Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:11:37 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8906
#KOTW8906
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 15, 2012
66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் தேசிய கொடியேற்றி முதல்வர் ஆற்றிய உரை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3206 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இன்று (ஆகஸ்ட் 15) - நாடு முழுவதும், 66வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அதன் தொகுப்பு வருமாறு:

66-ஆவது சுதந்திர தின நன்னாளில் பன்னிரண்டாவது முறையாக இந்தக் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

65 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில் இருந்து விரட்டி சுதந்திரத்தைப் பெற பாரதம் முழுவதும் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து அரும்பாடுபட்டனர். ஆங்கிலேய அடிமைத்தளையை தகர்த்தெறிய நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மகத்தானது.

ஆங்கிலேயருக்கு எதிராக வீர முழக்கமிட்ட நெற்கட்டும் செவல் பூலித்தேவன்; தூக்கு மேடை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மன்; தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்த திருப்பூர் குமரன்; வீரத் தழும்புகளை விருதுகளாய் சுமந்த மருது சகோதரர்கள்; வீரமங்கை வேலுநாச்சியார்; மாவீரன் வாஞ்சிநாதன்; விடுதலைப் போராளி தில்லையாடி வள்ளியம்மை; செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார்; தம் கவிதைகள் மூலம் விடுதலை உணர்வினை ஊட்டிய மகாகவி பாரதி; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழிவந்த சுதந்திரப் போராட்டத் தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்; தீரர் சத்தியமூர்த்தி; சுப்ரமண்ய சிவா; தீரன் சின்னமலை; மாவீரன் அழகு முத்துக்கோன்; பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார் என இந்திய விடுதலைக்காக போராடிய எண்ணற்ற தியாக சீலர்களை போற்றி வணங்குகிறேன்.

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றார் பேரறிஞர் அண்ணா. ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதாக இருக்க வேண்டும். அரசின் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் மக்கள் நலன் கருதியே அமைய வேண்டும். இந்தக் குறிக்கோளை எய்தும் வண்ணம், உங்கள் அன்புச் சகோதரியின் அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவது மட்டுமல்லாமல், விரைந்த வளர்ச்சி எய்தும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு இணையாக தமிழகத்தின் வளர்ச்சி இருத்தல் வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும். இந்த லட்சியத்தை எய்தும் வண்ணமும்; தமிழ்நாட்டின் மொத்த வளர்ச்சி ஆண்டொன்றுக்கு 11 விழுக்காடு அல்லது அதற்கு மேலாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும்; அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்ற மொத்த வளர்ச்சியைக் காட்டிலும் 20 விழுக்காடு கூடுதல் வளர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையிலும் தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம், 2023 வகுக்கப்பட்டுள்ளது.

உங்கள் அன்புச் சகோதரியின் அரசு பதவியேற்று 15 மாதங்கள் முடிவடைந்துள்ளன. இந்த 15 மாதங்களில் பல்வேறு சாதனைகளை எனது தலைமையிலான உங்கள் அரசு புரிந்துள்ளது.

வேளாண் துறையைப் பொறுத்தவரையில், 2010-2011 ஆம் ஆண்டில் 76 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2011-2012 ஆம் ஆண்டில் சாதனை அளவாக 106 லட்சம் மெட்ரிக் டன்கள் என உயர்ந்துள்ளது. காவேரியில் நமக்கு உரிய பங்கினை உரிய நேரத்தில் கர்நாடகம் விடுவிக்காததால், குறுவை சாகுபடி பரப்பு இந்த ஆண்டு குறைந்துவிட்டது. எனினும், எனது தலைமையிலான அரசு டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரத்தை வழங்கிய காரணத்தால், 1 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பா பயிர் சாகுபடி வழக்கமான பரப்பளவில் மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் தமிழகம் முன்னணி மாநிலமாக தொடர்ந்து திகழ வேண்டுமெனில் அதற்கு அடித்தளமாக அமைவது மனித வள மேம்பாடு தான். இந்த மனித வள மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வில் எனது அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்குதல்; நான்கு சீருடைகள், காலணிகள், புத்தகப் பை, வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, பூகோள வரைபடம், பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை வழங்குதல்;

மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு மடிக்கணினி வழங்குதல்;

மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு மிதிவண்டி வழங்குதல் ஆகியன சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உயர் கல்வியைப் பொறுத்த வரையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி ஆகிய இடங்களில் புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 22 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வை பொறுத்தவரையில், ஏழை, எளிய மக்கள் உயரிய சிகிச்சை பெற ஏதுவாக, ஒரு குடும்பத்திற்கு ஆண்டொன்றிற்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைப்பதை உறுதி செய்யும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்; கிராமப்புற வளர் இளம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம்; தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலம் பேணிப் பாதுகாக்கும் வகையில் நோய் தடுப்புச் சேவையுடன் இணைந்து 12,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்; ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர பிரசவ சேவை, சிறந்த மருத்துவ வசதிகள் ஆகியவை நோயற்ற சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்கின்றன.

கல்வி மேம்பாடு மற்றும் மக்கள் நல்வாழ்வுடன் தொழில் வளர்ச்சி ஏற்பட்டால் தான் கல்வி கற்றோர் வேலைவாய்ப்பினை பெறுவதுடன் தமிழகத்தின் பொருளாதாரம் மேம்படவும் வழிவகுக்கும் என்பதன் அடிப்படையில், 5,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,530 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பையும்; 20,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பினையும் உருவாக்கும் வகையில், 5 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இன்னும் பல தொழில் நிறுவனங்களுடன் விரைவில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன. இதே போன்று, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கடந்த 15 மாதங்களில் மட்டும் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 1,70,000 பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 24,952 பணியிடங்களும்; வேலைவாய்ப்பகம் மூலம் 17,540 பணியிடங்களும்; 59,189 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும்; 1,432 கல்லூரி ஆசிரியர் பணியிடங்களும்; 13,376 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களும்; 205 உதவி ஆய்வாளர் பணியிடங்களும்; 2,874 மருத்துவப் பணியிடங்களும்; 16,793 சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களும்; 11,803 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களும்; தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4,672 பணியிடங்களும்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 16,963 பணியிடங்களும் அடங்கும். இவற்றில் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணியிடங்கள் ஒரு சில மாதங்களில் நிரப்பப்பட்டுவிடும்.

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், வேளாண் வளர்ச்சிக்கும் இன்றியமையாததாக விளங்கும் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கும் வண்ணம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகள் எனது அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட்டு, மின் தட்டுப்பாடு முழுவதும் நீங்கும் வகையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஏழை, எளிய, சாமானிய மக்களும் தங்களுக்கு உரிய பங்கைப் பெறும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை உங்கள் அன்புச் சகோதரியின் அரசு எடுத்து வருகிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்குதல்;

ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம்;

கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்;

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டம்;

என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதே போன்று, அரிசி பெறத் தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா மின் விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2011-2012 ஆம் ஆண்டில் 25 லட்சம் மின் விசிறிகள், மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 35 லட்சம் பயனாளிகளுக்கு இவை வழங்கப்படும்.

மேலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய கிராம மக்கள் பயன்பெறும் வண்ணம், கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 17,000 பயனாளிகளுக்கு 17,000 கறவைப் பசுக்களும், 1 லட்சத்து 70 ஆயிரம் பயனாளிகளுக்கு 6 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளாடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

கிராமப்புற ஏழை மக்களின் வீட்டு வசதியை மேம்படுத்தும் வகையில், முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 2011-2012 ஆம் ஆண்டில்1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 300 சதுர அடி கொண்ட 60,000 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, அந்தப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. இந்த ஆண்டும், 60,000 வீடுகள் கட்டப்படும். இதே போன்று தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் தேவைப்படும் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், தாய் திட்டத்தின் கீழ், 2011-12 ஆம் ஆண்டில் 2020 கிராம ஊராட்சிகளில் உள்ள 25,335 குக்கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 680 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. நடப்பாண்டில் இத்திட்டப் பணிகளுக்கென 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரத் திருநாளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நம் உறவுகளாகிய இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கும், சிங்களர்களுக்கு இணையான உரிமைகளைப் பெறுவதற்கும் வழிவகை ஏற்படுத்த இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி அவர்களின் துயரை நீக்க வேண்டும் என மத்திய அரசை இந்தத் தருணத்தில் நான் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இனிய நாளில், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தும் இந்த வேளையில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 5,000 ரூபாயிலிருந்து 7,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும்; அவர்களுக்கான மருத்துவப்படி 100 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும்; அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரம் என்பது ஒவ்வொருவருக்கும் வேண்டும். ஆனால் அந்தச் சுதந்திரம் வரம்பை மீறாமல் இருக்க வேண்டும். எல்லா விதத்திலும் கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டினை கடைபிடிக்க வேண்டும். அது தான் உண்மையான சுதந்திரம். இந்த உண்மையான சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உங்கள் அன்புச் சகோதரியின் அரசு செயல்பட்டு வருகிறது. எனக்குச் சுதந்திரம் இருக்கிறது என்று அடுத்தவரின் சுதந்திரத்தை, உரிமையை, வாழ்வாதாரத்தை பறிக்கும் விதத்திலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எவரேனும் செயல்பட்டால், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, “ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்” என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல் வரிகளை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த நன்னாளில் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவும்; இந்திய திருநாட்டை வல்லரசாக்கவும்; அதில் தமிழ்நாட்டை வளம் மிக்க மாநிலமாக ஆக்கவும் நான் தொடர்ந்து அயராது பாடுபடுவேன் என்பதைத் தெரிவித்து,

“உங்களுக்காக நான் என்பது மட்டுமல்ல; உங்களால் நான்” என்ற உணர்வோடு, நான் எனது கடமையை நிறைவேற்றிட தமிழக மக்களாகிய நீங்கள் எல்லாம் எனக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, சுதந்திரக் காற்றை சுதந்திரமாகவும், பெருமையுடனும் சுவாசித்துக் கொண்டிருக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, விடை பெறுகிறேன்.


இவ்வாறு அவர் தனதுரையில் தெரிவித்தார்.

தகவல்:
தினமணி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Superb
posted by syedahmed (GZ, China) [15 August 2012]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 21262

நம் முதல்வர் ஆற்றிய சுதந்திரதின உரை உண்மையிலேயே நம் தமிழ் நாடு தொலை நோக்குப்பார்வையில் மற்ற மாநிலங்களை விட வெகு முன்னேற்றத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

புதிய புதிய திட்டங்களை வழி வகுத்து திறைமையாக செயல் படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. shortly, we called this regime as GREEN REVOLUTION.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...முதல்வரின் உரை
posted by mackie noohuthambi (kayalpatnam) [15 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21265

நானும் கேட்டேன். மிக அருமையான அமைதியான ஆடம்பரமில்லாத ஆர்பரிப்பு இல்லாத உரை. புரட்சி தலைவி தன்னை ஒரு தரமிக்க ஒரு பொறுப்புமிக்க தலைவியாக தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்ற வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை அந்த வரிகள் அவர்கள் வணங்கும் இறைவனுக்கே விட்ட சவால் ஆகும். கவிஞர்கள் எப்படியும் பாடுவார்கள் அதற்கு அர்த்தம் இருக்க வேண்டும் என்ற மரபுகள் எல்லாம் மலை ஏறி விட்டது.

சுதந்திர காற்றை எல்லோரும் சுவாசிக்க வேண்டும் என்று சொன்ன அம்மையார் கருணாநிதி அவர்களின் டெசோ நாடகம் நடத்த அனுமதிக்காதது வருத்தமளிக்கிறது. நாடகம்தானே நடந்துவிட்டு போகட்டுமே என்று விட்டிருக்க வேண்டும். இன்னும் புஸ் வாணமாக அது பூமியில் புதைந்திருக்கும்.

உங்களுக்காக நான் என்பதைவிட உங்களால் நான் என்ற வசனம் கருணாநிதி அவர்களின் வசனங்கள். அதை முதல்வர் கையாண்டிருக்க வேண்டாம். வேறு எத்தனையோ வீர வசனங்கள் புரட்சி தலைவர் பாடியிருக்கிறார் அவற்றை சொல்லியிருக்கலாம்.

இவற்றை புறந்தள்ளிவிட்டு பார்த்தால் அற்புதமான உரை.இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு பற்றிய பேச்சு நிதர்சனமானது. வெறும் ஈழம் கனவு இவருக்கு இல்லை.

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற. இங்கு நல்லவங்க எல்லோரும் உங்க பின்னாலே நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்கோ கண்ணுமுன்னாலே

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் நாளை நமது என்று சிந்து பாடுங்கள் மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணி பாருங்கள், அண்ணா சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்.

இப்படி எத்தனையோ தேன் நனைத்த பாடல் வரிகளையும் சேர்த்திருக்கலாம். முதல்வரின் கனவுகள் நனவாக வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Kader K.M (Dubai) [15 August 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21272

அன்பு சகோதரியே! நீங்கள் குறிப்பிட்டுள்ள இவர்கள் மட்டும் தானா தமிழக சுதந்திர தியாகிகள்? ஏன் ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும்?

நமது தாய்த்திருநாட்டை வெள்ளையர்களிடம் காட்டி கொடுத்தவர்களுக்கு வெள்ளையர்கள் கொடுத்தப்பட்டம் 'சர்' , வெள்ளையர்களை எதிர்த்து நின்று போர் தொடுத்து தன் உயிரையும் தியாகம் செய்த முஸ்லிம்களுக்கு இந்திய ஆட்சியாளர்கள் கொடுத்தப்பட்டம் தீவிரவாதிகள்!

அன்பு சகோதரியே! தன் உடல், பொருள்,உயிர் அனைத்தையும் இந்த தாய் திருநாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் 'இப்பி பக்கீர்கள்' என்ற தமிழக முஸ்லிம் சுதந்திர போராட்ட தியாகிகள்! மற்றும்

தூக்குமேடை பஞ்சுமெத்தை என்று வாய் கிழிய பேசும் நம் நாட்டில், எங்கள் தாய் திரு நாட்டில் உள்ளவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வெள்ளையர்களால் பலமுறை தூக்கிலிடப்பட்டு தனது சுவாசத்தை இந்திய தாய் திரு நாட்டிற்காக அர்பணித்தவர் எங்கள் 'சஹீத்' மருதநாயகம் என்ற கான்சாஹிப் அவர்கள்!

இவர்களைப்போன்று இன்னும் எண்ணிலடங்கா பல தமிழக முஸ்லிம் சுதந்திர போராட்ட தியாகிகள், நம் தாய் திருநாட்டின் சுதந்திரத்திற்காக அல்லும், பகலும் தன்னையே அர்பணித்துள்ளார்கள்! காரணம் தன் தாய் திரு நாட்டை நேசிப்பது ஈமானில் ஒரு பகுதி என்று எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கற்று தந்துள்ளார்கள்!

இதெல்லாம் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை!

கைபர்,போலான் கணவாய் வழியாக வந்தவர்கள் எல்லாம் நம் தாய் திருநாட்டை ஆட்சி செய்ய எண்ணும்போது நாம் ஏன் முயற்சி செய்வதில்லை? 800 வருடகாலம் நம் தாய் திருநாட்டை ஆட்சி செய்த அனுபவம் நமக்கு உண்டு! அக் காலகட்டம் நம் தாய் திரு நாட்டிற்கு பொற்காலமே !

தன் வரலாறு தெரியாத எவனும் சரித்திரம் படைப்பதில்லை! வா சகோதரா! மறைத்து வைக்கப்பட்டுள்ள நமது சுதந்திர வரலாற்றை வெளியே கொண்டு வருவோம்! இந்திய விடுதலைக்காக பாடு பட்டவர்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்கள் என்பதை உலகிற்கு உணர்த்துவோம்! வேற்றுமையை மறப்போம்! ஒன்றுபடுவோம்! அல்லாஹ் நாடினால் புதிய வரலாறு படைப்போம்!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved