காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியின் 2ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் 3ஆம் ஆண்டு கல்லூரி நாள் விழா, ஆட்சிக்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையில் காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவிலுள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் ஆசிரியர் எம்.ஏ.புகாரீ முன்னிலை வகித்தார்.
மழலையர் ஆசிரியர் பயிற்சி மாணவி ஃபரீதா பானு கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். ஃபேஷன் டிசைன் மாணவி எஸ்.எம்.பி.சமீனா யாஸ்மின் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் இயக்குனர் ஜகுபர் ஹுஸைன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொருளியல் துறை உதவிப் பேராசிரியைமுனைவர் ஜே.ஜெயசீலா இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு உரையாற்றினார்.
பின்னர், சமுதாயக் கல்லூரியின் நோக்கம், பயிற்றுவிக்கும் பாடங்கள் பற்றியும், அந்நூர் கல்வி மையம் பற்றியும் முனைவர் ஏ.ஜெயந்தி விளக்கிப் பேசினார். மாணவியரின் இறைவாழ்த்து, கல்லூரி வாழ்த்துப் பாடல், கவியரங்கம், பட்டிமன்றம், நாடகம் ஆகிய இன்சுவை நிகழ்ச்சிகள் இவ்விழாவில் அரங்கேறின.
ஆசிரியை ஆர்.கோகிலா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஷேக் அப்பாஸ் ஃபைஸல், அபூபக்கர் சித்தீக், கலீலுர்ரஹ்மான் ஆகியோர் செய்திருந்தனர். |