Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:49:15 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8056
#KOTW8056
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 23, 2012
திருவிதாங்கோடு நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் காயல்பட்டினம் இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்பு! சர்ச்சைக்குரிய புதினமெழுதிய எழுத்தாளரின் கருத்து மறுதலிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4259 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“கருப்பாயி என்ற நூர்ஜஹான்” என்ற தலைப்பில், சர்ச்சைக்குரிய புதினமொன்றை (நாவல்) எழுதிய எழுத்தாளர் மேடையில் தெரிவித்த கருத்துக்களுக்கு, காயல்பட்டினத்தைச் சார்ந்த இலக்கிய ஆர்வலர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். விபரம் பின்வருமாறு:- குமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி கேளரங்கில், இம்மாதம் 10 மற்றும் 11ஆம்தேதிகளில், “சமகால இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. பல்வேறு எழுத்தாளர்கள் தம் படைப்புகள் குறித்து விளக்கிப் பேசினர்.

காயல்பட்டினத்தைச் சார்ந்த இலக்கிய ஆர்வலர்களும், எழுத்தாளர்களுமான கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப், சாளை பஷீர், டி.வி.எஸ்.ஜக்கரிய்யா, ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இக்கருத்தரங்கில் பார்வையாளர்கள் வரிசையில் வீற்றிருந்தனர்.

“கருப்பாயி என்ற நூர்ஜஹான்” என்ற தலைப்பில் புதினமெழுதிய - நெல்லை மாவட்டம் கலங்காதகண்டி கிராமத்தைச் சேர்ந்த அன்வர் பாலசிங்கம், இரண்டாம் நாள் நடைபெற்ற இக்கருத்தரங்கின் ஓரமர்வில் சிறப்பழைப்பாளராக கலந்துகொண்டு, தனது புதினம் குறித்து பின்வருமாறு விளக்கிப் பேசினார்:-



புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரது ஆக்கங்களை படித்துணர்ந்தவர்கள் மட்டுமே எழுத்துத் துறையில் தம் படைப்புகளைத் தருகின்றனர்... ஆனால் நான் எந்த எழுத்தாளரின் புத்தகத்தையும் படித்ததில்லை...

“கருப்பாயி என்ற நூர்ஜஹான்” என்ற தலைப்பிலான எனது இந்த புதினம் ஒரு கதையல்ல! மாறாக, பல்வேறு மதங்களிலிருந்து இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவும் கிராமப்புற - தாழ்த்தப்பட்ட மக்களின் மனக்குமுறல்களின் பிரதிபலிப்பே இந்த நூல்...

நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து 1993ஆம் ஆண்டு இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியவன்... அன்று நான் என் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொண்டபோது என்னை அள்ளியணைத்த கைகள், பிற்காலத்திலும் தொடர்ந்து என்னை அரவணைத்திருந்தால் இந்த நூலே வந்திருக்காது... கசப்பான எனது அனுபவங்களை தகவல்களாக உள்ளடக்கியே இந்த புதினம் உள்ளது...

பூர்விக முஸ்லிம்களாகிய உங்களில் பலர் ஒரு இருநூறு வருடங்களுக்கு முன் இஸ்லாமைத் தழுவிய சமூகமாக இருக்கலாம்... நான் ஒரு இருபது வருடங்களுக்கு முன் இஸ்லாமைத் தழுவியவன்... என் மகள் சுமய்யாவுக்கு பழைய ஜாதி அடையாளம் எதுவுமே இருக்காது...

இஸ்லாமைத் தழுவிய காரணத்தால் நான் என் குடும்பத்தில் சந்தித்த உறவிழப்புகள் ஏராளம்... பூர்விக முஸ்லிம்கள் புதியோருடன் திருமண ஒப்பந்தங்கள் செய்துகொள்வதில்லை... வேறு சமூகமாகவே எங்களை நடத்தினர்... அந்த தாங்க முடியாத தருணங்களில் என்னை அரவணைத்திருக்க வேண்டிய முஸ்லிம் சமூகம் அதை சரிவர செய்யத் தவறியதன் விளைவே இந்த புதினம் படைக்கப்பட்டது...


இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் அடுத்த பேச்சாளர் பேச அழைக்கப்பட்டார். அப்போது, காயல்பட்டினத்தைச் சார்ந்த குழுவினரும், இதர இலக்கிய ஆர்வலர்கள் சிலரும், ஒவ்வொரு பேச்சாளரும் பேசி முடித்த பின்னர் கேள்வி நேரம் வழங்கப்படும்போது, இந்த பேச்சாளர் பேசி முடித்த பின்னர் மட்டும் கேள்வி நேரம் அளிக்கப்படாதது கருத்தரங்க ஏற்பாட்டாளர்களின் ஒருசார்பு மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

அவர்களின் தீவிர ஆட்சேபணையைத் தொடர்ந்து, எழுத்தாளர் அன்வர் பாலசிங்கத்தின் உரை குறித்து கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. எழுத்தாளர் சாளை பஷீர் மேடையேறியும், மற்றவர்கள் மேடைக்கு முன்னின்றவாறும் தமது மறுப்பை பின்வருமாறு தெரிவித்தனர்:-



இந்த புதினத்தில் சமூகத்தை குற்றஞ்சாட்டிய அன்வர் பாலசிங்கம், மேடையில் எச்.ஜி.ரசூல், களந்தை பீர் முஹம்மத் ஆகிய எழுத்தாளர்களையும் குற்றஞ்சாட்டினார்... அதற்கு அந்த எழுத்தாளர்கள்தான் பதிலளிக்க வேண்டும்... நான் முதற்குற்றச்சாட்டுக்கு மட்டும் விளக்கம் தருகிறேன்...

இந்தியாவில் முஸ்லிம்களிடையே ஜாதி மனப்பான்மை எங்கிருந்து புகுந்தது என்பதை நாம் வரலாற்று ரீதியாகப் பார்க்க வேண்டும்... சூஃபீ ஞானிகள், சமயப் பரப்புரையாளர்கள், வணிகர்கள், ஆட்சியாளர்கள் ஆகியோரால் இந்தியாவிற்குள் இஸ்லாம் பரவியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இதில் சூஃபீ ஞானிகளின் பங்களிப்பு அதிகம். அவர்கள் இந்திய கிராமங்களுக்குள் வரும்போது ஏகத்துவம், சமத்துவம் என்ற செய்திகளுடன் வந்தனர்... இங்கு ஏற்கனவே சைவ - வைணவ மோதல்களில் சலிப்புற்றிருந்த மக்களை ஏக இறைக்கோட்பாடு பெரிதும் கவர்ந்தது. வந்தவர்கள், சமத்துவத்தையும் நடைமுறைப்படுத்திக் காட்டியதால், அங்கிருந்த மக்கள் கூட்டங்கூட்டமாக இஸ்லாமைத் தழுவினர். அவர்களுக்கு - பசித்த வயிற்றுக்கு உணவும், நோயுற்ற உடலுக்கும், மனதுக்கும் மருந்திட்டனர் அந்த பரப்புரையாளர்கள்.

கிறிஸ்துவ மிஷினரிகளைப் போல தொடர் வேலைகள் எதுவும் நடைபெறவில்லை... சூஃபீ ஞானிகள் தமது பணி முடிந்தவுடன் அடுத்தடுத்த கிராமங்களுக்குச் சென்றுவிடுவர்... இதனால், ஏற்கனவே சாதீய அடையாளங்களுடன் இந்து மதத்திற்குள் வாழ்ந்துகொண்டிருந்த அம்மக்கள், இஸ்லாமைத் தழுவிய பிறகும் - பரப்புரையாளர்களின் தொடர்நடவடிக்கைகள் இல்லாமற்போனதன் விளைவாக தமது பழைய சாதீய அடையாளங்களுடனேயே வாழத்துவங்கினர். அதன் விளைவுதான் இன்று நாம் காணும் சாதீய மனப்போக்கு ஆகும்.


இவ்வாறு சாளை பஷீர் விளக்கமளித்தார்.

எழுத்தாளர் அன்வர் பாலசிங்கம் ஆதங்கப்படுவது போல இஸ்லாமைத் தழுவிய மக்களை பூர்விக முஸ்லிம்கள் அரவணைக்கத் தவறியிருந்தால் அது மாபெரும் குற்றம் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை...

எழுத்தாளர் சொல்லும் நிகழ்வுகள் அவர் பகுதியில் நடந்திருக்கலாம்... ஆனால் அதுவே எல்லாப்பகுதியிலும் நடப்பதாகக் கருதிவிட இந்த புதினம் வாய்ப்பளிக்குமானால், அது குற்றமே! காரணம், இன்று இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவும் மக்களை முஸ்லிம்கள் பெரும்பாலும் அரவணைப்பதில் குறை வைப்பதில்லை...

இஸ்லாம் ஒரு மதமல்ல! மாறாக வாழ்க்கை நெறி!! இந்த மார்க்கத்தில் இணைந்துதான் ஆக வேண்டுமென யாருக்கும் எந்த நிர்ப்பந்தமும் இல்லை... விரும்புவோர் ஏற்கலாம்... விரும்புவோர் மறுக்கலாம்... ஆனால், ஏற்றவர்கள் இஸ்லாம் கூறிய முறைப்படிதான் வாழ வேண்டும்...

பல அம்சங்களை உட்பொதிந்த இந்த வாழ்க்கை நெறியில் அவரவருக்குப் பிடித்தமான ஓரம்சத்திற்காகவோ, பல அம்சங்களுக்காகவோ இந்த மார்க்கத்தைத் தழுவுகின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கு இறைவன் இடும் கட்டளை, இந்த மார்க்கத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் என்பதாகும்.

திருமண ஒப்பந்தங்களைப் பொருத்த வரை, அது அவரவர் மனங்களைப் பொருத்ததே! இதில் யாரையும் குற்றங்கூற இயலாது... எழுத்தாளர் எதிர்பார்த்தபடி அவர் புறத்தில் வேண்டுமானால் இதுபோன்ற திருமணங்கள் நடைபெறாதிருந்திருக்கலாம்... ஆனால் மொத்தத்தில் பல இடங்களில் அதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்தே வருகிறது... நாங்களே கூட அதுபோன்ற பல திருமணங்களை நடத்தியும், பல திருமணங்களில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டும் இருந்திருக்கிறோம்...

எழுத்தாளர் சொல்வது போல இருநூறு வருடத்திற்கு முன்பு வந்தவர்களான எங்களுக்கு இன்று ஜாதி அடையாளமில்லை... அவர் மகள் சுமய்யாவுக்கும் அந்த அடையாளம் பெரும்பாலும் இருக்கப்போவதில்லை... இவையனைத்தும் ஒரு தலைமுறை மாற்றமே! எடுத்த எடுப்பிலேயே எல்லோரது மனநிலையும் மாற வேண்டும் என்பது பொருளற்ற எதிர்பார்ப்பு!

மொத்தத்தில் எழுத்தாளர் சொல்வது போல் குற்றங்குறைகள் இருப்பின் அது அந்தந்த பகுதி மக்களின் குறை மட்டுமே! அது இஸ்லாமின் குறையோ, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் குறையோ அல்ல!


இவ்வாறு காயல்பட்டினத்தைச் சார்ந்த இலக்கிய ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.



பிறகு, அவர்கள் எழுத்தாளர் அன்வர் பாலசிங்கத்தை தனிப்பட்ட முறையிலும் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர். காயல்பட்டினத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்து விடைபெற்றனர்.

இச்சந்திப்பின்போது, தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் இழிவை எதிர்த்து இஸ்லாமைத் தழுவிய கொடிக்கால் செல்லப்பா என்ற ஷேக் அப்துல்லாஹ் உடனிருந்தார்.

[கூடுதல் வாசகங்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 14:51/23.02.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:திருவிதாங்கோடு நகரில் நடை...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [23 February 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 17128

தம்பி ஸாலிஹ் மிக நல்ல முறையில் இந்த கருத்தரங்க விவாதங்களை பதிவு செய்து இருக்கிறார். அவர் பின் குறிப்பாக கொடுத்திருக்கும் கருத்துதான் நமது கருத்தும்.

"எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜாவின் நாவல்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் "எனபது குறித்து பேச வந்த உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி பேராசிரியர் முகமது ரபீக் பேசும் போது இந்துக்களின் மாட்டிறைச்சி வெறுப்பு குறித்தும் முஸ்லிம்களின் பன்றியிறைச்சி வெறுப்பு குறித்தும் சில தகல்வல்களை சொன்னார்.

அதாவது மாடுகள் விவசாய பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருந்ததால் அவைகளை தின்னும் போது அவைகளின் இருப்பு குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் எனவும் எனவேதான் சமய நோக்கில் மாட்டிறைச்சி உண்ணுவது தடை செய்யபட்டதாகவும் அதைப்போலவே அக்கால அரபு நிலபரப்பில் விவசாய பொருளாதாரத்தின் அடிப்படையாக பன்றிகள் இருந்ததால் அவைகளை உண்ணவும் தடை செய்யபட்டிருக்கலாம் எனவும் ஒரு கருத்தை அவர் முன் வைத்தார்.

அவர் பேசி முடித்த பிறகு கேள்விகள் இருப்பின் கேட்கலாம் என கருத்தரங்க ஏற்ப்பாட்டாளர்கள் ஒரு வாய்ப்பு தந்ததால் அதை மறுத்து நான் பேசினேன்.

"மாடுகளை பொறுத்து பேராசிரியர் சொன்னது உண்மையாக இருக்கலாம். ஆனால் அன்றைய அரபகம் குறித்து பேராசிரியர் எந்த அடிப்படையில் பேசினார் என்று தெரியவில்லை. அரபு சமூகம் வணிக சமூகம். விவசாய சமூகமில்லை. அங்கு விவசாயமும் இல்லை. அப்படியே இருந்தாலும் அங்கெ நிலத்தை உழ பன்றிகளும் இல்லை. இது தவறான கருத்து .."என்று பேசினேன்.

அதற்க்கு பேராசிரியர் விளக்கமளித்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:திருவிதாங்கோடு நகரில் நடை...
posted by seyed mohamed (ksa) [23 February 2012]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17129

சகோ. சாளை பஷீர் அவர்களின் விளக்கம் அருமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:திருவிதாங்கோடு நகரில் நடை...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [23 February 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17132

அன்வர் பால சிங்கம் எழுதிய கருத்துக்களுக்கு தக்க மறுப்பு கொடுத்திருந்தாலும் சிந்திக்கவே தூண்டுகிறது.

புதிதாக ஒரு கிராமமே இஸ்லாமிய சகோதரத்துவத்தை விரும்பி இஸ்லாமான சமயம் அவர்களை நாம் அனைவரும் சகோதரர்களாக ஏற்று, வேன், வேனாக சென்று வரவேற்றோம். அந்த ஏரியாவைச்சார்ந்த ஒரு பெரியவர் அடிப்படை கல்வி உட்பட அனைத்தையும் கவனித்தார். அவரது மறைவிற்கு பின் அக்கிராமத்தின் கதி அதோ கதியாகதான் இருப்பதாக அறிய முடிகிறது.

நமக்குள் அடித்துக்கொள்ளும் இந்த நேரத்தில் அவர்களை பண்படுத்தினால் இந்த நிலைமை ஏற்படாது என்பதே உண்மை. இதை நாம் அண்டை மாநிலமான கேரளா சகோதரர்களிடம் நிறையவே படிக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:திருவிதாங்கோடு நகரில் நடை...
posted by mohmed younus (Trivandram) [23 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17136

இங்கே சர்ச்சைக்குரிய எழுத்தாளர் இஸ்லாத்தை பற்றிய எந்த தவறுதலான கருத்தை கூறி இருப்பதாக தெரியவில்லை. அந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நசுரீன் போன்றோர்களின் வரிசையில் இல்லை. மாறாக சில இடங்களில் நடைபெறுகின்ற உண்மை கருத்தை கூறி இருப்பதாகவ தெரிகின்றது. இஸ்லாத்தை விடுத்து, முஸ்லிம்களின் நடவடிக்கையை குறை கூறி இருக்கலாம். இஸ்லாத்தில் குறை கண்டால், அவர் இஸ்லாத்திற்கு வந்தே இருக்க மாட்டார்.

நாம் சில உண்மைகளை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். இன்று எல்லாவற்றையும் துறந்து இஸ்லாத்திற்கு வரும் புதியவர்கள் எல்லா உரிமைகளையும் அனுபவக்கிரார்கள்- திருமண பந்தத்தை தவிர. அப்பெடியே திருமணம் பந்தம் அமைந்தாலும், அது நடப்பது இன்னொரு புதிய முஸ்லீமோடு இருக்கும், இரண்டாவது திருமணமாக இருக்கலாம், அல்லது தன்னை விட வயது மூத்தவர்களோடு இருக்கலாம். இதில் இஸ்லாத்தை உரக்க முழங்கும் தாயிக்களும் அடக்கம். தமிழகத்தில் இன்று இருக்கும் எத்தனை தாயிக்கள் தங்கள் பிள்ளைகளை புதிய முஸ்லிம்களுக்கு மணம் முடித்து கொடுக்க விரும்புகிறார்கள்.

"தனிப்பட்ட விருப்பம்" என்று சால்சாப்பு சொல்ல வேண்டாம். நாம் விரும்பும் அதே நிறம், அதே குணம், அதே கல்வித்தகுதி, அதே ஒழுக்கம்-புதியதாய் வரும் முஸ்லிம்களுக்கு இருந்தாலும், நாம் அவர்களோடு சம்பந்தம் செய்ய விருப்பம் இல்லாதவர்களாகவே இருக்கின்றோம் என்பது கண்கூடு. இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு கிராமமே இஸ்லாத்திற்கு வந்து, அப்படி வந்த கண்ணிகள் திருமணம் பந்தம் அமையாமல் "முதிர்கன்னிகள்" ஆகி, பின் தாய் மதத்திற்கு மாறி கல்யாணம் செய்து கொண்டார்கள் என்பது மேடையில் முழங்கும் செய்தியாகாவே மட்டும் உள்ளது. நல்லவேளை- அந்த எழுத்தாளர் நமதூருக்கு வரவில்லை. வந்தால், இங்கு பரம்பரை முஸ்லிம்களுக்கு இடையிலே கூட திருமண பந்தம் வைக்க தயங்கிறார்கள் என்றும் பதிவு செய்து இருப்பார். அந்த எழுத்தாளர்களுக்கு விளக்கம் அளிப்பது மட்டும் போதாது. நம் நடவடிக்கையின் மூலமும் அவர்க்கு உணர்த்த வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:திருவிதாங்கோடு நகரில் நடை...
posted by M.A.K.JainulAbdeen, President, Kaakkum Karangal Narpani Mantram. (kayalpatnam) [24 February 2012]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 17146

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் அன்வர் பாலசிங்கம் அவர்கள் சொன்னதில் தவறுகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. காரணம் எத்தனை பேர் புண்ணிய மார்க்கமான இஸ்லாம் மார்க்கத்தில இணைந்து விட்டு மீண்டும் அவர்களுடைய பழைய மதததிற்கே சென்றிருக்கிறார்கள் என்று தெரியுமா?

இஸ்லாத்தை பரப்புகிறோம் என்று செல்லும் சகோதரர்கள், இதற்கு முன் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இப்பொழுது என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்று சற்று கவனம் செலுத்தினால், புதியவர்களை நமது மார்கத்திற்கு கொண்டு வருவதைவிட சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

அவர்களுடய ஈமானை மேலும் உறுதி செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமோ அந்த பணிகளை செய்யலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தேவயற்ற ஓர் கருத்தரங்கம்...வேதனைக்குரியது!!
posted by M.N.L.முகம்மது ரஃபீக், ஹிஜாஸ்மைந்தன். (காயல்பட்டணம்.) [24 February 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 17148

மன்னிக்கவும்!

தங்கள் வலைதளம் திருவிதாங்கோட்டில் நடந்த கருத்தரங்கில் கறுப்பாயி என்ற நூர்ஜஹான் எனும் நூலாசிரியர்,அன்வர் பால சிங்கத்தின் முழுமையான விரக்திப் பேசையும், இஸ்லாமியர்களை அவர் விமர்சித்ததையும் தெளிவாக தாங்கள் வெளியிடவில்லை! வெளிப்படையாகப் பார்க்கும் போது அவரது கூற்று உண்மையாகவே தோன்றும் ஆனால்,உள் நோக்கமும்,அதை வெளிப்படுத்தும் முறையில் தான் பிரச்சனையே,இதோ அவர் பேசிய பேச்சைக் கேளுங்கல் புரியும்,

“'நான் எம்.ஏ. வரலாறும், அரசியலும் படித்தவன். இஸ்லாத்தின் மீதுள்ள தீராக்காதலில் 93-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் நாள் இஸ்லாத்தை தழுவினேன். ஒரு எழுத்தாளர் எனில் அவர் 'பொன்னியின் செல்வன்' போன்ற பெரிய பெரிய காவியங்களை படைக்க வேண்டும் என்றோ, அல்லது சுஜாதா மாதிரி எழுதவேண்டும் என்றோ பொருள் அல்ல. ஜாதீய உணர்வுகள் என்றுள் ஏற்படுத்திய மன உளைச்சலில் அது தந்த தீராவலியில் எழுத வந்தவன் நான். சாதீயக் கொடுமையினால் மீனாட்சிபுர மக்கள் கூட்டாக மதம் மாறினோம். இன்று நகரங்களில் சேரியையும் இஸ்லாமியர்களின் குடியிருப்பையும் பிரிக்க முடியாத அளவில் அந்த இரண்டு சமூகங்களும் மற்றவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். ஜாதிகளை அடையாளம் காணவேண்டும். நான் மதம் மாறினேன். விடுதலை கிடைத்தது. என்னை உச்சிமேல் தூக்கி வைத்து கொண்டாடினர். ஆரம்பத்தில் என்னை அள்ளி அணைத்த கைகள், பிரச்சனைக்குரிய இந்த புத்தகத்தை எழுதியதும், அதை படிக்காமலே கருத்து சொல்கின்றனர். திண்டுக்கல் ரஷீத் என்பவர் 'நீ ஏன் இங்கு (இஸ்லாத்திற்கு) வந்தாய்? எனக் கேட்டார். நான் 'உங்கள் வீட்டுக்கா வந்தேன்? ஏன்று பதில் சொன்னேன்.? இப்போதும் கூட என்னை உங்கள் ஊரில் உள்ள ஓரு ஐயர் 'பிரியாணிக்கு மதம் மாறியவன்' என்று கேவலப்படுத்தி பேசி வருகிறார். வெளிநாட்டு பணம் வந்ததது என்கிறார்கள். இந்த அவதூறுகளுக்கு உங்களில் யாரும் பதில் சொல்லவில்லை. மீனாட்சிபுரம் வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. கேள்விகளை நான் வைப்பதை விட, நீங்கள் வைத்திருக்க வேண்டும். நான் மதம் மாறியதால் என் தாய், தந்தை, தங்கை என என்; குடும்பமே என்னைக் கைவிட்டு விட்டது. நீங்களாவது என்னோடு கை சேர்க்க வேண்டும். மாறிய உலகம் மிகக் கொடுரமானது. இருபுறமும் என்னைக் கைவிட்டுவிட்டனர். என்னுள் ஏற்பட்டுள்ள வலிகள், ரணங்கள் ஆற வேண்டும்” என்று பேசியுள்ளார். எனவேதாம் காயல் சமூக ஆர்வலர்கள் உடனேயே மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இலக்கியம் பேசப் போய் இலட்சியம் பறிபோனதைப் போல் இந்த நிகழ்ச்சி தேவையற்ற ஒன்றகத்தான் படுகின்றது. இன்று ,யார் தான் உண்மை நிகழ்வுகளை இலக்கியத்தில் உண்மயாகப் பதிக்கின்றனர்? சமூகத்தில் எத்தனையே பிரச்சினைகள் தலை விரித்தாடுகின்ற போது இலக்கியவாதிகள் வெறும் ஏட்டு சுரைக்காயை வைத்துக்கொண்டு என்ன செய்ய இயலும்? பதிவுகள் தற்காலதில் வெறும் படிவுகளாகவே பதிக்கப்படும் போது பாதிக்கப்படுவது,பாவம் சமுதாயம் மட்டுமே!

ஜாதீய உணவுகள் ஏற்படுத்திய தீராவலி மூலம் தீன் நெறியை ஏற்ற அன்வர் பாலசிங்கத்தின் பேச்சு பொறுப்பற்றதாகவே உள்ளது. நீங்களாவது என்னோடு கை சேர்க்க வேண்டும். மாறிய உலகம் மிகக் கொடுரமானது. இருபுறமும் என்னைக் கைவிட்டுவிட்டனர். என்னுள் ஏற்பட்டுள்ள வலிகள், ரணங்கள் ஆற வேண்டும் என ஆதங்கப்படும் அவர் அல்லாஹ்வை இன்னும் முழுமையாக நம்ப வில்லை போலும்! ஈமானில் உறுதி இருந்தால் இவையாவும் அவருக்கு கால் தூசியாகத் தான் தோன்றியிருக்கும். இதற்கு சாளை-எஸ்.எம்.ஏ.பஷீர் கூறிய விளக்கம் மிகச் சரியாக இருந்தது.

யாரும் யாருக்குத் துணையில்லா விடினும் ஏக வல்லோனின் துணை என்றென்றும் இருக்கும் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்...!!!

மொத்தத்தில் எழுத்தாளர்கள் இலக்கிய குப்பைகளை கிளறியிருப்பது நன்றாகத் தெரிகின்றது!
-ராபியா மணாளன்.காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:திருவிதாங்கோடு நகரில் நடை...
posted by H.M. SHAFIULLAH (CHENNAI-40) [24 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17162

Brother Mohamed Yunus (Trivandraum) argument (4) is 100% true. I want to make sure that if we hide our weakness or mistakes, or compromising certain things, this will reflect on us. There is no partiality in Islam. But there is a partiality in majority of the Muslims especially those from well-known towns in Tamilnadu. Though it is a bad thing, honestly we have to accept. This comment is coming from everywhere. When I say about Islam to other community, their first question is this. If I am getting an opportunity to do so in the future to my sons, insha Allah I will prefer new comers first. Wallahi, I will do that. How many of you take this challenge?

“Islam is the BEST religion with the worst followers”, George Bernard Shaw says. If we are not accepting our mistakes in a open ground, we will never come out from those mistakes. It is not the willingness of the individual. Islam says it is a collective response.

Regards
SHAFIULLAH
9710008200


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:திருவிதாங்கோடு நகரில் நடை...
posted by s.e.mohideen abdul cader b/o late misbahi aalim (bahrain) [25 February 2012]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 17187

M.N.L. MOHAMED RAFEEQ எழுதிய கருத்து சிந்திக்க தூண்டுகெறது, இஸ்லாத்தில் ஈமான்தான் முக்கியம் ,அல்லாஹ் நம்மை கைவிடமாட்டான் என்ற உறுதியான நம்பிக்கை நம் இதயத்தில் இருந்தால் மற்றதெல்லாம் NOTHING AT ALL, அல்லாஹ் தன் புனித திரு குரானில் விசுவாசம் கொண்டவர்களே இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுகள் என்று சொல்கிறான் .இஸ்லாத்தில் நுளைந்துவிட்டு அவர்கள் அவர்கள்கைவிடார்கள் இவர்கள் கைவிட்டார்கள் என்று கூறி பயன் இல்லை . எல்லாம் வல்ல அலலாஹ் நம் அனைவரையும் கை விடமாட்டான் .ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:திருவிதாங்கோடு நகரில் நடை...
posted by MACKIE NOOHUTHAMBI (colombo) [28 February 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17249

சகோதரர் பாலசிங்கம் அவர்களது ஆதங்கம் எவ்வளவு நியாயமானது அதற்கு பதில் அளிக்கும் காயல்பட்டினம் சகோதரரின் விளக்கம் எவ்வளவு போதுமானது என்பதெல்லாம் ஆய்வுக்கு உட்படுததப்பட வேண்டும்.

ஒரு முஸ்லிமின் மானம், உயிர், பொருள் எவ்வளவு புனிதமானது என்பதை இறுதி நபியின் இருதியுபதேசம் சிறப்பாக சொல்கிறது. இதனை சீர்தூக்கிப்பார்த்து, மன உளைச்சல்களை போக்குவதற்கு, ஐக்கிய சமாதான பேரவை என்றும் ஜமாதுல் இஸ்லாமே ஹிந்த் என்ற அமைப்புகளும் குறிப்பாக மாற்று மதத்திலிருந்து இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக கொண்டவர்களின் ஆதங்கங்களை, காயப்பட்ட உணர்வுகளுக்கு வடிகால் தேடிக்கொடுக்க வேண்டும்.

பாலசிங்கம் ஒருவர் அல்ல, தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்த முடியாமல் பல சகோதரர்கள் வெம்பிக்கொன்டிருக்கும்போது, நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது, அல்லாஹ் அவர்களின் மனக்குமுறல்களை செவிஎற்றுககொண்டிருக்கிறான். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க இஸ்லாம் காட்டிய மார்க்கமே சிறந்த வழி என்பதை சகோதரர் பாலசிங்கம் மக்களிடையே எடுத்து சொல்லுங்கள், அதே நேரம் மேலே கண்ட இயக்கங்களிடம் உங்கள் போன்றவர்களின் மனக்குறைகளை சொல்லுங்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பவைகளை பெரிதுபடுத்தாதீர்கள்.விதி விளக்குகள் வழிகாட்டியாகாது

தமிழன் தமிழனை தீண்ட தகாவனாக பார்க்கவில்லையா, திண்ணியத்திலே மூத்திரம் குடிக்கவும் மலம் திண்ணவும் வர்புறுத்தவில்லையா, இரட்டை குவளைகள் முறைகள் இன்றும் நடை முறையில் இல்லையா. இவற்றை எல்லாம் துடைதெறிவது, உடைதெறிவது இஸ்லாம் இல்லையா.எனவே உங்கள் ஆதங்கம் எங்களுக்கு புரிகிறது, அதை சரிசெய்யும் பணியில் எங்கள் தலைவர்கள் உங்களுக்கு தோள்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையான செய்தியை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved