Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:03:25 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10972
#KOTW10972
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுன் 7, 2013
எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா பணி நிறைவு! பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களிடையே கண்ணீர் மல்க ஏற்புரை வழங்கி பிரியாவிடை!! புதிய தலைமையாசிரியராக எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் பொறுப்பேற்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 8349 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியரான எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, 31.05.2013 அன்று பணி நிறைவு பெற்றதையடுத்து, அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி, இம்மாதம் 03ஆம் தேதி காலை 12.00 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்முறை:

பள்ளி துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, பொருளாளர் ஹாஜி எல்.கே.கே.செய்யித் அஹ்மத், நிர்வாகக் குழு உறுப்பினர்களான ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி, ஹாஜி எல்.டி.இப்றாஹீம், ஹாஜி எம்.கனீ, ஹாஜி கே.எஸ்.ஷேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் அரபி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.



தலைமையுரை:

பள்ளி ஆட்சிக்குழு தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, விடைபெறும் தலைமையாசிரியரை வாழ்த்திப் பேசினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-

பல்லாண்டு காலமாக இப்பள்ளியின் ஆசிரியராகவும், பின்னர் தலைமையாசிரியராகவும் பணியாற்றிய எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா அவர்கள், தான் தலைமையாசிரியராகப் பணியாற்றிய காலகட்டத்தில் பல நெருக்கடியான சூழ்நிலைகளை திறம்பட சமாளித்து சாதனை புரிந்துள்ளார்.

பள்ளியை அவர் வழிநடத்திய காலகட்டத்தில் பிரச்சினைகள் வரும்போதெல்லாம், நிர்வாகத்திற்கு அதனைத் தெரிவிக்கையில் ஒருமுறை கூட சக ஆசிரியர் யாரையும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. பிரச்சினைக்கு நாசூக்காக தீர்வு காண்பதில் மட்டுமே முனைப்புடன் இருந்த அவர், நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்குமிடையே உள்ள புரிந்துணர்வு சேதப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டார்.


இவ்வாறு, பள்ளி தலைவர் டாக்டர் அஷ்ரஃப் உரையாற்றினார்.



முன்னாள் தலைமையாசிரியர், தாளாளர், ஆசிரியர்கள் வாழ்த்துரை:

அவரது உரையைத் தொடர்ந்து, பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியரும், இந்நிகழ்ச்சியின் சிறப்பழைப்பாளருமான டி.ஞானய்யா, பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்திப் பேசினர்.

சால்வை மரியாதை:

பின்னர், விடைபெறும் தலைமையாசிரியர், முன்னாள் தலைமையாசிரியர், முன்னாள் தலைமையாசிரியர் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், ஆசிரியர்கள் சார்பிலும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.



தங்க நாணயம் அன்பளிப்பு:

பள்ளி ஆசிரியர்களிடையே ஒரு மரபு பேணப்பட்டு வருகிறது. அதாவது, பணி நிறைவு பெறும் ஆசிரியரை வழியனுப்புகையில், அனைத்து ஆசிரியர்களின் சார்பாக, அடுத்து பணி நிறைவு பெறவுள்ள ஆசிரியர் தன் கையால் ஒரு சவரன் தங்க நாணயத்தை நினைவுப் பரிசாக வழங்குவதுதான் அந்த மரபு.

அதன்படி, பள்ளியின் அனைத்து ஆசிரியர்களின் சார்பாக, அடுத்து பணி நிறைவு பெறவுள்ள ஆசிரியர் டேவிட் செல்லப்பா, விடைபெறும் தலைமையாசிருக்கு ஒரு சவரன் தங்க நாணயத்தை தன் கையால் வழங்கினார்.



பாராட்டு விருது:

அதனைத் தொடர்ந்து, பள்ளியின் முன்னாள் தலைவர் ஹாஜி எல்.கனீ அவர்களின் நினைவாக, அவரது மகன் ஹாஜி எல்.கே.லெப்பைத் தம்பி, விடைபெறும் தலைமையாசிரியருக்கு விருது வழங்கி கண்ணியப்படுத்தினார்.



விடைபெறும் தலைமையாசிரியர் ஏற்புரை:

நிறைவாக, பள்ளியின் பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஏற்புரையாற்றினார். அவரது உரையின் உள்ளடக்கம் வருமாறு:-



1980ஆம் ஆண்டு, இப்பள்ளியின் ஆசிரியராக எனது கல்விப் பணியை இறையருளால் துவங்கினேன். 1995ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றேன்.

தலைமையாசிரியர் தேர்வு:

நான் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றபோது - எனக்கும், பணி நிறைவு பெற்ற ஆசிரியர் எம்.ஏ.புகாரீ அவர்களுக்கும் போட்டி நிலவியது. ஆசிரியர் புகாரீ அவர்கள் என்னைத் தவறாகக் கருதிவிடக் கூடாது. சில நிகழ்வுகளைக் குறிப்பிட வேண்டும் என்பதற்காகவே இதை இங்கே தெரிவிக்கிறேன்...

நிர்வாகிகளின் ஒத்துழைப்பு:

அந்நேரத்தில் இருவருக்கும் சமமான ஆதரவு இருந்த நிலையில், என்னை அதற்கு முன் பார்த்தேயிராத ஹாஜி எஸ்.அக்பர்ஷா அவர்கள் எனக்கு ஆதரவாக ஒரு வாக்களிக்க, அதன் காரணமாகவே நான் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றேன். ஒரு தலைமையாசிரியராக இன்று எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்ததற்கு, அந்த ஒரு வாக்கு பயன்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போது உள்ளபடியே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

அதுபோல, நான் தலைமையாசிரியராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கருதி, அதற்காக முனைப்புடன் செயல்பட்டவர்கள்தான் நம் பள்ளியின் முன்னாள் தாளாளர்களான மர்ஹூம் ஹாஜி ஏ.கே.செய்யித் அஹ்மத், மர்ஹூம் ஹாஜி இஸ்மத் ஆகியோர். அதுபோலவே எனக்கு ஆதரவளித்தவர்கள் மர்ஹூம் ஹாஜி ஏ.எஸ்.நூஹ், ஹாஜி எஸ்.ஓ.கியாது சேட் ஆகியோர். அவர்களுக்கெல்லாம் இந்நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடப்பு நிர்வாகிகளின் ஒத்துழைப்பு:

இப்போது, இப்பள்ளியை தலைமையேற்று திறம்பட வழிநடத்திக் கொண்டிருக்கும் ஹாஜி டாக்டர் அஷ்ரஃப், தாளாளராக உள்ள ஹாஜி டாக்டர் முஹம்மத் லெப்பை ஆகியோரின் ஒத்துழைப்பும் மகத்தானது. பள்ளிக்கென எதைக் கேட்டாலும், “ஏன், எதற்கு” என்று கேட்காமல் செய்து தருபவர்கள் இவர்கள்... என் மீது அவர்களுக்கு அந்தளவுக்கு நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கும் இந்த நல்ல நேரத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர்களுடன் இடைவெளி...

ஆசிரியராக எனது பணியைச் செய்த காலத்தில் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. எல்லோரையும் போல நானும் ஓர் ஆசிரியன் என்ற முறையில், எனது பணியைக் குறைவின்றி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.



ஆனால், தலைமையாசிரியராகப் பொறுப்பேற்ற பின்னர் என் நிலை அப்படியே மாறிவிட்டது. மனம் விட்டுப் பழகிய சக ஆசிரியர்களிடையேயும் சிறிது இடைவெளியுடன் பழக வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளானேன். அந்தப் பொறுப்பில் அப்படித்தான் செயல்பட இயலும் என்பதை அனைவரும் நன்கறிவீர்கள்.

என்னைப் புரிந்துகொண்ட ஆசிரியர்கள்...

ஆனால், எனக்கிருக்கும் பெரும் மகிழ்ச்சி என்னவென்றால், என்னுடன் சக ஆசிரியராகப் பணியாற்றிய அதே ஆசிரியர்கள் - நான் தலைமையாசிரியரானதும், என் நிலையைப் புரிந்துகொண்டு எனக்கு முழு ஒத்துழைப்பளித்ததுதான்.

மறக்க முடியாத இருபெருமக்கள்...

அடுத்து, நான் தலைமையாசிரியராகப் பணியாற்றிய காலகட்டத்தில், என்னால் என் வாழ்வு முழுக்க மறக்கவே முடியாத அளவில் இரண்டு பெருந்தகைகள் உள்ளனர். ஒருவர், நம் பள்ளியின் முன்னாள் தாளாளர் ஹாஜி பி.மஹ்மூத் அவர்கள். மற்றொருவர், பள்ளியின் முன்னாள் தலைவர் ஹாஜி எல்.கனீ அவர்கள். இவ்விருவரும், நான் தலைமையாசிரியராக இருந்தபோது நிர்வாக ரீதியாக அளித்த ஒத்துழைப்புகளையும், நெருக்கடியான நேரங்களில் தோளோடு தோள் நின்று உதவியதையும் சொல்லத் துவங்கினால் இந்தக் குறைந்த நேரம் போதாது. இறைவன் அவர்களது சேவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பள்ளியில் ஏற்பட்ட மாற்றங்கள்:

இப்பெரியவர்களின் கீழ் நான் தலைமையாசிரியராக இருந்தபோதுதான், நம் பள்ளிக்கு ஆய்வகம் (லேப்) இடமாற்றம் செய்யப்பட்டது. 1984ஆம் ஆண்டு இப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் அனுசரணையில் - இயற்பியல், வேதியல், உயிரியல் என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி ஆய்வகங்கள் நிறுவப்பட்டன. இந்த சிறப்பு நானறிந்த வரை நம் பகுதியில் வேறெந்தப் பள்ளியிலும் இல்லாத ஒன்று.

கூலக்கடை பஜாரிலுள்ள கட்டிடத்தில் எல்.கே.மேனிலைப்பள்ளியும், இந்த தாமரை ஸ்கூல் பில்டிங்கில் எல்.கே.துவக்கப்பள்ளியும் இயங்கி வந்தன. தாமரை ஸ்கூல் கட்டிடத்திற்கு எதிரில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆய்வகம் செயல்பட்டு வந்தது.

இட நெருக்கடியைக் கருத்திற்கொண்டும், பள்ளியும் - ஆய்வகமும் ஒரே இடத்தில் இருந்தால் வசதியாக இருக்குமே என்று கருதியும், 1999ஆம் ஆண்டு பள்ளியின் பொன்விழா கொண்டாடப்பட்டபோது, இந்த யோசனையை பள்ளி நிர்வாகத்திடம் நான் முன்வைத்தேன். உடனடியாக அது ஏற்கப்பட்டதன் விளைவே, இன்று இப்பள்ளி இங்கு இயங்கி வருகிறது.

அதுபோல, இக்கட்டிடத்தில் பல வகுப்பறைகளைக் கொண்ட ஹாஜி எஸ்.ஏ.சுலைமான் ப்ளாக் புதிததாகக் கட்டப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிதாக ஒரு வகுப்பறையும் கட்டப்பட்டுள்ளது.

நம் பள்ளியின் முன்னேற்றத்திற்காக நான் எதைக் கேட்டாலும் மறுக்காமல் தருவதை வழமையாகவே கொண்டிருந்தவர்கள் மர்ஹூம் எல்.கனீ அவர்கள். அவர்கள் தந்த ஊக்கம்தான் இன்று எனது பொறுப்பை இயன்றளவு சிறப்புற செய்திட வழிவகுத்தது.

இப்பெரியவர்களின் ஒத்துழைப்புகளுக்கு ஒற்றைச் சொல்லில் “நன்றி” என்று சொன்னால் அது திருப்தியாகாது. (இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோதே அவரது கண்களில் கண்ணீர் மல்கியது.)

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு:

அடுத்து, சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பை நான் மறக்கவே முடியாது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பில்லாமல் ஒரு தலைமையாசிரியர் செயல்படவே முடியாது. இவ்வாறிருக்க, ஒரு தலைமையாசிரியராக என்னை நம் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அவர்களும் ஆசிரியர்கள் என்பதை மனதிற்கொண்டவனாக நான் அவ்வப்போது - உத்தரவாக இல்லாமல் நான் அவர்களிடம் கூறும் வேலைகளையெல்லாம் சிரமேற்கொண்டு சிறப்புற செய்து தருவார்கள்.

அலுவலர்களின் அர்ப்பணிப்பு:

அடுத்து, நம் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அலுவலர்களான தம்பி மகாராஜன், ஆனந்தக் கூத்தன், முஹம்மத் முஹ்யித்தீன், ராமலிங்கம் ஆகியோரையெல்லாம் நான் மறக்கவே முடியாது. அதுபோல, பணி நிறைவு பெற்ற அலுவலர் அன்வர், மறைந்த முருகன், சுடலை ஆகியோரின் சேவைகளையும் நினைத்துப் பார்க்கிறேன்.

இவர்களெல்லாம், பள்ளிக்குள் வந்துவிட்டால் எவ்வித கவனச் சிதறலும் இன்றி, கடமையே கண்ணாக செயல்பட்டவர்கள். நான் ஏதாவது ஒரு தேவைக்காக ஒரு பொருளைக் கேட்க வாய் திறக்கும்போதே, என் நோக்கமறிந்து அவற்றைக் கொண்டு வந்துவிடுவார்கள். அத்தனை ஈடுபாடு மிக்கவர்கள்.

அதுபோல, இப்பள்ளியின் கணனி ஆசிரியர் தம்பி புகாரீயையும் இங்கே குறிப்பிட வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிக்கூடம் என்றால், பள்ளி சார்ந்த பணிகள் மட்டுமே இருக்கும்... ஆனால் இன்று, அரசின் சார்பில் பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்காக பலமுறை கணனியில் வேலை பார்த்து சிரமப்பட வேண்டிய நிலை. அப்போதுதான் ஒரு ஆவணம் டைப் தயாரிக்கப்பட்டிருக்கும். சில நிமிடங்களிலேயே அதை மாற்ற வேண்டியது வரும். ஆயத்தம் செய்த ஆவணங்களை பல இடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அவற்றையெல்லாம் முகம் சுளிக்காமல் செய்துகொண்டிருக்கிறார் இவர்.

மாணவர்களிடம் கண்டிப்பு:

நான் மாணவர்களிடம் எப்போதும் கண்டிப்புடன் நடந்துகொள்வேன்... ஆசிரியராக நான் பணியாற்றிய காலங்களில் பெரும்பாலும் பிரம்பை எடுத்ததில்லை. தலைமையாசிரியரான பிறகு அது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையும் ஏற்பட்டது. ஏனெனில் நம்மூர் மாணவர்கள் அதற்கு மட்டும்தான் கட்டுப்படுவார்கள்...

தலைமையாசிரியரான புதிதில் ஒருமுறை பள்ளி வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், என் கையில் புதிதாகப் பிரம்பு இருப்பதைப் பார்த்து வியப்புடன் கேட்டார். அப்போதுதான் நான் கையில் பிரம்பு வைத்திருப்பதையே உணர்ந்தேன்.

பாரபட்சமின்மை:

பிரம்பைக் கையில் எடுத்துவிட்டால், மாணவன் யார் என்று பார்ப்பதில்லை. தப்பு செய்பவன் நிர்வாகியின் மகனாக இருந்தால் அவனுக்குத்தான் அதிகமாக அடி விழும். அதைப் பார்க்கும் மற்ற மாணவர்கள், நிர்வாகி மகனுக்கே இந்நிலை என்றால் நமக்கு என்ன நிலையோ என்று எண்ணி, சரியாக நடந்துகொள்வார்கள்...

அன்பே உருவான மாணவர்கள்:

படிக்கும் காலத்தில் பல மாணவர்கள், செய்த தவறுகளுக்காக என்னிடம் நிறைய தண்டனை பெற்றிருக்கிறார்கள். ஆனால், நான் கூட அவற்றை மறக்காத இக்காலத்திலும், தண்டனையைப் பெற்ற அம்மாணவர்கள் அதை தங்கள் மனதிலேயே வைக்காமல், எதுவும் நடக்காதது போல என்னிடம் இன்றளவும் பாசமாகப் பழகி வருகின்றனர்.

இதுதான் நம் பள்ளி மாணவர்கள். நடந்தவற்றையெல்லாம் மனதிற்கொள்ளாமல், அனைத்தும் நன்மைக்கே என்று நினைக்கும் இந்த மனநிலை இந்த ஊர் மக்களுக்கே உரிய அழகான பண்பு என்பதை மனமுவந்து கூறுகிறேன்...

இறைவனுக்கு நன்றி:

நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களைப் பற்றியெல்லாம் ஓரளவுக்குக் கூறிவிட்டேன். இவையனைத்திற்கும் மேலாக, எல்லாம்வல்ல அல்லாஹ்வின் கருணையும், கிருபையும் இருந்ததாலேயே என்னால் இயன்றளவு சிறப்புற செயல்பட முடிந்தது. அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!

மாணவர்களின் சாதனைகள்:

நான் தலைமையாசிரியராக இருந்த காலத்தில், இப்பள்ளி மாணவர்கள் பல விதங்களில் சாதனைகளை நிகழ்த்தியுள்ளதை நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 500க்கு 490 மதிப்பெண்கள் என்ற பதிவு...

12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 1200க்கு 1177 என்ற மகத்தான மதிப்பெண்... இந்த மதிப்பெண்தான் இன்றளவும் நம் பள்ளியின் உயர்ந்த மதிப்பெண்ணும், அந்த ஆண்டின் - தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் மதிப்பெண்ணும் ஆகும்.

அதுபோல, விளையாட்டை எடுத்துக் கொண்டால், அண்மையில் நம் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்று சாம்பியனாகி சாதனை நிகழ்த்தியது...

இன்றளவும் நிறைவேறாத ஆசை:

இவையெல்லாம் என் வாழ்நாளில் மறக்க முடியாத சாதனைகள். இன்னொரு ஆசையும் எனக்கிருந்தது... நான் தலைமையாசிரியராக இருக்கும்போதே நம் பள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பிலோ, 12ஆம் வகுப்பிலோ மாநில அளவில் முதலிடங்களைப் பெற்றிட வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

அது என் காலத்தில் நிறைவேறவில்லை என்றாலும், புதிதாக தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அவர்களின் காலத்தில், அது நிகழும் என்று நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். ஆண்டுதோறும் இப்பள்ளி மாணவர்கள் பல சாதனைளைப் படைத்திட நான் பிரார்த்திக்கிறேன்.

புதிய தலைமையாசிரியருக்கு ஒத்துழைப்பு:

இப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும், அலுவலர்களும் எனக்களித்த அதே ஒத்துழைப்பை புதிய தலைமையாசிரியருக்கும் நிறைவாக வழங்கி, நம் பள்ளி இன்னும் பல சாதனைகளைப் புரிந்திட இணைந்து செயலாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மகத்தான பொறுப்பு:

ஆசிரியர் பொறுப்பு என்பது சிரமமானதுதான் என்றாலும் கூட எளிதில் சமாளிக்கக் கூடியது. ஆனால், தலைமையாசிரியர் பொறுப்பு என்பது அவ்வாறல்ல! அது முற்றிலும் மாறுபட்டது.

ஒரு தலைமையாசிரியராக, அரசு, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய மிகவும் மகத்தான பொறுப்பு அது. அப்பொறுப்பை, புதிய தலைமை ஆசிரியர் அவர்கள் இன்னும் சிறப்பாகச் செய்து, நம் பள்ளியை வளர்ச்சிப் பாதையில் உயர உயர கொண்டு செல்ல வேண்டும் என அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்...

அமானிதம் ஒப்படைப்பு:

சில ஆண்டுகளுக்கு முன், துபை காயல் நல மன்றம் சார்பில், சிறந்த பள்ளிக்கான பணப்பரிசாக நம் பள்ளிக்கு ரூபாய் 30 ஆயிரம் கிடைத்தது. அத்தொகையிலிருந்து ஒரு தண்ணீர் சுத்திகரிப்பான் (வாட்டர் ஃபில்டர்) வாங்கி நிறுவப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையை, புதிய தலைமையாசிரியரிடம் செலவுக் கணக்குடன் ஒப்படைத்துள்ளேன்.

பள்ளி நிர்வாகிகள் தலைமையாசிரியருடன் எந்த நேரத்திலும் தொடர்புகொள்வதற்காக உள்ள சிறப்புத் தொலைபேசியையும் புதிய தலைமையாசிரியரிடம் ஒப்படைத்துள்ளேன்.

உள்ளத்தை வைத்துவிட்டு விடைபெறுகிறேன்...

எல்லா வகையிலும் மனநிறைவோடு உங்களிடமிருந்து நான் விடைபெறுகிறேன்... நான் இப்பள்ளி விட்டும் - ஓர் ஆசிரியனாகத்தான் பிரிந்து செல்கிறேனே தவிர, என் உள்ளம் எப்போதும் இப்பள்ளியைச் சுற்றிச் சுற்றி வலம் வந்துகொண்டே இருக்கும்... இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் நான் ஊரிலிருக்கும்போதெல்லாம் வந்து கலந்துகொள்வேன்... பள்ளியைப் பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் கவனித்தவனாக இருப்பேன்...

நெஞ்சார்ந்த நன்றி:

உங்கள் யாவரின் மேலான – ஈடு இணையற்ற ஒத்துழைப்புகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை இந்த நிறைவான நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அருள்கூர்ந்து மன்னியுங்கள்!

கண்ணியத்திற்குரிய இப்பள்ளியின் நிர்வாகிகளே...! ஆசிரியர்களே...! அலுவலர்களே...! என் பணிக்காலத்தில், ஆசிரியராகவோ, தலைமையாசிரியராகவோ - நான் அறிந்தோ, அறியாமலோ - சொல்லாலோ, செயலாலோ உங்களில் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக இந்த நேரத்தில் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். (இவ்வாறு சொன்னதும், தொடர்ந்து உரையாற்ற இயலாமல் சுமார் இரண்டு நிமிடங்கள் விம்மி விம்மி அழுதார்... அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைத்து நிர்வாகிகளும், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் கண்ணீர் மல்க நிசப்தமாக இருந்தனர்.)

(தொடர்ந்து பேசிய அவர்,) உங்களில் யாராவது என்னால் மனம் புண்பட்டிருந்தால், உங்களில் ஒருவனாக - உங்கள் சகோதரனாக என்னைக் கருதி, மன்னிக்க வேண்டும்.

அதுபோல, இங்கே வருகை தந்துள்ள நம் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் அவர்கள் என் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தவர்கள்... அவர்கள் ஓய்வுபெற்றபோது, ஏதோ ஒரு காரணத்தால் என்னை அவர்கள் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டமைக்காக, அவர்களிடமும் இந்நேரத்தில் நேரடியாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, உங்கள் யாவரையும் வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி... அஸ்ஸலாமு அலைக்கும்.


இவ்வாறு, விடைபெறும் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா உரையாற்றினார்.

புதிய தலைமையாசிரியர் உரை:



அடுத்து பேசிய, புதிய தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், “ஒரு குடும்பத்தில் தந்தையோ, மூத்த சகோதரரோ எப்படி தன் மகனையோ - இளைய சகோதரனையோ வழிநடத்துவார்களோ, அப்படித்தான் எங்களை தலைமையாசிரியர் வழிநடத்தினார்... இதில் வருத்தப்படுமளவுக்கு எங்கள் மனதில் எதுவுமில்லை... விடைபெறும் எங்கள் மூத்த சகோதரரின் இனி வருங்காலமும் ஒளிமயமாக அமைந்து, அவர்தம் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்திட ஆசிரியர்களாகிய நாங்கள் யாவரும் வாழ்த்தி துஆ செய்கிறோம்” என்றார்.

நன்றியுரை:

நிறைவாக, பள்ளியின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் டேவிட் செல்லப்பா நன்றி கூறினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-



விடைபெறும் தலைமையாசிரியர் முஹம்மத் ஹனீஃபா ஒரு சிறந்த ஆசிரியர்... ஒரு முன்னுதாரணமான நிர்வாகி... கண்ணால் பார்த்தே யாவரையும் இயக்குவார்... எங்கு கண்காணிப்பு நன்றாக உள்ளதோ, அங்கு வளர்ச்சி நன்றாக இருக்கும். அந்த அடிப்படையில், இவரது தீவிர கண்காணிப்பில் இப்பள்ளி பன்மடங்கு வளர்ந்துள்ளது என்றால் அது மிகையில்லை.

இதற்கெல்லாம் நல்ல ஆளுமைத் திறன் அமைய வேண்டும். அதை இறைவன் வெகு சிலருக்கே கொடுப்பான். அவ்வாறு கொடுக்கப்பட்டவர்தான் இவர்.

இவர் ஆசிரியராக பாடம் நடத்திய காலத்தில், எனக்கும் - இவருக்கும் நல்ல போட்டி இருக்கும். அதையெல்லாம் இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

இவர் தலைமையாசிரியராக இருக்கையில்தான், நம் பள்ளியிலிருந்து ஏராளமான மாணவர்கள் மருத்துவத் துறையில் அடியெடுத்து வைத்து, இன்று அவர்களுள் பலர் பல்துறை மருத்துவர்களாகத் திகழ்கின்றனர்.

இவரது காலத்தில், நல்ல வகுப்பறைகள், தேவையான உபகரணங்கள், சுத்தமான - சுகாதாரமான பள்ளி வளாகம் என பள்ளியின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு, இன்று தன்னிறைவுடன் காட்சியளிக்கிறது.

மாணவர்களின் கல்வி தவிர இதர துறைகளிலும் அவர்கள் மிளிர வேண்டும் என்ற தீராத தாகமுடையவர் இவர். அதனால்தான், இப்பள்ளியிலிருந்து மாணவர்கள் யாரேனும் பேச்சுப்போட்டி போன்ற போட்டிகளுக்காக வெளியிடங்களுக்குச் சென்றாலும், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்வார்.

இவரது தலைமையில், நம் பள்ளி 10ஆம் வகுப்பிலும், 12ஆம் வகுப்பிலும் 95 சதவிகிதத்திற்கும் குறைவாக ஒருபோதும் ரிசல்ட் பெற்றதில்லை.

இவரது தலைமையின் கீழ் இரண்டாண்டுகள் நான் உதவி தலைமையாசிரியராகப் பணியாற்றியதை, நான் பெற்ற பேறாகக் கருதுகிறேன்.

படிப்பில் தரம் குறையும் மாணவர்களை அழைத்து, இவர் வழங்கும் கவுன்சிலிங் தன்னிகரற்றது.

இத்தனை காலம், அரசு - நிர்வாகிகள் - ஆசிரியர்கள் - அலுவலர்கள் - மாணவர்கள் - பெற்றோர் என பலரோடும் காலந்தள்ளி, குடும்பத்திற்கான நேரத்தைக் குறைத்துக்கொண்டார். இனி, அவர் தனது மனைவி - மக்கள் - பேரன், பேத்திகள் என அனைவரோடும், எல்லா வளமும் - நலமும் பெற்று, மகிழ்வுடன் வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டியவனாக, அவரது கல்விச் சேவைக்கு இப்பள்ளியின் அனைத்து அங்கத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து முடிக்கிறேன், நன்றி.


இவ்வாறு, ஆசிரியர் டேவிட் செல்லப்பா நன்றியுரையாற்றினார். அத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் சில முன்னாள் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



குழுப்படம்:

பின்னர், விடைபெறும் தலைமையாசிரியருடன், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.





விருந்துபசரிப்பு:

அதனைத் தொடர்ந்து, அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.



புதிய தலைமையாசிரியர் பொறுப்பேற்பு:

முன்னதாக, இம்மாதம் 01ஆம் தேதியன்று காலை 09.30 மணியளவில், விடைபெறும் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, புதிய தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மதிடம் முறைப்படி பொறுப்புகளைக் கையளித்தார்.

பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் குறித்த விபரக் குறிப்புகள்:

பெயர்:
எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா

பெற்றோர் பெயர்:
எம்.ஏ.கஃபூர் - ரஹீமா

பிறந்த தேதி:
07.03.1955
பூர்விக முகவரி:
பாவநாசபுரம்,
ஆணைக்குளம் அஞ்சல்,
சுரண்டை தாலுகா, நெல்லை மாவட்டம்.
தற்போதைய முகவரி:
காயிதேமில்லத் நகர்,
காயல்பட்டினம்.

கல்வித் தகுதி:
M.Sc., M.Ed.,

பணி விபரங்கள்:
1980ஆம் ஆண்டு எல்.கே.மேனிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

1980 முதல் 1995ஆம் ஆண்டு மே மாதம் வரை ஆசிரியராக 14.5 ஆண்டு காலம் பணியாற்றினார்.

1995ஆம் ஆண்டு ஜூன் முதல் 2013ஆம் ஆண்டு வரை தலைமையாசிரியராக 18 ஆண்டுகாலம் பணியாற்றினார்.

புதிய தலைமையாசிரியர் குறித்த விபரக் குறிப்புகள்:

பெயர்:
எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத்

பெற்றோர் பெயர்:
எம்.ஏ.ஃபாரூக் - சுலைஹா பீவி

பிறந்த தேதி:
03.04.1963

பூர்விக முகவரி:
செல்வமருதூர்,
திசையன்விளை,
நெல்லை மாவட்டம்.

தற்போதைய முகவரி:
காயிதேமில்லத் நகர்,
காயல்பட்டினம்.

கல்வித் தகுதி:
M.Sc., M.Ed., M.Phil.,

பணி விபரங்கள்:

1987ஆம் ஆண்டு படிப்பை நிறைவு செய்தார்.

1987 முதல் 1990 வரை ஆந்திர மாநிலத்திலுள்ள அக்வா கல்சர் துறையில் பணியாற்றினார்.

1991 - 1992ஆம் கல்வியாண்டில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஆணைக்கார் அப்துல் ஷுக்கூர் ஓரியண்டல் மேனிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1992 இறுதியில் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

1995ஆம் ஆண்டு, முதுநிலை பட்டதாரி ஆசிரியராக தரமுயர்வு பெற்றார்.

01.06.2013 அன்று, எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார்.

ஆசிரியராகப் பணியாற்றிய காலங்களில், 15 ஆண்டுகள், பள்ளியின் நாட்டு நலப்பணித் (NSS) திட்ட அலுவலராகப் பணியாற்றினார்.

இதர திறமைகள்:

1984ஆம் ஆண்டு கராத்தே தற்காப்புக் கலையில் கருப்புப் பட்டை (Black Belt) தேர்ச்சி பெற்றார்.

1992ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை, ஆசிரியர் பணிக்கிடையில், காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கராத்தே பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

கள உதவி & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்

படங்களில் உதவி:
S.B.B.புகாரீ
ஆசிரியர்
எல்.கே.மேனிலைப்பள்ளி


[செய்தி திருத்தப்பட்டது @ 23:19 / 07.06.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஹனீஃபா சார் பணி நிறைவு
posted by D.S.ISMAIL (HONGKONG) [07 June 2013]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 27824

இந்த செய்தி சற்று late ஆக வெளியானாலும் latest ஆன விபரங்களுடன் வந்துள்ளது. ஹனீஃபா சாரின் பணி நிறைவு நிகழ்வில் கலந்து கொண்ட உணர்வை அளிக்கிறது.

அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஹனீபா சார் என் வாழ்வில் மறக்கமுடியாத நல்லாசிரியர். படிக்கும் நாட்களில் பார்த்த அதே இளமை இன்னும் தெரிகிறது. David Chellappa சார் சாயல் அப்படியே மாற்றம். சென்ற முறை ஊரில் அவர்களை என்னால் அடையாளம் காண முடியவில்லை. But he recognized me.

தேவையான கண்டிப்பும், நல்ல வழிகாட்டுதலும் ஹனீபா சாரின் தனித்தன்மைகள்.

The way he teaches and the diagrams he draw on the board to illustrate can make even an average student to understand the subject very well even without going thru the textbook.

நாங்கள் பள்ளி படிப்பை முடிக்கும் வரை இவர்கள் தலைமை ஆசிரியராகவில்லை. ஆனால் +2 பயிலும் போது, ஏதாவது விசயத்திற்காக பாசமிக்க எங்கள் தலைமையாசிரியர் திரு. ஞானையா சாரிடம் சென்றால், உங்களுக்கு Headmaster ஹனீபா சார் தான், அவரிடம் போங்க என்று சொல்வார்கள்,

எங்களுக்கு கற்றுத் தந்த அனைத்து ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவைகளை வல்ல இறைவன் ஏற்று நல்ல ஆரோக்கியத்தை அவர்களுக்கு வழங்குவானாக.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப். செய்யது அகமது அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஹனீபா சாரின் சேவை இத்தோடு நிறைவுபெறாமல் இன்னும் பல கல்விப்பணிகள் சமுதாயத்திற்கு வழங்க பிரார்த்தனை செய்கிறேன்.

D.SEYED ISMAIL
(HONGKONG)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சிறந்த மாணவர்களாகச் செதுக்கும் சிற்பி...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [07 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27825

ஒரு மாணவன் சிறந்தவனாக விளங்க அவனைச் செதுக்கும் சிற்பிகள்தாம் ஆசிரியர்கள்! அவர் கைகளில் வைத்திருப்பது பிரம்பல்ல உளி...! சிறுகச் சிறுக செதுக்கி சிறப்பான வடிவத்தை கொடுக்கும் வரை அந்த சிற்பிகள் ஓய்வதில்லை! எனவே,கண்டிப்பும் அதே நேரம் கனிவும் சரி நிகராக இருக்கும் பட்சத்தில் மாணவர்களின் உயர்வுக்காக அவர் செதுக்கும் போது தெறிக்கும் தண்டனைத் துகள்கள் பெரிதாகத் தெரிவதில்லை.

தமது வாழ்க்கையில் ஒரு பெரும் பகுதியை கல்விக்காக அர்ப்பணித்த அந்த கண்டிப்பு மிக்க உள்ளம் சில நிமிடம் கண்கலங்கிய போது என் நெஞ்சமும் கசிந்தது. இதைத்தான் கல்லுக்குள் ஈரம் என்பார்களோ...? ஹனிஃபா சார் அவர்களின் உதவியையும் உயர்ந்த உள்ளத்தையும் எடுத்துரைக்கும் போது விம்மி அழுத ஒரு ஆசிரியர் மேலும் பேச முடியாமல் நா தழு தழுக்க உணர்ச்சி வசப்பட்ட அந்த நிமிடங்கள்....உண்மையில் அவரது உழப்பிற்கு கிடைத்த மணிமகுடமே அன்றி வேறேது? ஓய்வு என்பது பணிக்கே அன்றி சேவைக்கில்லை! தொடரட்டும் உங்கள் சேவை!

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஆசிரியப் பெருந்தகை எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அவர்களுக்கு வாழ்த்துக்கள். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. V r waited for this moment...
posted by Mafasz (Makkah) [07 June 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27826

My hearty congratulations to our biology sir :-) Am wishing you a great success dear sir :-)

- LK'11


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by F Ahamed Mohideen (Chennai) [07 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27828

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)... மரியாதைக்குரிய ஹனீபா சார் அவர்கள் நம் பள்ளிக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்றே சொல்வேன். அருமையான ஆசிரியர்... கண்டிப்பானவர்.. நான் 8ம் வகுப்பு படிக்கும்போது தலைமை ஆசிரியராக ஆனார்கள்.

ஒழுக்கத்தை பற்றி அதிகமதிகம் assembly இல் சொல்லி கொண்டு இருப்பார்கள். சிறந்த ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மற்றும் நிர்வாகிகளின் கீழ் நம் பள்ளியை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள். புதிதாக தலைமை ஏற்று இருக்கும் செய்யத் அஹ்மத் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அருமையான நிறைவுரை.. எனது கண்களும் கசிந்து விட்டது..

அவர்கள் செய்த பணிகளை இறைவன் ஏற்றுக்கொள்வானாக.. அவர்களின் மீதமுள்ள வாழ்க்கை சிறப்பானதாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மறக்கமுடியாத ஆசிரியர்
posted by Dr D Mohamed Kizhar (chennai..) [07 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27829

ஆசிரியர்களிலே அதிகம் வித்தியாசம் ஆனவர்.. நான் 1987 லில் +2 படிக்கும்போது, உயிரியல் பாடத்தில் டியூஷன் எடுங்கள் என்று கெஞ்சியபோது , ‘நான் தான் வகுப்பில் biology எடுக்கிறேனே , பிறகு டியூஷன் எதற்கு’ என்று மறுத்தவர். இன்றும் அதே கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்.

இன்று என் மருமகனுக்கு டியூஷன் எடுக்க கூறிய போதும் அதே மறுப்புதான். தான் வாங்கும் சம்பளத்திற்கு , உரிய அல்லது அதை விட அதிக சேவையை மாணவர்களுக்கும், பள்ளிக்கும் அளித்தவர்..

நாங்கள் படிக்கும் காலங்களில், மற்ற எந்த ஆசியருக்கும் அடங்காத பள்ளி மாணவர்கள் (அவர்கள் அறிவியல் பிரிவை சாராது வேறு பிரிவை சார்ந்தவரானாலும் சரியே) , ஹனிபா சார் என்றல், பயம் கலந்து மரியாதையுடன் அடங்கிபோவர்..

பொதுவாக மிக கண்டிப்பாக இருக்கும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பயந்துதான் இருப்பார்கள். ஆனால் இவருக்கு எல்லா மாணவர்களும், மரியாதையுடன் பயப்படுவார்கள். இப்படி மாணவர்களின் மனோதத்துவத்தை அறிந்து ஒரு நல்லாசிரியராக விளங்கியவர்.

எனக்கு 9 ஆம் வகுப்பு (இயற்பியல், வேதியியல், உயிரியல்) முதல் +2 வரை (விலங்கியல், தாவிரவியல்)பாடம் எடுத்துள்ளார். என்றுமே பாடம் எடுக்கும் போது ,புத்தகத்தை பார்த்தோ அல்லது வேறு குறிப்பு வைத்தோ பாடம் எடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

வகுப்பு எடுக்க, முந்தின நாள் தன்னை தயார் படுத்தி வந்து எடுப்பதாகவும் நான் அறியவில்லை . அந்த அளவுக்கு உயிரியலில் மட்டுமல்ல, 9 ,10 ஆம் வகுப்பு இயற்பியல், வேதியியல் கூட, எந்த பாடத்தையும் எந்த நேரத்தில் சொன்னாலும், தன ஞாபக சக்தியில் இருந்து, விரல் நுனி முனையில் பாடம் எடுக்கும் மெகா திறமை பெற்ற ஒரு ஆசிரிய பெருந்தகை. இப்படி பாடம் எடுக்கும் போது கூட, ஒரு முறை கூட எந்த வித தடங்கள் இருக்காது. அவர் பாடம் எடுக்கும் வியக்கத்தக்க முறை இன்னும் என் கண்முன் பசுமையாக நிற்கிறது.

கல்லூரி காலம் அல்லது பள்ளி நாட்களில் ஆசிரியர் பாடம் எடுக்கும்போது, நோட்ஸ் எடுக்கும் பழக்கம் ஹனிபா சார் வகுப்பில்தான் ஆரம்பித்தது. பலமுறை இவரின் பல திறமைகளை பார்த்து வியந்துள்ளேன்.

என் பள்ளி மற்றும் மருத்துவ கல்லூரி ஆசிரியர்களில், நான் விரல் விட்டு எண்ணி, ரேங்க் கொடுக்கும் ஆசிரியர்களில், ஹனிபா சார் முதல் சில இடங்களில் இருக்கிறார்.

என்னுடைய இந்த வளர்ச்சிக்கு ஹனிபா சார் அவர்களின் பங்கு அதிகமாகவே உண்டு . அதை என்றுமே நான் நன்றியுடன் நினைவு கூறுவேன்.

இன்று கூட , பள்ளி நாட்கள் நினைவில் , ஹனிபா சார் அருகில் ஒன்றாக உட்கார்ந்து பேச ஒரு பயம் என்னை அறியாமல் இருக்கும். சார் ‘உட்காரு கிஸார் ‘ என்றவுடன்தான் இன்றும் உட்காரும் பழக்கம் எனக்கு உள்ளது..

அவர்களின் பணி ஓய்வு வாழ்வை சந்தோஷம் பொங்க வைத்து, ஆரோக்கியமான உடல் நலத்துடன், அதிக நாள் வாழ, அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.. ஆமின்

ஹனிபா சார் அவர்களின் ஆசிரியர் பணியை, நம்ம பள்ளி இன்னும் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த , பள்ளி நிர்வாகத்தை கேட்டுகொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Raiz (Sydney) [08 June 2013]
IP: 149.*.*.* Australia | Comment Reference Number: 27831

"தோன்றின் புகழோடு தோன்றுக "என வாழ்ந்து காட்டும் மனிதர்களில் இவரும் நிச்சயம் ஒருவர்! என்றென்றும் எனது மனதில் நீங்கா இடம் பிடித்த எங்கள் ஆசான் ; வாழ்க வளமுடன்!!

வாசிக்கும் போது எனக்கும் கண்ணீர் முட்டியது! எனக்கு biology subject ல் ஆர்வம் ஏற்பட Hanifa sir ஒரு முக்கிய காரணம்!

சார் your period was a Golden Era! So many achievements! என்னை தாங்கள் மறந்து இருப்பீர்கள்; ஆனால் தங்களை நானும் என்னை போன்றோரும் என்றென்றும் மறக்க மாட்டோம்! அதுதான் ஒரு நல்ல ஆசிரியரின் அழகு மற்றும் வெற்றி!

All the very best for the new Head master!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. கண்கள் பனித்தன!
posted by Firdous (Colombo) [08 June 2013]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 27835

ஹனிபா சாரின் உரையை உரைநடையாக தந்த சகோ. ரபீகிற்கும், நண்பர் மற்றும் ஆசிரியர் புஹாரிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

படிக்கும் போதே கண்கள் பனித்தன! உள்ளம் நெகிழ்ந்து! 10 முடித்து +1 போகும் பொது ஒரு கெத்து கூடவே வரும். அது வெளிக்காட்டும் போதெல்லாம் தனது கண் ஜாடையால் கட்டுக்குள் கொண்டு வருவார். கனிவாக காதை பிடித்தாலே மாணவன் அப்போதே அரையடி உயர்ந்து விடுவான். அவருக்கு பிரம்பு அவசியமில்லாத ஒன்றானது.

உய்ரியலில் உயிரோட்டமாக பாடம் நடத்துவதில் சிறந்தவர். வெறுப்பான பாடத்தை விருப்பமான பாடமாக என்னில் மாற்றியவர். இவரது வகுப்பில் கவனம் சிதறுவது மிக குறைவு. என்றும் நீங்கா இடம் எங்கள் மனதில் எப்போதும்! எல்லாம் வல்ல அல்லாஹ் என்றென்றும் அருள் பாலிப்பானாக!

புதியதாக போருபேற்றிக்கும் அன்பின் ஆசிரியர் செய்யது அகமது சாரிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இன் ஷா அல்லாஹ் சார் கூறியது போல் அவர் காலத்தில் கண்டிடாத சாதனைகளை நீங்கள் நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை என்னில் உள்ளது. வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!

முன்னால் மாணவன் - 1994


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [08 June 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27836

இந்த செய்தியை தினமும் இந்த வலை தளத்தில் எதிர்பார்ப்பேன், வராது, மனதுக்கு சங்கடமாக இருக்கும், இருந்தாலும் இவர்கள் செய்தியை தரமாக செதுக்கி வெளியிடுவார்கள் என்று ஒரு ஆறுதல் கிடைக்கும்.

அது மாதிரியே அழகாக செதுக்கி வெளியிட்டுள்ளார்கள். மௌசை உருட்ட உருட்ட விவரங்கள் வந்துக்கொண்டே இருந்தது, கூடவே சில இடங்களில் என் கண்களில் கண்ணீரும் முட்டிக்கொண்டு வந்தது.

என் மதிப்பிற்குரிய ஆசான் ஹனிபா சார் அவர்களைப்பற்றி பல பக்கங்களுக்கு புகழ்ந்து எழுதலாம்.

என் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள ஆசான்.

கண்களாலே மாணவர்களை கட்டிப்போடும் ஒரு வித்தகர்.

ஒரு ஆசிரியரின் ஆளுமை என்பது பாடம் எடுக்கும் சமயம், அவர் கரும்பலகை பக்கம் திரும்பி இருந்தாலும், அவருக்கு பிறடியிலும் கண்கள் இருக்கின்றன என்பதை மாணவர் உணருவார்கள். அவ்வளவு அமைதியாகவும், பயத்துடனும் படங்களை மாணவர்கள் கவனிப்பார்கள். அந்த ஆளுமை உள்ள ஒரு ஆளுநர், ஹனிபா சார் அவர்கள்.

சிரிப்பு மிகவும் அரிது. செயல்பாடுகள் அபாரம்.

இன்றும். என்ன ஜியா. சுகமா இருக்கின்றாயா? என்று அவர் விசாரிக்கும் போதே, பின்னால் இருந்து சிங்கம் கர்ஜித்தால் எப்படி உடல் நடுங்குமோ, அது மாதிரியான ஒரு உணர்வு எனக்கு உண்டாகும். அம்புட்டு மரியாதை கலந்த பயம்.

நான் மிகவும் அதிஷ்டம் உள்ளவன், காரணம் இதுவரை டியூஷன் என்பதே எடுக்காத இவர்களிடம் நான் டியூஷன் படித்துள்ளேன். ஆச்சரியம் இல்லையா..!

மிகவும் தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் ஒரு நான்கு மாணவர்களுக்கு மட்டும், ஒரே ஒரு முறை டியூஷன் எடுத்துள்ளார்கள். 27 வருடங்களுக்கு முன்பு அவர்கள் எடுத்த பாடம் இன்னும் மனத்திரையில் ஓடுகிறது. அப்படியே எழுதியும் விடுவேன், இன்றும் கூட.

இப்படி... எழுத்திக்கொண்டே போகலாம்.

இது மாதிரியான ஒரு நல்ல வல்லவரை விட்டு விடாதீர்கள். அவர்களை ஏதாவது ஒரு ஸ்தாபனம் உபயோகித்துக்கொண்டால் அந்த ஸ்தாபனம் தான் அதிஷ்ட்த்துக்குள்ளானது.

உங்களின் வாழ்வை வல்ல ரஹ்மான் அழகான வழியில், நிம்மதியுடன், சந்தோசத்துடன் கழிக்க அருள் புரிவானாக.

புதிதாய் தலைமையாசிரியராக பொறுப்பு ஏற்றுள்ள ஆசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். உங்களின் காலமும் பொற்காலமாக அமையவும், சிரமங்கள், சங்கடங்கள் இல்லாத காலமாக அமையவும் பிராத்திக்கின்றேன்.

இன்ஷா அல்லாஹ், மாநிலத்தின் முதல் மாணவன், உங்கள் மாணவன் என்ற செய்தி கூடிய விரைவில் வரும்.

அப்புறம், இந்த நிகழ்ச்சி நடை பெற்ற அந்த வகுப்பறையில் உள்ள கரும் பலகையை நன்றாக அழித்து, நீட் ஆக வைத்து, பணி நிறைவு விழா என்று ஏதாவது நன்றாக எழுதி வைத்து இருக்கலாம் அல்லவா..! இது என்ன சாதாரண நிகழ்வா? என்னமோ போங்க..!!

உங்களின் அன்பு மாணவன்,

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நல்லாசிரியருக்கு நல்வாழ்த்து
posted by W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (சென்னை) [08 June 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 27838

எல்.கே. மேல்நிலை பள்ளியின் மிகச் சிறந்த ஆசிரியர் ஹனீபா சார் அவர்கள் 1994 ம் ஆண்டு +2 வில் எனது வகுப்பு மற்றும் அறிவியல் ஆசிரியராகவும் இருந்த நல்லாசிரியர்.

எவ்வித குறிப்பும் இன்றி மடை திறந்த வெள்ளம் போல் விளக்கப் படங்களுடன் அனைவரும் புரியும் வண்ணம் உயிரியல் பாடங்களை நடத்தும் பாங்கே அலாதியானது. கனிவும் கண்டிப்பும் ஒருங்கே அமையப்பெற்றவர்.

பல வருடங்கள் கழித்து அரசுத்துறை சார்ந்த Attestation காக நான் அவர்களை சந்திக்க சென்ற போது மிகவும் கனிவுடன் வரவேற்று அமர வைத்து அளவளாவி எவ்வித மறுப்புமின்றி உடனடியாக கையொப்பமிட்டு தந்தார்கள். அப்பொழுது ஹனீபா சாரின் கனிவான மறுபக்கத்தை உணர்ந்தேன்.

ஹனீபா சார் அவர்களின் ஓய்வு வாழ்க்கை சந்தோஷமாகவும் நமதூர் மாணவர்களுக்கு பிரயோஜனமாகவும் அமைய மனமுவந்து ‌துஆ செய்கிறோம்.

எல்.கே. பள்ளியின் முன்னாள் மாணவர்கள்
W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (1993-94)
W.S.S. மரைக்கார் (1997-98)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. சில செய்திகளுக்கு கமெண்ட்ஸ் கொடுக்காமல் இருக்க முடியாது - அதில் ஒன்று இச்செய்தி
posted by Abdul Razak (Chennai) [08 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27842

எங்கள் அன்பின் தலைமை ஆசிரியர்

அவர்களின் பணி நிறைவு நம் பள்ளிக்கு ஒரு பேரிழப்பு . 7-12 வரை என்னுடைய தலைமை ஆசிரியர்.

வாரம் ஒரு முறை அவரை அவருடைய அறையில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றவன் நான் ,(எல்லாம் சேட்டைக்ககதான்),

டேய் , ரசாக் அந்த பெரம்ப எடுன்னு என்கிட்டயே எடுதுக்கேட்டு என்னையே அடிப்பது கொஞ்சம் ஓவர் -ஆக இருந்தாலும் அவர் மேல் எந்த கோபமும் வந்ததில்லை அவர் மேலுள்ள மரியாதை ஒரு போதும் குறைந்ததில்லை ,

ஒரு முறை ஒரு ஆசிரியரை நான் சேட்டை செய்த போது என்னை அழைத்து , அவரை நீ இப்படி அழைத்தது அவரை குறைவாக அழைக்கவில்லை , அவரை அவ்வாறு படைத்தது இறைவன் , நீ இப்போது குறையாக அழைத்தது இறைவனை என்று சொன்ன நாள் முதல் அவர் மேலுள்ள மரியாதை இன்னும் கூடியது ..

இப்போது இந்த செய்தியில் , அனைத்து ஆசிரியர்களிடமும் மன்னிப்பு கேட்டது மிகவும் உருக்கமானது ,நபி (ஸல் ) அவர்கள் தங்களுடைய இறுதி காலத்தில் தங்கள் சகாபாக்களிடம் தாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை மன்னிக்கும் படி கோரிய நபியவர்களின் வழிமுறையை அவர் பின் பற்றுவதையும் நம்மால் உணர முடிகிறது

கிஸார் டாக்டர் அவர்கள் கூறியது போல் அவர்களை ஒரு கவுரவ பொறுப்பில் (ஆலோசனைக்குழு போன்ற) வைப்பது நம் பள்ளியின் முன்னேற்றதிட்கு மிகவும் உதவியாக இருக்கும் .. எங்கள் ஆசிரியருக்கு அல்லாஹ் சரீர சுகத்தையும் நல்ல ஆற்றலையும் கொடுத்து ஈருலகிலும் வெற்றி அடையசெய்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Mr.Perfect
posted by Ahmed Munawer (Dubai) [08 June 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27844

Many thanks and salute to our Hanifa Sir for his excelent contribution to our kayalpatnam and Elkay School. May Allah reward him good health,peace and everything for ever. Ameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [08 June 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27847

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொது அறிவியல் பாடத்தில் இயற்பியல் திரு.சிதம்பரம் சார் ( சில வருடங்களுக்கு முன் பணி நீங்கி விட்டார்கள் ) வேதியலில் கோவில்முத்து சார் ( ஓய்வு பெற்றுவிட்டார்கள் ) உயிரியலில் ஹனீபா சார் இம்மூவரும் படம் நடத்துவது அலாதியான பிரியமாக இருக்கும். எல்லாவற்றிலும் மேலாக ஹனிபா சார் அவர்கள் பாடம் நடத்துவது பசுமரத்தாணி போல் பதியும்.

அதன் பின்னர் தலைமை யாசிரியராக பணியில் இருக்கும் காலமெல்லாம் நான் சில மாணவர்களுக்காக சிபாரிசு செய்ய சென்ற நேரத்தில் எல்லாம் நுஸ்கி நீ படிக்கும் காலம் போன்று ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள மாணவர்கள் மரியாதை கொடுபதில்லை. ஒழுக்கம் குறைந்து விட்டது என்று ஆதங்கம் படுவார்கள்.

ஊரில் இருக்கும் பொது படிக்கும் பள்ளிக்கும் அவ்வபோது வந்து செல் என்று அழைப்பார்கள். மாணவர்களின் ஒழுக்கத்திலும், படிப்பிலும் உடனுக்குடன் கவனம் செலுத்துவார்கள். அப்படி பட்ட நல்ல ஒரு பண்பாளர். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் வாழ்வை நீளமாகி,வாழும் காலமெல்லாம் நோய் நொடியின்றி எல்லா நலமும் வளமும் ஒருங்கே பெற்று திகழ அருள் புரிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by fareed (dubai) [08 June 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27851

Salam

Many thanks and salute to our Hanifa Sir for his excellent contribution to our kayalpatnam community and L.K.School.

May Allah reward him good health,peace and everything for ever. Ameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Shaik Abdul Cader.S.M (germany) [09 June 2013]
IP: 79.*.*.* Germany | Comment Reference Number: 27853

haneefa sir... one of the best teacher of my life... i still remember the first day i met him when i went with my parents to join in my 6th standard... he helped me in lot of ways not only in teaching me...

Your foot steps are still there to speak about you for more decades..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Hanifa Sir-Gem of a person
posted by K.M. Seyed Ahamed (Hong Kong S.A.R.) [10 June 2013]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 27871

Hanifa Sir was one of the highly respected and dedicated teachers of our esteemed Elkay School. Though I studied in Elkay School for only 3 years (1985-88), the image and impact that Haneefa Sir had created was terrific. I was always an obedient and soft natured student, but still left with some kind of fear and respect when your name is pronounced Sir. May Allah give you longlife and help you to lead a happy & peaceful retired life with your family. Aameen! We wish you to actively involved in school's welfare and provide your valuable advises for the betterment of school in various fields even after your retirement.

Best regards,
K.M. Seyed Ahamed


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Abdul Majeed (Bangalore) [10 June 2013]
IP: 65.*.*.* United States | Comment Reference Number: 27873

அது ஒரு காலம் !.

திருமண விருந்து மற்றும் பல நிகழ்சிகள் பள்ளி வேலை நாட்களில் நடக்கும். மாணவர்களாய் இருந்த நாங்களும் பெயரை மட்டும் லீடரிடம் எழுதி கொடுத்து விட்டு 11 மணியில் இருந்து 3 மணி வரை classai கட் அடிப்போம் . ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு தடவை இது போல நடக்கும் .முன்னர் இருந்த ஆசிரியர் நிர்வாகிகளுக்கு இது தெரிந்த போதும் சமுக வழக்கம் , மாணவர் வீட்டு நிலை, விருந்தை மிஸ் பண்ண முடியாத மாணவர்களின் மனவோட்டம் போன்ற பல காரணங்களை நினைத்து ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டார்கள்.

ஹனிபா சார் தலைமை ஏற்ற பின்பு இவ்வாறு மாணவர்கள் எஸ்கேப் ஆவதற்கு தடை போட்டது மட்டும் அல்லாமல் , திருமண நிகழ்சிகளை விடுமுறை நாட்களில் நடத்தும்படி நிர்வாக பெரியோர்களிடமும் , பெற்றோர்களில்டமும் கறாராக கூறி மாணவர்களை அனுப்ப கண்டிப்பாக மறுத்து விட்டார்கள்.

இன்று எல்லா திருமண விருந்தும் வார விடுமுறைகழிலோ அல்லது விடுமுறை திருமண seasongalilo தான் ஊரில் நடக்கிறது .

மாணவர்களை மட்டுமல்ல , ஒரு சமுதாயத்தையே கல்வியின் அவசியத்தை உணர்த்தி மாற்றிய பெருமை சார் அவர்களை சாரும் .

தினமும் இறை வழிபாடோடு இஸ்லாமிய, சமுக நன்னெறி கருத்துகளை மாணவர்கள் மத்தியில் வாசிக்க செய்து ஒழுக்கத்தை விதைத்தடில் ஆகட்டும் , பல்வேறு எக்ஸ்ட்ரா curricular activitiesku மாணவர்களை அனுப்பி பள்ளி பருவத்திலேயே போட்டி மனப்பான்மையை தூண்டியதில் ஆகட்டும் , தவறு செய்த மாணவர்களை தவறை உணர்த்தி வருந்த செய்து பின்னர் தண்டனை கொடுததகடும். சிறந்த மாணவர்களை பாராட்டி ஊக்கு விப்பதிலாகட்டும் எல்லாவற்றிலும் சார் அவர்கள் ஒரு முன்னோடியோக இருந்தார்கள் .

ஒரு சமயம் சார் அவர்களின் மகன் படிக்கும் வகுப்பில் ஒரு மாணவன் குறும்பு செய்து விட்டான். தலைமை ஆசிரியரிடம் கம்ப்ளைன்ட் சென்று அவர் வந்து யார் அந்த மாணவன் என்று மற்றவர்களிடம் கேட்ட பொழுது யாரும் வாய் திறக்கவில்லை. நீங்கள் சொல்ல வில்லை என்றால் எல்லோர்க்கும் தண்டனை என்று அறிவித்து எல்லோருக்கு தண்டனை தந்தார்கள் .தன் மகன் , நிர்வாகி மகன் என்று பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் சமமாக கருதிய ஆசிரியரையும், நண்பனை காட்டி கொடுக்கமால் தண்டனை பெற்ற அவரது மகனையும் வியந்து பார்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லா சார் அவர்களின் ஈருலக வாழ்கையையும் சிறப்பாக ஆக்கி வைப்பானாக.

புதிதாக பொறுபேற்றுள்ள தலைமை ஆசிரியர் சிறப்பாக செயல்பட்டு பள்ளியின் பெருமையை நாடறிய செய்ய அருள் புரிவானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை
posted by mackie noohuthambi (colombo) [10 June 2013]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 27875

உழைப்பையே ஓய்வாக நினைப்பவர்களுக்கு களைப்பே ஏற்படுவதில்லை அவர் ஒய்வு பெறுவது என்பது வெறும் சம்பிரதாய நிகழ்வுதான். இங்கு பணியை முடித்துக் கொண்டு வேறு இடத்தில பணியை துவக்கி இருப்பார்கள். அவருடைய பணியை தொடர வாய்ப்பு கொடுப்பவர்கள் ஒரு நல்லாசிரியரை தங்கள் கல்வி நிறுவனத்துக்கு தேர்ந்து எடுத்துக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை.

ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள், அவரை தங்கள் தலைமை ஆசிரியராக பெற்றவர்கள், இனி பெற போகிறவர்கள் எல்லோருக்கும் எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved