Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:21:32 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11574
#KOTW11574
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 12, 2013
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தூக்கப்பட்ட கதை: ஜூனியர் விகடன் செய்தி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4077 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஸ்குமார் IAS சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டார். இது குறித்து எழுந்துள்ள சர்சைக் குறித்து தமிழ் வாரமிருமுறை இதழ் ஜூனியர் விகடன் தனது ஆகஸ்ட் 14, 2013 பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:



அந்தக் கடற்கரையில் கறுப்பும் சிவப்புமான புது வகை நிறத்தில் மணல் சிதறிக் கிடக்கும். சிரித்து விளையாடும் சிறுவர் சிறுமியரும் கடலைப்போடும் காதலர்களும் அந்த மணலைக் கையில் எடுத்துப் பார்த்து ரசிப்பார்கள். அவர்களுக்குத் தெரியாது அது, விலை உயர்ந்த கார்னெட் மணல் என்று. கலைக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய மணல் இல்லை அது; விலைக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டியது என்பது சிலருக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது.

அந்த மணலை வெளிநாட்டுக்கு அனுப்பினால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்பதும் சிலருக்குத்தான் தெரியும். அந்த சிலரை அஸ்திரம்வைத்து விசாரணையை முடுக்கினார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் குமார். அன்றைய தினமே அவரை அங்கிருந்து மாற்றி சமூகநலத் துறையில் போட்டுவிட்டார்கள்.



ரெய்டு போனதுமே ஆஷிஸ் குமாருக்கு ஒரு போன் வந்துள்ளது. 24 மணி நேரத்துல உனக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கித் தர்றேன் என்று கெடுவைத்ததாம் அந்தக் குரல். அவர் எந்த அரசாங்கப் பதவியிலும் இருப்பவர் அல்ல. ஆனால், அதிகார நாற்காலிகளை உருவாக்கக் கூடியவர் என்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி வட்டாரத்து மீனவர்கள் சொல்கிறார்கள்.

கடந்த 6-ம் தேதி இந்த இடங்களில் ரெய்டு நடத்து​வதற்கு அதிகாரிகளை அனுப்பினார் கலெக்டர். அதற்கான முஸ்தீபுகளில் கடந்த 2-ம் தேதி இறங்கி உள்ளார். அதற்குள் சிலரால் எதிர்த் தரப்புக்கு விஷயம் போய், சென்னையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவருக்கும் தகவல் போயுள்ளது. அவர் ஆஷிஸ் குமாரை அழைத்து, நீங்கள் அந்த மணல் பகுதிகளில் ரெய்டு போகத் திட்டமிட்டுள்ளதாகக் கேள்விப் படுகிறேன்.அந்த முடிவைக் கைவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ரெய்டு நடக்கும்; அல்லது, நடக்காது என்ற எந்த உத்தரவாதத்தையும் அப்போது ஆஷிஸ் குமார் தரவில்லை​யாம். ரெய்டு தொடங்கியபோதும் அந்த அதிகாரி தொடர்புகொண்டுள்ளார். ரெய்டை நிறுத்த முடியாது என்று ஆஷிஸ் குமார் சொல்லியிருக்கிறார். இதுதான் அவரது பணிமாற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள்.



இதேபோன்ற மோதல் சில மாதங்களுக்கு முன்னால் நடந்தது. அமைச்சர்கள், ஆளும் கட்சிக்காரர்களது பரிந்துரைகளை மதிக்காமல் சில மாவட்ட கலெக்டர்கள், சத்துணவு அமைப்பாளர்களை நியமனம் செய்தார்கள். தகுதி அடைப்படையில் இந்த நியமனங்கள் நடந்தன. அப்போதைய விருதுநகர் கலெக்டர் பாலாஜி, சில வரைமுறைகளை வகுத்து அதன்படி நியமனங்களைச் செய்தார்.

அதற்காகவே அவர் மாற்றப்பட்டதாக செய்திகள் பரவியது. பாலாஜியைப் பின்பற்றி மேலும் சில கலெக்டர்கள் சத்துணவு அமைப்பாளர் நியமனங்களை முறைப்படி செய்தார்கள். அதில் ஒருவர் இந்த ஆஷிஸ் குமார். இந்த நியமனத்தை யாரும் தடுத்துவிடக் கூடாது என்பதற்காக, இரவோடு இரவாக சான்றிதழ்களைச் சரிபார்த்து சம்பந்தப்பட்டவர்கள் வீட்டுக்கு பணி ஆணையை வழங்கியவர் ஆஷிஸ் குமார் என்கிறார்கள். அப்படிப்பட்டவருக்குத்தான் இப்போது மணல் வடிவில் சிக்கல் வந்துள்ளது.

கடற்கரை முழுவதும் கையில்!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை முழுவதும் கையில் வைத்துக்கொண்டு கார்னெட் மணல் ஏற்றுமதி செய்யும் தொழிலில் உலக அளவில் இரண்டாம் இடத்திலும் இந்திய அளவில் முதலிடத்திலும் இருந்துவருகிறார் வி.வி. மினரல் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன். இவர் அனுமதிபெற்ற இடத்தைத் தாண்டி மணலை எடுத்து ஏற்றுமதி​ செய்துள்ளாரா? என்பதுதான் மாவட்ட நிர்வாகம் கண்டுபிடிக்க நினைக்கும் விவகாரம். கடற்கரை, கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி, தனியாரின் பெரிய நிலம், அதோடு ஒட்டியுள்ள தனியாரின் சிறிய நிலம், அனுமதி வாங்கியிருக்கும் அரசு நிலம், அதோடு ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு என நிலப்பரப்புக்களை வெட்டி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார்களா என்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கத் தொடங்கியது. விதிமுறைகள் மீறப்படுவதாக மீனவர்கள் சிலர் தொடர்ந்து புகார் சொல்லி வந்தார்கள். வேம்பார் கடற்கரையோரப் பகுதிகளில் மட்டும் 30 முதல் 40 ஹெக்டேர் பரப்பில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவதாக டி.ஆர்.ஓ. நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளம் தாலுகா படுக்கப்பத்து பகுதியில் சட்டவிரோதமாக தாது மணல் எடுத்த நிறுவனத்துக்கு மூன்று கோடி ரூபாய் அபராதம் விதித்தனர். அதைப் போலவே வேம்பார் பகுதிகளிலும் முறைகேடு நடந்துள்ளதா என்பதைக் கண்காணிக்கவே கலெக்டர் முயற்சித்தார் என்கிறார்கள். இதுதான் அவரது பணி மாறுதலுக்குக் காரணம் என்கின்றனர்.

முறைகேடு நடந்துள்ளது உண்மைதான்!

கலெக்டர் ஆஷிஸ் குமாரிடம் பேசினோம். வைப்பாறு, வேம்பார் பகுதியில் வருவாய் துறை, சுங்கத் துறை, காவல் துறை கொண்ட டீம் ரெய்டு நடத்தினார்கள். அதில் வைப்பாறு கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம், நிலம் அளவை செய்யப்பட்டாத நிலம் மற்றும் குத்தகை வழங்கப்பட்ட நிலத்துக்கு அருகில் நில அளவை செய்யப்படாத 85.611 கன அடி அளவிலான நிலபரப்பில் இருந்து 2,39,712 மெட்ரிக் டன் அளவில் கனிமங்களை வி.வி. குழும நிறுவனம் முறைகேடாக அள்ளியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அரசு உத்தரவின்படி எல்லா மணல் குவாரிகளையும் நாங்கள் கண்காணித்துக்கொண்டுதான் வந்தோம். அதிலும் வைகுண்டராஜன், அவரது சகோதரர் பி.எம்.ஜி நிறுவனம் ஆகியவை தவறு செய்துவருவதாக மீனவர்களும் பொதுமக்களும் புகார் சொன்னார்கள். ரகசியமாக முதலில் இதனைக் கண்காணித்தோம். உண்மை என்று தெரிந்தது. முதலில் படுக்கபத்தில் உள்ள பி.எம்.சி-யை ரெய்டு செய்தோம். விதியை மீறி இரண்டு லட்சத்து 82 ஆயிரத்து 744 மெட்ரிக் டன் கூடுதலாக எடுத்திருந்தனர்.

அதற்கு மூன்று கோடியே 10 லட்சத்து 25 ஆயிரத்து 250 ரூபாய் அபராதம் விதித்தோம். அங்கிருந்து எடுக்கப்பட்ட தாது மணல் டெஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. உறுதிசெய்த பின்னர் இந்த அபராதத் தொகை மேலும் அதிகரிக்கலாம். அதற்கு பிறகுதான் வேம்பாரிலும் வைப்பாறிலும் ரெய்டு நடந்தது. தனியார், அரசு புறம்போக்கு நிலத்திலும் அள்ளப்பட்டிருப்பதால் அந்த நிறுவனம் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய வி.ஏ.ஓ. மூலம் போலீஸில் புகார் செய்யப்​பட்டிருக்கிறது என்றார்.

இதுவரையிலும் ஏன் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேட்டோம். அதிகாரிகள் பயந்திருக்​கிறார்கள். பெரிய அதிகாரிகளே பயப்படும்போது சிறியவர்கள் என்ன செய்வார்கள்? நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இதுபோன்று குவாரிகள் இருக்கிறது. அதிலும் இதுபோன்று தவறு நடந்திருக்கலாம். இனிமேல் இதுபோன்று நடக்கக் கூடாது என்பதற்​ காகத்தான் இந்த நடவடிக்கை என்றார்.

உங்களை யாராவது மிரட்டினார்களா? என்று கேட்டபோது, இந்த நடவடிக்கைகளுக்காக என்னை யாரும் நேரடியாக மிரட்டவில்லை என்றவர், ரெய்டு நடத்தியதால்தான் உடனே இடமாற்றம் நடந்ததா என்பது எனக்குத் தெரியவில்லை. அரசு என்னை இந்தப் பணியில் நியமித்தது. சிறப்பாகச் செயல்பட்டோம். வேறு பணிக்கு அழைத்திருக்கிறது. அதில் வேலை செய்வோம். அவ்வளவுதான். இதில் ஒன்றும் விசேஷம் இல்லை. மாவட்டத்துக்குத் தேவையானத் திட்டங்கள் நிறையச் செய்ய முயற்சி செய்தோம். அதில் பிடிக்காத சிலர் புகார் சொல்லத்தான் செய்வார்கள் என்றார் ஆஷிஸ் குமார்.

இது நெடுநாள் புகார்!

இந்த விவகாரம் பற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரம், நம்மிடம் பேசினார். இதுதொடர்பாக அரசுக்கு தொடர்ந்து புகார் கடிதங்களை அனுப்பி வந்தவர் இவர்தான். தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் சேர்மனாக இருந்தவர். நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடியும் சேர்ந்து இருந்தபோது, கலெக்டராகவும் இருந்தவர். அந்த அனுபவத்துடன் சில தகவல்களைச் சொன்னார்.

வி.வி. மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன், தென் மாவட்டங்களின் கடற்கரை ஓரத்தில் தனி அரசாங்கம் நடத்தி வருகிறார். தென் மாவட்டங்களின் கடற்கரை பகுதிகளில் குவிந்துகிடக்கும் மணலில் கார்னெட், இலும்னைட், ரூட்டைல், ஜிர்கான், மோனசைட் என்ற விலை உயர்ந்த கனிமங்கள் கலந்துகிடக்கிறது. இதை அந்த மணலில் இருந்து பிரித்தெடுத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் இவர்களது தொழில். மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, மாநில அரசின்மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கடலோர பாதுகாப்புச் சட்டம், வன இலாகா என பல துறைகளில் அனுமதிபெற வேண்டும்.

அவர்கள் அனுமதி வழங்கிய பின், அந்தந்தத் துறைகளின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால், இங்கு தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் விதிமுறைகள் எதையும் பின்பற்றவும் இல்லை. கடற்கரை ஓரங்களில் மணலை அள்ளி சலிப்பதற்கு மனித ஆற்றலைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், ராட்சத எந்திரங்கள் டன் கணக்கில் மணலை அள்ளிக் கொண்டிருக்கின்றன. கனிமங்கள் பிரிக்கப்பட்ட பிறகு அந்த மணல் மீண்டும் பழைய இடத்தில் கொட்டப்படுவதும் இல்லை.

ஏதாவது ஒரு பட்டா குவாரிக்கு மட்டும் அனுமதி வாங்கிக்கொள்பவர்கள், அதைக் காட்டியே தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள அனைத்துப் புறம்போக்கு நிலங்களையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்கள். போலீஸ், வருவாய்த் துறை, கனிம வளம், வருமான வரி, வன இலாகா, மாசுக்காட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் என சகல துறைகளும் இதுவரை கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது.

இந்தப் பகுதியில் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் தொழில் தொடங்க முடியாது. அப்படியே யாராவது ஒருவர் தொடங்கினால்கூட, அவர்களால் அந்தத் தொழிலை நடத்தவே முடியாது. அரசாங்க சம்பளம் வாங்கும் ஒரு சில கைக்கூலிகள் உதவி இல்லாமல் இதனை யாரும் செய்ய முடியாது.

எந்த அரசாங்கமும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. காரணம், எல்லா அரசாங்கமும் அவர்களது அரசாங்கம்தான். அதற்கு நிதர்சனமான சாட்சிதான் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் குமார். குவாரியில் சோதனை நடத்தியதற்காக 24 மணி நேரத்தில் அவர், பொறுப்பில் இருந்து தூக்கப்பட்டுள்ளார்.

அப்படி என்றால், நடக்கும் அரசாங்கம் யாருடையது? இந்த விவகாரங்கள் பற்றி தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் இதுவரை 1,500 கடிதங்களை ஆதாரங்களுடன் அனுப்பியுள்ளேன். ஆனால், இதுவரை குறைந்தபட்ச விசாரணைகூட நடக்கவில்லை. முதல் முறையாக ஆஷிஸ் குமார் நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். அவரைப்போன்ற அதிகாரிகள் வர வேண்டும். இந்த மாஃபியாக்களிடம் இருந்து மக்களின் சொத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.

இது எங்களை ஒழித்துக்கட்டும் முயற்சி!

ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரத்தின் குற்றச்சாட்டுகள் பற்றி வி.வி. மினரல்ஸ் தரப்பைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர்கள் சார்பில், வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமி நம்மிடம் பேசினார். வி.வி. மினரல்ஸ் முறையான அனுமதிகளைப் பெற்று, அனைத்து விதிமுறைகளையும் சரியாகப் பின்பற்றித்தான் தொழில் நடத்தி வருகிறது. அதற்கான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் இருக்கிறது. அதை உரியவர்கள் எப்போது வேண்டுமானாலும் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரம், எங்களின் தொழில் போட்டியாளர் தயா தேவதாஸ் என்பவருடைய ஊழியர். தயா தேவதாஸ் சொல்லச் சொல்வதை சுந்தரம் சொல்கிறார். இதுதான் எங்களைப் பற்றிய அபாண்டமான குற்றச்சாட்டின் பின்னணி.

யார் வேண்டுமானாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்தப் பகுதியில் நிலம் வாங்கி எங்களைப்போல தொழில் செய்யலாம். அதை நாங்கள் தடுக்கவே முடியாது. அப்படிச் செய்ய முயற்சி எடுக்காமல், எங்களுடைய தொழில் போட்டியாளர்கள் ஒரு சில அரசியல் மற்றும் பத்திரிகை பிரமுகர்களைக் கையில் வைத்துக்கொண்டு எங்களை மொத்தமாக இந்தத் தொழிலில் இருந்து ஒழித்துக்கட்ட நினைக்கிறார்கள். அதுதான் இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகள் வரக் காரணம். இவர்கள் இங்குள்ள மீனவர்களையும் தூண்டிவிட்டு எங்களை பிளாக்மெயில் செய்கிறார்கள். இதுபோன்ற எல்லா பிரச்னைகளையும் நாங்கள் சட்டப்படி சந்தித்துக்கொண்டு இருக்கிறோம். இனிமேலும் சந்திப்போம் என்றவரிடம், ஆஷிஸ் குமார் இடமாற்றம் பற்றிக் கேட்டோம்.

கலெக்டர் ஆஷிஸ் குமார் இடமாற்றத்துக்கு நாங்கள் காரணம் என்று சொல்வது நகைச்சுவையாக உள்ளது. ஒரு முதலமைச்சர் நினைத்தால் மட்டும்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியும். அதில் எங்களைப் போன்றவர்கள் எப்படி தலையிட முடியும்? ஆஷிஸ் குமார் மீது இந்த மாவட்டத்தில் ஏராளமான புகார்கள் இருக்கின்றன. அவருடைய மகள் பிறந்தநாள் விழாவைக் காரணம் காட்டி பல லட்சங்களை அவர் வசூல் செய்தார், கோடிக்கணக்கான மதிப்பில் பரிசுப்​பொருள்கள் பெற்றார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த அடிப்படையில் அவர் மாற்றப்பட்டு இருக்கலாம் என்றார்.

பரிசுப் பொருட்கள் வாங்கினாரா?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் 25-வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டங்களை நடத்தினார் கலெக்டர். ஒவ்வொரு துறை சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த விழாவுக்காக தொழில் நிறுவனங்கள், வியாபார பிரமுகர்களிடம் வசூல் நடத்தப்பட்டதாகவும் அதற்கு சரியான கணக்கு காட்டப்படவில்லை என்றும் குற்றசாட்டுக்கள் எழுந்தன. அதேபோல் கலெக்டரின் மகள் பியரல் பிறந்தநாள் விழாவுக்கு முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டு இருந்ததாகவும் அவர்கள் தாராளமாக அன்பளிப்புக்​களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆஷிஸ் குமார் மறுக்கிறார். உரிய கணக்கை அரசிடம் தெரிவிப்பேன் என்கிறார் அவர்.

கடல் ஒட்டி இருக்கும் கலெக்டர் பங்களா அருகில், வேறு வேலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக்கொண்டு நடைபாதை, குடில் அமைத்ததாகவும்... அந்தப் பணிக்கு முறையாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை என்றும் குற்றசாட்டுக்கள் கூறப்பட்டு வந்தன. குற்றசாட்டுக்கள் அவ்வப்போது தூண்டப்பட்டு வந்ததை தொடர்ந்து, அரசு சார்பில் விசாரணை நடத்த உத்தரவு விடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் போர்க்கொடி?

ஆஷிஸ் குமார் மாற்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. மணல் திருட்டில் ஈடுபட்ட நபருக்கு ஆதரவாக நேர்மையான அதிகாரிகளை அரசாங்கம் பழிவாங்கினால், இனி எந்த அதிகாரியாவது சுற்றுச்சூழலுக்கும் மக்களின் எதிர்காலத்துக்கும் வேட்டுவைக்கும் மணல் கொள்ளையர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்களா? என கொதிக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், மதுரையில் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு எதிராக துணிச்சலாக நடவடிக்கை மேற்கொண்ட அன்சுல் மிஸ்ராவை அங்கிருந்து மாற்றியதே தவறான முன்னுதாரணம். இப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷிஸ் குமாரை அதேபோல் மாற்றியிருக்கிறார்கள். இதற்கு முன்பு குமரி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜோதி நிர்மலா துணிச்சலாக செயல்பட்டார். அவரையும் கடந்த ஆட்சியாளர்கள் உடனே மாற்றினார்கள். எந்த அரசாங்கமாக இருந்தாலும் உயர் மட்ட அதிகாரிகளை இந்தத் தொழில் அதிபர்கள் கையில் வைத்திருக்கிறார்கள்.நியாயமான அதிகாரிகளுக்கு பக்க பலமாக இருக்க வேண்டிய அரசாங்கம், இப்படிப்பட்டவர்களுக்குத் துணையாக செயல்படுவது நல்லது அல்ல. உ.பி-யில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு நேர்ந்த அவலத்துக்கு இணையானது இந்த விஷயம். அதனால் இதனையும் எங்கள் ஐ.ஏ.எஸ். சங்கத்தில் விவாதித்து அடுத்த கட்ட செயல்பாடு பற்றி ஆலோசிக்க இருக்கிறோம் என்றார் அந்த அதிகாரி.

மொத்தத்தில் தமிழகத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த சம்பவத்தால் அதிர்ந்திருப்பது நிஜம்.


தகவல்:
ஜூனியர் விகடன்

[Administrator: கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 2:20pm/12.08.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [12 August 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29422

இந்த நாடு நிர்வாகம் எல்லாம் போலியான ஒன்று இதில் ஆளும் கட்சி , மற்றும் அணைத்து கட்சிகளுக்கும் , மேலும் பகுதி சண்டியர்களுகும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும் நாட்டின் வளங்களை சுரண்டும் ஆசாமிகளை கொன்று அந்த மண்னில் சமாதி கட்டநும் . அந்தந்த பகுதி மக்கள் அனைவரும் இதில் மிகவும் கவனமாக இருக்கநும் . அரசை நம்பி பயன் இல்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ashish kumar a scapegoat
posted by mackie noohuthambi (kayalpatnam) [12 August 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29423

ஆஷிஷ் குமார் அவர்களை பலிகிடாவாக்கி இருக்கிறார்கள் என்ற உண்மை தெளிவாக தெரிகிறது. அவர் மாற்றப்பட்டது ஒருவகையில் அவர் உயிருக்கு பாதுகாப்பளிக்கதான் என்று தோன்றுகிறது.

முதல்வர் அவர்கள் நல்ல பெயர் எடுத்துக் கொண்டு வருகிறார். எதிலும் துணிச்சலான நடவடிக்கை. மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக.இருக்கிறார். கருணாநிதி ஆளும் காலத்தில் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்துகிறார்..ஜாதி கலவரங்களை தூண்டுபவர்களை சிறையில் அடைககிறார். இத்தனையும் செய்பவர் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? இப்போது அவரது ஆட்சியில் நடக்கும் இந்த ஊழல்களையும் நன்கு ஆராய்ந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மீண்டும் சரிவை சந்திக்க வேண்டி வரும்.

நாளை நமதே, 40ம் நமதே என்ற கோஷம் கனவாகி, பிரதமர் கனவும் நிர்மூலமாகி விடும். பொறுத்திருந்து பாப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [12 August 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29424

கனிமத்தை மினிமம் கூட வீட்டு வைக்க மாட்டாகள் maximum சுரண்டி விடுவார்கள் .

இந்திய சுதந்தர நாடு - சுத்த தந்திர நாடு

பாரத நாடு - பார் ( பார் ) ரத நாடு

இந்திய நாடு - இந் தீய நாடு

பாரதம் - பாரும் , ரதமும் ( மது மற்றும் இரத்தம் ) ஓடும் பார் . ஜனநாயக நாடு - ஜனம் எல்லாம் நாயாக மதிக்கும் நாடு சுரண்டலுக்கு பெயர் போன நாடு சுரண்டி சுரண்டி பெயரும் போன நாடு .

அரசியல் வாதிகள் அரசியலை வியாதி ஆகி வீட்டனர் .

இஸ்லாமி தண்டனை அமுல் படுதினால் இவைகளை ஒழிக்கலாம் . மக்கள் எந்த மதத்தையூம் , அல்லது மார்கத்தையும் பின் பற்றட்டும் ஆனால் அரசாகம் சரியத் சட்டத்தை சரியா பின் பற்ற வேணும் எல்லாம் சரியாக வந்து விடும் இந்த நாடிட்கு அது தான் சரி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by salai s nawas (singapore) [12 August 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 29425

இந்தியா விரைவில் வல்லரசாக ஆகுதோ இல்லையோ ஆனால் கள்ள அரசுவாக வந்துவிடும், அப்படிதான் இருக்குது. இப்படியே போனால் இன்னும் இருபது வருடத்தில் கம்போடியா மாதிரி ஆகிவிடும்.

நம்மை விட சீனா நாற்பது வருட இடைவெளியில் தொழில்நுட்ப துறையிலும் ரோடு மற்றும் புல்லெட் ரயில் நுட்பத்திலும் முன்தங்கி இருக்கிறான். காரணம் அங்கே சட்டம் அப்படி இருக்கிறது, முதலாளித்துவத்தை செருப்பால் அடித்து உட்காரவைத்து இருக்கிறார்கள். உலக அரங்கிலும் தலை நிமிர்த்து இருக்கிறது. கட்டிட கலையில் சிறந்து விளங்குகிறார்கள், ஆனால் நேற்று கட்டிய சென்னை விமான நிலைய கூரை இரண்டாம் தடவையாக விழுந்து நொறுங்கி இருக்கிறது, எங்கும் லஞ்சம் , கலப்படம் பொய் பித்தலாட்டம்.

இங்கே படித்தவன் பாமரன் கையால் பந்தாட படுகிறான். முன்னாள் மதுரை ஆட்சியர் திரு சகாயம், விடைபெற போகும் நம் மனம் கவர்ந்த ஆட்சியர் திரு ஆஷிஸ் குமார் ஒரு உதாரணம்.

முதலமைச்சருக்கு தெரியாமலா நடந்து இருக்கும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கருத்து கந்தசாமிகள்!
posted by kavimagan m.s.abdul kader (doha..qatar.) [12 August 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 29426

ஆசிஷ் குமார் அவர்களைப் போன்ற,லஞ்ச லாவண்யங்களுக்கு எதிரான அதிகாரிகளுக்கும், நேர்மையாளர்களுக்கும், எந்த அரசாங்கம் ஆனாலும் இதுதான் கதி....லஞ்சம் கொடுத்தால் என்ன தவறு என்று வெளிப்படையாகவே கருத்து கந்தசாமிகள் ஊடகங்களில் எழுதும் வெட்கமற்ற, பொறுப்பற்ற காலம் இது... மனுஷ்யபுத்திரன் பாஷையில் சொல்வதானால், "எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்?"........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நீதியே வெல்லும்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [12 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29427

திரு. ஆசிஸ்குமார் IAS அவர்களே..! நீங்கள் தமிழகத்தின் அணைத்து மக்களாலும் புகழ படுகிறீர்கள்... வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [12 August 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29430

மண்குடம் ஓட்டை, வெடிப்பு இல்லாது தானாக கசியாது. இன்னும் 6 மாத காலத்தில் உண்மை வெளிவரும். பொறுத்து இருந்து பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. திருடர்களே ! திருந்த பாருங்கள் !
posted by M.S.K.Mahlari (Singapore) [12 August 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 29431

திருடனாக பார்த்து திருந்தாந்தவரை திருட்டை ஒழிக்க முடியாது. நமது நாடு முன்னேறாமல் இருப்பதற்கு , இந்த திருட்டுக்கூட்டமே சாட்சி . சவூதியில் இருந்த போது ஒரு நண்பர் சொன்னார் . உலகம் 21 ம் நூற்றாண்டை நோக்கி முன்னேறி செல்கிறது . நமது இந்தியா (2) இரண்டாம் நூற்றாண்டுக்கே இன்னும் வரவில்லை என்று ஆமாம் ! உண்மைதான் !!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by MOHIADEEN SHIFAUL KAREEM (Abu Dhabi) [12 August 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29432

மனவேதனை தருகிறது இந்த செய்தி: நமது நாட்டின் உயர் பதவியல் இருக்க கூடிய இவர்கள் கடின உழைப்பால் இந்த பதவியை அடைந்திருகிறார்கள் அரசின் இந்த தவறான முடிவு நாட்டை பின்னோக்கி செலுத்தும், சட்டமன்ற, பாராளுமன்ற, அமைச்சர்கள் ஏன் பிரதமரை விட நாட்டை பற்றி அதிகம் தெரிந்தவர்கள் தான் இந்திய ஆட்சி பணியாளர்கள், அவர்களுக்கே இந்த நிலைமை என்றல் அரசை நம்பி இருக்கும் நாட்டு மக்களின் நிலைமை கேள்வி குறி தான். எனவே அரசு இந்த விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தி முடிவெடுத்தல் நன்றாக அமையும். எப்படி ஒரு நாட்டுக்கு போக்குவரத்து முதுகெலும்போ அதே போல் ஒரு அரசுக்கு இந்திய ஆட்சி பணியாளர்கள். அவர்கள் பாமரர்கள் அல்ல நன்கு விஷயம் தெரிந்தவர்கள் அவர்களின் கணிப்பும் நடவடிக்கையும் தவறு தலாக இருக்காது. மாண்புமிகு ஆஷிஸ் குமார் அவர்களுக்கு ஒரு சல்யுட்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. எல்லாம் தொழிற்போட்டிதான் !
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [12 August 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 29438

அதிமுக அரசியல் வட்டாரத்தில் V V மினரல்ஸ் அதிபர் வைகுண்ட ராஜன் மிகவும் செல்வாக்கானவர். அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை அவரை யாரும் எதுவும் அசைக்க முடியாது.

எங்கள் குடும்ப கூட்டு சொத்தாகிய தூத்துக்குடி உப்பளம் 40 ஏக்கர் நிலத்தை , 2000 ஆண்டுவாக்கில் அவருக்கு நாங்கள் அப்போதைய மிக அதிக விலைக்கு விற்றோம். பணம் எதுவும் பெறாமல் பகுதி பகுதியாக , எந்த சிரமும் இல்லாமல் REGISTER செய்து கொடுத்தோம். அது ஒரு துணிச்சலான நம்பிக்கையான சொத்து பரிவர்தனைதான். பலம் பொருந்தியவர் என்பதால் அவ்வாறு செய்ய குடும்ப பெரியவர்கள் சம்மதித்தனர். குறிப்பிட்ட தினத்தில் அவர் வாக்கு கொடுத்தபடி, நம் பணம் வீடுதேடி பாதுகாப்பாக வந்தது. நம்பிக்கையானவர். நாணயமாணவர். வாக்கு தவறாதவர். தொழிற்போட்டி அவருக்கு அதிகம் என அவர் அப்போதே சொல்வார். அவருக்கு துணையாக 2 சகோதரர்களும் உள்ளனர்.

முன்னாள் IAS அதிகாரியான V . சுந்தரம் என்பவர் 1975 களில் திருநெல்வேலி மாவட்ட செல்வாக்கான கலெக்டர். மத்திய காங்கிரஸ் அரசு ஆதரவாளர். EMERGENCY அமுலில் இருந்தபோதும் , தமிழ் நாட்டில் கவர்னர் ஆட்சி அமுலில் இருந்தபோதும் அரசுக்கு ஆதரவாக பல துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தவர் . பிறகு தூத்துக்குடி துறைமுகத்தில் சேர்மனாகவும் இருந்தவர். அவர் ஆட்சிகாலத்தில் இந்த வி.வி. மினரல்ஸ் இருந்ததா என தெரியவில்லை. அவராலும் இந்த வி.வி. மினரல்ஸ் ஐ ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் , வேறு எந்த அதிகாரியாலும் இலகுவில் எதுவும் செய்ய முடியாது.

பொதுவாக மாவட்ட ஆட்சியர் என்பவர் அரசு அதிகாரிதான். அரசுக்கு கட்டுப்பட்டவர்தான். அரசு கொடுக்கும் மாறுதலுக்கு இவர் சென்றுதான் ஆக வேண்டும். இவருக்கு இந்த மாநில நிர்வாகம் பிடிக்கவில்லையெனில், மத்திய தொகுப்புக்கு மாறுதலாகி செல்லலாம்.

ஒரு நிறுவனத்தின்மீது குற்றச்சாட்டு மீடியாக்களில் அதிகமாக வருவதாலேயே , அவர்கள் குற்றம் செய்ததாக சொல்லிவிட முடியாது. இந்த நிறுவனம் தவறு செய்திருந்தால் , திமுக ஆட்சியில் என் இவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை? திமுக அரசு ஆட்சியில் இருக்கும்போதே இவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாமில்லையா ? ஏன் அப்படி நடக்க வில்லை?

பெரிய முதலீடு செய்து தொழில் செயபவர்கள்மீது, இதுமாதிரியான குற்றச்சாட்டுக்கள் வருவது இயல்புதான்.இவர்களும் தங்கள் முதலீட்டுக்கு தகுந்தாற்போல அரசியல் பாதுகாப்பையும் தேடிக்கொள்வர். இது இயல்பான ஒன்றுதான். ஒரு அரசு அதிகாரியை தூக்கும் ( நான் குறிப்பிடும் தூக்குவது வேறு) அளவிற்கு இவர்கள் செல்லமாட்டார்கள்.

எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன். அவனே மிக சிறந்த பாதுகாவலன்.

[Administrtor: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved