இம்மாதம் உம்றா பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணியருக்கான பயிற்சி வகுப்பு, காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி அமைந்துள்ள மவ்லானா அப்பா சின்ன கல் தைக்காவில், 10.12.2015 வியாழக்கிழமையன்று 10.30 மணியளவில் நடைபெற்றது.
உம்றா - ஜியாரத் கிரியைகள் தொடர்பான விளக்கங்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ உரையாற்றினார்.
![](/newsimg/1112201558280.jpg)
இப்பயண ஏற்பாடுகளைச் செய்துள்ள தாருஸ்ஸலாம் ஹஜ் & உம்றா சர்வீஸ் எனும் தனியார் நிறுவனம் சார்பில், பயணியருக்குத் தேவையான அறிவுரைகள், தற்போதைய மழை வெள்ளம் காரணமாக உம்றா பயணியர் சென்னையில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, எஸ்.கே.ஸாலிஹ் விளக்கிப் பேசினார்.
இந்நிறுவனம் மூலமாக, இம்மாத இறுதியில் உம்றா பயணம் மேற்கொள்ளவிருக்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 43 பேர் உட்பட மொத்தம் 53 பேர் உம்றா பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அவர்களுள் பலரும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் ஆசிரியையர், பொறுப்பாளர்கள், மாணவியரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
உம்றா பயணம் மேற்கொள்ளவுள்ள ஆண்-பெண் பயணியருக்கு, நிறுவனத்தின் சார்பில் பயணப் பை, அடையாள அட்டை உள்ளிட்ட அடிப்படைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
![](/newsimg/1112201558293.jpg)
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தாருஸ்ஸலாம் ஹஜ் & உம்றா சர்வீஸ் அதிபர் எஸ்.எஸ்.செய்யித் இப்றாஹீம் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |