சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 57வது செயற்குழு சென்ற டிசம்பர் 24 அன்று சகோ.எம்.என். முஹம்மது ஷமீம் இல்லத்தில் நடந்தேறியது. சகோ.குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன் தலைமையில் சகோ.எம்.ஐ.அப்துல் பாஸித் இறை மறை ஓத கூட்டம் ஆரம்பமானது.
![](/newsimg/1120114027.jpg)
வரவேற்றார்:
சகோ. எஸ்.எஸ்.ஜாஃபார் ஸாதிக் அனைவரையும் வரவேற்றதோடு அண்மையில் தாயகம் சென்று வந்த இவர் நமதூரின் தற்போதைய நிலைமை மற்றும் பயனாளிகள் குறித்தும் செய்திகளை பகிர்ந்து கொண்டார்.
![](/newsimg/1120114086.jpg)
நிதி நிலை:
நாம் கல்விக்கு, மருத்துவத்திற்கு மற்றும் சிறு தொழிலுக்கு உதவிய தொகை மற்றும் இருப்பு போன்ற நிதி விபரங்களை சகோ. எம்.எம்.எஸ்.ஷெய்க் அப்துல் காதிர் விவரித்தார்.
மன்ற செயல்பாடுகள்:
நமது மன்றம் இதுவரை அளித்த உதவிகள், முந்தய தீர்மானங்கள் மற்றும் மன்ற செயல்பாடுகளை அவருக்கே உரிய நடையில் அழகாக எடுத்துரைத்தார் செயலர் சட்னி எஸ்.ஏ.செய்யித் மீரான்.
![](/newsimg/1120114058.jpg)
தவறாது பங்கேற்றல்:
செயலர் எம்.ஏ. செய்யித் இப்ராஹீம் பேசுகையில்; "முக்கிய முடிவுகள் செயற்குழுவில்தான் எடுக்கப்படுகிறது. ஆகவே அனைவரும் இதில் தவறாது பங்கேற்று நல்ல பல கருத்துக்களை தருமாறு" செயற்குழு உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார். நமதூரில் புற்று நோயின் தாக்கம் பரவலாகி வரும் நிலை குறித்து கவலை தெரிவிக்கும் நம் மன்றம், அதை அழிக்க களமிறங்கும் அனைவரோடும் தோள் நின்று உதவிகள் புரியும் என்றும் அறிவித்தார்.
மேலும்; மன்ற ஆலோசகர் சகோ. எஸ்.ஏ.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் அவர்கள் தலைமையில் சென்ற 16 ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மன்றத் தலைவர், செயலர் மற்றும் மருத்துவ ஆலோசகர் ஆகியோர் கலந்து ஊர் நலன் குறித்த பல்வேறு செய்திகள் பரிமாறிக்கொண்ட தையும், ‘ஆரோக்கியத்திற்கென்றதொரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மருத்துவ பணிகளை செய்யலாம்’ என்ற மன்ற ஆலோசகரின் கோரிக்கையையும், அங்கு பகிரப்பட்ட இதர செய்திகளையும் சமர்பித்தார்
மின்னஞ்சல்கள்:
மின்னஞ்சல் மூலம் நம் மன்றம் பெற்ற இரு வேறு செய்திகளை (1. புற்று நோய் நிஜம் அறியும் குழு - CFFC -, 2 . தொலை நோக்கு பார்வையில் காயல்பட்டினம் செயல் திட்ட முன் வடிவு) தலைவர் குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன் வாசித்தார். அது குறித்து உறுப்பினர்கள் உயரிய ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுகொண்டார்.
அன்பளிப்பு:
இக்ரஃ கல்வி அமைப்பின் வேண்டுகோளை ஏற்று அதன் அலுவலக பணிக்காக 5 நாற்காலிகள் வகைக்கு ரூபாய் 2,000 நம் மன்றம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விவாதம் கலந்த ஆலோசனைகள்:
நமதூரில் புற்று நோய் பரவ ஊரின் அருகாமையில் இருக்கும் ஒரு இரசாயன ஆலைதான் (DCW) காரணமென்றும், அதை உறுதிப்படுத்தும் பல செய்திகள் நம் காயல் இணைய தளங்கள் மற்றும் நாளேடுகளில் வெளியானதையும் பல சகோதரர்கள் மேற்கோள் காட்டினர். அது மட்டுமல்லாது; நமதூரின் சில உணவு பழக்க வழக்கங்களும் அந்நோய்க்கு காரணமாகலாம் என்பதையும் நாம் மறுக்க முடியாது என்றும், இதுவரை நமதூரில் அந்நோயால் பாதிக்கபட்டோரை சந்தித்து அவர்களது உணவு மற்ற தொடர் பழக்கங்களை குறித்தறிய வேண்டுமென்றும், மேலும்; நமது சுற்று வட்டார ஊர்களிலும் அந்த இரசாயன ஆலையின் பாதிப்பினால் அந்நோய் ஏற்பட்டுள்ளதா என்பதையும் நாம் கண்டறியவேண்டும் என்றும், கைப்பேசி கோபுரம் வெளிப்படுத்தும் கதிர் வீச்சினாலும் அந்நோய் வரும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும், நாம் உபயோகப்படுத்தும் நுண்ணிய சூட்டடுப்பும் (Micro Oven) அந்நோய்க்கு ஒரு காரணமென்றும், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை மற்றும் புகை பிடித்தல் போன்ற காரணங்களாலும் அந்நோய் அதிகமாக ஆட்கொள்கிறது என்றும், நாம் சுவாசிக்கும் காற்று, நீர் கூட அந்நோய் பரவ காரணமாக இருக்கலாமோ? என்றும் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டது.
மேலும், புகை (இலை) இல்லா காயல் (Tobacco Free Kayal ) உருவாவது எதிர்கால சாத்தியமே. அதற்காக நாம் இப்போதே அடிகோல வேண்டுமென்றும், எச்சிரமமெடுத்தேனும் இக்கொடிய நோயின் ஆழிய தாக்கத்தை அடியோடு அழிக்க பெரு முயற்சிகொண்டு சாதுர்யமாக செயல்படவேண்டும் என்றும் நம் வருங்கால சந்ததியினருக்கு சுகாதாரமான ஆரோக்கிய காயலை அன்பளிப்பது நமது கடமை என்பதை உணர்ந்து இதை எதிர்கொள்வோம் என்றும் சகோதரர்கள் வேண்டிக்கொண்டனர். கல்வி தாகம் தணிக்க “இக்ரஃ” உள்ளது போல் மருத்துவ பணிக்கும் தனி அமைப்பு மூலம் செயல்படுவதே சாலச்சிறந்தது என்றும் கேட்டுக்கொண்டனர். இந்த விவாதம் கலந்த ஆலோசனையில் அனைத்து உறுப்பினர்களும் பங்கு கொண்டு சிறப்பான கருத்துக்களையும் அறிய பல ஆலோசனைகளையும் அருமையாக முன் வைத்தனர்.
உதவிகள்:
மருத்துவ உதவி வேண்டி வந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அனைத்துக்கும் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. தொண்டை புற்று நோய், மார்பக புற்று நோய் மற்றும் இருதய அடைப்பு நோய்க்கு அதிகபட்ச உதவியும், நுரை ஈரல், மற்றும் இரண்டு இருதய சுகவீனர்களின் மருத்துவ செலவீனங்களுக்கு உதவியும் என்று முறையே ஆறு நபர்களுக்கு உதவிகள் வழங்கி அவர்களின் சரீர சுகத்திற்காக பிரார்த்திக்கப்பட்டது.
![](/newsimg/1120114108.jpg)
தீர்மானங்கள்:
• CFFC என்ற புற்று நோய் நிஜம் அறியும் குழுவுக்கு நாம் ஆதரவும், ஒத்துழைப்பும் நல்குவதென்றும் அதன் பரிசோதனை வகைக்காக நம் மன்றம் மூலம் ரூபாய் 10,000 வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
• CFFC ன் ஆரம்பப்பணிகள் DCW வோடு நின்று விடாமல் நமதூரின் உணவு, சுற்றுச்சூழல், சுகாதாரம் போன்ற துறைகளையும் ஆய்வில் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும், இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் உணவு மற்றும் ஏனைய பழக்கங்களை பதிவு செய்து ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அதற்காக CANCER REGISTERYயை அமைக்க வேண்டுமென்றும் இம்மன்றம் வலியுறுத்துகிறது.
• புற்று நோயை அறவே ஒழிக்கும் அனைத்து வழிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்த ஜித்தா காயல் நல மன்றம் ஆயத்தமாக உள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டது.
• நோயற்ற வாழ்வை நமதூரில் நிலைகொள்ளத்துடிக்கும் நாம் அதற்காக ஒரு தனி அமைப்பை நிறுவி (ஆரோக்கியத்திற்கான / சுகாதாரத்திற்கான / மருத்துவத்திற்கான அமைப்பு) அதன் மூலம் அனைத்து மருத்துவ சேவைகளையும் செய்யலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
• “தொலை நோக்கு பார்வையில் காயல்பட்டினம் செயல் திட்ட முன் வடிவு” என்ற நமதூரின் எதிர்கால நன்மயமாக்களை
நம் மன்றம் மனதார வரவேற்ப்பதோடு, அதன் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு நமது ஆதரவையும் தெரிவிக்கிறது.
• 9 ஆம் ஆண்டு துவக்கம், 5 வது அமர்வின் புதிய நிர்வாகிகள் தெரிவு மற்றும் 24 வது பொதுக்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வரும் பிப். 04. 2011 அன்று நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது.
செயற்குழு கூட்டம் மற்றும் இரவு உணவு ஏற்பாடுகளை சகோதரர்கள். எஸ்.எஸ். ஜாஃபர் ஸாதிக், எம்.எஸ்.எல். முஹம்மத் ஆதம் ஆகியோர் அனுசரணையுடன் சகோதரர் எம்.என்.முஹம்மது ஷமீம் சிறப்பாக செய்திருந்தார்.
![](/newsimg/1120114130.jpg)
![](/newsimg/1120114153.jpg)
![](/newsimg/1120114179.jpg)
சகோ. சாளையார் புகாரி ஸாலிஹ் நன்றி கூற, சகோ. எம்.எஸ்.எல். முஹம்மத் ஆதம் பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
தகவல்:
அரபி ஷுஅய்ப், ஜித்தா.
நிழற்படங்கள்:
முஹம்மத் ஸாலிஹ், மக்கா.
|