Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:00:14 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8729
#KOTW8729
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 16, 2012
“ஊழலற்ற காயலை நோக்கி” கருத்தரங்க நிகழ்ச்சியில், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கிளை துவக்கம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5146 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நேற்று காலையில் நடைபெற்ற - “ஊழலற்ற காயலை நோக்கி - TOWARDS CORRUPTION-FREE KAYAL“ நிகழ்ச்சியில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை துவக்கப்பட்டுள்ளது. கருத்தரங்க நிகழ்வுகள் குறித்த விபரம் பின்வருமாறு:-

ஊழலற்ற காயலை நோக்கி...
“ஊழலற்ற காயலை நோக்கி” - 'TOWARDS CORRUPTION-FREE KAYAL' என்ற தலைப்பில், இம்மாதம் 15ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று (நேற்று) காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் - இரத்தினபுரி - ஏ.கே.எம். நகரில் அமைந்துள்ள துளிர் கேளரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்க நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் உமர் ஒலி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.



தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து கே.எம்.டி.சுலைமான் வரவேற்புரையாற்றினார்.



காயல்பட்டினத்தில் ஊழல் எதிர்ப்பு செயல்திட்டங்கள்:
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய பல்லாக் அப்துல் காதிர் நெய்னா கருத்தரங்க அறிமுகவுரையாற்றினார். “காயல்பட்டினத்தில் ஊழல் எதிர்ப்பு செயல்திட்டங்கள்” என்ற தலைப்பின் கீழ் அமைந்திருந்த அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு:-



ஊர் அமைப்பு:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் - ஒரு பாரம்பரியமிக்க ஊர். 2011 ஆம் ஆண்டு சென்சஸ் கணக்குப்படி 40,000 மக்கள் இங்கு வாழ்கிறார்கள். ஆண்களைவிட பெண்களே இங்கு அதிகம்... பெருவாரியாக பார்த்தால் - ஆண்கள் பலர் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிகிறார்கள்…

காயல்பட்டினத்து மக்கள் உள்ளூரிலேயே நேரடியாக சந்திக்கும் அரசு இயந்திரங்கள் என சிலவற்றைக் கூறலாம்...

நகராட்சி, கிராம அலுவலகம் (VAO), சார்பு பதிவு மையம் (Registration துறை), ரேசன் கடைகள், மின்சாரத் துறை, தொலைப்பேசி துறை, அரசு மருத்துவமனை, தபால் நிலையம், அரசு பள்ளிக்கூடங்கள், அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் ...

இது தவிர மாநில, மாவட்ட, தாலுக்கா தலை நகரங்களில் உள்ள அலுவலகங்கலான - தாசில்தார் அலுவலகம், போக்குவரத்து அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் போன்ற அலுவலங்ககளை கூறலாம்...

காயல்பட்டினத்தில் உள்ள இல்லங்களையும், உடைமைகளையும் கவனிக்கும் பொறுப்பு பல நேரங்களில் பெண்களிடமே விழுகிறது... பெண்கள் உட்பட - நம்மில் பெரும்பாலானோர் கல்வியறிவு பெற்றிருந்தாலும், Functional Literacy எனப்படும் - அன்றாடும் நாம் பயன்படுத்தும் அரசு சேவைகள், பிற சேவைகள் போன்ற தகவல்களை நாம் அனைவரும் முழுமையாக பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை…

எவ்வாறு லஞ்சம் கொடுக்காமால் முறையாக குடும்ப அட்டை (Ration Card) பெறுவது, எவ்வாறு லஞ்சம் கொடுக்காமால் முறையாக கட்டிட அனுமதி பெறுவது, எவ்வாறு லஞ்சம் கொடுக்காமால் முறையாக இதர சான்றிதழ்கள் பெறுவது போன்ற தகவல்கள் நாம் அனைவரும் அறிந்திருப்பதில்லை, அறியும் முயற்சிகள் செய்வதில்லை…

அதன் விளைவு - நம்மையும், நமது பெண்களையும் - பொறுப்பில் இருக்கும் சில அலுவலர்களும், இடைத்தரகர்களும் (Brokers) ஏமாற்றி லஞ்சம் கொடுத்து சேவைகள் பெறச் செய்து வருகின்றனர்....

அறிந்தோ, அறியாமலோ - பொறுமை இல்லாமாலும், வழிமுறைகளை முழுமையாக நாம் பின்பற்றாமலும், மக்களாகிய நாமும் பல நேரங்களில் லஞ்சத்திற்குத் துணை போய் விடுகிறோம்...

ஊழல் - லஞ்சத்தின் பல்வேறு வடிவங்கள்...:
ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் அகராதி விளக்கங்கள் என்று ஒன்று உண்டு. அவற்றை நாம் அனைவரும் அறிவோம்…

மற்றொரு கோணத்தில் பார்த்தால் மக்கள் வரிப்பணம் முறைக்கேடாகப் பயன்படுத்தப்படுவது, வீண் விரயம் செய்யப்படுவது போன்ற செயல்களும் ஊழல்தான்...

லஞ்சம் - ஊழல் இன்று பல வடிவங்களில் உள்ளது...

சான்றிதழ் போன்ற ஒரு சேவையை பெற வழங்கும் தொகை லஞ்சம்...

2000 பேர் வேலை செய்யும் தொழிற்சாலையில் 500 பேருக்கு மட்டும் தொழில் வரி பெற்றிட உதவிசெய்வது ஊழல்…

6 லட்ச ரூபாய் பொருளை 10 லட்சம் என மதிப்பிட்டு டெண்டர் விட்டு, வித்தியாச தொகையை பலரும் பகிர்ந்து கொள்வது ஊழல்…

குடிநீர் போன்ற ஒரு நாட்டின் சொத்தை கள்ளச் சந்தையில் விற்க முற்படுவதும் ஊழல்…

இப்படி பல வழிகள்.... இவற்றை பொறுமையாகவும், கடமை உணர்வோடும் கண்காணிப்பது நமது உரிமை மட்டுமின்றி கடமையும் கூட...

ஊழல் எதிர்ப்பு இயக்க காயல்பட்டினம் கிளையின் பணிகள்:
காயல்பட்டினத்தில் இன்று உதயமாகும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற இந்த அமைப்பு, சென்னையில் இருந்துகொண்டு தமிழகம் முழவதும் பணியாற்றி வரும் அமைப்பின் உறுதுனையோடும், வழிகாட்டுதலோடும் பல பணிகளை - உங்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு செய்திட ஆயத்தமாக உள்ளது ...

ஊழல் எதிர்ப்பு அமைப்பு, லஞ்சம் கொடுக்காமல் - மக்கள் சேவைகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகாம்களை - தேவைப்படும்போதெல்லாம், நகரின் அனைத்து பகுதிகளிலும் நடத்தும்...

மேலும் இந்த அமைப்பு, அரசு சேவைகளை லஞ்சம் வழங்காமல் எவ்வாறு பெறுவது என்பன போன்ற தலைப்புகளில் கையேடுகளும் (Guides) வெளியிடும்...

மேலும் மத்திய அரசால் 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையிலுள்ள - தகவல் அறியும் உரிமை சட்டத்தை (RIGHT TO INFORMATION ACT) பயன்படுத்தி, நகராட்சி, போக்குவரத்து துறை போன்றவற்றில் எவ்வாறு தகவல்களைப் பெறுவது என்பது குறித்து பயிற்சிகள் வழங்கும்...

மேலும் - நீங்கள் அரசிடம் இருந்து அறிந்தக்கொள்ள விரும்பும் தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் மூலமும் பெற உதவியும் செய்யும். தகவல் அறியும் சட்டத்தின் மூலம் - தகவல்கள் பெற - தனிக்குழு அமைக்கப்பட்டு செயல்புரியும் …

மேலும் - லஞ்சம் / ஊழல் போன்றவற்றில் ஈடுபடுவோரைக் கண்காணித்து அவர்களை DVAC (DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION) போன்ற கண்காணிப்பு அமைப்புகளுக்கு அடையாளம் காட்டும்...

அவ்வாறு லஞ்சம் வாங்குவோரை பொதுமக்கள் அடையாளம் காட்டும் பட்சத்தில் (Whistle Blowing) அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வேலையையும் இவ்வமைப்பு செய்யும்...

தனியார் துறையிலும் ஊழல்கள் உள்ளன... உதாரணாமாக தொழிற்சாலைகள், அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிகத்தொகை வசூலிக்கும் பள்ளிக்கூடங்கள் என அதன் பட்டியல் நீளம்... இறுதியாக சில வார்த்தைகளை கூறி நான் எனது உரையை நிறைவு செய்கிறேன்....

தனிமனித விருப்பு-வெறுப்பிற்கிடமில்லை...
இன்று உதயமாகும் இந்த கிளை அமைப்பு தொலைநோக்குப் பார்வையில் உருவாக்கப்படும் ஓர் அமைப்பாகும். இதில் தனிமனித விருப்பு-வெறுப்புக்கு எந்த விதத்திலும் இடமளிக்கப்படாது.

லஞ்சம் ஊழல் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது என்பது சாத்தியமற்றது என்று மனம் தளர்ந்து - தான் விரும்பாவிட்டாலும், லஞ்சம் - ஊழல் ஆகியவற்றைக் கண்டும், காணாமல் இருப்போருக்கு, இந்த அமைப்பு வழி காட்டும்! பலம் சேர்க்கும்!! துணை நிற்கும்!!!

ஒரு நல்ல குடிமகனாக இருந்து - அரசுக்கு வரியும் செலுத்திவிட்டு, அரசு மற்றும் அரசு சார்ந்த மற்ற அலுவலங்களில் தனது தேவைகளை - விரும்பியோ, விரும்பாமலோ - வேறு வழியில்லாமல், வேறு வழி தெரியாமல் - லஞ்சம் கொடுத்தே நிறைவேற்றி வரும் சாதாரண மக்களுக்கு - இந்த அமைப்பு வழி காட்டும்! பலம் சேர்க்கும்!! துணை நிற்கும்!!!

மக்களின் வரிப்பணம் மூலமாகவும், நாட்டின் இதர நிதி ஆதாரங்கள் மூலமாகவும் - அரசு நிறைவேற்றும் வெவ்வேறு பணிகளில் - எந்த தயக்கமும் இன்றி, எந்த அச்சமும் இன்றி - இது தான் விதி, இது தான் யதார்த்தம் என - அரசு கஜானாவை சுரண்டவோரை இந்த அமைப்பு கண்காணிக்கும், அடையாளம் காட்டும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்...


இவ்வாறு, நிகழ்ச்சி நெறியாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா தனதுரையில் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர் ஏ.நஃபீஸ் அஹ்மத் உரை:
அவரைத் தொடர்ந்து, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.நஃபீஸ் அஹ்மத் சிறப்புரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் பின்வருமாறு:-



காயல்பட்டினத்திற்கு புதியவனல்ல!
காயல்பட்டினத்திற்கு நான் புதிதானவனல்ல! ஆண்டுதோறும் இந்த ஊரில் நடைபெறும் ஸஹீஹுல் புகாரிஷ் ஷரீஃப் அபூர்வ துஆவிற்கு - கடந்த எட்டாண்டுகளாக தொடர்ந்து வருகை தந்துகொண்டிருக்கிறேன்... இவ்வாண்டும் வருகை தந்தேன்... காலையில் வந்து, மாலையில் புறப்பட்டு விடுவேன்...

வித்தியாசமான சந்திப்பு!
ஆனால், தற்போதைய எனது இந்த வருகை அதிலிருந்து சற்று வேறுபட்டது... இதுநாள் வரை நான் நானாகவே வந்து செல்வேன்... இன்று உங்களில் பலருடன் அறிமுகத்தைப் பெறும் நல்லதொரு மக்கள் சேவை நிகழ்ச்சியில் பேசுவதற்காக வந்துள்ளேன்... இதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன்... ஊழலின் ஊற்றுக்கண் உருவாகும் முக்கிய இடங்களான - காவல் நிலையம், சினிமா கொட்டகை, மதுபானக் கடை இந்நகரில் இல்லை என்பதே ஒரு பெரும் சாதனைதான்!

இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கம் - 90 வயது நிரம்பிய பெரியவர் குப்புராஜ் அவர்களால் நல்ல எண்ணத்துடன் துவக்கப்பட்டு இன்றளவும் இயங்கி வருகிறது...

காவல்துறை, நீதித்துறை, அமைச்சர்கள் தொடர்பான துறைகள், நகராட்சி நிர்வாகங்கள் என இன்று அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழலும் - லஞ்சமும் இணைபிரியாமல் வேரூன்றிக் கிடக்கின்றன...

லஞ்சம் வாங்குவதுதான் குற்றம் என்று முற்காலத்தில் சொல்ல வேண்டியிருந்தது... ஆனால் இன்றைய அவசர உலகத்தில் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க பொதுமக்களில் பெரும்பாலோர் அதிகளவில் ஆர்வங்காட்டி வருவதால், லஞ்சம் கொடுப்பதும் குற்றமே என்று இன்று நாம் சொல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது...

சுய கட்டுப்பாடு...
நமது இந்திய நாட்டையே லஞ்சம் - ஊழலற்றதாக மாற்றிட நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை... அதே நேரத்தில், அதன் துவக்கமாக - நான் எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுக்கவும் மாட்டேன்... வாங்கவும் மாட்டேன்... லஞ்ச - ஊழலுக்குத் துணை போகவும் மாட்டேன்... என முதலில் நாமனைவரும் சுய உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்...

அவ்வாறு நாம் உறுதி எடுத்துக்கொண்டால், அதைக் கடைப்பிடிப்பதற்கு மிகவும் பொறுமை அவசியம்... அரசுத் துறையில் ஒவ்வொரு காரியமும் ஒரு குறிப்பிட்ட கால அளவில்தான் நடைபெறும்... அதற்கு முன்பாகவே நாம் அவசரப்பட்டு அவற்றைப் பெற்றிட நினைக்கும்போதுதான் இந்த லஞ்சம் என்ற பாவத்தை நோக்கி நாம் அடியெடுத்து வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது... அரசுத் துறையில் அனைத்துக் காரியங்களுக்கும் சட்டம் - விதிமுறைகள் உள்ளன... எனவே, காரியம் நடக்காமலே போய்விடுமோ என்ற அச்சம் நமக்குத் தேவையில்லை...

ஒரு தனி நபர் லஞ்ச - ஊழலுக்கு எதிரான செயல்திட்டத்துடன் செயல்பட்டால் அவர் சார்ந்த அனைத்தும் நன்றாக அமையும்... ஒரு வார்டு உறுப்பினர் லஞ்ச - ஊழலுக்கு எதிரான எண்ணத்துடன் செயல்பட்டால், அந்த வார்டே லஞ்ச - ஊழலற்றதாக மாறும்...

அமைப்பு துணை நிற்கும்!
இன்று, காயல்பட்டினத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கிளை துவக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... பொதுமக்களே! உங்களுக்கு நடைபெற வேண்டிய நியாயமான காரியங்களில் லஞ்சம் - ஊழல் எட்டிப் பார்த்தால், அதனை இந்த அமைப்பின் இந்த ஊர் கிளை நிர்வாகிகளிடமோ அல்லது தலைமையிடமோ நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முறையிடலாம்... அதற்கேற்ப வழிகாட்டி - உங்களுக்கு நியாயம் கிடைத்திட இந்த அமைப்பு இயன்றளவுக்கு எல்லா வகையிலும் துணை நிற்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்...


இவ்வாறு, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.நஃபீஸ் அஹ்மத் உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர் எஸ்.எம்.அரசு உரை:
அடுத்து, தமிழக அரசு பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளரும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் பொதுச் செயலாளருமான எஸ்.எம்.அரசு உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் பின்வருமாறு:-



நேரந்தவறாமை...
இந்நிகழ்ச்சியை 10.30 மணிக்கு சரியாகத் துவக்க வேண்டும் என்று நான் அறிவுரை வழங்கினேன்... அதனைக் கருத்திற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நிகழ்ச்சி துவங்கும் நேரம் வந்தவுடன் துடித்த துடிப்பைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்... அனைத்து ஏற்பாடுகளுடனும் அவர்கள் நிகழ்ச்சியைத் துவக்க ஆயத்தமாக இருந்த நிலையிலும், பொதுமக்கள் வழமை போல தாமதமாக வந்த காரணத்தால் நிகழ்ச்சியும் தாமதமாகிப் போனது...

காலம் பொன் போன்றது... நேரந்தவறாமையை நாம் சரியான முறையில் பழக்கப்படுத்திக் கொண்டாலே நாட்டிலுள்ள பிரச்சினைகளில் பாதியளவு தானாகவே தீர்ந்து போகும்...

நல்ல தலைமையின் வழிகாட்டல்...
இந்த இயக்கத்தைத் துவக்கி எங்களை வழிநடத்தும் 90 வயது நிறைந்த திரு. குப்புராஜ் அவர்கள் - இன்று இந்நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துகொள்ள வருவதைத் தெரிவித்தவுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்... தற்போது அவர்களின் எண்ணமெல்லாம் காயல்பட்டினத்தைச் சுற்றியே இருக்கும்... நாங்கள் சென்னை திரும்பிய உடன் அவர்கள் எங்களிடம் முதல் கேள்வியே இக்கருத்தரங்கத்தைப் பற்றித்தான் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்...

இந்நிகழ்ச்சிக்குக் காரணமானோர்...
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், இந்த ஊரிலுள்ள சூழலைப் பற்றி எங்கள் மனதில் எளிதில் புரியும் வகையில் விளக்கிய விதம் எங்களை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது... ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, இந்த ஊர் லஞ்ச - ஊழலற்ற ஊராக மாற, இக்கருத்தரங்கின் ஏற்பாட்டாளர்கள் பெரும் பங்காற்றுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை...

இந்த ஊரில் கருத்தரங்கத்தை நடத்த வேண்டும் என எங்களை அணுகியபோது, அங்கு குறைந்தபட்சம் ஒரு இருபது பேராவது உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்தனுப்பி, அவர்கள் மூலம் எங்களை அழைக்க முன்வாருங்கள் என்று நாங்கள் சொன்ன மறுகணமே, “இருபது என்ன சார்? இருநூறு உறுப்பினர்களுக்கும் மேல் எங்களூரிலிருந்து இதற்காக ஆயத்தமாகவே உள்ளனர்” என்று கூறி, இரண்டே தினங்களில் இருபது படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்பியும் வைத்துவிட்டனர்... இதுவே போதும், இவர்கள் நன்றாகச் செயல்படுவார்கள் என்பதைச் சொல்வதற்கு!

இந்த அமைப்பின் செயற்பாடுகள் ஊழல் - லஞ்சத்தை எதிர்ப்பதைக் கொள்கையாகக் கொண்டதாகவே உள்ளது... எனினும், என்னவோ இந்த அமைப்பைத் துவக்கி செயல்படுத்திவிட்ட காரணத்தாலேயே ஊழல் ஒழிந்துவிடும் - அல்லது ஊழலை ஒழித்துவிட்டோம் என்று நாம் சொல்லிவிட முடியாது... இந்த நாட்டிலிருந்து லஞ்ச - ஊழலை முற்றிலும் ஒழிப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆகுமோ தெரியாது...

லஞ்ச - ஊழலை வெறுக்கவாவது வேண்டும்...
லஞ்ச - ஊழலை ஒழிக்கிறோமோ, இல்லையோ - அதை வெறுக்கவாவது நாம் முன்வர வேண்டும்... அவ்வாறு வெறுப்புணர்வூட்டி - விழிப்புணர்வடையச் செய்யும் பணியை இந்த அமைப்பு நன்றாகவே செய்து வருகிறது...

இந்த அமைப்பின் செயல்பாடுகளின் காரணமாக, தவறு செய்யும் அரசு அதிகாரிகள் - அலுவலர்கள் திருந்துகிறார்களோ, இல்லையோ... குறைந்தபட்சம் நம்மைத் தட்டிக்கேட்க சிலர் இருக்கிறார்கள் என்ற அச்ச உணர்வோடு தவறு செய்ய தயக்கமாவது காட்டுவர்...

பொதுமக்களும் தமக்குள் நிறைய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்... நம்மில் பலருக்கு, இலவசமாகவோ - குறைந்த கட்டணத்திலோ பெறப்பட வேண்டிய அரசு தொடர்பான பணிகளுக்கு கூடுதல் பணம் கேட்கப்படும்போது, அது எதற்காக கேட்கப்படுகிறது என்று கூட தெரிவதில்லை... இந்த வேலைக்காக நாம் போனோம்... அவங்க பணம் கேட்டாங்க... கொடுத்தோம்... கொடுத்தாத்தானே காரியம் நடக்கும்? என்று தாம் கொடுத்த பணம் லஞ்சம் என்பது கூட தெரியாத நிலையில் பொதுமக்கள் கொடுத்துவிடுகின்றனர்... இப்போக்கை நம்மைப் போன்ற இயக்கத்தினர்தான் மாற்ற முயற்சிக்க வேண்டும்...

ரசீது பெறாமல் காசு கொடுக்காதே!
சுருக்கமாகச் சொல்வதென்றால், கேட்கும் பணம் மிகச்சிறிய தொகையாக இருந்தாலும் அதற்கு ரசீது தந்தாக வேண்டும்... ரசீது தராமல் கேட்கப்படும் பணம் சட்டத்திற்குப் புறம்பானது... அதற்குக் கொடுப்பது தவறானது என்று புரிந்து வைத்துக்கொண்டாலே போதும்...

நேர்மையான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா!
இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில், அண்மையில் தமிழகத்தின் 234 சட்டமன்ற உறுப்பினர்களில் - இடைத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த புதுக்கோட்டை தொகுதியைத் தவிர இதர உறுப்பினர்கள் அனைவருக்கும் - அவர்களின் நேர்மையை பரிசோதிக்கும் வகையில் 27 கேள்விகளை அனுப்பி, அவர்களது பதிலைக் கேட்டிருந்தோம்... 233 பேரில் வெறும் 4 பேர் மட்டுமே பதிலளித்துள்ளனர்... ஆக, 229 பேர் சொத்தையானவர்களைத்தான் நாம் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறோம்... நினைக்கவே வேதனையாக இல்லையா...? பதிலளித்த 4 உறுப்பினர்களுக்கும் சென்னையில் நமது அமைப்பின் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளள பாராட்டு விழாவில், “திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது” வழங்கப்படவுள்ளது...

மக்கள் பிரதிநிதிகளாக நாம் ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், அவர்களின் கட்சியையோ, கொடியையோ பார்க்கக் கூடாது... மாறாக, அவரது சுய தகுதியைப் பார்க்க வேண்டும்... அதுதான் முக்கியம்!

இந்த நாட்டில், லஞ்சம் - ஊழல் செய்வோரால் கூட சீர்கேடு வந்துவிட்டது என்று நான் சொல்ல மாட்டேன்... மாறாக, இவையெல்லாம் தவறு என்று நன்குணர்ந்துள்ள நல்லவர்கள் - நமக்கேன் வம்பு என்று ஒதுங்கியிருப்பதால்தான் நாடு இந்தளவுக்கு சீர்கெட்டுப் போயுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்...


இவ்வாறு, எஸ்.எம்.அரசு உரையாற்றினார். பின்னர், தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் அவர் தலைமைப் பொறியாளராக இருந்தபோது நடைபெற்ற லஞ்ச - ஊழல் குறித்த அனுபவப் பதிவுகளையும் தனதுரையில் பகிர்ந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை:
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் ஏ.நஃபீஸ் அஹ்மத், எஸ்.எம்.அரசு, அவர்களை காயல்பட்டினத்திற்கு அழைத்து வர உறுதுணையாயிருந்த க்ரீன் ப்ரோ நிறுவனத்தின் அதிபர் புகாரீ ஆகியோருக்கு, கருத்தரங்க நிகழ்ச்சியின் தலைவர் உமர் ஒலி சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சித் தலைவர் உமர் ஒலிக்கு, காயல்பட்டினம் ‘மெகா‘ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.



க்ரீன் ப்ரோ அதிபர் வாழ்த்துரை:
பின்னர், க்ரீன் ப்ரோ நிறுவனத்தின் அதிபர் புகாரீ சுருக்கவுரையாற்றினார்.



“ஊழலும் - லஞ்சமும் இஸ்லாம் மார்க்கத்தில் என்ன இடத்திலுள்ளது?” என்று அவர் வினவ, அனைவரும் “ஹராம்” (தடுக்கப்பட்டது) என்று உரத்த குரலில் தெரிவித்தனர். பின்னர், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்து, காயல்பட்டினத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கிளையை அமைத்திட முயற்சிகளை மேற்கொண்டுள்ள அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்து விடைபெற்றார்.

“நேர்மை நெறி” மாத இதழ் அறிமுகம்:
பின்னர், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் சார்பில் வெளியிடப்படும் “நேர்மை நெறி” என்ற மாத இதழ் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, பார்வையாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

பார்வையாளர் கேள்வி நேரம்:
பின்னர், பார்வையாளர் கேள்வி கேட்க நேரம் வழங்கப்பட்டது. கேள்வி நேரம் நிகழ்ச்சியை, காயல்பட்டினம் ‘மெகா‘ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் ஒருங்கிணைத்தார்.

காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி ஏ.ஆர்.இக்பால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த தேக் முஜீப், விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ‘நட்புடன் தமிழன்‘ முத்து இஸ்மாஈல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஸதக்கத்துல்லாஹ், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி ஆகியோர் கேள்வி நேரத்தின்போது கேள்விகள் கேட்டனர்.



கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) குறித்த காவல்துறை விசாரணை, காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்வதில் உள்ள பிரச்சினைகள், கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஒப்புகைச் சீட்டு (Acknowledgemnt) பெறல், நகராட்சி அலுவலர்களின் மக்கள் சேவைக் குறைபாடுகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சிறப்பு விருந்தினர் ஏ.நஃபீஸ் அஹ்மத், எஸ்.எம்.அரசு ஆகியோர் விளக்கமளித்தனர்.

நகர்மன்ற பெண் உறுப்பினர்கள் கவிதை:
பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா ஆகியோர், லஞ்ச - ஊழலுக்கெதிராக தொகுத்த கவிதைகளை வாசித்தனர்.



உறுதிமொழி:
பார்வையாளர் கேள்வி நேரத்தைத் தொடர்ந்து, லஞ்ச - ஊழலுக்கெதிராக அனைவரும் பின்வருமாறு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்:-



ஊழல் ஒழிப்பு உறுதிமொழி

தேசப்பற்று மிக்க இந்தியக் குடிமகனாகிய நான், நமது நாடு ஊழலும் - லஞ்சமும் மலியப்பெற்று உலகரங்கில் மிகுந்த ஏளனத்திற்குள்ளாகியிருப்பதைக் கண்டு மிக்க வேதனையடைகிறேன்...

லஞ்சமும் - ஊழலும் சமுதாயத்தைச் சீரழித்து, நாட்டின் முன்னேற்றத்தையும் முடக்குகின்றன என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன்...

எனவே, எந்த செயல்பாட்டுக்கும் லஞ்சம் கொடாமலும், கொடுப்பவரை கொடுக்க விடாமலும், லஞ்சம் வாங்குபவரை வாங்க விடாமலும் தடுத்து, உறுதியாக நின்று, நேர்மை நெறி காப்பேன் என்றும், 2020ஆம் ஆண்டில் இந்தியா வலிமைமிக்க பேரரசாக விளங்கத்தக்க வகையில், அரசின் முன்னேற்றத் திட்டங்களை செயலாக்குவதில் முனைந்து ஈடுபட்டு, என்னால் இயன்ற பங்காற்றுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன்...


இவ்வாறு உறுதுிமொழி வாசகம் அமைந்திருந்தது. உறுதிமொழியை பல்லாக் அப்துல் காதிர் நெய்னா முன்மொழிய, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.

தீர்மானங்கள்:
பின்னர், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1 - முகாம்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்தல்:
பொதுமக்களுக்கு லஞ்ச - ஊழலுக்கெதிரான விழிப்புணர்வூட்டும் செயல்திட்டத்துடன் - அவ்வப்போது சிறப்பு முகாம்கள், பொது நிகழ்ச்சிகளை நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 2 - விழிப்புணர்வு பிரசுரங்கள் வெளியீடு:
லஞ்ச - ஊழலுக்கெதிராகவும், மக்கள் நல செயல்திட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட அவ்வப்போது பிரசுரங்கள், மடக்கோலைகள், புத்தகங்களை வெளியிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 3 - தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு:
அரசு தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பொதுமக்கள் பெற்றிடும் வகையில், அச்சட்டம் குறித்து பொதுமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மான வாசகங்கள் முன்மொழியப்பட்டபோது, நிகழ்ச்சியில் பங்கேற்றோர் தக்பீர் முழக்கத்துடனும், கரவொலியுடனும் அதனை ஆமோதித்தனர்.

நன்றியுரை:
நிறைவாக, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நன்றியுரையாற்றினார்.



இக்கருத்தரங்கில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் - துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்தே வந்திருப்பதைப் பாராட்டிப் பேசிய அவர், ஒரு வாகனத்தின் இருபக்க சக்கரங்களாக இவர்கள் இணைந்திருந்து, மக்கள் நலப்பணிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒருவர் ஒரு தீமையைக் கண்டால், அதைக் கையால் தடுக்கட்டும்! அல்லது நாவால் தடுக்கட்டும்!! அல்லது மனதளவிலாவது வெறுத்து ஒதுங்கட்டும் என்று இஸ்லாம் மார்க்கம் கூறுவதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த நெறிமுறைப்படி வாழவேண்டியது நம் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும் என்று தெரிவித்துவிட்டு, அனைவருக்கும் கவிதை வடிவில் நன்றி கூறி தனதுரையை நிறைவு செய்தார்.

நிறைவாக, எஸ்.கே.ஸாலிஹ் துஆ பிரார்த்தனை செய்ய, ஸலவாத், கஃப்ஃபாராவைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் கருத்தரங்க நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.

கலந்துகொண்டோர்:


இக்கருத்தரங்கில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அவரது கணவர் ஷேக், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், உறுப்பிர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், பாக்கியஷீலா, கே.ஜமால், ஏ.அஜ்வாத் மற்றும் ஹாஜி டி.எம்.எஸ்.சுல்தான், மீசை முஹ்யித்தீன், ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், ஹாஜி எஸ்.ஓ.கியாது, ஏ.பி.ஷேக், ஹாஜி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ், ஹாஜி மலங்கு, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.ஹாமித் லெப்பை ஃபாஸீ, சீனாஷ், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், காயல்பட்டினம் நல அறக்கட்டளை தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன், வி.டி.என்.அன்ஸாரீ, எழுத்தாளர் ஏ.தர்வேஷ் முஹம்மத், ஏ.ஆர்.ரிஃபாய், ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ் உள்ளிட்ட - நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 150 பேர் பங்கேற்றனர். அவர்களுள் பலர், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் உறுப்பினர்களாவதற்கு ஆர்வம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.





நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தலைமை ஒருங்கிணைப்பாளர் உமர் ஒலி தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:“ஊழலற்ற காயலை நோக்கி” கரு...
posted by salai s nawas (singapore) [16 July 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 20008

மாஷா அல்லாஹ்..மிகவும் அருமையாக நடந்தேறி இருக்கிறது. செய்தியை படிக்கும் போதே நேரே இருந்து பார்த்த மாதிரி நெகிழ்ச்சி ஊட்டியது.

வியப்பூட்டிய விஷயம், நகராட்சி தலைவி மற்றும் உறுப்பினர்கள் ஒன்றாக கலந்து கொண்டது. இந்த ஒற்றுமை என்றும் நிலைத்திருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.

கூட்டம் தான் கம்மியாக இருக்கிறது. எவ்வளவு கஷ்டப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருப்பார்கள் என்று உணர முடிகிறது.

சிறு வேண்டுகோள், இந்த நிகழ்ச்சி முழுக்க நம்மூர் பெண்மணிகளிடம் சேருவது அவசியம். ஆகையால் கண்டிப்பாக கேபிள் டிவிகளில் ஒளிபரப்பு செய்யுங்கள்.

இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய " சஹாரா" உமர் ஒலி (அப்பா) காக்காவிற்கு நிறைந்த நெஞ்சங்களுடன் வாழ்த்துக்கள்.

அன்புடன் மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:“ஊழலற்ற காயலை நோக்கி” கரு...
posted by Vilack SMA (saigon , vietnam .) [16 July 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 20011

நிகழ்ச்சி என்னவோ வரவேற்கத்தக்கதுதான் . ஆனால் இதில் புதுமை எந்த உரையிலாவது உள்ளதா என்று யாராவது சொல்லமுடியுமா ?

A .Nafees Ahmed அவர்கள் உரையில் பெரும்பாலானவை நமது முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திரு . கிருத்துவராஜ் அவர்கள் ஒரு நிகழ்வின்போது சொன்னது . லஞ்சம் கொடுக்காதீர்கள் . எந்தவொரு வேலைக்கும் குறிப்பிட்ட காலம் காத்திருங்கள் . வேலை தானாக நடக்கும் என்று சொன்னார் . அதையேதான் இவரும் சொல்லியிருக்கிறார் . திரு . கிருத்துவராஜ் அவர்கள் சொல்லி இன்றுவரை கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது . இந்த இடைப்பட்ட காலத்தில் யாராவது எதற்காகவேனும் லஞ்சமாக கொடுத்தோ , வாங்கியோ இல்லையா ? இந்த கூட்டத்திற்கு வந்தவர்களில் எவரேனும் திரு .கிருத்துவராஜ் அவர்களின் அறிவுரையை கடைப்பிடித்தார்களா ?

அடுத்து , திரு .S , M . அரசு அவர்கள் உரை , கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் , இதெல்லாம் காலம் காலமாக பலரும் சொன்னதுதான் . பத்திரிக்கைகளில் படித்ததுதான் .

இந்த கூட்டம் நடத்தியதில் தவறே இல்லை . ஆனால் ஒருவர் உரையிலும் புதுமை இல்லை .

இந்த கூட்டம் மூலம் சிலருக்கு ஆப்பு , சங்கு என்றெல்லாம் கருத்துக்கள் எழுதினார்கள் . ஆனால் கண்ணியம் மிக்க இந்த பேச்சாளர்கள் குறிப்பிட்ட எவரையும் சாடாமல் , கண்ணியமாக பேசியிருப்பது பாராட்டிற்குரியது . இந்த பேச்சாளர்கள் , ஆப்பு , சங்கு என்று எழுதியவர்களின் எண்ணங்களுக்கு ஆப்பு , சங்கு வைத்து விட்டார்கள் .

Vilack SMA , Saigon , Vietnam .
+ 84 1218636760


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:“ஊழலற்ற காயலை நோக்கி” கரு...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [16 July 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20013

அனைவர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.

இதனை ஏற்பாடு செய்தவர்கள் மிகவும் நன்றிக்கு பாத்திரமானவர்கள். தொடருட்டும் உங்களின் சேவைகள் தொய்வில்லாமல்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவர்களுக்கும் பாராட்டுக்கள் கூடுதலாக ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் எதிராக உறுதிமொழி எடுத்தமைக்கும்.

மிகவும் சந்தோசம், நகரமன்ற தலைவியும் அதிகளவில் உறுப்பினர்களும் கலந்துகொண்டதை பார்க்கும் போது. கண்ணுப்படப்போகின்றது.

இப்படி தான் ஒற்றுமையாக, மக்களுக்கு சேவை செய்யனும் என்று, சென்னைக்கு சென்று அதிகாரிகளையும், அமைச்சர்களையும் பார்த்து வந்தீர்கள். இந்த ஒற்றுமையில் யார் கண் பட்டதோ..!! ஒரே பிரச்சனை, நல்லதில் ஒத்துழையாமை, யார் பெரியவன் என்ற சல சலப்பு.. என்று சிறிது காலங்கள் சென்று விட்டன. வரும் காலங்களை வல்ல ரஹ்மான் நன்மையின் பக்கம் திருப்புவானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:“ஊழலற்ற காயலை நோக்கி” கரு...
posted by fathima ahmed (kayal) [16 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20014

அல்லாஹ்வை முன்னிருத்தி அனைவரும் வீட்டிலிருந்தே உறுதிமொழி எடுதுகொண்டோம் ஊழலற்ற்ட காயலை விரைவில் காண்போம்.(காயல்safa)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. புதுமையைத் தேடி புதுமையாக அலையும் புதுமையானவர்கள். -அனுபவம் புதுமை...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [17 July 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20016

சிலருக்கு, கட்டுரை எழுதினாலும் புதுமையில்லை! கருத்தெழுதினாலும் புதுமையில்லை! அட! மீட்டிங் போட்டு மைக்கிலெ புரியும் படியா எடுத்துச் சொன்னாலும் புதுமையில்லை! அப்ப என்னதான் புதுமை? அவர் எதிபார்க்கும் அந்தப் புதுமையான புதுமைதான் என்ன?

புத்தன், ஏசு, காந்தி போன்றோர் பறைசாற்றிய கொள்கைகள் மனிதன் மனிதனாக வாழவேண்டும். பிறர் பொருளுக்கு ஆசை படக்கூடாது என்பதுதானே? இவர்கள் எல்லாம் (கிருத்துவ ராஜ் சொன்னதை போல) ஒரே மாதிரிதானே சொல்கின்றனர் இதிலென்ன புதுமை உள்ளது? எனக் கேட்பது போல் உள்ளது.

நம்மில் சிலர் எதுக்கெடுத்தாலும் சலித்துக்கொள்வார்கள், உதா:

நீங்க சாப்பிடல்லையா? எனக் கேட்டால்
ம்...என்னத்த சாப்பிட்டு?

ஊருக்காப் போறீங்க?
ம்...என்னத்த ஊருக்குப் போயி?

வாக்கிங் போகல்லையா?
ம்...என்னத்த வாக்கிங் போயி...

இப்படி ஆயிரம் என்னத்த போடும் கண்ணையாக்களை திருப்தி படுத்தவே முடியாது.

தொடர்ந்து சங்கு சத்தம் கேட்டுக்கொண்டேதான் இருக்கு! அது அவர்கள் காதுகளில் விழுவதில்லை! ஆப்புகள் கூர் தீட்டப்பட்டுக் கொண்டேதான் இருக்கு! அது அவர்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை! மக்கள் உஷாராக இருக்க வேண்டும். அதன் எதிரொலிதான் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.

கூட்டம் குறைவாக இருந்ததால் மண்ணின் மைந்தனே வருந்த வேண்டாம். நல்லதை நல்லோர்கள் கூறும் போது கூடும் கூட்டமும் குறைவாகத்தான் இருக்கும்! நம்ம ஊரைப் பொறுத்த மட்டில் இது ஓர் புதுமையான நிகழ்வுதான். மறுப்பதற்கில்லை!

-ராபியா மணாளன்.

Moderator: பிற ஊடகங்களை மேற்கோள் காட்டும் வாசகங்கள், விவாதத்தைத் தூண்டும் வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:“ஊழலற்ற காயலை நோக்கி” கரு...
posted by salai s nawas (singapore) [17 July 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 20018

வியட்நாம் நாடு VSM அலி காக்கா, புதுமையை புகுத்த இது ஒன்றும் சினிமா அல்ல.

லஞ்சம் கொடுக்காதே லஞ்சம் வாங்காதே, இதை தான் பல ஆண்டுகளாக சொல்லிகொண்டிருக்கிறோம். மனிதனுக்கு மறதி அப்படி. நேற்று சொன்னதை கூட கஷ்டப்பட்டு நினைவுக்கு கொண்டு வருகிறோம். அதனால்தான் பள்ளி கூடங்களில் வாத்தியார் மாணவர்களுக்கு படி படி என நித்தமும் சொல்லிவருவார். ஏன் சார் தினமும் சொல்லறீங்க? ஒரு தடவை சொன்ன போதும் என்று சொன்னால் சார் விடுவாரா? அதே போல் தான்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஒரு விஷயத்தை திரும்ப, திரும்ப ...
posted by Firdous (Colombo) [17 July 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20020

நல்ல கருத்தை திரும்ப திரும்ப கூருவதால் தப்பில்லை. அனைவரும் ஒரே சொல்லில் பதபடுவது இல்லை. ஆகவே நிகழ்ச்சியின் உண்மை நோக்கத்தை அறிந்து அதற்காக அதன் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தல் சாள சிறந்தது.

நகர்மன்ற உறுப்பினர்கள் பெரும்பாலோர் பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி. மற்றவர்களும் கலந்து கொண்டு இருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். பங்கேற்றதுடன் அல்லாமல் ஊழல் புரியாமல், ஊழலுக்கு துணை போகாமல், ஊழல் புரிபவர்களை இனங்காட்டுவதர்க்கு தயங்காது இருத்தல், நிகழ்வின் பொது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு உண்மையாக இருத்தல் வேண்டும்.

அல்லாஹ் நம் யாவரையும் ஊழல் மற்றும் லஞ்சதிளிருந்து பாதுகாப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:“ஊழலற்ற காயலை நோக்கி” கரு...
posted by Mohamed Ali (Kuwait) [17 July 2012]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 20021

நல்ல நிகழ்ச்சி.

நடத்தியவர்களுக்கு பாராட்டுகள்.

ஆனால்------------

லஞ்சம், ஊழல் இவைகளை ஒழிக்க இது மட்டும் போதாது அதிகார வர்க்கங்களும், பொது மக்களும், முக்கியமாக ஏழைகளும், பணகாரர்களும் கைகோர்த்து பாரபட்சம் இல்லாமல் செயல் பட்டால் மட்டுமே இதனை ஒழித்து கட்ட முடியலாம் ஆனால் அதுயும் 100% உத்திரவாதம் கொடுக்க இயலாது. ஏன்னெனில் இதுலும் சில புல்லுரிவிகள் இருப்பார்கள்.

சரி லஞ்சம் கொடுக்க பட வில்லை வாங்க பட வில்லை ஆனால் அரசு அலுவலங்களில் கால் கடுக்க நாள் கணக்கா நிற்கும் ஏழைகள் இதற்கு மத்தயில் ஒரு நொடி பொழுதில் எந்த வேலையையும் முடித்து விட்டு செல்லும் பணகார மற்றும் அதிகார வர்க்கங்கள் உள்ளனவே இதனை எப்படி மாற்ற போகிறீர்கள். இங்கு பணம் வேண்டும் என்றால் லஞ்சமாக பரிமாற படாமலும் இருந்து இருக்கலாம் ஆனால் பணகார பலமும் அதிகார பலமும் லஞ்சமாக பரிமாற பட்டு உள்ளதே இதனை எப்படி ஒழிபீர்கள்.

கால் கடுக்க நாள் கணக்கா அரசு அலுவலங்களில் நிற்கும் ஏழைகள் இவர்களை ஏன் என்று கேட்க நாதி இல்லை ஆனால் ஒரு பணகாரனோ, அதிகாரத்தில் உள்ளவர்களோ வந்தால் தனது இருக்கையை விட்டு எழுந்து வாங்க என்ன வேணும், ----அதுவா பாத்துக்கலாம் இன்னைக்கே முடித்து விடலாம் என்று சொல்லும் அதிகாரிகள். இது போக நான் வந்தால் எந்த வேலையாக இருந்தாலும் 10 நிமிடம் தான் என்று மார்தட்டி கொள்ளும் பணகார, அதிகார வர்க்கங்கள் இடையே இதை எல்லாம் கேட்டு கொண்டு தனது இயலாமையை நினைத்து கண்ணீர் விட்டு ஏக்கத்தோடு காத்து கொண்டு இருக்கும் ஏழைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:“ஊழலற்ற காயலை நோக்கி” கரு...
posted by Salai Sheikh Saleem (Dubai) [17 July 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20022

புதுமையிலும் புதுமை !!!!

தம்பி VSMA அவர்கள் பதிவுப்படி அவர்கள் ஊழலை எதிர்ப்பதில் புதுமையை புகுத்த வேண்டும் என்றால் நீங்கள் எதிர்பார்க்கும் புதுமைகள் என்னெவென்று சொன்னால் தானே தெரியும். இதற்க்கு முன்பு ஜனநாயகத்தில் புதுமை வேண்டும் என்றீர்கள் அதற்க்கு தக்க பதில்களும் கிடைத்தது இப்போ ஊழல் ஒழிப்பில்.. ஆக உங்களின் பெயர் வாசகர் வட்டத்தில் ஒரு புதுமையாக பேசப்படுகிறதே..

ஊழல் ஒழிப்பில் என்ன புதிதாக சொல்லவேண்டும்?

லஞ்சம் கொடுக்காதே! லஞ்சம் வாங்காதே! லஞ்சம் கேட்டால் நீ எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எனென்ன ! இதைத்தானே எல்லோரும் சொல்கிறார்கள் ! இதைவிட புதுமையாய் என்ன சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

ஆப்பு சங்கு எல்லாம் நீங்கள் உங்களுக்கு என்று நினைத்துவிட்டீர்கள் போலும் !!! இல்லை இல்லை அது தேவைப்படும் போது சரியான தருணத்தில் கிடைப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். இதுதான் ஜனநாயகத்தின் அருமை.

ஊழலை ஒழிக்க இது ஒரு முதல் முயற்சியே! தொடரட்டும் உங்களின் சீரிய பணி! தொடர்வோம் நாங்கள் உங்களோடு அணி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:“ஊழலற்ற காயலை நோக்கி” கரு...
posted by Kader K.M (Dubai) [17 July 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20023

வாழ்த்துவோர் வாழ்த்தட்டும்! போற்றுவோர் போற்றட்டும்! எது எப்படியோ கருத்தரங்க அமைப்பாளர்களின் முயற்சிக்கு அல்லாஹ் வெற்றியை கொடுத்தான் அல்ஹம்துலில்லாஹ்!

புதுமை? எதில்தான் புதுமை பார்ப்பது என்ற விவஸ்தை நமக்குள் இல்லாமல் இருப்பதுதான் புதுமை!

கடனை வாங்கி கல்யாணம் செய்து ஒரு குமரை கரையேற்ற பெற்றவர்கள் பாடுபட்டு, வாழ்த்த வந்தவர்களுக்கு ஒருவேளை விருந்தாவது கொடுக்கலாம் என்று விருந்து கொடுத்தால் வயிறு முட்ட தின்றுவிட்டு வெளியே வரும்போது சொல்வான், மச்சான் சாப்பாட்டில் உப்பு இல்லையென்று! இதுதான் நம்ம ஊரின் புதுமை!

சாப்பிட்டுவிட்டு என்றாவது அந்த மணமக்களுக்காக துஆ செய்து இருப்போமா? (ஒரு சிலர்) அதுபோலத்தான் இதும்! குறை கூறுபவர்கள் குறை கூறிக்கொண்டு இருக்கட்டும் !

நகராட்சியில் உள்ளவர்கள் அனைவர்களும் கலந்துகொண்டார்கள் சந்தோசம்! கலந்து கொள்ளவில்லை என்றால் ஊழலை ஆதரிக்கக்கூடியவர் என்று அர்த்தமாகி விடும் என்ற பயமாகக்கூட இருக்கலாம்!

எது எப்படியோ நாமும் திருந்தி மற்றவர்களும் திருந்தினால் இம்மையில் எப்படியோ, மறுமையில் நற்க்கூலி கிடைக்கும்! கூட்டம் குறைவாக உள்ளது என்று கருத்தாளர் வருத்தப்பட்டு உள்ளார்! பிஸ்கட் போட்டு இருக்கலாமோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:“ஊழலற்ற காயலை நோக்கி” கரு...
posted by Mohamed Ali (Kuwait) [17 July 2012]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 20024

கருத்து 20025 தொடர்ச்சி

நான் மேலே சொன்னது எல்லாம் எங்கோ நடக்கிறது என்று எண்ண வேண்டாம் இது நமது நகர ஆட்சியில் முன்பும் தற்போதும் நடந்து கொண்டு இருக்கும் அவல நிலை தான்.

கண் கூட கண்ட ஒரு நிகழ்ச்சி தனது குடிசை வீட்டுக்கு ரூ 367 வரி விதிக்க பட்டு உள்ளது இது தவராக வந்துள்ளது எனது கஷ்டத்தில் இந்த தொகையை கட்ட இயலாது சரியாக பார்த்து சொல்லுங்கள் என்று ஒரு வயதான பெண்மணி கண்ணீர் மல்க நமது நகர ஆட்சியின் வந்து கேட்க அந்த பெண்மணி காலையில் இருந்து அலைகழிக்க பட்டு பின்பு அதிகாரி இல்லை காத்து இருங்கள் என்று bill collector ஆள் சொல்ல பட்டது. மாலை 6 மணி வரை காத்து இருத்த அந்த பெண்மணியிடம் எல்லாரும், வாடு உறுப்பினர்கள் உட்பட என்ன என்று கேட்க பட்டது ஆனால் உதவி செய்வோர் யாரும் இல்லை. ஏன் யன்றால் அவர்களிடம் பணமும் இல்லை பதவியும் இல்லை.

அவர்களிடம் கேட்ட போது அவர்கள் சொன்னது முன்பு எல்லாம் விட்டு வரி 30 - 40 ரூபா கிட்டதான் வரும் இப்ப 367 வந்துள்ளது. எனது குடுசை விட்டுக்கு 367 வரி ஆனால் பக்கத்துக்கு வீடு மாடி வீடு அதுக்கு வரி வெறும் 213 இது எனங்கே அநியாயம் என்று தான்.

6 மணிக்கு மேல் வந்த அதிகாரியிடம் இந்த ஏழையின் குரலா ஒலிக்க போகிறது. அவரை சுற்றி பணகார வர்க்கங்களும் அதிகார வர்க்கங்களும் விட்ட பாடு இல்லை. இந்த பெண்ணிடம் கூறப்பட்டது நாளை வாருங்கள் என்று. என்ன அநியாயம். ஏன் இந்த அவல நிலை.

தற்போதைய நகர ஆட்சியில் தான் நான் எனது வீட்டுக்கு பெயர் மாற்றம் விண்ணப்பிக்க போன போது கண்ட நிகழ்ச்சி.

எனது கதையை சொன்னால் இதைவிட கன்றாவி லஞ்சம் கொடுக்க பட வில்லை என்பதற்காக 6 மாதங்கள் அலைய விட்டார்கள். ஆனால் அன்றே கொடுத்து அன்றே வாங்கி சென்றவர்கள் ஏராளம்.

அவர்களுடன் வாய் சண்டையும் போட்டு பார்த்தேன். வீடு எனது பெயரில் மாற வில்லை யன்றால் வேறு பேரில் அடுத்த தவணை வரி கட்ட முடியாது என்று கூட சொல்லி பார்த்தேன். அது உங்க இஷ்டம் என்று தான் பதில் சொன்னார்கள்.

நான் ஊரை விட்டு புறப்பட்டு வந்தால் 6 மாதத்திற்கு அப்புறம் கூட ஒரு அதிகார வர்கத்தின் உதவியுடன் தான் நான் அதை பெற்றேன் என்ன ஒரு அவல நிலை.

லஞ்சம் கொடுக்காமல் காத்து இருங்கள் யன்றால். இது ஏழைகளுக்கு மட்டும் இல்லை. ஏழைகள் காத்து இருந்து லஞ்சம் கொடுக்காமல் காரியத்தை முடிப்பது வெற்றி இல்லை. பண காரர்களும், அதிகார வர்க்கங்களும் லஞ்சம் கொடுக்காமலும் தனது அதிகாரத்தை use பண்ணாமலும் காத்து இருந்து தனது வேலைகளை முடித்து கொள்வதே உண்மையான வெற்றி. ஆனால் அவர்களுக்கு எப்படி காது இருக்க முடியும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:“ஊழலற்ற காயலை நோக்கி” கரு...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Riyadh) [17 July 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20026

மாஷா அல்லாஹ்! புண்ணிய நோக்கத்தை இலட்சியமாக கொண்டு ஏற்பட்தப்பட்ட நிகழ்ச்சி. உற்று நோக்ககூடியது கொள்கையைத்தான் தவிர கூட்டத்தையல்ல. ஹைர்!

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். தலைவி அவர்களோடு பெரும்பாலான உறுபினர்களை பார்த்து பூரிப்படைந்தேன். அல்ஹம்தில்லில்லாஹ்! இந்த ஒற்றுமை உணர்வான நிகழ்ச்சி இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து, காயல் நகர மக்கள் நன்மைகள் பல,பல பெற்றுஉயர பெருமானார் தவழ்ந்த இப் புண்ணிய பூமியிலிருந்து பொங்கும் விழிநீருடன் வல்லோனை வேண்டுகிறேன்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:“ஊழலற்ற காயலை நோக்கி” கரு...
posted by OMER ANAS (DOHA QATAR.) [17 July 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 20027

மாஷா அல்லாஹ். நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சியாலர்களின் உறையும் அருமைதான்! இது பொதுவான சிந்தனையாளருக்கும், ஊர் மேல் உண்மையான அக்கறை கொண்டோர்க்கும் மட்டுமே புரியும். கருத்து என்ற பெயரில் நம் சகோதரனையே சாடும் துதிபாடிகள், வைக்கும் ஆப்பும், சங்கும், தீட்டிய மரத்தையே கூர் பார்க்கும் என்று முதலில் புரிய வேண்டும்!

ஒருபக்கம் ஆடியோ கிளிப் வெளிவரும்.
இன்னொரு பக்கம் வீடியோ கிளிப் வெளிவரும்.
ஆனாலும் யூகம் என்ற அடிப்படையில் நல்லவர்கள் பலர் தேவையின்றி வீணாக மாட்டிக்கொள்வர்.
இதனாலேயே நல்லோர் பலர் இதில் உள்ளே வருவதில்லை!

பொதுவாக சீண்டுவதை விடுத்து சிலர் கொஞ்சம் அடக்கி வாசித்தால் நம் முன்னோர் பெயர் தாங்கும் காயல் நிச்சயம் உருவாகும். இல்லையேல் விளக்கு SMA சொன்னதுதான் நடக்கும்.

(இந்த கூட்டம் மூலம் சிலருக்கு ஆப்பு , சங்கு என்றெல்லாம் கருத்துக்கள் எழுதினார்கள் . ஆனால் கண்ணியம் மிக்க இந்த பேச்சாளர்கள் குறிப்பிட்ட எவரையும் சாடாமல் , கண்ணியமாக பேசியிருப்பது பாராட்டிற்குரியது . இந்த பேச்சாளர்கள் , ஆப்பு , சங்கு என்று எழுதியவர்களின் எண்ணங்களுக்கு ஆப்பு , சங்கு வைத்து விட்டார்கள் ) உண்மைதானே!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:“ஊழலற்ற காயலை நோக்கி” கரு...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [17 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20028

காலாகாலமாக சொல்லப்பட்டுவரும் அறநெறி கருத்துக்களில் என்ன புதுமையை புதிதாக சொல்லிவிட முடியும்? சொல்லப்படும் கருத்துக்கள் ஏற்கனவே நாம் கேட்டிருந்தால் ஒரு சலிப்பு ஏற்படத்தான் செய்யும்.

தாய், தந்தையர் நமக்கு புத்தி சொல்லும் போது அலுத்துக்கொள்லாதவர் யார்? அனால் "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை "என பழமொழியே இருக்கிறது. மதியம் சோறு தின்றால் இரவும் பசி எடுக்கிறதே... என்ன செய்யலாம்? சோறு தின்னாமல் இருந்து விடலாமா? புல் கட்டு கட்டுகிறோமா.. இல்லையா... அது போலத்தான் இதுவும். சில விஷயங்களை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved