். பாதிக்கப்பட்டவர் அல்லாஹ்விடம், "யா அல்லாஹ் யார் ஏன் மீது வீண்பழி சுமத்துகிறாரோ அவர்மீது உன் கோபப்பார்வையை காட்டுவாயாக" என பாதிக்கப்பட்டவர் துஆ கேட்டால் ஏற்றுக்கொள்ளப்படுமா? இல்லையா? அதைதான் நான் சொன்னேனே தவிர, நான் சாபம் விடவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் அது என் தவறில்லை.

அதற்காக எல்லா உறுப்பினர்களும் உத்தமர்கள், யாருமே தவறு செய்யமாட்டார்கள் என்று நான் சொல்லமாட்டேன். அவர்களின் பெயரை சொல்லி அடையாளம் காட்டி கேவலப்படுத்துவோம். இதுதான் என் எண்ணமும்.

யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. யார் செய்தாலும் தவறை தவறு என்று உரக்க சொல்லணும், நல்லாதை பாராட்டனும். இரண்டிற்கும் மனது வேண்டும். எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே, பேர் வரவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதாதீர்கள். இதற்கு மேல ஏதாவது சொன்னால் சாமியார் சாபம் விடுகிறார் என்று சொல்லி விடுவீர்கள். நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by OMER ANAS (DOHA QATAR.) [29 December 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 24808

எனதருமை தம்பி ஜெய்னுல் ஆபிதீனுக்கு.
அஸ்ஸலாமு அழைக்கும்.

நீர் KEPA வுடன் எல்லா காரியங்களிலும் தோளோடு,தோல் கொடுத்து செயலாற்றியெதை நாங்கள் அனைவர்களும் அறிவோம்.ஜிஜாக்கல்லா ஃ கய்ரா!

உண்மையில் ஊர் நன்மைக்காக KEPA வுடன் உழைத்த உன்னை பார்த்து வளைதளத்தில் வார்த்தையினை கொட்ட எமக்குத் தகுதி இல்லை. ஊரின் நன்மைக்காகவோ,பழைய காழ்ப்புணர்ச்சி காரணத்திற்காகவோ,கருத்தெழுதி உம்மை யாரும் மன வருத்தப் பட வைத்து இருந்தாலும்,அவர்களும் நம் சகோதரர்களே என்று அல்லா ரசூலுக்காக மனம் பொருந்திக்கொள்ளவும்!

உமது உணர்ச்சிகளை வீணான காரிகங்களில் செலவிடாமல்,ஊர் ஒற்றுமைக்காக போராடும் நல்ல உள்ளம் கொண்டோருக்கு உமக்குள் அமைந்துள்ள நல்ல எண்ணப்படி வழமை போல் மனம்தளராது செயல்படவும். உமது பெயருக்கு ஏற்ற மாதிரி புகழ் சேர்க்கவும்.

ஊரில் இருந்து கொண்டு ஊருக்காகவே உழைத்து, எவனிடமும் கையேந்தாமல், செயல் படும் சீரிய உள்ளம் கொண்டபாசமிகு எங்கள் அனைத்து சகோதரர்களையும் நாங்கள் என்றும் எங்கள் உள்ளத்தால் நினைவு கொள்வோம்! நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved